அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 03 /21
1658 – 1707 ஔரங்கசீப் காலப் போராட்டம்
1605ல் அதாவது அக்பரின் அந்திமக் காலங்களில் ஆட்சிக்கு வந்த ஜஹாங்கீர் அடுத்த 21 வருடங்கள் டெல்லியின் சுல்தானாக இருந்தான். அவனுக்குப் பின் அடுத்த 30 வருடங்கள் ஷாஜகான் சக்கரவர்த்தியாக இருந்தான்.
இவர்கள் காலத்தில் அயோத்தி உள்ளிட்ட எந்த முக்கிய ஸ்தலங்களிலும் சிக்கல் இல்லை. மதுரா, காசி அப்படியே புதிதாக ஸ்தாபிக்கபட்ட சீக்கியர்களின் அம்ரித்ஸர் உள்ளிட்ட எல்லா இடங்களுமே அமைதியாகத்தான் இருந்தன.
அயோத்தியில் பாபர் காலத்தில் உருவான அந்த சிறிய இஸ்லாமிய வழிபாட்டு தலமும், அதை அடுத்து இந்துக்கள் மீட்டெடுத்த ஆலயமும் அமைதியாக இருந்தன.
அக்பர் இங்கே போரை விரும்பவில்லை. மாறாக பாறைக்குள் யாருக்கும் அறியாமல் வேர்விட்டு வளர்ந்து பின் பாறையினை நொறுக்கிப் போடும் மரம் போல் பல காரியங்களை ரகசியமாகச் செய்தான்.
அவனுக்கு முன்பு வரை தக்காணத்தில் நாயக்கர்கள் வலுவாக இருந்தார்கள். பாமினி சுல்தான்களை ஒடுக்கி வைத்திருந்தார்கள். அக்பர் ரசியமாக பாமினிக்கு உதவினான். பாரசீக மன்னன் தனக்கு செய்தது போல் அவனின் உதவி கொஞ்சம் மறைமுகமாய் இருந்தது.
அந்த உதவியில் பாமினிக்கள் மறுபடி எழுந்து நாயக்கர்களை ஒடுக்கி பிஜப்பூர், கோல்கொண்டா, அகமதுநகர், ஐதராபாத் எனப் பெரிதாக வளர்ந்தனர்.
இந்த சுல்தான்களை ஜஹாங்கிரும் ஷாஜகானும் கட்டுப்படுத்தி மொகலாயத்தை விஸ்தரிக்க தக்காணம் வந்தனர். பல போர்களும் நடந்தன. மொகலாயத்துக்கு கப்பம் பெருகிற்று.
இக்கால கட்டத்தில் அதாவ்து 1605 முதல் 1650 வரை தெற்கே ஜஹாங்கீரும் ஷாஜகானும் வந்து ராஜ்ஜிய விஸ்த்தரிப்பினை செய்தார்கள். சிவாஜியின் தந்தை ஷாஹாஜி ஒரு இந்துராஜ்ஜியம் அமைக்க முயற்சித்து தஞ்சாவூரில் அதை முன்னடுத்தது அப்போதுதான்.
அவுரங்கசீப் ஒரு தளபதியாக அப்போது பல போர்களை செய்து கொண்டிருந்தான். 1650களில் அவன் சகோதரக் கொலைகளைச் செய்து 1658ல் ஷாஜகானை சிறையில் தள்ளி பதவிக்கு வந்தான்.
அவனுக்கு ஆரம்பம் முதலே அதிதீவிர இஸ்லாமிய அபிமானம் இருந்தது. இந்துக்களுக்கும் அவனுக்கும் உரசத் தொடங்கிற்று. இந்துக்கள் அவன் அண்ணன் தாரா ஷிக்கோவுக்கு ஆதரவாக இருந்தார்கள். காசி கோவிலில் குமரகுருபரருக்கு உரிமை கொடுத்து நிலமும் மடமும் கொடுத்தவன் அவனே என்பதாலும், அக்பர் போல் அவன் தந்திரமாக இருந்ததாலும் அவன் பக்கமே இந்துக்கள் இருந்தார்கள்.
