அட்ட வீரட்டான தலங்கள்
அட்ட வீரட்டான தலங்கள் : 01 திருக்கண்டியூர்.
பொதுவாக கார்த்திகை மாதம் என்பது அதர்மத்தை அழிக்க வந்த, மாயைகளை அழிக்க வந்த அவதாரங்களுக்கான மாதம்.
இதனாலே கார்த்திகை மாதம் முருகப்பெருமான் வழிபாடுகள் அதிகம் உண்டு, சுவாமி ஐயப்பன் சாஸ்தாவின் வழிபாடும் அதிகம் உண்டு.
பிரம்மா, விஷ்ணு இருவரின் அகங்காரத்தை திருவண்ணாமலையில் சிவபெருமான் அழித்தார் என்பதால் கார்த்திகை தீப கொண்டாட்டமும் உண்டு.
அப்படியான கார்த்திகை மாதம் முழுக்க அதர்மக்காரர்கள், அதர்மம் பெருக மூல காரணமான மாய மயக்கங்கள், அகங்காரங்கள் ஆகியவற்றை வேரறுத்த தெய்வ வடிவங்களை வணங்கி வழிபடுதல் இந்து மரபு.
அவ்வகையில் அதர்மத்தை அழிப்பதும், மாயைகளை அகற்றி ஞானம் கொடுப்பதுமான சிவ வடிவமான பைரவரை வழிபடும் மரபும் இந்த கார்த்திகையில் உண்டு.
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவருக்கானது, கால பைரவர் நாள் என அது சிறப்பிக்கப்படும்.
கால பைரவர் என்பவர் சிவனின் ருத்ர அம்சம், அவர் கால யந்திரத்தை இயக்குவதால் கால பைரவர் எனப்பட்டார்.
எட்டுவகையான கால பைரவர்கள் எப்போதும் வழிபடப்படுவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என்பதால் இவர்கள் அஷ்ட பைரவர்கள் எனப் பெயர் பெற்றவர்கள்.
காசியினை அப்படி அஷ்ட பைரவர்கள் காப்பதாக புராணம் உண்டு, அவர்களுக்கு அங்கே ஆலயமும் வழிபாடும் உண்டு.
அஸிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் ஆகியோர் அந்த எட்டுபேர்.
இன்னும் ஆழமாக 64 பணிகளைச் செய்யும் 64 பைரவர்கள் உண்டு.
இந்த பைரவ வழிபாடு இந்துஸ்தானின் எல்லா இடத்திலும் இருந்தது, காலத்தின் அதிபதியான கால பைரவர் சன்னதி பிரதான ஆலயங்களின் ஈசான்ய மூலையில் நிறுவபட்டிருக்கும், அதைச் சுற்றி வருதல் கூடாது என்பதும் ஐதீகம்.
இந்த பைரவ வழிபாடுதான் வைரவர், வைரவ சாமி எனப் பின்னாளில் மருவிப் போயிற்று என்றாலும் தமிழகத்திலும் அந்தக் கால பைரவ வழிபாடுகள் பிரசித்தி.
அப்படி பைரவ வழிபாட்டு தலங்கள்தான் அஷ்ட வீரஸ்தானங்கள் என இருந்து பின் அட்ட வீரட்டானம் என மாறிற்று.
சிவபெருமானின் பைரவ அவதாரத்தின் எட்டு வடிவங்களை எட்டு ஆலயத்தில் காட்டி நின்ற இடம் அவை, அட்ட வீரட்டானம் என இன்று அவை நிலைபெற்று நிற்கின்றன.
எட்டு வகையான அகங்காரிகளின் அகங்காரத்தை போக்கி அவர் அவர்களுக்கு ஞானம் கொடுத்த இடம் என்பதால் இவை சிறப்பான தலங்கள்.
இங்குச் சென்று வழிபடுதல் நலம், ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடாதும் அவன் அழிவின் தொடக்கமுமான அகங்காரத்தை அகற்றி அவனுக்குத் தெளிவும் அறிவும் கொடுக்கும் இடம் இவை.
எதையெல்லாம் ஒருவன் அறியாமையால், கொஞ்சம் அகங்காரத்தால் அதாவது நானே சரி, என் வழியே சரி என இறுமாந்து இழந்தாரோ, அவர்களின் அறியாமை போக்கி அவர்கள் இழந்ததை எல்லாம்கொடுக்கும் தலங்கள் இந்த அட்ட வீரட்டானம்.
இதனை தன் வாழ்வில் முறையாகப் பெற்றவர் அப்பர் சுவாமிகள் எனும் திருநாவுக்கரசர்.
அவருக்கு ஒரு மனக்குறை இருந்தது, அதாவது சுந்தரரைச் சிவன் 16 வயதிலே ஆட்கொண்டார், சம்பந்த பெருமானை 5 வயதிலே ஆட்கொண்டார், ஆனால் தன்னை 60 வயதிற்கு பின்புதான் ஆட்கொண்டார், தானும் வாழ்வின் முதல் 60 வருடம் சிவன் பக்கமே வரவில்லை, தனக்கு அந்தப் பாக்கியமில்லை எனும் குறை இருந்தது.
அவரின் மனக்குறை அறிந்த சிவபெருமான், இந்த அட்டவீரட்டானம் எனும் தலங்களை வணங்கினால் பிறப்புமுதல் செய்த வழிபாட்டை அதாவது தவறவிட்ட புண்ணியபலன்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனச் சொல்லி அதன்படி அப்பர் சுவாமிகளும் வழிபட்டு அதன் பலனாய் கயிலாய தரிசனமும் பெற்றார் என்பது வரலாறு.
அப்படிப்பட்ட அட்ட வீரட்டான தலங்கள் பைரவ வழிபாட்டுக் காலத்தில் முக்கியமானவை, இன்று தொடங்கி(அதாவது கார்த்திகை தேய்பிறை பிரதமை முதல் அஷ்டமி வரை) எட்டு நாள்கள் பைரவ வழிபாடுகள் அவசியம்.
கார்த்திகை தேய்பிறை அஷ்டமி பைரவருக்கானது எனும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒரு அஷ்ட வீரட்டானம் கோவிலை நினைந்து வணங்குதல் நலம், எட்டு நாளும் ஒரு வழிபாட்டை அது கொடுக்கும்.
அட்டவீரட்டானங்கள் என்பது ஸ்ரீகாலபைரவரின் திருவிளையாடல்கள் நடந்த இடங்கள், அவர் பல அதர்மத்தை அழித்தார், அகங்காரிகளின் அகங்காரத்தை அழித்தார் என்பது அவர்கள் கர்மத்தை அழித்தார் என்பது.
ஆம். நமது கர்மவினைகளை அழிப்பது ருத்ரன். கர்ம வினைகள் படி நமக்கு ஏற்பட்டிருக்கும் எல்லாச் சாபங்களையும் அழிப்பது ருத்திரன், அதனால் அவரை வணங்கினால் நம் சாபமும் கர்மமும் கர்வமும் அழியும். அதனால் தெளிவும் ஞானமும் வரும் என்பது இந்துமத போதனை.
அப்படியான அட்டவீரட்டான தலங்கள் என எட்டு உண்டு.
திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை மற்றும் திருக்கடவூர்.
இந்த ஆலயங்களில் முதலாவதும், சிறப்பு மிக்க தலமுமான திருக்கண்டியூர் பற்றிக் காணலாம்.
இது சிவன், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை அகற்றி அவர் அகந்தையினை அடக்கிய தலம் இது. அந்தக் கோவிலின் சிவன் பெயர் பிரம்மசிரகண்டீஸ்வரர், அதாவது பிரம்மனின் சிரசைக் கண்டமாக வெட்டியவர் எனப் பொருள்.
பிரம்மன் தலையினைக் கண்டம் செய்த இடமே கண்டியூர் என்றாயிற்று.
இது ஒரு புராணக் கதை, தொன்மையான புராண வரலாறு, இந்துமரபில் எல்லோரும் அறிந்த வரலாறு.
சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு என்பது ஐதீகம், சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என ஐந்து.
அதாவது படைத்தல்,காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களைச் சிவன் ஐந்து முகங்கள் மூலம் செய்வார்.
இதனால் ஐந்துமுகம் கொண்டவர் எனச் சிவனுக்கு பெயர், அது எங்கும் நிலைத்துவிட்டது.
பிரம்மனுக்குத் தொடக்கத்தில் ஐந்து முகங்கள் இருந்தன. இதனால் தனக்கும் ஐந்து முகம் உண்டு என்றும், தானும் சிவனும் சமம் எனும் அகங்காரம் கொண்டார் பிரம்மன், இந்த அகங்காரம் பல இடங்களில் அவரால் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த அகங்காரம் பிரம்மனைத் தனி இறுமாப்பு கொள்ள வைத்தது யாரையும் அவர் மதிப்பதுமில்லை, ஏறேடுத்து பார்ப்பதுமில்லை.
அவருக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பினார் சிவன்.
அதன்படி ஒரு யாகம் நடத்தினார், அங்கே பிரம்மனும் வந்தார், யாகத்தின் முடிவில் பிரம்மன் சிவனிடம் எல்லாத் திசையில் இருந்தும் தன்னை சிவன் வணங்கி கௌரவிக்கவேண்டும் எனக் கோரினார்.
சிவனும் அப்படி நான்கு திசைகளில் இருந்தும் வணங்கினார், ஐந்தாம் முகத்தை வணங்க திசையினை அவரால் அறியமுடியவில்லை.
சர்வேஸ்வரனால் கூட என் தலையினைத் திசை அறிந்து வணங்கமுடியவில்லை, திசை அறியாத இவர் ஈசனா? என் தலையினைக் கூட வணங்க திணறுகின்றார் எனக் கர்வத்தில் பேசினார் பிரம்மன்.
ஆத்திரமடைந்த சிவனில் இருந்து அவரின் ருத்திரன் வெளிப்பட்டு பிரம்மனின் ஒரு தலையினைக் கொய்தார்.
அதன் பின் நான்கு தலைகளே பிரம்மனுக்கு எஞ்சின, தன் தலை பறிபோனபின் அவர் அகங்காரமும் அவருக்கு அகன்றது.
பிரம்மனின் தலையினைக் கொய்ததால் சிவனுக்குப் பிரம்மகத்தி தோஷம் உண்டானது. ருத்திரனின் கையில் அந்த மண்டை ஓடு ஒட்டிக் கொண்டது .
பிரம்மனின் அகங்காரத்தைப் போக்க பிரம்மஹத்தி தோஷம் பெற்ற சிவன் பின் யாசகம் பெற்றுவாழும் பிச்சைக்காரனாய் அந்தக் கபாலத்திலே பிச்சை எடுத்து கபாலீஸ்வரர் எனக் கர்மம் கழித்தார்.
எப்படிப் பாற்கடலில் வந்த நஞ்சினைத் தான் உண்டு உலக உயிர்களைக் காத்தாரோ, அப்படி எல்லோரின் கர்மாவினையும் அவர் ஏற்று ஆண்டியாய் பிச்சைக்காரனாய் அலைந்தார்.
பிரம்மன் என்பவன் ஒவ்வொரு உயிருக்கும் பொறுப்பனாவன் என்பதால் அவன் தலையினை வெட்டினார் என்பது தத்துவரீதியாக மானுட அகங்காரக் கொடிய குணத்தை தன்னில் ஏற்றுக் கழிப்பவர் எனப் பொருளாகின்றது.
சிவன் இந்த மக்கள் மேல் கொண்ட அன்பு அப்படி, அன்பு என்றாலே சிவம், சிவம் என்றால் அன்பு எனச் சொல்லபட்டது இதனால்தான்.
இந்தச் சம்பவம்தான், இந்த வரலாறுதான் திருக்கண்டியூர் ஆலயத்தின் சுருக்கமான போதனை அல்லது புராணக் காட்சி.
இங்குச் சிந்திக்கவேண்டியது நிரம்ப உண்டு.
பிரம்மன் என்பவன் படைப்பின் அதிபதியாக கருதப்படுபவர், படைப்பு என்றால் அது எவ்வகை படைப்பாகவும் இருக்கலாம், பொதுவாக ஒருவெற்றியினை ஒரு அங்கீகாரத்தை குறிப்பது.
கலை படைப்பு முதல் பெரும் சாம்ராஜ்யம் படைப்பு வரை எல்லாம் அவ்வரிசையே.
அப்படிப் பெரும் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு கர்வம் வரும், ஒரு அகந்தை வரும் அது இயல்பு.
வித்தை கர்வம் முதல் நான் அதிகாரம் மிக்கவன் எனும் ஆட்சி கர்வம் வரை அப்படியானது. அந்தக் கர்வம் ஒருவனை அடுத்தக்கட்டத்துக்கு நகரவிடாது, அடுத்தக்கட்டம் நகராமல் ஞானம் அடையமுடியாது.
ஞானம் அடைய இந்தக் கர்வமும் மாயையும் உடைதல் அவசியம். நிலையற்ற உலகில் நொடியில் சரியும் வாழ்வில் இதெல்லாம் அர்த்தமில்லாதவை என்பதும் நம்மைவிட வல்லவர் உண்டு வல்ல சக்தி உண்டு நாமெல்லாம் பரம்பொருளின் கைப்பாவைகள் என உணர அந்தக் கர்வம் உடைதல் அவசியம்.
எல்லாவற்றிலும் ஒரு வெறுமை வரவேண்டும், இதுதான் இவ்வளவுதான் எனும் அதிர்ச்சி வரவேண்டும், நிம்மதி என்பது தேடும் பொருளில் இல்லை அடையும் வெற்றியில் இல்லை அதைத் தாண்டிய வெறுமையில் ஒன்றுமே இல்லை எல்லாம் மாயை எனும் நிலையில் வரவேண்டும்.
அதற்குக் கர்வம் அழியவேண்டும்.
அதுகாலம் மனதாலும் நினைவாலும் கட்டப்பட்டிருந்த மாய முகம், நானே சகலமும் நானே எல்லாமும் நான், என், என் சாதனை, என் செல்வாக்கு, என் புகழ் என எல்லாமும் உடையும் போதுதான் அந்த வெறுமை வரும்.
மாயையினை நம்பி இதுதான் நிரந்தரம் என நம்பி, அற்ப மானிட வாழ்வில் ஏதோ கிடைத்துவிட்டது என அகங்காரத்தில் மூழ்கி அதை தக்கவைக்க போராடி அந்தப் போராட்டத்திலே வீழ்ந்து நிம்மதி இழந்து மகிழ்ச்சி இழந்து, எந்த மகிழ்ச்சி நிம்மதிக்காகப் போராடி அகந்தை கொண்டார்களோ அதைத் தக்கவைக்க அகந்தையில் போராடுவது ஞானமும் தராது. அறிவும் தராது.
இந்த உலகில் இராஜ்ஜியமாகட்டும், விஞ்ஞானமாகட்டும், தொழிலாகட்டும், பணமோ, அதிகாரமோ, செல்வாக்கோ எதுவும் நிரந்தரமில்லை. அதற்கு எல்லையுமில்லை.
அகந்தை இருக்கும்வரை, அகங்காரம் இருக்கும்வரை இதில் தேடிக்கொண்டே இருக்கச் சொல்லுமே தவிர, அடுத்தடுத்து வென்றுகொண்டே இருக்கவேண்டும், நான் யார் என்பதைக் காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என மனம் அகங்காரத்தில் போராடுமே தவிர அமைதி கொள்ளாது.
அமைதி இல்லா மனதில் ஆசையும், போராட்டமும், நிம்மதியின்மையும் வருமே தவிர ஞானம் வராது.
அகங்காரம் இருக்கும் வரை அறிவும் தெளிவும் வராது, ஞானமும் வாய்க்காது.
இதனாலே ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடாத குணம் அகங்காரம் என்றார்கள். அகங்காரத்தால் சக மானுடரை அடக்கலாம், பல சக்திகளை அடக்கலாம் ஆனால் பரம்பொருளிடம் தோற்றே ஆகவேண்டும் என்பதைப் புராணங்களில் சொன்னார்கள்.
எல்லா இந்து புராணமும் அகங்காரிகளைத தெய்வம் வந்து ஒழிப்பதையே காட்டும்.
ஆனால், சிவபெருமானோ, முருகப்பெருமானோ இங்கே தனித்து நிற்கின்றார்கள், அவர்கள் எந்த அகங்காரியினையும் அழிப்பதுமில்லை. கொல்வதுமில்லை.
மாறாக, அவனைத் திருத்தி அகங்காரம் ஒழித்துத் தன்னோடு சேர்த்துக்கொள்வார்கள்.
அப்படி ஒரு மனிதனின் ஆகாத குணங்களை ஒழித்து ஞானம் தரும் ஆலயம் இந்தத் திருக்கண்டியூர் ஆலயம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏகப்பட்ட முகங்கள் உண்டு, மானிடன் பார்ப்பது ஒரே ஒரு வெளிமுகத்தைத்தான். ஆனால், பல முகங்கள் வெளிததெரியாமல் உண்டு.
அவனின் பலவகையான குணங்கள் அப்படி பலமுகங்களாய் வெளித்தெரியாமல் அகங்கரிக்கின்றன.
இறைவன் ஒருவனாலேதான் அந்தப் பல முகங்களைக் காணமுடியும், அங்கே எந்த முகம் அவனுக்கு அகங்காரம் கொடுக்குமோ, எது அவசியமில்லையோ, எது அவனைத் தவறாய் வழிநடத்துமோ அதனை ருத்திரன் பறித்துக் கொள்கின்றார்.
திருக்கண்டியூர் தலம் என்பது சிவன் பிரம்மனின் வேண்டாத தலையினைக் கொய்த இடம் மட்டுமல்ல, அங்குச் செல்வோரின் அகங்காரம்,சோம்பல்,பேராசை, காமம், குரோதம் என எல்லா முகங்களையும் தரித்துப்போடும் இடம் அதுதான்
உருத்திரவடிவில் சிவபெருமான் அங்கு அந்த வரம்தான் அருளிக்கொண்டிருக்கின்றார்.
திருக்கண்டியூர் என்பது ஒருவனின் வேண்டாத குணங்களை, அந்தக் குணங்களின் தலைகளை வெட்டிப்போடும் இடம், அதனால் அங்குச் சென்றால் மனமாற்றம் வரும். அறிவு தெளிவு வரும். வேண்டாதன எல்லாம் நீங்கும்.
இந்தக் காலபைரவருக்கான நாட்களில் முதலில் வணங்கவேண்டிய தலம் அது.
தஞ்சாவூர் பக்கம் திருவையாறு அருகே அமைந்துள்ள தலம் இது, முடிந்தவர்கள் நேரில் தரிசிக்கலாம், முடியாதவர்கள் அவரிடம் வேண்டிக்கொண்டு வாய்ப்பு கிடைக்கும் போது சந்திக்கலாம்.
அந்தத் திருக்கண்டியூர் சப்தஸ்தான ஸ்தலங்களில் ஒன்று, தேவாரம் பாடப்பட்ட தலங்களில் ஒன்று, முக்கியமான வீரட்டானத்தில் ஒன்று.
கால பைரவரின் ருத்திர வடிவம் என்பது காவல் இருக்கும் தெய்வம் நமக்கு வேண்டாதனவற்றை எல்லாம் அகற்றும் அவர் எதிரிகளின் தாக்குதலில் இருந்தும் நம்மைக் காக்கும் பொறுப்பினை ஏற்கின்றார்.
அதனால் காலபைரவரை வணங்க வணங்க வேண்டாதன எல்லாம் அகலும், எதிரிகள் ஒழிவார்கள், காலம் எதை எல்லாம் பறித்ததோ அதெல்லாம் கால பைரவர் அருளில் திரும்பவரும்.
இந்தத் தொடக்க நாளில் திருக்கண்டியூர் பிரமசிரக் கண்டீஸ்வரரை வணங்குவோம்.
“கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே”
எனத் திருமூலர் வணங்கிய அந்தப் பிரமசிரக்கண்டீஸ்வரர் எனும் ருத்ரகோல சிவனை வணங்கி இந்தக் காலபைரவருக்கான அஷ்ட நாட்களைத் தொடங்கலாம்.
அட்ட வீரட்டானம் 02 : திருக்கோவிலூர்.
சிவபெருமானின் அட்ட வீரட்டான தலங்களில் இரண்டாம்தலம் திருக்கோவிலூர்.
அந்தத் தலம் விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றோரம் அமைந்திருக்கும் தலம், அங்கிருக்கும் சிவன் பெயர் அந்தகாசுவர மூர்த்தி.
இது தேவாரம் பாடப்பட்ட தலம். அட்டவீரட்டானம் எனும் வீரபத்ர ருத்ரகோல சிவனின் இரண்டாம் முக்கிய தலம், மகா சிறப்பானது.
“கரவலாளர் தம்மனைக் கடைகள் தோறுங் கால்நிமிர்த்
திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டில் நீ
குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே. “
என்பது சம்பந்தபெருமான் பாடிய வரி.
“பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்க மென்னுந்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை தன்னுள்
அச்சனாய் ஆதி மூர்த்திக் கன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே”
என்பது அப்பர் வாக்கு.
“வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்
தாழையூர் தகட்டூர் தக்களூர் தருமபுரம்
வாழை காய்க் கும்வளர் மருகல் நாட்டு மருகலே.”
என்பது சுந்தரர் வாக்கு.
“கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்டக் கோளரவம்
பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின்
இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால்
கடிக்க லுறும்அஞ்சி நஞ்சம்இருந்தநின் கண்டத்தையே”
என்பது கபிலதேவ முனியின் பாடல்.
இந்தத் தலமானது அந்தகாசுரன் எனும் அசுரனை சிவன் வதம்செய்து பின் தன்னோடு சேர்த்துக்கொண்ட மிக முக்கிய புராணத்தின் சாட்சியாக, சிவன் அந்த அந்தகாசுரனை வதம் செய்த இடமாக அறியப்பட்டு அங்கு இந்த மகா புண்ணிய ஷேத்திரம் எழுந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றது.
பொதுவாக, விஷ்ணுவும் அம்மனுமே அசுரர்களை வதம் செய்பவர்கள். சிவன் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை. ஆனால், எட்டு இடங்களில் அவர் இப்படி அகங்காரிகளின் அகந்தையினை ஒழித்து அவர்களைத் தன்னோடு சேர்த்திருக்கின்றார்.
அதில் ஒருவன் இந்த அந்தகாசூரன்.
இந்த அந்தகாசூரன் கதை லிங்கபுராணத்தில் உண்டு, சிவபுராணத்தில் உண்டு இன்னும் மச்சபுராணம் எனப் பல இடங்களில் உண்டு.
இது அப்படியே இன்று வானியல் ஆய்வு சொல்லும் வான்வெளி பிரபஞ்சவெளி அறிவியல் காட்சிக்கு மிக மிக அழகாக பொருந்துதல் இன்னும் சிறப்பு. இந்துக்களின் புராணம் இன்றைய அறிவியல் ஆய்வுகளால் மெய்பிக்கப்பட்டு அவை எல்லாம் பொய் அல்ல, அவை எல்லாம் கற்பனை அல்ல.
என்றோ மிகப் பெரிய அறிவுடன் வாழ்ந்த இந்துமத ஞானியர் வானியல் நகர்வுகளை, பிரபஞ்ச அதிசயங்களை அதன் இயக்கத்தை புராணக் கதைகளாகச் சொன்னார்கள். அதையே லௌகீக தத்துவமாகச் சொன்னார்கள். அந்தப் பிரபஞ்ச பெரும் இயக்கத்தை சக்திமிக்க அலைகளாக மாற்றி ஆலயமாக ஸ்தாபித்தார்கள்.
அந்தகாசூரன் வரலாற்றைத் தாங்கி நிற்கும் அந்தக் திருக்கோவிலூர் வீரட்டான ஆலயம் அதன் பெரும் சாட்சி.
இனி அந்த அந்தகார அசுரன் கதையினைப் பார்க்கலாம்.
ஈசன் கண்ணை மூடும்போதெல்லாம் பிரபஞ்சம் இருளில் மூழ்கும் என்பது இந்துமத சாஸ்திர நம்பிக்கை. பொதுவாக, தேவர்கள் இமையா விழிகளைப் பெற்றிருப்பர். ஒருகணம் கூட கண்மூடாது இந்தப் பிரபஞ்சத்தை அவர்கள் இயக்குகின்றார்கள் என்பது அதன் பொருள்.
