அபிராமி அந்தாதி : 62

அபிராமி அந்தாதி : 62

“தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன், மெய் அடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே”

இந்த பாடலை புரிந்து கொள்ளுமுன் சிவபெருமான் செய்த முக்கிய வதங்களையும் அவற்றின் ஆலயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் இப்பாடல் எளிதாக பிரியும்

சிவபெருமானின் திருவிளையாடல்களில் வீரம் காட்டிய அந்த சம்பவங்கள் வீராட்டானம் என அழைக்கபடும்

சிவபெருமான் செய்த சம்ஹாரங்களில் முக்கியமானவை எட்டு, இந்த சம்பவமும் அவற்றின் நினைவாக எழுப்பட்ட ஆலயங்களும் தமிழகத்தில் உண்டு

அப்படி அஷ்டம் (எட்டு) , அவை எதெல்லாம் இன்றால் வைதான்

சிவபிரான் பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றை கொய்து செருக்கழிந்த சம்பவ தலமனான திருக்கண்டியூர்,
அந்தகாசூரனை சிவன் வதம் செய்த சம்பவத்தை நினைவு கூறு திருகோவலூர், திரிபுரம் எரித்த சிவனை நினைவுபடுத்தும் ஆலயமான திருவதிகை , தட்சன் தலையினை சிவன் கொய்ததை சொல்லும் திருபறியலூர்
ஜலந்தாசுரனை சிவன் வதம் செய்த திருவிற்குடி, கஜமுகாசுரனை வதம் செய்து அவன் தோலை உரித்து போட்ட சம்பவத்தை சொல்ல்ம் திருவழுவூர்

மன்மதனை எரித்த சம்பவத்தை சொல்லும் திருகுறுக்கை, மார்கண்டேயன் உயிரை திருப்பி கொடுத்து எமனை விரட்டிய திருகடவூர் ஆகிய எட்டு தலங்கள் அவை

“பூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல் புரம்அதிகை
மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்
காமன் குறுக்கை யமன்கட வூர்இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே”

எனும் பாடல் இதனை சொல்கின்றது

இந்த வீர திருவிளையாடலில் மூன்றை சொல்லி கூடவே அன்னை சிவன் மேல் கொண்ட பக்தியினை சொல்லும் பாடல் இது

அந்த மூன்று வீரதிருவிளையாடலில் முக்கியமானது திரிபுரம் எரித்த அந்த புராணம், அதைத்தான் முதல் வரியில் சொல்கின்றார் பட்டர்

“தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து” என தொடங்குகின்றார்

முப்புரம் எனும் திரிபுரம் எரித்த கதை எல்லோரும் அறிந்த ஒன்று, இத்தொடரின் ஒரு பாடலில் கூட பார்த்திருக்கின்றோம்

தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் எனும் மூவரும் பிரம்மனிடம் வரம் வாங்கி ஆகாயத்தில் மூன்று கோட்டை கட்டி இந்த கோட்டைகள் மூன்றும் ஒன்றுசேரும் பொழுது ஒரே ஒரு கனையாலே அழிக்கமுடியும் எனும் வரம் வாங்கி பெரும் அழிச்சாட்டியம் செய்தனர்

அவர்கள் தங்கம் இரும்பு வெண்கலம் என மூன்று கோட்டைகளை கட்டி தேவர்களுக்கு தொல்லை கொடுக்க தொடங்கினார்கள், தேவர்கள் சிவனிடம் தஞ்சமானார்கள்

சிவன் அவர்களை வதைக்க திருவுளம் கொண்டார்

மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்ததாம் நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான்.

