சப்த கன்னியர்
சப்த கன்னியர் 01 : பிராம்மி.
இந்த பிரபஞசத்தை இயக்கும் மகா சக்திகளை ஏழுவிதமான சக்திகளாக பிரித்துச் சொன்ன இந்துமதம் அவர்களைச் சப்த கன்னியர், சப்த மாதர்கள் என்ற அடையாளமிட்டுச் சொன்னது.
இந்தச் சக்திகள் இயக்கும் சக்திகள், இயங்கும் பலத்தையும் அருளையும் தரும் சக்திகள். அந்த சக்திகளின் பலத்தாலே இந்தப் பிரபஞ்சமும் அண்டமும் அண்டத்தின் வடிவமான மானிட பிண்டம் எனும் மானிட உடலும் இயங்குகின்றது.
இந்தச் சக்திகளின் தோற்றம் பற்றி புராணத்தில் பல கருத்துக்கள் உண்டு. சிவன் அந்தகார அசுரனை அழிக்கும் போது யோகேஸ்வரி எனும் சக்தியினையும், உமாதேவி மகேஸ்வரி எனும் சக்தியினை உருவாக்கினாள். அவளுக்குத் துணையாகப் பிரம்மன் பிராம்மியினையும், நாராயணன் நாராயனியினையும், முருகப்பெருமான் கௌமாரியினையும், இந்திரன் இந்திராணியினையும், வராஹ மூர்த்தி வராஹியினையும், யமன் சாமுண்டியினையும் உருவாக்கி, தங்களின் சக்தியில் இருந்து உருவாக்கி கொடுத்ததாக ஒரு குறிப்பு உண்டு.
மகிஷாசுரனை அழிக்க, கர்ப்பத்தில் உருவாகாத பெண்ணால் மட்டும் அழிவு என வரம் பெற்ற மகிஷனை அழிக்க இந்தச் சக்திகள் உருவாகி வந்தன என்பது இன்னொரு குறிப்பு.
ஆனால், மார்கண்டேய புராணம் தெளிவாக இந்தச் சப்த கன்னியர் தோற்றம் நிம்ப சுதம்ப அசுரனை அழிக்க இவை அவதரித்தன என தெளிவாகச் சொல்கின்றது.
வேதங்களில் இருந்து காவியம் படைத்த மகாகவி காளிதாசன் சப்த கன்னியர் சிவனை வணங்கும் பணிப்பெண்கள் எனக் குமார சம்பவம் காவியத்தில் சொல்கின்றான்.
மார்கண்டேய புராணம்தான் அந்தச் சப்த கன்னியர் பிராம்மி, மஹேஸ்வரி, கௌமாரி, நாராயணி, இந்திராணி, வராஹி, சாமுண்டி என ஏழுபேர் எனச் சொன்னது.
பிராம்மி என்பவள் பிரம்மனின் முகத்தில் இருந்து வந்தவள்; மகேஸ்வரி சிவனில் இருந்து வந்த்வள்; கௌமாரி முருகப்பெருமானின் சக்தியாய் வந்தவள்; வராஹி வராஹமூர்த்தியிடம் இருந்தும்; சாமுண்டி ருத்திரனிடம் இருந்தும் வந்தவள் எனச் சொல்கின்றது.
இங்கே அறிந்துகொள்ள வேண்டிய தாத்பரியம் ஒன்றுதான். அந்தத் தாத்பரியம் புரிந்தால்தான் சப்த கன்னியரின் அவதாரமும் அவை இயக்கும் முறையும் அருளும் அவசியமும் முழுக்கப் புரியும்.
இந்த உலகின் இயக்கம் முக்கியம். இந்த உலகின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு விதி, ஒரு தர்மம், ஒரு சத்தியம், ஒரு ஞானம் உண்டு.
ஒரு இயங்குவிதி உண்டு.
இந்த விதியினை, இந்த தர்மத்தை ஏதோ ஒரு சக்தி மாற்ற முயன்றால் அல்லது அழித்துத் தனக்கு ஏற்ப புதுவிதி ஏற்படுத்த முயன்றால் அந்தத் தர்மத்தை உடைக்க முயன்றால் இந்தச் சக்திகள் வந்து அந்த அதர்மத்தை அழித்து விதிப்படி தர்மப்படி எல்லா இயக்கமும் நடக்க வழி செய்யும்.
ஒரு இயக்கம் தர்மப்படி விதிப்படி அதனதனை பகவான் படைத்தபடி அதனதன் ஞானத்தின்படி நடக்க இந்தச் சக்திகள் வழி செய்யும்.
இங்கு எல்லாமே பிரபஞ்சததின் ஏதோ ஒரு திட்டத்திற்காக அந்த சக்தியின் விருப்பப்படி இயங்குகின்றன. அந்த இயக்கத்தை சரியாக நடக்க வைக்க, தடைகள் வந்தால் விலக்கி, பெரும் குறுக்கீடுகள் வந்தால் உடைத்து அந்த இயக்கத்தை சரியாகச் செய்ய வைப்பவை இந்த ஏழு சக்திகள்.
இந்த பிராம்மிதான் சப்த கன்னியரில் முதல் தெய்வம்.
இவள் பிரம்மனின் முகத்தில் இருந்து உருவானவள் என்பது புராணம் சொல்லும் செய்தி. ஒருவகையில் அல்ல இவள் முழுக்கவே சரஸ்வதி அம்சம்.
அன்னப்பறவையில் வரும் இந்த தேவிக்கு நான்கு கரங்கள் உண்டு. அதில் ஏடுகள், அபயம், கமண்டலம், அட்சமாலிகை எனும் மந்திர மாலை என நான்கும் கொண்டிருப்பாள்.
அன்னை தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள்.
இந்த பிராமிதான் சிந்தனைகளை நல்ல அறிவினை ஞானத்தைத் தருபவள். கலைகளின் மூலத்தை அருள்பவள், படைக்கும் தொழிலுக்கு பக்கபலமாய் இருப்பவள்.
பிரம்மனின் ஞானம் இவள்தான். பிரம்மனின் சக்தி இவளேதான். இவள் அருளாலே பிரம்மன் இந்த பிரபஞ்சத்தையும் அதிலுள்ள உயிர்களையும் படைக்கின்றான்.
இந்தப் பிராம்மி என்பவளை மானிடருக்கு சிந்தனை, கல்வி, கலை அருள்பவள் என மட்டும் கருதிவிடக் கூடாது. அவள் ஒவ்வொரு படைப்பின் ஒவ்வொரு உயிரின் ஞானமாக நிற்கின்றாள். படைப்பின் தத்துவ விதி அவள் ஞானமே.
அதாவது, இந்த பிரபஞ்சம் மிகப் பெரியது. ஏகப்பட்ட கோள்கள் அவற்றின் இயக்கங்களைக் கொண்டது. ஒவ்வொரு கோளும் அதனதன் இயக்கத்தில் இயங்குகின்றது. ஒரு புள்ளி கூட தன் பாதையில் இருந்து நகர்வதில்லை.
அதன் இயல்பில் இருந்து விலகாமல் தன் கடமையினைத் தன் வேலையினைச் சரியாகச் செய்யும், அதில் ஒரு ஞானம் இருக்கும்.
இதே ஞானம் ஒவ்வொரு படைப்பிலும் உண்டு. ஒரு ஒழுங்கான சீரான இயக்கம் உண்டு. அது மழையில், மேகத்தில், காற்றில், நெருப்பில் என எல்லாவற்றிலும் உண்டு.
அந்த ஞானமே ஒவ்வொரு உயிரிலும் உண்டு. அது மீன்கள், பறவைகள், எறும்புகள், விலக்குகள், மரம் செடி கொடிகள் என ஒவ்வொன்றும் தன் இயல்பில் அதன் ஞானத்தில் சரியாக இயங்குகின்றன.
தேனீக்கள், தூக்கணாங்குருவி, சிலந்தி, எறும்பு, யானை, சிங்கம், நாகம் என எல்லாமே ஒரு ஞானத்தில் ஒரு ஒழுங்கில் இயங்குவதைக் காணலாம்.
கடலும் மலையும் அந்த விதிக்கு உட்பட்டதே.
அந்த ஞானமான ஒழுங்கான அந்த விதியினை அந்த இயக்கத்தை அந்தச் சீராக நடக்கும் ஞானத்தை அருள்பவள் அன்னை பிராம்மி.
எல்லாப் படைப்பிற்கும் அந்த விதியினை ஒழுங்கை ஞானத்தை கல்வியினைக் கொடுக்கும் அவள் மானிடருக்கும் ஞானமும் அறிவும் கொடுக்கின்றாள்.
( இதைத்தான் கம்பன் பாடுகின்றான், தன் சரஸ்வதி அந்தாதியில் பாடுகின்றான்.
“தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே.”
அதாவது வானலோக தேவர்கள், தேவர்களின் அரசனான இந்திரன், உயர்ந்த புனிதமான வேதங்கள் போற்றும் முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, சிவன் விஷ்ணு எனச் சக்தி மிக்கோர், அசுரர்கள், முனிவர்கள், இன்னும் எல்லா உயிர்களும் வெண் தாமரையில் இருக்கும் அன்னையின் அருளால் ஞானம் பெறுகின்றார்கள். )
அப்படியான நிலையில்
மானுடன் படைப்பின் உச்சம். ஈரேழு உலகங்களில் பூமியில் அவன் ஆத்ம சொரூபம். பரம்பொருளின் ஆத்மா தங்கியிருக்கும் கூடு.
அந்த மனிதன் தன் சிந்தையால் செயலால் இறைவனை உணர்ந்து அடையவேண்டும். மற்றவரும் இறைவனை உணர வழி செய்யவேண்டும் என்பது அவன் வாழ்வின் தாத்பரியம்.
இந்த மானுடருக்கும் இந்த உலகில் வாழ சில விதிகள் உண்டு. அவன் சிந்திக்கத் தெரிந்தவன் அவன் சிந்திப்பதை வெளியில் சொல்லும் அறிவு படைத்தவன், அவன் சொல்லும் செயலும் சிந்தனையும் இந்த உலகை நல்லவழியில் நடத்தவும் இந்த மானுட சமூகத்துக்கு நல்ல வழிகாட்டுவதாகவும் பல பயன்களைச் செய்வதாகவும் இருத்தல் வேண்டும்.
மானுட விதிப்படி அவன் உலகில் வாழ பல விஷயங்கள் அவசியம். அவற்றை உருவாக்கவும் அடையவும் மனுகுலம் மேன்மையடையவும் மகிழ்ச்சியாய் வாழவும் அவனுக்குச் சில விதிகள் நல்ல சிந்தனைகள் நல்ல ஞானங்கள் அவசியம்.
அந்த ஞானத்தை அறிவினைத் தருபவள் அன்னை. அதனாலே அவளை கல்விக்கு அதிபதி கலைக்கு அதிபதி என்றார்கள்.
மானுட வாழ்வின் பெரும் பலம் சிந்தனை. அந்தச் சிந்தனையினைத் தருவது தலையின் மூளை. அன்னை அந்த மூளைக்கான பலத்தை தருவாள், நல்ல சிந்தனையினைத் தருவாள், ஞானத்தை கலை ஞானத்தை தருவாள் என்பதாலே அவள் தலையில் இருந்து உருவானதாக சொல்லப்பட்டாள்.
பிரம்மன் படைப்புத் தொழிலை செய்பவன், அந்தப் படைப்புக்கான மூலமாக அவளே உண்டு என்பதால் அவள் நல்ல அறிவு, ஞானம், கல்வி என எல்லாம் தந்து நல்ல மூளை பலத்தைக் கொடுப்பாள்.
இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் கல்வி, ஞானம் என்றவுடன் அது ஏட்டுக்கல்வி அல்ல, கலை என்றவுடன் 64 கலை என்பதுமட்டுமல்ல.
மானுடன் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் சொல்லும் சொல்லிலும் செயலிலும் எல்லாத் தொழிலிலும் ஞானமும் அறிவும் அவசியம்.
விவசாயி, மீனவன், கொல்லன், தொழிலாளி, வியாபாரி என எல்லாவற்றிலும் ஒரு ஞானமும் அறிவும், செய்வதை அழகுறச் செய்து அதை மக்களிடம் பயனுற ஒப்படைத்து தானும் வாழ்ந்து மற்றவர்களை வாழவைப்பதிலும் நல்ல அறிவு முக்கியம்.
