காளிதாசனின் மேகதூதம் : 02
முதல் பத்து ஸ்லோகங்கள்
கொழித்த செல்வத்தில் மிதப்பதும், சுவரையும் பொன்னால் கொண்ட அலகாபுரி பட்டணத்தின் வேந்தன் குபேரன் இட்ட சாபத்தால் மனைவியினை சில காலம் பிரிந்து தொலை தூரம் சென்ற யட்சன் ஒருவன், பரிகாரம் தேடித் தனித்து தவித்து நின்றான். அன்னை சீதையின் ஸ்நானத்தால் புனிதமான நதியோடும் சித்திரகூட மலையில் நின்றான்.
தன் தெய்வ சக்தியும், பெரும் செல்வமும், மின்னல்போல் அழகானவளும் அன்பு நிறைந்தவளுமான தன் காதலியினையும் ஒரே நேரம் இழந்து புலம்பி நின்றான்.
தன் ஆத்மாவில் கலந்த அந்தப் பூங்கொடி போன்றவளின் நினைவால் கையின் கடகம் கழன்று விழும்படி மெலிந்து சுருங்கி உருமாறிய அவன், சில மாதங்களை அம்மலையில் கழித்தபின் ஆடிமாத மழைக்காலத் தொடக்கத்தில், கருத்த யானை மணல் மேட்டில் முட்டி விளையாடுவதைப் போல மலை சிகரத்தில் மோதி நிற்கும் கருத்த மேகத்தைக் கண்டான்.
வானம் பார்க்க சரிந்திருக்கும் அந்த மலையினை மேகக் கூட்டம் படர்ந்து அணைக்கும் போது அவனுக்குத் தன் காதலியின் நினைவோடு விரகதாபம் கூடிற்று. எல்லா உயிர்களையும் ஏங்க வைக்கும் மழைக்கால மயக்கம், தனித்திருக்கும் அவனுக்குள் பெருகிற்று.
மயக்கம் தரும் தாழம்பூக்கள் பூக்கும் அந்த ஏகாந்த சூழலில், எல்லா உயிர்களும் துணையினைத் தேடுவது போல் அவன் மனமும் தேடிற்று.
தனிமைப் போல் தண்டனை இல்லை என்பதை மனதால் உணர்ந்தவன் மனம் கலங்கிற்று.
மேகம் மெல்லியத் தூறலை சிந்தும் முன் அவன் தன் கண்கள் நீரை சிந்தின, அழகிய காதலைத் தூண்டி நிற்கும் மேகத்தினை கலங்கும் விழிகளோடு நோக்கினான். அன்புக்குரியவள் நினைவாலே சிந்தை முழுக்க நிரம்பி மனம் உடைந்து தன்னிலைச் சொல்லவும் தகுதியற்று கலங்கி நிலை குலைந்தான்.
மனைவியினைப் பிரியாதோரே மழைமேகம் காணும்போது இனம்புரியா மயக்கத்துக்குள் செல்லும்போது, தனித்திருக்கும் அவர்கள் நிலையினைச் சொல்ல வார்த்தை ஏது?
பல வகை எண்ணமும் தயக்கமும் கொண்டிருந்த அந்த சக்தியிழந்த யட்சன், தன் காதலி இந்த பிரிவாற்றாமல் ஆவணியில் இறந்து விடுவாளோ என அஞ்சியபடி அவள் நினைவால் தைரியம் கொண்டு மேகத்தை ஏறெடுத்தான். தன்னிடம் இருந்து நல்ல செய்தியினைத் தேடும் அவளுக்கு தான் நலமெனும் செய்தியினைச் சொல்ல முனைந்தான்.
காட்டுமல்லி பூக்களெடுத்து மேகம் நோக்கி சொரிந்து வாழ்த்து சொன்ன யட்சன் தன்னைச் சொல்லி தன் நிலையினைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டான்.
புகை, நீர், நெருப்பு, காற்று இவைகளின் தொகுதியானதும் உயிரற்றதுமான மேகம், எப்படித் தன்னையும், தன் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டிருக்கும் என்றோ, புலன்கள் கொண்ட மனிதர்கள் செய்ய வேண்டிய தூதுப் பணியினை இந்த மேகம் செய்யுமா என்றோ அவன் சிந்திக்கவில்லை.
பாசத்தில் சிக்கியோருக்குப் பகுத்தறிவு இல்லை. ஆசையில் இருப்போருக்கு சரியான சிந்தனை இல்லை, ஏழைக்கும் தரித்திரனுக்கும் யோசிக்க சக்தியில்லை. அப்படியே காதல் நிறைந்தாலும் அறிவு அகலும்.
