அட்ட வீரட்டானத் தலங்கள் 1

திருக்கண்டியூர் – ஸ்ரீ மங்களநாயகி சமேத பிரம்மசிரகண்டீஸ்வரர்

பொதுவாக கார்த்திகை மாதம் என்பது அதர்மத்தை அழிக்க வந்த, மாயைகளை அழிக்க வந்த அவதாரங்களுக்கான மாதம்.

இதனாலே கார்த்திகை மாதம் முருகப்பெருமான் வழிபாடுகள் அதிகம் உண்டு, சுவாமி அய்யப்பன் சாஸ்தாவின் வழிபாடும் அதிகம் உண்டு.

பிரம்மா, விஷ்ணு இருவரின் அகங்காரத்தை திருவண்ணாமலையில் சிவபெருமான் அழித்தார் என்பதால் கார்த்திகைதீப கொண்டாட்டமும் உண்டு.

அப்படியான கார்த்திகை மாதம் முழுக்க அதர்மக்காரர்கள், அதர்மம் பெருக மூலக் காரணமான மாய மயக்கங்கள், அகங்காரங்கள் ஆகியவற்றை வேரறுத்த தெய்வ வடிவங்களை வணங்கி வழிபடுதல் இந்து மரபு.

அவ்வகையில் அதர்மத்தை அழிப்பதும், மாயைகளை அகற்றி ஞானம் கொடுப்பதுமான சிவ வடிவமான பைரவரை வழிபடும் மரபும் இந்த கார்த்திகையில் உண்டு.

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவருக்கானது, கால பைரவர் நாள் என அது சிறப்பிக்கபடும்.

கால பைரவர் என்பவர் சிவனின் ருத்ர அம்சம், அவர் கால யந்திரத்தை இயக்குவதால் கால பைரவர் எனப்பட்டார்.

எட்டுவகையான கால பைரவர்கள் எப்போதும் வழிபடப் படுவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என்பதால் இவர்கள் அஷ்ட பைரவர்கள் எனப் பெயர் பெற்றவர்கள்.

காசியினை அப்படி அஷ்ட பைரவர்கள் காப்பதாக புராணம் உண்டு, அவர்களுக்கு அங்கே ஆலயமும் வழிபாடும் உண்டு.

அஸிதாங்க‌ பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் ஆகியோர் அந்த எட்டுபேர்.

இன்னும் ஆழமாக 64 பணிகளை செய்யும் 64 பைரவர்கள் உண்டு.

இந்த பைரவ வழிபாடு இந்துஸ்தானின் எல்லா இடத்திலும் இருந்தது. காலத்தின் அதிபதியான கால பைரவர் சன்னதி பிரதான ஆலயங்களின் ஈசான்ய மூலையில் நிறுவப்பட்டிருக்கும், அதைச் சுற்றி வருதல் கூடாது என்பதும் ஐதீகம்.

இந்த பைரவ வழிபாடுதான் வைரவர், வைரவ சாமி என பின்னாளில் மருவி போயிற்று என்றாலும் தமிழகத்திலும் அந்த கால பைரவ வழிபாடுகள் பிரசித்தி.

அப்படி பைரவ வழிபாட்டு தலங்கள்தான் அஷ்ட வீரஸ்தானங்கள் என இருந்து பின் அட்ட வீராட்டானம் என மாறிற்று.

சிவபெருமானின் பைரவ அவதாரத்தின் எட்டு வடிவங்களை எட்டு ஆலயத்தில் காட்டி நின்ற இடம் அவை, அட்ட வீரட்டானம் என இன்று அவை நிலைபெற்று நிற்கின்றன‌.

எட்டு வகையான அகங்காரிகளின் அகங்காரத்தை போக்கி அவர் அவர்களுக்கு ஞானம் கொடுத்த இடம் என்பதால் இவை சிறப்பான தலங்கள்.

இங்கு சென்று வழிபடுதல் நலம். ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடாததும் அவன் அழிவின் தொடக்கமுமான அகங்காரத்தை அகற்றி அவனுக்கு தெளிவும் அறிவும் கொடுக்கும் இடம் இவை.

