காளிதாசனின் மேகதூதம் : 04
மூன்றாம் பத்து ஸ்லோகங்கள்
“மேகமே, நீ வான்வழியே செல்லும் போது ஸித்திகள் எனும் தேவலோகத்தவர் தங்கள் துணையுடன் உன் எதிரில் சஞ்சரிப்பர், உன்னை கண்டதும் சாதகபறவைகளெல்லாம் நீ சிந்தும் துளிகளை பருகவேண்டி உனக்கு கீழே தாழபறக்கும்
இரக்கமும் கருணையும் கொண்ட நீ அவைகள் தாகம் தீர்க்க சில துளிகளை வீசுவாய், அப்போது அவை வானில் பறந்தபடியே அந்த துளிகளை அருந்தும், அவை பறந்தபடி தங்கள் அலகுகளால் அழகாக நீர்துளிகளை அருந்துவதை காணும் ஸித்தர்கள் தங்கள் துணையோடு ஆச்சரியபடுவார்கள், சாதக பறவைகளை சுட்டிகாட்டி மகிழ்வார்கள்
அந்நேரம் உன் இடியோசையினை கேட்டு அஞ்சி அந்த தேவலோக பெண்கள் தங்கள் துணைவனை இறுக்க அணைப்பார்கள், கண்களை மூடி துணைவனை பற்றி கொள்வார்கள்
கெஞ்சியும் கொஞ்சியும் பலவகை வார்த்தைகளை சொல்லி மயக்கபார்த்தும் அவர்களை தழுவாமல் பெண்கள் உன் இடியோசை கேட்டதும் அவர்களே வலிய ஓடிவந்து கட்டிகொள்வதை கண்ட தேவலோக ஆண்கள் மகிழ்வார்கள்
இடியோசையால் அப்பெண்கள் வலியவந்து அவர்களை தழுவும் ஸ்பரிஸத்தால் மகிழும் ஆண்கள் அந்த இன்பத்துக்கு காரணமான உனக்கு நன்றிதெரிவிப்பார்கள், நீயும் ஏற்றுகொள்வாய்
மேகமே, என் மனைவியும் உன் சகோதரியுமானவளை கண்டு நான் சொல்லும் செய்தியினை சொல்ல நீ வேகமாகத்தான் செல்வாய், ஆனால் வழியில் வரும் மலைகளின் மல்லிகை பூத்த மணம் உன்னை மயக்கிவிடும்
காட்டுமல்லி வாசம் நிறைந்த மலைகளில் நீ சொக்கி கொஞ்சகாலம் அமர்ந்துவிடுவாய், அந்த மழைக்கால தொடகத்தில் இளம்புல்லும் தளிரும் வரும் காலத்தை மான்களும் முயல்களும் மிக மிக விரும்பும், அவை உனக்கு நன்றி சொல்லும்
எப்போதும் தோகை மடக்கி சோகத்தில் இருக்கும் மயில் உன்னைகண்டதும் மிக்க மகிழ்ச்சியுடன் தோகைவிரித்து ஆடி வரவேற்கும்
அவைகளின் அன்பு உண்மையானது, சுத்தமானது, நன்றியுடன் அவை கொடுக்கும் வரவேற்பு உனக்கு உளப்பூர்வமான மகிழ்வை கொடுக்கும்
அந்த மல்லிகை மணம் நிறைந்த காற்றிலும், மான்கள் முயலின் அன்பிலும், உன்னை கண்டு ஆடும் மயிலின் நடனத்திலும் நீ மயங்கிவிடுவாய், ஆனாலும் அதிலே நின்றுவிடாமல் தொடர்ந்து செல்லும்படி உன்னை விடுவித்து வடக்கு நோக்கி செல்வாய்
மேகமே அடுத்து நீ தசார்ணம் எனும் நாட்டை அடைவாய், அந்நாட்டின் அடையாளங்களை நான் உனக்கு சொல்கின்றேன் குறித்துகொள்