அப்படிப்பட்ட ஈசனின் கண்ணை மூடினால் என்னாகும் எனப் பார்க்க விளையாட்டாகக் கண்ணை மூட எங்கும் அந்தகார இருள் சூழ்ந்தது. காரிருள் உண்டாயிற்று.
அவள் சிலநொடிகள் மூடினாலும் பிரபஞ்சத்துக்கு அது பெரும் நீண்ட வருடம் சில ஆயிரம் வருடம் அந்த காலம் நீடிக்கும், அப்படி பெரும் இருள் சூழ்ந்தது.
அந்த இருளை கண்டு பார்வதி அஞ்சினாள். அவள் வியர்வைத் துளி சிவன் மேல் பட்டு வீழ அதில் இருந்து ஒரு குழந்தை உருவானது. அந்தகாரம் எனும் இருளில் பிறந்த அக்குழந்தை பார்வை இல்லாக் குழந்தையாக இருந்தது, அதுதான் அந்தகன்.
அதே நேரம் இரண்யாட்சசன் எனும் அசுரன் தனக்கொரு வாரிசுவேண்டி சிவனிடம் தவமிருந்து கொண்டிருந்தான்.
பார்வதியின் கையினைத் தட்டிவிட்ட சிவன் கண் திறக்க எல்லாம் வழமையானது. ஆனால், கண் தெரியாததும் பிரபஞ்சம் இருண்டவேளை வந்த குழந்தையுமான அந்தகனை இரண்யாட்சனிடமே கொடுத்தார் சிவன்.
சிவன் கொடுத்த குழந்தையின் இரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் அதனை தன் குழந்தையாக வளர்த்தான் இரண்யாட்சன். இக்குழந்தை வந்தபின் அவனுக்குமோர் குழந்தை கிடைத்தது. அதன் பெயர் இரண்யகசிபு.
அந்த இரண்யாட்சசன் காலத்துக்குப் பின் குருடன் என்பதால் அந்தகனுக்கு பதவி கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவன் பிரம்மனிடம் தவமிருந்தான்.
சாகா வரமும், பார்வையும் பெரும் அரச பதவியும் கேட்டுத் தவமிருந்தான். அப்படி தவமிருக்க சொன்னவர் அசுரகுரு சுக்கிராச்சாரி, தவமிருக்க சொன்னவர் வினோதமான வரமும் கேட்கச் சொன்னார்.
அசுரதவம் என்பது உலகறிந்தது. அந்தக் கடும் தவத்துக்கு இறங்கிவந்த பிரம்மன் அவனுக்கு வரம் அருள முனைந்தான்.
சாகாவரம் கேட்டான் அந்தகாசுரன். எல்லாப் படைப்பும் ஒருநாள் அழியும் அது விதி அதனால் வேறுவரம் கேள் என்றார் பிரம்மன்.
எனக்குப் பார்வை வேண்டும், அசுர குல அரசு வேண்டும் முக்கியமாக எனக்கான அழிவு நான் என் தாயினை மோகிக்கும் போதுதான் வரவேண்டும், அப்படி என் சிந்தை மாறும்போதுதான் நான் அழிக்கப்படவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்.
பிரம்மனும் அதற்கு இரங்கி வரம் அருளினான்.
இந்த வரம் தந்திரமானது, யாரும் தாய்மேல் ஆசை கொள்ளமாட்டார்கள், அதுவும் அசுரன் இரண்யாட்சனின் மனைவிதான் அந்தகனின் தாயாக அறியபட்டாள், அவளை தெய்வமாக வணங்கியவன் அந்தகன் எனும் வகையில் இந்தச் சூட்சுமமான தந்திர வரத்தை கேட்கச் சொன்னார் சுக்கிராச்சாரி.
வரம் கிடைத்த அந்தகன் பார்வையும் பலமும் அரசும் பெற்றான், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினான். மூவுலகை அச்சுறுத்தினான்.
தேவர் உலகைக் கைப்பற்றினான். அசுர குலத்தை உச்சிக்கு உயர்த்தினான்.
தேவர்களை அவன் அடிமைப்படுத்தியதில் பிரபஞ்ச இயக்கமே பாதிக்கப்பட்டது. அந்தகனை அடக்கவேண்டி விஷ்ணுவிடம் அடைக்கலமானார்கள் தேவர்களும் எல்லா உயிர்களும்.
விஷ்ணு இந்த அந்தகாசுரனை அழிக்க சிவன் ஒருவராலே முடியும், பிரம்மன் கொடுத்த வரத்தின்படி சிவனே அவனை அழிப்பார் என முடிவு செய்தார்.
இதனால் சிவனிடம் சென்றார்கள் முக்கோடி தேவர்கள், சிவன் அவர்களை காக்க முடிவு செய்தார்.
பிரம்மன் அவனுக்கு என்னவரம் கொடுத்தார் என்பது சிவனுக்குத் தெரியும் என்பதால் பார்வதியும் சிவனும் ஒரு முனிவரும் அவன் மனைவியுமாக மாறி ஒரு கானகம் புகுந்தார்கள்.
அந்தகாசுரன் பெரும் யுத்தம் எதிர்பார்த்தான். இந்தத் தேவர் அசுர சண்டை எக்காலமும் நடக்கும் ஏதோ ஒருவகையில் தேவர்கள் சக்திபெற்றுவருவார்கள் அப்போது சண்டை தொடர பாதுகாப்பான இடம் வேண்டும் என எண்ணினான்.
அவனுக்கு அவன் வரத்தின் சக்தி தெரியும். அவனைத் தேவர்களால் கொல்லமுடியாது எனத் தெரியும். அவன் தாயினை அவன் மோகிப்பதை கனவிலும் நினைப்பதில்லை என்பதால் அவன் கொல்லப்பட வாய்ப்பே இல்லை என்பதை அறிவான்.
ஆனால், அசுரர்கள் படை அழிக்கப்படலாம், அவன் ஆட்கள் கொல்லப்படலாம் என்பதால் பாதுகாப்பான இடம் ஒன்றை நிர்மானித்தான்.
அதை எங்கே நிர்மானித்தான் என்பதுதான் ஆச்சரியம்.
அவன் எல்லோரையும் வெற்றிக்கொண்டதால் தேவலோக சிற்பி மயனும் அவனுக்கு அடிமையானான், அப்படி தன் அடிமையினைக் கொண்டுச் செய்தான்.
ஆகாயம், மலை எனத் தன் கோட்டையினை அமைக்காமல் நாலுபக்கமும் கடல் சூழ்ந்த இடத்தில் ஒரு மிகச் சிறிய தீவின் வழியில் வாசலை வைத்து கடலுக்கு அடியில் பிரமாண்ட தங்குமிடத்தைச் செய்தான்.
யாராலும் செல்லமுடியா இடம் அது, அங்கே எந்தப் படையும் செல்லமுடியாதவாறு காவல் வைத்தான்.
இப்படியான பாதுகாப்பில் இருந்து கொண்டு எல்லா உலகையும் தாக்கி யுத்தம் தொடர்ந்தான். அந்நேரம் கானகத்தில் ஒரு அழகிய பெண் இருப்பதையும், அவள் கணவன் முனிவன் என்பதையும் அறிந்த அவன் ஆட்கள் அந்தப் பேரழகி பற்றி அந்தகாசுரனிடம் தெரிவித்தனர்.
அசுரகுணம் என்பது உலகின் எல்லாச் சிறந்த பொருளும் தனக்கானது எனும் குணம் கொண்டது, பொன் பொருள் இராஜ்ஜியத்தோடு அழகு மங்கையரும் தனக்கே எனும் பேராசை கொண்டது.
அந்தக் குணத்தில் மிகுந்திருந்த அந்தகாசுரன் அழகான தேவலோக பெண்களைச் சிறைபிடித்திருந்தான், அவனிடம் இந்தப் பெண்பற்றி சொன்னதும் அவள் உருவைக் காண விரும்பினான்.
தன் ஆட்கள் அவளைக் கண்டிருந்ததால் அவள் பிம்பம் அவர்கள் மூளையில் பதிந்திருந்தன, அவர்கள் மனக்கண்களில் அவள் முகம் இருந்தது.
அதனைத் தன் விஷேச சக்தியால் உணர்ந்து அவர்கள் மூளையின் தகவல்களைக் கிரஹித்து, கண்கள் வழியாகக் கிரஹித்து அவள் அழகைக் கண்டவன் அப்படியே மோகத்தில் விழுந்தான்.
அவள் தன் தாய் என அவன் அறியவில்லை, அவன் சாபம் அந்த இடத்தில் தொடங்கிற்று அவன் வரம் அவனை கைவிட்டது.
தன் பாதுகாப்பான இடத்தில் இருந்து அப்பெண்ணை அபகரித்துவர தன் ஆட்களை அனுப்பினான். ஆனால், முனிவேடத்தில் இருந்த சிவனின் உக்கிர தாக்குதலில் அவர்கள் தோற்றோட இன்னும் பெரும் தளபதிகளெல்லாம் தோற்றோட ஒரு முனிவன் இப்படித் தன்னை அவமதிப்பதா எனக் கர்ஜித்தவன் நேரே யுத்தம் செய்யவந்தான்.
முதலில் மிரட்டினான். அற்ப முனிவனுக்கு அழகு மங்கை அவசியமில்லை அவள் தன்னிடம் இருக்கவேண்டியவள் எனக் கொக்கரித்தான். முனிவர் மறுக்க அவன் தாக்கத் தொடங்கினான்.
ஆனால், முனிவரான சிவன் அவன் படைகளை நொறுக்கினார். அவனை மட்டும் அவன் பெற்ற வரம்படி கொல்லவில்லை. உயிர்பிழைத்தவன் தோற்றோடினான்.
பின் பெரும் படையோடு வந்தான். மூவுலகையும் கைப்பற்றியவனுக்கு அப்பெண் இன்னொரு உலகமாய்த் தெரிந்தாள். அவன் விதி அப்படி முடிவினை நோக்கி இழுத்துச் சென்றது.
அவன் பெரும் சேனையுடன் வரவும் தேவர்கள் சிவனுக்குத் துணையாக வந்தனர், யுத்தம் தேவர் அசுரர் சண்டையாக மாறிற்று.
போரில் சிவன் முனிவ வேடத்தில் நிற்க அந்தகாசுரனின் படைகள் அடிவாங்கின, அவன் படைகளின் வீரர்கள் செத்துவிழுவதை கண்டவன் சுக்கிராச்சாரியாரை அழைத்து அவர்களை மீண்டும் மீண்டும் உயிர்பிக்கச் சொன்னான்.
அசுரர்கள் அழிய அழிய அருகம்புல்லாக வந்துகொண்டே இருந்தனர், யுத்தம் நீண்டுகொண்டே சென்றது.
சிவபெருமான் அவனைத் திசைதிருப்ப வேண்டி பார்வதியினைச் சப்தகன்னியரோடு ஒரு குகையில் மறைத்து வைத்து யுத்தம் தொடர்ந்தார்.
ஒரு கட்டத்தில் அவன் சாபம் வேலை செய்ய ஆரம்பித்தது. சுக்கிராசாரி இருக்கும் வரை அவன் படைகள் எண்ணிக்கை குறையாது என்பதை அறிந்த இந்திரன் அவர் கொஞ்ச ஓய்வெடுக்கும் நேரம் மதுகொடுத்து உறங்கவைத்துவிட்டான்.
அப்படியே அவரை அந்த அந்தகாசூரன் எழுப்பிவிடாதவாறு மறைத்தும் வைத்தனர்.
அவரைக் காணாமல் தவித்தான் அந்தகாசுரன். மறைவாய் அவர் மயங்கி கிடக்கும்போது அசுரப்படைகள் அடிவாங்க ஆரம்பித்தன, மறுபடி எழுப்பிவிட சுக்கிராச்சாரி இல்லை என்பதால் அவை வேகமாக சுருங்கத்தொடங்கின.
விரைவாக அந்தப் பெண்ணைக் கைப்பற்றவேண்டும் எனக் கருதியவன், தன் தளபதி விஸ்வன் என்பவனைப் பார்வதியினைக் கைப்பற்ற அனுப்பினான் அந்தகன்.
அந்த விஸ்வன் பாம்பாய் மாறி பார்வதியினைச் சுற்றி இருந்த சப்தகன்னியரை விழுங்க முனைந்தபோது சிவனின் கனை அவனை அழித்தது.
ஒருபக்க அவன் சேனை சுருங்க இன்னொருபக்கம் முக்கிய தளபதியும் வீழ்ந்ததில் அந்தகாரன் பெரும் ஆட்டம் ஆடினான்.
அவன் திடீரென சிவனின் முனிவ வேடத்துக்கு மாறினான். இதனால் தேவர்படைகள் குழம்பின, பல வகையான மாயவேடங்களில் மறைவதும் தோன்றுவதுமாக வந்து பெரும் அழிவினைச் செய்தான்.
அவனின் ஆட்டம் ஆரம்பமானதும் சிவனும் ஆரம்பித்தார். அவர் உடலில் இருந்து வீரபத்திரன், உருத்திரன் போன்ற வடிவங்கள் வந்தன.
அந்த உருத்திரன் ஆவேசமாக போரிட்டார், போர் கடுமையானது.
ஒரு கட்டத்தில் தன் சூலத்தால் அவர் அந்தகாரனை குத்தியதில் அவன் உடலின் இரத்தம் வீழ வீழ பல அந்தகார அசுரர்கள் உருவானார்கள்.
அவர்கள் பெரும் போர் புரிந்தார்கள்.
சிவன் தன் சக்திகளைப் பிரித்தார். அதிலிருந்து கபால பைரவரும் காளியும் வந்து அந்த இரத்தம் கீழே விழாதவாறு பார்த்துக் கொண்டார்கள், அவன் சக்தி பெருக்கம் தடைப்பட்டது.
அவன் மேற்கொண்டு மாயமாக மறையாமல் இருக்க திசைக்கு எட்டாக எட்டு திசையில் எட்டு பைரவர்களைச் சிவன் உருவாக்கினார்.
64 பைரவர்களும் இப்படி காவல் இருக்க வசமாக சிக்கினான் அந்தகாசுரன்.
அவனை தன் சூலத்தில் குத்தி தூக்கினார் உருத்திரன், அவன் அப்போது இரத்தம் வழியும் நிலையிலும் சிவனை வேண்டி தொழுதான், சிவநாமத்தை தொடர்ந்து உச்சரித்தான்.
தன் வரம் தன்னைவிட்டு அகன்றது என்பதையும், தான் தோல்வியுற்றுகிடப்பதால் அந்தப் பெண் தன் தாயாக மட்டும் இருக்கமுடியும் என்பதை அறிந்து அங்கே மனம்மாறி அகந்தை அழிந்து பணிந்தான்.
சிவனும் அவனை முழுக்க அழிக்காமல் கைலாயத்தில் ஏற்றுக்கொண்டு அவனுக்குப் “பிரிங்கீரிடன்” எனும் பெயரிட்டுத் தன் பூதகணத்தில் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டார்.
இதுதான் அந்தகாசுரனின் சுருக்கமான புராணம்.
இங்கு விஞ்ஞானமாகக் கவனிக்கதக்கது பல விஷயம் உண்டு. இன்றும் பாதுகாப்பான இடம் கடலடி சுரங்கம் என்பதுதான் விஷயம். கடலுக்கு அடியில் சுரங்கம் கட்டினால் எந்த சக்தியாலும் எளிதில் தகர்க்கமுடியாது என்பது வல்லரசுகள் அறிந்த உண்மை.
ஆளில்லா தீவுகளின் கரையடியில் வாசல் வைத்து கடலுக்குள் சுரங்கம் கட்டி அபாய ஆயுதங்களை ஆபத்து காலத்துக்காகப் பதுக்கி வைப்பது இன்று நடக்கும் காட்சி.
இதனை என்றோ சாத்தியம் எனச் சொன்ன மதம் இந்துமதம்.
அந்த அந்தகாசுரன் என்பவனை இன்று வானியல் விஞ்ஞானிகள் பெரும் ஆய்வு செய்யும் கருந்துளையோடு கருப்புத் துளையோடு ஒப்பிடலாம்.
அந்தப் பிளாக் ஹோல் எனும் அந்த அதிஈர்ப்பு மிக்க துளை, ஒரு நட்சத்திரம் எரிந்து முடிந்தபின் உருவாகும் துளை அதீத ஈர்ப்பு சக்தி கொண்டது.
அதன் தோற்றம் பிரபஞ்சத்தில் நட்சத்திரமாக உருவானாலும் பின் இருளாகி இருட்டுத் துளையாகி எல்லாவற்றையும் ஈர்த்து அருகிருக்கும் கிரகங்களை ஈர்த்து பெரும் குழப்பத்தை அது செய்யும்.
இந்த ஆய்வுதான் இன்று உச்சத்தில் இருக்கின்றது.
இந்தக் கருந்துளையோடு அந்த அந்தகாசுரன் கதையினைப் பொருத்தினால் பல அதிசய ஒப்புமைகளைக் காணமுடியும்.
கருந்துளையால் சூரியனை ஈர்க்கமுடியும், பல ஒளிவிடும் கோள்களை ஈர்த்து தன்னுள் வைத்து எல்லாவற்றையும் இருட்டாக்க முடியும் அதாவது ஒளி கதிர்களைக் கூட பிடித்துவைத்து வெளியிடாமல் இருளாகக் காட்சி அளிக்கும் வல்லமை கொண்டது கருந்துளை.
அப்படி ஒரு பிரமாண்ட கருந்துளை ஒருகாலத்தில் பிரபஞ்சத்தில் உருவாகி பிரபஞ்ச இயக்கத்தை அசைத்திருக்கலாம். குழப்பியிருக்கலாம்.
அண்ட சராசரமும் கோள்களும் குழம்பி என்னவோ நடந்திருக்கலாம்.
அந்நேரம் அந்த மகா சக்தி, இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி கருந்துளையினைத் துண்டு துண்டாக உடைத்திருகலாம் அல்லது வேறுவழியில் அதன் சக்தியினை அகற்றியிருக்கலாம்.
பெரும் போராட்டம் அப்போது நடந்திருக்கலாம், புது புது சக்திகள் வானில் தோன்றி கருந்துளையினைக் கட்டுப்படுத்தி பிரபஞ்ச இயல்பு நிலையினை வழமையாக்கியிருக்கலாம்.
இது நடந்திருக்கலாம். அதைத்தான் இந்துக்கள் அந்தகார வதம் என ஒரு புராணமாகச் சொன்னார்கள்.
இன்றிருக்கும் விஞ்ஞானம் கருந்துளை ஆய்வில் இப்போதுதான் கால்வைக்கினது. ஒரு நாள் எதிர்காலத்தில் இந்த உண்மைகளைக் கண்டறியும். அப்போது இந்துமதம் பெரும் புகழ் அடையும்.
இது ஒருகாலம் நிச்சயம் நடக்கும்.
இன்னும் வாஸ்து சாஸ்திரம் பற்றியும் இந்தப் புராணம் சொல்கின்றது. அந்தப் பைரவர்கள்தான் இன்றும் அசுரனின் கெட்ட சக்திகளை உறிஞ்ச காவல் இருக்கின்றார்கள் அதனால் வீடு கட்டும்போது வாஸ்து என அவர்களை அழைக்கவேண்டும் என்கின்றது.
விஷயம் வேறு எதுவுமல்ல, பூமியினைத் தோண்டும்போது விஷ வாயுக்கள் வரலாம், துர்சக்திகள் வரலாம் அதனால் சில பாதுகாப்பு விஷயம் அவசியம். அதை என்றோ இப்படி வாஸ்து எனவும் பூஜைகள் எனவும் சொன்னது இந்துமதம்.
ஆம். அது விஞ்ஞான மதம். இன்று காணும் எல்லாவற்றையும் விஞ்ஞானம் சொல்லும் அனைத்தையும் சொல்லி அதற்குப் பிரபஞ்சத்திடம் இருந்தே தீர்வு உண்டு என்பதையும் சொன்ன மதம் இந்துமதம்.
ஆன்மீகமாக இந்த அந்தகாசுரன் கதை அழகான ஆத்ம தத்துவத்தைப் போதிக்கின்றது.
அந்தகாரன் சிவகுடும்பத்தில் உதித்தவன் அதாவது தெய்வீக ஆத்மா, ஆனால் அசுரரோடு வளர்ந்து அசுர குணம் அனைத்தும் கொண்டு பெரும் அசுரபலத்தோடு வலம் வருகின்றான்.
ஒருகட்டத்தில் எல்லாம் ஆளவேண்டும் எல்லாம் தனக்காக வேண்டும் எனும் பேராசையில் சிவனோடு மோதுகின்றான்.
சிவன் அசுரகுலத்தில் ஊறிய அவன் ரத்தம் அனைத்தையும் வடியச்செய்கின்றார். அதாவது, அவனின் அசுர அங்ககார குணத்தைப் போக்குகின்றார். அதன்பின் அவனுக்கு உண்மை தெரிகின்றது.
அந்த அசுர வடிவம் நீங்கித் தெய்வ ஆத்மாவாக அவன் இறைசக்தியிடமே சரணடைந்தான்.
அந்தகாசுரன் கதை சொல்வது இதுதான், எல்லா ஜீவாத்மாவும் பரமாத்மாவிடம் இருந்து புண்ணிய ஆத்மாவாக மட்டும் வருகின்றது.
ஆனால், மாயையும் லௌகீக நெருக்கடிகளும் அதனை அசுரகுணமாக மாற்றுகின்றன. அந்த ஆத்மா தான் எங்கிருந்து வந்தோம் என்ன செய்கின்றோம் எனத் தெரியாமலே மாயையில் போராடுகின்றது.
இறைவனை அது அண்டி பக்தியில் பணியும் போது இறைசக்தி அந்த ஆத்மாவின் அசுரகுணம், மாயகுணமெல்லாம் நீக்கித் தன்னோடு சேர்த்துக் கொள்கின்றது.
திருக்கோவிலூர் தலம் அந்த அந்தகாசுரனை ஆட்கொண்ட அந்தகாசுரவத மூர்த்தி எனும் சிவனின் தலமாக இப்போதும் நிற்கின்றது.
அங்குச் சென்று வணங்கும்போது இந்த ஆத்மாவின் அகங்காரமும் மாயையும் அகலும். இந்த ஜீவஆத்மா தான் பரமாத்மாவின் வடிவம் என்பதை அறியும், தன் மூலம் எதுவென அறியும்.
அப்படி அறியும்போது பெரும் அறிவும் ஞானமும் நிம்மதியும் அதற்கு வரும், இதுகாலம் அது கண்ட அனைத்து சிக்கலும் களையப்படும்.
அந்தகார அசுரன் என்பவன் ஒவ்வொரு ஆன்மாவிலும் ஒவ்வொரு ஜீவாத்மாவிலும் இருக்கின்றான். அதனால் அந்த ஜீவாத்மா தான் யார்? தனக்கு என்னவேண்டும் எனத் தெரியாமலே தடுமாறுகின்றது.
திருக்கோவிலூர் தலத்தில் வணங்கும்போது அந்தகார அசுரனுக்கு அருள் செய்த அந்தக் கருணாமூர்த்தி அந்த ஆத்துமத்துக்கும் தெளிவினைக் கொடுக்கின்றார். அதன்பின் அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.
தான் யார் எனத் தேடுபவர்கள், காரணமில்லாச் சிக்கலினால் போராட்டத்தினால் கண்ணீர் விடுபவர்கள், ஏன் போராடுகின்றோம் எதற்குப் போராடுகின்றோம் எனத் தெரியாமலே வாழ்வில் போராட்டம் ஒன்றையே கண்டுகொண்டிருப்பவர்கள் அந்த திருக்கோவிலுரில் பணிந்தால் நிச்சயம் நற்பலன் உண்டு.
தாங்கள் யார் என அவர்கள் அறிவார்கள், கர்மம் எது எனப் புரிவார்கள், பெரும் அமைதியும் நிம்மதியும் அவர்களுக்குள் குடிகொள்ளும். இது சத்தியம்.
