அபிராமி அந்தாதி : 60
அபிராமி அந்தாதி : 60
“பாலினும் சொல்இனி யாய்பனி மாமலர்ப் பாதம்வைக்க
மாலினும் தேவர் வணங்கநின் றோன்கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம்ஒரு
நாலினும் சாலநன் றோஅடி யேன்முடை நாய்த்தலையே”
இப்பாடல் கீழ்கண்டவாரு பிரிந்து பொருள் தரும்
“பாலினும் சொல் இனியாய் பனி மா மலர்ப் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே”
பட்டர் அன்னையின் அன்பில் உருகி பாடும் பாடலின் 60ம் பாடலின் விளக்கம் கொஞ்சம் ஆழமானது, எளிதான
பாடலாக தெரிந்தாலும் பட்டர் சொல்லும் விஷயம் வழக்கம் போல் ஆழமானது, அதனை ஒவ்வொன்றாக காணலாம்
முதலில் “பாலினிமும் சொல் இனியாய்” என்கின்றார், இதற்கு “பாலை விட சொல்லை இனிதாக கொண்டவளே” என பொருள், நேரடியாக அதுதான் பொருள்
ஆனால் மறைமுகமான பொருளை சற்று கவனமாக நோக்க வேண்டியிருக்கின்றது
அனுதினமும் பாலாலு தேனாலும் அபிஷேகம் செய்யபடும் அன்னையினை குறிப்பால் பாடுகின்றார் பட்டர்
பாலினும் சொல் இனியாய் என்கின்றார், பால் என்பது குழந்தைக்கு உணவாவது அதாவது பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டி வளர்க்கும் அன்னை, அக்குழந்தை பேச தொடங்கியதும் மிக்க மகிழ்ச்சி அடைவாள், மழலையின் சொல்லால் மகிழ்ச்சி அடைவாள் அல்லவா? அன்னை அப்படியானவள் என்கின்றார் பட்டர்
இதற்கு நான் ஞானவாழ்வில் குழந்தையாய் ஒன்றும் தெரியாமல் இருந்தேன் நீ அரவணைத்தாய், பின் வேத மொழிகளாலும் மந்திரங்களாலும் உன்னை வழிபட்டேன் அதனால் மகிழ்ச்சியானவளே எனவும் பொருள் உண்டு
தாயினை போல என் பாடலை, மழலை மொழிபோல் கேட்டு மகிழும் அன்னையே என “பனி மா மலர்பாதம் வைக்க” என அடுத்த வரியினை சொல்கின்றார்
“பனி மா மலர்பாதம்” என்கின்றார்
பனி மா மலர்பாதம் என்பதற்கு பனிபோல் குளிர்ந்த பெரும் மலர்போன்ற பாதம், தாமரை மலர் போன்ற பாதம் என ஓரு பொருள் உண்டு என்றாலும் அன்னை பனிமிகுந்த இமயபர்வதத்தில் வசிப்பவள் , அந்த பனிபடர்ந்த மலையிலே பெரிய மலரில் கால் வைத்து அமர்ந்திருப்பவள் எனவும் பொருள் உண்டு, அப்படியான அன்னையினை குறித்து பாடும் பட்டர் தொடர்கின்றார்
“வைக்க மாலினும் தேவர் வணங்க நின்றோன்”
அந்த சிறப்பான அன்னையின் திருவடிகளை சிவன் தன் தலைமேல் வைத்து கொள்வாராம், எந்த சிவன் என்றால் திருமாலும் தேவர்களும் வணங்கி தலைகொடுத்து நிற்பார்களே அந்த சிவமாம்
திருமாலும் தேவர்களும் தலைவணங்கும் சிவனே அன்னையின் பாதத்தை தலையில் தாங்குகின்றார் என்கின்றார் பட்டர்
அதனைத்தான் “கொன்றை வார் சடையின் மேலினும்” என்கின்றார், அதாவது சிவபெருமான் கொன்றை மலர்களை அணிந்த சடைமுடி உடையவர், அவரின் தலையில் கொன்றை பூக்களை சூடியிருப்பார். அந்த கொன்றை பூக்கள் சூடிய சிவன் தலையும் தேவியின் பாதம் தாங்கி நிற்கின்றது
