காளிதாசனின் மேகதூதம் : 03
இரண்டாம் பத்து ஸ்லோகங்கள்
மேகமே, நீ உன் பயணத்தை தொடங்கும் முன்னால் ராமபிரானின் காலடியால் புனிதமடைந்தததும், உன் நண்பனுமான இந்த சித்திரக்கூட மலையினைத் தழுவி விடை கொள்வாய். ராமனின் கால்பட்ட இந்த மலையினைத் தழுவ நீ தவம் செய்தவனுமாவாய்.
ராமபிரான் மகா புனிதமானவன். அவன் கால்பட்ட தூசுகூட புனிதமானது எனும்போது இந்த மலை எவ்வளவு புண்ணியமானது.
நீ வருடம் ஒருமுறைதான் இவனை சந்திக்கின்றாய். பத்துமாதம் அம்மலை உன்னை பிரிந்திருக்கின்றது. அதனால் அந்த மலையினை அணைத்து கண்ணீர்விட்டு உன் அன்பினை வெளிப்படுத்துவாய். அந்த மலையும் தன் நீராவி போன்ற புகையால் உன்னைப் பிரியும் வேதனையினை பெருமூச்சாய் சொல்லும்.
உன் அன்பின் வெளிப்பாடு அந்த மலையின் கண்ணீராய் வழிந்தோடும், ஆர்ப்பரிக்கும் அந்த சத்தம் உங்கள் அன்பை உலகுக்குச் சொல்லும்.
மேகமே, நீ வள்ளல் குணம் கொண்டமையால் செல்லும் இடமெல்லாம் நீரை இறைத்துக் கொண்டே செல்வாய். அதனால் உன் உடல் இளைத்து மெலிந்து விடுவாய். நீ செல்ல வேண்டிய தொலைவோ வெகு அதிகம்.
அதனால் உனக்கொரு உபாயம் சொல்கின்றேன். நீ செல்லும் வழியில் பெரிய ஆறுகளின் நீர் பாறையில் மோதி வீழும், எதிரியிடம் தோற்று வீழ்பவனை போல் அது வலுவிழந்து கிடக்கும், மென்மையான அது சோர்ந்து கிடக்கும் அதை நீ பருகி உன்னை பருக்கச் செய்து வலிமையாகுவாய்.
மேகமே! நீ இந்த மலையில் இருந்து கிளம்பும்போது பெரிய மலைபோல் எழுவாய், நீ செல்வதைக் காண்போர் மலையினைக் காற்று தூக்கி செல்கின்றதோ என்பது போல் வியந்து பார்ப்பார்கள். அப்படி மலை பறப்பது போல் நீ பறந்து வடக்கு நோக்கிச் செல்வாய்.
நொச்சி செடிகள் நிறைந்த பிரதேசத்தை தாண்டி வடக்கு நோக்கிச் செல்லும் போது மலை பெயர்கின்றதோ என மக்கள் உன்னை அச்சத்தோடு பார்ர்பார்கள்.
மேகமே! எட்டுதிக்கிலும் நிற்கும் அஷ்டகஜங்கள் மேகங்களை தன் துதிக்கையால் உடைத்து மழை பொழிய வைக்குமாம். நீ அந்த யானைகள் அருகில் செல்லாமல் தப்பி வடக்கு நோக்கிச் செல்ல வேண்டும்.
பெரிய யானைகள் அசைந்தாடி வரும்போது நீ லாவகமாக தப்பிச் செல்ல வேண்டும்.
மேகமே, நாகப் பாம்பின் புற்றினுள் இருக்கும் ரத்தினக் குவியல் பல வண்ணம் காட்டி ஜொலிக்கும் ஜெகஜால அழகானது அழகான வானவில்லாக உன் முனையில் பிரதிபலிக்கும். அந்த அழகான காட்சி உன் கரிய நிறத்தின் உச்சியில் தெரியும் போது, மயிலிறகு சூடிய கண்ணனைப் போல நீ காட்சியளிப்பாய்.
நவமணிக் குவியலின் ஒளிபோன்ற வானவில் உன் உச்சியில் தோன்றுவதும், அப்போது நீ மயிலிறகு சூடிய கண்ணன் போல் உன் கருநிற மேனியுடன் காட்சியளிப்பதும் காண்போரை தெய்வீகத்தை உணரச் செய்யும்.