அட்டவீரட்டானம் என இரண்டாம் இடத்தில் இருக்கும் அந்தத் திருக்கோவிலூர் சிவன் தன்னை நம்பிவரும் எல்லாப் பக்தர்களையும், அவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரும் பாவிகள், கெட்டவர்கள் தீயவர்கள் இல்லை மதிமயக்கத்தால் குழம்பியவர்கள் என இருந்தாலும் அவர்களை சுத்தமாக்கி, அவர்களின் மாய தள்ளாட்டம் போக வைத்து அகந்தை நீக்கி அருள்புரிந்து தன்னோடு சேர்த்துக் கொள்ள காத்திருக்கின்றார்.
அவரின் ஆலயம் எல்லா மக்களுக்கும் திறந்தே இருக்கின்றது, அவரை நம்பி திருக்கோவிலூர் செல்வோருக்கு எல்லா நலமும் கைகூடும். இழந்ததை எல்லாம் பெறுவார்கள். நிம்மதி அனைத்தும் அடைவார்கள். இது சத்தியம்.
“கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ் செய்தா னென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே”
என்ற திருமூலரின் பாடல் ஒலிக்க அந்தச் சிவன் அங்கே காத்துக்கொண்டிருக்கின்றார்.
அட்ட வீரட்டானம் 03 : திருவதிகை
சிவபெருமான் அகங்காரம் கொண்டோரைத் தோற்கடித்து அவர்களின் அகங்காரங்களை அழித்த தலத்தில் முக்கியமானது திருவதிகை தலம்.
திரிபுரம் எரித்த சிவனின் பெருமையினைச் சொல்லும் தலமாக, அந்தச் சம்பவத்தின் மிக முக்கிய அடையாளமாக, இங்குதான் அந்தக் காட்சி நடந்தது எனத் தேர்வடிவில் நிறுவப்பட்ட ஆலயம் அது.
ஆம். தேர்வடிவில்தான் அது அமையபபட்டிருக்கும். சிவபெருமான் ஒரு தேரில் இருந்துதான் அந்தத திரிபுரத்தை எரித்தார் என்பது புராணம்.
அப்படியே வில்லும் பாணமுமாக அந்தத் திரிபுரம் எரித்தக் கோலத்தில் உதட்டில் புன்னகையோடு இருக்கின்றார் வீரட்டானேஸ்வரர்.
இந்த ஆலயம் பன்னெடுங்காலத்துக்கும் முந்தையது. மிக மிகப் பழமையானது.
மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் இக்கோயிலுக்குப் பொன்வேய்ந்து நூற்றுக்கால் மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை ஆகியவற்றை அமைத்து, அம்பாள் கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி.
இன்னும் சோழர்களும் பல்லவர்களும் பெரும் திருப்பணி செய்திருக்கின்றார்கள், பௌத்த காலத்தில் அதனைப் பௌத்த ஆலயமாக மாற்ற முயற்சி செய்து பின் முறியடிக்கப்பட்டுவிட்டது.
எனினும், வட இந்தியாவில் ஆப்கானிய அடையாளம் இந்து ஆலயங்களில் காணப்படுவது போல இங்கே பௌத்த சிலைகள் இன்றும் உண்டு.
அதாவது, அப்படியான காலத்தையெல்லாம் கடந்து நிற்கும் ஆலயம் இது.
இந்த ஆலயத்தில்தான் அப்பர் பெருமான் தன் வயிற்றுவலி நீங்கப்பெற்று சைவம் தழுவினார். சமணராய் இருந்த அப்பர் கடும் வயிற்றுவலியால் துயருற்று சாகும் தருவாயில் தன் அக்கா திலகவதியினைக் காண வந்தபோது அவருக்கு அந்த திலகவதியார் திருநீறு பூசி நோயினைக் குணமாக்கிய இடம் இதுதான்.
இங்குதான் அவரைச் சிவன் முழுக்க ஆட்கொண்டார்.
இந்த ஆலயத்துக்கு வரத்தகுதி இல்லை என அஞ்சி சுந்தரர் ஒதுங்கி செல்லும்போது சிவனே அவரை அழைத்த அதிசயமெல்லாம் இங்கு நடந்தது.
சுந்தரருக்குத் திருவடி தீட்சை இந்த ஆலயத்தில்தான் கிடைத்தது.
திருஞான சம்பந்தர் இங்குப் பாடியிருக்கிறார், இந்தப் பாடலை பாடித் தொடங்கித்தான் இந்த ஆலயம் பற்றி ஒரு பதிகமே பாடினார்.
திருஞானசம்பந்தர் சிவநடனக் காட்சியினை இந்த ஆலயத்தில்தான் கண்டார்.
“குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே”
நோய் தீர்ந்த அப்பர் பெருமான் அந்த இடத்திலே பாடலை இப்படிப் பாடி ஒரு பதிகம் அமைத்தார். அது நான்காம் திருமுறையில் உண்டு.
“கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே”
இத்தலத்தில் சுந்தரர் ஏழாம் திருமுறை பதிகத்தை இந்தப் பாடலினால் தொடங்கினார்.
“தம்மானை அறியாத சாதியார் உளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே”
கபிலதேவ நாயனார், பதினொன்றாம் திருமுறையில் உருக்கமாகப் பாடினார்.
“மதிமயங் கப்பொங்கு கோழிருட் கண்டவ விண்டவர்தம்
பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ்
அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டு
கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே”
மனவாசங்கடந்தவர் எனும் பெரும் சிவனடியார் இங்கிருந்துதான் உருவாகி பெரும் ஞானியாகத் திகழ்ந்தார், இன்னும் பெரும் அதிசயமெல்லாம் உண்டு.
இப்படி மகா பிரசித்தியான அந்தத திருவதிகை ஆலயம் பற்றி, இன்றும் எல்லா விதமான வயிற்று வலி சிக்கல் இதர நோய்களைத் தீர்க்கும் அருள்தலமாக நிற்கும் அந்தச் சக்திமையத்தினைப் பற்றி காணலாம்.
அந்த ஆலயம் அமைய மூலக் காரணம் அந்த திரிபுரம் எரித்தப் புராணம்.
வடமொழி மகாபாரதத்தின் அநுசாசந பர்வதத்திலும், யஜூர் வேதத்திலும், சரபோபநிடதத்திலும், மச்சபுராணம், கந்தபுராணம், லிங்கபுராணம் எனப் பல இடங்களில் இந்த வரலாறு உண்டு.
அந்தப் புராணத்தின் சாயலாக புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் எனச் சங்க இலக்கியத்திலும் உண்டு.
சிலப்பதிகாரமும் இந்தப் புராணம் பற்றித் தெளிவாகச் சொல்கின்றது. தஞ்சாவூர் ஆலயம் முதல் பல ஆலயங்களில் இந்தப் புராணக் காட்சி சிற்பமாக உண்டு.
கடலூர் அருகே கடிலம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் அந்த ஆலயத்தின் மூலமான திரிபுரம் எரித்தக் கதை எல்லோரும் அறிந்தது என்றாலும் மீண்டும் அதைக் காணலாம்.
தாரகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் மூன்று பேர் உண்டு. வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவரும் பெரும் சக்திபெற தவமிருந்தார்கள்.
அசுர குலம் ஆளவும் மூவரும் பெரும் அரசர்களாய் ஆளவும், எதிரிகளே இல்லா நிலைபெறவும், பெரும் காவல் பெறவும் சிறப்பு வரத்துக்காக பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள்.
அவர்கள் தவத்தினால் பிரம்மனும் தோன்றி வரமருள முன்வந்தான்.
அவர்கள் வினோதமான வரத்தை கேட்டார்கள், அதுவரை அசுரர்களின் கோட்டைகள் நிலங்களில் நிலையாய் இருந்தன அதனால் போர் என்றால் சிக்கலானது.
இம்முறை ஆகாயத்தில் அதுவும் நகரும்படி கோட்டைவேண்டும், அதுவும் பல வரங்களோடு வேண்டும் எனக் கேட்டார்கள்.
பிரம்மனும் தலையசைத்தான்.
அதன்படி “நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் மூவருக்கும் முடிவு வேண்டும் வேறு எதனாலும் அழிவு வரக்கூடாது” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள்.
பிரம்மன் அவர்கள் வரத்தை ஒரு நிபந்தனையோடு ஏற்றுக்கொண்டார்.
இந்த மூன்று கோட்டைகளும் ஆயிரம் வருடத்துக்கு ஒருமுறைதான் ஒரு புள்ளியில் கொஞ்சநேரம் சந்திக்க வேன்டும், அப்போது ஒரு கணையால் மட்டும் அவர்களை அழிக்கமுடியும், அந்த நொடி கடந்துவிட்டால் யாராலும் இவர்களை அழிக்கமுடியாது என வரமருளினார்.
அப்படி தங்கம், வெள்ளி , இரும்பாலான மூன்று பறக்கும் கோட்டைகள் அவர்களுக்குக் கிடைத்தன.
மூவரும் பறக்கும் கோட்டைகளில் ஆளுக்கொரு பக்கம் சென்று அதகளம் செய்தனர், எல்லா உலகமும் அண்டமும் அவர்களின் வெற்றிக்கான இடமாயிற்று.
அவர்கள் இந்திராதி தேவர்களைத் துன்புறுத்தினார்கள். தேவலோகத்தை மட்டுமல்ல எல்லா லோகத்தையும் கைப்பற்றி ஆளத் தொடங்கினார்கள், அந்தப் பறக்கும் கோட்டையில் இருந்து அண்ட சராசரத்தின் எல்லா உலகங்களையும் கைப்பற்றி ஆட்சி செய்து எல்லோரையும் இம்சித்தார்கள்.
எல்லா உலகமும் இவர்களால் பெரும்பாடுபட்டது, அதே நேரம் பிரம்ம வழிபாடும் சிவவழிபாடும் மிகச் சரியாகச் செய்தார்கள், சிவலிங்க வழிபாடு எப்பொழுதும் நடந்தது.
இவர்கள் தேவர்களின் கடமைகளைச் செய்யவிடாமல் அடிமையாக்கி பிரபஞ்சத்தையே ஆட்டுவித்ததால் நடுங்கிய தேவர்கள் விஷ்ணுவிடம் சரணடைந்தனர்.
அவர்களை அழிக்க வல்லவர் சிவன் ஒருவரே ஆனால் தன் பக்தர்களை அவர் அழிக்கத் தயங்குவார், அவர் அவர்களை அழிக்கவேண்டுமானால் முதலில் சிவவழிபாட்டை அவர்கள் கைவிட வேண்டும் எனச் சிந்தித்த விஷ்ணு அதற்கொரு திட்டம் வகுத்தார்.
ஆதிபுத்தர் எனும் தன் அம்சத்தை நாரத முனியுடன் அவர்கள் கோட்டைக்கு அனுப்பினார், அவரும் அவர்களைப் பெரிதாகப் புகழ்ந்து எல்லா உலகையும் எல்லா அண்டத்தையும் ஆளும் நீங்கள் இன்னும் சிவனை நினைப்பதேன், அவரே சக்தியற்று போய்விட்டார் அப்படி சக்தியாக இருந்தால் உங்கள் முன் வந்திருப்பார் அல்லவா?
அவரே உங்களைக் கண்டு நடுங்கும்போது நீங்கள் ஏன் அவரை இன்னும் வணங்கவேண்டும் எனத் தூபமிட்டார், அந்த புகழ்ச்சிக்கு மயங்கி அவர்களும் சிவனை மறந்துவிட்டனர்.
ஆணவம் அவர்களை ஆளத் தொடங்கிற்று. அந்த மூவரும் சிவவழிபாட்டை மறந்தனர், சிவலிஙகத்தை கைவிட்டனர், விருப்படி தாங்களே கடவுள் எனச் சொல்லிக்கொண்டனர். பிரம்மனையும் மறந்தனர்.
இப்படி அவர்கள் தன்னை மறந்து அகங்காரிகளாக ஆடும்பொழுது சிவன் அவர்களை அழிக்க திருவுளம் கொண்டார்.
அந்த ஆதிபுத்திரரும் அந்த மூவரையும் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தார். இனி இந்த உலகுக்கு நீங்களே மும்மூர்த்திகள், அதனால் மூவரும் ஒன்றாய் வாருங்கள் உங்களை அழிக்க யாருமே இல்லை என ஆசையினைத் தூண்டினார்.
அகங்காரமிக்க மூவரும் சாபம் மறந்து ஒன்றாய் கூட விரும்பினர், அப்படிக் கூடினாலும் அழிவிவில்லை என நம்பினர்.
அவர்கள் கூடும் நேரம் அவர்களை அழிக்க சிவன் திருவுளம் கொண்டார், ஆனாலும் அவர் ஒரு திருவிளையாடல் நடத்த விரும்பினார்.
எல்லாத் தேவர்களின் சக்தி கிடைத்தால்தான் அவர்களை அழிக்கமுடியும் அதனால் எல்லாத் தேவர்களும் அவரவர் சக்தியினைத் தரவேண்டும் எனக் கேட்டுகொண்டார்.
அவர்களும் சிவனே தங்கள் உதவியினைக் கோருகின்றார் என மெல்லிய அகந்தை கொண்டார்கள்.
அதன் பின் விஸ்வகர்மா, இரதம் ஒன்றை தயாரிக்கத்தான், மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்தது.
நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கினார்கள், சூரிய சந்திரர்கள் சக்கரமானார்கள். எட்டு தட்டுடன் அந்தத் தேர் வைதீகதேர் என உருவானது.
வேதங்கள் குதிரைகளாக வந்ததால் அதன் சாரதியாக பிரம்மனே அமர்ந்தார், ஓம் எனும் மந்திரம் பிரம்மனின் சாட்டையாயிற்று.
விஷ்ணுவினைச் சக்திமிக்க ஒரே அம்பாக்கி (சக்திமிக்க அம்பால்தான் அவர்களை அழிக்க முடியும்) பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான்.
சிவன் ஏறியபின்னும் தேர் நகரவில்லை. காரணம், தேரின் அச்சு யமனும் அக்னியுமாக இருந்தார்கள் அவர்கள் இல்லாமல் சிவன் வெல்வது முடியாது.
விநாயகர் இதை கவனித்து தேர் அச்சுக்கு வேறு ஏற்பாடுகளை செய்து இருவரையும் அந்தக் கணையில் அமர வைத்தார்.
போர் தொடங்கும் நேரம் எல்லாத் தேவர்களுக்கும் அகம்பாவம் வந்தது, தாங்கள் தங்கள் சக்தியினைக் கொடுத்ததாலே இந்த யுத்தம் சாத்தியம் எனக் கர்வம் கொண்டார்கள்.
சிவன் மெல்லப் புன்னகைத்தார். தேர் பறக்க தொடங்கிய கொஞ்ச நேரத்தில் வீழத் தொடங்கிற்று. தேவர்கள் அதிர்ந்த நேரம் திருமால் வந்து தாங்கிக்கொண்டார்.
இப்போது அவருக்கும் மெல்லிய கர்வம் வந்தது.
தாங்கள் இல்லாவிட்டால் சிவனின் இந்த யுத்தம் இல்லை எனத் தேவர்கள் இருமாந்திருக்க, பிரம்மனும் திருமாலும் மெல்லிய கர்வம் கொண்டிருக்க அப்பக்கம் தங்களுக்கு அழிவே இல்லை என்ற மூன்று அசுரர்களும் கொக்கரித்துக் கொண்டிருந்தார்கள்.
எல்லோரின் அகங்காரத்தையும் கண்ட சிவன் மெல்லப் புன்னகைத்தார். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
விஷ்ணு அம்பாக இருந்து, அந்த வில்லை சிவன் நாணேற்றிய நிலையில் அந்தப் பாணத்தை செலுத்தாமல் புன்னகைக்க மட்டும் செய்தார்.
விளைவு அந்த புன்னகையிலே முப்புரம் எனும் அந்த மூன்று கோட்டையும் எரிந்து சாம்பலாயின. அந்நேரம் அகந்தை அழிந்த மூவரும் சிவனை நினைந்து கதறினார்கள். மூன்று அசுரர்களும் சிவன் காலடியில் விழுந்தனர், பழைய சிவபக்தி அவர்களுக்கு வந்தது.
தங்கள் உதவியினை பெறாமலே ஒரு புன்னகையிலே சிவன் முப்புரத்தை எரித்து அசுரர்களை அழித்ததை கண்ட தேவர்கள் சிவனின் ஆற்றல் அறிந்து அகந்தையினை அகற்றிப் பணிந்தார்கள்.
எல்லாரின் அகந்தையும் அங்கே அழிந்துபோனது, எல்லாம் நலமாயிற்று.
இதுதான் சிவன் முப்புரத்தை எரித்த கதை.
“ஏற்றார் மூதூ ரெழில்நகை யெரியின் வீழ்வித் தாங்கன்” என மாணிக்க வாசகர் சொல்வார்.
“முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார்அறி வாரே” எனத் திருமூலரும் தத்வார்த்தமாகச் சொல்வார்.
இந்தப் புராணக் கதையின் தாத்பரியம்தான், எல்லா அகங்காரத்தையும் சிவன் அழிப்பார் என்பதுதான் அங்கே அந்தத் திருவதிகை ஆலயத்தின் பெரும் நம்பிக்கையாக உண்டு.
இதனாலேதான் அங்குச் செல்வோருக்கெல்லாம் அகந்தை நீங்கி ஞானமும் தெளிவும் கிடைக்கின்றது.
ஏன் அகங்காரம் கூடாது என்றால் இருவிஷயங்கள் உண்டு. அது ஆன்மீக மற்றும் லௌகீகமானது.
அகங்காரமும் அகந்தையும் அழிவுக்கு முந்தையது, அவை ஒருமனிதனை அழித்தேவிடும். அகங்காரம் இருக்கும் வரை ஒருவனுக்கு நிம்மதி இருக்கப்போவதில்லை.
கயிற்றில் கட்டப்பட்ட மாடு அதை கையில் வைத்திருப்பவன் செல்லுமிடமெல்லாம் செல்வது போல அகந்தை ஒருவனை எங்கெல்லாமோ அழைத்துச் சென்று வீழ்த்திவிடும்.
அகந்தை இருக்கும் வரை ஒருவனுக்கு ஞானமோ தெளிவோ கிடைக்கப்போவதில்லை. அது அகலுமிடத்தில்தான் ஞானம் பெருகும்.
அதனால் நிம்மதியும் தெளிவும் ஏற்பட அகங்காரம் களைதல் வேண்டும், அதை சிவன் அருள்வார் என்பதைச் சொல்வதே இத்தலம்.
இந்தப் புராணக் காட்சிக்கு, அதாவது முப்புரம் எரித்த சம்பவத்துக்கு இன்னொரு பொருளும் உண்டு.
ஆணவம், கண்மம், மாயை எனும் முக்குணங்களையும் சிவன் எரித்துவிடுவார், சிவனைப் பணியும் போது இந்த மூன்று மலங்களும் அதாவது குற்றங்களும் அழிந்துபோகும் என்பது ஆன்மீக தத்துவம்.
அட்ட வீரட்டான தலங்களில் மூன்றாவது முக்கிய தலமான இந்தத் தலம் அப்பர் சுவாமிகள் வயிற்றுவலி தீர்ந்த காலம் தொட்டு வயிறு சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் தலமாக விளங்குகின்றது.
இதன் காரணம் மிக மிக எளிதானது, ஒருவகையில் விஞ்ஞான மருத்துவமும் இந்த ஆலய தத்துவமும் இங்கு ஒரே புள்ளியில் இணைகின்றன.
மானிட உடல் விசித்திரமானது, ஒவ்வொரு உணர்வுக்கும் ஒவ்வொரு உள்ளுறுப்பில் மாற்றம் வரும், சில உணர்வுகளில் சிந்தை மூழ்கும் போது அதன் உணர்வுகள் உடலுக்குள் எதிரொலிக்கும்.
அதனை விஞ்ஞானம் ஹார்மோன்கள் எனச் சொல்லும். இந்துமதமோ பொதுவாக இது உட்னலை பாதிக்கும் எனச் சொல்லிப் போதிக்கும்.
அச்சம், கவலை, பயம், ஆவேசம், பொறாமை, துக்கம் போன்ற உணர்வுகளெல்லாம் கெடுதல் செய்யும் உணர்வுகள். அது உடலைப் பாதிக்கும், இதனாலே இந்துக்கள் இவற்றைக் கூடாது என்றார்கள்.
விஞ்ஞான மருத்துவம் இதனை இந்த உணர்வுகளால் உடலில் ஹார்மோன் சுரந்து கெடுதல் விளைகின்றது என்கின்றது.
அதையே மருந்து என இரசாயானத்தைக் கொடுத்து சரிசெய்ய முயன்று அங்கே காசை பிடுங்கும் தொழிலும் செய்து ஒரு நோயினைப் பல நோயாக்கும் கொடுமைகளை இன்றைய விஞ்ஞானம் செய்கின்றது.
இந்துமதமோ அதன் ஆணிவேரை தொட்டு அதை பிடுங்கி எறிந்தால் எல்லாம் சரியாகும் என ஞானமாய்ப் போதித்தது.
ஆம். கலங்கடிக்கும் உணர்வுகள் இதயத்தைப் பாதிக்கும் சில உணர்வுகள் அப்படியே வயிற்றையும் பாதிக்கும்.
பெரும் வலியான விஷயங்கள் சோகமான அச்சமான விஷயங்கள் கேள்விபட்டதனால் நெஞ்சமும் வயிறும் கலங்குவதை உணரலாம்.
இங்கேதான் அகங்காரம் தவிர்த்தல் அவசியம்.
அகங்காரம் கொண்ட மனம் எப்போதும் எங்காவது மோதி, எங்காவது சண்டையிட்டு எதையாவது குழம்பி தன்னால் முடியாததா? தான் தோற்பதா? தான் தான் தான், தனக்கு எனக் கர்வத்திலே இருக்கும்.
இந்தக் கர்வம் தான் இருக்கும் மனதை நிம்மதியாய் இருக்கவிடாது. தான் எனும் கர்வம், தன் பெரிய நிலை, அடுத்தக்கட்ட உயர்வு, அடுத்தவரோடு ஒப்பீடு, அதில்வரும் வெற்றி தோல்வி என எல்லாமும் உடலை பாதிக்கும்.
ஒவ்வொரு போராட்டமும் மனதால் நடக்கும் போது உடலிலும் மாறுபாடு வரும், அந்த மாறுபாடு உடலில் நோயாக தங்கும்.
கர்வம் கொன்ட நெஞ்சில் ஏற்படும் மாற்றங்கள், சிந்ததனையின் கர்வத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை எல்லாம் வயிற்றில் நோயாகத் தங்கும்.
தன்னைச் சமணராக மிக உயர்ந்தவராக கருதிப் பல வாதங்களைக் கோபம் ஆத்திரம் கர்வம் எனக் கொண்டிருந்த அப்பர் சுவாமிகள் அப்படித்தான் குன்மம் எனும் வயிற்றுவலியால் முடங்கினார்.
அவரின் அந்த வயிற்றுவலியினைச் சிவன் தீர்த்தார் என்பது அவரின் நோய்க்கான மூலமாக அகங்காரத்தை, சமணத்தால் ஏற்பட்ட அகங்காரத்தை சிவன் நீக்கினார். அப்படியே அந்தக் கர்மவினையால் வந்த நோயினையும் நீக்கினார் என அர்த்தமாகின்றது.
அகங்காரம் நீங்கிய அந்த அப்பர் சுவாமிகள் பின் சைவரானார், அதன் பின் அவரின் பழைய அகங்காரத்தை நாம் எங்குமே கண்டிருக்கமுடியாது.
அதன் பின் ஆளே மாறிப்போனார். எல்லாத் துன்பங்களையும் இனிதே தாங்கினார், யாருக்கெல்லாமோ அழுதார், இறந்த பாலகனை உயிர்பித்தார்.
சம்பந்தர் எனும் சிறுவன் முன்னால் அகங்காரமில்லாமல் விழுந்து வணங்கினார், அவரின் மனம் அவ்வளவு பக்குவமும் ஞானமும் பெற்றிருந்தது.
சுந்தரர் ஏன் அங்கே வருவதைத் தவிர்த்தார் என்றால் தான் அகங்காரமிக்கவனோ எனும் அச்சம் அவருக்குள்ளே இருந்தது. தன்னை அப்படி தாழ்த்தியவர் தனக்கான தகுதி அங்குச் செல்ல இல்லை என எண்ணியவரைத்தான் சிவன் அழைத்து அருள் செய்தார்.