அவனைக் கொன்று ஆட்சிக்கு வந்தவன் ராஜபுத்திர இந்து மன்னர்களின் உதவிக்காக முதலில் அமைதியாக இருந்தாலும், அவனின் கொடிய முகம் அடிக்கடி வெளிப்பட்டது.
அப்படி முதலில் வெளிபட்ட இடம் அயோத்தி.
அவன் முன்னோர் வழியில் இருந்து வேறுபட்டான் அல்லது அக்பர் போட்டுக் கொடுத்த தந்திரப் பாதையில் சரியான இடத்தை அடைந்தான். அக்பர் ராஜபுத்திர மன்னர்களை சரிக்குச் சரி சம்பந்தியாக வைத்திருந்தான். இவனோ அவர்களை சிப்பாய்கள் போல அடியாட்களாக மாற்றியிருந்தான்.
அதனால் அவன் வைத்ததே முடிவாயிற்று. அவனை எதிர்க்கும் சக்தி யாருக்குமில்லை.
அவுரங்கசீப் போர் வெறியன். ஆனால் இந்துக்கள் அவனுக்காக போர் புரியத் தயார் இல்லை என்பதால் தொடக்கத்திலேயே அவர்களை வெறுப்புடனே நோக்கினான். அவனின் கோபம் இந்து ஆலயங்கள் மேல் வெடித்தது. பல ஆலயங்கள் அப்படி அகற்றப் பட்டன.
அதில் அயோத்தியில் இருந்த கோவிலும் சிக்கிற்று.
அப்பிராந்திய ஆளுநரான பதேகான் என்பவனிடம் அயோத்தியில் இருக்கும் இந்து ஆலயத்தை அகற்றச் சொன்னான். சுமார் 50 வருடமாக இருந்த அமைதி அந்த நொடியில் அழிந்தது.
எப்போதும் ஆபத்தை எதிர்பார்த்த இந்துக்கள் மறுபடி போரில் குதித்தார்கள். சுமார் 10 முறை அவுரங்கசீப் படைகளும் இந்துக்களும் மோதினார்கள்.
பெரும் போராக அது தொடர்ந்தது. திரும்பும் திசையெல்லாம் பகையினை உருவாக்கும் குணம் கொண்ட அவுரங்கசீப் எல்லா இடத்திலும் சண்டையிட்டதால் இதனை விட்டு விட்டு நடத்தினான்.
1664க்குள் 10 முறை அவன் பெரும் படை அனுப்பி 10ம் முறை வென்றான். வென்றவன் அங்கிருந்த அக்பர் கால ராமர் கோவிலை தரை மட்டமாக்கச் சொன்னான்.
பல லட்சம் இந்துக்கள் பலிகொடுத்து உருவான ஆலயம் இம்முறை மீண்டும் நாசமாயிற்று.
(இங்கேதான் பல வகையான தகவல்கள் உண்டு. அவை பல இடங்களில் உண்டு.
அதாவது பாபர், அயோத்தி எனும் மகா புனிதமான இடத்தில் தானும் வழிபட்டு தன்னை ஒரு இந்துஸ்தானியாக காட்ட விரும்பித்தான் அந்த இடத்தில் பங்கு கேட்டு ஒரு கட்டிடம் அமைத்தான்.
அது பள்ளிவாசல் அல்ல. மாறாக இந்துக்களில் நாங்களும் உண்டு எனக் காட்ட விரும்பி ஒரு சிறிய கட்டிடம் அமைத்தான் என்பது ஒரு ஆய்வு முடிவு.
இன்னொரு முடிவு இந்துக்களை ஒடுக்க அந்த இடத்தின் ஆலயத்தை அவன் தளபதி மீர்பாக்கி உடைத்தான். அங்கே ஒரு சிறிய கட்டிடம் கட்டி தங்கள் இடம் என்றான் என்பது இன்னொரு செய்தி.