அது சமையல் முதல் சந்தை வரை எந்தத் தொழிலாகவும் இருக்கட்டும், எல்லாவற்றிலும் ஒரு அறிவும் ஞானமும் நலல விதியும் அவசியம், அப்போதுதான் அது நிலைக்கும். சிறக்கும்.
அந்த ஞானத்தை அறிவை தருபவள் இந்த பிராம்மி. அவளை வழிபட்டு துவங்கினால் எல்லாம் துலங்கும், அவள் செய் தொழிலுக்கு அல்லது அவரவர் வாழ்க்கை நிலைக்கு என்ன வரம் வேண்டுமோ அதை அருள்வாள்.
அதனால் சப்த கன்னியரில் அவளை முதலாவதாக வைத்தார்கள், “எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்” என்பதால் அவளைச் சிரசில் இருந்து வந்தவள் சிரசுக்குக் காவல் என்றார்கள்.
உடலின் ஏழு தாதுக்களில் மூளை முக்கியமானது. அது தலையில் உண்டு. பிராம்மி தேவியின் அருளால் மூளை நலமாகும் பலமாகும் சிந்திக்கும் திறன் கூடும்.
ஏழு தாதுக்களான உடல் நல்ல ல் பலம் பெற்றால்தான் சரியான இயக்கத்தில் இருந்தால்தான் ஆத்மா சரியாக செயலாற்றமுடியும். கர்மம் செய்யமுடியும்.
அந்த உடலுக்கு மூளைதான் பிரதானம், அந்த மூளைதான் உடலை இயக்கும் கட்டுப்படுத்தும். இன்னும் ஒருவனைச் சிந்திக்கச் செய்யும், அதுதான் அவனின் அடையாளமாகவே கருதப்படும்.
அந்த மூளையினைப் பலமாக்குபவள் அன்னை பிராம்மி.
இந்த அன்னைதான் யோக தத்துவத்தில் மூலாதாரமாக நிற்கின்றாள், அவளை வழிபட வழிபட அந்தச் சக்கரம் துலங்கும், படைக்கும் திறன் புதிய புதிய சிந்தனைகள் பெருகும்.
மூலாதார சக்கரம் துலங்க ஆரம்பித்தால் பல நல்ல மாறுதல்கள் சிந்தனையில் வரும், அன்னை அங்கேதான் இருந்து நடத்துகின்றாள்.
சப்த கன்னியர் வழிபாட்டில் முதல் இடம் இந்தப் பிராம்மி தேவிக்கு. அவளை வழிபட வழிபட ஞானமும் அறிவும் பெருகும்.
இந்தப் பிராம்மி என்பவள் புராணத்தில் மட்டுமல்ல பல இடங்களில் வருவாள். மகாபாரதத்தில் பெரும் அட்டகாசம் செய்யும் லவன அசுரன் என்பவனை, சிவனின் சூலாயுதம் கொண்ட அவன் யாரும் வெல்லமுடியா நிலையில் நின்று பெரும் அட்டகாசம் செய்வான்.
அவனை இராமனின் அம்பு மூலம் அழிப்பான் சத்ருகன். அப்படி அழிக்கும் போது அவன் இந்த பிராம்மியினை வேண்டி அழைத்துச் செல்வான் என்பது இராமாயணத்தின் ஒரு காட்சி.
இங்கே ஒரு கேள்வி எழலாம், எழும்.
அதாவது, நல்ல சிந்தனைக்கும் அறிவுக்கும் ஞானத்துக்குமான இந்த தேவியினை ஏன் நிம்ப சுதும்பனை அழிக்கப் படைகள் சண்டையிடும் களத்தில் இறக்கினார்கள் என்பது.
அங்கேதான் பெரிய ஞானதாத்பரியம் உண்டு.
போரில் வீரம் முக்கியம், ஆயுதம் முக்கியம், அப்படியே ஞானமும் அறிவும் மகா முக்கியம். அறிவு கலக்காதப் போர் வெற்றியடையாது அது முரட்டுதனமான சண்டையாகிவிடும்.
இதனாலே பலமிருந்தாலும் அசுரர்கள் தோற்று ஓடுவார்கள். பலம் குறைந்திருந்தாலும் தேவர்கள் வெற்றிப்பெறுவார்கள்.
போரில் அறிவும் ஞானமும் மகா முக்கியம்.
ஆம். ஒவ்வொரு மானிடரும் ஒவ்வொரு நாளையும் போராடி கழிக்கும் வாழ்வு இது. அந்த போராட்டமான வாழ்வில் ஞானம் முக்கியம், அறிவு முக்கியம், சமயோசித புத்தியும், வாழ்வை காத்து தன்னோடு இருப்பவரை காத்து இந்தச் சமூகத்தை காத்து செல்ல அறிவும் ஞானமும் வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் அதைத் தருபவள் அன்னை பிராம்மி.
அன்னை பிராம்மியின் அருள் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம். பெண்களுக்கு இந்த அறிவும் விழிப்பும் நல்ல சிந்தனையும் அவசியம்.
அவளே படைக்கும் சக்தி கொண்டவள். அவளே உயிர்களை வளர்க்கும் சக்தி, குடும்பத்தைக் காக்கும் சக்தியும் கொண்டவள். அவளாலே எல்லாம் இயங்கும். மானுட வாழ்வினை இயக்குவது பின்னால் இருந்து பெண்கள்தான்.
அந்தப் பெண்களுக்கு எல்லா வகையான அறிவும் வேண்டும். நல்ல தோற்றம் நல்ல சூழல், நல்ல சிந்தனைக்ள், நல்ல மனோவளம், அறிவு என எல்லாம் கொண்டிருக்கும் பெண்ணே, எல்லாம் புரிந்து உணர்ந்து நடக்கும் பெண்ணே வீட்டுக்குச் சிறப்பினைக் கொடுப்பாள். சிறப்பான குடும்பத்தை உருவாக்குவாள்.
அவளே வீட்டின் விளக்கு, அந்த விளக்கினை ஜொலிக்க வரம்தருள்பவள் அன்னை பிராம்மி.
பெண்களுக்கு சப்த கன்னியர் வழிபாடு மகா முக்கியம். ஒவ்வொரு பெண்ணும் நடத்தும் போராட்ட வாழ்வில் அவளுக்கு அறிவும் ஞானமும் மகாமுக்கியம்.
சிறப்பில்லாக் குடும்பங்கள், குழம்பி தவிக்கும் குலங்கள், கண்ணீரும் ஏழ்மையும் நிரம்பிய இடங்கள், ஓயாச் சண்டைகள், எப்போதும் அழுகை நிம்மதி குறைவு எனக் குடும்பத்தை கண்டால் ஆழ்ந்து பார்த்தால் அங்கு அறியாமையும் எதுவும் தெரியாத சூனியமான ஒரு பெண் இருப்பதை காணலாம்.
நன்றாக சிறந்துவாழும் குலம், ஏழ்மை என்றாலும் அது தெரியாமல் மகிழ்ந்துவாழும் குடும்பத்தைக் கண்டால், எல்லோரும் இன்புற்று மகிழ்வும் சந்தோஷமும் வளமும் கொண்ட குடும்பத்தைக் கண்டால் அங்கே ஒரு அறிவுள்ள பெண் இருப்பதையும் காணலாம்.
இந்த வரம்தான் அன்னை பிராம்மி தரும் வரும். பெண்களுக்கு அறிவும் கல்வியும் ஞானமும் மகா முக்கியம் என்பதால் அவளை வணங்கச் சொன்னார்கள். எல்லாக் கோவில்களிலும் சப்த கன்னியர் என ஏழு கன்னியரை வைத்து வணங்கி வழிபடச் சொன்னார்கள்.
எல்லாக் கோவில்களிலும் சப்த கன்னியர் உண்டென்றாலும், சப்த கன்னியான இந்த பிராம்மி வழிபட்ட இடம் என ஒன்றை இந்துமதம் அடையாளம் காட்டி அதற்கான தாத்பரியத்தை சொல்லி வழிபடச் சொன்னார்கள்.
அது சக்கரப்பள்ளி. சக்கரமங்கை ஆலயம் என சோழநாட்டில் உண்டு. தஞ்சாவூருக்கும் கும்பகோணத்துக்கும் இடையில் உண்டு, அய்யம்பேட்டை அருகில் உண்டு.
சோழ மன்னர்கள் எல்லோரும் இராஜராஜசோழன், இராஜேந்திர சோழன் என எல்லோரும் திருப்பணி செய்த மிக மிக பழமையான ஆலயம் அது.
அது தேவாரம் பாடப்பட்ட கோவில், சம்பந்த பெருமானே அங்கு வந்து பாடியிருக்கின்றார்.
“பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன்எருக் கதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.”
எனச் சம்பந்த்ர் பாடியிருக்கின்றார்.
இங்கே அன்னை சக்கரப்பறவையாக வந்து சிவனை வழிபட்டாள் என்பது ஐதீகம். சப்த கன்னியர் சிவனின் பணிப்பெண்கள் எனக் காளிதாசன் சொன்னது கவனிக்கத்தக்கது.
சிவகிங்கத்தின் கோமுகி பக்கம் சப்தகன்னியர் இருப்பதாக வேதம் சொல்வதும் கவனிக்கத்தக்கது.
அப்படி அன்னை சக்கரப்பறவையாக இங்கு வந்து சிவனை வழிபட்டாள் என்பதும் தன் குறைதீரப்பெற்றாள் என்பதும் இங்கே நடந்தது.
அதன் காரணம் கொஞ்சம் ஆழமானது, சூட்சும தத்துவம் கொண்டது.
அடிமுடி காணமுடியா நிலையில் சிவன் நின்றபோது அன்னப்பறவையாய் எழுந்த பிரம்மன் பொய் சொல்லி தண்டனை பெற்றபோது அவன் சக்தியான அந்தப் பிராம்மி அவனைக் காக்க வந்தாள்.
அவள் சக்கரப்பறவையாய் வந்து சிவனிடம் மன்றாடி பிரம்மனை மீட்டாள் என்பது அந்த ஆலயத்தின் தலபுராணம்.
அவள் அப்படி வந்தபோது பெரும்யாகம் நடத்தினாள், அந்த யாக குண்டம் உண்டு, அது “குங்கிலிய குண்டம்” என உண்டு.
இங்கு அன்னை சக்கரப்பறவையாக வந்தாள் என்பதை வெறும் பறவையாக மட்டும் பார்க்க முடியாது, அங்கே ஞான சூட்சுமமும் உண்டு.
சக்கரம் என்றால் வெறும் வட்டவடிவம் அல்ல, சக்கரம் என்றால் இடைவிடா சுழற்சி, இடைவிடாத ஆற்றல் சுழற்சி, அதாவது தொடர்ந்த இயக்கம்.
அப்படித் தொடர்ச்சியான முடிவில்லா அன்னை, ஸ்ரீசக்கரம் எனும் சக்கரத்தில் இருந்து தொடர்ந்து அருளைத் தரும் அன்னை இங்கே வந்து சிவனை வழிபட்டாள் என்பது,
அப்படி வழிபட்டு தன்னைச் சார்ந்தவனும் தன் இருப்பிடமுமான பிரம்மனை அவள் மீட்டுச் சென்றாள் என்பது.
ஆம். தன் ஆதர்சத்தை தன் முக்கியமான அடையாளத்தை, தன் பெருமையினைத் தனக்குரியவனை அவள் மீட்டுச் சென்றாள் என்பது அந்த கோவிலின் வரலாறு.
அதனால் அது பெண்கள் வழிபாட்டுக்கு மிக மிக முக்கியமானது என சுட்டிக்காட்டபட்டது, அதுவும் குடும்பத் தலைவியர் வணங்க அது முக்கிய தலமாயிற்று.
எல்லா ஆலயத்தில் இருக்கும் சப்த கன்னியரின் பிராம்மி எனும் தெய்வம் வழிபட அவசியமானவள் அதுவும் பெண்களுக்கு அவசியமானவள் என்றாலும் இந்த ஆலயம் பிரசித்தியானது.