இது சாத்தியமா என்று கூட சிந்தியாத யட்சன், சோர்ந்து கிடக்கும் தன் மனதிற்கான ஆறுதலை மேகத்திடம் தேட முனைந்தான்.
மேகத்தை வணங்கிச் சொன்னான்.
“பெருமழை பொழிந்து உலகையே மூழ்கடிக்கும் சக்தி கொண்ட மேகமே! புஷ்கரம் எனும் பெரும் குலத்தில் வந்தவன் நீ. எல்லா வடிவத்திலும் மாறும் சக்தி கொண்டவன் நீ. நினைத்த இடத்துக்குச் செல்லும் சக்தி உனக்கு உண்டு. நீ செல்லும் வழியில் உன்னைத் தடுக்க யாராலும் முடியாது.
நீ இந்திரனுக்கு அமைச்சராக இருந்து பணி செய்கின்றாய். உலகில் நீ மகத்தானவன் என்பதை எல்லோரைப் போலவும் நானும் அறிவேன். அவ்வளவு பெருமை வாய்ந்தவன் நீ.
ஆனால் நானோ தீவினையால் மனைவியைப் பிரிந்து, சக்தி இழந்து, தனியே இங்கே வாடிக் கொண்டிருப்பவன். நான் உன்னிடம் ஒரு வேண்டுதல் வைக்கின்றேன். நான் உன் புகழைப் பாட காரணம் இல்லாமலும் இல்லை.
பெருந்தன்மையானவனிடம் உத்தமனிடம் வைக்கும் வேண்டுதல் பலிக்கா விட்டாலும் மனவருத்தம் தராது. ஆனால் அற்பனிடம் உதவி கிடைத்தாலும் பின் அவன் அற்பத்தனம் பொருட்டு பெரும் மனவலி ஏற்படும்.
நீயோ வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல். பிரதிபலன் பாராது உலகுக்கே நீருற்றும் பெரும் கொடையாளன். அதனால் உன்னிடம் யாசகம் பெற வந்திருக்கின்றேன்.
மேகமே! வெப்பமுற்றோருக்கு நீயே கதி. கோடைக்கு நீ தான் ஆறுதல். பிரிந்திருக்கும் உயிர்களையெல்லாம் சேந்திருக்கத் தூண்டுபவனும் நீ. அதனால் எல்லா உயிர்களையும் பாதுகாப்பவனும் நீயே என்றாகின்றாய்.
அப்படிப்பட்ட பெரும் உதவிகளைச் செய்யும் நீ, நான் தரும் செய்தியினை மின்னல் கொடி போன்ற என் காதலியிடம் சொல்ல வேண்டும். அதனால் நானும் என் காதலியும் ஒரே நேரத்தில் உன்னால் காக்கப்படுவோம்.
சூரிய வெப்பத்தால் வாடும் உயிர்களைக் காக்கும் நீ, உயிர்கள் மயங்கி வரும் இந்த மழைக்கால வெப்பத்தால் வாடும் எனக்கும் ஆறுதலைத் தர வேண்டும்.
எனக்காக நீ இமாலயத்தின் அலகாபுரி எனும் யட்சர்கள் ஊருக்குச் செல்லக் கடவாய். அதுதான் குபேரனின் தலைநகரம். அந்நகருக்கு வெளியேதான் தலையில் குளிர்ந்த பிறை நிலவினைச் சூடிய சிவபெருமான் அமர்ந்திருப்பார்.
அந்த நிலவொளியின் பிரகாசத்தால் அலகாபுரியின் மாளிகைகளெல்லாம் பொன்னாய் மின்னும். அதைக் காண்பது உலகின் அழகான காட்சி. இதனால் உலகில் வேறு எங்குமே நீ காணமுடியாதக் காட்சியினைக் காணும் பாக்கியத்தையும் நீ பெறுவாய்.
மேகமே, நீ ஆகாயத்தில் தோன்றியதும் அயல் தேசங்களில் பணி செய்வோரின் மனைவியர் உன்னை நெற்றியில் சரியும் கூந்தலை விலக்கியபடி பார்த்து மகிழ்ந்து அழுவார்கள். அது அவர்களின் கணவன் திரும்பி வரப்போகும் அறிகுறி என்பதால் மெல்ல சிரித்து ஆனந்தத்தால் அழுவார்கள்.
நீ அவர்களின் அன்புக்குரியவன் மேகமே. தனித்து நிற்கும் காதலியரின் நம்பிக்கையின் சின்னமாய் நிற்பாய்.
மேகமே, சுதந்திரமாகச் சுற்றும் யாரும் இந்த மழைக்காலத்தில் தன் துணையினை விட்டுத் தனித்திருக்க மாட்டான். ஆனால் என்னைப் போன்று எஜமானை அண்டி வாழும் அடிமைக்கு அந்த பாக்கியமில்லை. அடிமைக்கும் அவன் காதலிக்கும் இன்புற்றிருக்க வேண்டிய காலங்கள் ஏக்கமாகவே கடந்துவிடும்.