எதையெல்லாம் ஒருவன் அறியாமையால், கொஞ்சம் அகங்காரத்தால் அதாவது நானே சரி, என் வழியே சரி என இருமாந்து இழந்தாரோ, அவர்களின் அறியாமை போக்கி அவர்கள் இழந்ததை எல்லாம் கொடுக்கும் தலங்கள் இந்த அட்ட வீராட்டானம்.

இதனை தன் வாழ்வில் முறையாக பெற்றவர் அப்பர் சுவாமிகள் எனும் திருநாவுக்கரசர்.

அவருக்கு ஒரு மனக்குறை இருந்தது, அதாவது சுந்தரரை சிவன் 16 வயதிலே ஆட்கொண்டார், சம்பந்தப் பெருமானை 5 வயதிலே ஆட்கொண்டார், ஆனால் தன்னை 60 வயதிற்கு பின்புதான் ஆட்கொண்டார். தானும் வாழ்வின் முதல் 60 வருடம் சிவன் பக்கமே வரவில்லை தனக்கு அந்த பாக்கியமில்லை எனும் குறை இருந்தது.

அவரின் மனக்குறை அறிந்த சிவபெருமான், இந்த அட்டவீரட்டானம் எனும் தலங்களை வணங்கினால் பிறப்பு முதல் செய்த வழிபாட்டை அதாவது தவறவிட்ட புண்ணிய பலன்களை பெற்றுக் கொள்ளலாம் எனச் சொல்லி அதன்படி அப்பர் சுவாமிகளும் வழிபட்டு அதன் பலனாய் கயிலாய தரிசனமும் பெற்றார் என்பது வரலாறு.

அப்படிப்பட்ட அட்ட வீரட்டான தலங்கள் பைரவ வழிபாட்டு காலத்தில் முக்கியமானவை. இன்று தொடங்கி எட்டு நாட்கள் பைரவ வழிபாடுகள் அவசியம்.

கார்த்திகை தேய்பிறை அஷ்டமி பைரவருக்கானது எனும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒரு அஷ்ட வீரட்டானம் கோவிலை நினைந்து வணங்குதல் நலம். எட்டு நாளும் ஒரு வழிபாட்டை அது கொடுக்கும்.

அட்டவீரட்டானங்கள் என்பது ஸ்ரீகாலபைரவரின் திருவிளையாடல்கள் நடந்த இடங்கள். அவர் பல அதர்மத்தை அழித்தார், அகங்காரிகளின் அகங்காரத்தை அழித்தார் என்பது அவர்கள் கர்மத்தை அழித்தார் என்பது.

ஆம், நமது கர்மவினைகளை அழிப்பது ருத்ரன். கர்ம வினைகள் படி நமக்கு ஏற்பட்டிருக்கும் எல்லா சாபங்களையும் அழிப்பது ருத்திரன். அதனால் அவரை வணங்கினால் நம் சாபமும் கர்மமும் கர்வமும் அழியும். அதனால் தெளிவும் ஞானமும் வரும் என்பது இந்துமத போதனை.

அப்படியான அட்டவீரட்டான தலங்கள் என எட்டு உண்டு.

திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை மற்றும் திருக்கடவூர்

இந்த ஆலயங்களில் முதலாவதும், சிறப்பு மிக்க தலமுமான திருக்கண்டியூர் பற்றி இன்று காணலாம்.

இது சிவன் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை அகற்றி அவன் அகந்தையினை அடக்கிய தலம்.

அந்த கோவிலின் சிவன் பெயர் பிரம்மசிரகண்டீஸ்வரர், அதாவது பிரம்மனின் சிரசை கண்டமாக வெட்டியவர் எனப் பொருள்.

பிரம்மன் தலையினை கண்டம் செய்த இடமே கண்டியூர் என்றாயிற்று.

இது ஒரு புராண க்கதை, தொன்மையான புராண வரலாறு, இந்துமரபில் எல்லோரும் அறிந்த வரலாறு.

சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு என்பது ஐதீகம். சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என ஐந்து.

அதாவது படைத்தல்,காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களை சிவன் ஐந்து முகங்கள் மூலம் செய்வார்.