இங்கே சென்றுவழிபட்டால் பெண்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும், அறிவும் ஞானமும் வாய்க்கும், குடும்பத்தை காக்கும், குடும்ப உறுப்பினர்களைக் காக்கும், தன் கடமையினைச் செய்யும் எல்லா ஞானமும் அறிவும் வாய்க்கும் உறுதி பெருகும்.
அதனால் அப்பெண்ணும் சிறப்பாள், அவள் குடும்பமும் சிறக்கும்.
அங்கே சென்று வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும், பெற்ற மாங்கல்யம் நிலைக்கும்.
வாய்ப்பு கிடைத்தவர்கள் கட்டாயம் சென்று அந்தச் சிவனை அவள் பெயரைச் சொல்லி வழிபட்டு, அவளையும் வழிபட்டால் எல்லா நலமும் அறிவும் பெருமையும் வாய்க்கும். அது சத்தியம்.
அங்குச் சென்று வழிபடலாம் இல்லை கோவில்களில் உள்ள சப்த கனியரை வழிபடலாம், அது சிறப்பினைத் தரும், நல்ல பலனினைத் தரும்.
சௌந்தர்ய லஹரி அவளைப் பற்றிச் சொல்கின்றது.
“கதா காலே மாத꞉ கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம்ʼ வித்யார்தீ தவ சரண நிர்ணே ஜனஜலம் |
ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா காரணதயா
கதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் || “
அம்மா! பிறவியிலேயே ஊமையாய் இருப்பவனுக்கும் கூட கவிபாடும் திறமையைக் கொடுக்கக் கூடிய மருதாணி பூசிய உன் பாதங்களை அலம்பிய ( தாம்பூலரசம் போல் சிவந்த ) நீரானது, ஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது கிடைக்குமோ?
அதாவது, ஒரு பக்தன் அன்னையின் தாம்பூலரசம், ஞானப்பால், பாத தீர்த்த ப்ரசாதம் கிடைத்து வீரம், ஞானம், கவிபாடும் திறம் பெற்றது போலவே அடுத்து அன்னையை உபாசிப்பவன் தேவியின் அருளால் கல்வி, செல்வம், அழகு மற்றும் ஜீவமுக்தி நிலையையும் தன் வாழ் நாளில் அடைகிறான் எனவும் போற்றுகிறார்.
இதுதான் பிராம்மியின் தத்துவம்.
அவள் அறிவின் தெய்வம் என்பதால் மஞ்சள் அவளுக்கு பிடித்தமான நிறம், அவள் வழிபாடுகளில் அது மிக முக்கியம்.
அவளிடம் அறிவினை வேண்டி வழிபடும் போது மஞ்சளாடை சாற்றி மஞ்சள் எலுமிச்சை சாதமிட்டு, மஞ்சள் பூக்களும் தும்பைப் பூக்களுமாக அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்பது சாஸ்திரம்.
பிலஹரி ராகம் அவளுக்கு உகந்தது என்பார்கள். முடிந்தவர்கள் முயற்சிக்கலாம் முடியாதோர் விட்டுவிடலாம் உளமார்ந்த பக்திதான் மகா முக்கியம்.
அன்னை பிராம்மியினை வழிபட வழிபட குலப்பெண்ணுக்கு அறிவும் புத்தியும் வரும், ஆரோக்கியம் வரும், அக்குலம் செழிக்கும்.
அன்னை பிராம்மியினை குலப்பெண்கள் வழிபடுதல் கூடுதல் நன்மை. ஆனால், எல்லோரும் அவளை வழிபடுதல் அவசியம்.
அவளை வழிபட்டால் மூளை சம்பந்தமான நோய்கள் தீரும், மூளை வலுவாகும். அது நல்ல சிந்தனைகள், நல்ல ஆரோக்கியம், நினைவாற்றல், சுறுசுறுப்பு, சமயோசிதம் என எல்லாமும் கொடுக்கும். அதைப் பெற்றவர் வாழ்வு சிறக்கும்.
படிக்கும் மாணவர்களுக்கு இந்த பிராம்மியின் அருள் அவசியம். பிராம்மி என்பவள் சப்தகன்னி என ஆலயங்களில் அமர்த்தபட்டாலும் கிராம தெய்வமான பேச்சியம்மன் அவள் சாயலே.
அந்தப் பிராம்மி தேவிக்கான வழிபாடு மாணவர்களுக்கு மகா முக்கியம், காலை எழுந்தவுடன் அந்த மந்திரத்தை சொல்லி எழுதலும், கல்வி கற்கும் முன்னும் தேர்வுக்கு முன்னும் அதைச் சொல்வதும் மிக நன்று.
இந்த மந்திரம் மிகப்பெரிய பலனைக் கொடுக்கும். நினைவாற்றல் சிந்தனை, கல்வி என எல்லாமும் சிறக்கும் பலனை கொடுக்கும்.
ஆம். அவள் மூளையினைப் பலப்படுத்தும் தெய்வம் என்பதால் அது சம்பந்தமான எல்லா வரத்தையும் தருவாள்.
“தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா”
என்பது அவளின் தியான ஸ்லோகம். இதைச் சொல்வோர்க்கு மூலாதார சக்தி எழும், துலங்கும் ஞானம் பெருகும்.
“ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம”
என்பது அவளின் மந்திரம்.
“ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்”
என்பது அவளின் காயத்ரி மந்திரம். அதைச் சொல்ல சொல்ல மூளையும் அதுசார்ந்த செயலும் பலமாகும். அதைச் சொல்லி எழுதும் தெர்வுகளும் இதர விஷயங்களும் முழுக்க ஜெயமாகும், தெளிந்த சிந்தனையும் நிதானமும் பக்குவமும் அறிவும் ஞானமும் வரும், நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். இது சத்தியம்.
மிக முக்கியமாக மானுட நெறியில் மானுட விதியில் எது தர்மமோ, எது மானுட தர்ம விதியோ, எது மானுட நியாயமோ, எது மானுட தாத்பரிய வழியோ அதனில் சரியாக நடந்து முக்தி நிலையினையும் அடைவீர்கள். அது முக்கால சத்தியம்.
சப்த் கன்னியர் 02 : மகேஸ்வரி.
சப்த கன்னியரில் இரண்டாம் தெய்வமான மகேஸ்வரியினைக் காணுமுன்னால் இந்த சப்த கன்னி வழிபாடு இடையில் புகுத்தப்பட்டதா? யாரோ இடைச்செருகல் செய்தார்கள்களா என்பதான குழப்பங்களைக் காணலாம்.
சப்த கன்னியர் வழிபாடு இங்குக் கால காலமாக உண்டு. சிறிய கோவில்களின் தெய்வமாக, கிராமங்களிலும் பெரிய ஆலயங்களில் சப்த கன்னியராகவும் இந்த வழிபாடு உண்டு.
கலிங்கத்து பரணி இந்த வழிபாட்டைச் சொல்கின்றது.
“மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்
வேழம் என்ற கொடி ஏழுடைச்
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
துணைப் பதங்கள் தொழு வாம்”
என அக்காலத்திலே இங்குச் சப்தகன்னி வழிபாடு இருந்ததைச் சொல்கின்றது.
குமரகுருபரர் எனும் மகாஞானி, தமிழ் இந்து ஞானி பாடுகின்றார்.
“கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்”
அதாவது “கடகளிறு தவுக பாய் மிசைப்போர்த்தவள்” என்றால் தாருகாவன முனிவர்கள் கொல்ல அனுப்பிய மத யானை தந்த தோல் ஆகிய நிலைஅங்கியை மேலே போர்தியவள் எனப் பொருள்.
அந்தச் சாகசத்தை அந்த மதயானையினைச் சிவன் அடக்கிக் கொன்று தோலை உரித்து போர்த்திக் கொண்டார் என்பது புராணம். ஆனால், அவருக்கு அந்த சக்தியினை அளித்தவள் ஒருத்தி அவள் மகேஸ்வரி என்பது வரியின் பொருள்.
அடுத்து “கருகுவிது உறுகலின் வாரியைத் தூர்த்தவள்” குரங்குகள் குவித்த சிறுகற்களினால் மன்னார்குடாக்கடலை மேடாக்கியவள் ” அதாவது, கடலைச் சிறிய கற்களால் நிரப்பி பாலம் அமைத்தவள், குரங்களுகளால் கடலைக் கடந்தவள் என்பது பொருள்.
நாராயணின் சக்தியாக நாராயணி இருக்கின்றாள் என்கின்றார் முனிவர்.
அடுத்து, ” கடல்வயிறு எரியஒள் வேலினைப்பார்த்தவள்” அதாவது கடலின் அடிவயிறு கலங்கும்படி வேலை எறிந்தவள் எனப் பொருள்.
முருகப்பெருமானின் சக்தியாக நின்ற கௌமாரி எனப் பொருள்.
அடுத்து “கடிகமழ்தருமலர் தார்முடிச் சேர்த்தவள்” மணங்கமழ்கின்ற கற்பகத்தருவின் மலரை மாலையாகப் புனைந்துமுடியிற் சேர்த்தவள் என்றால் இந்திரனின் சக்தியான இந்திராணி எனப் பொருள்.
“இடி உக அடல் அரி ஏறு உகைத்துஆர்த்தவள்” என்றால் இடியும்சிதறும்படி வலியுற்ற ஆண்சிங்கத்தினைச் செலுத்திமுழக்கம் புரிந்த சாமுண்டி எனப் பொருள்.
“எழுத அரு முழுமறை நூலினில் கூர்த்தவள் ” என்றால் எழுத்து அறிவும் கல்வி அறிவும் வேத அறிவும் கொடுக்கும் பிராமி எனப் பொருள்.
“எயிறுகொடு உழுது எழு பாரினைப்பேர்த்தவள்” என்றால் வராகம் ஆகிக் கொம்பினால் உழுது ஏழுலகங்களையும் பேர்த்தெடுத்த வராஹத்தில் இருந்து வந்தவள் எனப் பொருள்.
இவர்எழுவர்கள் தாள் முடிச்சூட்டுவதும் என்றால் என்று சொல்லப் படுகின்ற ஏழு மாதர்களின் திருவடிகளை நம்தலைமேற் கொண்டு பணிவோம் எனப் பொருள்.
ஆக மும்மூர்த்திகள் அவர்களின் அம்சமான அவதாரங்களில் சப்த கன்னியரே நின்று இயக்குகின்றார்கள். அந்தச் சக்திமிக்க சப்த கன்னியரை தொழுவோம் எனக் குமரகுருபரர் சொல்கின்றார்.
ஆம். இந்த சப்த கன்னியர் வழிபாடு எல்லாக் காலமும் எல்லா இடத்திலும் இருந்தது, எதுவும் இங்கு புதியதல்ல.
அந்தச் சப்த கன்னியரில் இரண்டாம் தேவி மகேஸ்வரி.
இந்த மகேஸ்வரி சிவனின் தோளில் இருந்து உருவானவள் என்கின்றது புராணம். மகேஸ்வரனின் இயக்கு சக்தியான அவள் பெயர் மகேஸ்வரி.
இந்த மகேஸ்வரி சிவனின் அம்சம் அதாவது மகேசன் என்றால் அமைதியான நிலையில் இருக்கும் சிவன், தவக்கோலத்தில் இருக்கும் அந்தச் சாந்தமான வரமருளும் சிவன்.
அந்தச் சிவனின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி தேவி.
இந்தத் தேவிக்கும் மூன்றுகண் உண்டு. மகுடம் கொண்டவள். கையில் மான், கோடரி எனும் மழு ஏந்தி நிற்பாள், அபயவரதம் காட்டி நான்கு கரங்களோடு வீற்றிருப்பாள், சிவனைப் போலவே பாம்பும் பிறையும் சூடிய கோலமும் உண்டு.
சிவனைப் போலவே இவளும் ஈசானிய மூலைக்கு அதிபதி.
வெண்ணிற ஆடையினை அணிந்திருப்பவள்.
மஹதி என அழைக்கப்படும் தெய்வமும் இவள்தான். ஐந்து முகங்களைக் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணு தர்மோத்திர புராணம் ஆகியவை சொல்கின்றன.
ஸ்ரீதத்துவநிதி புராணம் இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது.
இந்தத் தேவி எருதினை அதாவது நந்தியினைச் சிவனைப் போல வாகனமாகக் கொண்டவள், பலத்தினை தரும் சக்தியாக அறியப்படுகின்றாள்.