முக்கிய செய்தி அவுரங்கசீப் காலத்தில் அவன் இந்துக்கள் கோவிலை அகற்றிவிட்டு இந்தக் கட்டிடத்தை பெரிதாகக் கட்டினான் என்பது. அதற்கும் வாய்ப்பிருக்கலாம்)
அவுரங்கசீப் அந்த வளாகத்தை பெரிதாக்கி இனி இங்கு பள்ளிவாசல் கட்டிடம் மட்டும் என நிலைப்பாட்டை எடுத்தான். அது தீரா போர்களுக்கு காரணமாயிற்று.
1660களில் ராமனின் ஆலயத்தை பாதுகாக்க களமிறங்கியவர்களில் முக்கியமானவர் ஸமர்த்த ராமதாசர். அனுமனின் அவதாரமாக நம்பப்படும் அவர் அயோத்திக்குச் சென்று, நிலமையினைக் கண்டு மனம் வருந்தினார். அங்கே ராமனின் ஜென்மபூமி நிலைக் கண்டு வருந்தினார்.
இந்துஸ்தானமெங்கும் இந்து எழுச்சி கொடுத்து வீரசிவாஜி போன்றவர்களை உருவாக்கிக் கொண்டிருந்த அவர், அயோத்தியில் தன் சீடன் ஸ்ரீ வைஷ்ணவ்தாஸ் என்பவரை நிறுத்தி விட்டுச் சென்றார்.
அந்த ஸ்ரீ வைஷ்ணவ்தாஸ் என்பவர் அடுத்த பெரும் போரைத் தொடங்கினார். பல ராஜபுத்திர சிற்றரசர்கள், சூரிய குலவம்ச மக்களைக் கொண்டு பெரும் எதிர்ப்பை மொகலாயருக்கு கொடுத்தார்.
அவுரங்கசீப்பின் படைகள் திணறத்தான் செய்தன. சுமார் 30 பெரும் தாக்குதல்கள் நடந்தன. விடாமல் அவன் படைகளைத் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தார்கள்.
இன்று பைசாபாத் என அழைக்கப்படும் இடம் அன்று சராய் என அழைக்கபட்டது. அங்கிருந்து சராய் ராஜா சர்தார் கஜ்ராஜ் சிங் என்பவரும் படையோடு கலந்து கொண்டார்.
இருவரும் இணைந்து பெரும் போரைத் தொடுத்தார்கள்.
(இன்றும் கஜ்ராஜ் சிங்கின் வாரிசுகள் அங்கு உண்டு)
ஆக்ரா பக்கம் இருந்து ரஜேபூர் சமஸ்தானமெல்லாம் போராட வந்தார்கள். ரஜேபூர் ராஜா குன்வர் ராஜா கோபால் சிங் பெரும் படையோடு வந்து கலந்துகொண்டார்.
சிர்சிந்தா ராஜா, தாகூர் ஜகதம்பா சிங் எனப் பல மன்னர்கள் கலந்து கொண்டனர். அவுரங்கசீப்பின் படைகளுக்கு பெரும் அழிவினைத் கொடுத்தார்கள். தென்கிழக்கே ஏழு மைலில் உள்ள சமஸ்தானம் இது.
ஆனால் மொகலாயருக்கு அராபியா, ஆபரிக்கா, துருக்கி, உஸ்பெக், ஆப்கன் என எங்கிருந்தெல்லாமோ இஸ்லாமிய அடிப்படையிலும் வளமான இந்துஸ்தான சம்பள அடிப்படையிலும் ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.
அவர்களை இப்படி இந்து சன்னியாசிகளும், சிறிய மன்னர்களும் கூடி எதிர்த்தார்கள். நிச்சயம் வெல்ல முடியாது எனத் தெரிந்தும் இது நீண்டபோர் எனத் தெரிந்தும் சாக முன் வந்தார்கள்.
காரணம், சாவது நாமாக இருந்தாலும் எரிவது இந்து உணர்வாக இருக்கட்டும் எனச் சொல்லி போரிட்டு செத்தார்கள்.
