கந்த சஷ்டி விரதம் – சூரசம்ஹாரம்
இன்று (13 / 11/ 2023) கந்த சஷ்டி விரதம் தொடங்குகின்றது, இந்துக்களின் தனிபெரும் அடையாளமாகவும் தமிழரின் தனிபெரும் தெய்வமாகவும் விளங்கும் முருகனுக்கு 6 நாள் நடக்கும் விரதம் இது.
இந்துக்களின் பாரம்பரிய சம்பிரதாயபடி தீமை அழியும் பண்டிகையினை கொண்டாட விரதம் அவசியம்.
அப்படி நவராத்திரி விரதம் போல , தீபாவளிக்கு முந்தைய கேதார கவுரி விரதம் போல சூரசம்ஹாரத்துக்கும் அந்த விரத கடமை உண்டு.
முருகனுக்கு ஆறு முகம் என்பது தெரியும், அதற்கு புராண கதையும் எல்லோருக்கும் தெரியும்.
முருகன் என்பவர் சிவ அம்சம், சிவனின் நெற்றிபொறியில் இருந்து உருவான நெருப்பு பொறியில் இருந்து வந்த குழந்தையினை கார்த்திகை பெண்கள் வளர்த்து முருகனாக கொடுத்தார்கள் என்பது புராணம்.
புராணமும் தெய்வீக கவிஞான காளிதாசனி அருளிய குமார சம்பவமும் இதை தெளிவாக சொல்கின்றது, எல்லாவற்றும் மேலாக கீதையில் கண்ணன் தெளிவாக சொல்கின்றான்
“அர்ச்சுனா நான் படைகளிலே ஸ்கந்தன்”
அது என்ன ஆறுமுகம்?
இந்துக்கள் தர்மத்தில் 6 என்பது ஒரு விஷேஷ எண்ணாக வரும், பெரும் தெய்வங்கள் ஆறு, சாஸ்திரங்கள் ஆறு, பூஜைகள் ஆறு, பொழுதுகள் ஆறு என எல்லாமே ஆறு
முருகனின் ஆறுமுக தத்துவம் என்பது வேறொன்றும் அல்ல, அந்த ஆறு பெரும் தெய்வங்களின் சாயல் அவரிடம் உண்டு, அதுதான் ஆறு முகம்
காத்தல்,படைத்தல்,அழித்தல்,செல்வம்,கல்வி,வீரம் என ஆறுவகை வரங்களுக்கும் அவரே மிகபெரும் அதிபதி, ஆறு சாஸ்திரங்களும் அவரில் அடக்கம்
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பக்தர்கள் விரதம் மேற்கொள்ளும் இந்த காலத்தில் சில சிந்தனைகள் மேலோங்கும்
அந்த சூரபத்மன் என்பவன் வீரமும் செல்வமும் நிரம்பியவனாக இருந்தான், சும்மா அந்த நிலையினை அவன் அடையவில்லை, அசுர குரு சுக்கிராச்சாரி என்பவர் சிவனிடம் இருந்து அந்த வரத்தை வாங்க செய்தார்
சூரன் பங்க யாகம் என ஒன்றை செய்து தன் அங்கத்தை எல்லாம் வெட்டியாக தீயில் இட்டு சிவனை அழைத்து அந்த வரத்தைபெற்று வளம் அடைந்தான், சிவன் வழிவந்தார் தவிர யாராலும் அவனை கொல்லமுடியாது எனும் வரம் அது
அந்த வரத்தால் வீரமும் செல்வமும் அதாவது பதுமம் கொண்டிருந்ததால் சூரபத்மன் என்றானான் இவனுக்கு ஒரு சகோதரன் உண்டு அவன் பெயர் சிங்கமுகன், சகோதரி உண்டு அவள் பெயர் கஜமுகி