அவள் எப்படியான பலத்தை தருவாள் என்பதுதான் இங்கே காணவேண்டியது, அவளின் தாத்பரியமே அதில்தான் அடங்கியுள்ளது.
அன்னை சிவனின் தோளில் இருந்து வந்தவள் என்பது அவள் எலும்பின் அதிபதி எலும்பு தத்துவத்தைக் கொண்டவள் என்பதைச் சொல்கின்றது.
உடல்பாகத்தில் தோள் எலும்புதான் வலுவானது, சுமைகளைத் தாங்கக் கூடியது, இன்னும் பலமும் வலிமையும் அதிகம் கொன்டது.
அதனாலே அவள் தோளில் இருந்து வந்தாள் என்பது அவள் வலிமையானவள், சக்தி கொண்டவள், எதையும் தாங்கும் எதையும் எதிர்கொள்ளும் வலிமையினைத் தருவாள் என்கின்றது.
ஆம். அவள் எலும்பின் அதிபதி.
இந்த உலகில் எல்லாமே ஒவ்வொரு வடிவத்தைக் கொண்டிருக்கின்றன. வடிவம் இல்லாமல் படைப்பு இல்லை. பிரபஞ்ச கோள்கள் முதல் பூலோக மண்புழு வரை எல்லாமே ஒரு வடிவம் கொண்டவை.
மானிட உடலுக்கும் வடிவம் உண்டு. அந்த வடிவினைக் கொடுப்பது எலும்பு. எலும்பு இன்றி உடல் வடிவமில்லை இயங்க வழியில்லை.
ஆம். இந்த வடிவத்தின் ஆதாரமாய் நிற்பவள்தான் இந்த அன்னை. ஒவ்வொரு படைப்புக்கும் மிக சரியான வடிவத்தை அவள் வழங்கி இயக்கம் சரிவர நடக்க அவள் அடிநாதமாய் இருக்கின்றாள்.
வானில் சுழலும் கோள்களுக்கு உருண்டை வடிவம், மலைகளுக்கு கூம்பு வடிவம், நதிக்கு திரவ வடிவம், மேகத்துக்க்கு புகைவடிவம், கடலுக்கு அலை வடிவம் எனக் கொடுத்த அவள் ஒவ்வொரு உயிருக்கும் எது அதன் இயக்க வடிவமோ அதைக் கொடுக்கின்றாள்.
மரத்துக்கு, செடிக்கு, மலருக்கு, ஊர்வன, பறப்பன, நடப்பன நீந்துவன என எல்லாவற்றுக்கும் எது ஏற்ற வடிவமோ அதை அருள்கின்றாள்.
ஒவ்வொரு படைப்பும் எப்படி இயங்க வேண்டுமோ அந்த ஞானம் அவளாலே வடிவமைக்கப்படுகின்றது.
சரிவுகளைக் கொண்ட மலை, பள்ளத்தில் ஓடும் நதி, கூர்மூக்கும் இறகும் வாலும் கொண்ட பறவைகள், தங்கள் கடமையினைக் கர்மாவினைச் செய்யும்படி உடல் கொண்ட விலங்குகள் என எல்லாமும் பார்த்துப் பார்த்து வடிவமைக்கின்றாள்.
விதைகள் அதன் வடிவம் முதல் அதன் எல்லா நுட்பமும் அவளாலே வடிவமைக்கப்படுகின்றன, எல்லாப் படைப்பின் மூல வடிவமும் அவளாலே உருவாகின்றன.
அப்படிப்பட்டவளே மானுடருக்கும் எலும்பாய் வடிவங்களைக் கொடுக்கின்றாள். எலும்புதான் மானுடனுக்கு வடிவம் கொடுக்கின்றது. அதனால்தான் மானுட உடல் இயங்குகின்றது.
எலும்பும் வடிவமும் வெறும் இயக்கம் மட்டுமல்ல, அதுதான் பலம், அதுதான் தாங்கும் சக்தி. அதுதான் பலமாக உழைக்க வைக்கும் சக்தி.
எதையும் தாங்குவதும் உழைக்க வைப்பதுமான சக்தியினை எலும்புதான் கொடுக்கும் எலும்பு இன்றி மானிடர் இல்லை.
முதுகெலும்பாக நிற்போம், தோள் கொடுப்போம், உறுதியாக நிற்போம் என்பதெல்லாம் எலும்பின்றி எந்த இயக்கமும் இல்லை தாக்கமும் இல்லை என்பதைச் சொல்வது.
அன்னை அப்படி எலும்புபோல் மானுடருக்கு பலம் தருவாள், வடிவம் தருவாள், உழைக்கும் பலத்தை எதையும் தாங்கும் சக்தியினைத் தருவாள் என்பது அவள் வழிபாட்டின் தாத்பரியம்.
சிவனுக்கு “கங்காள மூர்த்தி” என ஒரு பெயர் உண்டு. அதாவது ஒரு முதுகெலும்பினைக் கையில் வைத்திருப்பவர் எனப் பொருள்.
அந்தச் சிவனின் சக்திமிக்க எலும்பாக இருப்பவள் அன்னை என்பதே அதன் தத்துவம். சிவனின் ஆதாரம் அவள்தான் என்பதே அந்த கங்காள முர்த்தி கோலத்தின் தாத்பரியம்.
எலும்புதான் மிக முக்கிய விஷயங்களைக் காப்பதும் இயக்குவதுமானது. உடலில் இதயம் மூளை என முக்கிய பாகங்கள் எலும்புக்கு உள்ளேதான் உண்டு.
மானுட உடலில் 206 எலும்புகள் இப்படிப் பலவகை பணிகளைச் செய்கின்றன. அவைதான் இரத்தம் உருவாகக் காரணமான மஞ்சையினை உருவாக்கி காக்கின்றன.
ததீசி முனிவர் முதுகெலும்பை ஆயுதமாக விட்டுச் சென்றார் என்பதும், சகுனி தன் முன்னோர்களின் எலும்பை ஆயுதமாகக் கொண்டிருந்தான் என்பதும் சக்தியினை வழி வழி வந்த பலத்தினைச் சொல்வது.
எலும்பின் இன்னொரு வடிவம்தான் சங்கு. இதனாலேதான் சிவன் கங்காளமுர்த்தி என எலும்போடு இருப்பது போல் விஷ்ணு பகவான் சங்கோடு இருக்கின்றார்.
எப்படி மானுடன் பிறக்கும் போது எலும்பும் உருவாகி அவன் இறந்தபின்பு அது எஞ்சுகின்றதோ, அப்படி சங்கு பூச்சு உருவாகி அது வளர்ந்து அழிந்தபின்னும் சங்கு அழிவதில்லை.
சங்குதான் அந்த உயிருக்கு வடிவம், அந்த உயிருக்கு காவல், அதன் ஆதாரம் எல்லாம். அப்படி மானிட உயிர்க்கு பெருமாளே காவல் அவரே ஆதாரம் எனச் சொல்லத்தான் சங்கை அவர் கையில் கொடுத்தார்கள்.
கடலில் சங்கு கடைசியில் எஞ்சுவது போல் சம்சார சாகரத்தில் எலும்பு மிஞ்சும் என்பதைக் காட்டவே சங்கு இங்கு பகவான் கையின் அடையாளமாயிற்று.
அப்படி மகா சிறப்பானது எலும்பு. அதன் அதிபதி தேவி மகேஸ்வரி. அதனாலே வெண்மை நிறமான எலும்பினை அவளுக்குக் கொடுத்தார்கள்.
எலும்பு என்றால் உறுதி, பலம். அன்னை எல்லா உறுதியும் பலமும் தருவாள் எதையும் தாங்கும் சக்தி தருவாள் என்பதற்காக அவளுக்கு வாகனமாக நந்தியினை வைத்தார்கள்.
நந்தி பலமானது. கடுமையாக உழைக்கக் கூடியது. அன்னையினை வழிபட்டால் உழைக்கும் சக்தி எந்தப் பெரும் சுமையினையும் தாங்கிச் செல்லும் சக்தி கிடைக்கும் என்பதைச் சொன்னார்கள்.
ஆம். அன்னை மகேஸ்வரியின் வழிபாட்டில் ஆயிரம் தத்துவங்கள் உண்டு. லௌகீகமாகவும் சூட்சுமமாகவும் நிறைய உண்டு.
லௌகீகமாக அன்னையினை வழிபட வழிபட எலும்பு சம்பந்தமான சிக்கல்கள் நோய்கள் லௌகீக வாழ்வில் தீரும். அவளுக்கான வழிபாட்டை சரியாகச் செய்தால் எலும்பு நோய்கள் தீரும்.
எலும்பு சம்பந்தமான நோய்களே தலைமுதல் கால்விரல் வரை ஏதோ ஒரு உருவில் வந்து மானிடரை முடக்கும். அவளை வேண்ட வேண்ட அவள் எலும்பு நோய்களைத் தீர்த்து முழு சக்தி தருவாள்.
எந்தப் பணி, எந்தத் தொழில், எந்தக் கலையாக இருந்தாலும் அதன் அடிப்படை வடிவம் சரியாக வர அவள் முழு அருள் செய்வாள், அதனால் தொட்டது எல்லாம் அவள் அருளால் வாய்க்கும்.
உழைக்கும் முழு பலத்தை எருதுபோல் உழைக்கும் பெரும் பலத்தை, களைப்பில்லாமல் சளைப்பில்லாமல் உழைக்கும் பெரும் பலத்தை அவள் கொடுப்பாள்.
பெண்கள் அவளை வழிபட சொல்ல காரணம் நிறைய உண்டு. இந்துமதம் அதை சரியாகச் செய்தது.
பெண்கள்தான் ஒரு குடும்பத்தின் வடிவம், அவர்களைக் கொண்டே ஒரு குடும்பம் வடிவம் பெறும், பெண்கள் சரியில்லாக் குடும்பம் நல்ல வடிவம் நல்ல கோலம் பெறா. அது அவமான கோலமாகிவிடும்.
குடும்பம் சரியாக அமைய, நல்ல வடிவில் அமைய பெண்கள் அவளை வழிபடுதல் அவசியம்.
குடும்பச் சுமையினைத் தாங்கி, குடும்பத்தின் முக்கிய ஆதாரங்களைக் காத்து எலும்பு செய்யும் அனைத்துக் காரியங்களையும் குடும்பத்துக்குச் செய்பவர்கள் பெண்கள். அதனால் அந்த அன்னையின் அருளில் எலலாப் பலமும் அவர்கள் பெறுவது அவசியம்.
அன்னையினை வழிபட்டால் பெண்களுக்குப் பொறுப்பும், சுமைதாங்கும் சக்தியும், குலம் தழைக்க உழைக்கும் சக்தியும் அதிகரிக்கும். அவள் அருளால் அவளை வணங்கும் குலம் வலிமைபெறும்.
ஆண் என்பவன் பெண்ணுக்குக் கொடுப்பது ஒருதுளி விந்துதான். அந்த விந்துவினை அழகிய உருவமாக்கி பெற்றெடுக்கும் சக்தியும் வரமும் பெண்ணுக்குத்தான் உண்டு.
குழந்தையாகப் பிறக்கும் மானுடரின் உடல் ஏழு தாதுக்களாலும் வளரவேண்டும். நல்ல உருவில் நல்ல சக்தியில் வளர்க்க வேண்டும். அதற்கு சப்த கன்னியரின் அருள் வேண்டும்.
இதுதான் மகேஸ்வரி தேவியினை வழிபடும் தத்துவம்.
அந்த அன்னைக்கு எல்லா ஆலயத்திலும் இடம் உண்டு. கிராமங்களில் எலும்புமாலை மண்டையோட்டு மாலை அணிந்தவள், கொற்றவை சாயல் தெய்வமெல்லாம் இந்த மகேஸ்வரிதான்.
அந்த வடிவைத்தான், அந்த தாத்பரியத்தைத்தான் கிராம பக்கங்களில் வேறுவடிவில் கொண்டாடுகின்றார்கள்.
இந்த அன்னைக்கான ஆலயம் சோழநாட்டின் கும்பகோணம் அருகே சப்த கன்னியரின் ஸ்தலங்களுக்கான வரிசையில் சக்கரமங்கை ஆலயம் அருகே உண்டு.
அது அரியமங்கை எனும் ஊரில் இருக்கும் ஆலயமாகும். அது “ஹரி மங்கை” என அழைக்கப்பட்ட இடம் பின் அரியமங்கை என மருவிற்று.