திருவடி தீட்சையும் வழங்கி ஆட்கொண்டார்.
அந்தத் தலம் அபப்டியான மகிமையினைக் கொண்டது.
உடலின் பலவித நோய்களுக்கு மனமே காரணம், மனதில் இருக்கும் ஆங்கார உணர்வும் அது கொடுக்கும் அச்சமும் கவலையும் பயமுமே பெரும் காரணம்.
எல்லாக் கவலைக்கும் அச்சத்துக்கும் தேவையற்ற குழப்பத்துக்கும் அகங்காரமே காரணமாய் இருக்கின்றது.
தான் யார்? தான் தோற்றுவிடுவோமோ? தன் நிலை அப்படி ஆகுமோ இப்படி ஆகுமோ எனும் அந்த அச்சமும் போராட்டமுமேதான் ஏராளமான நோய்களுக்குக் காரணம்.
பருவகால நோய்கள், கிருமிகளால் உணவுகளால் வரும் நோய்கள் மருந்தில்தீரும். இப்படி மனக்குழப்பத்தால் வரும் நோய்கள் இறை சந்நிதியில்தான் தீரும்.
அப்படி ஒரு ஆலயம்தான் திருவதிகை ஆலயம்.
வாழ்வின் துயரங்களாலும் லௌகீக நெருக்கடிகளாலும் மாய அகங்காரங்களாலும் நீங்கள் பாதிக்கப்பட்டு நோயுற்றிருந்தால் அந்த நோய் வயிறுவரை தாக்கியிருந்தால் நம்பிக்கையோடு அத்தலம் செல்லுங்கள், அந்தச் சிவன் உங்கள் நோய் தீர்த்து நோயின் மூலமும் தீர்ப்பார்.
மற்றவர்களும் அந்தச் சிவனை சந்திக்கச் செல்லலாம், அவன் அருளால் அந்தத் திருவதிகை நாதனின் திருவருளால் அகங்காரமும் அது கொடுக்கும் மாய நோய்களும் ஒருகாலமும் உங்களை அணுகாது, அங்கே சரணடைவோர்க்கு மனதாலும் உடலாலும் எந்த நோயும் நெருக்கடியும் வராது. இது சத்தியம்.
அட்ட வீராட்டானம் 04 : திருப்பறியலூர்
சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் நான்காம் தலம் திருப்பறியலூர், தேவாரம் பாடப்பெற்ற இத்தலம் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர் முதல் திருமுறையில் இந்தத் தலத்தினைப் பாடித்தான் அந்தப் பதிகத்தை தொடர்ந்தார்.
“கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே”
என்பது அந்தப் பாடல்.
திருநாவுக்கரசர் தன் ஆறாம் திருமுறையில் ஒரு பாடலை இங்குப் பாடினார்.
“தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ் செழுந்தண் பிடவூருஞ் சென்றுநின்று
பவ்வந் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வந் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியுங்
கவ்வை வரிவண்டு பண்ணேபாடுங் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே”
அப்படியான இந்த ஆலயத்தின் சிவன் பெயர் தட்சபுரீஸ்வரர், இது தட்சனை அவர் வதம் செய்ததால் வந்த பெயர்.
தட்சன் வரலாறு எல்லோரும் அறிந்தது, அதுவும் அவன் நடத்திய யாகம் மகா பிரசித்தியானது, அந்த யாகம்தான் அவனின் முடிவும் இந்தத் தட்சபுரீஸ்வரரின் அடையாளமுமானது.
அந்தத தட்சன் கதை லிங்க புராணம் உள்ளிட்ட பல புராணாங்களில் உண்டு, சிவ புராணத்தில் உண்டு. அதன் தழுவலில் தமிழ் இலக்கியம் பல உண்டு.
“தக்கையாக பரணி” அப்படியானது. ஒட்டகூத்தர் மிக அழகாகத் தட்சன் செய்த யாகம் பற்றி அங்கே சிவன் நடத்திய திருவிளையாடல் பற்றி உன்னத காவியமாக எழுதியிருப்பார்.
தமிழின் மிக அழகான பக்தி இலக்கியம் அது, ஒருவகையில் கம்பனின் பாடல் போல் அழகானது.
அப்படியான அந்தத் தட்சன் கதையினைக் கண்டால் இந்த ஆலயத்தின் சிறப்பு புரியும்.
தட்சன் என்பவன் பிரம்மனின் மகனான பிரஜாபதிகளில் ஒருவர். பிரஜாபதிகள் என்போர் படைப்புத் தொழிலுக்காகப் பிரம்மனால் உருவாக்கப்பட்டவர்கள்.
காசிபர், வஷிஷ்ட்டர், மரீசி, அத்திரி, அங்கிரசர், புலஸ்தியர், புலகர், தட்சன் மற்றும் கிரது ரிஷிகள் என அந்தப் பெரும் வரிசை உண்டு.
இந்த வரிசையில் வரும் தட்சனும் சக்திமிக்கவன். படைப்பின் முக்கிய இடம் அவனுடையது. 27 நட்சத்திரங்களும் அவனின் மக்கள், இன்னும் மன்மதன் மணந்த ரதி போன்ற எல்லாப் படைக்கும் சக்திகளும் அவனில் இருந்தே உருவாயின.
அதாவது, படைப்புத் தொழிலுக்கு உதவியான அவன் தன் மக்கள் மூலம் படைக்கும் தொழிலை இன்னும் எளிதாக நிறைவாக வேகமாகச் செய்துவந்தான்.
அவனின் மகளில் ஒருத்திதான் தாட்சாயினி. இவள் சக்தியின் அம்சமாக பிறந்தவள்.
தட்சனின் மருமகன்களும் அபார சக்திமிக்கவர்கள். தனிப்பெரும் தேவர்களாக இருந்தார்கள். எமதர்ம ராஜன், மன்மதன், சந்திரன் எனப் பெரிய வரிசை அது.
இவனின் மகள் அருந்ததி எமதர்மனின் மனைவியாகி பெற்ற வாரிசுகள்தான் வசுக்கள். முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள், அதிதி, யட்சர்கள், நாகர்கள் எனப் பெரும் வரிசை உண்டு
வாசுகி முதலான நாகங்களும், குபேரன் முதலான யட்சர்களும் இவன் வம்சமே.
அவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவன் இந்த தட்சன்.
இந்தத் தட்சனின் பெரும் குடும்பத்தில் மகளாக வந்தவள் தாட்சாயினி, அவள் அம்பாளின் அம்சமாகப் பிறந்தவள். அவனின் செல்லமகள் என்பதால் அவன் பெயரிலே தாட்சாயினி என அழைக்கப்பட்டாள்.
தாட்சாயினி தட்சனுக்கு மகளாகப் பிறந்தாலும் அவள் சக்தியின் அம்சம் என்பதால் சிவனைத் தேடிக்கொண்டே இருந்தாள், அவள் பிறப்பின் இரகசியபடி அவள் சிவனை மணக்க சில காரணங்களுக்காகப் பிறந்தவள்.
உரிய காலம் வந்தபோது அவள் மனம் சிவனில் கரைந்தது, அவரை மணந்துகொள்ள முடிவெடுத்தாள்.
தட்சனுக்கு அகம்பாவம் அதிகம். அதுவும் பிரஜாபதிகளில் ஒருவன், பிரம்மனின் வாரிசு, பெரும் பெரும் சக்திமிக்க தேவர்களின் பிதாமகன் மூலவன் என அவன் கர்வம் கொண்டிருந்தான்.
அவனுக்குச் சிவன் மேல் சில வருத்தமும் இருந்தன. ஒருமுறை கயிலாயத்துக்கு அவன் சென்றபோது சிவன் அவர்போக்கில் அமர்ந்திருந்தார். இவனை அதிகம் கண்டுகொள்ளவில்லை.
தெய்வம் எப்போதும் அந்தஸ்தை செல்வாக்கை காணாது. ஒருவன் உள்ளத்தைத்தான் காணும். அகங்காரமிக்கவன் ஆண்டவனுக்கு உகந்தவன் அல்ல.
அதனால் காரைக்கால் அம்மையாரை எழுந்துநின்று வரவேற்ற ஈசன் இவனைக் கண்டுகொள்ளவில்லை.
அதில் இருந்தே சிவன் மேல் ஒரு வன்மத்தில் இருந்தவன் தன் மகளின் ஆசையினை மறுத்தான். ஆனால், விதிப்படி சிவனை அடையவேண்டிய தாட்சாயினி தட்சனை மீறிச் சிவனோடுச் சென்றுவிட்டாள்.
தட்சனின் அகங்காரம் இப்போது கொடிய கோபமுமாகவும் மாறிற்று . தன்னை மதிக்காத சிவன் தன் மகளையும் கவர்ந்துசென்றான் என்பதில் அவனுக்கு அகங்காரம் எல்லை மீறிற்று.
எனினும், காலம் கனியக் காத்திருந்தான்.
யாகங்கள்தான் உலகை காக்கும், உலகை இயக்கும். யாகங்கள் இல்லையென்றால் உலகம் பல நெருக்கடிகளைச் சந்திக்கும்.
இதனால் யாகம் அவசியம். அதுவும் படைப்புததொழிலை செய்வோர்க்கு மிக மிக அவசியம்.
தட்சன் அப்படி ஒரு பெரிய யாகத்தை செய்ய முடிவெடுத்தான். முப்பது முக்கோடி தேவர்களையும் அழைத்து அவரவர்க்கு உரிய பங்கினை யாகத்தில் வழங்க முடிவெடுத்தான்.
அந்தப் பெரிய யாகத்தில் எல்லோரும் வரும் யாகத்தில் சிவனை வேண்டுமென்றே தவிர்த்தான்.
எல்லோரையும் அழைத்துவிட்டு ஒருவரைத தள்ளிவைப்பது பொதுவெளியில் அவமானப்படுத்தும் விஷயம். இன்னொன்ன்று தன்னை விட அவன் தாழ்ந்தவன் அதனால் அழைக்கவில்லை எனச் சொல்லாமல் சொல்லும் விஷயம்.
இம்மாதிரி யாகங்களில் தேவர்களுக்கு அவிர்பாகம் முக்கியம். அதுதான் உச்சமரியாதை. யாகம் பூர்த்தியாகும் இடமும் அதுதான்.
சிவனுக்குரிய அவிர்பாகத்தை அவன் கொடுக்கமறுத்தான், யார் சொல்லியும் அவன் கேட்கவுமில்லை. சிவனை அழைக்கவேண்டும் எனப் பலர் சொல்லியும் அவன் அகந்தையால் அதனை மறுத்தான்.
சிவனை இழிவாகவும் மட்டம் தட்டியும் பேசியவன், சிவனின் சக்தியினைக் குறைத்துச் சொல்லி ஏளனமும் செய்தான். சுடுகாட்டில் இருப்பவன், சடாமுடியன், கபாலம் ஏந்திய யாசகன், தன் மகளை மாயத்தால் கவர்ந்து சென்றவன் என எகத்தாளம் செய்துகொண்டிருந்தான்.
தட்சன் யாகம் செய்யப்போகின்றான், அங்கே தங்களுக்கு அழைப்பில்லை என்று ஆத்திரப்பட்டாள் தாட்சாயினி.
பெண்களுக்கு எப்போதும் இரு குணம் உண்டு. பிறந்தவீட்டின் சிறப்பிலும் பெருமையிலும் தங்களுக்கு இடம் வேண்டும் என எதிர்பார்ப்பார்கள், அப்படியே கணவனையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.
தாட்சாயினிக்கும் அதே மனம் வந்தது. தன் தந்தையிடம் நீதிகேட்பேன் எனக் கிளம்பினாள், அவனின் மனம் அறிந்தவர் அவளைத் தடுத்தார்.
ஆனாலும், தகப்பன் வீடு செல்வது என் உரிமை, அங்கே தன் கணவனுக்கு அவிர்பாகம் வாங்குவதும் தன் கடமை என்றவள் யாகம் நடக்கும் இடத்துக்குச் சென்றாள்.
அங்கே தட்சன் அவளைப் பரிகாசம் செய்தான். சுடுகாட்டில் ஆடும் கூத்தாடி மனைவிக்கு இங்கு இடமில்லை என்றான். இன்னும் பற்பல பரிகாசங்களைச் செய்தான்.
சிவநிந்தனை அத்தனையும் செய்தான், அவன் சிவன் மேல் கொண்டிருந்த வெறுப்பும் அகங்காரமும் அவளுக்கு அப்போது முழுக்கத் தெரியவந்தன.
சிவன் தன்னை ஏன் தடுத்தார் என்பது அவளுக்குப் புரிந்தது. ஆனாலும், தகப்பனோடு வாதிட்டு வெல்லலாம் எனப் பேசியவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சக தேவர்களும் பிரம்மனும் சிவனை அழைக்காத் தட்சனை கண்டிக்கவில்லை, அவர்களிடம் நீதிகேட்ட தாட்சாயினிக்கு மௌனமே பதிலானது.
மிக மிக ஆணவத்துடன் சிவனை அவன் நிந்தித்தபோது மனம் உடைந்த தாட்சாயினி, “சிவனை இந்த அளவு வெறுக்கும் ஒருவனின் மகளாய்ப் பிறந்ததில் அவமானப்படுகின்றேன், இந்த தட்சன் மூலம் வந்த உடல் இனி வேண்டாம்” எனச் சொல்லி தீயில் மாய்ந்தாள்.
அவள் இறந்துவிட்டாள் எனும் செய்தி கேட்டதும் சிவன் ஆவேசமானார், அவர் உடலில் இருந்து வீரபத்திரன் வெளிப்பட்டான்.
தட்சனின் யாகசாலையில் புகுந்து அதகளம் செய்தார் வீரபத்திரர், அவரின் கோபம் முன்னால் நிற்க முடியா எல்லோரும் ஓடி ஒளிந்தனர்.
எல்லாத் தேவர்களுக்கும் அடி விழுந்தது, தட்சன் சிவனை நிந்தித்தபோது வாய்விட்டுச் சிரித்த சூரியனின் பல்லை உடைத்தார் வீரபத்திரர்.
(அதனாலே இன்றும் சூரியனுக்கு மென்மையான உணவையே படைப்பார்கள்)
இப்படி எல்லோரையும் நொறுக்கித் தள்ளியவர் தட்சனின் தலையினை வெட்டி வீழ்த்தினார், ஆத்திரம் கொந்தளிக்க தாட்சாயினி உடலை கையில் ஏந்தி பெரும் ஆட்டம் ஆட ஆரம்பித்தார்.
அந்த ஆட்டத்தால் பிரபஞ்சம் கலங்கிற்று, இனி உலகமே இருக்காது எனும் அளவு எல்லாம் கலங்கிற்று, சிவன் சாந்தமாகாவிட்டால் இனி பிரளயம் என அஞ்சியோர் திருமாலிடம் சரணடைந்தனர்.
திருமால் தன் சக்ராயுதத்தால் அந்தத் தாட்சாயினி உடலை துண்டுத் துண்டாக்கினார், அது 51 துண்டுகளாக வீழ்ந்தன, அப்படி வீழ்ந்த இடங்கள்தான் 51 சக்திபீடங்கள்.
தேசம் முழுக்க இருக்கும் சக்தி ஆலயங்கள்.
அவள் உடல் இல்லா நிலையில் கொஞ்சம் சாந்தமானார் சிவன், அவரிடம் யாகத்தின் அவசியம் பற்றியும் யாகம் நிறைவடையாவிட்டால் எழும் பெரும் சிக்கல் குறித்தும் எடுத்துச் சொல்லப்பட்டது.
பின், யாகம் நடத்தப்பட்டது. அப்போதும் தட்சன் மேல் கருணைக் கொண்ட சிவபெருமான் அவனை உயிர்பித்தார். ஆனால், அவன் தலைக்குப் பதிலாக ஒரு ஆட்டுத்தலையினைப் பொருத்தினார்.
பின், அவிர்பாகத்தைப் பெற்றுக்கொண்டு ஆழ்ந்த தவம் செய்யச் சென்றுவிட்டார்.
இதுதான் தட்சனைச் சிவன் ஆட்கொண்ட வரலாற்றின் சுருக்கம்.
இந்தச் சம்பவம் நடந்த இடம்தான் அந்தப் திருப்பறியலூர் என அறியப்படுகின்றது. அதனாலே சிவன் அங்குத் தட்சபுரீஸ்வரர் என அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
இந்தக் கதையின் தாத்பரியமும் அந்தத் தலத்தின் சிறப்பும் புரிந்துகொள்ள கொஞ்சம் எளிமையானது.
ஜீவாத்மா நடத்தும் போராட்டங்களை அது சொல்கின்றது.
தாட்சாயினி என்பது ஜீவாத்மாவின் வடிவம். அது தட்சனின் மகளாய்ப் பிறந்து தவிக்கின்றது என்பது மாயையிடம் சிக்கிய ஜீவாத்மாவின் போராட்டம்.
பரமாத்மா எவ்வளவோ எச்சரிக்கின்றது, ஜீவாத்மா மாயையில் விழக் கூடாது மாயையில் விழந்துவிட்டால் மீள்வது கடினம் எனக் கடும் எச்சரிக்கை செய்கின்றது. ஆனாலும், ஜீவாத்மா விழுந்து சரிகின்றது.
எல்லோர் மனதின் உள்ளும் தெய்வத்தின் குரல் உண்டு. எல்லா ஆத்மாவும் எச்சரிக்கப்படுகின்றது அதை மீறினால் அழிவு என்பதை தாட்சாயினி கதை சொல்கின்றது.
தட்சன் என்பவன் அகங்காரம் கொண்ட ஆத்ம வடிவம், சிவன் அவன் தலையினை அகற்றினார் என்பது அகங்காரம் கொண்ட தலையினை அகங்காரத்தை அகற்றினார் எனப் பொருளாகும்.
அவனுக்கு ஆட்டுதலையினைப் பொருத்தினார் என்பது அகங்காரமற்ற தலையாகும். மேய்ப்பனை நம்பி பின் தொடரும் ஆட்டின் தலை, அகங்காரமற்றதும் முழுக்கப் மேய்ப்பனை நம்பும் குணமும் கொண்ட ஆட்டின் தலையினைக் கொடுத்தார் என்பது அவனுக்கு இறைவனுக்கு கட்டுப்பட்ட மனம் வாய்த்தது என்பதன் அடையாளமாகும்.
தட்சனின் கதை இன்னொரு மகாமுக்கிய பாடத்தைப் போதிக்கின்றது.
அது எக்காரியம் செய்தாலும் சிவனை நினைந்தே செய்தல் வேண்டும், சிவனைத் தள்ளிவிட்டு மானிட அகந்தையால் இறைவனை மறந்துவிட்டு தள்ளிவிட்டு செய்யும் காரியம் சிறக்காது முழுமை அடையாது.
அதனால் ஒவ்வொரு செயலிலும் இறைவனை முதலில் அழைத்து அவனுக்கான இடத்தை கொடுக்கவேண்டும், அப்படி இறைவனை அழைக்கா மனம் ஆணவமிக்க மனம் அது அழியும்.
மாயையின் பிடியில் இறைநிந்தனை செய்தல் பெரிய பாவம், அகந்தையாலோ இல்லை பொருளில் மயங்கியோ பிரதிபலன்களாலோ இறைநிந்தனையினைச் செய்வது அழிவுக்கு முன்னோடி.
தன் குருவி மூளையில் இந்தப் பிரபஞ்சத்தை அறிவால் அறிந்துகொண்டு, அல்ப மானிட அறிவில் இறைவன் இல்லை எனத் தெரிந்துகொண்டதாக பிதற்றுவதும், இறை நம்பிக்கையினைக் கொச்சைபடுத்துவதெல்லாம் தட்சனின் அழிவினைப் போலத்தான் முடியும்.
தாட்சாயினி என்பது ஜீவாத்மா தத்துவம். அந்த ஆத்மாமேல் எவ்வளவு பாசத்தை பரமாத்மா வைத்திருக்கின்றது, எப்படியெல்லாம் தேடிவருகின்றது, ஜீவாத்மாவினை எவ்வளவுக்கு பரமாத்மா அன்பு கொண்டு காக்கத்துடிக்கின்றது என்பதுதான் இந்தப் புராணத்தின் தாத்பரியம்.
வழிதவறி போனாலும் ஜீவாத்மாவினைத் தேடி பரமாத்மா வரும், மாயையில் சிக்கினாலும் ஜீவாத்மாவினை அது மீட்கத் துடிக்கும்.
அப்படியே அது திசைமாறினாலும் பின் அடுத்தடுத்த பிறவியில் தன்னோடு சேர்த்துக்கொள்ளும் என்பதை இந்தப் புராணத்தின் தொடர்ச்சிக் காட்டும்.
இந்தக் காட்சியில் தட்சனின் அவமானத்தால் இறக்கும் தாட்சாயினி பின் பர்வத மகாராஜாவின் மகளாய்ப் பிறந்து சிவனை அடைவாள் என்பது புராணம்.
அப்படி எத்தனைப் பிறவி எடுத்தாலும் பரம்பொருள் ஒவ்வொரு ஆத்மாவுக்காக காத்திருக்கின்றார், ஒரு பிறவியில் இல்லாவிட்டாலும் அடுத்தப் பிறவியில் தன்னோடு அந்த ஆத்மாவினைக் காக்க தயாராக இருக்கின்றார் என்பதைச் சொல்லும் புராணம் இது.
அகந்தையும் ஆணவமும் கூடாது, யாராக இருந்தாலும் இறைவனை அகந்தை நீங்கிப் பணியவேண்டும், அகந்தையில் ஆடினால் பரம்பொருளே இறங்கிவந்து ஆணவத்தை அழிக்கும் என்பதும், அகந்தை நீக்கிய மனதை அதுவே அருளும் என்பதும் இந்தப் புராணத்தின் செய்தி.
ஒவ்வொரு ஆத்மாவும் இறைவனுக்கே முன்னுரிமை கொடுத்து வணங்கவேண்டும், அந்தக் குரலுக்கே செவிசாய்க்க வேண்டும் என்பதுதான் தாட்சாயினி, தட்சன் என இருவரும் சொல்லும் போதனை.
ஜீவாத்மா மாயையில் சிக்கி அதோடு வளர்ந்து பின் போராடி பரமாத்மாவுடன் இணையும் காட்சியினையும், அகந்தையே மாயை, அகந்தை அழிந்தால் மாயை அழியும் என்பதையும் மாயை அழிந்தால் ஞானம் வாய்க்கும் உண்மை தெளியும் என்பதைச் சொல்கின்றது தட்சன் கதை.
இந்தப் போதனையோடுதான் திருப்பறியலூரில் வீற்றிருகின்றான் அந்தத் தட்சபுரீஸ்வரர்.
அங்குச் சென்று வழிபட்டால் கர்ம வினை தீரும், இனம்புரியாத காரணம் புரியாத சிக்கலுக்கெல்லாம் காரணமான கர்மவினைத் தீரும்.
பந்தம் என்பதும் உறவு என்பதும் கர்மவினையால் கிடைப்பவை, உறவுகளால் வரும் சிக்கலுக்கெல்லாம் கர்ம வினைதான் காரணம்.
அதுதான் தட்சனுக்கும் தாட்சாயினிக்கும் வந்தது, சிவனுக்கும் தாட்சாயினிக்கும் வந்தது.
அதனால் இந்தத் தலத்தில் வணங்கினால் கர்மவினை தீரும், கர்மவினை தீர்ந்தால் உறவுகளுடனான பிணக்கும் சண்டையும் தீரும்.
அப்படிப் பாண்டவர்க்கு தீர்த்து கொடுத்தான் கண்ணன்.
இங்கே தட்சனுக்கும் தாட்சாயினுக்கும் கர்மவினை தீர்த்தார் சிவபெருமான்.
இந்தத் தலம் அப்படியான தலம், அங்கு வந்து வணங்கினால் கர்மவினை தீர்ந்து உறவுகளுடனும் நண்பர்களுடனும் இன்னும் காரணமே இல்லாமல் வரும் பகைகளெல்லாம் களையப்படும், சிவன் அருளால் எல்லாம் தீரும்.