அவுரங்கசீப்பின் காலம் கொடியதாய் இருந்தது. அவன் அயோத்தியினை மட்டும் தொடவில்லை. அதுவரை இல்லாதக் கொடுமையாகக் காசி ஆலயம், மதுரா ஆலயங்களையெல்லாம் இடித்து பள்ளிவாசல் கட்டினான்.
எங்கும் பள்ளிவாசல் மட்டும் இருக்க வேண்டும் என்ற அவன் ஆசையினை அவசரமாக நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.
சூரிய குல க்ஷத்திரியர்கள் குடும்பம் குடும்பமாகப் போராடிச் செத்தார்கள். சாகச் சாக வந்து போராடிக் கொண்டே இருந்தார்கள். என்ன நடந்தாலும் அயோத்தியும் ராமனும் எங்களை விட்டுப் போகக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள்.
(இன்றும் அவர்கள் சந்ததி உண்டு. அவர்கள்தான் ஆலயம் கட்டப்படாதவரை தலைப்பாகை அணிய மாட்டோம், செருப்பு அணிய மாட்டோம். இம்மண்ணை மீட்காதவரை கால்களுக்கு செருப்பு இட மாட்டோம் என வைராக்கியமாக இருந்தவர்கள்.
இப்போதுதான் காலணியும் தலைப்பாகையும் அணியத் தயாராகின்றார்கள்.)
1665களில் அவுரங்கசீப் படைகளை முறியடித்த ஸ்ரீ வைஷ்ணவ்தாஸர் மீண்டும் ஒரு கோவிலைக் கட்டத் தொடங்கினார். கரசேவை என்பது அப்போதே தொடங்கிற்று.
நாடெங்கும் இருந்து பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். ஆலயமும் கட்டப்பட்டது. இதை அறிந்த அவுரங்கசீப் மீண்டும் அதை தரை மட்டமாக்க தன் தளபதி ஜம்பாஸ்கான் என்பவனை பெரும் படையோடு அனுப்பினான்.
பெரும்படை மீண்டும் இந்துக்களுக்காக திரண்டது. இம்முறை சாதுக்கள் பல்லாயிரம் பேர் களமிறங்கினார்கள். அவர்கள் கையில் சிமிட்டி எனும் விசேஷ ஆயுதம் இருந்தது.
இது பலராமாசாரி கற்றுக்கொடுத்த வித்தை. இன்னும் பல ரகசியப் போர்க் கலைகளை அவர் கற்றுக் கொடுத்திருந்தார். இது தமிழக பக்கம் வீசப்பட்ட வளறி போல் எதிரிகளை தாக்கிவிட்டு திரும்பும் வகையும் கொண்டது.
பல வகைகள் கொண்ட இந்த சிமிட்டி ஆயுதங்களை ஏந்தியவர்கள் சிமிட்டிதாரி சாதுக்கள் என அழைக்கப்பட்டார்கள்.
சிமிட்டிதாரிகள் பலராமாச்சாரி வழியில் திரண்டார்கள். இந்து மரபில் ஆன்மா அழியாதது, உடல் அழியக்கூடியது என்பதும், உடல் அழிந்தாலும் இன்னொரு பிறப்பை ஆத்மா எடுக்கும் என்பதும் அவர்கள் முழுக்க உணர்ந்தது.
இதனால் உடலை ஒரு பொருட்டாக எண்ணாமல், சாவை கொஞ்சமும் அஞ்சத்தக்க விஷயமாகக் கருதாமல் உடல் எடுத்ததே கர்மா செய்ய. கர்மம் என்பது அயோத்தி மீட்பது என ஆயுதங்களோடு வந்தார்கள்.
சுமார் இருபதாயிரம் வீரர்களோடு ஜம்பாஸ்கான் வேகமாக வந்தான். இவர்கள் குதிரைப்படையினர். மிக உயர்ந்தசாதி குதிரையில் இருந்து மின்னல் வேகத்தில் போராடும் மிகப் பெரிய பயிற்சி பெற்ற படையினர். சுமார் லட்சம் வீரர்களுக்குச் சமம்.