தெய்வீகத்தோடு மக்கள் உன்னை வணங்குவார்கள். மயிலிறகு சூடிய ஆகாய கண்ணனாக நீ ஆசி வழங்குவாய்.
மேகமே, நீ செல்லும் வழியில் உன்னைக் கண்டதும் நகரத்து மாந்தரைப் போல் முகத்திலும் கண்ணிலும் அலங்காரம் செய்ய தெரியாத கிராமத்து பெண்கள் தங்கள் அலங்காரமற்ற கண்களுடன் உன்னை மகிழ்ச்சியுடன் காண்பார்கள், நகர்புற கண்களில் தெரியாத உண்மையான அன்பும் பாசமும் அந்த கிராமத்து பெண்களின் கண்ணில்தான் நீ காண்பாய்
அலங்காரமில்லாமல் கூடவே அகங்காரமில்லாமல் உன்னை அன்போடு எதிர்பார்க்கும் எளிய மக்களுக்கு நீ தெய்வத்தின் தூதனாக தெரிவாய்
அந்த மாளவ தேசத்து மக்கள் உன்னை கண்டதும் நிலத்தை உழதொடங்குவார், மண்ணை அவர்கள் கிளறும்போது எழும் நறுமணம் உனக்கு அவர்கள் இடும் மணமான தூபம் போல் எங்கும் பரவி நிற்கும்.
மேகமே, நீ ஆம்ரகூட மலை வறட்சியினால் காய்ந்து எரிந்தபோது அந்த தீயினை அணைத்து அங்கிருப்போரை முன்பு காத்திருக்கின்றாய், அதனால் அந்த மலையும் மக்களும் உன்னை நன்றியோடு எதிர்பார்த்து வரவேற்பார்கள், நன்றிமறக்காத மனம் அவர்களுடையது
அந்த மலை நன்றியோடு உன்னை தன் தலையில் ஏந்திகொள்ளும்
அற்பனே தன் வீட்டுக்கு வருபவனை பலன் கருதி வரவேற்கும் போது பண்பில் சிறந்த அம்மலை உன்னை அன்போடு எதிர்கொண்டு நிற்கும், ஓடிவந்து உன்னை வரவேற்க முடியவில்லையே எனும் இயலாமையில் உன்னையே பார்த்துகொண்டிருக்கும்
மேகமே, அந்த ஆம்ரகூட மலைசிகரங்கள் பெண்கள் எண்ணெய் பூசி வளர்க்க்கும் கூந்தலால் தலை உச்சியில் உருவாக்கும் கருத்த கொண்டைபோல் பளபளப்பானவை அழகானவை, பெண்கள் கொண்டைமேல் சூடும் பூவினை போல் நீ அந்த சிகரத்தின் மேல் அமர்ந்து கொள்வாய்
மேகமே அந்த மலைகளின் சிகரம் கருப்பானது, அதன் கீழே இனிய மாம்பழங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்திருக்கும், அவை பொன்னிறமாக மின்னும்
கரிய மலைசிகரத்தை சுற்றி கீழே அபப்டி மாங்கனி சோலைகளுடன் அம்மலை காட்டும் அழகு ரசனையானது
அது மேல்நோக்கி படுத்திருக்கும் பெண்ணின் மார்பகம் போல அழகானது, அங்கே நீ மகிழ்ச்சியுடன் இளைப்பாறி செல்வாய், தேவர்களும் மயங்கி நிற்கும் காட்சியினை கண்டு நீயும் மயங்கி கிடப்பாய்
அம்மலையின் அன்பில் நீ மகிழ்ந்து உருகிவிடுவாய் அப்போது பெரும் மழை கொட்டும், பெரியோருக்கு செய்யும் உபகாரம் உடனே பலனளிக்கும் என்பது போல அம்மலை உனக்கும் உதவி செய்யும், அந்த மலை இடுக்குவழி வரும் காற்றின் வேகத்தால் உன் பயணம் இனிதாகும்
அதனால் நீ விந்திய மலை நோக்கி சென்று அங்கிருக்கும் மலை குன்றங்களை அடைவாய், பெரும் அரசன் எளிய மக்கள் தெருவினை கடப்பது போல் புன்னகையுடன் கடந்து செல்வாய்
மேகமே பின் நீ நர்மதை நதி நோக்கி செல்வாய், மலைவாள் வேடுவர்கள் அங்கே தங்கள் துணையுடன் மகிழ்ந்து கொண்டிருக்கும் காட்சியினையும் காண்பாய், கார்காலம் உயிர்கள் இணைந்திருக்கும் காலமன்றோ?