66 கோடி அசுரர்களுக்கும் அவனே அரசன் அந்த பலத்திலும் சிவனிடம் பெற்ற தனிவரத்திலும் மாபெரும் அட்டகாசங்களை செய்து உலகை மிரட்டி தேவர்களை எல்லாம் ஒடுக்கி வைத்திருந்தான்
சிவனின் வம்சம் மட்டுமே அவனை அழிக்கமுடியும், ஆனால் சிவனோ தவத்தில் இருப்பவர் இடைஞ்சலாக வந்த மன்மதனையே எரித்தவர் என்பதால் தனக்கு ஆபத்தே இல்லை என அவன் நிம்மதியாய் அட்டகாசம் செய்து கொண்டிருந்தான்
தர்மத்தின் கீச்சுகுரல் அதர்மத்தின் காலடியில் இருந்து வந்தபொழுதுதான் சிவன் கண் திறந்தார், அப்பொழுதுதான் முருகன் உதித்தார்
ஒரு மாபெரும் அவதாரம் ஒரே ஒரு அரக்கனை மட்டும் அழிப்பதற்காக வராது, அக்கிரமங்கள் உச்சமாக திரும்பும் திசையெல்லாம் ஆட்டம் போடும் காலம் ஒரே அவதாரம் வந்து எல்லோரையும் அழித்துவிட்டு செல்லும்
கண்ணன், ராமன் வாழ்வில் இதை காணலாம்
முருகனும் அப்படியே, சூரபத்மனுக்கு முன்பே ஏகபட்ட அசுரர்களையும் பூதங்களையும் அழித்துவிட்டே அவர் தென்னகம் வந்தார்
தென்னகத்தில் அசுரர் ஆட்டம்போடும் பொழுதெல்லாம் வடக்கே இருந்து அவதாரம் வருவதும், வடக்கே சிக்கல் எனும்பொழுது இங்கிருந்து அவதாரங்கள் செல்வதும் காலம் காலமாக நடப்பவை
தேற்கே இருந்து வடக்கே சென்ற அவதாரம் நிறைய உண்டு, வெகு சமீபமாக சென்று காசியில் ஆலயம் மீட்டவர் குமர குருபரர்
ஆம் இந்த தர்மபூமி அப்படித்தான் சமநிலையினை பேணி கொண்டே இருந்தது, தர்மம் அப்படித்தான் மீண்டு கொண்டே வந்தது.
சூரபத்மன் அசுரன், அசுரர்களுக்கு இருக்கும் மிகபெரிய பலவீனம் உறவுகளில் சிக்கியிருப்பார்கள், உறவு எனும் மாயையில் அவர்கள் விலங்கிடபட்டிருபபர்கள் அந்த விலங்கே அவர்களுக்கு அழிவாகும்
ராவணன் போல சகோதரியால் களத்துக்கு வந்தான் சூரபத்மன்
கடும் போரில் சூரபத்மன் தளபதிகள் முதல் சிங்கமுகன் தொடர்ந்து ஒருகட்டத்தில் சூரனே வர அவனை முருகன் வதைக்க அவனோ பலமுகம் காட்டி கடைசியில் மரமாக நின்றான், முருகன் அவனை வேலால் பிளக்க சேவலும் மயிலுமாக அவன் முருகனை பணிந்தான்
சேவல் முருகன் கொடியாயிற்று, மயில் அவன் வாகனமாயிற்று என்பதோடு சூரசம்ஹாரம் முடிகின்றது
இந்த காட்சி பல வகையில் நோக்க கூடியது
அதர்மம் ஆடும் பொழுது தர்மம் தானே ஒரு சக்தியினை மீட்டெடுக்கும், சிவனுக்கு வாரிசே இல்லை அது வரவும் வராது எனும் இறுமாப்பில்தான் அந்த வரம் வாங்கினான் அசுரன்