இதனால் ஐந்து முகம் கொண்டவர் என சிவனுக்கு பெயர், அது எங்கும் நிலைத்துவிட்டது.

பிரம்மனுக்கு தொடக்கத்தில் ஐந்து முகங்கள் இருந்தன. இதனால் தனக்கும் ஐந்து முகம் உண்டு என்றும், தானும் சிவனும் சமம் எனும் அகங்காரம் கொண்டார் பிரம்மன். இந்த அகங்காரம் பல இடங்களில் அவரால் வெளிப்படுத்தப்பட்டது.

இந்த அகங்காரம் பிரம்மனை தனி இருமாப்பு கொள்ள வைத்தது. யாரையும் அவர் மதிப்பதுமில்லை, ஏறெடுத்து பார்ப்பதுமில்லை.

அவருக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பினார் சிவன்.

அதன்படி ஒரு யாகம் நடத்தினார். அங்கே பிரம்மனும் வந்தார், யாகத்தின் முடிவில் பிரம்மன் சிவனிடம் எல்லா திசையில் இருந்தும் தன்னை சிவன் வணங்கி கவுரவிக்கவேண்டும் எனக் கோரினார்.

சிவனும் அப்படி நான்கு திசைகளில் இருந்தும் வணங்கினார். ஐந்தாம் முகத்தை வணங்க திசையினை அவரால் அறியமுடியவில்லை.

சர்வேஸ்வரனால் கூட என் தலையினை திசை அறிந்து வணங்க முடியவில்லை, திசை அறியாத இவர் ஈசனா? என் தலையினை கூட வணங்கத் திணறுகின்றார் என கர்வத்தில் பேசினான் பிரம்மன்.

ஆத்திரமடைந்த சிவனில் இருந்து அவரின் ருத்திரன் வெளிபட்டு பிரம்மனின் ஒரு தலையினைக் கொய்தார்.

May be an image of ‎2 people, temple and ‎text that says "‎Sتا 安. TEOTEU அட்ட வீரட்டானம் -1. திருக்கண்டிகை பிரம்மசிரகண்டீஸ்வரர் ஆலயம்‎"‎‎

அதன் பின் நான்கு தலைகளே பிரம்மனுக்கு எஞ்சின. தன் தலை பறிபோனபின் அவன் அகங்காரமும் அகன்றது.

பிரம்மனின் தலையினை கொய்ததால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. ருத்திரனின் கையில் அந்த மண்டை ஓடு ஒட்டிக் கொண்டது.

பிரம்மனின் அகங்காரத்தை போக்க பிரம்மஹத்தி தோஷம் பெற்ற சிவன் பின் யாசகம் பெற்று வாழும் பிச்சைக்காரனாய் அந்த கபாலத்திலே பிச்சை எடுத்து கபாலீஸ்வரர் என கர்மம் கழித்தார்.

எப்படி பாற்கடலில் வந்த நஞ்சினை தான் உண்டு உலக உயிர்களைக் காத்தாரோ, அப்படி எல்லோரின் கர்மாவினையும் அவர் ஏற்று ஆண்டியாய் பிச்சைக்காரனாய் அலைந்தார்.

பிரம்மன் என்பவன் ஒவ்வொரு உயிருக்கும் பொறுப்பனாவன் என்பதால் அவன் தலையினை வெட்டினார் என்பது தத்வரீதியாக மானுட அகங்கார கொடிய குணத்தை தன்னில் ஏற்று கழிப்பவர் எனப் பொருளாகின்றது.

சிவன் இந்த மக்கள் மேல் கொண்ட அன்பு அப்படி, அன்பு என்றாலே சிவம், சிவம் என்றால் அன்பு எனச் சொல்லப்பட்டது இதனால்தான்.

இந்த சம்பவம்தான், இந்த வரலாறுதான் திருகண்டியூர் ஆலயத்தின் சுருக்கமான போதனை அல்லது புராண காட்சி.

இங்கு சிந்திக்கவேண்டியது நிரம்ப உண்டு.

பிரம்மன் என்பவன் படைப்பின் அதிபதியாக கருதப்படுபவன். படைப்பு என்றால் அது எவ்வகை படைப்பாகவும் இருக்கலாம், பொதுவாக ஒரு வெற்றியினை ஒரு அங்கீகாரத்தை குறிப்பது.

