ஆத்திச் சூடி
ஆத்திச் சூடி : 01
ஆத்தி மரம் இந்து மரபில் முக்கியமான பங்குடையது. அந்த மலரின் பூவினை சிவபெருமான் விரும்பி அணிவார் என்பது ஐதீகம். அம்மரம் பல சிவத் தலங்களில் தலவிருட்சமாகவும் உண்டு.
ஆத்திமரமே ஆர் மரம் எனப்பட்டது, இந்த ஆர் மரங்கள் நிறைந்திருந்த பகுதிகள்தான் ஆரப்பாக்கம், ஆரப்பாளையம், ஆரூர் (திருவாரூர்), ஆற்காடு என்றானது.
இந்த ஆத்திப் பூவினை அணிந்த சிவனுக்கு சமர்ப்பணமாக ஒளவையார் பாடிய தமிழ்ப் பாடல்தான் “ஆத்திச் சூடி”.
தமிழ் மொழியினை உருவாக்கியவர் சிவபெருமான்; இதனால் தமிழின் உயிரெழுத்து, வல்லினம், மெல்லினம், இடையினம் என எல்லாம் கலந்து தமிழ்மாலையாக அவர் சாற்றியது இப்பாடல்.
இதனை ஒளவையார் பாடினார் என்பதை விட சிவனே ஒளவை மூலம் மக்களுக்கு போதித்தார் என்பதுதான் சரி.
இது முழுக்க இந்து ஞானப்பாடல். தமிழ் எனும் மொழி மூலமாகப் பரம்பொருள் சொன்ன பாடல். இது தமிழ், தமிழர் என்ற வரையறைக்குள் வராது. இந்துவாக இருந்து அந்த இனம் பேசிய மொழிதான் தமிழே தவிர, அவர்கள் வணங்கிய மதம் இந்துமதம் தான்.
ஆக இந்துமத பெருங் கடவுள் சிவனே, ஒளவையார் மூலம் வழங்கிய பாடலை, ஒளவை சிவனுக்கு சாற்றி, பாடி உலக மாந்தருக்கு போதனை சொன்ன பாடலை, இப்போது காணலாம்.
முதல் வரி “அறம் செய்ய விரும்பு” என்பது.
இந்துமதப் பெரும் போதனை, அல்லது ஒரே பெரும் போதனை – எல்லா உயிர்களிடத்தும் அன்பு என்பது, அன்பே சிவம் என்பது அதுதான்.
அந்த அன்பினை வெளிகாட்டும் விதமாகவே அறக்காரியம், அதாவது பலன் கருதாமல் பிற மாந்தரும் உயிர்களும் இன்புற்றிருக்க எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ, இருப்போர் இல்லாதவர்க்குக் கொடுத்து சமத்துவ சமதர்ம பூமியாக வாழ அது வலியுறுத்திற்று.
இதனால், அறம் செய்வதை அது போதித்தது.
ஒளவை இங்கு அறம் கண்டிப்பாய் செய் என போதிக்கவில்லை. உன்னால் முடியாவிட்டாலும் அந்த விருப்பத்தையாவது கொண்டிரு; இன்னொருவர் அறம் செய்யும்போது உதவி செய், உன்னால் முடிந்ததை செய் என்பதைச் சொல்லி “அறம் செய்ய விரும்பு” என்றாள்.
இல்லறம் , துறவறம் என இருபெரும் அறங்களை இந்துமதம் போதித்தது.
ஒரு நதி இரண்டாகப் பிரிந்து நடுப்பகுதியின் நிலத்தை இருபக்கமும் செழிக்கச் செய்வது போல, இந்த இரு அறங்களை இந்துமதம் சொன்னது.
அப்படியே பொதுவான அறங்களை, அதாவது இல்லறத்தாரும் தங்களால் செய்யமுடிந்த, துறவிகளும் செய்யக் கூடிய அறங்களை, முப்பத்தி இரண்டு அறங்களாகச் சொன்னது.
இதோ அந்த முப்பத்தி இரண்டு அறங்கள்.
1) ஆதுலர்க்கு சாலை (மருத்துவமனை) அமைத்தல், 2) ஓதுவார்க்கு உணவு, 3) மாந்தர்க்கு உணவு, 4) பசுவுக்கு உணவு, 5) சிறையில் இருப்போருக்கு உணவு, 6) இல்லாதோருக்கு ஈகை, 7) வழிப்போக்கருக்கு உதவுவதல், 8)அறவைச் சோறு எனும் ஆதரவற்ற அனாதைகளுக்கு உணவளித்தல்,
9) மகப்பேறுவித்தல் எனும் பெண்கள் பிரசவிக்கும் நேரத்தில் அவர்கள் உடனிருந்து தேவையான உதவிகளைச் செய்தல், 10) மகவு வளர்த்தல் எனும் குழந்தைகளைப் பராமரித்து அவர்களை வளர்ப்பதில் உதவுதல், 11) மகப்பால் வார்த்தல் எனும் தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்குப் பாலளித்தல், 12) அறிவைப் பிணம் எனும் அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் இறந்த உடலுக்கு ஈமச்சடங்கு செய்து தகனம் செய்ய உதவுதல், 13) அறவைத் தூரியம் எனும் ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காத்தல், 14) சுண்ணம் எனும் தாம்பூலம் தரிப்பவர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்து உதவுதல், 15) நோய்மருந்து எனும் நோயில் தவிப்பவர்களுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுதல், 16) வண்ணார் எனும் ஏழை எளியோருக்குத் துணி துவைக்க உதவுதல் அதாவது கூலி கொடுத்தல்,
17) நாவிதர் அதாவது ஏழை எளியோருக்கு முடிவெட்டிக்கொள்ள, முகச்சவரம் செய்ய உதவுதல் (நாவிதர்களின் கூலியையும் உடனே தந்துவிடவேண்டும். தாமதிப்பது பாபம்.), 18) கண்ணாடி எனும் உதவி ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்தி சரி செய்துகொள்ள கண்ணாடி கொடுத்து உதவுதல், 19) காதோலை : பெண்கள் காதணியில்லாது (தோடு) இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுதல், 20) கண்மருந்து எனும் பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக்கொள்ள கண்மை அளித்தல், 21) தலைக்கு எண்ணை எனும் பரட்டை தலையோடு இருக்கும் ஏழை எளியோருக்கு தலைக்கு தேய்த்துக் கொள்ள எண்ணை வாங்கிக் கொடுத்தல், 22) பெண் போகம் எனும் தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்துத் தருதல், 23) பிறர் துயர் தீர்த்தல் எனும் காயமோ நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு உதவுதல், 24) தண்ணீர்ப் பந்தலெனும் தாகத்தால் தவிப்பவர்களுக்குத் தண்ணீர் தந்து உதவுதல்
25) மடம் அமைத்தல் அதாவது வழிப்போக்கர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, குளிக்க, இயற்கை உபாதையை தணித்துக்கொள்ள சாலையோரங்களில், விடுதி அமைத்தல், 26) தடம் எனும் தடாகம், வழிப்போக்கர்கள் நீர் அருந்தி இளைப்பாற குளம் தோண்டுதல், அவற்றை பராமரித்தல் 27) சோலை எனும் நிழல் தரும் மரங்கள் மற்றும் பூஞ்சோலை அமைத்து அவர்கள் தங்கி இளைப்பாற உதவுதல், 28) ஆ உராய்ஞ்சிக்கல் நிறுவுதல் எனும் பசுக்கள் மேயும் இடங்களிலும், பசு கொட்டில்களிலும் அவை தங்கள் உடலை தேய்த்துக்கொள்ள பசு உராய்ஞ்சிக்கல் நிறுவதல், 29) ஏறு விடுதல் எனும் பசுக்களைச் சினைப்படுத்த தரமான எருதுகளைக் கொடுத்து உதவுதல் மற்றும் எருதுகளைப் பேணுதல், 30) விலங்கிற்கு உணவு எனும் பல்வேறு விலங்கினங்கள் பசியாற உணவைக் கொடுத்து உதவுதல், 31) விலை கொடுத்து உயிர் காத்தல், அதாவது கொலைக்குச் செல்லும் உயிர்களை வாங்கிக் காத்தல், 32) கன்னிகா தானம் அதாவது வரன் தேடிக் கொடுத்து உதவுதல். ஏழைப் பெண்களின் திருமணத்திலும் திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்கும் திருமணம் செய்து வைத்து உதவுதல்.
என 32 அறங்களைச் சொன்னார்கள்.
இந்துமதம் எனும் சனாதான தர்மம் என்றோ பொதுவுடமை பேசிய மதம். தான தர்மம் செய்து சமத்துவ சமூகத்தை உருவாக்கிய மதம். இல்லாதோர்க்கு இருப்போர் உதவி செய்து மானிட நேயம் காத்த மதம்.
இந்த 32 அறங்களும் இன்று மேல்நாட்டு பாணியில் வியாபாரமாகிவிட்டதைக் காணலாம்.
இந்த அறங்கள் தான் இன்று ஹோட்டல், தங்கும் விடுதிகள், மருத்துவ மனைகள், மணமக்கள் தளங்கள் என எல்லாமே காசுகொட்டும் வியாபாரமாகிவிட்டன.
மேல்நாட்டு வாழ்வியல் இதுதான். எல்லாமே பணம், எல்லாமே தொழில்.
ஆனால் இந்து சனாதான தர்மமோ எது அறம் எது தொழில் என்பதைப் பிரித்துச் சொன்னது. கொல்லன், விவசாயம், போக்குவரத்து, நகை, நெசவு எனப் பலவற்றை தொழில் என சொன்னது இந்துமதம். காரணம் அவற்றுக்கான பணம் கொடுக்கபட வேண்டும்.
ஆனால் அறக்காரியங்களுக்கு பணம் வாங்கும் வழமை இந்துமரபில் இல்லை. அப்படி வாங்கினால் அது ஒரு பக்கம் செழுமையும், ஒரு பக்கம் வறுமையும் கொண்ட ஆபத்தான சமூகத்தை உருவாக்கிவிடும் என்பதால், அது அறக்காரியங்களைப் பலன் எதிர்பாராமல் செய்யச் சொன்னது.
இன்று இந்த உலக வாழ்க்கை முறை, எல்லாமே பணம் என மாறிவிட்டதற்கு மேல்நாட்டு பணமோக வாழ்வியல் முறைதான் முதல் காரணம்.