ஆனால் சிவனின் ருத்தகோப நிலையில் அவர் நெற்றிகண்ணின் தீபொறிய குழந்தையாக உருவாகி சக்தியோடு வந்தது
அந்த குழந்தைக்கு வேல் எனும் ஆயுதம் கொடுத்தவள் அன்னை சக்தி
ஆம் எந்த அதர்மத்தை அழிக்கவும் சிவனும் பார்வதியிடம் வேண்டினால் பலன் கிடைக்கும் என்கின்றது முதல் செய்தி, அழியாத அதர்மம் ஏதுமில்லை என்கின்றது அந்த சூரசம்ஹார செய்தி
சூரசம்ஹாரம் திருசெந்தூரில் நடந்தது என சொன்னாலும் உண்மையில் அது திருசெந்தூருக்கு அடுத்திருக்கும் மணப்பாடு எனும்பகுதியில் நடந்தது என்றும் ஒரு ஆய்வு உண்டு
அந்த ஊரின் அக்கால பெயர் “மாம்பாடு”, மரமாக மாறிய சூரன் அங்குதான் நின்றதாகவும் அவனை முருகன் பிளந்த இடம் அதுதான் என முன்பு கருதபட்டது, பின் மணப்பாடு என மாறிற்று என்பார்கள்
இன்றும் அப்பகுதியினை சுற்றி ஆறுமுகநேரி, ஆறுமுக மங்கலம் என பல ஆறுமுக அடையாளங்கள் இன்றும் உண்டு.
ஆனால் அ சில விஷேஷமான பிரபஞ்ச சக்திகள் கொட்டும் இடமாக இருப்பதால் அந்நாளைய ஞானிகள் திருசெந்தூரில் முருகனுக்கு ஆலயம் அமைத்தார்கள், அவ்வாலயம் காலம் காலமாக நல் வரங்களை வழங்கி கொண்டு நிலைத்திருக்க அதுதான் காரணம்
சூரபத்மனை முருகன் வதம் செய்த நினைவாக அவ்வாலயம் பல யுகங்களை தாண்டி நின்று கொண்டிருக்கின்றது. அங்கிருந்து முருகனும் அருள் வழங்கி கொண்டிருக்கின்றான்
ஆற்றுபடுத்துதல் என்றால் நல்ல விஷயங்களை சொல்லி அமைதிபடுத்துதல் என்பது பொருள் இதனால் முருகன் பெயரில் திருமுருகாற்றுபடை அறுபடை வீடுகளை பாடும் படி அமைந்தன அதில் திருசெந்தூர் ஆலயமும் அமைந்தது.
என்றோ நடந்த ஒரு சம்பவத்தை சூர வதையினை வருடாவருடம் விரதம் இருந்து கொண்டாட வேண்டுமா? அந்த நாளில் மட்டும் நினைவு வந்து நொடிபொழுது வணங்கினால் போதாதா?
எதற்காக விரதமும் இன்னும் பல விஷயங்களும் வருடா வருடம் இருக்குமாறு பார்த்து கொண்டார்கள்?
ஏன் முருகன் வேல் ஏந்தி முருகனை அதுவும் முகம் மாறி மாறிவரும் சூரனை வதைப்பதை 1 வாரம் தியானித்து விரதம் இருந்து கொண்டாட சொன்னார்கள்?
ஆம், இது சூரனை வதைக்க முருகன் வந்து வதைத்த கதை என்றாலும் இதில் ஆன்மீக மறைமுக சூட்சும தத்துவங்களும் உண்டு
இந்துக்களின் ஏற்பாடே ஆன்மீகமும் மனவியலும் இன்னும் பல சூட்சுமனான வாழ்க்கை தத்துவங்களும் கொண்ட இணைப்பு புள்ளி.