அவர்களை வெறும் கால்களோடும், கையில் சிமிட்டியோடும் சென்ற சிமிட்டிதாரி சாதுக்கள் ஸ்ரீ வைஷ்ணவ்தாஸ் தலைமையில் எதிர்த்தார்கள்.
அயோத்தி அருகே ஊர்வசி குண்ட் என்ற இடத்தில் இந்தப் போர் நடந்தது. இந்த சிமிட்டி ரக ஆயுதம் முன்னால் அதுவரை அதை எங்கேயும் கண்டதில்லை என்பதால் மொகலாய சேனை திணறிற்று.
சாதுக்கள் பத்தாயிரம் பேர் இருந்தார்கள். அவர்கள் மிக வலுவான மொகலாய குதிரைப் படையினை ஏழு நாட்களில் வீழ்த்தினார்கள்.
ருத்திராட்சமும் திருவோடும் கொண்டிருக்கும் ஆண்டிக் கூட்டம், வெறும் யாசகம் பெற்று நோஞ்சான் போல் அலையும் அந்த தாடிக்கார கூட்டம் சாதித்தது.
ஆண்டிகள் படை மொகலாயப் படையினை சிமிட்டிதாரி சாதுக்களாக வந்து வீழ்த்தியது என்பதை அறிந்து கொதித்தவன், ஔரங்கசீப் அடுத்து அனுப்பப் படையின்றி தவித்தான். காரணம் அவனுக்கு அவ்வளவு பெரும் போர்கள் இருந்தன.
1664 வரை நடந்த போர்களை திடீரென நிறுத்தினான் அவுரங்கசீப். இந்துக்கள் தங்கள் ஆலயத்தை தொடர்ந்தார்கள். அந்த மொகலாயக் கட்டிடமும் அப்படியே இருந்தது.
இனி படையெடுத்துச் சென்றால் வெற்றி இல்லை என உணர்ந்த அவுரங்கசீப் மாறுவேடத்தில் குழப்பத்தை விளைவித்தான். கொள்ளைக்கார கும்பல் பல இடங்களில் சூழ வந்த மொகலாயப் படை 1664ல் பெரும் கொலைகளைச் செய்தது.
அது கலவரம் போல நடந்தது. ஆனால் திட்டமிட்ட கலவரம், சுமார் பத்தாயிரம் இந்துக்கள் கொல்லப்பட்டார்கள். பொதுமக்கள் சாதுக்களெல்லாம் கொல்லப்பட்டார்கள்.
கொல்லப்பட்டவர்களால் அந்த ஜென்மபூமியின் கிழக்கே இருந்த கிணறுகளெல்லாம் நிறைந்தன. அவ்வளவுக்கு பெரும் அழிவு ஏற்பட்டது.
ஆனாலும் ராமர் சிலையினைத் தொட இந்துக்கள் விடவில்லை. ஸ்ரீ வைஷ்ணவ்தாஸ் பிரதிஷ்டை செய்த சிலையும் சன்னதியும் அப்படியே இருந்தன.
இந்துக்கள் சுதாரித்து பதிலடி கொடுக்க கொள்ளை கலவரக்கும்பல் ஓடிற்று என்றாலும், அழிவுகள் அதிகம் இருந்தன.
இதன் பின் அவுரங்கசீப்பின் கவனம் வீரசிவாஜி, காசி மதுரா ராஜபுத்திரருடன் போர் என் திசைமாறியதால் இப்பக்கம் அதிகம் வரவில்லை. ஆனால் மொத்த இந்துக்களையும் பகைத்து ஆப்கானில் இருந்து வந்த ஆட்களால் சுத்தமான இஸ்லாமிய சேனையாக தன் ராணுவத்தை அவன் மாற்றி சிவாஜிக்கும் சாம்பாஜிக்கும் பின்னரான 1690களில் மறுபடியும் இப்பக்கம் வந்தான்.