இந்து சனாதான தர்மப்படி வாழ்ந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
இந்த சனாதன தர்ம வாழ்வு வாழ்ந்தால், அம்முறையில் வாழ்ந்தால், அங்கே மானிட நேயம் தளைத்தோங்கும்; எங்கும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும். அங்கு கையேந்தும் யாசகத்துடனோ, ஏழ்மையானவர்களோ, அனாதைகளோ, பசி பட்டினியுடனோ யாரும் இருக்க மாட்டார்கள்.
அந்நியர் படையெடுக்கும் முன் பூரண இந்துபூமியாக இருந்தபோது இந்த இந்துஸ்தான் ஏழைகள் இல்லாமலும், யாசகம் கேட்கும் அபலைகள் இல்லாமலும், எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ்ந்து, இந்துஸ்தானம் பெரும் பணக்கார நாடாக இருக்கக் காரணமே இந்த அறங்கள்தான்.
இந்துக்கள் இந்த 32 அறங்களையும் இலவசமாக தானமாகச் செய்ததாலேயே அக்கால சமூகம் அவ்வளவு பெரும் பணக்கார சமூகமாக விளங்கிற்று. பெரும் ஆலயங்களும், பெரும் கொண்டாட்டமும், பொன்னும், பொருளும் குவிய இதுதான் காரணமும் ஆயிற்று.
சனாதன தர்மம் அப்படியான மானுட தர்ம வாழ்வியல், மானிட சமூகத்தை வாழ்வாங்கு வைக்கும் ஞானமுள்ள வாழ்க்கை முறை.
அந்த சனாதன தர்மத்தின் வாழ்வியலின் முதல் போதனையாக “அறம் செய்ய விரும்பு”, முடிந்ததை செய்; முடியாவிட்டாலும் விருப்பத்தை மட்டும் விடாதே. இச்சமூகம் மானுடத்திலும் அன்பிலும் வாழ அறம் முக்கியம். அதைத்தான் சிவபெருமான் சொல்கின்றார்.
உனக்கு சிவன் படியளக்கும்போது நீ அடுத்த உயிர்க்கும் படியளப்பதுதான் தர்மம். அந்த தர்மத்தைச் செய்ய, அறத்தைச் செய்ய முயன்றுகொள் என்கின்றார்.
குடிக்கும் நீருக்கு கூட காசுவாங்கும் கொடிய வாழ்வியல் முறை மேற்கினுடையது. அது இந்து தர்மத்துடையது அல்ல, துரதிருஷ்டவசமாக நாம் அதில் சிக்கிவிட்டோம்.
அதை எல்லாம் என்று மீட்டு இந்த அறங்களை இந்த உலகம் பின்பற்றுமோ, அன்று தான் சமத்துவ சமுதாயம் அமையும். சனாதன தர்மம் ஒன்றுதான் அதைச் செய்யமுடியும், வேறு யாராலும் முடியாது.
இந்த 32 அறத்தில் ஒரு அறத்தை சிவநாமத்தில் செய்துபாருங்கள். பரம்பொருளின் எல்லா கருணையும் அருளும் உங்களைத் தேடிவரும், உங்கள் குலமே செழிக்கும், இந்த உலகமும் ஊரும் செழிக்கும் அது சத்தியம்.
ஆத்திச் சூடி : 02
“ஆறுவது சினம்”
சினம் என்பது ஒருவனை நிலை குலைத்துவிடும், அவன் குணத்தை மாற்றிவிடும், அவன் சிந்தை, குணம், மனம் என எல்லாம் அழித்துவிடும், ஆத்திரமுற்ற ஒருவன் தன்னிலை மறப்பான், ஆத்திரத்தில் அவன் செய்யும் தவறுகளெல்லாம் அவனை வீழ்த்திவிடும் என்கின்றார் ஒளவையார்
ஒளவைக்கே உரித்தான கவிநயத்தில் ஆறுவது சினம் என்கின்றார், அதாவது சினம் என்பது ஒருவனை கொதிக்க வைப்பது, அவன் ரத்தவோட்டம் மூச்சு காற்று என எல்லாவற்றையும் கொதிக்கவைப்பது
அது உடலுக்கும் மனதுக்கும் கேடு என்பதால் அதை ஆற்ற வேண்டும், “ஆறுவது சினம்” என்கின்றார் ஒளவையார்
ஆத்திரத்தால் பேச்சிலும், மூச்சிலும், சிந்தையிலும், ரத்தத்திலும் ஏற்படும் கொதிப்பினை ஆற்ற வேண்டும் ஆறவேண்டியது சினம் என்கின்றார்
சிவனின் மொழியாக ஒளவை அதை சொல்கின்றார்
சங்க பாடல் ஒன்று உண்டு
“ஆறாச் சினத்தன் அறிவு இலன் மற்று அவனை
மாறி ஒழுகல் தலை’ என்ப ஏறி
வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப!
தெளியானைத் தேறல் அரிது”
காற்றால் எழும் அலைகள் கரையினை அடையும் கடலை உடைய நாட்டுகாரனே, தீரா சினம் கொண்ட மூடனை விட்டு விலகி இருப்பது முதன்மையான விஷயம் , தெளிவு இல்லாத அவனுடன் இணங்கி இருக்க முடியாது என்பது பாடலின் பொருள்
தீராத கோபம் கொள்பவன் மூடனாக இருப்பான், அந்த மூடனுடன் இணங்கி இருந்தால் பெரும் தொல்லை ஏற்படும் பேராபத்தும் ஏற்படும் என்பதால் அவனை விட்டு விலகி இருத்தல் நன்று என்கின்றார் புலவர்
ஆம், சினமுடைய ஒருவனுடன் பழகினால் பல விபரீதம் ஏற்படும் என்பதை “சினமெனும் சேர்ந்தாரை கொல்லி” என்பது பழமொழி
அப்படியே “ஆத்திரகாரனுக்கு புத்திமட்டு” “ஆத்திரமாக செய்துவிட்டு சாவகாசமாக சங்கடபடாதே” என்பதும் பழமொழி
விதுரநீதி கூறுகிறது.சினம் தோன்ற பல காரணிகள் உண்டு. இயலாமை, ஆற்றாமை, தனிமை, வெறுமை, தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றம், கழிவிரக்கம், புறக்கணிப்பு, மன அழுத்தம் என இவையனைத்தும் சினம் ஏற்படுவதற்கு சாதகமான காரணிகள என்கின்றது.
“தெறுவந்தும் தம் குரவர் பேர் உரையார் இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர் பெரியாரை
என்றும் முறை கொண்டு கூறார் புலையரையும்
நன்கு அறிவார் கூறார் முறை”
அதாவது கடும் சினம் வந்தபொழுதும் பெரியோரை பெயர் சொல்லி அழைக்ககூடாது, மனைவியிடம் சினம் கொண்டால் நீண்ட நேரம் பேசாமல் இருக்க கூடாது, பெரியார்களை மரியாதையான முறை இல்லாமல் பேசகூடாது, சிறிய புல்லறிவாளர்கள் என்றாலும் பேசும் முறை கடந்து பேச கூடாது என்பது நல்ல நெறி என்கின்றது பாடல்
பெரியோரிடம் பகைத்தால் சமூக வாழ்க்கை கெடும், மனைவியுடன் சண்டையிட்டால் இல்லறம் கெடும் இந்த இரண்டு வாழ்வும் கெட்டுவிட்டால் இரண்டையும் பகைத்துகொண்டால் அவன் வாழ்வே வீணாகும்
சினத்தால் ஏற்படும் சீரழிவினை திரிகடுகம் பாடல் சொல்லுகின்றது
“”தன் பயம் தூக்காரைச் சார்தலும், தான் பயவா
நன் பயம் காய்வின்கண் கூறலும், பின் பயவாக்
குற்றம் பிறர் மேல் உரைத்தலும், – இம் மூன்றும்
தெற்றெனவு இல்லார் தொழில்”
தனக்கு உதவி செய்யாதவரை சேர்தல்,பலனற்ற சொற்களை பேசுதல், பிறரை அடிக்கடி குற்றம் சொல்லுதல் ஆகியவை சினம் கொண்ட அறிவிலாதவர் செய்கையாகும் என்பது பாடலின் பொருள்
“ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு” என்பது இதனால்தான்
இந்துமதம் ஆத்திரத்தால் ஒருவன் என்னென்ன இழப்பான் என்பதை புராணங்களாக சொன்னது, முன்கோபம் எனும் பெரும் குறை கொண்டோர் என்ன நிலைக்கு ஆளாவார்கள் என்பதை வாலி கதையில் சொன்னது, ராவணன் என பலர் வாழ்வில் சொன்னது
மாபெரும் ஆற்றல் வாய்ந்தவர்கள் என்றாலும் தீரா கோபம் கொண்டதால் வீழ்ந்தார்கள் என்பதை சொல்லி “ஆறவேண்டியது சினம்” என போதித்தார்கள் இந்துக்கள்
பொறுத்தார் பூமியாழ்வார் என பொறுமையின் சிறப்பினை சொல்ல ராமனை சொன்னார்கள், பஞ்ச பாண்டவர்களை சொன்னார்கள்.
அதைத்தான் “ஆறுவது சினம்” என இங்கே போதிக்கின்றார்.