சூரசம்ஹாரம் என்பது ஒவ்வொரு மனிதனும் அவனின் மனம் உலக பந்ததித்தில் லவுகீக மாயையில் சிக்கி அவன் மனம் அறிவுக்கும் மாயைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தின் வடிவம்
அவன் மனசாட்சி எனும் தெய்வ சக்தியும் மாயை எனும் ஆசையும் மோதும் போராட்டம்
ஞானமான ஆன்மீக காட்சியில் அது அப்படித்தான் தெரியும்
சூரன் என்பவன் மாயா என்பவள் பெற்றேடுத்த குழந்தை என்கின்றது புராணம், ஆம் ஆசை என்பது ஏகபட்ட குழந்தைகளை பெற்றேடுக்கும் அப்படி பிறந்தது ஒரு பேராசையான சூரன், மூர்க்கமான சிங்கமுகன், அகங்காரம் கொண்ட சிங்கமுகி
இந்த அதர்ம உறவுகள்தான் ஒன்றாக கலந்து உலகை ஆட்டுவித்து கொண்டிருந்தன, ஆம் ஆசையும் மயக்கமும் அது பெருக்கிவிடும் உறவுகளும் ஒரு பெரும் ஆபத்து
அதை அழிக்க இறை அடி பணிதல் அவசியம், சிவனிடம் வரம் வாங்கி அன்னையிடம் ஞானம் எனும் வேல் வாங்கி அதை அழித்தல் ஒன்றே வழி
ஆம் மாயையினை வெல்ல ஞானம் எனும் சக்தியினை இறைவிடமும் அதை பயன்படுத்தும் நோக்கத்தை சிவனிடமும் ஒருவன் வாங்க வேண்டும்
மாயை என்பது எளிதாக அழியாது அதன் குணங்களும் அகங்காரமும் பல, ஒரு சங்கிலியினை உடைத்தால் உடைய கூடியது அல்ல, அது பல வாசல்களையு அரணையும் கொண்ட கோட்டை அது
ஆம் சிங்கமுகன் அவன் தளபதி உட்பட நிறைய அரக்கர்கள் வந்தது போல் பல மயக்கங்களை கடக்க வேண்டும்
கடைசில் எஞ்சி இருக்கும் மாயை என்பதும் எளிதில் அழியாது, சூரன் பலமுகங்களை காட்டுவது என்பது மாயை பல முகங்களை காட்டும் என்பதன் குறியீடே
ஆம் பாசம்,பந்தம், கர்வம், செல்வம், பெண், மண், மக்கள், அதிகாரம் , செல்வாக்கு, புகழ் என என்னென்ன முகங்களையெல்லாமோ காட்டி மாயை ஒருவனை மயக்கும்
இதுதான் அசுரன் பல முகம் மாறுவதும் ஒவ்வொன்றையும் முருகன் அழிப்பதுமே, ஆம் ஞானம் எனும் ஒரு ஆயுதத்தால் இந்த மாயையினை வெல்லல் வேண்டும்.
அப்பொழுதும் மாயை அழியுமா என்றால் அழியாது, சூரன் மரமாக நின்றது அதைத்தான் சொல்லும்
சூரன் மாமரமாக நின்றான் என்றால் மாம்பழமரம் அல்ல, மா என்றால் பெரிய என பொருள், ஆம் மிகபெரிய மரமாக நின்றான்
மரம் என்பது மாயை ஆழமாக வேரூன்றி நிற்கும் என்பதையும் ஏகபட்ட கிளைகளையும் இலைகளையும் குறிப்பதாகும். ஆம் மாயை என்பது அப்படி ஆழமான வேர்களை கொண்டது ஒவ்வொரு வேரும் ஆசை, காமம், குரோதம் என ஒவ்வொன்றாய் மாயையினை தாங்கி நிற்கும்
சுருக்கமாக இதுதான், மாயை என்பது பல முகம் காட்டும் அதை எல்லாம் ஒழித்தாலும் கண்ணுக்கு தெரியா வேர் மரத்தை தாங்குவது போல் தாங்கி நின்று கிளைபரப்பி நிலைத்து நிற்கும்
ஆம், மனதின் அடி ஆழத்தில் மாயை ஒவ்வொரு மனிதனுக்கும் மிக கெட்டியாக வேர்விட்டு நிற்கின்றது அதை அகற்றவும் ஞானம் எனும் வேல் வேண்டி இருக்கின்றது
அந்த வேல் மரதை இரண்டாக பிளந்து சேவலாகவும் மயிலாகவும் மாறிற்று என்கின்றது புராணம்
மரம் இரண்டாக விழுந்தது விஷயம் அல்ல அவை பறவைகளாக மாறி முருகனை அடைந்து பணிந்ததுதான் கவனிக்கதக்கது
முருகனை அவை பணிந்தது, மயில் முருகனை சுமக்கும் வாகனமாக பணிந்தது. அப்படியெனில் மாயையினை வெல்ல கடவுளை பணி என்பதே விஷயம்
ஆம் தெய்வம் மனதை ஆளட்டும், அது ஆளும் மனதில் மாயை ஆளாது, தெய்வம் அதை அடக்கி வைக்கும்
இன்னும் நுட்பமான விஷயம் உண்டு
ஏன் சேவலாகவும் மயிலாகவும் மாறினான் சூரன்?