ஆனால் இம்முறை சீக்கியர்கள் அயோத்திக்கு காவலுக்கு வந்தார்கள். நிஹங்கர்கள் எனும் அவர்கள் வீரர்கள் இந்துக்களுக்கு துணையாக வந்தார்கள்.
இம்முறை விடக்கூடாது என சுமார் ஐம்பதாயிரம் வீரர்களுடன் அவுரங்கசீப் சையத் ஹாசன் எனும் தளபதி தலைமையில் பெரும் படை அனுப்பினான்.
ஆனால் டில்லியில் இருந்த சீக்கியர் மற்றும் இந்து உளவாளிகள் விஷயத்தை அயோத்திக்குச் சொன்னார்கள். முதியவராய் இருந்தாலும் ஸ்ரீ வைஷ்ணவ்தாஸர் போருக்குத் தயாரானார்.
அந்நேரம் ஆக்ரா அருகே சீக்கியரின் பத்தாம் குருவான கோவிந்த் சிங் வந்திருந்தார். அவர் தன் படையோடு அயோத்திக்கு வந்தார். சரயு நதியோரம் பிரஹ்ம குண்டம் பக்கம் அவர் படை தங்கியிருந்தது.
சுமார் 5 ஆயிரம் ராஜபுத்திர வீரர்கள், பத்தாயிரம் சிமிட்டிதாரி சாதுக்கள், ஐந்தாயிரம் சீக்கியர்கள் என இருபதாயிரம் பேர் திரண்டார்கள்.
சீக்கிய குரு கோவிந்த்சி ங்கும் ஸ்ரீ வைஷ்ணவ்தாஸரும் இணைந்து அற்புதமான வியூகம் ஒன்றை அமைத்தார்கள். அதன்படி படைகளை மூன்றாகப் பிரித்தார்கள்.
முதல் படையினை அயோத்தியிலிருந்து 40 மைல் தொலைவில் உள்ள ருடாலி பக்கம் காட்டுகளில் நிறுத்தினார்கள்.
அதை அடுத்து இன்னொரு படையினை அயோத்தியில் இருந்து 10 மைல் தொலைவில் நிறுத்தினார்கள்.
மூன்றாம் அடுக்காக சிமிட்டிதாரிகளை அயோத்தியினை அண்டிய காடுகளில் நிறுத்தினார்கள்.
முதல் படைக்கான உத்தரவு மொகலாயரை தாக்க வேண்டும். மறைந்திருந்து தாக்கிவிட்டு பின் பின்வாங்கி வந்து இரண்டாம் கட்டப் படையுடன் சேர்ந்துகொள்ள வர வேண்டும்.
இரண்டாம் கட்டப்படை புலிபோல் பதுங்கி இருக்க வேண்டும். மொகலாயப் படை தங்களைக் கடந்து செல்லும் போது தடுக்கக் கூடாது.
மூன்றாம் படையான சாதுக்கள் படை சரபத் காடுகளில் இருந்து தாக்கவேண்டும்.
ஒருவகையில் மொகலாயரை உள்ளேவிட்டு பின் சூழ்ந்து கொண்டு வலிய நொறுக்கும் வியூகம் அது. அப்படி ஒரு வியூகத்தை மொகலாயப் படைகள் எதிர் கொண்டதில்லை.
திட்டப்படி சையது ஹாசன் முதல் எதிர்ப்பை அயோத்திக்கு வரும் வழியில் 40 மைல் தொலைவில் கண்டான். ஆனால் இந்துக்கள் படை தோற்று ஓடுவது போல் ஓடியதால் இது தன் வெற்றி என ஆர்ப்பரித்து வேகமாக முன்னேறிச் சென்றான்.
அவன் செல்வதை இரண்டாம் அடுக்குப் படை மறைவாக இருந்து கவனித்து பதுங்கியது.
அயோத்தி அருகே அவர்கள் வரும்போது சிமிட்டி சாதுக்கள் படை களத்தில் இறங்கி மிரட்டியது. சையது ஹாசன் மிரண்டே போனான்.