ஆத்திச் சூடி : 03
“இயல்வது கரவேல்”
உன்னால் முடிந்த தானத்தை மறைக்காமல் செய், கரவேல் என்றால் கரங்களை மறைக்காதே என பொருள் கரத்தல் என்றால் கொடுக்காமல் இருத்தல் என பொருள், உன்னால் என்ன முடியுமோ அதை மறைக்காமல் செய் என்பது இந்த வரியின் பொருள்
“கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு” என அது நேரடி அர்த்தமாகின்றது
இந்துமதம் சாத்வீகமானது அது யாருக்கும் எதையும் கட்டளையிடாது, மிரட்டாது, அச்சுறுத்தாது. அது மிக மென்மையாக அறிவுரையினை சொல்லும், அப்படி உன்னால் முடிந்ததை மறைக்காமல் செய் அது தர்மம் அதுவே அறம் என போதிக்கின்றது
கண்டிப்பாக செய் என அது சொல்லவில்லை, உன்னால் முடிந்ததை மறுக்காதே என மென்மையாக சொல்கின்றது
முடிந்த உதவியினையும் செய்யாமல் , தன்னிடம் 100 மூட்டை அரிசி இருந்தாலும் ஒரு மூட்டையினை கூட தானமாக கொடுக்காதவர், பல கோடி பணமிருந்தும் சல்லி காசு ஈயாமல் இருப்பவர்கள் பாவத்தை செய்கின்றார்கள்
அந்த பாவத்துக்கான தண்டனை நிச்சயம் உண்டு, இவ்வுலகில் தன்னால் முடிந்த உதவியினை செய்யாதது தான தர்மம் செய்யாதது பெரும் பாவம் என்கின்றது இப்பாடல்
இதையே அப்பர் சுவாமிகளும் ஒரு பாடலில் பாடுவார்
“இரப்பவர்க்கு ஈய வைத்தார்;
ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கு எல்லாம்
கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர்க் கங்கை தன்னைப்
படர் சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே”
அதாவது தலைவராகிய இறையனார் பிச்சை எடுப்பவருக்கு வழங்கும் உள்ளத்தை நன்மக்களுக்கு அருளியவராய், அங்ஙனம் கொடுப்பவர்களுக்குத் தம் அருளை வழங்கியவராய், நிறைய வைத்துக் கொண்டு இரப்பவர்களுக்கு வழங்காது மறைப்பவர்களுக்குக் கொடிய நரகத் துன்ப நுகர்ச்சியை வழங்குபவராய், பரவிய நீரை உடைய கங்கையைப் பரந்த சடையின் ஒரு பகுதியில் வைத்தவராய், இராவணனுக்கு அருள் செய்தவராய் விளங்குகின்றார்.
ராவணன் கடைசியில் ராமனோடு மோதி அழிந்தாலும் முன்பு தான தர்மங்களில் சிறந்து விளங்கினான் அதனாலே சிவனருள் பெற்றான் என்பதை சூசகமாக சொல்கின்றார் அப்பர் சுவாமிகள்
முடிந்த உதவிகளை செய்யாமல் வாழ்வோர்க்கு நரகம் நிச்சயம் என்பது அப்பர் சுவாமிகள் வாக்கு
புறநானூற்று பாடல் ஒன்று உண்டு
ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்என மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கில் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல்; அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில்…”
அதாவது கொடுக்க முடிந்ததைக் கொடுக்கின்றேன் என்று தருவதும், கொடுக்க இயலாததைத் தருவதற்கு இல்லை என்று கூறித் தர மறுப்பதும் ஆகிய இரண்டுமே, நல்ல உயர்ந்த நட்புக்கான அடையாளங்கள். தர முடியாததைத் தருவதாகச் சொல்லுவதும், தரக் கூடியதைக் கூட இல்லை என மறுப்பதும் ஆகிய இரண்டுமே இல்லை என்று வருவோரை மிகவும் வருந்தச் செய்யும். மேலும், இவை தருவோர் பெறுகின்ற புகழை அடைக்கும் வாயில்களும் ஆகும, இவை பெரும் பாவங்களுமாகும்
ஆக முடிந்ததை முடியாது என சொல்லி மறுப்பது பெரும் பாவமாகும், புராணத்தில் பெரும் உதாரணமாக துரியோதனன் சான்றாக நிற்கின்றான் , வாலி கூட அந்த சாயலே
அவர்களால் சில விஷயங்களை செய்திருக்க முடியும் என்றால் முடியும், ஆனால் அவர்களால் முடிந்திருந்தும் செய்ய மனமில்லாமல் தவிர்த்தார்கள் அழிந்தார்கள்
அதைத்தான் இந்த பாடலும் சொல்கின்றது, உன்னால் முடியாததை செய்யாவிட்டால் அது பாவமல்ல, ஆனால் உரிய இடத்தில் உரிய பொருளுடன் இறைவன் உன்னை வைத்திருக்கும் போது, இன்னொருவர்க்கு கிடைக்காத வாய்ப்பு உனக்கு கிடைத்திருக்கும் போது அதனை மறுக்காதே அது பாவம் என போதிக்கின்றார் ஒளவையார்.
ஆத்திச் சூடி : 04
“ஈவது விலக்கேல்”
ஈவது ஈகை என பொருள், இல்லாத ஒருவனுக்கு தானும் கொடுப்பதை நிறுத்த கூடாது இன்னொருவர் கொடுப்பதையும் தடுக்க கூடாது என்பது பொருள்
ஈதல் என்றால் இல்லாதோர்க்கு கொடுப்பது, வறியவர்க்கு கொடுப்பதுதான் ஈகை, இல்லாதோர்க்கு ஈவதுதான் ஈகை , அதைத்தான் தன் குறளில் ஈகை எனும் அதிகாரமே வைத்து சொன்னான் வள்ளுவன்
“வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து”
வறியார்க்கு ஈவது ஈகை, அதை விடுத்து இருப்போர்க்கு கொடுப்பது பலன் எதிபார்க்கும் வியாபாரமென தெளிவாக சொன்னான்
“ஈதல் இசைபட வாழ்தல்” என சொன்னவனும் அவனே
இந்துக்கள் மரபில் ஈகை முக்கிய இடம் பிடித்திருந்தது, அது வாழ்வியல் அறமாய் இருந்தது, இருப்போர் இல்லாதார்க்கு கொடுத்து சமத்துவ சமூகமாய் இந்து சமூகம் இருந்தது
அதனால்தான் அந்நியர் வருங்காலம் அளவு இங்கு பிச்சை ஏந்துவோர் இல்லை, யாசகர் இல்லை, அனாதைகள், பராரைகள், தெருவோர அகதிகளெல்லாம் இல்லை
எல்லா இடத்திலும் எல்லாருக்கும் அன்னதானம், சத்திரம் என எல்லாம் கிடைத்த்து, வழிபாட்டு தலங்களெல்லாம் ஏதோ ஒரு பண்டிகை என சொல்லி எல்லோருக்கும் அன்னதானமிட்டது, வஸ்திர தானம் கொடுத்தது
திதி, தர்ப்பணம், ஏகபட்ட விழாக்கள், விரதங்கள் என அள்ளி அள்ளி அடுத்தவர்க்கு கொடுக்க சொன்ன மதம் இந்துதம்
அந்த மதத்தின் தாத்பரியமே அள்ளி அள்ளி கொடுப்பதுதான், அதைத்தான் பாடுகின்றார் ஒளவையார்
இதே கருத்தை நாலடியாரும் சொல்கின்றது
“இம்மி அரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்து உண்மின் – உம்மைக்
கொடாஅ தவர் என்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர்”
அதாவது ஒரு சிறிதளவு அரிசியையாவது நாள்தோறும் (ஏழைகளுக்குக்) கொடுத்து, பின் நீங்கள் உண்ணுங்கள். இப்படி, முற்பிறப்பில் கொடுத்து உதவி வாழாதவர்களை, இப் பிறப்பில் சமைத்தல் இல்லாத அடுப்பினை உடையவர்களாகப் பிச்சை எடுப்பவர்கள் என்கின்றது
அதாவது இந்த பிறப்பில் செய்யும் ஈகை பல பிறப்புக்கு பலன் தரும் என்பது போதனை, இன்று பலர் வாழ்க்கையில் அதனை காணலாம், ஒரு திறமையோ ஆற்றலோ படிப்போ இல்லாதவர் பெருமிடம் இருக்க இந்த முன் ஜென்ம புண்ணியமே காரணம்
இன்னுமோர் பாடல் உண்டு
“மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் வறுமையால்
ஈதல் இசையாது எனினும் இரவாமை
ஈதல் இரட்டி உறும்”
அதாவது மறுமை இம்மை நிலைகளைக் கருதி, கூடிய பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுப்பது வறுமையினால் மாட்டாதாயினும், பிறரிடம் சென்று இரவாமலிருப்பது, அவ்வறுமைக் காலத்தில் கொடுத்தலினும் இரு மடங்கு சிறப்பானது ஆகும் என்பது பொருள்
வறிய நிலையில் இருப்பவனுக்கு ஈவது பெரும் புண்ணியம், அப்படியே தன்னால் முடியாவிட்டாலும் யார் உதவமுடியுமோ அவர்களிடம் அனுப்பிவைப்பது இன்னும் புண்ணியம்
அதே நேரம் தானும் வறியவனுக்கு உதவாமல் , உதவ வருபவானியும் விலக்கி வைப்பது பாவத்திலெல்லாம் பெரும் பாவம், மாபெரும் சாபமும் இழிவும் கொண்டுவரும் பாவம்
இந்த ஜென்மத்தில் என்ன அளக்கின்றோமோ அதே அளவுதான் அடுத்த ஜென்மத்தில் அளக்கபடும், அதனால்தான் தானம் கொடுப்பதை விலக்கி வைக்காதே, அதை கொடுப்போரையும் விலக்கிவிடாதே என போதிக்கின்றது இந்துமதம்.