இங்கிருக்கும் “ஹரி முக்தீஸ்வரர்” ஆலயம் மிகப் பிரசித்தமானது.
ஒரு சாபம் காரணமாக விஷ்ணுவினைப் பிரிந்த அலர்மேல் மங்கை இங்கு வந்து சிவனை வணங்கி தன் சாபம் தீர்ந்தாள்.
அப்படி மகேஸ்வரி தேவி சிவனை வழிபட்டு சிவன் தலையில் கங்கைப் பொங்கும் கோலத்துடன் அவரைத் தரிசித்து தன் சாபம் நீங்கப் பெற்றாள்.
அந்த அரியமங்கை ஆலயம் மகேஸ்வரி தேவிக்கு உகந்தது. அங்கே வழிபட வழிபட அவள் அருள் பெருகும்.
அந்த ஆலயம் தேவார வைப்புத்தலம். சப்த கன்னியரில் இரண்டாவதாக உள்ள தேவிக்கு நவராத்திரி காலங்களில் இரண்டாம் நாள் மிக விமரிசையான வழிபாடுகள் நடக்கும்.
ஹரி எனும் விஷ்ணுவும், மங்கை எனும் மகாலட்சியும் வழிபட்ட இடம் என்பதால் அவர்களுக்கு சிவன் வரமருளிய இடம் என்பதால் அது “ஹரி மங்கை” அந்த சிவன் “ஹரி முக்தீஸ்வரர்” என்றானார்.
இந்தக் கோவிலின் தீர்த்தம் சத்திய கங்கா தீர்த்தம் அல்லது ஹரி தீர்த்தம் எனப் போற்றப்படும். இங்கு மகேஸ்வரி வழிபட்ட போது சிவனின் திருக்கரங்களில் இருந்து வழிந்த நீரால் உருவான தீர்த்தம் இது. இந்தக் கோவிலின் முதல் சந்நிதி பெருமாளுக்கும் மகாலட்சுமிக்குமானது.
இரண்டாவது சந்நிதி ஆயுர் தேவிக்கானது, மகேஸ்வரியினை ஆயுர்தேவி என இங்கே அழைகின்றார்கள்.
ஆந்த ஆயுர் தேவி பிரபஞ்சத்தின் ஆட்சி சக்தியாகவும், பராசக்தியின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறார். உலகளாவிய மற்றும் அனைத்து வியாபித்துள்ள சக்தி, மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றின் ஆதி உயிர் சக்தி அவள்.
ஆயுர் தேவி வழிபாடு சத்ய / கிருத யுகத்தின் போது நடைமுறையில் இருந்தது. ஆயுர் தேவியின் உருவம் ஆகமங்கள் மற்றும் புராணங்களில் எழுதப்பட்டுள்ளது,
இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லாத அபூர்வம்.
அவளுடைய ஏழு கைகளில் ஏழு முனிவர்கள் தனித்தனியாக அமர்ந்திருக்கிறார்கள், எட்டாவது இடத்தில் கர்கினி தேவியும் மற்றொரு ரிஷியும் அமிர்த பானையில் ஒன்றாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த எட்டு கைகளும் “கர பீடங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. அவளது ஒன்பதாவது கரம் அபய ஹஸ்தத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றது.
இந்த அன்னைதான் மகேஸ்வரி, அவளை வழிபடுதல் எல்லோருக்கும் நன்று, குறிப்பாக பெண்களுக்கு மிகவும் நல்லது.
அந்த ஆலயத்தில் எலும்பு சம்பந்தமான நோய்கள் எது இருந்தாலும், கை கால்கள் முதுகுவலி கழுத்துவலி கபால சிக்கல் என எதுவென்றாலும் தீரும்.
காதுக்குள்ளும் எலும்பின் ராஜ்ஜியம்தான் உண்டு. மிகச் சிறிய எலும்புதான் காதின் கேட்கும் சக்தியினை தாங்கி நிற்கின்றது. அதே சாயல் மூக்கிலும் உண்டு, நாக்குக்கு அடியிலும் உண்டு.
அந்த நுண்ணிய எலும்புகளின் பிரச்சினைகளைக் கூட இந்த ஆலய வழிபாடும் தரிசனமும் சரிசெய்யும்.
இங்கு வழிபட்டால் வாழ்க்கையின் உடலில் எலும்பு கொடுக்கும் சிக்கலெல்லாம் தீரும். உடல் பலமாகும்.
வாழ்க்கையின் உருவம், வடிவம் மாறும், தொழில் ஒழுங்கான வடிவம் பெறும். பெண்கள் வழிபட்டால் அவர்கள் குடும்ப நலனும் குடும்பமும் குடும்ப உறவும் முழு வடிவம் பெறும் எல்லாம் பூரண வடிவினை எட்டும்.
நல்ல அழகான வடிவத்தை எல்லா வகையிலும் அன்னை தருவாள்.
முடிந்தவர்கள் அந்த அரியமங்கை தலம் சென்று அவளை வணங்கலாம். முடியாதவர்கள் வீட்டிலே அவளை நினைந்து வணங்கலாம், அருகிருக்கும் ஆலயத்திலும் சென்று வணங்கி நலம்பெறலாம்.
அவளுக்குப் பாலில் வைத்த வெண்மையான பொங்கலும், புளியோதரையும் நைவேத்தியங்கள்.
பவளமல்லி மலர்கள், பிச்சிப்பூ, மரிக்கொழுந்து ஆகியன தூவி வழிபாடு செய்தல் நலம்.
அவளுக்கான ஸ்லோகம் இதோ.
“சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா”
அவளுக்கான மந்திரம் இதோ.
“ஓம் மாம் மாஹேச்வர்யை நம ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம” இதைச் சொல்ல சொல்ல எல்லா வகையிலும் அது தொழில், குலம், சொந்தம், நிர்வாகம், வீடு என எதெல்லாம் உருவமின்றி வடிவமின்றி ஒழுங்கின்றி இருக்குமோ அதெல்லாம் ஒழுங்கு பெறும்.
அவளுக்கான காயத்திரி மந்திரம் இதோ. இதைத் தினமும் சொல்ல சொல்ல எலும்புகள் பலம் பெறும், குடும்பமும் தொழிலும் நல்ல வடிவம் பெறும், உறுதியான கடுமையான உழைப்பினைத் தடையின்றி செய்ய முடியும்.
முக்கியமாக எதையும் சுமக்கும் பெரும் பலம் மனதாலும் உடலாலும் வாய்க்கும்.
“ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.”
என்பது அவளின் காயத்திரி மந்திரம். இதைச் சொல்ல சொல்ல ஆக்ரோஷம் கோபம் நிதானமின்மை எல்லாம் அழிந்து எருது எந்தக் களைப்பும் வன்மமும் இன்றி உழைப்பது போல உழைக்கும் மனநிலை மட்டும் வாய்க்கும்.
“அருள்மழை பொழியும் சுடர் மணி விழியே
ஆலவாய் கூத்ர ஒளியே உமையே
வருவினை தீர்க்கும் ஜெகத்ஜனனி நீயே
வைகை தலைவியே சரணம் தாயே”
சப்த கன்னியர் 03 : கௌமாரி தேவி.
கௌமாரம் என்றால் முருகப்பெருமானின் வழிபாட்டை குறிக்கும் சொல். அவ்வகையில் இந்தக் கௌமாரி தேவி என்பவள் முருகப்பெருமானின் சக்தியினைக் குறிப்பவள்.
“கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்” எனக் குமரகுருபரர் முருகன் சூரனை அழிக்கும் போது அவள் முருகப்பெருமானின் சக்தியாய் இருந்தாள் என்பதைச் சொல்கின்றார்.
சப்த கன்னியரில் மூன்றாம் தேவியான இந்த அன்னை முருகப்பெருமானின் சக்தி. அந்தக் கந்தனை இயக்கும் குமரன் எனும் கௌமாரனின் சக்தி அந்த கௌமாரி.
அவள் முருகனின் அம்சம் என்பதால் மயிலை வாகனமாகக் கொண்டவள்; சேவலை கொடியாகக் கொண்டவள். கையில் வேல் அல்லது சூலம் ஏந்திய நிலையில் இருப்பவள். வஜ்ஜிராயுதம் எனும் இந்திரனின் ஆயுதமும் கொண்டிருப்பாள்.
செந்நிற ஆடை அணிபவள், பூக்களில் கூட செவ்வரளி போன்ற பூக்கள் அவளுக்குப் பிடித்தமானவை.
இவள் இந்திரனின் மகளான தேவசேனையின் இன்னொரு வடிவம்.
இவளே இயக்கும் சக்தி அண்ட சராசரம் முதல் ஒவ்வொரு படைப்பு உயிரினம் வரை இயக்கும் மகா சக்தி.
பொதுவாக இயக்கும் சக்திக்கு சிகப்பு வர்ணம் என்பது இந்துக்கள் என்றோ கண்டறிந்த ஒன்று, அதனாலே எதெல்லாம் இயக்கும் சக்தியோ அந்தச் சக்திக்கெல்லாம் சிகப்பு வண்ணம் கொடுத்தார்கள்.
அதைத்தான் இன்று விஞ்ஞானமும் சொல்கின்றது, வானின் கிரகங்கள் கண்ணுக்குத் தெரியாக அகச்சிகப்பு கதிர்களால் இயங்குவதை அது சொல்கின்றது.
சூரியனின் நிறம் முதல் உடலை இயக்கும் செங்குருதி வரை எல்லாமே அந்த நிறம்தான்.
அதனாலேதான் செந்நிற குங்குமம் இந்துக்களின் அடையாளமாயிற்று.
உலகை இயக்கும் பெரும் சக்தி என்னுள் உண்டு அது என்னைக் காக்கின்றது என்பதைச் சொல்ல குங்குமத்தை வைக்கச் சொன்னார்கள், பெரும் இயக்கம் என்னுள் உண்டு என்பதைச் சொன்னார்கள்.
அந்த இயக்கம்தன் அன்னை கௌமாரி. அவள்தான் மானுட உடலின் இரத்த வோட்டத்துக்கும் இரத்த சக்திக்கும் ஆதாரமானவள், முழு சக்தியானவள்.
உடலுக்கு இரத்தம் தான் இயக்கம், இரத்த ஓட்டம் ஒரு நொடி நின்றால் கூட உயிர் வாழாது, உடலின் மரணம் என்பது இரத்த ஓட்டம் நின்றுவிட்ட நிலை அன்றி வேறல்ல.
அந்த இரத்தம் இடைவிடாமல் பாயக்கூடியது, ஒரு நொடிக் கூட அது இல்லாமல் இருக்கமுடியாது, அப்படி உலகையும் உடலையும் காப்பவள் அன்னை.
இரத்தமே புதிய செல்களை உருவாக்கும், உடலின் எல்லாப் பாகத்துக்கும் சக்தியினை எடுத்துச் செல்லும், சக்தியும் வளர்ச்சியும் அதுதான் கொடுப்பது, அதுதான் இயக்குவது.
அந்த இரத்தத்தின் அணுக்கள்தான் ஒரு உடலில் வரும் கிருமிகளை நோய்களை எதிர்த்து போராடும் அதுதான் உடலின் பாதுகாப்புக் கவசம்.
இரத்தம்தான் உடலை சுத்திகரிகும்கழிவுகளை அப்புறபடுத்தும், உண்ணும் உணவின் சக்தியினை அதுதான் உடலெல்லாம் பரப்பி உடலை வலுவாக இயங்க வைக்கும்.
இரத்தவோட்டமே ஒவ்வொரு சூழலுக்கும் பருவத்துக்கும் உடலைக் காக்கும், அதுதான் மனதின் ஆசாபாசங்களுக்கும் வாழ்வுக்கும் அடிப்படை.
அவ்வளவு முக்கியமானது இரத்தம், அது இல்லாவிட்டால் ஒரு நொடிக் கூட உடலும் உயிரும் வாழாது.
அன்னை அந்த இரத்தம் போல இந்த உலகை காப்பவள், அப்படியே மானுட உடலின் ஆதாரமாக நிற்பவள், அவளே பிரபஞ்சத்தை போல மானுட உடலையும் இயக்குகின்றாள், காக்கின்றாள்.