அங்கே நீ அந்த பரந்த நர்மதை நதியினை காண்பாய், அது பல கிளைகளாக வெண்ணிறமாய் கரிய மலைகளின் இடையே ஓடும் போது உடலெல்லாம் விபூதி பூசிய கோவில் யானைபோல் உன் கண்ணுக்கு தெரியும்
மேகமே, அங்கிருந்து வடக்கே சென்று விந்திய மலையினை அடைவாய், அங்கே பெரிய பெரிய யானைகள் ஆற்றில் நீராடும், கார்காலம் என்பதால் அவைகளும் இணைதேடும்
அப்போது ஆண்யானைக்கு மதநீர் சுரக்கும், அது மணம் நிறைந்தது அந்த மதநீரோடு யானைகள் ஆற்றில் இறங்கி நீராடும், அப்போது அந்த மணமிக்க மதநீர் ஆற்றுநீரோடு கலந்து அந்த பகுதியே மணம் பரவி நிற்கும், பெண் யானைகள் மயங்கி நிற்கும்
மேகமே, நீ ஆம்ரகூட மலையில் மிகுந்த மழைகொடுத்துவிட்டதால் மெலிந்துவிடுவாய், அதனால் இந்த விந்தியமலை நதியின் நீர் புதர்களினால் தடுக்கபட்டு தேங்கி நிற்கும் போது அதை பருகி உன்னை கனமாக்கி கொள்வாய்
நீ மறுபடியும் கனமானபின் காற்று உன்னை சுமக்க சிரமபடும்படி நீ கனமாகிவிடுவாய்
மேகமே கனமாக இருப்பவனைத்தான் உலகத்தார் மதிப்பர், இல்லாதவன் கனமின்றி இருப்பான் அவனை யாரும் மதிக்கமாட்டார்கள், நீ கனமாக இருக்கும்வரைதான் உன்னையும் மதிப்பார்கள்
அதனால் அந்த நர்மதை நீரை பருகி நீ மறுபடியும் கனமாகிவிடவேண்டும்
மேகமே, நீரை தெளிக்கும் வல்லமை கொண்டவன் நீ, அதனால் செல்லுமிடமெல்லாம் நீ நீரை தெளிப்பாய். காய்ந்து கிடக்கும் நிலம் நீ தெளிக்கும் நீரால் சட்டென உயிர்கொள்ளும், இழந்திருந்த பசுமையினை உடனே அடையும்
அந்த புதுமழையால் கதம்ப மலர்கள் பூக்கும் , தளிரும் மொட்டும் மலருமாக பாதி மலர்ந்த மலர்கள் காட்சிக்கு அழகூட்டும்
சதுப்பு நிலத்தில் அழகிய செங்காந்தள் பூக்கள் மலரும்
மழைதுளிபட்டவுடன் மண் மணக்கும் , மெல்லிய குளிர் எங்கும் பரவும், ஏகாந்த சூழல் வரும்
மான் இனங்கள் இதை அறிந்து துள்ளி குதிக்கும், புதிய பசுஞ்செடிகளை கடித்தும் மண்ணின் மணத்தில் மகிழ்ந்தும் அவை ஏகாந்த மகிழ்வில் துள்ளி துள்ளி விளையாடும்
மண்ணின் மணத்தையும், அழகிய செடிகளின் பூக்களையும், தளிரையும், பண்டிகை கால மக்கள் புத்தாடை அணிவதுபோல் புதுகோலம் கொண்ட மரங்களின் அழகையும் மானின் துள்ளலையும் காணும் காதலர்கள் தாங்கள் தங்கள் துணையினை சேரவேண்டிய காலம் வந்துவிட்டதை எண்ணி விரைந்து வீடுதேடி செல்வார்கள், காதலியரும் காதனுக்காய் வாசல் திறந்துவைத்து காத்திருப்பார்கள்
இதையெல்லாம் பார்த்தபடி நீ வடக்கே செல்வாய்…”
(தொடரும்…)