ஆத்திச் சூடி : 05
“உடையது விளம்பேல்”
ஒருவன் தான் கொண்டிருக்கும் பொருளை, திறமையினை , ஆற்றலை தற்பெருமையாக சொல்லி திரியகூடாது, அது பலவகை துன்பங்களை இழுக்கை தரும் என்பது ஒளவை வாக்கு
விளம்புவது என்றால் சொல்லி திரிவது என பொருள், அவ்வகையில் விளம்பேல் அதாவது தான் கொண்டிருப்பதை சொல்லிகாட்டி , எல்லோருடமும் தற்பெருமை பாராட்டுவது நல்ல பலனை தராது என்கின்றார் ஓளவை சித்தர்
முதலாவது ஒருவன் தான் கொண்டிருப்பதையெல்லாம் வெளிசொன்னால் எல்லோருக்கும் காட்டினால் அது ஆபத்தில் முடியும்
மிகபெரிய உதாரணம் மஹபாரத காட்சி, பாண்டவர் மயன் உதவியுடன் கட்டிய பளிங்கு மாளிகைதான் அவர்களின் தீரா துன்பத்துக்கு காரணம், அவர்கள் கொண்டிருந்த பெரும் செல்வமும் ஐஸ்வர்யத்தை துரியோதனன் கண்ணில் படுமாறு அவர்கள் வாய்ப்பளித்ததே பெரும் விபரீதத்துக்கு காரணமாயிற்று
இதனாலே சில விஷயங்களை வெளிகாட்ட கூடாது என்பார்கள்
இது அரச ரகசியம், ராணுவ ரகசியம், வீட்டு ரகசியம் என எல்லா இடத்திலும் உண்டு. தன்னிடம் இருப்பதையெல்லாம் சொல்லி திரிவது ஆபத்து
இன்னொரு வகை போதனை உண்டு அது தற்பெருமை பேசுவது, இதுவும் நலல்தல்ல என்கின்றார் ஒளவையார்
தற்பெருமை என்பது அற்பர்களின் வழமை, இந்த உலகில் எல்லா வகையிலும் ஒன்றைவிட ஒன்று மேம்பட்டிருக்கும், வல்லவன் வல்லவன் எல்லா இடத்திலும் உண்டு
ஒருவனை விட இன்னொருவன் திறமைசாலியாகவே இருப்பான் , ஆனால் பலருக்கு கிடைக்கா வாய்ப்பு சிலருக்கு கிடைத்து விடுகின்றது
இதெல்லாம் இறைவன் அனுகிரஹம் அவனே தன் மூலம் இதையெல்லாம் செய்கின்றான் என அறியா பதர்கள் ஆணவத்திலும் தற்பெருமையிலும் ஆடும், அது கூடாது
தற்பெருமை அகந்தை தரும், அகந்தை ஆணவத்தை தரும், ஆணவம் பெரும் அழிவை தரும்
இதனாலே தற்பெருமை கூடாது என்றார்கள் ஞானிகள், தற்பெருமை எனும் போலி கவுரவமும் ஆனவமும் யாராயினும் அழித்துவிடும்
பானையில் கொஞ்சம் பருக்கை இருந்தாலே ஆயிரம் காக்கைகள் சுற்றும் உலகம் இது, அப்படியான உலகில் கொஞ்சம் பொருளோ ஆற்றலோ செல்வமோ இருப்பவனை சுற்றி துதிபாடிகள் பெருகிவிடுவார்கள்
அந்த துதிபாடிகள் ஒருவன் தற்பெருமையினை ஏற்றிவிடுவார்கள், இதுபற்றி நாலடியார் எச்சரிக்கின்றது
“கற்றனவும், கண்அகன்ற சாயலும் இல்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும் தான் உரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தன் என்று எள்ளப் படும்”
அதாவது தான் கற்ற கல்விகளும், காட்சிபரந்த தனது சாயலும், தனது உயர் குடிப் பிறப்பும் அயலவர் பாராட்டப் பெருமை அடையும்; அவ்வாறு அன்றித் தானே புகழ்ந்து கொண்டால், தனக்கு முகமன் மொழிந்து விளையாடுவோர் மிகப் பெருகி அதனால், மருந்தினால் தெளியாத பித்தன் இவன் என்று உலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன் அடைவான்.
ஏலாதி எனும் நூலின் ஒரு பாடல் இன்னும் இதனை தெளிவாக சொல்கின்றது
“உரையான் குலன்குடிமை; ஊனம் பிறரை
உரையான்; பொருளொடுவாழ்வு, ஆயு – உரையானாய்,
பூவாதி வண்டுதேர்ந்து உண்குழலாய்! ஈத்து உண்பான்
தேவாதி தேவனாத் தேறு”
அதாவது வண்டுகள், மலர்கள் முதலியவற்றை ஆராய்ந்து மொய்த்து உண்ணுகின்ற கூந்தலையுடைய பெண்ணே!, தன் குலத்தின் உயர்வையும், தன் குடிப்பிறப்பின் உயர்வையும், பெருமை பாராட்டிச் சொல்லிக் கொள்ளாமல், அவ் இரண்டு வகையான உயர்வும் இல்லாத மற்றவரை, குற்றம் சொல்லாமல், தன் பொருளும் வாழ்வும், வாழ்நாள் எல்லையும், பிறர் அறிய வெளிப்படுத்தாதவன் ஆகி, வறியார்க்குக் கொடுத்துத் தானும் உண்பவனைத் தேவர்கள் தலைவன் என்று தெளிவாயாக.
ஆம், ஒருவன் தான் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் தன்னை பாராட்டிகொள்ளாமல் அடங்கி இருந்து தன் பெருமை அல்லாமல் இன்னொருவர் பெருமையினை சொல்வதே பெருமையினை தரும்
புராணத்தில் இதற்கு பெரும் உதாரணம் பகவான் கண்ணனும் அவன் வாழ்வும்
யாராலும் வெல்லமுடியாத பெரும் பராக்கிரமசாலியான அவன் கடைசிவரை தற்பெருமை பேசவில்லை அவனின் பணிவே அவனை உயர்த்தியது
ஆனால் நான் யார் தெரியுமா? என தன்பெருமை பேசிய கம்சனும், சிசுபாலனும், நரகாசுரனும், பெரும் படையோடு பெருமை பேசிய துரியோதனனும் ஒழிந்தே போனார்கள்
கண்ணனின் வாழ்வு பெரும் போதனை, அவனின் ஒவ்வொரு அசைவும் மாபெரும் போதனை
“உடையது விளம்பேல்” என ஒளவை சொன்னதத்தான் வள்ளுவனும் சொன்னான்
“அடக்கம் அமரருள் உய்க்கும்” என்றான்
இன்னும் “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.” என தெளிவாக சொன்னான்
“வியவற்க எஞ்ஞான்றும் தன்னை” , “தன்னை வியந்தான் விரைந்து கெடும்” , “பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு” எனவும் பல இடங்களில் சொல்லிவைத்தான்
இந்த உலகில் எல்லோருக்கும் ஒரே ரத்தம், எல்லோருக்கும் ஒரே மூளை அளவு, ஒரே அளவு இதயம் ஆனால் ஏதோ ஒரு சக்தி ஒவ்வொருவர் உடலிலும் ஒவ்வொரு வடிவில் ஆற்றலில் செயல்படுகின்றது
ஒருவன் கொண்டிருக்கும் பொருளுக்கும், ஆற்றலுக்கும், அறிவுக்கும் காரணம் அவன் அல்ல, அவனுக்கு வாய்த்த சந்தர்பங்களுக்கு காரணமும் அவன் அல்ல
அதெல்லாம் எங்கிருந்தோ கிடைக்கும் வரம், யாரோ எடுத்த முடிவு
இந்த உண்மையினை அறிந்தவன் அதாவது தன் பெருமைக்கு காரணம் தான் அல்ல என உணர்பவன் தன்னை விளம்புவதில்லை அவன் வாழ்வான்
மாறாக தான், தன்னால் தன்னாலே எல்லாம் என சுயவிளம்பரம் செய்பவன் தெளிவில்லாதவன் அவன் வீழ்வான்
இதைத்தான் இந்த வரியில் சொல்கின்றார் ஒளவையார்.
ஆத்திச் சூடி : 06
“ஊக்கமது கைவிடேல்”
ஒருவன் எதை இழந்தாலும் இழக்க கூடாத விஷயம் மன ஊக்கம், ஊக்கம் என ஒன்றினை கொண்டிருந்தால் போதும், மனதில் நம்பிக்கை உற்சாகம் மட்டும் கொண்டிருந்தால் போதும் எல்லாம் மீட்டு கொள்ளலாம்
அந்த ஊக்கம் அவ்வளவு முக்கியமானது
ராமாயணத்தில் எல்லாம் இழந்தாலும் மன ஊக்கம் எனும் தைரியத்தாலே எல்லாம் மீள அடைந்தான் ராமன், அதே தைரியத்தில்தான் பாண்டவர்களும் இழந்தையெல்லாம் பெற்றார்கள்
அறத்தை காக்க , தர்மத்தை காக்க எப்போதும் மன ஊக்கம் அவசியம், அவநம்பிக்கையும் மனதளர்வும் எதையும் சாதிக்கவிடாது
தளர்ந்த மனம் தானும் உடைந்து மற்றவர்களையும் மனம் தளர வைக்கும், தளரா மனமே சாதனைகளை கொடுக்கும்
வாழ்வில் எடுத்த கர்மத்தை முடிக்க ஊக்கம் மிக மிக அவசியம்
ஒரு விஷயத்தை செய்ய முயலும்போது இயல்பாக உண்டாகின்ற இடையூறுகள் காரணமாக உள்ளத்தில் தளர்ச்சி கொண்டு மெலிந்து விடாமல் இருக்கவேண்டும் என்று கூறும் முகத்தான், “ஊக்கமது கைவிடேல்” என்று அறிவுறுத்துகின்றார் ஒளவையார்.
ஊக்கம் இனிமையும் எழுச்சியும் தரும் என்பதை “உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே” என்கின்றது இனியவை நாற்பது
வள்ளுவன் “ஊக்கம் உடமை” எனும் அதிகாரத்தை வகுத்து மன தைரியத்தின் அவசியத்தை சொன்னார்
“உள்ளம் உடைமை உடைமை; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும்” என்றார்
உள்ளத்து வலிமைமையே ஒருவனுக்கு செல்வம், மனவலிமை இருந்தால்தான் இருக்கும் பொருளையும் காத்து ஒருவேளை அது இழந்தாலும் மீட்டுகொள்ள முடியும், மனவலிமை இல்லாவிட்டால் செல்வமும் மாளும் மீளும் வழியும் அறியாது” என்றார்
“உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை, அஃது இல்லார் மரம், மக்கள் ஆதலே வேறு” என்று அருளினார். அதாவது மனவலிமை இல்லாதவன் மரத்துக்கு சமம் ஏன வள்ளுவர் சொல்கின்றார்
ஒருவன் எந்த செயலை செய்தாலும் அதை கர்மமாக ஏற்று செய்ய மன ஊக்கம் அவசியம், அந்த ஊக்கத்தைத்தான் எல்லோரும் கேட்டார்கள்
அபிராமி பட்டர் “தளர்வறியா மனம் தருவாய்” என பணிந்து நின்றார், இன்னும் பல பக்தர்களும் ஞானியரும் அதையே வேண்டி நின்ற காட்சி உண்டு
பாரதி இதே வரிகளை தன் பாணியில் பாடினான்
“விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன்” ஆம், ஊக்கம் அவ்வளவு முக்கியமானது, மானிட வாழ்வின் ரகசியமே அதுதான். என்ன நடந்தாலும் அந்த மன உறுதியும் தைரியமும் இருந்துவிட்டால் எதையும் சாதிக்கலாம், அதைத்தான் ஒளவையார் சொல்கின்றார்.