உடலில் உயிர்தங்கி நிற்கும் அந்த இயக்கத்துக்கு ஆத்மா தன் கடமையினைக் கர்மாவினைச் செய்யும் அவசியத்துக்கு அவள்தான் மூல காரணம்.
அவள் உடல் சீராக இயங்கி அதனால் ஆத்மா தன் கர்மாவினை நல்வழியில் செய்ய எல்லா வரமும் காவலும் அருள்வாள்.
அந்த அன்னையின் வழிபாடு அவ்வளவு முக்கியமானது.
உயிர் என்பது இரத்தத்தில் இருப்பதாக ஐதீகம். இரத்தம் நீங்கினால் உயிர் நீகும். அதனாலே இரத்தபீஜனின் ஒவ்வொரூ சொட்டு இரத்தமும் பூமியினைத் தொடும்போது ஒரு அரக்கன் ஜெனிக்கும் வரம் கிடைத்தது.
அன்னை கௌமாரிதான் காளி உருவில் அவனை அழித்தாள். அதாவது இரத்தத்தை அவள் கட்டுப்படுத்தி அவனை ஒழித்தாள் என்பதில் அவள் சக்தி உலகுக்குச் சொல்லப்பட்டது.
அன்னை உயிரைக் காப்பவள், இரத்தம் நோய்பட்டால் இரத்தம் கெட்டுவிட்டால் வாழமுடியாது. இரத்தம் சுத்தமாக இல்லாவிட்டாலும் வாழமுடியாது அதன் அடர்த்தி அதன் அழுத்தம் அதிகரித்தாலும் ஆபத்து. குறைந்தாலும் ஆபத்து.
வானத்து கோள்கள் அதனதன் பாதையில், அதனதன் வேகத்தில் சரியாகச் செல்ல துல்லியமான அமைப்பு அமைக்கப்பட்டிருப்பது போல இரத்தம் சரியாகச் செல்லவும் பாயவும் துல்லியத் தன்மை அவசியம்.
அதைச் செய்பவள் அன்னை. அதாவது உடலைத் தாங்குவது உயிர், அந்த உயிரை தாங்குவது இரத்த ஓட்டம், அந்த இரத்த இயக்கத்தை நடத்துபவள் அன்னை.
பிரபஞ்சத்தை இயக்குபவள் இரத்த சக்தியாக அதனை மானுட உடலுக்குச் செய்கின்றாள்.
இரத்தம் என்பது சூடாக இருக்கும் மட்டுமே உடல் இயக்கம் எனப் பொருள், இரத்தம் குளிர்ந்து உடல் குளிர்ந்துவிட்டால் உடல் இயக்கம் நின்றுபோயிற்று எனப் பொருள்.
இரத்தத்தின் வெப்பமே இயக்கு சக்தி, அந்த வெப்பம் இரத்தத்தில் மூச்சுக்காற்றில் இருந்துகொண்டேஇருக்கும், அந்த வெப்பம்தான் அந்த உஷ்ண சக்திதான் அன்னை.
இந்த வெப்பம், இந்த அக்னி இரத்தத்தை விட்டு நீங்கினால் எல்லாம் வலுவிழக்கும்.
இந்த வெப்பம்தான் பிரபஞ்சத்தை இயங்க வைக்கின்றது. இங்கே மானுட உடலின் இரத்தத்தில் சூடாக நின்று வழிநடத்துகின்றது.
ஒரு அநீதியினைக் கண்டால், ஒரு அதர்மமான காரியத்தைக் கண்டால் இரத்தம் கொதிக்கின்றதே ஏன்? உலகை ஆளும் தர்ம சக்தி நம் உடலில் உண்டு, அது இரத்தத்தில் உண்டு, அது அதர்மம் கண்டு பொங்குகின்றது .
ஆம். அன்னை இரத்தத்தில் ஆள்கின்றாள், வாழ்கின்றாள் என்பதற்கு இதுதான் சாட்சி.
சில அம்மன் ஆலயங்களில் சேவல் ஆடு பலியிடுவது உண்டு. அது இரத்தம் அவள் சக்தி எனக் குறியீடாகச் செய்வார்கள். அப்படிப்பட்ட ஆலயங்கள் பெரும்பாலும் கௌமாரி ஆலயமாகவே இருக்கும்.
அவள் வாழும் குருதியினை அவளுக்கே காணிக்கை என வைப்பார்கள், உயிர்பலி வெட்டும் தத்துவம் அதுதான்.
மானுட உடலின் இரத்தத்தின் சக்தியாய் இருக்கும் அந்த அன்னை யோக தத்துவத்தில் மணிப்பூரக சக்கரத்தை ஆட்சி செய்கின்றாள்.
அக்காலத்தில் வெப்பம் அதிகமான காலங்களில் மாடுகளுக்கு ஒரு நோய் வரும். அது உஷ்ணம் அதிகமாகி அதாவது அன்னை கௌமாரியின் சீற்றம் அதிகமாகி வந்த நோய் என்பதால் “கௌமாரி” எனப் பெயரிட்டனர் இந்துக்கள்.
அது உலகெல்லாம் அப்படியே பரவிற்று , ஆங்கிலத்தில் இன்றும் “கோமேரி” என்றே அழைக்கப்படுகின்றது.
அந்த நோய்க்கு அன்று அன்னையிடம் வேண்டுவதே மருந்தாக இருந்தது, அவள் ஆலயத்தின் சில பொருட்களே நோயினைத் தீர்த்தன.
ஆம். உடலின் வெப்பம் அன்னை. அதனாலே உஷ்ணக் கோளாறால் வரும் அம்மை போன்ற வியாதிகளுக்கு அவளையே சொல்லி அவள் பெயரால் வணங்கி சுகம் பெற்றார்கள் இந்துக்கள்.
ஆம். கௌமாரி என்பது வெப்பம், அக்னி. இப்போது கவனியுங்கள் முருகப்பெருமான் அக்னி வடிவம், சிவனின் நெற்றிப்பொறியில் இருந்து வந்த அக்னியில் உருவானவன் முருகன், அவனின் சக்தி வெப்பசக்தியான கௌமாரி என்பதும் புரியும்.
இந்த கௌமாரி, மானுட உடலின் இரத்தத்தின் சக்தியாய் இருக்கும் அந்த அன்னை யோக தத்துவத்தில் மணிப்பூரகச் சக்கரத்தை ஆட்சி செய்கின்றாள்.
சுவாதிஷ்டானத்தில் மகேஸ்வரி இருந்து ஆள்வது போல இந்த தேவி மணிப்பூரகச் சக்கரத்தில் அமர்ந்திருக்கின்றாள்.
இந்தச் சக்கரம் சுவாதிஷ்டான சக்கரத்துக்கு மேல் அமைந்தது.
நடுவில் சதுரம், அதைச் சுற்றி சக்கரம் என்ற வட்டம், சக்கரத்துள் மூன்றாம் பிறை வடிவில் கோட்டை , வட்டத்தைச் சுற்றி பத்து தாமரை இதழ்கள் வடிவம் கொண்டது இது என்பது சித்தர்கள் சொன்னது.
அதை ஒரு ஸ்லோகமும் சொல்கின்றது,
“தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயா
ஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம்”
தாயே, நீலமேக ரூபமான, மணிபூரகச் சக்கரத்தை இருப்பிடமாகக் கொண்ட உனது சதாசிவத் தத்துவத்தை வணங்குகிறேன். அந்த மேகமானது, மணிப்பூரகச் சக்கரத்தில் உள்ள இருளை அகற்றும் மின்னல்களை உடையது. பற்பலவிதமான இரத்னாபரணங்களுடைய ஒளியினால் அது இந்திரனுடைய வில்லைப் போல் இருக்கிறது. காலாக்னி ருத்ரனால் தகிக்கப்படும் லோகங்களை தன் அம்ருத வர்ஷத்தால் குளிரச் செய்வது எனத் தன் சௌந்தர்ய லஹரியில் பாடுகின்றார் ஆதிசங்கரர்.
இந்த மணிப்பூரகச் சக்கரம்தான் மானிட சுபாவ உணர்ச்சிகளுக்கு ஆதாரமானது. அதாவது பந்தபாசம், நியா அநியாயம் , சுயநலம், பொதுநலம் என எல்லா உணர்வுகளும் இங்குதான் தீர்மானிக்கப்படும்.
இதுதான் இரத்தத்தில் வரும் உணர்ச்சி.
ஒருவகையில் மாயைகள் இருக்குமிடம் உதித்து ஆடும் இடம் இதுதான். ஆத்மாவினைச் சிறைபிடிக்கும் உணர்ச்சிகள் வரும் இடமும் இதுதான்.
இந்த மணிப்பூரகம் சரியாக இருந்தால் மன உறுதி, விடா முயற்சி, தைரியம், புதுப் புது படைப்புச் சிந்தனைகள், புத்தாக்கச் சிந்தனைகள், எதற்கும் கலங்காத நிலை ஆகியது இங்கேதான் உதிக்கும்.
இந்தச் சக்கரம் சரியில்லை என்றால் மனக்குழப்பம், தீராக் கவலை, மன உறுதியில்லாமை, புதிய முயற்சி இல்லாமை, தெளிவு இல்லாமை, மூர்க்கம், பதட்டம், முரட்டு வாதம் என எல்லாக் குழப்பமும் வரும்.
இந்தச் சக்கரம் சரியில்லை என்றால் இரத்தம் கெடும். அது கெட்டுவிட்டால் உடல்சார்ந்த கோளாறுகளும் வரும். ஜீரணக் கோளாறு, மூச்சுக் கோளாறுகள் இயல்பாய் வரும்.
இரத்தம் சரியில்லை என்றால் உடலின் வெப்பநிலை கெடும், கெட்டுவிட்ட வெப்பநிலை பல நோய்களை இழுத்துவரும்.
உஷ்ணக் கோளாறு என்பது இரத்தம் சரியான வெப்பநிலையில் இல்லாத கோளாறே, அது இந்த சக்கரம் சரியில்லாவிட்டால் பல வகை சிக்கலைத் தரும்.
இன்னும் அன்னை இந்தச் சக்கரத்தில் வெப்பமாக இருப்பதை, கௌமாரி என்றால் வெப்பம் என்பதை பொருத்தமான விஷயம் மூலம் அவதானிக்கலாம்.
இந்தச் சக்கரம் வயிற்றில் இருப்பதை அவதானிக்கலாம். அவ்வகையில் ஒரு நெருப்புத்தான் உணவை செரிக்கவைக்கும், உணர்வுகளில் வயிறு எரிவதைச் சொல்லும். அவ்வகையில் இது வெப்பம் சார்ந்த சக்கரம்.
வயிற்றிலிருந்துதான் உணவு செரிக்கப்பட்டு சக்தி உடலெல்லாம் செல்வது என்பது உடலியல் அமைப்பு.
அதேபோல இங்கிருந்துதான் நல்ல சக்திகள் உருவாகி நல்ல நாடிகள் உருவாகி சிந்தனைகளை வலுப்படுத்துகின்றன என்பது யோக சூட்சுமம்.
இதுதான் தன் கர்மத்தை தன் விதியினை நிர்ணயிக்கும் சக்கரம். இந்தச் சக்கரம் துலங்கியோர் தங்கள் கர்மத்தை உணர்வார்கள், விதியினை உணர்வார்கள்.
இந்தச் சக்கரம் துலங்கியவருக்கு கர்மம் துலங்கும், அந்தப் பிறப்பின் நோக்கத்துக்குச் செல்லும் வழிகள் துலங்கும். அதை நோக்கி இழுத்துச் செல்லும்.
ஆழ கவனித்தால் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது தொப்புள் கொடிதான் குழந்தையின் தொடர்பாகின்றது. இந்தத் தொப்புள் கொடி இருக்குமிடம்தான் இந்தச் சக்கரமும் அமையும்.
அவ்வகையில் கர்ம வினை, குலவழி கர்மம் எல்லாம் இங்கேதான் பதிவு செய்யப்படுகின்றன.
“உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை” எனத் திருமூலர் இதனைத்தான் பாடுகின்றார்.
இந்தச் சக்கரம்தான் இருவகை சக்திகளைக் கொடுக்கின்றது. ஒன்று உணவு செரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு அந்த வெப்பத்தில் உடலுக்குத் தேவையான சக்தியினைக் கொடுப்பது.