அடுத்து பாடுகின்றார் பட்டர் “கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம்ஒரு நாலினும்” என்கின்றார்
நால்வகை வேதமும் நான்கு படிகளாக நான்கு பக்கமும் அமைந்து அன்னையினை தாங்கி நிற்கின்றன என்பது சாஸ்திரம், அப்படி அன்னையின் பாதங்களை நான்கு வேதங்களும் தாங்கி நிற்கின்றன எனும் பட்டர் அடுத்து சொல்கின்றார்
லலிதா ஸ்வரத்தினம் எனும் நூல் இதனை சொல்கின்றது
இங்கு பீடம் என்பது ஸ்தூல பீடம், பிரணவ பீடம், காரண பீடம், மகா காரண பிரணவ பீடம் எனும் நான்காகும்
வேதங்களால் பாடபடும் இந்த நான்கு பீடங்களின் மேல் அன்னை பாதம் பதிய அமர்ந்திருக்கின்றாளாம்,
(அதாவது நான்கு வேதங்களையும் முறையாக முடித்தால் அன்னையினை அடையலாம் என்பது தத்துவம் )
“சாலநன் றோஅடி யேன்முடை நாய்த்தலையே”
அப்படி மிக பெரிய தகுதி கொண்ட அன்னையின் பாதங்களை, பனிமலையின் குளிர்ந்த பூ போன்ற பாதங்களை சிவன் தன் தலையால் தாங்குகின்றார், அவரை தொடர்ந்து திருமாலும் தேவர்களும் தாங்க தயாராகின்றார்கள், இன்னும் நான்கு வேதங்களும் நான்புறமும் நான்கு படிகட்டுகளாக அன்னையின் பாதத்தை தாங்குகின்றன
அப்படியான அன்னையின் பாதம், சிவனும் திருமாலும் தேவர்களும் தாங்கும் பாதத்தை அன்னை இந்த முடை நாற்றம் வீசும் நாய்தலையினை , இழிவான தலையினை கொண்டிருக்கும் என் தலைமேலும் வைக்கின்றாள் என்றால் அவள் கருணையே கருணை என அன்னையின் கருணையினை வியந்து உருகி பாடி முடிக்கின்றார் பட்டர்
இது தீட்சை வாங்கும் நிலையில் பாடபட்ட பாடல்
தீட்சை எனும் அருள்நிலையினை குரு சீடனுக்கு அருளும்பொழுது தலையினை கையால் தொட்டு ஆசீர்வதிப்பது வழமை, பட்டர் அன்னை தனக்கு அவள் காலால் தலையில் மிதித்து தீட்சை அருள்வதாக நினைந்து அந்த மகிழ்ச்சியில் பாடுகின்றார்
அன்னை தன் தலையில் மிதித்து தனக்கு தீட்சை தருவதாக மகிழும் பட்டர், சிவனும் திருமாலும் வேதங்களும் தாங்கும் அந்த குளிர்ந்த மலர்பாதம், நாயினும் கீழான தலையான தன் தலையிலும் பதிவதெல்லாம் அன்னையின் கருணை என மருகி நிற்கின்றார்
அன்னை அவ்வளவு கருணை கொண்டவள், அவள் அடியார்களுக்காக தன் மிக உயர்ந்த நிலையில் இருந்து இறங்கி தேவர்களுக்கும் மும்மூர்த்திகளுக்குமான இடத்தினை இழிந்த பிறப்பான மானிட அடியார்களுக்கும் தருபவள் என அன்னையின் மகா பெரிய கருணையினை மொழிந்து பாடுகின்றார்
“சால நன்றோ” எனும் வார்த்தை கவனிக்கதக்கது
அதன் பொருள் அன்னை வேறுவழியின்றி கால் வைக்க இடமின்றி இங்கு வரவில்லை, அவளுக்கு கால் வைக்க சிவன் தலையும் தேவர்கள் தலையுமே உண்டு, அவள் தன் அடியார் மேல் கொண்ட அன்பாலும் கருணையாலும் தன்னை தேடி வந்து தன் தலைமேல் கால் வைத்து ஆட்கொண்டாள் அவளின் அன்பும் கருணையும் அப்படியானது என்கின்றார் பட்டர்.