ஆத்திச் சூடி : 07
“எண் எழுத்து இகழேல்”
இந்த உலகில் வாழ்வதற்கு அடிப்படையான விஷயங்களில் ஒன்று கணக்கு, மானிட வாழ்வில் எல்லாமே ஒரு கணக்கு விதிக்கு உட்பட்டது, மானிடனின் மனம் எல்லையற்றதாக ஆழம் காணமுடியாததாக இருக்கலாம் ஆனால் அவன் உடல் முதல் விதி வரை எல்லாமே துல்லியமான கணக்குக்கு உட்பட்டது
ஒருவன் பிறக்க 10 மாதம் என தொடங்கும் கணக்கு, அவனுக்கு கொடுக்கபட்ட மூச்சுகாற்றின் எண்ணிக்கை தீர்ந்துவிடும்போது முடிகின்றது
அதாவது ஒரு கணக்கிடபட்ட காலமே அவன் இங்கு வசிக்கமுடியும் என்பதால் ஒவ்வொரு விஷயமும் அவன் அளந்தாக வேண்டும்
இதனாலே எண் என்பது உருவானது, எண்கள் இல்லாமல் அளவைகள் இல்லை, அளவைகள் இல்லாமல் மானிட வாழ்வு இல்லை
பொருள் ஈட்டவும் , ஈட்டியதை காக்கவும் கணக்கு வழக்கு அவசியம், அது அல்லாது எல்லாம் பாழாகும்
அப்படியே சிந்திக்கவும், சிந்தித்ததை பகிரவும் குறைந்தபட்சம் ஒரு தகவலையாவது பெறவும் எழுத்தறிவு அவசியம்
அம், எழுத்தும் மகா முக்கியம், ஒருவன் பேசுவது காற்றோடு போகும் பார்ப்பது கண்ணோடு போகும், எழுதிவைப்பதே நிலைக்கும்
எழுத்து ஒன்றுதான் ஐம்புலன்களும் ஒன்றி நிற்கும் விஷயம், இந்த ஐம்புலன்களும் அதில் மனதார ஒன்றும் போது அவை மனதில் தங்கும்
இதனாலேதான் எழுத்தை நேசிக்க சொன்னார்கள், எழுதியதை படிக்க சொன்னார்கள், காட்சிகள் மாறும், கேட்டதும் பேசியதும் மறக்கும் ஆனால் எழுதியது மாறாது
ஒவ்வொரு மனிதனும் பூமியில் வாழ எண் எனும் அளவைக்கான விதிகள் அவசியம், உலகில் மற்றவரிடம் இருந்து பெற்றுகொள்ளவும் நாம் விட்டுசெல்லவும் எழுத்து அவசியம்
முன்னோர்கள் இந்த இரண்டையும் விட்டுசென்றார்கள், இதனாலேதான் உலகம் சிந்திக்க தொடங்கி இவ்வளவு மாறிற்று
அதனால் எண்களையும் எழுத்தையும் புறந்தள்ளாமல் காக்க வேண்டும், கற்று அதன் வழி நிற்க வேண்டும் என்கின்றார் ஒளவையார்
இதைத்தான் வள்ளுவனும் சொன்னான், எண்ணும் எழுத்தும் அறியாதோர் குருடர்கள, அவர்களால் எதையும் பார்க்க முடியாது இன்னொருவர் உஹவி இல்லாமல் அவர்களால் வாழமுடியாது, எண்ணும் எழுத்தும் அறியாதவர் இன்னொருவரை முழுக்க சார்ந்திருப்பர் என அவர்களின் பரிதாபத்தை என்றோ எழுதினான் வள்ள்ளுவன்
இந்த குறளில் தெளிவாக சொன்னான்
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.”.
இந்த வரி இன்னொரு பொருளையும் தரும்
ஒளவை ஒரு சித்தர் எனும் வகையில் இங்கு எண் என்பது எண்ணங்களையும் சிந்தனைகளை குறிப்பது, எழுத்து என்பது ரிஷிகள் ஞானியர் எழுதிய வேதங்களையும் வாழ்வியல் முறைகளையும் குறிப்பது
எண்ணம் எனும் சிந்தனையினை சரியாக வைத்திருக்க வேண்டும், முன்னோர் எழுதிய ஞானமொழிகளை படிக்கவேண்டும், அப்பொழுது அறிவுகண் எனும் அககண் திறக்கபடும், உண்மையினை உணரமுடியும் என்பது பாடலின் பொருளாகின்றது
எத்தனை நூல்களை படித்தாலும் உள் உணர்வாலே அறிவும் தெளிவும் அறிய முடியும், அந்த உள் உணர்வு எனும் சிந்தனையினை எண்ணத்தை நல்லபடியாக வளர்த்து கொள்ள வேண்டும் அப்படியே நல்ல எழுத்தை வாசித்து நல்லவனற்றை உணர்தல் வேண்டும் என்பதே ஒளவையின் போதனை
சிந்தனையும் வாசிப்பும் அககண்களை திறப்பனவாக இருத்தல் வேண்டும், அப்படி ஒருவன் எண்ணி எழுதும் விஷயமும் அககண்களை திறக்கும்படி இருக்கவேண்டும் என்பதே ஒளவையின் போதனை நல்ல வழியில் சிந்திக்க வைக்கும் எண்ண வைப்பவற்றை திருமூலர் போல எழுதி வைத்து முக்தி அடைய வழிகாட்ட வேண்டும், அப்படி ஞானியரால் எழுதிவைக்கபட்டவற்றை புரிந்து உணர்ந்து பின்பற்ற வேண்டும் என்கின்றார் ஒளவையார்.
ஆத்திச் சூடி : 08
“ஏற்பது இகழ்ச்சி”
இகழ்ச்சி என்பது அவமானம் என்பதாகும், ஒன்றுமில்லாமல் எல்லாவற்றுக்கும் பிறறை எதிர்பார்ப்பவம் அவமானம் அடைவான், மரியாதை இழப்பான் அதனால் யாசகமாக பெற்று வாழ்வது இகழ்ச்சி, தனக்கான தேவைகளை ஒருவன் தானேதான் தீர்த்துகொள்ள வேண்டும் , உழைத்து பெற்றுகொள்ள வேண்டும் என்பது இந்த வரியின் பொருள்
அதாவது அவசரத்துக்கு உதவி கேட்பது வேறு, நல்ல முயற்சிக்கு ஆதரவு கேட்பது வேறு ஆனால் சதா காலமும் இனொருவரை நம்பி அவரை அண்டி அவரிடம் யாசகம் பெற்று வாழும் வாழ்வு அவமானமானது
அதைத்தான் இங்கே சொல்கின்றார் ஒளவையார்
இந்த நிலைபற்றி, யாகசம் என கையேந்தும் இழிநிலை பற்றி வள்ளுவன் “இரவச்சம்” என்றொரு அதிகாரமே எழுதினான்
அதாவது வறுமை என்பதோ இல்லாமை என்பதோ யாசகத்தால் தீர்ந்துவிடுவது அல்ல, அது உழைப்பால் மட்டுமே தீரும், இன்னொருவன் இன்னொருவனுக்கு கொடுத்து நிறையபோவது இல்லை என்பதை தெளிவாக சொன்னான்
“இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்”
அதாவது வறுமையினை பிறரிடம் யாசகம் வாங்கி தீர்த்துவிடலாம் என எண்ணுவது வறுமையிட விட கொடியது என்கின்றான்
“கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்”
கொடைதன்மை இல்லாதவரிடம் சென்று நில்லாமை கோடிபெறும் என்பதை அவன் சொல்கின்றான்
“ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்”
இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும் நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை என்பது வள்ளுவன் வாக்கு
“மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமாறு இயைவ கொடுத்தல் – வறுமையால்
ஈதல் இசையாது எனினும், இரவாமை
ஈதல் இரட்டி உறும்”
மறுமை இம்மை நலங்களைக் கருதி, முடிந்த வரையில் பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுப்பது முடியாதபடி ஒருவனுக்கு வறுமை வந்து சேர்ந்தாலும், பிறரிடம் சென்று பிச்சை கேட்காமல் இருப்பது. தானம் தருவதைவிட, பிச்சை கேட்காமல் இருப்பது இரு மடங்கு சிறப்பானது என்பது பொருள்
பசிக்கு உணவு என்பது கூட உணவிட்டால் அடங்கும் ஆனால் பசிக்கும் தொடர்ந்து உணவிற்கு இன்னொருவரை எதிர்பார்ப்பது இகழ்ச்சி
அதுவே பசி என்றால் அடங்கும் ,ஆனால் பொருள் கொடுத்தால் தீராது மனம் அதை கேட்டு கொண்டே இருக்கும்
அப்படி ஒரு உதவி கேட்பது வேறு, தொடர்ந்து கையேந்தி கொண்டே இருப்பது என்பது சரியல்ல அது அவமானத்தையே தேடி தரும் அதைத்தான் இந்த வரியில் சொல்கின்றார் ஒளவையார்
வறுமையோ துன்பமோ இல்லை வேறு துன்பமோ இன்னொருவரை அண்டிவாழ்வது அவமானத்தையே தரும், இன்னொருவரை நம்பி வாழ்வது அவமானமான வாழ்க்கை என்பதே ஒளவை போதனை.
ஆத்திச் சூடி : 09
“ஐயம் இட்டு உண்”
ஐயம் என்றால் சந்தேகம்
இந்துக்கள் மரபில் உணவு உண்ணும் முன் சில கடமைகள் உண்டு, சமைத்த உணவில் இறைவனுக்கு ஒரு பங்கு வைத்துவிட்டு பின் பசியால் வாடிதிரிவோர்க்கு உணவு வைத்துவிட்டு , காக்கை முதலான உயிர்களுக்கு படைத்துவிட்டுத்தான் எல்லாம் சரியாக செய்தாகிவிட்டது எதுவும் பாக்கி இல்லை என்பதை உறுதி செய்து சந்தேகமின்றி உண்ண வேண்டும்
அடியார்களுக்கு உணவு கொடுத்துவிட்டோம் எனும் நிறைவோடு உண்ணல் வேண்டும்
அதாவது உண்ணும் முன்பு யாருக்காவது தர்மம் இட்டு உண்ண வேண்டும் என்பது இந்துக்கள் விதி, அந்நிலையில் வறியவருக்கும் யாசகருக்கும் உணவிட்டு உண்ணவேண்டும்
வறியவர்கள் இவர்களுக்கு யாசகம் இடுகின்றோம் எனும் கர்வத்தை அகற்றி அவர்கள் நம் கர்மத்தை வாங்க வந்தவர்கள் இவர்களுக்கு உதவுதால் நம் கர்மம் கரைகின்றது என மனம் ஒத்து, மனதில் நிறைவோடு அவர்களுக்கு உணவிட்டு உதவி, அவர்கள் இழிவானவர்கள் என்பதை விலக்கி யாசகமிட்டு உண்பதே சரியானது என்கின்றார் ஒளவையார்
யாசகமிடும் போது அவர்கள் இழிவானர்கள் என எண்ண கூடாது, கர்வத்தோடு வேண்டா வெறுப்பாகவோ இல்லை தன்னை தர்மவானாகவோ கருதி அவர்கள் இழிவானர்கள் எனும் சிந்தனையில் செய்ய கூடாது.