அப்படியே தட்சனின் அகங்கார தலை அறுந்து ஆட்டுத்தலை கிடைத்தது போல் உங்கள் அகங்கார மனம் அகன்று மேய்ப்பனைத் தொடரும் ஆட்டினைப்போல் உங்கள் மனம்முழுக்க இறைவன் பின்னால் செல்லும்.
ஆட்டுக்கு மேய்ப்பன் காவல் என்பதுபோல் உங்களின் முழுக் காவலையும் அந்தச் சிவன் ஏற்றுக்கொள்வார்.
கர்மவினை தீர்த்துவைக்கவும், அகந்தையினை தீர்த்து உங்களை ஆட்கொள்ளவும் அந்தப் திருப்பறியலூர் தலத்தில் உங்கள் வேண்டாத வினையெல்லாம் பறித்து எது தேவையோ அதைமட்டும் அருள காத்துக்கொண்டிருகின்றார் தட்சபுரீஸ்வரர்.
படைப்பின் மூலத்தினைப் பிரபஞ்சம் தொடங்கிய நாட்களில் என்ன நடந்தது என அறிந்தவர் யாருமில்லை, பல்வேறு சக்திகள் இணைந்த பிரபஞ்சம் இது.
ஈரப்பு சக்தி, விலக்கு சக்தி, இயக்கு சக்தி எனப் பல உண்டு. இன்றைய விஞ்ஞானம் அதற்கு மின் சக்தி,காந்த சக்தி, காஸ்மிக் என வகை வகையான பெயர்களை இடுகின்றது.
இந்தச் சக்திகளுக்குள் பலவகையான சக்திகளுக்குள் குழப்பம் வந்து மூலசக்தி அதனைசரி செய்திருக்கலாம். ஏதோ ஒரு சக்தி அதீதமாக ஆடிப் பிரபஞ்ச சமநிலை பாதிக்கப்பட்டபோது மூல சக்தி அதனைத் திருத்தி சரிசெய்திருக்கலாம்.
அது தட்சன்கதை என மக்களுக்கு புரியும்படி இந்துக்களால் சொல்லப்பட்டிருக்கலாம், விஞ்ஞானம் வளர்ந்து பல உண்மைகளை சொல்லும் எதிர்காலத்தில் இதன் இரகசியம் புரியும்.
அதனால் இவையெல்லாம் கற்பனை அல்ல. நிஜம். இந்தப் பிரபஞ்ச இரகசிய புராணத்தோடுதான் ஆத்ம தத்துவத்தையும் இந்துமதம் போதிக்கின்றது.
பரசலூர் என இப்போது அழைக்கப்பட்டாலும் அங்கு ஒரு பக்தனின் தேவையற்ற அகங்காரத்தை, கர்ம வினைகளைப் பறிக்கும் சிவன் அமர்ந்திருப்பதால் அது திருப்பறியலூர் என்றே அந்நாளில் இருந்து அறியப்பட்ட கோவில்.
அவரை அண்டி வணங்குங்கள். எல்லா நலமும் அருளும் வினை நீங்கி கிடைக்கப்பெறுவீர்கள். இது சத்தியம்.
அட்ட வீரட்டானம் 05 : திருவிற்குடி
அட்ட வீரட்டான தலங்களில் ஐந்தாம் தலம் திருவிற்குடி ஆலயம். இது நாகப்பட்டினம் அருகே அமைந்துள்ளது, தேவாரம் பாடப்பெற்ற மிக மிகப் பழமையான ஆலயம் இது.
சம்பந்தர் இப்படி முதல் பாடலைத் தொடங்கி ஒரு பதிகமே பாடினார்.
“வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே.”
அப்பர் பெருமான் ஆறாம் திருமுறையில் ஒரு பாடலைப் பாடுகின்றார்.
“மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப்
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
வீழி மிழலையே மேவி னாரே”
இப்படிப் பல ஞானியராலும் அடியார்களாலும் பாடப்பட்ட அந்தத் தலம் காலத்தால் தொன்மையானது. வழி வழி வந்த சோழர்களும் இதர மன்னர்களும் திருப்பணி செய்த ஆலயம் அது.
இந்த ஆலயத்தின் வரலாறும் மூலமும் ஜலந்தரன் எனும் அசுரனைப் பகவான் ஆட்கொண்ட வரலாற்றிலிருந்து தொடங்குகின்றது, இந்தத் தலப்புராணம் அந்தத் ஜலந்திரன் கதைதான்.
ஜலந்தரன் கதை சிவபுராணத்தில் உண்டு, இன்னும் பல புராணங்களில் உண்டு, இன்னும் பல இந்து நூல்களில் உண்டு.
அவனின் கதை இதோ.
தேவாதி தேவர்களின் அரசனான இந்திரனுக்குத் தான் எனும் அகம்பாவம் எப்போதும் உண்டு. அவனின் அகந்தையினை உணர்ந்த சிவபெருமான் அவனை அழிக்க ஒரு நாடகமாடினார்.
ஒருமுறை அவன் கயிலாயம் வந்தபோது காவலாளி போல அவன் பாதையினை மறித்துக் கொண்டவர் அவனை மேற்கொண்டு அனுமதிக்கவில்லை, “என்னையே தடுக்கின்றாயா?” எனத் தாக்க தொடங்கினான் இந்திரன்.
சிவபெருமான் காவலாளி வேடத்தில் தாக்க பெரும் யுத்தம் மூண்டது, ஒரு கட்டத்தில் தன் வஜ்ராயுதத்தை வீசினான் இந்திரன், சிவன் அதை எளிதாக முறியடித்தாலும் அவருக்குக் கடும் ஆத்திரம் வந்து அவனை விரட்டினார்.
அவனோ அன்னை சக்தியிடம் சரணடைந்தான். சக்தி சிவனிடம் இருந்து அவனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுத்தாள்.
சிவன் சமாதானமாகி தன் வியர்வையினைத் துடைத்து வீசினார். அதில் ஒருதுளி சமுத்திரத்தை அடைந்து ஒரு குழந்தையாயிற்று.
நீரினால் உருவான அக்குழந்தை, ஜலத்திலிருந்து உருவான அக்குழந்தை ஜலந்தரன் என்றாயிற்ற்று.
ஜலந்தரன் வளர்ந்தான். அவனோடு அசுர குணமும் வளர்ந்தது. பிரம்மனிடமிருந்து பல வரங்களை பெற்றுக் கொணடவன் எல்லாவற்றையும் கைப்பற்ற கிளம்பினான்.
அவனின் பெரும் பலம் அவன் மனைவி பிருந்தை, அந்த பிருந்தை கணவனை மட்டும் தொழும் நாயகி, அவனைத் தவிர வேறோருவனை மனதால் ஏற்று என்று அவள் பணிவிடை செய்வாளோ அன்று இவன் பலம் குறையும் என்பது அவனுக்குள்ள சாபம்.
இந்த மனைவியின் பலமும் இன்னும் பிரம்மன் கொடுத்த சிறப்பு வரமும் அவனைக் காத்துக் கொண்டிருந்தது.
அவன் இந்திரனின் அமராவதியினைக் கைப்பற்றினான். அந்த ஐராவதம் யானையினை அபகரித்தான். இன்னும் அக்னி பகவானின் ஜோதிபரத்தை பிடித்தான். வாயுபகவான் முதல் எல்லாத் தேவர்களையும் அடிமைப்படுத்தினான்.
அடுத்துக் குபேரனை பிடித்தான், எமதர்மன் அவனிடம் தோற்றோடினான்.
இனித் தன்னை எதிர்க்க யாருமில்லை என அவன் கொக்கரித்த நேரம் தேவர்களுக்கு பெரும் அச்சம் மூண்டது. எல்லோரும் எதிர்க்க என்ன செய்வது எனத் திருமாலிடம் வந்து ஆலோசித்தார்கள்.
திருமால் அவன் பலம் என்ன என்பதை அறிவார், அது அவள் மனைவி ஆனால் அதைத் தவிர அவனுக்குச் சில வரங்கள் இருந்தன.
அதுவும் கைகளாலும் அவனுக்கு ஆபத்து வரக்கூடாது இதுவரை இல்லா ஆயுதம், ஒருவராலும் ஏவாத ஆயுதம் ஒன்றால் மட்டும் அவனுக்கு அழிவு வரவேண்டும் எனும் வகையில் அது நுணுக்கமான வரமாக இருந்தது.
சிவன் ஒருவரே அவனை அழிக்க வல்லவர். தன்னால் அவன் பலத்தை மட்டும் குறைக்கமுடியும் எனச் சொன்ன விஷ்ணு, நாரதர் மூலம் அவனுக்கோர் செய்தியினைச் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தார்.
நாரதரும் ஜலந்தரனிடம் சென்று கயிலாய மலையின் அழகு, அங்கிருக்கும் மங்கையர் அழகு செல்வச் செழிப்பு என எல்லாம் சொல்லி, அமராவதியினைவிட கயிலாயமே சிறப்பானது. அதைக் கைப்பற்றினால்தான் உனக்குப் பெருமை என்றெல்லாம் தூண்டிவிட்டார்.
ஜலந்தரன் கைலாயத்தைக் கைப்பற்ற முடிவுசெய்தான். பெரும் படை அனுப்பினான். ஆனால், படை சிதறியது, இனி நானே செல்வேன் எனக் கிளம்பிச் சென்றான். பெரும் போர் வெடித்தது.
அதே நேரம் விஷ்ணு அவன் மனைவி பிருந்தையினைச் சந்தித்தார். அவள் கவலையில் ஆழ்ந்திருந்தாள், அடிப்படையில் அவள் விஷ்ணுபக்தை.
விஷ்ணுவினைக் கண்டதும் அவள் கலங்கிச் சொன்னாள், “சிவனுடன் மோத சென்றக் கணவரைக் காணவில்லை பகவானே, நான் கலங்கியிருக்கின்றேன்” என்றாள்.
விஷ்ணு ஒரு நாடகமாடினார், ஒரு மாயை உருவத்தை அவள் கணவன் போல் செய்து அதைத் தலைவேறு உடல் வேறாக்கிச் சில குரங்குகள் அதைச் சுமந்துவரச் செய்தார்.
அதைக் கண்டதும் தன் கணவன் இறந்துவிட்டான் என அலறி ஆர்ப்பரித்தவளை விஷ்ணு ஆறுதல் சொல்லி அந்த மாயைக்கு தலை உடல் சேர்த்து உயிர்க்கொடுத்து அவள் கணவன் ஜலந்திரன் போலவே கொடுத்தார்.
அவள் அந்த மாயைக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். ஆனால், அது கணவன் அல்ல என்பதை உணர்ந்து கொண்டவள் தான் விஷ்ணுவால் வஞ்சிக்கப்பட்டதை எண்ணி வருந்தி சாபமிட்டாள்.
“எந்தக் குரங்குகளால் நீ என்னை ஏமாற்றினாயோ அந்தக் குரங்குகளைத் தேடி நீ அவற்றின் உதவிக்காய் அலைவாய், எப்படி என்னை மாயையினைக் கொண்டு ஏமாற்றினாயோ அப்படி உன் மனைவியைப் பிரிந்து நீ கதறுவாய்” எனச் சொல்லிவிட்டு தீக்குளித்தாள். அவள் சாம்பலே மிஞ்சிற்று.
விஷ்ணு கண்ணீருடன் அந்தச் சாம்பலைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
இப்படிப் பிருந்தை பிரிந்ததும் ஜலந்தரன் வலுவிழந்தான். அவன் சேனைகள் அழிய ஆரம்பித்தன. ஆனால், சுக்கிராச்சாரியாரைக் கொண்டு சேனைகளை உயிர்ப்பிக்க செய்து போரை நடத்திக் கொண்டிருந்தான்.
நீண்ட போர் தொடர்ந்து நடந்தது, அப்பக்கமே தங்கியிருந்தான் ஜலந்தரன்.
அவனை ஒழிக்க சித்தம் கொண்ட சிவன் ஒரு முனிவன் போல அமர்ந்திருந்தார், நீராட வந்தவன் ஒரு காலை நேரம் அவரைச் சந்தித்தவன் வழமை போல் கர்வமுடன் பேசினான்.
சிவனை எளிதில் அழிக்கப்போவதாகவும் கைலாயத்தைக் கைப்பற்றி தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவரப்போவதாகவும் கொக்கரித்தான்.
அந்த முனிவன் புன்னகைத்து கேட்டான் “நீ அவ்வளவு பலசாலியா?”
“ஆம். என்னால் எதையும் செய்யமுடியும், இந்த மலையினையே புரட்ட முடியும் விரைவில் புரட்டுவேன்” என்றான் ஜலந்தரன்.
“மலையினைப் புரட்டுவது இருக்கட்டும், நான் சொல்வதை உன்னால் தூக்க முடியுமா?” என்றார் முனிவர்.
“என்ன செய்யவேண்டும்?” எனத் திருப்பிக் கேட்டான் ஜலந்தரன்.
புன்னகைத்த முனிவன் தன் காலால் ஒரு சக்கரம் வரைந்து, “இதனைத் தூக்க உன்னால் முடியுமா?” எனக் கேட்டார்.
“என்னிடமே சவாலா?” என்றவன் அந்தச் சக்கரம் வரையப்பட்ட நிலத்தை அப்படியே தூக்கினான், அதனைத் தலைக்கு மேல் அவன் தூக்க முயன்று கழுத்துக்குக் கொண்டுவந்தபோது அந்தச் சக்கரம் உயிர்ப்பெற்று சுழலத் தொடங்கிற்று.
அப்படியே அவன் கழுத்தை அறுத்தும் போட்டது.
அத்தோடு ஒழிந்தான் ஜலந்தரன். எல்லோரும் கூடிச் சிவனைப் போற்றினார்கள். துதித்தார்கள். பூமழை பொழிந்து வாழ்த்தினார்கள்.
ஆனால், திருமால் அந்தப் பிருந்தையின் சாம்பலையே வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அவள் குற்றமற்றவள் என்றாலும் தர்மத்தைக் காக்க அவளைப் பலிகொடுத்ததை எண்ணிக் கலங்கினார்.
அங்கே வந்த பார்வதியும் சிவனும் அவரை ஆற்றுப்படுத்தினார்கள். அந்தச் சாம்பலில் இருந்து துளசியினை எழுப்பிய தேவி அதை மாலையாக திருமால் கழுத்தில் அணிய சொல்லி இனி இந்தத் துக்க நினைவில் இருந்து விடுபடவேண்டும், உம் பக்தை உம்முடனே இருப்பாள் என வரமருளினாள்.
அதிலிருந்து துளசி திருமாலுக்கு உகந்ததாயிற்று.
சிவபெருமானும் அந்தச் சக்கரத்தை விஷ்ணுவிக்கே வழங்கி மகிழ்ந்தார், திருமாலுக்குச் சக்கரமும் கிடைத்தது.
( திருமால் பிருந்தையிடம் பெற்ற சாபம்தான் இராமாயணமாகத் தொடர்ந்தது, இராவணன் எனும் சிவபக்தன் அங்கும் அகங்காரத்தால் சாய்க்கப்பட்டான், திருமால் இராமனாக வந்து பெரும் துன்பப்பட்டு அவனை அழித்தார்)
இதுதான் ஜலந்தரன் கதை.
இந்தக் கதை புராணத்தில் விசேஷம். இன்னும் பல கதைகளில் விசேஷம். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் அவன் வாழ்ந்த இடம் ஜலந்தர் என அழைக்கப்பட்டு இன்றுவரை அந்த ஊர் உண்டு.
அந்த மண்ணும் அங்கிருக்கும் ஆலயமும் அவன் வரலற்றைச் சொல்கின்றன.
அந்த ஜலந்தரன் வதத்தின் சாட்சியாக எழும்பியதுதான் திருவிற்குடி ஆலயம், அந்த வீரட்டானேஸ்வரரே ஜலந்தரனை வதம் செய்தவராக வணங்கப்படுகின்றார்.
யாராலும் ஏவப்படாத ஆயுதம், இல்லாத ஆயுதம், கைகளால் தொடாத ஆயுதம் என அவன் கேட்ட வரம்படி அவனைக் கொன்றார் சிவன்.
ஜலந்தரன் கதையும், அவன் மனைவி கதையும் ஒரு ஆழ்ந்த ஆன்மீகப் போதனையினைச் சொல்கின்றது, கதை தொடங்குமிடமான இந்திரன் கதை இன்னும் ஆழமாகப் போதிக்கின்றது.
இந்திரன் அகந்தையோடு சிவனிடம் மோதி வஜ்ராயுதம் எனும் தன் பலமிக்க ஆயுதத்தை எறிந்தான். ஆனால், அது வீழ்ந்தது. இந்திரனும் அகந்தை அழிந்தான்.
அந்த இந்திரனின் அகந்தையினை அழிக்க உருவான வியர்வையில் இருந்து வந்த ஜலந்தரன் பின் இந்திரனின் பதவியினையே பறித்து அலையவிட்டான்.
இந்திரனின் கர்வமே எல்லாவற்றுக்கும் தொடக்கம், அவன் கர்வமே அவனைப் பரதேசியாக்கி ஓடவைத்தது.
இங்கு முதலில் அகந்தையினால் அழிந்து பின் அறிவுப்பெற்றவன் இந்திரன்.
ஜலந்தரன் சிவனின் வியர்வையில் இருந்து உருவானவன் அதாவது, ஜீவாத்மா. ஆனால், அந்த ஜீவாத்மா லௌகீக மயக்கத்திலும் அற்ப உலக பலனிலும் நம்பிக்கை கொண்டு அகந்தையில் பரம்பொருளுக்கே கட்டுப்பட மறுத்து மோதினால் ஆடினால் நிச்சயம் ஏதோ ஒருவழியில் பரம்பொருள் ஜீவாத்மாவினை ஆட்கொள்வார்.
இங்குக் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் அந்தப் பிருந்தை, மாயையில் மனதைக் கொடுத்தவள், பந்த பாச மயக்கத்தில் தன்னிலை மறந்து மாயையிடம் சிக்கியவள் வீழ்ந்தாள்.
அவள் குற்றமற்றவள் என்றாலும் பந்த பாச மயக்கம் அவளை மாயையில் விழவைத்தது.
இந்தச் சம்பவத்தை வெறும் கற்பனை என விலக்கிவிட முடியாது, இன்றைய விஞ்ஞானம் பல ஆய்வுகளைச் சொல்கின்றது. அதில் ஒன்று ஒரு காலத்தில் கடலால் பூமி மூடப்பட்டிருந்தது, கடல் பெரும் பெரும் அழிவுகளைக் கொடுத்தது. பின், கட்டுப்பாட்டுக்குள் வந்து இன்றுகாணும் உலகம் உருவானது என்கின்றது.
பாகவதபுராணமும் ஊழிக்காலத்தில் நிலம் முழுக்க கடல் இருந்தது, சிவன் அதன் மேல் படுத்திருந்தார். பின், மது கைடவ அரக்கர் வந்தனர். அவர்களை வதம் செய்யத்தான் நிலம் மீண்டது என்கின்றது.
இன்னும் ஆழமாக விஞ்ஞானம் இந்தப் பூமியில் ஒரு காலத்தில் நீர் இல்லை, எங்கிருந்தோ வந்த வால் நட்சத்திரத்திலோ இல்லை வேறு குறுங்கோளிலோ இருந்த நீர்துளி பெரிதாக பரவி பின் பல மாறுதலுக்கு உட்பட்டு பெரும் கடலாக உதித்தது என்கின்றது.
இன்னும் பல ஆய்வுகளை அது செய்கின்றது.
எது எப்படியாயினும் கடலும் அதன் நீரும் பெரிதாகி நிலத்தை மூடி பெரும் மிரட்டலை கொடுத்திருப்பதை மறுக்கமுடியாது. ஜலந்தரன் கதை இந்தச் சமுத்திரம் உலகை அழிக்க மூடிய மிரட்டலான காலத்தின் ஒரு கதைவடிவமாக இருக்கலாம்.
ஆனாலும், பகவான் எனும் பரம்பொருள்தான் அந்த ஆபத்தை நீக்கினார் என்பது கவனிக்கத்தக்கது.
விஞ்ஞானப்படி நீர் என்பது ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் இணைந்தது, இதை எப்படி பிரிப்பது என இன்றைய விஞ்ஞானம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இரண்டும் இல்லாமல் நீர் இல்லை.
பிருந்தையினை விஷ்ணு பிரித்தார் என்பது இந்த மூலக்கூறுகளை பிரித்துப்போட்ட நுணுக்கமான வழிகாட்டல், முழுக்க விஞ்ஞானம்.
ஆக, நீரால் எழுந்த பிரபஞ்ச மிரட்டலை பரம்பொருள் அழித்து லோகத்தைக் காத்தார் என்பது விஞ்ஞான ரீதியாக கூட விளக்க சிரமானது அல்ல, என்றோ நடந்திருக்க கூடிய சம்பவம் இவை.
இந்துமதம் அவைகளை மானிடருக்கு புரியும்படி லௌகீக வடிவத்தில் சொல்லி ஆன்மீக தத்துவத்தையும் போதிக்கின்றது.
ஆக, இந்தப் புராணக் கதையின் சுருக்கமான தத்துவம் இதுதான்.
இந்திரன் எந்த அகந்தையில் ஆடினானோ அதே அகந்தை ஒரு உருவமெடுத்து வந்து அவனை அலறவைத்து விரட்டியது.
அப்படியே ஜலந்தரனின் ஆணவத்தையும் அவனே எதிர்பாராதபடி, ஏன் யாருமே எதிர்பாராதபடி சிவன் அழித்துப்போட்டார். அவரால் முடியாதது எதுவுமில்லை. பரமாத்மாவினை ஜீவாத்மா ஒருகாலமும் வெற்றிக்கொள்ள முடியாது என்பதைக் காட்டுகின்றது.
பரமாத்மாவினைச் சரணடைதலே முழுக்க சரியானது என்கின்றது இந்தக் கதை.
அதைத்தான் ஐந்தாம் வீரட்டானமாகத் திருவேற்குடி ஆலயமும் சொல்கின்றது, காவேரி கரையில் இருக்கும் அந்தத் தலத்தில் வணங்கினால் எல்லா நலமும் கைகூடும்.
ஏன் நீரை சொன்னார்கள் இந்துக்கள்?
இந்த உடலில் பெரும் பாகம் நீர், ஓடும் இரத்தம், கொழுப்பு, மூளை தங்கும் திரவம், ஹார்மோன்கள் இன்னும் என்னென்ன இயக்கம் உண்டோ அவை எல்லாமே நீர்மமானவை.
இந்த உடலை இயக்கும் சக்தியில் கர்வமும் ஆணவமும் வந்துவிடக் கூடாது, இரத்தத்தில் சிந்தையில் அகங்காரமோ கர்வமோ வரக்கூடாது எனச் சூட்சுமமாகச் சொல்லும் ஆலயம் அது.
கர்வமும் அகங்காரமும் அது கொடுக்கும் விளைவும் உடலின் இரத்தவோட்டத்தைப் பாதிக்கும். நீர்மங்களை பாதிக்கும். அது உடலைக் கெடுக்கும்
இந்த ஆலயத்தில் வணங்கினால் கர்வம் அகலும். அகங்காரம் அகலும். அந்நேரம் உடலும் மனமும் தெளிவாகும்.
அதனாலே இந்த ஆலயத்தை அந்த ஜலந்தரன் கதையாகப் படைத்தார்கள் இந்துக்கள்.
அக்கோவில் பல அருள்வடிவங்களைக் கொண்டது. அங்குச் சென்றால் ஆணவம் அகலும், உடல் நலம் கூடும். இன்னும் நன்மையின் பொருட்டு எதையெல்லாம் இழந்தீர்களோ அதைவிட அதிகமாக பெறுவீர்கள்.
விஷ்ணு, துளசியும் சக்கரமும் பெற்றதுபோல் உங்களுக்கும் புனிதமும் பலமும் இன்னும் கூடும், எல்லா நலனும் தேடிவரும்.
அட்டவீரட்டானத்தில் ஐந்தாம் தலமான இந்தத் தலத்தில் வீற்றிருக்கும் சிவன் ஜலந்தர வத மூர்த்தியாக நிற்கும் சிவன் அகந்தையினை அழித்து அந்த அகந்தையினால் வந்த நோய்களை அழித்து எதெல்லாம் அகந்தையால் இழந்தீர்களோ அதையெல்லாம் திருப்பித் தருவதற்குத் தன் ஆலயக் கதவுகளைத் திறந்துவைத்து காத்திருக்கின்றார். சென்று அருள்வாங்கி வாழவேண்டியது உங்கள் கடமை.