அதற்கு நானும் என் காதலியுமே சாட்சி.
என் சகோதரன் போன்ற மேகமே! நீ செல்லும் தூது வீணாகாது. அவள் எனக்காகக் காத்திருப்பாள். நிச்சயம் அவள் வாழ்ந்து கொண்டிருப்பாள். சாபத்தின் எல்லையில் இருக்கும் இந்த நாட்களையும், சாபம் தின்ற நாட்களையும் அவள் தாங்கி எனக்காகக் காத்திருப்பாள். அவள் பூரண பத்தினி என்பதால் குற்றம் சொல்லவும் முடியாது.
என் பிரியமான மேகமே, நீ என் சகோதரன் எனும் வகையில் அவள் உனக்கு சகோதரன் மனைவியாகின்றாள். ஒரு தாயினைக் காண்பது போல அவளைக் காணலாம், தடை ஏதுமில்லை, யாரும் எதுவும் சொல்ல முடியாது.
அன்பானவனைப் பிரிந்ததும் மலர் வாடுவது போல் பெண்கள் மனம் வாடி விடும். மலர் போல மென்மையான மனம் அவர்களுடையது.
ஆனாலும் தலைவன் எப்படியும் வருவான் எனும் நம்பிக்கைதான் கொடியில் காம்பு மலரை தாங்கி நிற்பது போல் அவர்களை உறுதியோடு வாழ வைக்கின்றது. காம்பு பூவை பிடித்து வைப்பது போல, அன்பானவன் வருவான் எனும் நம்பிக்கை அவர்கள் வீழ்ந்து போகாமல் தடுக்கின்றது.
மேகமே, அவள் நிச்சயம் காத்துக் கொண்டிருப்பாள்.
மீன்போன்ற கண்களில் முத்துப்போல கண்ணீர் கொட்டியபடி அவள் காத்திருப்பாள். தேர் வரும் ஒலி கேட்கின்றதா என அவள் நிலத்தில் செவிக்கொண்டு தேடுவாள். நீ அந்நேரம் வானத்தில் சென்று செய்தி சொல்வாய்.
மேகமே! மழைக்கால தொடக்கத்தில் நீ இடித்து முழங்கும்போது, வெட்டும் மின்னலில் நிலத்தில் காளான் முளைக்கும். அது வரப்போகும் செழுமையின் அறிகுறி.
அந்த இடி முழக்கமானது பயிர்த்தொழில் செய்வோர் காதுக்கு சங்கீதமாய் கேட்கும், அவர்களின் வாழ்வு நீயல்லவா?
இந்த இடியோசை கேட்டதும் இங்கிருக்கும் அன்னப் பறவைகள், தெளிந்த நீரில் மட்டும் வாழும் அன்ன பறவைகள், இனி இங்கு மழையினால் நீர் கலங்கிவிடும். அதனால் இமயத்தின் மானஸ சரசம் எனும் எப்போதும் தெளிந்த நீரைக் கொண்டிருப்பதும், பனியின் நீரால் நிரம்பும் சுத்தமான நீரைக் கொண்டதுமான ஏரிக்குச் செல்லலாம் என வடக்கு நோக்கிப் பறக்கத் தொடங்கும்.
அப்படிச் செல்லும் அவை பசிக்குத் தோதாக தாமரை குருத்துக்களை சுமந்தபடி செல்லும். அது அன்னங்களுக்கு பல அலகுகள் இருப்பது போல் அழகான தோற்றம் கொடுக்கும்
என் இனிய சகோதரனே! அந்த அன்னங்களோடு நீ சென்றால் இமயத்தை அடைந்து விடலாம்.
வழிப் போக்கர்களாக அந்த அன்னங்கள் வருவதால் உனக்குக் களைப்பும் தெரியாது.
நீ செல்லுமிடமெல்லாம் வானம்பாடி பறவைகள் உன்னை வரவேற்று ஆடிப்பாடும். கொக்குக் கூட்டங்கள் கருத்தரிக்கும் காலத்துக்கு நீ அவசியம் என்பதால் உன்னை வரவேற்று நீல வானில் வெண் மாலை போல் உன்னை சூழ்ந்து கொண்டு வரவேற்கும்.
இப்படியாக உன் பயணம் இன்பமாய் அமையும். செல்லுமிடமெல்லாம் வரவேற்போடுச் செல்வாய். காற்று உன்னை தாலாட்டி சீராட்ட மெல்ல மெல்ல அசைந்து செல்வாய்”
(தொடரும்…)