கலை படைப்பு முதல் பெரும் சாம்ராஜ்யம் படைப்பு வரை எல்லாம் அவ்வரிசையே.

அப்படி பெரும் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு கர்வம் வரும், ஒரு அகந்தை வரும் அது இயல்பு.

வித்தை கர்வம் முதல் நான் அதிகாரம் மிக்கவன் எனும் ஆட்சி கர்வம் வரை அப்படியானது. அந்த கர்வம் ஒருவனை அடுத்த கட்டத்துக்கு நகரவிடாது, அடுத்தகட்டம் நகராமல் ஞானம் அடையமுடியாது.

ஞானம் அடைய இந்த கர்வமும் மாயையும் உடைதல் அவசியம், நிலையற்ற உலகில் நொடியில் சரியும் வாழ்வில் இதெல்லாம் அர்த்தமில்லாதவை என்பதும் நம்மைவிட வல்லவர் உண்டு, வல்ல சக்தி உண்டு நாமெல்லாம் பரம்பொருளின் கைப்பாவைகள் என உணர அந்த கர்வம் உடைதல் அவசியம்.

எல்லாவற்றிலும் ஒரு வெறுமை வரவேண்டும், இதுதான் இவ்வளவுதான் எனும் முதிர்ச்சி வரவேண்டும், நிம்மதி என்பது தேடும் பொருளில் இல்லை. அடையும் வெற்றியில் இல்லை. அதை தாண்டிய வெறுமையில் ஒன்றுமே இல்லை எல்லாம் மாயை எனும் நிலையில் வரவேண்டும்.

அதற்கு கர்வம் அழியவேண்டும்.

அதுகாலும் மனதாலும் நினைவாலும் கட்டப்பட்டிருந்த மாய முகம், நானே சகலமும் நானே எல்லாமும் நான், என் , என் சாதனை, என் செல்வாக்கு, என் புகழ் என எல்லாமும் உடையும் போதுதான் அந்த வெறுமை வரும்.

மாயையினை நம்பி இதுதான் நிரந்தரம் என நம்பி, அற்ப மானிட வாழ்வில் ஏதோ கிடைத்துவிட்டது என அகங்காரத்தில் மூழ்கி அதை தக்கவைக்கப் போராடி அந்த போராட்டத்திலே வீழ்ந்து நிம்மதி இழந்து மகிழ்ச்சி இழந்து, எந்த மகிழ்ச்சி நிம்மதிக்காக போராடி அகந்தை கொண்டார்களோ அதை தக்கவைக்க அகந்தையில் போராடுவது ஞானமும் தராது அறிவும் தராது.

இந்த உலகில் ராஜ்ஜியமாகட்டும், விஞ்ஞானமாகட்டும், தொழிலாகட்டும், பணமோ, அதிகாரமோ, செல்வாக்கோ எதுவும் நிரந்தரமில்லை அதற்கு எல்லையுமில்லை.

அகந்தை இருக்கும்வரை, அகங்காரம் இருக்கும்வரை இதில் தேடிக்கொண்டே இருக்கச் சொல்லுமே தவிர, அடுத்தடுத்து வென்றுகொண்டே இருக்கவேண்டும், நான் யார் என்பதை காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என மனம் அகங்காரத்தில் போராடுமே தவிர அமைதி கொள்ளாது.

அமைதி இல்லா மனதில் ஆசையும், போராட்டமும், நிம்மதியின்மையும் வருமே தவிர ஞானம் வராது.

அகங்காரம் இருக்கும் வரை அறிவும் தெளிவும் வராது, ஞானமும் வாய்க்காது.

இதனாலே ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடாத குணம் அகங்காரம் என்றார்கள், அகங்காரத்தால் சக மானுடரை அடக்கலாம், பல சக்திகளை அடக்கலாம். ஆனால் பரம்பொருளிடம் தோற்றே ஆகவேண்டும் என்பதை புராணங்களில் சொன்னார்கள்.