அங்குள்ள தோட்டங்களை சுற்றி தாழைகள் பூக்க தொடங்கும், மழை தொடங்கும் காலம் என்பதால் அவை முழுக்க பூக்காது, முனைகளில் மட்டும் பூக்கள் தெரியும். இதனால் வேலிகளே வெண்ணிறமாய் தெரியும்
அந்த நாட்டு பெண்கள் ஆச்சாரமானவ்ர்கள் அதனால் தினமும் காகத்துக்கு உணவிடுவார்கள், அவர்களை நம்பி வாழும் காகங்கள் கூடுகட்டும் காலமிது, அதனால் அவை அங்குமிங்கும் பறந்து ஒரு பரபரப்பை காட்டும்
நாவல்பழமரங்கள் கனிகொடுக்கும் காலமும் இதுதான், அதனால் ஊரை சுற்றியிருக்கும் மரங்கள் கருத்த நாவல்பழம் நிறைத்து கருமையான பாறைபோல் காட்சிதரும்
மழைகாலம் தொடங்கியதால் இனி நீர் கலங்கிவிடும் என அஞ்சும் அன்னங்கள் மானஸ ஏரியினை நோக்கி செல்ல தயாராகும்
இக்காட்சிகளை நீ காணும்போது அது தசார்ணம் எனும் நாடு என அறியகடவாய்
என் நண்பனான மேகமே, அடுத்து ஒரு சிருங்கார காட்சியினை நீ அனுபவித்து காணபோகின்றாய் அது மிக மிக பரவசமானது, தாசார்ண நாட்டின் தலைநகரமான விதிசையினை நீ அடையும் போது அதை பெற்று சுகிப்பாய்
மேகமே காதலில் காமம் ஒரு இன்பம், காமவயபட்ட காதலன் தன் காதலியின் இதழ்களை கவ்வும்போது அவள் உணர்ச்சியால் ஒலி எழுப்பி புருவங்களை நெறிப்பாள், காமம் கொண்ட காதலனுக்கு அதைவிட மயக்கம்ட் தரும் காட்சி எங்குமில்லை, கோப்பை மதுகுடித்தாலும் வராத போதை அது
அப்படி வேத்ராவதி எனும் நதி உன் காதலியாக அங்கு உண்டு, நீ அவளை அணைத்து இதழை உறிஞ்சும் காதலனை போல அவளிடம் இருந்து நீரை உறிஞ்சுவாய், அந்த நதிகாதலி எழுப்பும் ஓசையும், உணர்ச்சிமயமான காதலி நெளிக்கும் புருவம் போல வளைந்து வளைந்து வரும் அந்த நதியின் அலைகளும் உனக்கு பேரின்பத்தை கொடுக்கும், பெரும் மகிழ்வும் இன்பமும் பெறுவாய்
மேகமே, விதிசைக்கு அருகே நீசை என்றொரு மலை உண்டு, அது உன்னை எதிர்பார்த்திருக்கும் மலை
அம்மலை உன்னை கண்டதும் மயிர்கால்கள் சிலிர்த்து நிற்கும் மங்கைபோல் எதிர்கொள்ளும், உடலெல்லாம் மயிர்கால் சிலிர்த்த மங்கையின் நிலையில் அதன் கடம்ப மரங்களெல்லாம் மேல் நோக்கி எழுந்து நிற்கும்
மேகமே அம்மலையின் குகைகள் மற்ற இடங்களின் குகைகள் போல விலங்கு கழிவுகளும் இதர குப்பைகளும் நிறைந்த இடம் அல்ல, அதன் தன்மையே வேறு
அந்நகரின் மாபெரும் தனமும் அழகும் நிறைந்த இளைஞர்கள் விலைமாதர்களுடன் கூடி கழிக்கும் இடம் அதுதான், அதனால் உலகின் மிகசிறந்த வாசனை திரவியங்களை அவர்கள் விலைமாதருக்கும் தனக்கும் பூசி களிக்கும் இடம் அது
