கருட பஞ்சமி

இந்துக்களின் அடையாளங்களெல்லாம் ஞான குறியீடுகள், ஒவ்வொரு அடையாளமும் பெரும் ஞானத்தை குறிப்பது.

நாகசதுர்த்தியும், கருடபஞ்சமியும் அப்படியானதே.

இந்துக்களின் பெரும் அடையாளம் நாகம், அதுவும் படமெடுக்கும் நாகம். அது சிவனின் கழுத்தில் இருக்கும் முருகனின் காலடியில் கிடக்கும், விநாயகரின் இடுப்பில் கொடியாய் கிடக்கும், அப்படியே ஆயிரம் தலைகளுடன் பரந்தாமனுக்கு படுக்கையாய் சுருண்டிருக்கும்.

அதே நேரம் தெய்வங்களின் வாகனங்கள் என ஒவ்வொன்றை அடையாளப்படுத்தியது இந்துமதம், சிவனுக்கு காளையும், முருகனுக்கு மயிலும், பரந்தாமனுக்கு கருடன் என்றும் அது சொன்னது.

தெய்வங்களுக்கு ஏன் பாம்பும் வாகனங்களும் வேண்டும்? அவை சர்வ சக்தியுடையவை அல்லவா? என பகுத்தறிவாளன் எனும் புரட்டன் கேட்கத்தான் செய்வான், எல்லாவற்றையும் கேள்வி கேட்பதே அறிவு என அவன் தவறாக நம்பிக் கொண்டிருக்கின்றான்

சில விஷயங்கள் ஆழமானவை, அதை சாமானியனுக்கு புரியும் வகையில் சொல்ல சில உதாரணம் தேவை.

இந்துமதம் அந்த ஆழமான தத்துவங்களை எளிய உதாரணம் மூலம் விளக்கிற்று.

உடலில் இருக்கும் குண்டலி சக்தி எனும் பெரும் சக்தியினை அது நாகம் என சொல்லிற்று,  குண்டலி சக்தியினை எழுப்பினால் இறைவனை உணரலாம் என்பதை சூசகமாக சொல்லிற்று.

அதாவது ஒவ்வொரு மனிதனுள்ளும் இறைசக்தி சுருண்டு கிடக்கின்றது, உரிய யோகத்திலும் பக்தி பயிற்சியிலும் அதை எழுப்பினால் மனிதன் தெய்வசக்தி பெறலாம் என்பதையே நாகமென சொல்லிற்று.

நாகவடிவில் ஒவ்வொரு இந்துவும் காண்பது தன்னில் மறைந்திருக்கும் சக்தியினையே, இந்த சக்தியினை பெருக்கினால் அவனுக்கு தெய்வசக்தி கிடைக்கும் என்பதையே தத்துவமாக போதித்தது இந்துமதம்.

அதே நேரம் அந்த சக்தியில் அவன் பெரும் தலைகணமாக ஆடினால் என்னாகும்? என்பதை சொல்லத்தான் அது தன் காலடியில் பாம்பினை இட்டு சிரித்தது.

மனிதனுள் தெய்வசக்தி இருக்கின்றது. ஆனால் அவன் அதை கொண்டு அடாதன செய்தால் தெய்வம் அவனை அடக்கும், மானிடன் பெறும் சக்தியினை விட பெரிய சக்தி பரம்பொருளே என காட்டிற்று.

மானிடனே, நீ உன்னுள் இருக்கும் தெய்வசக்தியினை எழுப்பினாலும் எனக்கு கட்டுபட்டவனே என்பதுதான் தெய்வங்கள் காலில் சர்ப்பம் இருக்கும் தத்துவம்.

அப்படியே ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு வாகனம் வைத்தார்களே ஏன்?

தெய்வத்தின் வாகனங்கள் ஆத்ம தத்துவங்கள், சிவனின் காளையும், முருகனின் மயிலும், கண்ணனின் கருடனும் குறிப்பது ஆத்மாவினையே.

மானிட ஆத்மா என்பது பிரபஞ்சத்தில் இருந்து வந்த சக்தி, அந்த சக்தி இறைவனை சுமந்தால் முக்தி அடையும் என்பதே

மானிட ஆன்மாவில் இறைவன் தங்கியிருக்கின்றான் என்பதையே அப்படி வாகன தத்துவமாக சொன்னார்கள்

ஆலயங்களிலும் அந்த விலங்கையும் பறவையினையும் தெய்வ சன்னதிக்கு எதிரே நிறுத்திவைத்தார்கள், அதன் குறுக்கே செல்லக் கூடாது என ஆகம விதியும் வகுத்தார்கள்