அட்ட வீரட்டானம் 06 : திருவழுவூர்
அட்ட வீரட்டான தலங்களில் ஆறாம் தலம் வழுவூர் வீரட்டானேஸ்வரர் ஆலயம், மயிலாடுதுறை அருகில் இருக்கும் அந்த ஆலயம் மகா முக்கியமானது.
சத்யபுரி, கைலாசம், ஞானபூமி என அதற்கு பெயர்கள் உண்டு.
ஊழிகாலத்திலும் வழுவாத ஊர் என்பதால் வழுவூர் என்றும், எக்காலத்திலும் இங்கிருக்கும் சிவனை யாரும் அசைக்கமுடியாது அவர் வழுவமாட்டார், பக்தர்களையும் வழுவவிடமாட்டார் என்பதாலும் இப்பெயர் வந்தது.
தேவார வைப்புத் தலம் இது.
“உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகாவூர்
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும்
கயிலாயநாதனையே காணலாமே”
“மேவிய வீரட்டானம் வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக்கு இடமாம்
கோவல்நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக் குடிவீரட்டானம் இவை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமரும் சிவன்தமர் என்று அகல்வர் நன்கே.”
என அப்பர் பாடுகின்றார், அப்படியான தலம் இது
அந்த ஈஸ்வரனுக்குக் கிருத்திவாஸேஸ்வரர் எனப் பெயர் உண்டு. கஜசம்ஹாரமூர்த்தி என அவர் அறியபடுகின்றார்.
அந்த ஆலயத்தின் வரலாற்றினை ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் வேண்டும்.
அந்தத் தலத்தின் வரலாறு தருகாவனத்து ரிஷிகள் காட்சியில் இருந்து அதாவது சிதம்பரம் நடராஜக் கோவில் சிவனின் நடன கோலத்தோடு தொடர்புபட்டது.
தருகாவனத்து ரிஷிகள் கதை இதுதான்.
அக்காலத்தில் 48 ஆயிரம் ரிஷிகள் கூடினர். தெய்வநிலை அடைய விரும்பிய அந்த ரிஷிகள், தவத்தாலும் சித்துக்களினாலும் பலம்பெற்ற ரிஷிகள் தாங்களும் தெய்வமாகலாம், பரம்பொருளாகலாம், அதற்கு யாகம் போதும் கர்மம் போதும், அதைச் செய்தால் தாங்களும் தெய்வநிலையினை அடையலாம் எனக் கடும் யாகம் வளர்த்தார்கள்.
அதாவது தெய்வநிலையினைக் கர்வமாய் அடைய முயன்றார்கள்.
இன்னும் தெளிவாகச் சொன்னால் வேதங்களின் யாகத்தைச் சரியாக செய்தால் தாங்களும் பெரும் சக்தி பெற்று கடவுளாகிவிடலாம் என அகங்காரத்தில் வேள்வியினைத் தொடங்கினார்கள்.
யாக வேள்வியின் அவிர்பாகத்திலே இறைவன் வாழ்வதாகவும், அதைத் தாங்களே பெற்றுக்கொண்டால் அந்நிலையினைத் தாங்களும் எட்டலாம் என அவர்களாக அறியாமையில் கருதி பெரும் வேள்வி செய்தார்கள்.
இந்த யாகத்தை அறிந்த பரம்பொருள் வழக்கமான பிச்சைகார கோலத்துடன் வந்து நிற்க, யாகத்தில் யாசகம் கேட்கும் ஆண்டிக்கு இடமில்லை என அவர்கள் வந்த பரமசிவனை விரட்டியும் விட்டார்கள்.
அந்த ஆண்டிகோலத்துச் சிவன் தன் திருவிளையாடலைத் தொடங்கினார்.
அவர்களால் விரட்டப்பட்ட சிவன், அதே ஆண்டி கோலத்தில் ரிஷிபத்தினிகளிடம் பிச்சை வாங்கச் சென்றார், இவர்கள் கண்ணுக்கு ஆண்டியாக தெரிந்தவர் அவர்கள் கண்களுக்கு பெரும் சுந்தரவடிவில் தெரிந்தார்.
அவரின் அழகில் மயங்கிய முனிவரின் மனைவியர் அவரைப் பின் தொடர்ந்தனர், இதனால் அவமானப்பட்ட ரிஷிகள் வந்தது யாரென தங்கள் வரத்தால் காண சிவன் எனத் தெரிந்தது.
ஆனாலும், அவர்கள் கர்வம் அடங்கவில்லை. யாகத்தால் சிவனையே வெல்லலாம் என முடிவெடுத்தவர்கள் சக்தி மிக்க மந்திரம் மூலம் பெரும் யாகம் நடத்தி சிவன் தங்கள் யாகத்தில் இருந்து ஒதுக்கி விட பெரிய பெரிய சக்திகளை உருவாக்கி ஏவினார்கள்.
முதலில் நெருப்பை ஏவினார்கள், வேள்வி நெருப்பை ஏவினார்கள், சிவன் அதனை தன் கையில் வைத்துக்கொண்டார்.
பின் அதர்வண வேதத்தை ஒரு மான்போல செய்து ஏவினார்கள், அதையும் சிவன் தன் கரத்தில் வைத்துக் கொண்டார்.
படைப்பின் தத்துவமும் வேதங்களின் சாரமுமான ஓசையினை அனுப்பினார்கள், எது உலகை இயக்குமோ அந்தச் சக்தியினை அனுப்பினார்கள், சிவன் அதனை உடுக்கையாக வைத்துக் கொண்டார்.
நாகலோகத்தில் இருந்த சக்தியினை அனுப்பினார்கள், சிவன் அதை மாலையாக அணிந்துகொண்டார்.
முயலகன் எனும் கொடிய அரக்கனை அனுப்பினார்கள் சிவன் அவனைக் கீழே தள்ளி மேல் ஏறி கொன்று நர்த்தனமாடினார்.
கடைசியாக, தங்கள் சக்தியெல்லாம் திரட்டி எல்லாக் கொடிய விஷயங்களையும் கலந்து ஒரு யானை உருவ அசுரனை உருவாகினார்கள், கஜாசுரன் என அவனுக்குப் பெயர்.
கைலாயத்தில் இருக்கும் சிவனை நோக்கி அவனை அனுப்பினார்கள், சில ஆலோசனைகளைச் சொல்லி அனுப்பினார்கள்.
இதுதான் ரிஷிகளின் கடைசி முயற்சி என அறிந்த சிவன் அவர்களுக்கு ஒரு ஆட்டம் காட்ட விரும்பினார், அந்த கஜாசுரனும் சிவன் தன்னுள் இருக்கவேண்டும் எனப் பணிந்து நின்றான்.
ரிஷிகளின் உள்நோக்கம் அறிந்த சிவனும் யானை வயிற்றுக்குள் சென்று அமர்ந்துகொண்டார், உலகமே இருளில் மூழ்கியது, பெரும் குழப்பம் ஏற்பட்டது.
அப்படியே யானை வயிற்றில் இருந்த சிவன் தன் வெப்பத்தை அதிகரிக்க அதிகரிக்க யானை அலறி துடித்து வீழ்ந்தது, அதன் வயிற்றைக் கிழித்து வெளிவந்த சிவன், அந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டார்.
கடைசி முயற்சியும் தோற்றதை அடுத்து ரிஷிகள் அவரைப் பணிந்தார்கள். கர்வத்தால் செய்யப்படும் காரியத்தால் பலனில்லை, அகங்காரம் கொண்ட எந்தச் செயலும் பலனைத் தராது, தெய்வம் வந்து அகங்காரத்தை ஒழிக்கும் என உணர்ந்தவர்கள் சிவனைப் பணிந்தார்கள்.
அவர்கள் அகங்காரம் அழிந்து போனது, ஆணவம் அகங்காரமும் உடைந்து போனது, கர்வம் அழிந்த அவர்கள் பின் சிவனை வழிபட்டு கயிலாயம் ஏகினார்கள்.
அந்தப் பிச்சாண்டியோ தருகாவனத்து ரிஷிகள்
ஆத்திரமடைந்த முனிகள் மதயானை, உடுக்கை, மான், தீ என எல்லாவற்றையும் ஏவி ஒரு அரக்கனையும் ஏவிவிட்டனர்.
இதுதான் ஆருத்திர தரிசனம் என்பது, அச்சம்பவம் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் நடந்தது என்கின்றது புராணம் அதை நினைவு கூறி வழிபடுகின்றார்கள்.
நடராஜ கோலமும் இதுதான்.
இந்தக் காட்சி சிவபுராணத்தில் உண்டு, இன்னும் பாகவதம் உள்ளிட்ட சில புராணங்களில் உண்டு, பல இடங்களில் உண்டு.
உஜ்ஜைனி மகாகாளேஸ்வர ஆலய சிவன் இந்தக் கோலத்தில் யானையினை உரித்த கோலத்தில்தான் இருப்பார் என்பது ஐதீகம்.
இந்தச் சம்பவம் நடந்த இடம்தான் இந்த ஆலயம், அந்தத தத்துவத்தின் சாட்சியாக எழுந்த ஆலயம் இது என்பதுதான் மிகச் சிறப்பு.
இச்சம்பவம் கூறும் தத்துவம் என்ன?
ஆம். அன்றல்ல இன்றுவரை எல்லா மனிதனுக்கும் கடவுளாக உள்ளூர ஆசை இருக்கின்றது, தான் சார்ந்து நிற்கும் தொழிலிலும் இன்னும் பல இடங்களிலும் தானே கடவுளாக இருக்க வேண்டும் எனும் மமதையும் ஆணவமும் வருகின்றது.
சில வெற்றிகள் அந்த ஆசை நெருப்பினை, ஆசை யாக நெருப்பில் நெய்யாக பெய்து ஆசை நெருப்பை பெரிதாக வளர்க்கின்றன.
வெற்றிகள் கூட கூட ஆசை கொழுந்துவிட்டு எரிந்து தானே கடவுள் எனும் நிலைக்குச் செல்கின்றது, அகங்காரம் அப்படி ஆசையினைப் பெரும் நெருப்பாக எரிய வைக்கின்றது.
சிவனின் ஆருத்திரா தரிசனத்தில் அவர் மேல் ஏவப்படும் விஷயங்களைப் பாருங்கள். மத யானை, இது பெரும் ஆசைவெறி கொண்டதும் மூர்க்கமானதுமான மனதை குறிக்கின்றது.
மான் என்பது பார்வைக்கு அழகானது, கண்களால் கோரப்படும் ஆசைகளைக் குறிக்கின்றது.
நெருப்பு உணர்ச்சிக்கும், உடுக்கை என்பது செவிகளால் பெறும் இன்பத்தினையும் குறிக்கின்றது.
அரக்கன் என்பவன் மனதின் அகங்காரத்தைக் குறிக்கின்றது.
ஆம். இந்த மானிடன் மனதுக்கும் உணர்ச்சிக்கும் அடிமையாகக் கூடியவன். அதனால் மாயை அதிகரிக்கும் அந்த ஆசையே சகல பாவங்களுக்கும் உலக துன்பங்களுக்கும் அடிப்படை.
புலன்களை அடக்கு, மனதினை ஒடுக்கு இறைவன் தெரிவான்.
எல்லாப் புலன்களையும் அடக்கி, ஆசையினையும் அடக்கி இறைவனிடம் சரண்டைதலே இறைவனை அடையும் வழி. மாறாக, ஆசையினை யாகம் போல் வளர்த்தால் அது வளருமே தவிர ஞானம் கிடைக்காது.
சிவன் எல்லாவற்றையும் அடக்கி வைத்து அகங்கார அரக்கனை ஒடுக்கி அதன் மேல் ஆடியது போல, சகல புலன்களையும் அடக்கினால் மனிதனும் தெய்வ நிலைக்கு உயர்த்தபடுவான் என்பதே.
இங்கே கரிய யானை எதற்கு வந்தது என்றால் அதுதான் கவனிக்கத்தக்கது.
யானைப் பெரியது, மிகப்பெரிய பலமிக்கது, கூரிய அறிவும் எதையும் மறக்காத குணமும் கொண்டது, மனிதன் சொல்வதை புரிந்துகொள்ளும் மனமும் பதிலைச் செயலால் செய்யும் குணமும் கொண்டது.
அந்த மாயையினைத்தான் யானை வடிவில் சொன்ன காட்சி இது.
மாய அகங்காரம் யானைப்போல் வரும், இருள் போல் படரும், அது அறிவை மயக்கும் சிந்தனையினை கெடுக்கும், மிகப்பெரிய அளவில் வளைக்கும்.
யானைப்படை கொண்டிருக்கும் அரசன் அஞ்சுவதில்லை, யானை மேல் இருப்பவன் எந்த ஆபத்தையும் சிந்திப்பதில்லை, ஒருவித கர்வமும் அபார நம்பிக்கையும் யானைக் கொடுக்கும்.
யானை என்பது அரசனின் வாகனம், பெரும் நம்பிக்கைகுரிய பலம்.
அப்படி எது மிகப்பெரிய பலம் ஆற்றல் என நம்புகின்றோமோ அதுவே கர்வத்தை கொடுக்கும், என்னிடம் இவ்வளவு பலம் இருக்கின்றது, அவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது. அதனால் எனக்கு என்னகுறை வரும் எனும் அகந்தை ஆபத்தானது.
சிவன் கரிய யானையினை அழித்துப் போட்டார் என்பது அகங்காரத்தை ஒழித்தது.
இன்னும் ஆழமாகச் சொல்லவேண்டும் என்றால் எப்படி பாற்கடல் கடையப்படும்போது உலகின் நஞ்சினைச் சிவன் ஏற்றாரோ, அப்படி ரிஷிகள் செய்த யாகத்தினால் எழுந்த மிகக்கொடிய விஷயத்தையெல்லாம் அவரே ஏற்றார்.
கடைசியில் அந்த யானையினையும் ஏற்று அதனை உரித்து தோலைத் தன்னோடு போர்த்திக்கொண்டார்.
இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் மனிதருடைய எல்லா அகங்காரகுணத்தினையும் தான் ஏற்று அவர்களின் எல்லாக் கொடிய குணங்களையும் தான் வாங்கிக் கொண்டு அவர்களைப் புனிதமாக்குகின்றார் சிவன்.
இந்தத் தலம் அப்படி அகங்காரமும் பாவமும் நீங்கி புனிதமடையும் தலம்.
சிவனிடம் நம் எல்லாத் துஷ்ட குணங்களையும் மன அழுக்கையும் இருளையும் சமர்பிக்கும் இடம்.
இந்தத் தலத்தில் யானையின் தோலைக் கரிய நிறத்தோலை போர்த்திக்கொண்ட சிவன், நம் பாவ இருளையும், துஷ்ட அகங்கார குணங்களையும் ஏற்றுக்கொள்கின்றார்.
சிதம்பரம் போலவே இங்கும் சில தனித்துவம் உண்டு.
சிதம்பர இரகசியம் போல இங்கும் சில யந்திரங்கள் உண்டு, அவை மகா சூட்சுமமானவை. இங்கிருக்கும் சகஸ்கரலிங்கம் எனும் ஆயிரம் லிங்கம் பதிக்கப்பட்ட ஒரே லிங்கத்தைக் காண்பது மகா சிறப்பு.
மிக மிக முக்கிய அதிசயம் அல்லது மகா சிறப்பு, உலகில் எங்குமே காணமுடியாத சிறப்பு என்னவென்றால் பகவானின் உள்ளங்காலை காண்பது.
பொதுவாக, சுவாமி தரிசனங்களில் உள்ளங்கையினை காணமுடியும் ஆனால் பாதங்களை உள்ளங்கால்களை எங்குமே காணமுடியாது.
இங்கு யானையினை மிதித்து வெளிவந்தபோது அவர் காட்டிய பாதம் அப்படியே பக்தர்களுக்குத் தரிசனமாகின்றது.
இந்த உலகமே என் உள்ளங்காலுக்குக் கீழ், எல்லாமே இந்தத் பாதத்தின் கீழ் என்பதை சொல்லும் தத்துவம் அது. இது வேறு எந்த சிவாலயத்திலுமில்லை.
அங்குச் சென்று அந்தப் பாதம் நேர் தலையினை வைத்து வணங்கவேண்டும், அப்படி வணங்கும் போது நம் வினையும் அகங்காரமும் அகங்காரத்தால் தேடிக்கொண்ட எல்லாத் துன்பமும் வினையும் அகலும்.
இது புராணக் கதை மட்டுமல்ல. விஞ்ஞானத்தோடும் ஒத்துப்போகும் மிகச் சிறந்த ஆச்சரியம்.
இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி விஞ்ஞானம் சொல்வதும் அதுதான். ஒரு காலத்தில் இந்தப் பிரபஞ்சம் இருளில் மூழ்கியிருந்தது. வெப்பமில்லை, ஒளியில்லை என்பதால் எங்கும் இருளே படர்ந்திருந்தது.
பனியுகம் எனும் கொடும்பனி காலம் அப்போது வந்தது.
பின் மறுபடியும் ஒளி வந்து வெப்பம் வந்தபின்பே உயிர்கள் உருவாகத் தொடங்கின எல்லாம் சரியாயிற்று என்பது விஞ்ஞான வாதம்.
அதைத்தான் யானை வயிற்றில் சிவன் இருந்தார் பின் வெளிவந்து அதன் கரிய நிறத் தோலைத் தான் எடுத்துக்கொண்டார் என்கின்றது இந்துமதம்.
லௌகீகம், ஆன்மீகம், விஞ்ஞானம் என எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி விளக்கமும் சொல்லிக் காலகாலத்துக்கும் அற்புதமான மதம் இந்துமதம்.
அந்த இந்துமதம் இங்கும், இந்த வழுவூர் ஆலயத்திலும் அப்படிப் போதிகின்றது.
கர்வத்தால் ஆணவத்தால் மனிதன் இறைநிலையினை அடையமுடியாது, ஆணவமும் கர்வமும் அகங்காரமும் நீங்கிய ஆன்மா இறைநிலை அடையும் என்பது இத்தலத்தின் தத்துவம்.
அந்த அகங்கார குணங்களை நஞ்சுண்ட எம்பெருமான் எடுத்து, பாற்கடல் நஞ்சினை தான் உண்டு எல்லோரையும் காத்த அந்த பகவான், அப்படியே இந்தத் தீமைகளைத் தான் ஏற்றுக்கொண்டு பக்தர்களை வாழவைக்கின்றார், ஆத்மத்தை தெய்வநிலை அடைய வைகின்றார் என்பதுதான் ஆலயமும் இந்த கஜசம்ஹார மூர்த்தி கோலம் சொல்லும் தத்துவம்.
இந்த வழுவூர் ஆலயத்தின் மிகச் சிறப்பு, செய்வினை பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நலம் அருளும் தலம்.
பில்லி சூனியம், ஏவல் , செய்வினை என்பதெல்லாம் பெரிதாக ஒன்றுமல்ல. சில சூட்சும சக்திகளைப் பயன்படுத்தி ஒருவன் சிந்தனையினைக் குழப்புவது, மனதில் இருளை ஏற்படுத்துவது.
சிந்தையில் குழப்பமும் இருளும் கொண்டவன் முடங்குவான். இதுதான் செய்வினை கோளாறுகளின் பாதிப்பு.
இந்தத் தலத்துக்கு வந்து அந்த உள்ளங்காலினைத் தரிசித்துப் பணிந்து நின்றால், அந்தக் காலை நோக்கித் தலையினை வைத்து வணங்கி நின்றால் அகங்காரம் அகற்றி கர்வம் அகற்றி இந்தப் பாதமே சரணம் எனத் தலைமீது பாதம் காட்சிபடும்படி பணிந்து நின்றால், சரணடைந்து வீழ்ந்து தலையோடு ஏற்றுக்கொண்டால் எல்லாத் தீமையும் அகலும்.
யார் என்ன ஏவியிருந்தாலும் எவ்வித பில்லி சூனிய கோளாறு என்றாலும் அது நீங்கும்.
ரிஷிகளின் யாகத்தில் இருந்துவந்த துர்சக்திகளை ஏற்று மனுக்குலத்தை காத்த சிவன் உங்களுக்கு யார் எவ்வினை செய்திருந்தாலும் அதனை ஏற்று உங்களுக்கு விடுதலை தருவார்.
சிதம்பரம் கோவில் போல தனித்துவம் வாய்ந்தது இந்த வழுவூர் வீரட்டான ஆலயம்.
அங்குச் செல்ல வாய்ப்பிருப்போர் தவறாமல் செல்லுங்கள். முக்கியமாகப் பில்லி சூனிய சிககல், துர்சக்திகளால் தொந்தரவு, தீய சக்தியின் பாதிப்புக்கள், எதிரிகளின் தீராத் தொல்லை என நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் முயற்சி அனைத்தும் தோற்று நீங்கள் முடக்கும் நிலைக்கு வந்திருந்தால் இந்த ஆலயம் சென்று ஓங்கிய பாதத்தில் முழுக்கச் சரணடையுங்கள்.
தருகாவனத்து ரிஷிகளின் கர்வம் அடக்கிய சிவன், யானையினைக் கொன்று தோல் உரித்த சிவன் உங்கள் எதிரிகளையும் திருத்தித் தருவார், உங்கள் பெரும் சிக்கல்களையும் அழித்து அந்தத் தீய சக்திகளைத் தன்னுள் ஏற்று உங்களை வாழவைப்பார். இது சத்தியம்.
அட்ட வீரட்டானம் 07 : திருக்குறுக்கை.
அட்ட வீரட்டான தலங்களில் மகா சிறப்பான இந்தத் தலம், ஏழாம் தலமான இந்த அருள்தலம் மயிலாடுதுறை அருகே காவேரிக் கரையில் அமைந்துள்ளது. தேவாரம் பாடப்பட்ட தலங்களில் இது முக்கியமானதாகும்.
குறுக்கை முனிவரின் பெயரால் அறியப்பட்ட தலம் இது. “தீர்த்தவாகு” முனிவர் என்றொருவர் இருந்தார், அவரின் பிரதான பணி செல்லும் இடமெல்லாம் கங்கையினை வரவழைத்து கங்கை நீரால் அங்கிருக்கும் தெய்வத்துக்கு அபிஷேகம் செய்வது, சிவாலயங்களில் இதனைப் பிரசித்தியாகச் செய்தார்.
அவருக்கு ஒரு வரம் உண்டு. அவர் கையினை உயர்த்தினால் அது வானம் வரை நீளும், அப்போது கங்கா தேவி ஒரு குடம் நீர் கொடுப்பாள், அதை தன் கரங்களால் பெறுபவர், பின் கரத்தைச் சுருக்கி அபிஷேகம் செய்வார்.
இதனால் அவருக்கு மெல்லிய கர்வம் இருந்தது.
அந்தக் கர்வத்தோடு இந்த ஆலயம் வந்தார், அங்கே கங்கையினை வரவழைக்க அவர் முயன்றபோது அவரின் கை நீளவில்லை மாறாக குறுகிற்று.
ஏதோ பெரும் பாவம் செய்துவிட்டேன், அதனால் தவறு நிகழ்ந்ததுவிட்டது என வருந்திய முனிவர் அங்கே பாறையில் மோதி சாகத்துணிந்தபோது சிவன் வந்து அவரை ஆட்கொண்டார், அவரின் கர்வம் அங்கே உடைந்தது.
அந்த முனிவர் பெயரில் குறுக்கை என்றழைக்கப்பட்ட ஆலயம் பின் திருக்குறுக்கை என்றானது.
யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்பன இந்த ஆலயத்தின் வேறு பெயர்கள். திருமால் இலட்சுமி பிரம்மனெல்லாம் வந்து வழிபட்ட ஆலயம் இது.
இந்த ஆலயம் பற்றித் திருமூலர் பாடியிருக்கின்றார்.
“இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியதுபோக்கி
திருந்திய காமன் செயலழித்தங்கண்
அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே”
அப்பர் பாடிய நான்காம் திருமுறை அந்த ஆலயத்தைப் பற்றியது.