அவர்கள் நம் கர்மத்தை வாங்க வந்தவர்கள் எனும் உறுதியோடு கொஞ்சமும் சலனமோ சஞ்சலமோ இல்லாமல் நிறைந்த மனத்தோடு உதவ வேண்டும் அதன் பின் உண்ண வேண்டும் என்பது ஒளவையின் போதனை
இந்துஸ்தானம் ஒரு காலத்தில் யாசகர்கள் இல்லா தேசமாக, பிச்சைக்காரர்கள் இல்லா தேசமாக இருந்தது அதற்கு காரணம் இந்துமதம் சொன்ன இம்மாதிரி போதனைகளே
ஒவ்வொரு மனிதனிடமும் வரும் பணத்திலும் பொருளிலும் யாரையோ ஏமாற்றிய பாவம் இருக்கும், அதனை களைய தர்ம காரியம் அவசியம் என சொல்லி இங்கே வறியவர்கள் இல்லாமல் பார்த்து கொண்ட ஞானசமூகம் இது
சிவனே பிச்சை எடுத்தார் பெருமாள் பிச்சை எடுத்தார் மனிதனின் குணமறிய யாசகர்களில் தெய்வமே வரும் அதனால் அவர்களை வணங்கி யாசகமிடு என சொன்னது இந்துமதம்
பிச்சையிடுமுன் அவர்களை வணங்கு, அவர்கள் உன் கர்மாவினை கழிக்க வந்தவர்கள் என்பதை நினைவில் கொண்டு கொஞ்சமும் அகங்காரமின்றி அவர்களை வணங்கி நில் என சொன்னதும் இந்துமதம்
உலகில் எந்த மதத்துக்கும் இல்லா பெரும் பண்பு இது போதனை இது
இதனாலே பிச்சையினை “தர்மம்”, “தர்மமிடுதல்” என சொன்ன சமூகமிது, யாசகம் பெறுபவனையும் தர்மம் செய்ய காரணமான “தர்மக்காரகன்” என வணங்கிய சமூகம் இது
அந்த மாபெரும் பாரம்பரியத்தைத்தான் இந்த வரியில் போதிக்கின்றார் ஒளவையார், ஒருவருக்கு உணவளித்து விட்டோம் எனும் உறுதியில் சஞ்சலமில்லாமல் உண்பது நல்லது, அப்படி யாசகமிடும் போது அவரை இழிவாய் நினைக்காமல் தன் கர்மத்தை கழிக்க வந்த தெய்வ வடிவானவர் என நினைப்பது இன்னும் நல்லது என்கின்றார் ஒளவையார்
பட்டினத்தார் தன் பாடலில்பாடுவார், இதே கருத்தினை பாடுவார்
“விருந்தாக வந்தவர் தங்களுக்கு அன்னம் மிகக் கொடுக்கப்
பொருந்தார் வளம்பெற வாழ்வார் நின் நாமத்தைப் போற்றி நித்தம்
அருந்தா முலைப்பங்கர் என்னாத பாதகர் அம்புவியில்
இருந்து ஆவது ஏது கண்டாய் இறைவா கச்சி ஏகம்பனே”
என அன்னதானம் செய்வோர் பெறும் பலன்களை சொல்கின்றார் பட்டினத்தார்
ஆத்தி சூடி என்பது அறவழியினை வலியுறுத்தும் பாடல்
அறம் செய், அதையே ஆத்திரபடாமல் அமைதியாக செய், இயன்றதை செய், ஈகை செய், ஊக்கமாக செய் என, எண்ணும் எழுத்தும் அறிந்து செய், யாரிடமும் நீ கையேந்தாமல் மற்றவர்க்கு கொடு, யாருக்காவது உணவு இட்டுவிட்டோமா ஒரு அடியார்க்கோ யாசகர்கோ உணவிட்டு விட்டோமா என சந்தேகம் இல்லா அளவு அறத்தை செய்துவிடு உண் என தன் போதனையினை போதிக்கின்றார் ஒளவையார்.
ஆத்திச் சூடி : 10
“ஒப்புரவு ஒழுகு”
ஒப்புரவு என்பது உலக நடைமுறை அல்லது சமூகத்தில் விதிக்கப்பட்ட விதி என பொருளில் வரும்
ஒப்பு+உரவு = ஒப்புரவு என்றாயிற்று, ஒப்பு என்றால் விதி, நடைமுறை என பொருள். உரவு என்றால் வலிமையான, அறிவான எனும் பொருளில் வரும் வார்த்தை, உரம், உரக்க என்பதெல்லாம் இதிலிருந்து வந்தவைகள்
ஒப்புக்கு எனும் வார்த்தை இன்றும் கிராமங்களில் உண்டு அதற்கு நடைமுறை விதிக்கு என பொருள்
ஆக ஓப்புரவு என்றாவில் மீற கூடாத வலிமையான விதிகள், கண்டிப்பாக பின்பற்றி நன்மை பயக்க வேண்டிய விதிகள் என பொருள்
இந்துக்களின் சமூக வாழ்வு எப்போதும் ஞானமானது, மகிழ்ச்சியானது, நிறைவானது, எல்லோரும் எல்லாமும் பெற்றுவாழ்ந்து கடைசியில் முக்தி நிலைக்கு செல்லும்படி ஏற்படுத்தபட்ட அமைப்பு
எல்லா உயிர்களையும் தன் உயிராக மதித்தல், சமூகமும் மக்களும் நலம்பெற வாழ்தல் என பெரும் வாழ்க்கை அறநெறிகளை இந்துசமூகம் கொண்டிருந்தது
அந்த விதிகளை அறிந்து எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ போதிக்கின்றார் ஒளவையார்
இந்த ஒப்புரவு விதிகளைத்தான் “ஒப்புரவு அறிதல்” என ஒரு அதிகாரம் முழுக்க 10 குறளில் பாடினான் வள்ளுவன்
“தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு”
அதாவது தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும் என்ற ஒரு குறளிலே, ஒரு சோறு பதம் என்பது போல மொத்த அதிகாரத்தின் போதனையும் சுருக்கமாகிவிடுகின்றது
ஆம், மற்றவர்கக்கும் இந்த சமூகத்துக்கும் உதவி கொண்டே ஒருவன் வாழவேண்டும் அவன் உழைப்பின் நோக்கம் அதுதான் என்கின்றார் வள்ளுவர்
பண்டைய இந்துசமூகம் இப்படியான போதனைகளை சமூக விதிகளாக கொண்டிருந்தது, அறநெறிகளாக கொண்டிருந்தது, திரும்பும் பக்கமெல்லாம் அது காண கிடைத்தன
அவர்கள் அறியாமல் அல்லது அறியாமையில் கூட நல்லகாரியமே செய்தார்கள், இன்னொரு உயிர் துன்பபட , அது ஏங்கி நிற்க அவர்கள் விடவில்லை என்பதை கூட இலக்கியத்தில் சொல்லி வைத்தார்கள்
“முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டு அறிதும் – சொல்லில்
நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப
அறிமடமும் சான்றோர்க்கு அணி”
என்ற பாடல் சாதாரணம் அல்ல, அது பண்டைய இந்துக்கள் வாழ்ந்த மாபெரும் உன்னதமான சமூக வாழ்க்கையினை சொல்லும் பாடல்
முல்லை கொடிக்கு ஒரு கம்பு போதும் ஆனால் தேரை கொடுத்தான் பாரி, மயில் மழைகாலத்தில் இயல்பாக ஆடும் ஆனால் அது குளிரால் ஆடுவதாக போர்வை கொடுத்தான் போகன்
இதெல்லாம் அறிவான செயல்கள் அல்ல என்றாலும் ஒரு கொடி கூட, ஒரு மயில் கூட வாடிவிட கூடாது எல்லா உயிரும் தன் உயிராக மதித்து வாழவேண்டும் என்ற அதி உன்னத விதி அக்கால இந்துமூகத்தில் இருந்ததை இங்கே அவதானிக்கலாம்
புறநானூற்றுபாடல் ஒன்று உண்டு
“உண்டால் அம்ம! இவ் உலகம், இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்வுஇலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன்தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே”
அதாவது இந்த உலகமானது எத்தனை கோடி ஆண்டுகளாக இன்னும் அழியாமல், இயங்கிக் கொண்டே இருக்கின்றதே. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால், தேவர்களுக்கும், தேவர்கள் தலைவன் ஆகிய இந்தினுக்குமே கிடைக்கக் கூடிய அமுதமே தமக்குக் கிடைத்தாலும், அதைத் தாமே உண்டு, சாகாத நிலையாகிய பயனை அடைந்து கொள்ளலாம் என்று எண்ணும் மனம் இல்லாதவர்கள்
தன்னலம் கருதிப் பிறரிடம் கோபம் கொள்ளாதவர்கள்; பிறர் அச்சம் கொள்ளுகின்றவற்றுக்குத் தாமும் அச்சம் கொண்டு, அதைத் தீர்க்கும் பொருட்டுச் சோம்பல் இல்லாது இருப்பவர்கள்; புகழ் பெறுவது என்றால் தமது உயிரையும் கொடுப்பவர்கள்; பழிப்புக்கு உரிய செயல் என்றால், அதற்கு விலையாக இந்த உலகமே கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளாத உயர்ந்த பண்பினை உடையவர்கள்
இது போன்ற உயர்ந்த குணநலன்களைக் கொண்டு, தனக்கு என வாழும் தன்னலம் இல்லாது, பிறர் வாழத் தான் வாழவேண்டும் என்று பொதுநலத்தைப் பேணுபவர்கள் இன்னமும் இந்த உலகில் இருப்பதால்தான், இந்த உலகம் இன்னமும் அழியாமல் இயங்கிக் கொண்டு இருக்கின்றது
எவ்வளவு அருமையான பாடல்? எவ்வளவு உயர்ந்த தத்துவம்
இப்படி ஏகபட்ட வாழ்க்கை நெறிகள், அறநெறிகளை போதித்த சமூகம் இந்து சமூகம்
அதன் புராணங்கள் கூட கர்ணன் கதை, தன் அரசையே விட்டுகொடுத்த ராமன் கதை, தன் முதுகெலும்பையே தானமாக கொடுத்த ததீசி முனிவர் கதை என எல்லாமும் தானம் தர்மம் அதன் பலன் என போதித்த தத்துவங்களே
அப்படியான அறநெறிகள், மகா உன்னத வாழ்க்கை நெறிகள் அறிந்து அதன் வழி ஒருவன் நின்று வாழவேண்டும் என போதிக்கின்றார் ஒளவையார்.