சேவல் என்பது பறவைகளில் விஷேஷமானது, மந்தையில் முந்தி செல்லும் கம்பீரமானது எல்லாவற்றுக்கும் மேல் அதிகாலையிலே விழிக்கும் தன்மை உள்ளது
வெளிச்சம் வரும் என்பதை அனுதினமும் காலையில் சொல்லும் பறவை அதுதான், சேவல் கொடியோன் என முருகனை சொல்வது இதனாலே
முருகனை வணங்குகள் வெளிச்சம் விரைவில் வரும், முருகன் விடியலின் கடவுள்
மயில் என ஒன்றை சொன்னார்களே ஏன்?
மயில் என்பது நல்ல நிலங்களில் வாழும் பறவை, மக்கள் வசிக்கும் வளமான இடங்களில் வாழும் பறவை அதனிலும் மேலாக வானத்தோடு தொடர்புடைய பறவை
வானம் எப்பொழுது மழை கொட்டும் என்பதை உணர்ந்த பறவை அது, அது ஆடினால் மழை வருவது நிச்சயம்
முருகனை வணங்கினால் எல்லா வானலோக ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பதை குறிப்பால் சொல்வது மயில்
இந்து வழிபாட்டில் மயில் பெரும் இடம்பெறுவதும், சூரன் மயிலாக வந்து முருகனை பணிந்ததும் இப்படியே
மயிலை ஆன்மாவின் குறியீடாக சொன்ன இந்துமதம், சேவலை ஆன்மாவின் வைராக்கியத்துக்கும் விழிப்புக்கும் குறியீடாக காட்டிற்று
ஆன்மா முருகனை சுமக்க வேண்டும் என்பதை மயிலாக காட்டினார்கள், ஆன்மா உறுதியும் விழிப்பும் கொண்டிருக்க வேண்டும் என்பதை சேவல் கொடியாக காட்டினார்கள்
மயில் தோகை விரிப்பது போல குவிந்திருக்கும் சக்கரமெல்லாம் விரிவடைந்தால் முருகனை சுமக்கும் பாக்யம் ஆன்மாவுக்கு கிடைக்கும் என்றார்கள்
ஏன் ஆறு நாட்களை விரதநாளாக வைத்தார்கள், விஷயம் இல்லாமல் இல்லை மாயையின் மிகபெரும் பிம்பங்களான 6 விஷயங்களை ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து அகற்ற வேண்ட சொன்னது
பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பவை அந்த மாயைகள்
சூரமபத்மன் நடத்திய போரின் ஒவ்வொரு காட்சியினையும் காணுங்கள் இந்த வரிசையினை காண முடியும்
ஆறு நாட்களில் ஒவ்வொரு நாளும் இந்த குணங்களை வேரறுக்க விரதம் இருந்து தியானித்து 6ம் நாளில் ஞானம் பெற வேண்டும் என்பது ஏற்பாடு
இதனால் விரதம் இருப்பார்கள், விரதம் என்பது உண்ணாமல் இருந்து தியானிப்பது என்பது இந்துமரபு
இந்நாட்களில் ஒருவேளை மட்டும் உண்பார்கள் சிலர், சிலர் ஒருவேளையினையும் பால் பழம் என உண்டு அந்த சிந்தையிலே நிலைத்திருப்பார்கள்