“ஆதியிற் பிரம னார்தாம்
அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவர்
உணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச்
சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ் சோலைக்
குறுக்கைவீ ரட்ட னாரே”
“வாரட்ட கொங்கை மலையாளொடுங் கொறுக்கை
வீரட்டமேவும் வியனிறைவே” – வள்ளலார் அருட்பா.
இந்த ஆலயத்தின் வரலாறு சிவன் மன்மதனை எரித்து, காமதகனம் செய்த அந்தப் புராணத்தின் வடிவம். காமதகனம் இங்கே நடைபெற்றது என்பதும், நெற்றிக்கண்ணால் உருத்திரக் கோலத்தில் சிவன் மன்மதனை எரித்துப்போட்ட இடம் இது என்பதும் வரலாறு.
ஆம். காமதேவன் எனும் அணங்க தேவனைச் சிவன் எரித்துப்போட்ட இடம் இதுதான்.
இந்த வரலாற்றைக் காணுமுன் காமம், காமதேவன் எனும் அணங்கதேவன் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளல் வேண்டும்.
மன்மதன் என அழைக்கப்படும் அந்தத் தேவன் சிற்றின்ப அதிபதி என்றும், சிற்றின்ப ஆசையினைத் தூண்டிவிடுபவன் என்றும் இங்கே நம்பவைக்கப்பட்டிருக்கின்றது.
உண்மை அது அல்ல.
காமம் என்றால் தீராத ஆசை அல்லது மயக்கம், இனம்புரியா மயக்கம். உளமார்த்த பிணைப்பு, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருதி அதுவே நிரந்தரமென கருதி அங்கே மயங்கி பிணங்கி கிடக்கும் ஒரு மயக்க நிலை.
அந்தப் புரிந்துகொள்ளமுடியா மயக்கத்தினாலேதான், இனம்புரியா ஈர்ப்பில்தான் உயிர்கள் பெருகுகின்றன, படைப்பின் இரகசியம் அதுதான் என்றாலும், சூட்சுமம் அதுதான் என்றாலும் அதனை நெருப்பு போல கையாள வேண்டும், அளவுக்கு மீறினால் அது ஆபத்து அந்த மயக்கம் பேராபத்து என எச்சரித்தது இந்துமதம்.
காமதேவன் என்பவன் உயிர்களுக்குள் ஒரு தீரா மயக்கத்தை, ஒரு ஆத்மார்த்த பிணைப்பை ஏற்படுத்தும் தெய்வமாக அறியப்படுகின்றான்.
நிச்சயம் அவன் போகத்துக்கோ சிற்றின்பத்துக்கோ உள்ள தெய்வம் அல்ல, அதற்கு இந்திரன் எனறொருவன் உண்டு.
காமன் என்பவன் தீராப் பாசபந்தத்தை கொடுப்பவன், இரு உள்ளங்களிடையே பெரும் பந்தத்தை பாறைபோல் உருவாக்குபவன், அசைக்கமுடியா தீராக் காதலும், தீரா அன்பும் அவன் உருவாக்கும் உணர்ச்சியில்தான் அவன் அருளில்தான் வரும்.
இதனாலே அவனை “அணங்க தேவன்” என வணங்கினார்கள் இந்துக்கள்.
ஆண்டாளின் நாச்சியார் திருமொழி பாடல் அதை தெளிவாகச் சொல்கின்றது, மார்கழி நோன்பை தொடர்ந்து தை மாசி மாதம் “அணங்க தேவன்” நோன்பு இருந்திருக்கின்றது, இங்கு வழிபட்டிருக்கின்றார்கள்.
மன்மதன் என்பவன் ஆத்ம ரீதியான காதலைக் கொடுப்பவன், ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆத்ம பந்தத்தை ஆயுளுக்கும் கொடுப்பவன் என்பதுதான் இந்துமத போதனை.
இங்கே ஆண்டாளின் நாச்சியார் திருமொழி மட்டுமல்ல, சங்க இலக்கியங்களும் மன்மதனின் விழா “காமதேவன் விழா” எனக் கொண்டாடப்பட்டதைச் சொல்கின்றது.
அவன் கொடி மகரக்கொடி என்பதைச் சொல்லி, அவன் பண்டிகையில் இக்கொடியினை ஏற்றுவார்கள் என்கின்றது அகநானூற்றுப் பாடல்.
“நான்மறை முதுநூல் முக்கட்செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கைசூழ்ந்த பொழில்மனைமகளிர்
கைசெய்பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகரநெற்றி வாந்தோய் புரிசைச்
சிகரம் தோன்றா சேணுயர் நல் இல்”
என அகநானூற்றுப்பாடல் மன்மதன் விழா அவன் கொடியோடு கொண்டாடப்பட்டதை சொல்கின்றது.
“காமற்கு வேனில் விருந்தெதிர்கொண்டு ” “காமவேள்” என மன்மதனை கலித்தொகை நிறைய இடங்களில் சொல்கின்றது.
“பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழு குவான்”
எனக் காமனைக் கொண்டாடுகின்றார் வள்ளுவ நாயனார்.
“‘இரதி காமன் இவன் இவள் எனாஅ
விரகியர் வினவ விடையிறுப்போரும்..” என்கின்றது பரிபாடல்.
“‘குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும்
சீராவு செவ்வாயும், சந்தன்று
‘காமற்கு விருந்து எதிர்கொண்டு…” என்கின்றது கலித்தொகை பாடல்
எல்லாவற்றுக்கும் மேலாகச் சிலப்பதிகாரம் பூம்புகாரில் காமதேவனுக்குக் கோவில் இருந்ததையும் அங்கே அவனுக்கு விழா நடந்ததையும் சொல்கின்றது இப்படி,
“வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும்
பங்குனி மயக்கத்துப் பனி அரசு யாண்டுளன்” என்கின்றது.
இதெல்லாம் மாசி பங்குனி மாதங்களை ஒட்டிய காலத்தில் அன்று நடந்த விழாக்கள், மன்மதன் எனும் காமதேவனுக்காக நடந்த விழாக்கள்.
இதே காலகட்டத்தில்தான் வடக்கே ஹோலி பண்டிகையும், காம தகனமும் நடக்கும்.
ஆக, ஒரு காலத்தில் இங்கும் காமவேள் பண்டிகை என அந்த பண்டிகை விமரிசையாக இருந்திருக்கின்றது, பின்னாளைய புத்த சமண காலங்களில் வழக்கொழிந்திருக்கின்றது. பின் மீளவில்லை. ஆனால், வடக்கே மீட்டெடுத்துக் கொண்டாடுகின்றார்கள், தெற்கே இன்னும் மீட்டெடுக்கவில்லை என்பதுதான் விஷயம்.
ஏன் காமதேவன் என அவனைக் கொண்டாடினார்கள் இந்துக்கள்?
உண்மையான காமதேவன் என்பவன் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஆத்மார்த்தமான பிணைப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டவன், கணவன் மனைவி இடையே அந்த ஆத்மார்த்தமான அன்பு வேண்டும் பிணைப்பு வேண்டும்.
அந்த வரத்தை வழங்குபவன் காமதேவன் என்றானான், அவனை வணங்கி அந்த வரத்தை பெறுவது காமனின் நோன்பாய் இருந்தது.
ஆம். பாச பந்தங்கள் உருவாக மூலக்காரணம் அந்தக் காமன்.
காமன் அருளாலே விலங்குகளை விட மனிதன் மேம்பட்டவனாகின்றான், இனத்தை பெருக்கும் ஆசையும் அவசியமும் எல்லா உயிர்க்கும் உண்டு.
ஆனால், அந்த உணர்வில் சிக்கி அதன் மூலம் பாசபந்தங்களில் சிக்கி தன் மனைவி, தன் வீடு, தன் பிள்ளை, தன் குலம் எனத் தீரா வலையில் சங்கிலியில் சிக்கித் தவிக்கும் கொடுமை மானுட இனத்துக்குத்தான் உண்டு.
விலங்குகளோ பறவைகளோ ஒருகட்டத்துக்கு மேல் தங்கள் துணையை வரரிசுகளைத் தேடுவதில்லை. அவற்றோடு இணங்கி இருத்தலுமில்லை.
ஆனால், மானுடன் அப்படி அல்ல, சாகும் வரை அவனுக்குப் பாசபந்த துணையும் குடும்பமும் பந்த பாச வலையாக, சொந்த விலங்குச் சங்கிலியாக அவனைத் தொடர்கின்றது.
அந்தக் காமன் பிடியில் இருந்து விடுபடாமல் முக்தி இல்லை என்பதைத்தான், காமத்தைக் கடக்காமல் ஞானம் இல்லை என்பதைத்தான் இந்தக் காமதகனம் எனும் சிவனின் நாடகம் சொல்கின்றது.
எப்படி நடந்தது காமதகனம்?
தாட்சாயினி இறந்த நிலையில் வீரபத்திரனை அனுப்பி தட்சனின் யாகத்தை அழித்து அவன் கர்வத்தையும் அழித்த சிவபெருமான் பின் உரிய காலம் வரும்வரை ஆழ்ந்த தவநிலைக்குச் சென்றுவிடுகின்றார்.
சிவனால் பிறக்கும் குழந்தையால்தான் தனக்கு அழிவு என வரம்வாங்கிய சூரபத்மன் இனி தனக்கு அழிவே இல்லை சிவன் தவத்தில் மூழ்கிவிட்டார் இனி அவருக்கு சந்ததி இல்லை, ஒரு பெண்ணை இனி அவர் மனதால் ஈர்க்கப்போவதில்லை என அறிந்து பெரும் ஆட்டம் ஆடினான்.
இதனால் படாதபாடுபட்ட தேவர்.கள் சிவனை வேண்டச் சென்றனர் அவரோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.
அவர் தவம் கலைக்கவும், அவரால் ஒரு சந்ததி உருவாகவும் விரும்பிய தேவர்கள் மன்மதனை அணுகி அவர் தவத்தை கலைக்கச் சொன்னார்கள்.
மன்மதன் ஐந்துவகை பானங்களைக் கொண்டவன்.
அந்த ஐந்து அம்புகளும் தாமரை, மாம்பூ, அசோகமலர், முல்லை, நீலோற்பவம் என ஐந்து வகை.
இந்தப் பானங்களை எய்துதான் அவன் மானுடரிடம் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவான் என்பது அவன் பலம், இந்த ஐந்து மலர்களுக்கும் ஐந்து தத்துவம் உண்டு.
ஐம்புலன்களும் ஐந்துவகை இன்பத்தில் வீழும், ஏதாவது ஒரு இன்பத்தில் மனம் பலவீனமாகிக் கரையும் என்பதே இம்மலர்களின் தத்துவம்.
அவன் அம்பாக வீசும் பூக்களில் அந்தப் பூக்களில் பார்வைக்கு அழகு, மணமிக்கது, சுவையான கனிகளைக் கொடுப்பது, காற்றில் இசை கொடுப்பது, தொட மென்மையானது எனப் பல தத்துவம் உண்டு.
சுவை, ஓளி, ஊறு எனும் உடல், ஓசை, நாற்றம் எனும் மணம் ஐந்து குணம் அவை.
ஆம். கண், காது, நாசி, வாய், உடல் என ஐந்து வகை புலன்களும் அதனதன் இயல்பில் மயங்குகின்றன.
ஒரு பெண்ணை ஆணுக்கோ, ஆணை பெண்ணுக்கோ பிடித்துப் போக அந்த ஆத்ம ஈர்ப்பு ஏற்பட இந்த ஐந்தில் ஏதோ ஒன்று காரணமாகின்றது.
அவர்களின் பேச்சு, பார்வை, கேட்டல், பேசுதல், உடல் அழகு என ஏதோ ஒன்று முதலில் கட்டிப்போடுகின்றது, அப்படி ஈர்க்கப்படும் ஈர்ப்பே நாளடைவில் உறவாகின்றது.
அந்த உறவு குழந்தைகள், பாசம், பந்தம் எனப் பலுகி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரிக்கமுடியாதபடி கல்சுவர் போல் ஒட்டிக் கொள்கின்றது.
இதுதான் மன்மதன் அம்புகளின் தத்துவம்.
அந்தக் கரும்பு வில்லும் அம்புகளும் மன்மதனின் அடையாளம் எனச் சொல்லப்படுவதற்கு காரணங்களும் உண்டு.
கரும்பு என்பது இனிமையானது, இன்பங்களைத் தேடித்தான் மனிதன் பூமியில் சுற்றுகின்றான், இந்த இன்பத்தைத் தேடித்தான் லௌகீக வாழ்வில் விழுந்து ஞானத்தை தேடாமல் அறியாமை சுகங்களைத் தேடி மூழ்குகின்றான் என்பது அதன் சாராம்சம்.
இப்படியான மன்மதன் சிவனை நோக்கி அம்புகளை வீச தன் தவத்துக்கு இடைஞ்சலான அவனை நெற்றிகண்ணினால் எரித்துவிடுகின்றார் சிவன், அவன் சாம்பலாகின்றான்.
அவனை எரிக்க சிவன் நெற்றியில் இருந்து வந்த நெருப்புப் பொறிகளே சரவண பொய்கையில் விழுந்து முருகப்பெருமான் அவதாரமானது.
ரதி எனும் மன்மதனின் மனைவி சிவனிடம் மடிபிச்சை கேட்டு அழுதாள், பின்னாளில் பார்வதியினைத் தான் மணக்கும் போது இவன் எழுவான், அதுவரை உன் கண்ணுக்கு மட்டும் தெரிவான், எவன் என்னைச் சரணடைவானோ அவனிடம் இவனின் வித்தைகள் செல்லாது தோற்கும் என வரமருளினார் சிவன்.
பின்னாளில், அவன் பார்வதி திருமணத்தின்போது உயிர்பெற்றான். பின், உயிர்கள் ஜெனிக்கத் தொடங்கின.
இதுதான் மன்மத தகனம் அல்லது காமதகனம்.
இந்த ஆலயத்தில்தான் அது நடந்தது என்பதால் அந்தச் சிவன் காமதகனமூர்த்தி என அழைக்கப்படுகின்றார்.
இந்த ஆலயம் போதிக்கும் தத்துவம் இதுதான், சிவனிடம் யார் அடைக்கலமாகின்றார்களோ அவர்களைக் காமனால் அணுகமுடியாது அவர்கள் காம மயக்கத்தில் விழுவதில்லை.
காமம் கடக்காமல் ஞானம் வருவதில்லை, அறிவு தெளிவதில்லை என்பதால் ஒருவன் உரியகாலத்தில் காமத்தை கடந்தாக வேண்டும் அதற்கு சிவன் அருள் வேண்டும்.
காமத்தை கடப்பது என்றால் சிற்றின்பத்தைக் கடப்பது மட்டுமல்ல. மாறாக, எதெல்லாம் அதிதீவிரமாக ஒருவனை இழுத்து வைக்குமோ, இது இல்லாவிட்டால் வாழ்வில்லை என் உலகமே இதுதான் எனக் கருதவைக்குமோ அதுதான் காமம்.
எது தனக்கு மட்டும் என ஒருவன் கொண்டாடி அதனை தன்னோடு வைத்து அந்தப் பந்தபாசத்தில் சிக்கிக் கிடப்பானோ அதுதான் காமம், காமமென்றால் பெரும் விருப்பம் எனப் பொருள்.
அது மனைவியாக இருக்கலாம், அவள் மூலம் வரும் பாசபந்தமாக இருக்கலாம், பெண்ணோ பொருளோ பதவியோ எதுவாகவும் இருக்கலாம்.
எதன்மேல் ஒருவன் ஆத்மபந்தம் கொண்டு சிக்கிக்கிடப்பானோ, எது வேண்டுமென மயங்கிக் கிடப்பானோ, எது அவனுக்கு நோய்போல் வாட்டுமோ அதுதான் காமம்.
தீரா மயக்கம், இனம்புரியா உணர்வில் சிக்கிக்கிடக்க அந்த நிலைதான் காமம். இது ஆபத்தானது.
இதனாலே இராவணன் எனும் பெரும் பராக்கிரமசாலி மாண்டான், வாலி எனும் மாவீரன் மாண்டான் அவர்களால் அதைத் தெளிந்துவரமுடியவில்லை.
அப்பெண் அழகாக இருக்கின்றாள் நல்லது, ஆனால் இது வெறும் அழகு அழிய கூடிய அழகு இந்த அழகிலும் சுகத்திலும் மயங்கிவிட்டால் இறைவனைத் தேடமாட்டோம் ஞானம் அடையமாட்டோம் எனும் அறிவும் தெளிவும் அவர்களுக்கு இல்லை.
அழகில் மயங்குவது ஆபத்து, பின்னால் வரும் பல தொல்லைகளுக்கு அதுதான் காரணம்.
அசுரர் அப்படி அமிர்தத்தைத் தவறவிட்டனர், விஸ்வாமித்திரர் படாதபாடுபட்டார், இராவணன் அழிந்தான்.
காமம் தீராதவன் எனப் பெயர்பெற்ற அர்ஜூனன் கண்ணனைச் சரணடைந்ததால் வாழ்ந்தான், அந்தக் காமம் அவனை அழிக்கவில்லை, பகவானின் கிருபையால் அவன் தெளிந்தான்.
காமத்தையும் பக்தியாய்ப் பாடி அதையே பக்தியாக்கி பகவானை அடைந்தாள் ஆண்டாள் நாச்சியார்.
புராணம் என்றும் இதிகாசம் என்றும் இன்னும் பல அடியார்கள் வாழ்விலும் இந்துக்கள் சொன்னது அதுதான், அழியக்கூடிய விஷயங்களில் இனம்புரியாமல் சிக்கிக்கிடப்பது அறிவுடைமை அல்ல.
“முற்றிய காமம் மூளை சிதைக்கும்” என்றார்கள்.
காமவயம் எனும் நிலைக்குத் தள்ளபட்டவனுக்கு அது நோய்போல் தாக்கும், அவன் சிந்தையும் செயலும் மனமும் அங்கே மூழ்கிக் கிடக்கும், நல்லது கெட்டது யோசிக்க அவனுக்குத் தெரியாது.
தேனுண்ட வண்டு சிக்கிக்கிடப்பதுபோல், மதுவுண்ட மனிதன் கிறங்கிக் கிடப்பது போல் அந்த மாயை அப்படி ஆட்டுவிக்கும்.
நிஜத்தில் அப்படி அல்ல, அது உண்மை அல்ல, பெண்ணோ அவள் உருவமோ ஆணோ அவன் பலமான அழகோ நிரந்தமல்ல.
அது ஒரு மயக்கம், ஒரு மாய ரூபம், கலைந்துவிடும் கோலம்.
ஆனால், அது நிரந்தரமென நம்பி அதிலே சிக்கி அதனால் பந்தபாசம் நீண்டு, குலம் குடும்பம் என நீண்டு ஒருவன் வாழ்வே வீணாகின்றது.
வழிபாடு செய்ய பாலுக்காக பசுவாங்கி, பசுவை பராமரிக்க ஒரு பெண்ணை அமர்த்தி பின் அவளில் வீழ்ந்து குலம், குடும்பம், பிள்ளை சந்ததி எனத் திசைமாறிப்போன முனிவன் போல வாழ்வே திசைமாறிவிடுகின்றது.
அந்த மயக்கம் பொல்லாதது, எந்த மானுடனையும் வளைத்துப் போடுவது, அவனைச் சிக்கவைத்து வேடிக்கை பார்ப்பது.
அதனால் மன்னர்கள் சரிந்தார்கள், பெரும் இராஜ்ஜியங்கள் சரிந்தன, பெரும் பெரும் அழிவுகளே வந்தன.
அதனால் அந்தக் காமத்தை சிவனே அகற்றுவார், சிவனை அண்டியோர்க்கு மன்மதனின் பானத்தால் ஆபத்து இல்லை எனச் சொல்கின்றது இந்த ஆலயம்.
அந்த மாய மயக்கத்தில் சிவனை அண்டியபக்தர்கள் விழ்வதில்லை.
நீங்கள் எந்தவகை காமத்தால் அது பெண்ணோ, பதவியோ, பொருளோ இல்லை தீராப் பழக்கமோ எதில் சிக்கி கிடந்தாலும் இந்த ஆலயம் வந்து இந்தச் சிவனை வணங்கினால் உங்கள் தேவையற்ற விருப்பம் தேவையற்ற மோகம் சாம்பலாகும். இது சத்தியம்.
மன்மதனை எரித்தச் சிவன், உங்களைப் பற்றியிருக்கும் காம குரோதங்களைத் தேவையற்ற மயக்கங்களை எரித்துப்போட திருகுறுக்கையில் காத்துக் கொண்டிருக்கின்றார்.
அவரைச் சென்று வணங்குங்கள், நம்பிக்கையாய் வணங்குங்கள், எந்த மயக்கமெல்லாம் உங்களை ஆட்டிவைக்கின்றதோ, எது அவமானத்தையும் அழிவையும் தரும் என அஞ்சுகின்றீர்களோ அதையெல்லாம் அந்தச் சிவன் தீர்த்து உங்களை வாழவைப்பார். இது சத்தியம்.
அந்தக் கோவில் எதிரே வெண்ணிற மணல் கொண்ட ஒரு இடம் உண்டு, சாம்பல் போல காட்சியளிக்கும் அந்த மேடுதான் மன்மதனை எரித்த இடமாகக் கருதப்படுகின்றது.
அந்த மண்ணை அள்ளி பூசிக்கொண்டால் எந்த மாய மயக்கமும் ஒருவனை அண்டாது என்பது பல சிவனடியார் வாழ்வில் நடந்த அதிசயம்.
நாயன்மார்களில் சிலருக்கும் மன்மதனின் சோதனையால் குழப்பம் வந்தது, அப்படிப்பட்ட நிலையில் இங்குவந்து வழிபட்டு மீண்டார்கள் என்பதும் உண்டு.
அந்த அதிசயம் அந்த காமதகனமூர்த்தியால் உங்களுக்கும் நடக்கும், நம்பிக்கையாய்ச் சென்று அந்தச் சிவனை வழிபட்டு இந்தச் சாம்பல் போன்ற வெண்மணலை பூசினால் எல்லா நலமும் அருளும் பலமும் அடைவீர்கள், தேவையற்ற மயக்கங்கள் அந்நொடியே எரிந்து சாம்பலாகும்.
அட்ட வீரட்டானம் 08 : திருக்கடவூர்.
அட்ட வீரட்டான தலங்களில் முக்கியமான தலம் திருக்கடவூர், அந்த ஆலயத்தின் தொன்மை காலத்தால் பழமையானது.
பிரம்மன் தன் பாவம் நீங்க வில்வமரங்கள் நடுவே இருந்து வழிபட்ட தலம் அது, வில்வவனம் என அதற்குப் பெயர் உண்டு.
தேவர்கள் மகா புனிதமான இடத்தில்தான் அமிர்த குடத்தை வைக்கவேண்டும் எனத் தேடி இந்தத் தலத்தில் வைத்ததால் அதற்கு அமிர்த கடேஸ்வரர் ஆலயம் என்றொரு பெயரும் உண்டு.
இந்தத் தலம் அகத்தியர் முதல் பலர் வந்து வணங்கிய தலம், பெரும் சிறப்புக்களைக் கொண்டது.
தேவாரம் பாடப்பெற்ற தலம் அது.
திருஞான சம்பந்தர் தன் மூன்றாம் திருமுறையினை இப்படித் தொடங்குகின்றார்.
“சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண
உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனுங்
கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே”
அப்பர் பெருமான் தன் நான்காம் திருமுறையினைத் இப்படிப் பாடித் தொடங்குகின்றார்.
“பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரியொன் றேற்றி உணருமா றுணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே”
இன்னும் பாடுகின்றார்.
“மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவாள் எயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை உத்தமனே”
ஐந்தாம் திருமுறையிலும் இந்த ஆலயம் உண்டு.
“மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலாற்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே”
சுந்தரர் தன் பதிகத்தில் பாடுகின்றார், பொடியார் மேனியனே எனத் தொடங்கி 10 பாடல்கள் கொண்ட பதிகம் செய்துள்ளார்.
“பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே”
நாயன்மார்களில் குங்கிலியக் கலயநாயனாரும், காரி நாயனாரும் இங்குதான் வாழ்ந்தார்கள். பல அதிசயம் பெற்றார்கள். அப்படியான சிறப்புக்களைக் கொண்ட ஆலயம் அது.