நேரடியாக இப்படி பொருள் கொண்டாலும் பாடல் சொல்லும் யோக மறைபொருள் வேறு, அது முழு யோகத்துக்கானது
தவகோலத்தில் முழு தியான கோலத்தில் அன்னையினை காணும் நிலையினை இங்கே மறைமுகமாக பாடுகின்றார் பட்டர்
பாலினும் இனிய சொல்லாய் என்பது யோகத்தின் உச்ச நிலையில் உள்நாக்கில் சுரக்கும் அமிர்தத்தை குறிப்பது
அன்னை அந்த திருகடையூரில் அமிர்த குடம் தாங்கிய நாதனின் அருகில் நிற்பவள் அல்லவா? அந்த அமிர்தம் என்பது சாகாவரம் கொடுக்கும் தன்மையுடையது அல்லவா? அந்த அமிர்தம் தாங்கிய ஆலய கோலத்தையும் யோகத்தில் எழும் உச்ச நிலையின் அமிர்தத்தை பாலினும் இனிய அமர்தத்தை குறித்து, அந்நேரம் எழும் ஓங்கார ஒலியினை குறித்தும் சொல்லி தொடங்குகின்றார்
அன்னை உடலின் சக்கரங்களின் மேல் அமர்ந்திருப்பவள் என்பதை கண்டோம், 6 சக்கரங்களும் மலர் வடிவில் இருப்பதையும் முன்பே பார்த்திருக்கின்றோம், அந்த மலர் வடிவ சக்கரங்களில் இருப்பவள் அன்னையே மும்மூர்த்திகளுடனும் தேவர்களுடனும் அவள் அமர்ந்திருப்பாள்
பனி எனும் சொல்லுக்கு உயிர் அல்லது மூலம் என்பதும் பொருளாகும், பனிகுடம் என்பது அப்படியான வார்த்தையே
மூல சக்தி வீற்றிருக்கும் இடம் என்று “பனி மா மலர்ப் பாதம்” என அன்னையின் பாதங்களை சொல்கின்றார் பட்ட, அன்னையின் அம்சம் எல்லா சக்கரங்களிலும் சக்தியாக வீற்றிருக்கின்றது எனும் பட்டர் யோகத்தின் ரகசியங்களையும் சொல்கின்றார்
ஒவ்வொரு சக்கரமாக குண்டலினி சக்தி கடந்துவரும்பொழுது திருமால் வீற்றிருக்கும் சக்கரம் சிவன் வீற்றிருக்கும் சக்கரம் இன்னும் வேதங்கள் சொல்லும் தேவதைகள் வீற்றிருக்கும் சக்கரம் என மேலேழும்பொழுது அன்னையின் பாதம் அவற்றை அழுத்தி மெல் எழுவதாக சொல்கின்றார் பட்டர்
கவித்துவமான உருவகம் இது
(அப்படியே நான்கு பீடங்கள் என்பது அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம் ஆகியவற்றை குறிப்பது
அன்னையின் பாதமாக சொல்லபடுவது ஆனந்தமய கோசம், இதுவும் யோகத்தின் உச்ச நிலையும் ஒன்றே )
இறுதியில் உச்சியில் அந்த சக்தி நிற்கும் பொழுது, துரிய சக்கரம் எனும் ஆயிரம் இதழ் கொண்ட சக்கரம் விரியும் பொழுது அன்னை தன் தலைமேல் பாதம் பதித்து நிற்பாள் என்கின்றார்
அதாவது முழு ஞான நிலையில் தன் சிரசின் மேல் நிற்பது சாட்சாத் அன்னையே என்கின்றார்
இங்கு ஏன் முடை நாற்றம் அடிக்கும் நாய் தலை என தன் தலையினை சொன்னார்?
அது மனதை குறிக்கும் சொல், “அங்காடி நாய்” என பட்டினத்தாரும் “நாயினும் இழிந்த” என மாணிக்க வாசகரும் சொன்ன அந்த ஞானமொழி
அதாவது நாய் என்பது சதா அலைந்து கொண்டிருக்கும் ஜீவன், அதுவும் கடைதெரு நாய் ஓடி கொண்டே இருக்கும், மானிட மனமும் அப்படி அலைய கூடியது என்பதை சித்தர்கள் இப்படி சொல்வார்கள்
நாய் போல் அலையும் மனதை அடக்குவதும் கட்டுபடுத்துவதும் சிரமம் என்பது சித்தர்களே சொல்லும் விஷயம்
அப்படியான மனதின் சிந்தனைகளை கொடுக்கும் தலையில் , மிக மிக மோசமான மட்டமான இழிவான புத்தியும் சிந்தையும் உள்ள தலையில், நாயை போல அலையும் புத்தி கொண்ட சிரசின் மேல் அன்னை பாதம் வைத்து நிற்கும் அந்த ஞானகோலத்தில் எல்லாம் அடங்கும் , அடங்கா மனமும் அடங்கும், மனம் முழுக்க அடங்கினால் பற்றற்ற கோலம் ஏற்படும்
அன்னையினை நினைந்து தவமிருந்தால் எல்லா சக்கரமும் துலங்கும் அன்னை உச்ச சக்கரத்தில் பாதம் வைத்து அருள்புரிவாள் அந்நிலையில் நாய்போல் அலையும் மனம் ஒருமுகபடும், அந்த ஞான மோன நிலையில் அமிர்தம் பாலினும் இனியதாய் சுரக்கும், அழிவில்லா பெருஞானம் வாய்க்கும் என்பது பட்டர் மறைமுகமாக சொல்லும் போதனை