எல்லா இந்து புராணமும் அகங்காரிகளை தெய்வம் வந்து ஒழிப்பதையே காட்டும்.

ஆனால் சிவபெருமானோ முருகப்பெருமானோ இங்கே தனித்து நிற்கின்றார்கள், அவர்கள் எந்த அகங்காரியினையும் அழிப்பதுமில்லை கொல்வதுமில்லை.

மாறாக அவனை திருத்தி அகங்காரம் ஒழித்து தன்னோடு சேர்த்துக் கொள்வார்கள்.

அப்படி ஒரு மனிதனின் ஆகாத குணங்களை ஒழித்து ஞானம் தரும் ஆலயம் இந்த திருக்கண்டியூர் ஆலயம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏகப்பட்ட முகங்கள் உண்டு. மானிடன் பார்ப்பது ஒரே ஒரு வெளிமுகத்தைத்தான்; ஆனால் பல முகங்கள் வெளித் தெரியாமல் உண்டு.

அவனின் பலவகையான குணங்கள் அப்படி பல முகங்களாய் வெளித் தெரியாமல் அகங்கரிக்கின்றன‌.

இறைவன் ஒருவனாலேதான் அந்த பலமுகங்களை காணமுடியும். அங்கே எந்த முகம் அவனுக்கு அகங்காரம் கொடுக்குமோ, எது அவசியமில்லையோ, எது அவனை தவறாய் வழிநடத்துமோ அதனை ருத்திரன் பறித்துக் கொள்கின்றார்.

திருக்கண்டியூர் தலம் என்பது சிவன் பிரம்மனின் வேண்டாத தலையினை கொய்த இடம் மட்டுமல்ல, அங்கு செல்வோரின் அகங்காரம், சோம்பல், பேராசை, காமக் குரோதம் என எல்லா முகங்களையும் தரித்துபோடும் இடம் அதுதான்.

ருத்திர வடிவில் சிவபெருமான் அங்கு அந்த வரம்தான் அருளிக் கொண்டிருக்கின்றார்.

திருக்கண்டியூர் என்பது ஒருவனின் வேண்டாத குணங்களை, அந்த குணங்களின் தலைகளை வெட்டிப் போடும் இடம். அதனால் அங்கு சென்றால் மனமாற்றம் வரும் அறிவு தெளிவு வரும் வேண்டாதன எல்லாம் நீங்கும்.

இந்த கால பைரவருக்கான நாட்களில் முதலில் வணங்க வேண்டிய தலம் அது.

தஞ்சாவூர் பக்கம் திருவையாறு அருகே அமைந்துள்ள தலம் இது. முடிந்தவர்கள் நேரில் தரிசிக்கலாம், முடியாதவர்கள் அவரிடம் வேண்டிக்கொண்டு வாய்ப்பு கிடைக்கும் போது சந்திக்கலாம்.

அந்த திருக்கண்டியூர் சப்தஸ்தான ஸ்தலங்களில் ஒன்று, தேவாரம் பாடப்பட்ட தலங்களில் ஒன்று, முக்கியமான வீரட்டானத்தில் ஒன்று.

கால பைரவரின் ருத்திர வடிவம் என்பது காவல் இருக்கும் தெய்வம். நமக்கு வேண்டாதனவற்றை எல்லாம் அகற்றும். அவர் எதிரிகளின் தாக்குதலில் இருந்தும் நம்மை காக்கும் பொறுப்பினை ஏற்கின்றார்.

அதனால் காலபைரவரை வணங்க வணங்க வேண்டாதன எல்லாம் அகலும். எதிரிகள் ஒழிவார்கள், காலம் எதை எல்லாம் பறித்ததோ அதெல்லாம் கால பைரவர் அருளில் திரும்ப வரும்.

இந்த தொடக்க நாளில் திருக்கண்டியூர் பிரம்மசிரக் கண்டீஸ்வரரை வணங்குவோம்.

“கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
“தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே”

எனத் திருமூலர் வணங்கிய அந்த பிரம்மசிரகண்டீஸ்வரர் எனும் ருத்ரகோல சிவனை வணங்கி இந்த காலபைரவருக்கான அஷ்ட நாட்களைத் தொடங்கலாம்.