அதே நேரம் நாலா பக்கமும் வந்த படைகள் பின்னால் இருந்து சூழ்ந்து கொண்டன. பெரும் முற்றுகைக்குள் எலி போல் மாட்டியது மொகலாயப் படை.
சிமிட்டி தாக்குதலில் மொகலாயப்படை நிலை குலைந்தது. ஒரு கட்டத்தில் சாது ஒருவரின் குறிதவறா வீச்சில் சையது ஹாசன் சரிந்தான். அவனைச் சரித்த சிமிட்டி, சாதுவின் கைகளுக்கே சென்றது.
அந்தக் காட்சியினைக் கண்டதும் ஏதோ மாயாவியினைக் கண்டதுபோல் மொகலாயப் படை கலகலத்தது. தலைவன் கொல்லப் பட்டால் சேனை எளிதில் சிதறும். அப்படிச் சிதறிய மொகலாயப் படை முறிய அடிக்கபட்டது
வாழ்க்கையில் எவ்வளவோ அவமானங்களை சந்தித்தவன் அவுரங்கசீப். இந்துக்கள் கொடுத்த அடி அம்மாதிரியானது. ஆனால் சாதுக் கூட்டம் கொடுத்த அவமானத்தைப் போல் அவன் எங்கும் வாங்கியதில்லை.
கடைசியில் வெறும் 47 மொகலாயரே தப்பி டெல்லிக்குச் சென்றார்கள்.
நடந்ததை கேள்விப்பட்ட அவுரங்கசீப் அப்படியே அமைதியானான். அவன் அப்போது அந்திம காலத்தில் இருந்தான். வீரசிவாஜி காலமாகி, சாம்பாஜியினைக் கொன்று தமிழகம் வரை அவன் கைப்பற்றி அவன் கனவு கண்டபடி மொத்த இந்துஸ்தானத்தையும் பிடித்ததாகக் கருதினாலும், வந்த எதிர்ப்புகளைக் கண்டு அரண்டே போனான்.
ஒருபக்கம் சிவாஜி மருமகள் தாரபாய், இன்னொரு பக்கம் ராஜ புத்திரர்கள், ஒரு பக்கம் சீக்கியர்கள் என பெரும் போருக்குள் சிக்கியவன், அயோத்தியில் சாமியார்களே தன் படையினை துவம்சம் செய்கின்றார்கள் என்பதை அறிந்து தான் கனவு கண்ட இஸ்லாமிய இந்துஸ்தானம் நடக்காத ஒன்று எனும் கவலையிலே மரித்தான்.
அவன் மறைந்தாலும் அவன் வாரிசுகள் கொஞ்சம் ஆடின. மழை விட்டாலும் தூறல் விடவில்லை என்பது போல பல போர் மிரட்டல்கள் வந்தன.
ஆனால் வைஷ்ணவதாசர் கட்டிய சிறிய ஆலயமும் அந்த பால ராமன் சிலையும் அப்படியே இருந்தது. 1707ல் அவுரங்கசீப் இறந்தபோதும் அது இருந்தது.
காசியிலும் மதுராவிலும் இந்து ஆலயங்களை அழித்து பள்ளிவாசல் கட்டி, சோம்நாத் உஜ்ஜைனியிலும் அதையே செய்து எல்லா இடமும் இந்து ஆலயம் இனி இல்லை, பள்ளிவாசல் மட்டுமே உண்டு என்ற நிலையினை அவுரங்கசீப் உருவாக்கி வைத்திருந்தாலும், அயோத்தியில் அவனால் நினைத்ததை செய்ய முடியவில்லை.
சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராமஜென்ம பூமி கோவில் வளாகத்தின் மையத்தின் முக்கிய இடத்தில் அந்த கட்டடம் பாபர் காலத்தில் சிறியதாக ஸ்தாபிக்கபட்டது. தன் முதல் வெற்றியில் அவுரங்கசீப் அதனை இரு ஏக்கர் வருமளவு பெரிதாக்கினான்.