அபிராமி அந்தாதி இங்குதான் பாடப்பட்டது, தேவி வழிபாட்டில் மகா பிரசித்தியானதும் எக்காலமும் நிலைபெற்ற அந்த வழிபாட்டுப் பாடலை அபிராமிபட்டர் எனும் அந்தப் பக்தர் இங்குதான் பாடினார்.
அன்னை, சரபோஜி மன்னன் காலத்தில் தை அமாவசையினைப் பௌர்ணமியாக்கி பட்டர் உயிரைக் காத்த சம்பவத்தின்போது அபிராமி அந்தாதி எனும் மகா சிறந்த நூலை, சௌந்தர்ய லஹரியின் தழுவலைப் பட்டர் பாடிய தலம் இது.
இந்த ஆலயத்தில்தான் சிவபெருமான் மார்கண்டேயனுக்காக எமனை மிதித்துத் தள்ளிக் காலசம்ஹாரமூர்த்தியாக விளங்குகின்றார்.
அந்தக் கோலம்தான், எமனை அவர் விரட்டிய ருத்திர கோலம்தான் அட்ட வீரட்டான தலங்களில் இந்த ஆலயம் இடம்பெற காரணமாயிற்று.
அதனைக் கொஞ்சம் ஆழமாகக் காணலாம்.
இந்தக் காலனைச் சிவன் மிதித்த சம்பவத்தின் மூலம் மிருகண்டு ரிஷியிடம் இருந்து தொடங்குகின்றது, அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததால் அவரும் அவர் மனைவி விருத்தையும் ஒரு குழந்தைக்காக சிவனிடம் தவமிருந்தார்கள்.
தன் திருவிளையாடல் திட்டத்தோடு அவர்களிடம் ஒரு நிபந்தனையினைச் சொன்னார் சிவன், பதினாறு வருடம் வாழும் அறிவுள்ள மகன் வேண்டுமா இல்லை நூறுவருடம் வாழும் மூடனான மகன் வேண்டுமா? இரண்டில் ஒன்றுதான் தரமுடியும், உங்கள் கர்மவினை அப்படியானது என்றார்.
மிருகண்டு முனிவர் திகைத்தார், ஆனாலும் நிதானமாகச் சிந்தித்தார்.
எல்லா உறவும் அறுபடக் கூடியதுதான், தனக்குப் பின் தன் மகன் என்றோ ஒருநாள் சாகத்தான் போகின்றான், என்றோ சாகப்போகிறவன் 16 வயதுவரை அறிவாளியாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.
நீண்டநாள் வாழும் மூடனைப் பெற்று அவன் மூடத்தனத்தை பார்த்து நொந்தபடி சாவதைவிட, தான் பெற்ற மூடன் தான் இல்லாக் காலத்தில் எப்படி வாழ்வானோ என ஏங்கிச் சாவதை விட அறிவாளி மகன் கொஞ்சகாலம் வாழ்ந்தாலும் அந்த நினைவோடு சாவது நலம் என உணர்ந்தார்.
தான் ஒரு முனிவன் முக்கியமாகச் சிவபக்தன், தனக்கு ஒரு மூடன் பிறந்து இந்தச் சிவனுக்குரிய கடமையினை செய்யாமல் நீண்டநாள் வாழ்வதை விட அறிவுள்ள மகன் சிவபணி செய்துவிட்டு சிவபாதம் அடைவதைக் கண்டால் நல்லது என முடிவெடுத்தார்.
அதனால் இளம்வயதிலே மரித்துப்போகும் விதிகொண்ட மகன் அவருக்குப் பிறந்தான், அவனுக்கு மார்கண்டேயன் எனப் பெயரிட்டார்.
மார்கண்டேயன் வளர்ந்தார், மிக நுண்ணிய அறிவும் அபாரமான சிவபக்தியும் அவனுக்குள் வந்தன, அந்தத் தெய்வீக மகன் 16 வயதுவரைதான் தன்னோடு இருப்பான் என்பதை அறிந்ததால் உள்ளே வலியும் அவனின் பெரும் அறிவிலும் சிவபக்தியும் மகிழ்வும் கொண்டு வளர்த்து வந்தார்கள் பெற்றோர்கள்.
அவனுக்குப் 15 வயது நெருங்கும்போது பெற்றோரின் முகவாட்டத்தை உணர்ந்தவன் அவர்களிடம் கேட்டதில் தன் விதியினை அறிந்துகொண்டான்.
அவன் அறிவாளி அல்லவா? அதனால் பெற்றோரிடமே வரம் கேட்டான்.
எந்தப் பெற்றோரும் தாங்கமுடியாச் சோகம் தங்கள் பிள்ளை தங்கள் கண்முன் சாவது, அந்தத் துன்பத்தைத் தங்கள் பெற்றோருக்குக் கொடுக்க விரும்பாதவன் தான் சிவாலயத் தரிசனம் செய்தபடி இராமேஸ்வரம் செலவதாகக் கிளம்பினான்.
பெற்றோருக்கும் வேறுவழி தெரியவில்லை, எப்படியும் 16 வயதில் பிரியப்போகும் மகன் அவன், தங்கள் கண்முன் உயிறற்றுப் பிரிவதைவிட, உயிரோடு பிரிவது நலமென உணர்ந்தார்கள்.
அவர்கள் சம்மததித்ததும் வெளியேறினான் மார்கண்டேயன், அவன் செல்லும் வழியினை அவன் மறைவதுவரை பார்த்துக்கொண்டே இருந்த தம்பதியர் அவன் மறைந்ததும் மனம் வெடித்து அழுதனர்.
சிவனே சிவனே எனச் சொல்லி சொல்லி அழுதவர்கள், தங்கள் கர்மத்தை நினைந்து நொந்து நொந்து அழுதனர்.
மார்கண்டேயன் ஒவ்வொரு சிவாலயமாகத் தொழுது வந்தான். அவன் இந்த ஆலயம் வரும்போது அவனுக்கு 16 வயதும் வந்து அவன் உயிர் பிரியும் நேரம் வந்தது.
அவன் முன்னால் கர்வமாக வந்து நின்றான் எமன்.
மார்கண்டேயன் இயல்பாக அறிவுள்ளவன் அல்லவா? அவன் ஒரு அனுமதிகேட்டான், “எமதர்மனே நான் இந்தச் சிவனை வணங்கிவிட்டு வருகின்றேன், அதன் பின் என்னை நீ பிடித்துச் செல்லலாம்” என அனுமதிகேட்டான்.
எமதர்மனோ மிக அகங்காரமாக சொன்னான், “நான் மிக மிகக் கண்டிப்பானவன், உரிய நேரம் மிகச் சரியாய் உன் உயிரை எடுப்பேன், ஒரு நொடிக் கூட நேரம் தவறமாட்டேன்.
நான் அவ்வளவுக்கு கடமையில் சரியானவன், என் கடமையில் நான் கொஞ்சமும் குறைவதில்லை, அதுதான் என் கௌரவம் என் அடையாள்ம், இதனாலேதான் நான் எல்லோரையும் நடுங்க வைக்கின்றேன்” எனக் கர்வமாய்ச் சொன்னான்.
அவனிடம் உத்தரவுக் கேட்டு ஓடிச் சென்று அந்தத் திருக்கடையூர் சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டான் மார்கண்டேயன், “சிவனே உன்னைவிட்டு நான் போகமாட்டேன், அதோ எமன் நிற்கின்றான், என்னோடு நீரும் வந்தால்தான் அவனோடுச் செல்வேன், இல்லையெனில் உம்மை மீறி அவன் என்னைக் கொண்டுச் செல்லட்டும்.
இதுகாலமும் என் குலமும் தந்தையும் நானும் செய்த சிவவழிபாட்டின் பலனாய் உம்மை பற்றிக்கொள்கின்றேன், என் பெற்றோருக்குச் செய்யவேண்டிய கடமைக்காக உம்மை பற்றிக்கொள்கின்றேன்.
எம்மைக் கைவிட்டுவிடாதேயும், என் முடிவும் விதியும் எனக்குத் தெரியும், ஆனால் விதியினை மாற்றும் சக்தி கொண்ட ஈஸ்வரன் நீர், எவ்வளவோ பேர் விதியினை மாற்றியவர் நீர், அதனால் உம்மிடம் அடைகலமாகின்றேன், இனி எது நடந்தாலும் உம் முடிவு என அந்த சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டான்”
எமன் செய்வதறியாது திகைத்தான், “மார்கண்டேயா வா, உன்னை நான் இழுத்துச் செல்லவேண்டும்” என உறுமினான்.
“முடியாது, சிவனை விட்டுவரமாட்டேன், முடிந்தால் என்னையும் அவரையும் சேர்த்து இழுத்துச்செல்” எனச் சொன்ன மார்கண்டேயன் சிவலிங்கத்தை இறுகக் கட்டிக்கொண்டான்.
எமனின் ஆணவம் தலைதூக்கிற்று , அவனின் கர்வம் அதிகரித்தது.
“மார்கண்டேயா, சிவலிங்கத்தை விட்டுவிடு, என்னோடு வா உன்னை கட்டி இழுக்கவேண்டும்” எனப் பாசகயிற்றோடு உறுமினான்.
“வரமாட்டேன், முடிந்தால் சிவனோடு என்னை இழு” என்றான் மார்கண்டேயன்.
“என் கடமை எனக்கு முக்கியம், இந்தக் காலன் முன்னால் யாரும் நிற்கமுடியாது, குறித்தக் காலத்தில் யாரும் தடுக்கமுடியாச் சக்தி கொண்டவன் நான், சிவனே வந்தாலும் என்னைத் தடுக்கமுடியாது” என்றவன் அகங்காரத்தில் பாசகயிற்றை வீசினான்.
அது அவன்மேலும், சிவலிங்கம் மேலும் விழுந்தது.
அப்போதும் கொஞ்சமும் கலங்காத எமன், கர்வப் புன்னகையோடு சிவலிங்கத்தோடு அவனை இழுக்க லிங்கம் ஆடிற்று.
“சிவனே ” எனப் படகைத் தழுவிக் கடலில் கிடப்பவன் போல லிங்கத்தோடு ஆட ஆரம்பித்தான்.
அந்த இடத்தில் தோன்றினார் சிவன், “பரம்பொருளே, எனக்கு அடைக்கலம்தாருங்கள் ” என அவர் பாதம் பற்றினான் மார்கண்டேயன்.
“எமனே, இவனை விட்டுவிடு அவன் என்னிடம் அடைக்கலாகிவிட்டான்” என்றார் பெருமான்.
“முடியாது, என் கடமை இது, இவனை இந்நேரம் இழுத்துச் செல்வதே என் கடமை. இந்த நேரம் எனக்கானது. இங்கே யாரும் குறுக்கே வரமுடியாது, சிவனே ஆனாலும் இந்தக் காலம் எனக்கானது, என் சக்திக்கு உட்பட்டது, இது என் சக்தி பேசும் நேரம்” என அகங்காராமாய்ச் சொன்னான் எமன்.
“காலனே, நான் சொல்கின்றேன், இவன் மேல் உனக்கு அதிகாரமில்லை. சென்றுவிடு” எனச் சொன்னார் சிவன்.
மார்கண்டேயன் அவர் பாதங்களை இறுகப்பற்றிக்கொண்டான்.
“முடியாது, எனக்கான காலமிது, இவன் என் கையில் இருக்கவேண்டிய நேரமிது, இங்கு நானே பெரியவன், இந்தக் காலத்தில் உம்மைவிட எனக்கே சக்தி உண்டு” என அகங்காரமாய்ச் சொன்னவன் அவனைப் பற்றி இழுக்க முனைந்தான்.
அவன் அகங்கார கர்வத்தை அடக்க அவனை தன் இடதுகாலால் ஓங்கி மிதித்தார் சிவன், ருத்ரகோலத்தில் அவர் மிதித்ததில் தள்ளிப் போய் விழுந்தான், அவன் மேல் அவன் பாசக்கயிறு வந்து விழுந்தது.
ஆவேசம் கொண்டவனாய் எழப்பார்த்தான் எமன், அவனால் எழமுடியவில்லை. தன் சக்தியெல்லாம் இழந்து வீழ்ந்து கிடந்தான்.
சிவன் தன் மார்பில் மிதித்ததில் அவரின் பாதம் பதிந்துவிட்டதை உணர்ந்து கையெடுத்து வணங்கினான், இனி இவனிடம் வரப்போவதில்லை என்றும் காலத்தை வெல்லும் சக்தி சிவனுக்கே உண்டு என ஒப்புக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றான்.
“மார்கண்டேயா, காலன் உன்னைவிட்டு அகன்றுவிட்டான் இனிக் காலம் உன்னை கட்டுப்படுத்தாது. அதனால் நீ நித்திய சிரஞ்சீவியாக வாழ்வாய்” என வரமருளினார் சிவன்.
மார்கண்டேயன் அந்த இடத்தில் காலத்தின் பிடியில் இருந்து விடுபட்டான், காலம் அதன் பின் அவனைக் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பதால் நித்திய சிரஞ்சீவியாக இருந்து ஏகப்பட்ட புராணமும் மந்திரமும் வேத உரைகளும் எழுதும் பெரும் பாக்கியம் பெற்றான்.
மார்கண்டேய மகரிஷி எனும் பெரும் இடத்தை அடைந்தார், மாபெரும் ரிஷியாக இன்றும் அருள்பாலிக்கின்றார்.
சிவன், விஷ்ணு, அம்பாள் என மூவரையும் தொழுதுப் பாடி பல சக்திமிக்க மந்திரங்களை அவர்தான் அருளினார்.
இந்த மார்கண்டேயர் கதை அதாவது காலத்தின் கட்டில் இருந்து அவன் விடுபட்டு என்றும் 16 என இளமை கோலத்திலே இருப்பார் எனும் அந்த வரம் அப்படியே விஞ்ஞானம் அதுவும் ஐன்ஸ்டீன் சொன்ன சார்பியல் கொள்கையோடு ஒத்துப்போவது அப்படியே பொருந்துவதுதான் மகா ஆச்சரியம்.
ஆம். காலத்தில் இருந்து விடுபடும் எதுவும் அழியாது. அதன் ஆயுள் மகா நீண்டது. ஆனால், அதற்குச் சில விஷயங்களில் இருந்து விலக்களிக்கும் வேகமான சாதனம் ஒளியின் திசைவேகத்தில் ஓளியோடு பயணிக்கும் வேகத்தில் வேண்டும் என அதிர வைத்தார் ஐன்ஸ்டீன்.
அவர் சொன்னதைக் கொஞ்சம் எளிமையாகக் காணலாம்.
அதாவது, இங்கு ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு கால அளவு நிர்ணயிக்கப்படுகின்றது, அதை மீறமுடியாது.
பூமி சூரியனைச் சுற்றிவருவது ஒரு வருடம், அதனால் பூமியில் இருக்கும் மனிதனுக்கும் அந்த ஒருவருடம் எனும் கால அளவு உண்டு.
இது வயதாகின்றது, வயது மூப்பாகின்றது, மூப்பு இறப்பாகின்றது, இதற்கு எந்தப் பொருளும் பூமியில் தப்பமுடியாது.
அதாவது இங்குக் காலமே ஆட்சி செய்கின்றது.
ஐன்ஸ்டீன் காலத்தை மீறிச் சென்றால் இந்நிலை வராது என்றார், காலத்தைக் கடப்பது சாத்தியம் அதாவது ஒளியின் திசைவேகத்தில் ஒரு இராக்கெட் செய்து அதனில் மனிதனை ஏற்றி எங்காவது அனுப்பிவிட்டால், அந்த வேகத்தில் அதாவது காலத்தை மீறி அவனைப் பயணிக்கவைத்து பிரபஞ்சத்தின் எல்லைக்கோ இல்லை வெளியேவோ அனுப்பிவிடவேண்டும்.
அவன் அந்த வேகத்தில் எங்கெல்லாமோ சென்றுத் திரும்பிவருமுன் பூமி பல்லாயிரம் சுற்றுகளைச் சூரியனைச் சுற்றி முடித்திருக்கலாம், அவனோ எந்தக் கோலத்தில் எந்த வயதில் சென்றானோ அதே வயதில் அதே கோலத்தில் திரும்பி வருவான்.
உதாரணமாக, அவன் 35 வயதில் ஒரு குழந்தையின் தகப்பனாக சென்றிருந்தால் அவன் ஆயிரம் ஆண்டு கழித்து அதே 35 வயது வாலிபனாகவே வருவான். ஆனால், அவனின் 100 ஆம் தலைமுறை இங்கே வாழும்.
இதைத்தான் ஐன்ஸ்டீன் சொன்னார் .இதையே இந்து புராணங்கள் சிலவும் சொல்கின்றன.
அதாவது காலத்தை, இந்தப் பூமியினை கட்டுப்படுத்தும் காலத்தை ஒருவன் கடந்துவிட்டால் அவனுக்கு அழிவில்லை என்பது பொருள்.
அதுதான், அந்த விஞ்ஞான தத்துவம்தான் திருக்கடையூரில் மார்கண்டேயனுக்காகச் சிவன் செய்த காலசம்ஹாரமாகக் கருதப்படுகின்றது.
இந்துமதம் அவ்வளவுக்கு ஆச்சரியமான விஞ்ஞான மதம். இன்றைய நாளைய விஞ்ஞானிகள் சொல்லும் பிரபஞ்ச இரகசியங்களை என்றோ சொன்னமதம் இந்துமதம்.
திருக்கடையூர் ஆலயம் அப்படிக் காலத்தை மாற்றும் ஸ்தலம், காலத்தின் பிடியில் இருந்து ஒருவனை விடுவிக்கும் தலம்.
காலத்தின் பிடியில் இருந்து என்றால் விதியின் பிடியில் இருந்து எனப் பொருள்.
ஆம். தலைவிதியினை மாற்றிவைக்கும் ஆலயம் அது.
அதனாலே அது இன்றும் பெரும் செல்வாக்குடனும், பக்தர்களுடனும் நிலைத்து நிற்கின்றது.
எதற்கும் அடங்காத காலன், யாராலும் கட்டுப்படுத்தமுடியாக் காலன் என அகங்காரத்தோடு வந்த எமதர்மனை சிவன் விரட்டி அவன் அகங்காரத்தை முறித்த இடம் அது.
அங்கே காலம் கட்டுப்படும், காலம் தன் அதிகாரத்தை இழக்கும்.
நீங்கள் யாராகவும் இருங்கள், எவ்வகை சிக்கலாலும் பாதிக்கபட்டவராகவும் இருங்கள், ஆனால் அந்தத் திருக்கடையூர் ஆலயத்தில் சென்று வணங்கினால் உங்கள் விதி மாறும்.
உங்களை வாட்டும் அகங்காரமிக்க வியாதியோ, கடனோ, வாழ்வின் சிக்கலோ எது உங்கள் கர்ம விதி என வந்து எங்கும் அடங்காமல் காலக்கட்ட விதிப்படி இதுதான் எங்கள் காலம் என ஆடுகின்றதோ அது அகலும்.
வியாதியோ இல்லை இதர ஆபத்தோ உச்சிக்கு வரும் நேரம், உங்கள் உயிர்பறிக்கவரும் நேரம், நீங்கள் அங்கே தொழுதால் அந்தச் சிவனைப் பற்றித் தொழுதால் நிச்சயம் காலன் உங்களைப் பிடிக்காமல் நகர்ந்துவிடுவான்.
இந்தப் பூமியில் உங்களுக்கான கர்மம் செய்யவேண்டிய நிலையில் ஏகப்பட்ட காரியம் செய்யவேண்டிய நிலையில் உடலாலும் உயிராலும் இடையூறு வந்தால் அந்தத் திருக்கடையூர் சென்று வணங்கினால் நிச்சயம் பெரும் ஆயுள் நீளும்.
அங்கே காலன், காலம் உள்ளிட்ட எல்லாவற்றின் அகங்காரமும் தீர்க்கப்படும்.
அமிர்தகடேஸ்வரர் என அந்தச் சிவன் என்றோ அமிர்தகுடம் கொண்டிருந்தார் என்பதற்காக அழைக்கப்படவில்லை.
அமிர்தம் என்பது மரணத்தில் இருந்து ஒருவனை விடுவிக்கும், ஆயுளை நீட்டும்.
அந்த ஆலயத்துச் சிவனும் தன்னை நம்பி வருவோரைக் காலனிடம் இருந்து அவன் அகங்காரத்திடம் இருந்து மீட்டு ஆயுளை நீட்டிதருகின்றார் என்பதால் அவர் அமிர்தகடேஸ்வரர் என்றானார்.
காலனை வதம் செய்ததால் காலசங்காரமூர்த்தி என்றுமானார்.
அந்த ஆலயம் சிவன் ஆட்சி செய்யும் ஆலயம், அம்பாள் அவருக்குத் துணை இருக்கின்றார். அங்கே மார்கண்டேயன் மட்டுமல்ல அபிராமிபட்டர் போன்ற பலர் ஆயுளை நீட்டித்தனர், காலம் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தோற்றது என்பது சாட்சி.
அந்த ஆலயத்தின் சிறப்பு அதுதான், மயிலாடுதுறை அருகே அமைந்திருக்கும் அந்த ஆலயத்துக்குச் செல்லுங்கள், உங்கள் பிரச்சினை எதுவாகவும் இருக்கட்டும், நோயோ மாயையோ இல்லை யாரின் அகங்காரத்தாலோ வந்த சிக்கலாக இருக்கட்டும்.
அது உங்கள் கிரகப்பலன் கர்மப்பலன் படி நீங்கள் படாதபாடுபடும் காலமாகவும் இருக்கட்டும். சிக்கலே இல்லை.
அங்கே காலமே செயல் இழக்கும், காலம் தன் அதிகாரத்தை இழந்துவீழும். அப்போது நீங்கள் காலநேரத்தில் இருந்து விடுபடுவீர்கள். எதுவும் உங்கள் மேல் அதிகாரம் செலுத்தமுடியாது.
சிவனைப் பணிந்து அருள்வாங்கச் செல்வோர், காலத்தால் பாதிக்கப்பட்டோர், காலன் வந்துவிடலாம் என அஞ்சுவோர் எனச் சிக்கலில் இருப்போர் அனைவரும் செல்லலாம்.
உங்கள் விதியினை மாற்றி உங்கள் கர்மவினையினை மாற்றி உங்கள் வாழ்வினையே மாற்றி நீங்கள் செய்யவேண்டிய எல்லாக் கடமையினையும் அந்த அமிர்த கடேஸ்வரர் செய்யவைப்பார். இது சத்தியம்.
காலத்தால் எதையெல்லாம் இழந்தீர்களோ அதை எல்லாம் திருப்பியும் தருவார், இதுவும் சத்தியம்.
எட்டு (அஷ்ட) வீரட்டான தலங்களையும் பார்த்துவிட்டோம். இந்த எட்டுத் தலங்களும் எட்டுவிதமான பாதுகாவலை எண் திசைகளில் இருந்து வழங்கும். எட்டுவிதமான பெரிய ஆபத்துகளில் இருந்து வழங்கும்.
எதிரிகளின் அகங்காரம் முதல் கர்மவினை தீவினைகள் வரை மாற்றித்தரும் தலங்கள் இவை. இவைகள் எட்டையும் தரிசித்தால் கயிலாயத்துக்குச் சென்றுவந்த பலனும், இழந்துவிட்ட காலங்களின் பலனும் திரும்பக் கிடைக்கும், அது உறுதி.
ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் தரிசிக்க வேண்டிய பைரவ தலங்களில் இவை எட்டும் உண்டு.
கால பைரவர் என்பவர் காலத்தின் அதிபதி, காலம் அவருக்குக் கட்டுப்பட்டது. அவர் முன் காலத்தின் ஆட்டம் வோட்டம் சக்தி என எதுவும் செல்லாது. எல்லாம் கடந்த ஆற்றல் அவருடையது.
அந்தக் காலபைரவ தத்துவம்தான் அந்த ரூபம்தான் இந்த எட்டு அட்டவீரட்டான தலங்களிலும் இருக்கின்றது. யாருக்குச் சிவன் அருளும் அழைப்பும் உண்டோ அவர்கள் அந்தத் தலங்களுக்குச் சென்று அதனைப் பெற்றுக்கொள்ளட்டும்.