ஆத்திச் சூடி : 11
“ஓதுவது ஒழியேல்”
ஓதுதல் என்பது இறைவனை போற்றி உண்மை பொருளை போற்றி தினம் தினம் தானும் சொல்லி மற்றவரையும் சொல்ல வைத்தலாகும்
இதனாலே ஆலயங்களில் பாடுவோருக்கு “ஓதுவார்” என பெயராயிற்று, ஓதுதல் அன்றாட கடமைகளில் ஒன்று என்கின்றார் ஒளவையார், எக்காரணம் கொண்டும் அதனை கைவிட கூடாது, அன்றாட கடமைகளில் பரம்பொருளை ஓதி வணங்குதல் அவசியம் என்கின்றார்
ஒதுதல் என்பதற்கு இடைவிடாமல் இறைவனை தேடி வணங்குதல் என பொருள், கல்வி என்பதன் முழு பலனே இறைவனை அடைதல், ஓயாமல் கற்க வேண்டிய நோக்கமே இறைவனை உணர்தல்
இதனை இதே ஒளவை தன் ஞானகுறளிலும் சொல்கின்றார்
“ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன்”
ஆம், கல்வி கற்பதன் நோக்கம் ஆதிப் பொருளாய் நிற்கும் இறை நிலையை உணர்வல் என்கின்றார்
அதைவே வள்ளுவன் மன அழுக்கை போக்கும், அறிவின் மாசுகளை போக்கும் கல்வி அவசியம், அதுவே கசடுகளை அகற்றி மனிதனை தெய்வநிலைக்கு உயர்த்தும் என்கின்றான்
அதைத்தான் “கற்க கசடு அற” அதாவது கசடுகள் நீங்க கற்கவேண்டும் என்கின்றான்
கற்றலும் கற்பித்தலும் ஒருவனுக்கு அன்றாடம் அவசியம், அந்த கற்பித்தல் என்பது இறைநிலை போக்கி ஒருவனை அழைத்து செல்வதாக இருத்தல் வேண்டும்
அறநெறிச்சாரம் இதனை தெளிவாக சொல்கின்றது
“எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிது இல்லை அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்”
அதாவது மனிதப் பிறப்புக்கு இன்பத்தைத் தருவதும், பிறப்பின் பயனை அடைவதும், கற்பதற்கு உரிய நூல்களைப் படிப்பதும், படித்தவற்றைப் பெரியோர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுதலும், தெளிந்த வழியிலை பொருந்த நிற்பதும் கூடுமானால், மனிதனாகப் பிறப்பது ஒருவனுக்கு இன்பத்தைத் தருவதாகும். அதுவே, மனிதப் பிறப்பு எடுத்ததனால் உண்டான சிறந்த பயனும் ஆகும் என பொருள்
இறைவனை உணரா கல்வி எப்படியானது என்பதை “தண்டலையார் சதகம்” சொல்கின்றது
“பேருரை கண்டு அறியாது தலைச்சுமை
ஏடுகள் சுமந்து பிதற்று வோனும்,
போரில் நடந்து அறிது பதினெட்டு
ஆயுதம் சுமந்த புல்லி யோனும்,
ஆரணி தண்டலை நாதர் அகம் மகிழாப்
பொருள் சுமந்த அறிவிலோனும்,
காரியம்ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த
கழுதைக்குஒப் பாவர் தாமே.”
போரில் ஆயுதம் வீச தெரியாமல் அதை சுமக்க மட்டும் தெரிந்தவனும், குங்குமம் பூசபட்ட கழுதையும், இறைஞானமில்லா கழுதையும் ஒன்று என்கின்றது பாடல்
அதாவது கழுதைக்கு குங்கும மகிமை தெரியாது, ஆயுதம் சுமப்போனுக்கு அதன் அருமை தெரியாது அப்படி இறைவனை உணராமல் கல்வி கற்றிருப்பவனாலும் பலனே இல்லை என்பது பாடலின் பொருள்
நாலடியார் சொல்கின்றது
“புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்
உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும், – மற்றுஅவற்றைப்
போற்றும் புலவரும் வேறே! பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு”
சிலர் புத்தகங்களை நிறையத் தேடிச் சேகரிப்பர். அவற்றை முழுதும் படிக்காமலும், படித்தவற்றின் பொருளை முழுதும் உணராமலும், அவற்றை வீடெல்லாம் நிறைத்து வைத்து அழகு பார்ப்பர். ஆனால், புத்தகங்களின் பயனை அறிந்து படித்துப் பயன் பெறுபவர்கள் சிலர். அந்தச் சிலருள்ளும், தாம் படித்து அறிந்த கருத்துக்களை மற்றவர் மனம் கொள்ளுமாறு எடுத்து விளக்கிப் புரிய வைப்பவர்கள் மிகச் சிலரே
ஆம், கற்பதும் கற்பவற்றை எடுத்து சொல்லி மற்றவரை இறைவன்பால் திருப்புவதும் அவசியம், அதுஅல்லாத கல்வியாளன் குங்கும் சுமக்கும் கழுதைக்கு சமம்
அக்கால இந்துக்கள் சரியாக இருந்தார்கள், கற்றலும் கற்பித்தலும் ஒருவனின் கடமையாக இருந்தன, அதனாலே பக்திபெருகி மாபெரும் ஆலயமும் இதிகாசமும் இன்னும் புண்ணிய நூல்களெல்லாம் வந்தன
இன்று இந்துக்களிடம் அவ்வழக்கம் இல்லை ஆனால் மற்ற மதத்தார்கள் அதை சரியாக செய்கின்றார்கள்
முதன் முதலில் “ஓதுவது ஒழியேல்” என சொன்னவர்கள் இந்து, ஆனால் அவர்களை தவிர மற்ற மதத்தார் அதனை சரியாக பின்பற்றுகின்றார்கள், இந்துக்களையே மதம் மாற்றுகின்றார்கள் என்பது இந்துக்களின் பரிதாப நிலை
“ஓதுவது ஒழியேல்” என ஒவ்வொரு இந்துவும் எழுந்து நிற்பதே, ஒள்வை சொன்ன வார்த்தையினை மீட்டெடுத்து நிலைப்பதே இந்துமதம் வாழ முதல் படி அதை ஒவ்வொரு இந்துவும் செய்தல் வேண்டும்.
ஆத்திச் சூடி : 12
“ஒளவியம் பேசேல்”
“ஒளவியம்” அல்லது “அவ்வியம்” என்றால் பொறாமையுடன் கூடிய சினம் என பொருள்
“அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்”
“அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்”
என வள்ளுவன் சொன்னது இதுதான்
கம்பன் திரு அவதாரப் படலத்தில் “அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந்தவனைக் கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்”என சொன்னதும் இதுவேதான்
திருமுலர் தன் பாடலில் போதிக்கின்றார்
“அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகி, சிறந்து உண்ணும் போது ஒரு
தவ்வி கொடுமின் தலைப்பட்ட போதே”
அதாவது வாய்ப்பு நேரும்பொழுது பொறாமையால் புறங்கூறிப் பாவத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கவர எண்ணாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்நெறியில் நின்று ஒழுகி, நீங்கள் உண்ணும்போது ஒரு சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள் என்கின்றார்
இனியவை நாற்பது எனும் பாடல் சொல்கின்றது
“அவ்வித்து அழுக்காறு உரையாமை முன்இனிதே;
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித்தாம் கொண்டு தாம் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது”
அதாவாது மனதில் வன்மம் கொண்டு பொறாமைச் சொற்களைச் சொல்லாமை மிக இனிது, பொறாமை நீங்கி கோபத்தைப் பகைத்து நீக்கி வாழ்வது இனிது, – மனம் அழுந்தி நிற்ப, தாங்கள் கண்ட பொருளைப் பெற விரும்பி, அதற்கேற்ற சமயம் பார்த்து அபகரியரதவராய், அதனை மறந்து விடுதல் இனிது. என்கின்றது
நீதிநூல் வெண்பா சொல்கின்றது
“ஆண்டு எலாம்பிறர் ஆக்கம் நோக்கியே
மீண்டு மீண்டு நெட்டுயிர்ப்பு வீங்கினும்
தாண்டி அவர் தனம் தாழ்ந்து உன் கைமிசை
ஈண்டுச் சேருமோ? இதயமே! சொலாய்”
அதாவது ஆண்டு முழுவதும் பிறர் வாழ்வைக் கண்டு மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டு வயிறு பொருமினாலும், அவ்வாழ்வு அவரை விட்டு விலகி, உனது கைக்கு வந்து சேராது; நெஞ்சமே இதைக் கருதிப்பார், உனக்கு உள்ளது உனக்கு போதும் என்றிரு என்பது பாடலின் பொருள்
இன்னொரு பாடல் உண்டு
“தாரணியில் எவரேனும் துயர் உறில், தன்
தலையின் முடி தரித்தது ஒப்பாம்,
சீரணியுஞ் செல்வம் அவர் படைத்திடில் தன்
தாய்மனைசேய் செத்தது ஒப்பாம்,
காரணமே ஒன்றும் இன்றிச் சுகதுக்கம்
தன்வலியால் கணத்துக்கு உள்ளே
பூரணமா ஆக்கிடுவோன் பொறாமை உளோன்
அன்றி, எவர் புவியின் கண்ணே”
இந்த பாடலின் பொருள் மிக மிக அழகானது
அதாவது பிறர் வாழ மனம் பொறுக்காத தீயோருக்கு, உலகில் யார் துன்புற்றாலும், தமத் தலையில் முடி சூடியது ஒப்பாக மகிழ்ச்சி உண்டாகும். பிறர் செல்வம் பெற்றார்களானால் தங்கள் தாய், மனைவி மக்கள் செத்ததற்கு ஒப்பாக எண்ணித் துக்கம் அடைவர். இப்படி ஒரு காரணமும் இல்லாமல், நொடிப் பொழுதினுள் தங்கள் மனத்துள்ளே இன்ப துன்பங்களை ஆக்கிடும் வல்லமை பொறாமை உள்ளவர்க்கு அன்றி எவர்க்கு முடியும்?