இந்துக்கள் சில அடி அகலமும் நீளமும் கொண்ட சிறிய கருவறையினை ஸ்தாபித்து பாலராமர் சிலை வைத்து வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்தச் சிறிய இடத்தையும் கொடுக்க மாட்டேன் என வரிந்து கட்டிய அவுரங்க்சீப் போராடிச் செத்தான். அவன் ராமன் ஆலயத்துக்கு அஞ்சவில்லை. மாறாக, அது கொடுத்த இந்து எழுச்சிக்கு அஞ்சினான்.
அந்த எழுச்சியினை ஒடுக்க அந்த சிறிய கோவிலையும் அகற்றியாக வேண்டும் எனக் கடுமையாக முயன்றான். அது முடியாமலே மறைந்தான்.
பலராமாச்சாரி எனும் மலையாள குரு அப்படியான பெரும் போர்க்கலையினை அங்கே கற்றுக் கொடுத்திருந்தார். பெரும் படையினை தயார் செய்திருந்தார். அதுதான் அவருக்குப் பின்னும் இந்து எழுச்சி அணையாமல் தாங்கிக் கொண்டிருந்தது.
அராபியா, துருக்கி என எங்கிருந்தெல்லாமோ வந்த மகாப் பெரிய கொம்பன்களையெல்லாம் அந்த குருவின் போர்க்கலையும் ஆயுதமும் சரித்துப் போட்டு இந்துமதம் காத்தது.
சாதுக்கள் நிகழ்த்திய அந்த வீரப்போர்தான் அயோத்தி எனும் உணர்வை கொடுத்து, அங்கு மட்டும் ஒரு சிறிய இந்து ஆலயம் இருக்குமாறு காத்தது.
அந்த மிகச்சிறிய ஆலயத்தின் சுடர்தான் பின்னாளில் அவுரங்கசீப் தடையமின்றி அழித்து பள்ளிவாசலாக்கிய காசி, மதுரா, உஜ்ஜையினி, சோம்நாத் ஆகிய ஆலயங்களை மீட்கும் பெரும் நெருப்பாக எழும் என்பதை காலம் மட்டும் அறிந்திருந்தது.
அவுரங்கசீப் இல்லை, வீரசிவாஜி இல்லை, ராமதாசரும் வைஷ்ணதாஸும் இல்லை, குரு கோவிந்த்சிங்கும் இல்லை.
ஆனால் அந்தப் போராட்டம் இந்து உணர்வாய் மறுபடி எழுந்தது. குழப்பமான அந்தக் காலக்கட்டத்தில் மறுபடியும் சோதனை வந்தது. 200வது ஆண்டாக விடாப்பிடியாகத் தொடர்ந்து போராடத் தொடங்கினார்கள் இந்துக்கள்.
(தொடரும்..)
( குரு கோவிந்த்சிங் மொகலாய படைகளை தானே நேரில் வந்து விரட்டும்போது தங்கிய ப்ரஹ்ம குண்டம் எனும் இடம் இப்பொழுது குருத்வாராவாக உள்ளது.
ஜனவரி 22 அன்று முதல் அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு மூவேளையும் உணவளிக்க அது அரசிடம் அனுமதி கோரியுள்ளது. அது கொடுக்கப்படும் என்பதும் தெரிகின்றது.
குரு கோவிந்த்சிங்கும் சீக்கியர்களும் காசியினைப் போலவே அயோத்தியிலும் இந்துக்களுக்கு துணையாக நின்றார்கள் என்பதன் சாட்சி அது.
அந்த குருத்வாராவில் இருந்து கோவிந்த்சிங் எப்போதும் ராமன் ஆலயத்துக்கு சாட்சியாக துணையாக காவல் இருப்பார். அவர் அருகே சுவாமி வைஷ்ணவதாஸும் நின்று அந்த பூமியினை காத்துக் கொண்டே இருக்கின்றார்.)