அதே பகுதியில் இருக்கும் சக்தி மையம்தான் மனதுக்குத் தேவையான எல்லாப் பலங்களையும் கர்ம வினைக்கான காரியங்களையும் கொடுப்பது.
இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கினால் அதிகம் உண்ணவேண்டி இராது. ஒருபொழுது உணவிலே சக்திபெற முடியும், அதுவும் இல்லை என்றால் உணவு இல்லாமல் நீரில், காற்றிலே சக்திப்பெற்று வாழமுடியும்.
யோகியர், ஞானியர் உணவில்லாமல் வாழும் இரகசியம் இதுதான். இந்தச் சக்கரம் துலங்கினால் எல்லாம் சரியாகும்.
நெருப்பு தத்துவம் என இதனை ஏன் சொன்னார்கள் என்றால் இதனால்தான், கௌமாரி இங்கே இருக்கின்றாள் என்றால் அதுதான் பொருள்.
வெப்பமே உடலுக்கு முக்கிய ஆதாரம், சூட்சும சக்திகளின் நாடி இயக்கத்தின் இரகசியம் இதுதான்.
இச்சக்கரம் துலங்கினால் எல்லாம் ஒருவனுக்குச் சரியாகும், அவனது கர்மா துலங்கும், துலங்குவதோடு மட்டுமல்ல அதனைச் செய்யும் வைராக்கியமும் வரும்.
முருகப்பெருமான் போர் தெய்வம், அதுவும் விடமால் போராடி வெற்றிபெறும் தெய்வம், அவ்வகையில் விடாமுயற்சிக்கும் விடாத இயக்கத்துக்கும் மூலம் இந்த அன்னை.
இந்த அன்னையினை ஏன் குலப் பெண்கள் வணங்க வேண்டும் என்றால் காரணம் பெரிது.
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு குலத்துக்கு இரத்தம் போன்றவள், அவளாலே அந்தக் குடும்பம் இயங்குகின்றது.
அவளாலே இரத்தபந்தம் எனும் பாசபந்தம் அடுத்த குழந்தைக்கு கடத்தப்படுகின்றது, அவளாலே இரத்த பந்தம் உருவாகின்றது.
அவளே இயக்கும் சக்தி, அவளாலே ஆண்கள் இயக்கப்படுகின்றார்கள். அவளாலே குடும்பம் இயக்கப்படுகின்றது, இரத்தம் என்பது அவளாலே அடுத்த தலைமுறைக்கு உயிராக உருவாக கடத்தப்படுகின்றது.
இரத்தத்தை தாய்பாலாக ஊட்டி பாசபந்தங்களை வளர்ப்பதும் குலத்தை பெருக்குவதும் இயக்குவதும் அவளேதான்.
அப்படி குலமும் குடும்பமும் நல்லபடியாக இயங்க, இயங்கிப் பெருக அவள் அன்னையினை வேண்டி வழிபடுதல் நன்று.
போராட்டமும் விடாமுயற்சியும் ஒருநொடி சுணங்காத உழைப்பு பெண்களுடையது, இரத்தம் போல அவர்கள் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் அப்போதுதான் குடும்பம் இயங்கும்.
எப்படி இரத்தம் உடலைக் காத்து நோய்கிருமிகளை போராடி விரட்டுமோ அப்படி குடும்பத்துக்கு வரும் கெட்டவைகளைத் தீமைகளை விரட்டி குடும்பத்தைக் காக்கவேண்டியது பெண்கள் கடமை.
தாய்கோழி போல அவர்கள் குலத்தைக் காக்கவேண்டியவர்கள். அதனால் போராட்டமும் வைராக்கியமும் விடாமுயற்சியும் அவசியம்.
சேவல் போல அவர்கள் விழிப்பும் போராட்டமும் அவசியம் அதனாலே சேவல் தாங்கிய அன்னையினை வழிபடச் சொன்னார்கள் முன்னோர்கள்.
மிக மிக முக்கியமான விஷயம் மணிபூரகச் சக்கரம், அதுவும் வயிற்று பக்கம் கௌமாரி அம்மன் ஆட்சி என்பது.
ஆம். அங்கேதான் கர்ப்பம் வரும், கர்ப்பம் தரிக்க குழந்தை செல்வம் கிடைக்க அந்த அன்னையின் வழிபாடு மிக மிக அவசியம்.
முருகப்பெருமான் நிலத்தத்துவம் என்பார்கள், அவரின் சக்தியான அன்னையும் நிலத்தின் சாரம். நிலத்தில்தான் செடிகொடிகள் வளரும். மானுடர் வாழவும் பெருகவும் நிலமே ஆதாரமாகும். நிலம்தான் எல்லா உயிர்களையும் தோற்றுவித்து உணவூட்டி பெருக்கும்.
அவ்வகையில் அன்னை கௌமாரி குழந்தை செல்வத்துக்கு பொறுப்பும் கடமையும் கொண்டவள், அவளை வழிபட்டால் குழந்தை செல்வம் நிச்சயம் உண்டு.
இந்த அன்னைக்குரிய ஆலயம் தஞ்சாவூர் அருகே இருக்கும் சூலமங்கலம் அல்லது சூலமங்கை ஆலயம்.
(பிரசித்தியான தெய்வ பக்தி பாடகிகளான சூலமங்கலம் சகோதரிகள் இந்த ஊரைச் சேர்ந்தவர்களே )
இங்கே அன்னை சூலம் ஏந்திய வடிவில் வழிபட்டாள், சூலம் ஏந்திய நிலையில் காட்சியளித்தாள் என்பது ஐதீகம், இன்றும் அந்த சூலநாயகி அங்கே உண்டு.
இங்கிருக்கும் சிவனுக்குக் கிருத்திவாகேஸ்வரர் என்று பெயர்.
இந்தத் தலத்தில் கஜாசுரன் எனும் அரக்கனைச் சிவன் கொன்று அவன் தோலை போர்த்திக்கொண்டதால் அவர் கிருத்திகேஸ்வரர் என அழைக்கப்படுகின்றார் எனச் செய்தி உண்டு.
ஆனால், உண்மையில் அப்படி இருக்கமுடியாது. கிருத்தி என்பது கிருத்திகை அதாவது முருகப்பெருமானுக்கு உரியநட்சத்திரத்தை குறிப்பது, முருகப்பெருமானுக்கு சக்தி கொடுக்கும் ஈஸ்வரனின் சக்தி குடியிருப்பதால் அவர் கிருத்திவாகேஸ்வரர் என்றானான் என்பவர்கள் உண்டு.
அது சரியாக இருக்கலாம்.
அங்கே அன்னை சூலமேந்தி நின்றாள் என்பது இரத்தம் நோய்கிருமிகளில் இருந்து உடலை காப்பது போல் உடலுக்குக் கவசம் அளிப்பது போல் கவசமளிக்க நின்றாள் .
சூல மங்கையாக இருக்கின்றாள்.
ஆனால், சூலம் எனும் சொல் சூல் எனவும் பொருள்படும், சூல் என்றால் கர்ப்பம் எனப் பொருள், கர்ப்பவரம் வழங்குபவள் அன்னை, அங்கிருக்கும் கௌமாரி அன்னை என்பதும் பொருள்.
கர்ப்பம் என்பதும் இரத்தவோட்டம், இரத்த நிலை சார்ந்தது, இரத்தம் சரியாக இருந்தால் வெப்பநிலை சரியாக இருந்தால் கர்ப்பம் எளிதில் தங்கும்.
அன்னை அந்த வரத்தை அருளி கர்ப்பம் வரம் தருவாள் என்பதே இக்கோவிலின் தாத்பரியம், சூல் எனும் கர்ப்பவரம் அருள்வதால் அவள் சூலமங்கை.
இந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் இரத்தத்தினால் வரும் அத்தனைச் சிக்கலும் நோயும் நீங்கும். ஆரோக்கியமான சுத்தமான இரத்தம் உடலில் ஓடும். ஆரோக்கியம் கூடும்.
பெண்கள் வழிபட வழிபட குடும்பத்தை இயக்கும் அவர்கள் திறன் கூடும், போராட்டத்தை தாங்கும் வைராக்கியம் அதிகரிக்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாப் பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.
சூலமங்கை என்பது புராதனமான ஆலயம், அப்பர் சுவாமிகள் தன் தேவாரத்தில் அது பற்றிப் பாடியுள்ளார்.
“நறையூரில் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாய நாதனையே காணலாமே”
ஆம். சிவனுக்கு சப்த கன்னியர் பணிப்பெண்கள், அவ்வகையில் சிவாலயத்தில் பணிசெய்ய இங்கே சூலமங்கையாக கௌமாரி காத்திருக்கின்றாள், இங்கிருக்கும் சிவனை வணங்கினால் அவள் அருள் நிச்சயம் கிடைக்கும்.
பாரதத்தின் பல இடங்கள் போலவே தமிழகத்திலும் கௌமாரி வழிபாடு முக்கியமானது, பல இடங்களில் இன்றும் விமரிசையாக நடப்பது.
அவள் தேவசேனையின் அம்சமென்பதால் அவளை வணங்குவோர்க்கு உடல்நலம், செல்வாக்கு, பெரும் பதவி என எல்லாமும் வந்து சேரும்.
அப்படி ஒரு கண்கண்ட சாட்சியாக இருப்பது தேனிமாவட்டம் வீரபாண்டியில் இருக்கும் கௌமாரி ஆலயம்.
பெரிய பாளையம் பவானி, பண்ணாரி அம்மன், முப்பந்தல் அம்மன், மண்டைக்காடு பகவதி போல அவளுக்குத் தனிப் பெரும் பக்தர்களும் பெரும் கூட்டமும் உண்டு.
வரலாற்றில் ஆதிகாலத்திலே அந்த ஆலயம் உண்டு. ஆனால், மதுரையினை ஆண்ட வீரபாண்டியன் எனும் மன்னனுக்குக் கண்பார்வை கொடுத்த நிலையில் அவள் பெரும் பெயர் பெற்றாள்.
அதனாலே அந்த இடம் வீரபாண்டியன் அடையாளமுமாயிற்று.
ஆம். இரத்தவோட்டம் அதன் அழுத்தம்குறைந்தால் கண்கள் பாதிப்படையும், அப்படி இரத்தம் கெட்டுப்போன மன்னன் கண்கள் பழுதாயின, அன்னை அவன் இரத்தவோட்டத்தைச் சரிசெய்த மறுகணம் அவனுக்குப் பார்வை வந்தது.
அந்த அன்னை ஒவ்வொருவருக்கும் செய்யும் அற்புதங்கள் ஏராளம். ஆண்டுதோறும் அவளுக்கு வரும் பெரும் கூட்டமும் அவர்கள் பெற்றுக்கொள்ளும் வரமும் ஏராளம்.
சூலமங்கைக்கு வரமுடியாதவர்கள், வீரபாண்டி அம்மனை வழிபட்டு நலம் பெறலாம்.
அன்னைக்கு செந்நிற ஆடையும், செந்நிற பூக்களும் மிகவும் விருப்பமானவை, குங்குமமிட்டு படைக்கப்படும் கனிகள் அவளுக்கு நைவேத்தியமாகும்.
அவளை மனமார தொழுதால் இரத்தம் சீராகும், தன்னம்பிக்கை போராட்டகுணம் வைராக்கியம் பெருகும். மகா முக்கியமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கையின் இயக்கம் சீராகும்.
அவளுக்கான துதி இதோ.
“மயூர குக்குட வ்ருதே பஹாசக்தி தரேனகே
கௌமாரி ரூபஸம்ஸ்தானே அம்பிகே நமோஸ்துதே.”
அவளுக்கான காயத்ரி மந்திரம் இதோ.
“ஓம் – சிகித்வஜாயை வித்மஹே;
சக்தி ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்”
அவளுக்கான தியான ஸ்லோகம் இதோ.
“சதுர்புஜா த்ரிநேத்ரா சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத் உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா”
அன்னையினை வணங்க வணங்க உடல் இயக்கம், உள்ள இயக்கம் தொழில் மற்றும் வாழ்க்கையின் இயக்கம் சீராகும். எல்லாமும் சீராகச் சரியாக அமையும். எது குறையோ அது பூர்த்தியாகும்.