அதே நேரம் பக்தர்களாகிய அந்த மூவரை அழிக்கவும் அவர் விரும்பவில்லை அவர்கள் அறியாமையினை மட்டும் அகற்ற விரும்பினார்

அதனால் வில்லை வளைக்காமல், நாணைப் பூட்டாமல் அண்ட சராசரங்கள் நடுங்கும் வண்ணம் ஒரு புன்னகை செய்தார். அந்த புன்னகையிலே வானத்து கோட்டைகள் அழிந்து அந்த மூவரும் சிவனை பணிந்தனர், சிவன் அவர்களை தன்னோடு ஏற்று கொண்டார்

இந்த சம்பவத்தை சொல்லும் திருவதிகை ஆலயத்தை சுட்டிகாட்டும் பட்டர், அந்த நிலையில் அதாவது சிவன் திரிபுரத்தை அழிக்கும்பொழுது அவரோடு பாதியாக நின்றவள், தங்கசிலையாக நின்று அருள் புரிந்தவள் அன்னை என்கின்றார்

சிவன் இந்த திருவிளையாடலை வீரமாக நடத்தும்பொழுது சிவனில் பாதியான உவமையவளையும் சுட்டிகாட்டி சிவன் காட்டிய அக்கருணை அன்னையின் கருணை என வியக்கின்றார்

அடுத்த வரி ” மத வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன்” எனும் வரி, இது திருவழூவூரில் இருக்கும் கஜசம்ஹார சிவனை சொல்லும் வரி

தாருவனத்து ரிஷிகள் சிவனை பழிவாங்க பல உருவங்களை அனுப்பியது போல யானைவடிவ சக்தி ஒன்றையும் அசுரவடிவாக அனுப்பினார்கள், அந்த யானை கயிலாயம் சென்று சிவனை விழுங்கிற்று, சிவன் அந்த யானை வயிற்றை கிழித்து வந்து அதன் தோலையே போர்த்தி கொண்டு நின்றார்

இந்த வதம் செய்த காட்சிதான் கஜசம்ஹாரர், க்ருத்தி வாசர், கரி உரித்த பெருமான் என சிவனை கொண்டாட வைக்கின்றது

அப்பொழுதும் சிவனோடு இருந்து அந்த யானை அசுரனை ஒழித்து அதன் தோலை போர்த்தி கொண்டவள் சிவனோடு இருந்த அன்னை என்கின்றார் பட்டர், அங்கும் அகங்காரம் ஒழிந்தது பின் அந்த ரிஷிகளை மன்னித்தார் சிவன் அங்கும் கருணை காட்டினாள் அன்னை

அடுத்து பட்டர் சொல்வது முக்கியமான சம்பவம், அதனை “கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி” என்கின்றார்

இந்த புராணகதை கொஞ்சம் நீளமானது எனினும் இங்கு அதனை காண்பது அவசியம், காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அன்னையின் வரலாற்றை சொல்லும் புராணம் இது

சும்ப, நிசும்பன் என்ற இரண்டு அசுரர்கள் பிரம்மாவை குறித்து தவமிருந்தனர், ஐந்து அக்னி ஏற்றி நடுவில் அமர்ந்து கடும் தவமிருந்து பிரம்மனை வரவழைத்தனர், அதனால் வந்த பிரம்மனிடம் சாகா வரம் கேட்டனர், எல்லாம் அழியகூடிய ஒன்று சாகாதது என எதுவுமில்லை என பிரம்மன் சொன்னதால் உமையவளிடம் இருந்து தோன்றும் கன்னியால் மட்டுமே தங்களுக்கு அழிவு வரவேண்டும் என கேட்டனர் பிரம்மனும் அருளினார்

அப்படி ஒரு கன்னி வாய்ப்பில்லை என கருதி ஆட்டம் போட்டனர் அசுரர்கள், அந்த அட்டகாசம் சிவனை எட்டிற்று, எல்லா உயிர்களும் அந்த அசுரர்களால் படும் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்க விருப்பம் கொண்ட சிவன் அன்னையினை அவதாரமாக்கினார்