அந்த திரவியங்களின் மணம் மிகுதியானது, அக்குகைகளில் அந்த மணம் நீடித்து தங்கியிருக்கும், அந்த மணம் அந்த நாடு எப்படியான செல்வந்தர்களை கொண்ட செல்வமிக்க நாடு என்பதை உனக்கு உணர்த்தும்
மேகமே அந்த குகைதரும் உயர்ந்த மணத்தின் சுகந்தத்தில் சிக்கிநிற்காமல் தொடர்ந்து செல்வாய்
நீ செல்லும் வழியில் வனநதி என்றொரு நதியினை காண்பாய், அந்தசிறு நதியோரம் யாராலும் அமைக்கபடாமல் தானே வளர்ந்த முல்லை கொடிகள் நிரம்ப உண்டு, அந்த பகுதி மங்கையர் அந்த முல்லை மலர்களை கொய்து கொண்டிருப்பார்கள்
தங்கள் கரிய கூந்தலும் அழகிய காதுகளும் உரசும் இடத்தில் அவர்கள் கரும்குவளை மலர்களை சூடியிருப்பார்கள், இளம்வெயில் அவர்கள் நெற்றியில் வியர்வையினை ஏற்படுத்த அதனை துடைக்க அவர்கள் தங்கள் மெல்லிய கரங்களால் முயல்வார்கள்
மேகமே , தளிர்போன்ற அக்கரங்களுக்கு நெற்றியினை துடைக்கும் போது வலித்துவிடும் அல்லவா? அதனால் அவர்களுக்கு வியர்க்காமல் இருக்க நீ நிழலாய் கொஞ்சநேரம் நின்றிடுவாய், அப்பெண்கள் மலர்ந்த முகமாய் உன்னை ஏறெடுத்துபார்க்கும் போது உனக்கும் அவர்களுக்கும் ஒரு அன்பு உண்டாகும், அங்கே அதிக நேரம் நில்லாமல் அவர்கள் சென்றதும் நீ நகர்ந்துவிட வேண்டும்
மேகமே நீ செல்லும் வழியில் இருந்து அந்த அழகிய உஜ்ஜைனி விலகித்தான் இருக்கும், கொஞ்சம் சுற்றித்தான் செல்லவேண்டும் ஆனால் ஒரு அழகிய காட்சிக்காக நீ செல்லவேண்டும்
செல்லும் வழியில் ஒரு ஊரை காண்பாய் அழகான மாளிகை மேல் நீ கொஞ்சம் நிலை கொள்வாய், அந்த நகர பெண்கள் கண்கள் தனி அழகு கொண்டவை, நீ உன் கொடி போன்ற மின்னலை ஆட்டி கொஞ்சம் வேடிக்கை காட்டினால் அந்த கண்களில் ஆயிரம் ஜாலம் காண்பாய்
விரிந்தும், சுருங்கியும், மூடியும், அச்சபட்டும், ஆச்சரியபட்டும், இங்குமங்கும் சுழன்றும் பெரும் ஜாலம் காட்டும் கண்களின் அழகை, அதுவும் கடைக்கண் பார்வையில் சலிப்பும் அலட்சியமும் காட்டி நிற்கும் அந்த பேரழகை நீ காணவில்லை என்றால் உன் வாழ்வின் பலனை பெறாமலே ஏமாந்தவனாகிவிடுவாய், உலகின் அழகான அந்த காட்சியினை தவறவிடாமல் காண்பாய்
மேகமே, அங்கிருந்து நீ இன்னும் வடக்கே நகரும்பொது நிர்விந்தியா எனும் நதிபெண்ணை காண்பாய், அவள் பேரழகி , மெல்லிய உடல் கொண்டவள். நீந்தும் அன்னைபறவைகளை இடையில் மேகலை போல் அணிந்திருப்பாள்
வழியில் பாறைகள் குறுக்கிடுவதால் அவள் கொஞ்சம் தடுமாறி மெதுவாகி தளிர்நடை நடந்துசெல்வாள், அடுத்து வரும் சுழிதான் அவள் தொப்புள் எனும் நாபி