ஆம் ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் எதுவும் இடையூராக வரக்கூடாது என்றார்கள், அந்த அளவு ஆன்மா இறைவனை சுமக்க வேண்டும் என்றார்கள்

இந்த தத்துவமேதான் பாம்பாகவும் தெய்வங்களின் வாகனமாகவும் வந்தது

இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு சக்திகள் உண்டு, அவையெல்லாம் பரம்பொருளால் கட்டுப்படுத்தபட்டு அவனோடு உலகை இயக்குபவை

அப்படிப்பட்ட சக்திகளைத்தான் பாம்பு என்றும் கருடன் என்றும் சொன்னார்கள்

நாகத்தை வணங்கும் மனிதன் தன்னில் இருக்கும் இறைவனை உணர்தல் வேண்டும்,  தன்னில் இறைசக்தி சுருண்டு கிடக்கின்றது. அது எழுந்து ஒளிவீசவேண்டும் என மன்றாட வேண்டும்

அந்த நந்தியோ கருடனோ காணும் மனிதன் தன் ஆத்மாவும் இறைவனை சுமக்க வேண்டும், அப்படி சுமந்து கர்மாக்களை கழிக்க வேண்டும் என்றார்கள்

விலங்குகளிலும் பறவைகளிலும் சூசகமானவற்றைத்தான் குறியீடாக்கினார்கள், அதில் சூட்சும சமூக தத்துவமும் இருந்தது

காளை சிவனின் வாகனம் எனும் வகையில் காளை இனம் காக்கப்பட்டது. அதனால் கால்நடை பெருக்கமும் விவசாயமும் எளிதானது, போக்குவரத்தும் சுலபமானது

கருடன் என்பது பாம்புகளை கட்டுப்படுத்தும் பறவை, அது இல்லையென்றால் பாம்பினங்கள் பெருகிவிடும்

அதே நேரம் பாம்புகளும் இங்கு அவசியம், பாம்பின் புற்றுமுதல் அது எலிகளை வேட்டையாடுவது வரையும் இன்னும் அதன் விஷம் மருந்தாகவும் இன்னும் பலவகை பலன்களும் உண்டு

உலகில் கருடனும் தேவை பாம்பும் தேவை இரண்டையும் சமபடுத்த ஒரு சக்தியும் தேவை

இந்த தத்துவத்தில்தான் எம்மதமும் சொல்லா பெரும் தத்துவத்தை இந்துமதம் போதிக்கின்றது

பிற மதங்களில் கடவுள் நல்லவர், சாத்தான் கெட்டவன். சாத்தான் கடவுளை அடையாமல் மானிடனை நரகத்துக்கு இழுப்பான் என்பார்கள்.

ஆனால் சாத்தான் எங்கிருந்து வந்தான் அவனை ஏன் கடவுள் படைக்க வேண்டும் என்பதை சொல்லமாட்டார்கள்

இந்துமதம் அதை தெளிவாக சொன்னது, தெய்வம் நன்மை தீமைக்கு அப்பாற்பட்ட சக்தி. அது முழு ஞான சக்தி என்றது.

இதனாலே அது பாம்பை தன் காலடியிலும், கருடனை தன் வாகனமாகவும் பரம்பொருள் வைத்து இருப்பதாக காட்டிற்று,

இந்துமதம் சாத்தான் என எதனையும் சொல்லாது. மாறாக மாயை எனும் சோதனையினை அறியாமையினை சொல்லும். அந்த மயக்கத்தில் இருந்து மீண்டால் முக்தி சாத்தியம் என்பதை சொல்லும்

அந்த ஞானத்தை அடைய நன்மையும் தீமையும் அவசியம் என சொல்லும்

மிக நன்மையான காரியங்களை வாழ்வில் செய்தால் அதை தொலைக்க நல்ல கர்மாவும், கெட்ட காரியங்களை செய்தால் அதனை கழிக்க கடினமான வாழ்வும் எடுக்க பிறக்க வேண்டும் என சொல்லும்.

நன்மை தீமை கடந்த வாழ்வே ஞானப் பெருநிலை என சொல்லும் மதம் இந்துமதம், அதாவது எல்லாம் கடந்த சூனிய பெருநிலை

அந்த நிலையினை குறிக்கத்தான் ஒருபக்கம் கருடனையும் ஒரு பக்கம் பாம்பினையும் தராசில் நிறுத்தினான் பரம்பொருள், முள் சரியான நிலையினை காட்டிற்று.

வாழ்வின் நன்மை தீமைகளை இறை அருளால் கடந்து ஞானம் அடையவேண்டும் என்பதையே கருடன் பாம்பு வடிவில் காட்டிற்று.