பூலோகத்தில் பிறந்த அன்னை சிவன் நினைவாகவே வாழ்ந்துவந்தாள் அப்படி கம்பை நதியோரம் மண்ணால் லிங்கம்செய்து அதனை பூஜித்து வந்தாள், ஒருமுறை ஆற்றில் பெரும் வெள்ளம் வந்து அந்த லிங்கத்தை சூழ்ந்தபொழுது அன்னை ஓடி சென்று அதனை கட்டி அணைத்து காத்தாள்

அப்பொழுது அவளின் தனங்களும் வளையல் அணிந்த கரங்களும் அந்த லிங்கத்தில் ஆழபதிந்தன, அந்த அடையாளம் லிங்கத்தில் உண்டாயிற்று

இதனாலே அந்த சிவனுக்கு “முலை தழுபர், வளை தழும்பர்” எனும் பெயரும் உண்டு

இதைத்தான் “கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி” என்கின்றார், தென்னையின் குரும்பலை போன்ற அன்னையின் தனங்கள் அந்த லிங்க்த்தில் பதிந்ததால் அந்த வரி வந்தது

இந்த நிகழ்வு அந்த அவதாரத்தில் உண்டு, பின் அன்னை அந்த சும்ப, நிசும்ப அசுரர்களின் ஆணவத்தை ஒழித்ததெல்லாம் நடந்தது

அந்த அவதாரத்தில் அன்னையின் கருணையினை இப்படி பாடும் பட்டர், கடைசி வரிக்கு வருகின்றார்

“கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே” என்கின்றார்

இந்த காட்சி சிவன் மன்மதனை எரித்ததும், அன்னையின் அவன் வேண்டுதலால் அவன் உயிர்த்ததையும் சொல்லும் வரி

திருகுறுக்கை ஆலயம் சிவன் செய்த காம தகனத்தை குறிக்கும் ஆலயம், முன்பு சிவன் தவத்தில் இருந்தபொழுது படைப்பு தொழில் நின்றுவிட்டது அதனை மறுபடி தொடரவேண்டி சிவன் தவம் கலைக்க முயன்றான் மன்மதன்

அப்பொழுது அவனை தன் நெற்றிகண்ணால் எரித்தார் சிவன், அவனை மறுபடியும் உயிர்த்தெழ வைக்க மன்றாடினாள் அன்னை, அப்பொழுது அவன் உயிர்பெற்றான்

அப்படி அவனுக்கு கருணைகாட்டிய அன்னை, பின் அவனோடு மோதி அவனின் கரும்பு வில்லையும் ஐந்து மலர்கனைகளை பறித்து அவனை கட்டுபடுத்தினாள், இதனால் அன்னையினை அண்டுவோரிடம் மன்மதனின் தாக்குதல்கள் பலனளிக்காது

இப்படி சிவன் வாழ்வில் நடந்த மூன்று வீர திருவிளையாடல்களையும் அப்பொழுது சிவனுடன் அன்னை பாதியாக நின்று கருணைகாட்டிய இடங்களை முதலில் சொல்கின்றார் பட்டர்

சிவன் திரிபுரத்தை தன் புன்னகையாலே எரித்து அந்த மூவரையும் பணியவைத்து மாயை அகற்றி மன்னிப்பு அருளினார் அப்பொழுது அன்னையும் சிவனுடன் இருந்தாள், ஆம் அன்னை அந்த அளவு கருணை மிக்கவள்

யானைமுக அசுரன் கயிலாயத்தில் சிவனை விழுங்கி சிவன் அதன் வயிற்றை கிழித்துவெளிவந்து தன் சக்தியினை காட்ட யானையின் தோலையே உரித்து போர்த்திகொண்டார்

பொதுவாக யானையின் தோல் உரிக்க கடினமானது, சிவன் அதனை செய்து காட்டினார்

அந்நேரம் அதனை ஏவிவிட்ட தாருவனத்து ரிஷிகளையும் அவர் அழிக்காமல் அவர்கள் அகங்காரம் தவிர்த்து கருணைகாட்டினார் அப்பொழுதும் அன்னை அவரில் பாதியாக இருந்தாள், அந்த கருணையும் அன்னையின் கருணையே