மேகமே அவளின் இடையழகு , நடையழகு, அந்த சுழித்தோடும் நாபி அழகு கண்டுமயங்கி அவளில் வீழ்ந்து உன் தாகம் தீர்க்க விரைவாய்
மேகமே, ஒரு பெண் தான் கொண்ட காதலை முதலில் வார்த்தையால் தெரிவிக்கமாட்டாள், சில செயல்களில்தான் தெரிவிப்பாள், அப்படி அவள் கரங்கலால் வீசி எறியும் நீர் திவலைகள் அவள் உன் மேல் கொண்ட அன்பை சொல்லும்
அந்த அன்பை பெற்று அவளின் அன்பின் நனைந்துவிட்டு அவளையும் நனைத்துவிட்டு வடக்கே நகர்வாய்
மேகமே நீ அழகானவன், உன்னை எல்லோரும் விரும்புவார்கள் அப்படி சிந்து எனும் பெண்நதி ஒருத்தி உனககக ஏங்கி அங்கே காத்துகொண்டிருப்பாள்
உன்னை பிரிந்ததால் அவள் மிக மிக மெலிந்திருப்பாள், கரையோர மரங்களின் இலைகள் அவள் மேல் விழுந்து வெளிறிய நிறத்துடன் பரிதாபமாக உனக்காக காத்திருப்பாள்
அவள் உன்னை கண்டதும் பெரும் மகிழ்வு கொள்வாள், கண்களில் நீர்வடிய வரவேற்கும் பிரிந்த காதலி யாய்அவள் உன்னை எதிர்கொண்டு நிற்பாள், அழவும் சக்தியின்றி வடியும் கண்ணீருடன் சோர்ந்து கிடப்பவள் உன்னை பார்த்ததும் மகிழ்வாள்
நீ அவளை அணைதுகொள்வாய் உன்னால் அவள் பழைய பொலிவை அடைந்து ஆர்பரிப்பாள், அவளை மகிழ்ச்சிபடுத்தி வலுவூட்டு அவளின் அழகை மீட்டு கொடுத்தபின் நீ வடக்கு நோக்கி நகர்வாய்
இனிய மேகமே, நீ அங்கு அவந்தி நாட்டை அடைவாய், அங்குள்ள மக்கள் தங்கள் பெருமைக்குரிய உதயனன் கதையினை உனக்கும் சொல்வார்கள், அதை வியப்பாய் கேட்ககடவாய், அவன் அவர்களின் மிகசிறந்த மன்னன், அவர்களின் தனிபெருமை
அந்த அவந்தி நாட்டின் தலைநகரான உஜ்ஜையினையினை நீ அடையும் போது பாக்கியம் செய்தவன் என்பதை உணர்வாய், அந்த அழகினை பாக்கியம் செய்தவர்கள் மட்டுமே காணமுடியும்
அந்த நகரம் சொர்க்கத்தின் ஒரு பகுதியாய் விளங்கும், அந்த நகரின் மக்கள் தேவலோக மாந்தர் போல தேவர்களாகவும் அரம்பையர்களாவும் ஜொலிப்பர்
மேகமே, ஒருவன் மிகுந்த புண்ணியம் செய்திருந்தால் வானலோகம் செல்வான், அந்த புண்ணியம் தீருமட்டும் அங்கு வசிப்பான் அல்லவா?
ஆனால் புண்ணியம் பாக்கி இருப்போர் பூமிக்கு திரும்பிவிட்டனரோ அவர்கள் சொர்க்கத்தின் மகா முக்கிய பகுதியினை கொண்டுவந்து புண்ணியத்தால் இந்நகரை அமைத்தனரோ என எண்ணும் அளவு நீ அதிசயிப்பாய் என மயக்கம் கொடுக்கும்படி அந்நகரம் சொர்கபுரியினை உன் கண் முன் காட்டும், நீயோ அந்த ஜொலிப்பினை நம்பமுடியாமல் திகைப்பாய், செயலற்று நிற்பாய்”
(தொடரும்…)