எதையும் அதிகம் நேசிக்காதே, எதையும் அதையும் தூற்றாதே, எல்லாமும் இங்கு இறைவனால் அனுமதிக்கபட்டது என்பதுதான் அந்த தத்துவம்.

இந்த தத்துவம்தான் ராமாயணத்தில் சொல்லப்பட்டது, பாரதத்தில் சொல்லப்பட்டது, தேவ அசுர யுத்தமெல்லாம் சொல்லப்பட்டது.

இந்த உலகம் நன்மைகளாலும் தீமைகளாலும் சூழப்பட்டது, அதுதான் ஒரு மனிதனுக்கு ஞானத்தை கொடுக்கும், தர்மம் தன்னை யாரென காட்ட அதர்ம சக்திகள் தெய்வத்தால் அனுமதிக்கபட்டதே என்பதை அழுத்தி சொன்னது இந்துமதம்

எக்காலமும் இங்கு நல்லவரும் தீயவரும் இருப்பார்கள், நன்மையும் தீமையும் உண்டு. அதை கொண்டு ஞானம் அடைந்து இறைவனை உணர்தல் வேண்டும் என்பதுதான் இந்த கருடனும் பாம்பும் சொல்லும் பெரும் தத்துவம்.

பாம்பின் விஷம் ரத்தினமாக மாறுவது போல மானிடனின் கெட்ட சிந்தனையும் ஒருநாளில் ஞானமாக மாற வேண்டும், உயரப் பறந்தாலும் வானை மீற கருடனால் முடியாது. வானம் மிகப் பெரியது இறைவன் மிகப்பெரியவன் என்பதை உணர்தலும் இந்நாளில் முக்கியம்.

பிரபஞ்சத்தின் இயக்கு சக்தியினை சுதர்சன சக்கரமாக சொன்ன இந்துமதம், இன்னும் சில சூட்சும சக்திகளை கருடனாகவும் பாம்பாகவும் காட்டிற்று.

அவைகளை நோக்கி வழிபட இறை அருளில் ஞானம் பெருகும், வாழ்வு வளமாகும் என்பதை சொல்லிற்று

அந்த சக்திகளை சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் என ஆழ்வார்களாக அறிவித்தது, அந்த பெரும் சக்தியினை ஆதிஷேசனாக நிறுத்தியது.

இந்த வடிவங்களில் அதாவது கருடனோ பாம்போ சக்கரமோ வழிபடும்பொழுது அந்த அந்த பிரபஞ்ச சக்தி மானிடருக்கு கிடைக்கவும் அதனால் தெளிவு வரவும் பல ஏற்பாடுகளை செய்தது இந்துமதம்.

அதைத்தான் இன்று நாக சதுர்த்தி, கருட பஞ்சமி என இந்துக்கள் கொண்டாடுகின்றார்கள்.

தன்னுள் இருக்கும் இறைவனை உணர்தலும், தன் ஆத்மாவில் இறைவனை சுமக்க வேண்டும் என்பதே இதன் தத்துவம், அந்த கருடனையும் நாகத்தையும் வணங்க வணங்க பிரபஞ்ச பெரும் சக்தி இறங்கி வருகின்றது

அது நன்மை தீமைக்கு அப்பாற்பட்ட நிலைக்கு மனிதனை இழுத்து செல்கின்றது, அப்படிபட்ட நிலைக்கு செல்லும் மனிதன் ஞானமடைந்து முக்தியடைவான்

இந்துக்கள் மரபுபடி நாகத்தின் மூலமும் கருடனின் மூலமும் ஒன்றே, அந்த சண்டை என்பது சகோதரர்களின் சண்டை என்பது நம்பிக்கை

இந்த கருட பஞ்சமி அன்று இந்துக்களில் சகோதர ஒற்றுமைக்காக வழிபாடு நடத்தப்படும், பரம்பொருளின் முன்னால் பாம்பும் கருடனும் ஒன்றாக இருப்பது போல நாட்டில் எல்லோரும் ஒற்றுமையாய் இருத்தல் அவசியம் என வழிபாடுகள் நடத்தப்படும்

கருட பஞ்சமியின் சிறப்பே அதுதான்

இன்று அந்த வழிபாடு வட இந்தியாவின் சில பகுதிகளோடு சுருங்கிவிட்டது அதை மீட்டெடுத்தல் வேண்டும்.

பாரத தேசத்தில் எல்லோரும் ஒற்றுமையாக அன்பாக இணைந்திருக்க, எல்லோரும் ஒரே இந்தியர்கள் எனும் சகோதரத்துவ உணர்வுடன் நிறைந்திருக்க, அதனால் தேசம் வளமும் பலமும் அடைய இந்நாளில் வழிபடுவோம்.

இந்தியராய் இணைவோம், தேசத்தை காத்து நிற்போம்.