வெறும் மணல் லிங்கம் என கருதாமல் தன் அன்பின் அடையாளமாக தன் தனமும் கரமும் லிங்கத்தில் பதியும்படி அணைத்து கொண்டாள் அன்னை, அந்த அளவு கருணை கொண்டவள் அவள்

அவளின் தனங்கள் ஞானத்தின் அடையாளம் என்பதால் சிவனின் ஞானமாக அவளே இருக்கின்றாள் என்பதையும், அவளின் வளைகரங்கள் லிங்கத்தில் பதிந்ததால் சிவனின் ஆதாரமாக அவளே இருக்கின்றாள் என்பதை உணர்வதும் சிரமமல்ல‌

அதன் தத்துவம் அதுதான்

அப்படியான அன்னை மன்மதன் அழிவதையும் தடுத்து அவனுக்கும் கருணை காட்டினாள்

இப்படி அன்னையின் கருணையான மனதை நினைந்து நினைந்து மகிழ்ந்து இப்பாடலை பாடுகின்றார் பட்டர்

நேரடியாக அன்னை மிகுந்த ஆவேசமான சிவனுள் நின்று தக்க நேரத்தில் கருணையினை வெளிபடுத்தி அந்த திரிபுர அசுரர்கள், தாருவனத்து ரிஷிகள், மன்மதன், சும்ப நிசும்பன் என எல்லோரையும் அகந்தை நீக்கி ஞானம் அருளி =அவர்கள் அறியாமையினை உணர வைத்தாள் என் பொருள் தரும் பாடல் இது

அந்த பொல்லாத அசுரர்களையும் அகங்காரம் பிடித்த ரிஷிகளையும் அவள் அழித்து போடவில்லை, மூவகை ஆசைகளாலும் ஆடிய அவர்களை அன்னை புன்னகையுடன் எதிர்கொண்டு தன் ஞானத்தை அருளி அவர்களின் அகங்காரத்தை நீக்கி உண்மையினை அறிய செய்து வாழவைத்தாள் அறிவும் ஞானமும் கொடுத்து பணிய வைத்தாள் என்பதை சொல்லும் பாடல் இது

சிவனின் ஞானமும் கருணையுமாக அவளே பதிந்திருக்கின்றாள் “கொங்கைக் குரும்பைக் குறியிட்டநாயகி” என சிவனின் ஞானம் தன்னுடையது என அடையாளமிட்டு நிற்கின்றாள் என்பதை சொல்லும் பாடல் இது

அன்னை நினைத்திருந்தால் அந்த கொடியவர்களை நொடியில் அழித்திருக்கலாம், ஆனால் கருணையே உருவான அன்னை யார் அழிவதையும் விரும்பவதில்லை அவர்களின் அறியாமையும் மாயையும் அகங்காரமும் நீங்கத்தான் விரும்புகின்றாள், அதனை நீக்கி அவர்களை ஆட்கொள்கின்றாள் என்பது பாடலின் பொருள்

அப்படிபட்ட அன்னை தன்னையும் அகங்காரம் நீக்கி ஆட்கொண்டாள் என உணரும் பட்டர், அவளை அண்டியோர் பெண்ணாசை உள்ளிட்ட மூவகை ஆசையிலும் விழமாட்டார்கள் என்பதை சொல்லி பாடலை முடிக்கின்றார்

பொல்லா குணமுடைய அசுரர்களையே அகங்காரம் அகற்றி ஆட்கொள்ளும் அன்னை கருணைமிக்கவள், தன்னை அண்டிவரும் எல்லோரையும் அவள் அரவணைக்கும் தாயாக நிற்கின்றாள் என்பதைத்தான் இப்பாடலில் சொல்கின்றார் பட்டர்