இந்நாட்களில் முருக பக்தியில் உருகி மாயையினை அகற்ற அவனை வேண்டி நின்று எல்லா வளங்களும் ஆசீயும் வாங்க விரதம் இருப்பார்கள், அதில் பலனும் உண்டு
மாயை அகன்றால் தெளிவு வரும் தெளிவு வந்தால் எல்லா வளமும் வரும் அதில் தெய்வமும் வரும், மாயையினை வீழ்த்த ஞானம் எனும் வேல் அவசியம்
தெய்வத்தை வேண்டி நிற்க இறைவனே அந்த ஞானத்தை தந்து உங்களை மீட்கும்
இதுதான் சூரச்மஹார தத்துவம்
இன்னும் நுணுக்கமாக ஒரு விஷயம் உண்டு முருகனின் 6 முகங்களும் மனித உடலின் ஆறு சக்கரங்களை குறிப்பது.
7ம் சக்கரம் உச்ச நிலை ஞானத்தை கொடுக்கும் சக்கரம்
மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிபூரகம்,அனாகதம்,விசுத்தி,ஆக்கினை ஆகிய 6 சக்கரங்களை தூண்டினால் உச்ச ஞான நிலையான தூரியம் எனும் சக்கரம் விழிப்படையும் அது பிரபஞ்சத்தோடு கலக்க செய்யும்
மாபெரும் ஞானிகள் இந்த 7ம் நிலையினை அடைந்தவர்கள், மனிதரில் சிறந்து வாழ 6 சக்கரங்களும் விழிப்படைவது அவசியம்
இந்த 6 நாள் விரதமும் அன்னாளில் இதை விழிப்படைய செய்வதாக இருந்தது, இது எல்லோராலும் முடியாது என்றாலும் முடிந்தவர்கள் முயற்சிக்கலாம்
மற்றவர்கள் விரதம் வழிபாடு பக்தி பாடல்கள் என முயற்சிகளை மேற்கொள்ளலாம்
விரதம் என்பது உணவினை குறைக்க சொல்வது, உணவினை குறைக்க குறைக்க உடலில் ஒரு நிதானம் வரும், உணர்ச்சியில் தெளிவு வரும்
ஒருவேளை உண்பவன் யோகி, இருவேளை உண்பவன் போகி, மூவேளை உண்பவன் ரோகி என்கினது தர்மம்
இந்த 6 நாள் யோகியாக இருந்து பாருங்கள், யோக நிலை உங்களுக்கும் வரும் அதில் தெய்வத்தை உணர்வீர்கள். அமைதியும் வளப்பமும் உங்களிடம் இருந்து எல்லோருக்கும் பரவும்.
இந்துக்கள் கந்த சஷ்டி கவசம், கந்த சஷ்டி குரு கவசம் போன்றவற்றை காலையும் மாலையும் ஒலிக்கவிட்டு பிரார்த்திக்கலாம்
வீடெல்லாம் வேல் குத்தி வழிபடலாம், அது மாயையினை அகற்றும் ஞானத்தின் அடையாளமாகட்டும்
முருக பக்தி ஒவ்வொருவரின் மாயையினை அழித்து ஞானத்தை கொடுக்கட்டும் அதில் தமிழகம் செழிகட்டும், ஒளி பரவட்டும்
தீமை அழிய தர்மம் தளைக்க ஒவ்வொரு இந்துவும் இந்த விரதத்தை கடைபிடித்தால் நிச்சயம் முருகன் அருளால் தமிழகம் செழிக்கும்
மாயைகள் அழியட்டும், தர்மம் செழிக்கட்டும்.