பொறாமைபடுவதால் இன்னொருவன் பொருள் நமக்கு வந்து சேராது, பாவமே வந்து சேரும் என்கின்றது பாடல்
பொறாமை கொண்டவன் நிலை எப்படியானது என்பதை ஒருபாடல் அழகாக சொல்லும்
“மாங்கனி வாயில் கவ்வி
மரத்திடை இருக்கும் மந்தி
பாங்கர் நீர் நிழலை வேறோர்
பழம் உணும் குரங்கு என்று எண்ணித்
தாங்க அரும் அவாவில் தாவிச்
சலத்திடை இறந்தது ஒப்ப,
நீங்க அரும் பொறாமை உள்ளோர்
நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே”
அதாவது குரங்கு மாம்பழத்தை வாயில் பற்றிக்கொண்டு மரத்திடை இருந்தது. பக்கத்து நீரில் தன் நிழல் தோன்றிற்று. அதை வேறொரு குரங்கு பழம் வாயில் வைத்திருப்பதாக நினைத்தது. அதைப் பிடுங்க ஆசைகொண்டது. நீரில் பாய்ந்து இறந்தது. இதைப்போன்று பொறாமைப் படுகிறவர்கள் உலகத்தில் கேடு அடைவார்கள்.
இருப்பதைவிட்டு இன்னொருவன் மேல் பொறாமை கொண்டு அவனிடம் இருப்பதை பறிக்க முயன்றால் அதற்கு முடிவே இல்லை கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போக நேரிடும் என்பதை சொல்கின்றார் புலவர்
பொறாமை அவ்வளவு பொல்லாதது என்பதால் அதனை ஒழிக்கவேண்டும் என்கின்றார் ஒளவையார்
ராமாயணம், மகாபாரதம் எனும் இதிகாசங்களும் புராணங்களும் திரும்ப திரும்ப சொல்லும் அடிப்படை தத்துவம் அதுதான்.
ஆத்திச் சூடி : 13
“அஃகம் சுருக்கேல்”
அஃகம் என்றால் தானியம், நீருற்று,செய்ய வேண்டிய விதி என பல பொருள் உண்டு என்றாலும் இங்கே தானியம என்பது பொருளாகி
சமூக வாழ்வில் ஒரு விஷயங்கள் முக்கியமானவை ஒன்று அறக்காரியங்கள் செய்தல் அது தானம், இரண்டாவது தொழிலில் நேர்மை
இங்கே “அஃகம் சுருக்கேல்” என ஒளவை சொல்வது , தானியங்களை வாங்க வருவோரை ஏமாற்ற கூடாது, கலப்படம் கூடாது, உரிய விலைக்கு உரிய அளவு சரியான தரமான தானியங்களை அளக்கவேண்டும் என்பது
வணிகத்திலும் அறம் வேண்டும் என்றது இந்துமதம்
இங்கே “அஃகம் சுருக்கேல்” என்பது வணிகத்தில் மட்டுமல்ல, கூலிக்கும் பொருந்தும்
அக்காலத்தில் சம்பளம் என்பது பணம் அல்ல, வயலில் வேலை செய்வோருக்கு கூலியாக சம்பு எனும் நெல்லும் அளம் எனும் எனும் உப்புமே வளங்கபட்டது
இதுதான் சம்பளம் என்றாயிற்று
ஒளவையார் காலத்தில் வயலில் உழைக்கும் தொழிலாளருக்கு தானியமே கூலி, அந்த ஏழைகளின் கூலியினை குறைக்காதே, அவர்களை வஞ்சிக்காதே அது அறம் அல்ல என பாடுகின்றார் ஒளவையார்
மானிட மனம் எப்போதும் லாபநோக்கம் கொண்டது, வியாபாரிக்கு ஒரு வாடிக்கையாளனுக்கு ஒரு பிடி நெல் குறைத்தால் 100 பேருக்கு குறைக்கும் போது அது ஒருபடி நெல்லாகிவிடும் எனும் கணக்கு உண்டு
பண்ணையில் அளப்பவனுக்கு இந்த கணக்கு வந்துவிட்டால் கூடுதலாக ஒருவனை வேலைக்கு அமர்த்தலாமே எனும் சிந்தனை வந்துவிடுகின்றது
பொருள் குவிப்பு எனும் பெயரில் பாவம் குவிக்கும் செயல்கள் இவை, அந்த பெரும் பாவத்தை செய்யாதீர்கள் என போதிக்கின்றார் ஒளவையார்
பண்ணையில் கூலிக்காரனுக்குரிய தானியத்தை சுருக்குவதும், கடையில் வாடிக்கையாளனுக்கு மோசடி செய்வதும், வேலை செய்தவனுக்கு கூலியினை இழுப்பதும் பாவம்
வள்ளுவன் இதை அழகாக சொல்வான்
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பி
றவும் தமபோல் செயின்”
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும் என்கின்றான்
வணிகம் என்பது அறத்துக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும், அங்கு கலப்படம், எடைகுறைவு, மோசடிகளெல்லாம் பாவத்தை தரும்
அப்படி மோசடி வணிகத்தால் குவிக்கபடும் பொருள் எதற்காக குவிக்கபடுமோ அதை கொடுக்காது, அது நிம்மதியினை கொடுக்காது, அது நல்வாழ்வினை கொடுக்காது அது ஒரு பலனும் கொடுக்காது
மாறாக சர்ச்சை, சண்டை, வீண்குழப்பம், வம்பு, வழக்கு, நோய் என அது எதிர்கால சந்ததிக்கே பாழாய் முடியும்
திருவிளையாடல் புராணத்தில் ஒருவரி உண்டு
“நட்பிடை வஞ்சம் செய்து,
நம்பினார்க்கு ஊன்மா றாட்டத்து
உட்படக் கவர்ந்தும், ஏற்றோர்க்கு
இம்மியும் உதவார் ஆயும்,
வட்டியின் மிதப்பக் கூறி
வாங்கியும், சிலர்போல் ஈட்டப்
பட்டதோ, அறத்தாறு ஈட்டு
நம்பொருள் படுமோ என்னா”.
அதாவது நல்லமுறையில் பொருள் ஈட்டியவன் சொல்கின்றான், நண்பர்களிடத்தும் கூட வஞ்சனை புரிந்தும், நம்பி ஒரு பொருளைத் தன்னிடத்தில் வைத்தவர் உயிர் மயங்குமாறு அப்பொருளைக் கவர்ந்தும், இரந்தவர்க்கு இம்மியளவும் கொடுத்து உதவாமலும், வட்டியை வரம்பு இல்லாமல் சொல்லி அங்ஙனமே வாங்கியும், சிலர் தேடுதல் போலத் தேடப்பட்ட பொருள் இது அல்ல. அறநெறியில் நின்று ஈட்டிய நமது பொருள் அழியுமோ? அழியாது.
ஆம், எப்படியெல்லாம் வணிகத்தில் பொருள் ஈட்ட கூடாது என்பதை சொல்லும் பாடல் இது
பட்டினப்பாலை சொல்கின்றது
“நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி, வாய்மொழிந்து,
தமவும் பிறவும் ஒப்ப நாடி,
கொள்வதூஉம் மிகைகொளாது,
கொடுப்பதூஉம் குறைகொடாது,
பல்பண்டம் பகர்ந்து வீசும்”
அதாவது நீண்ட நுகத்தடியின் நடுவிலே உள்ள பகலாணி போல, நடுநிலை தவறாது வாழ்கின்ற நல்ல மனத்தினை உடையவர் வணிகர். இவர்கள் தம் குலத்துக்கு ஏற்படும் பழிக்கு அஞ்சி , உண்மையினையே பேசுவர். தம்முடைய பொருட்களையும் பிறருடைய பொருட்களையும் சமமாக மதித்து வாணிகம் செய்வர்.தாம் வாங்கும் பொருள்களை மிகுதியாக வாங்கவும் மாட்டார்; தாம் கொடுக்கின்ற பொருள்களைக் குறைவாகக் கொடுத்தலும் செய்யார். பல்வேறு பொருள்களின் விலையினையும் , நியாயமாகக் கூறி விற்பனை செய்வர். இவ்வாறு தொன்றுதொட்டு கொண்டு கொடுத்து வாணிகம் செய்வோர் நிறைந்து காணப்படும் இருப்பிடங்களைக் கொண்டு விளங்கியது காவிரிப்பூம்பட்டினம்
பண்டைய இந்துக்கள் எப்படியான அறவாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதை சொல்லும் பாடல் இது
அதே நேரம் கண்ணகி காலத்து மதுரையில் அறமற்ற வணிகர்கள் இருந்ததையும் பிரபஞ்சமே கண்ணகி வடிவில் வந்து அவர்களை அழித்து போட்டதையும் காணலாம்
ஆம், வணிகம் என்பது அறம் அந்த அறத்துக்குள் வணிகம் செய்யும் குலம் வாழும் அந்த நாடும் வாழும்
அறத்தை மீறி பொருளுக்காக வணிகத்தை பெரும் பாவமாக மாற்றினால் அது பாவம் அந்த பாவம் பெருகும் இடத்தில் எல்லாமே குழம்பும், எங்கும் புலம்பலும் அழுகையும் இல்லாமையும் ஏழ்மையும் கண்ணீரும் பெருகும்
அது எல்லை மீறி செல்லும் போது தெய்வமே வந்து ஒழிக்கும்
இதைத்தான் “அஃகம் சுருக்கேல்” என்கின்றார் ஒளவையார்
இன்னும் அஃகம் என்றால் நீர் என்றும் பொருள் உண்டு , தானியம் போலவே நீரையும் மறைக்க கூடாது அது அறம் அல்ல, தவித்தவன் தேவைக்கு தண்ணீரை அள்ளிகொடுப்பது அறம் அதை சுருக்குவது பாவம் என்கின்றார் ஒளவையார்
மானுடம் அறநெறியில் வாழ்வாங்கு வாழ பெரும் போதனை செய்த மதம் இந்துமதம், அதைத்தான் இங்கும் போதிக்கின்றார் ஒளவையார்.