கௌமாரி அம்மன் தன்னிடம் வேண்டும் எல்லாப் பக்தர்களின் குறைதீர்க்க காத்திருக்கின்றாள், அவளிடம் மன்றாடி கேளுங்கள், கேட்டவரத்தை தந்து உங்களோடு இருந்து காவல் செய்தும் வருவாள். அது சத்தியம்.
சப்த கன்னியர் 04 : வைஷ்ணவி தேவி.
“கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்” எனக் குமரகுருபரர் இந்தத் தேவி பற்றிச் சொல்கின்றார். அதாவது, கடலைக் கல்லால் நிரப்பி பாலம் கட்டிச் சென்றவள் என்கின்றார்.
இராமனின் சக்தியாக இருந்தவள் இவளே என்பது அதன்பொருள். அவ்வகையில் இவள் விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவி என்கின்றார் குமரகுருபரர்.
அன்னையின் புராணமும் அதைத்தான் சொல்கின்றது. அன்னை விஷ்ணுவின் மார்பில் இருந்து வெளிபட்டாள் என்பது அவளின் அவதாரக் குறிப்பு.
” ஸஹஸ்ர பாஹும் புருஷம் புராணம்
சயாநம் அப்தௌ லலிதா தவைவ
நாராயணாக்யாம் ப்ரணதோஸ்மி ரூபம்”
எனக் கூர்ம புராணம் சொல்கின்றது. அதவாது நாராயணி தேவி விஷ்ணுவின் அம்சம் என்கின்றது. அந்த நாராயணிதான் வைஷ்ணவி தேவி.
இவள் விஷ்ணுவின் அம்சம் என்பதால் அவரைப் போலவே கருடனை வாகனமாகக் கொண்டவள்.. விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார்.
வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பாள்.
இந்த வைஷ்ணவி தேவிதான் லட்சுமி கடாட்சம் கொண்வள். தங்கத்தில் வாசம்செய்பவள், இவள்தான் பூலோக வாழ்வுக்குரிய செல்வத்தைத் தருபவள், அதனால் இவள் வழிபாடு பெண்களுக்கு மிக மிக முக்கியம்.
ஒரு ஆண் சம்பாதித்தாலும் அதைச் சரியாகச் சேர்த்து வைத்து, வரவுக்கேற்ப செலவு செய்து குடும்பத்தின் நிதிநிலையினைக் காப்பவள் பெண், ஒரு பெண் சரியாக இருந்தால்தான் அந்த வீடு செல்வ செழிப்பினைப் பெறும்.
பெண்கள் துடிப்பாக இல்லாத வீடு, பெண்கள் நிதிவிவகாரத்தைச் சரியாக கையாளாத வீடு பொலிவு பெறாது.
அந்த ஞானம் எல்லாப் பெண்களுக்கும் வருவதில்லை, அப்படிக் கிடைக்கபெறும் பெண்கள் லட்சுமி கடாட்சம் கொண்டவர்கள். அவர்களால் இல்லம் செழிக்கும்.
வைஷ்ணவி அருள் என்பது மிகுந்த கவனம், பொருள் சேர்ப்பிலும் செலவழிப்பிலும் பலத்த கணக்கீடுகள், பொருளைக் காப்பதில் தைரியமும் வலுத்த கவனமும் கொண்டு நிற்பது என ஒருவரம்.
அந்த வரமே ஒரு குலத்தை வாழவைப்பதால் பெண்கள், குடும்பப் பெண்கள் இந்த தேவியின் அருளைப் பெறுதல் அவசியம் எனச் சொல்லி வைத்தார்கள், வழிபடச் சொன்னார்கள்.
திருமகள் எனும் லட்சுமியின் அருளைப் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அவள் அருளே பொருளைத் தங்க வைக்கும் அறிவைத் தரும், பொருளைத் தேடும் அறிவு அதை தக்கவைத்து பெருக்கும் ஞானமெல்லாம் அவள் கொடுப்பது.
பூலோக வாழ்வுக்குப் பொருள் முக்கியம், அதைத் தருவதில் இலட்சுமியின் அருள் முக்கியம். வைஷ்ணவி தேவி அதைத்தான் அருள்கின்றாள்.
அவள் பெருமையினை “ஸ்ரீ சாக்தம்” உரக்கப் பேசுகின்றது. கந்தத்வாரம் எனும் மந்திரம் அவள் அருளைப் போதிக்கின்றது.
ஆதிசங்கரர் அவள் அருளைப் பெறவே “கனகதாரா ஸதோத்திரம்” என்றொரு மந்திரத்தையே தந்தார்.
திருமாலின் ஆதார சக்தி இவளே. திருமால் இப்பூமியில் அவதாரமாக வரும்போதெல்லாம் பெரும் வாழ்வு வாழ்ந்திருப்பார், பெரும் அரசனாகத் தனவானாக வாழ்ந்திருப்பார் .
அந்தப் பாக்கியத்தைக் கொடுப்பவள் இந்த மகாலட்சுமி, அவள் சாயல் அவள் அம்சம் கொண்டவள் வைஷ்ணவி.
திருமால் இராமனாக அவதரித்து வந்தபோது சீதையாகவும், கண்ணனாய் அவதரித்து வந்தபோது ருக்மிணியாகவும், ஸ்ரீனிவாஸனாய் அவதரித்து வந்தபோது பத்மாவதியாகவும் அவதரித்தவள் திருமகளே.
வைகுண்டத்தில் மஹாலட்சுமியாகவும். சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும், அரசர்களிடம் இராஜ்யலட்சுமியாகவும், குடும்பங்களில் க்ரஹலட்சுமியாகவும், அழகுள்ளவர்களிடம் சௌந்தர்ய லட்சுமியாகவும், புண்யாத்மாக்களிடம் ப்ரீதி லட்சுமியாகவும், க்ஷத்ரிய குலங்களில் கீர்த்தி லட்சுமியாகவும், வியாபாரிகளிடம் வர்த்தக லட்சுமியாகவும் ஜொலிப்பவ்ள் அவளே.
வேதங்கள் போற்றும் திருமகளின் மற்றொரு வடிவம் பூமாதேவி. ஆம். இந்தப் பூமி என்பது செல்வங்களின் குவியல் எல்லா வகை செல்வமும் இங்குக் குவிந்துகிடப்பதால் பூமாதேவி எனும் பூமியினை மகாலட்சுமியின் அம்சம் என்றே இந்துமதம் சொல்கின்றது.
இப்படிச் செல்வங்களை அள்ளி அள்ளி தந்து வாழவைப்பவள் வைஷ்ணவி, அவள் அருள் பெற்றால் செல்வம் குவியும், குவிந்த செல்வத்தைக் காக்கும் அறிவும் தெளிவும் தைரியமும் அன்னையால் கிடைக்கும்.
செல்வம்தான் குடும்பத்தை இயக்கும், இன்னும் சொந்தபந்தங்களில் சமூகத்தில் குடும்பம் சீரான உறவை நல்ல பந்தத்தை, நல்லபடியாக சொந்தங்களைச் சமூகத்துடன் சுமூகமான உறவை அது கொடுக்கின்றது, எல்லோருடனும் நல்ல இயக்கத்தை செல்வமே கொடுக்கின்றது, அன்னை அதனை அருள்வாள்.
இப்படியான அன்னை உடலின் அமைப்பில் கொழுப்புக்கு அதிபதி எனச் சொல்லப்படுகின்றாள்.
உண்ணும் உணவு உடலுக்குச் சக்தியாகின்றது. அந்த உணவின் சக்தியினை உடல் கொழுப்பாக மாற்றி உடலுக்குச் சக்தி அளிக்கின்றது.
ஆம். உடலுக்கும் அதன் உறுப்புகளுக்கும் நல்ல சக்தி அளிப்பது கொழுப்பு. உணவு உடலுக்கு அடிப்படை. ஆனால், போஷாக்கு உள்ள உணவுதான் தோற்றப்பொலிவும் உள்ளூர சக்தியும் கொழுப்பும் தரும்.
உடலுக்குக் கொழுப்பு மிக மிக அவசியம். அதுதான் உடலை இயக்குகின்றது, அதுதான் உடலைக் காக்கவும் செய்கின்றது.
கொழுப்பு உடலுக்குக் கொடுக்கும் பலன் கொஞ்சமல்ல, அதுதான் சக்தி. அதுதான் உடலின் எல்லாப் பாகத்திலும் எல்லா உறுப்புகளிலும் படர்ந்து நல்ல காவலைக் கொடுக்கின்றது.
உள்ளுறுப்புக்கள் மேல் படலமாக படர்ந்து காப்பது அதுதான். எல்லா உறுப்புக்குமான சக்தியினை அதுதான் கொடுக்கும்.
இன்னும் உடல் இணைப்புகள், இணைப்பு பாகங்கள், நல்லமுறையில் இயங்க ஒரு மசகு போன்ற தன்மையினை அதுதான் தரும்.
உடலின் சக்தி சேமிப்பு கொழுப்புத்தான். உடல் உணவின்றி கிடந்தால் கூட கொழுப்பின் சக்தியால் அவ்வுடல் கொஞ்சநாளைக்கு தாக்குப்பிடிக்கும் சக்தியினைக் கொழுப்புத்தான் கொடுக்கும்.
உடலின் எல்லாச் சத்துக்களும் கொழுப்பாகத் திரள்கின்றன. அந்த கொழுப்பே சக்தி சேமிப்பு மையமாக ஆதார சக்தியின் களஞ்சியமாக உடலில் உள்ளது.
கொழுப்பு உள்ள உடலே திறம்பட இயங்க முடியும், கொழுப்பு இல்லா உடல் எளிதில் நோய்க்கு இரையாகும். காவலை இழக்கும், இயக்கத்தை இழக்கும்.
அந்தக் கொழுப்புத்தான் உடல் இயக்கத்தை, சுமூகமான இயக்கத்தை, நோயற்ற உடலை, சக்திமிகுந்த உடலை, உள்ளுறுப்புகளின் காவலை நிர்மாணிக்கின்றது.
அன்னையினை வழிபட வழிபட அந்தக் கொழுப்புசார் பிரச்சினைகளெல்லாம் தீரும், உடல் நலமாகும். நலமான உடலின் மூச்சும் இரத்த ஓட்டமும் சீராகும்.
கொழுப்பும் செல்வம் போன்றதே. செல்வம் இன்றி வாழ்வு இல்லை என்பது போல கொழுப்பு இன்றி உடல் இல்லை.
செல்வம் வாழ்வின் சக்தி, கொழுப்பு உடலின் ஆதார சக்தி.
கொழுப்பு என்பது உணவின் சக்தி. செல்வம் என்பது வருமானத்தின் சேகரிப்பு.
கொழுப்பு உடலின் உணவு இல்லை என்றாலும் கொஞ்சநாள் உடலைத் தாங்கும், வருமானமே நின்று போனாலும் செல்வம் வாழ்வை தாங்கும்.
ஆனால், செல்வம் தீயவழியில் வந்தாலோ அல்லது தீய வழியில் பெருகித் தீயவழிக்குச் சென்றாலோ அது அழிவைத் தருவது போல கெட்ட கொழுப்பு எனும் தீய கொழுப்புக்கள் உடலைப் பதம்பார்த்துவிடும்.
ஆம். செல்வம் நல்ல செல்வமாக இருப்பது போல கொழுப்பும் நல்ல கொழுப்பாக தீமைச் செய்யாக் கொழுப்பாக இருத்தல் அவசியம்.
இப்படிக் கொழுப்புக்கும் செல்வத்துக்குமான தொடர்பு நுணுக்கமானது.
இந்த உலகின் பிரபஞ்ச விதி, இயக்கவிதி, மானுட உடல் விதி, மானுட வாழ்க்கை விதி என எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. எதுவும் தனித்து இயங்குபவை அல்ல.
எல்லாவற்றுக்கும் இடையில் நுணுக்கமான ஒரு தொடர்பு இருப்பதை அவதானிக்க முடியும். அதாவது, ஒரே ஒரு சக்திதான் எல்லாவற்றையும் நடத்துகின்றது.
வானத்துக் கோளை ஒரு சக்தி இயக்குகின்றது, ஒரு சத்தமில்லாமல் சீராக சிறப்பாக துல்லியமாக அந்த வெளியில் வெளித்தெரியாத ஒரு சக்தியால் இயக்குகின்றது.
அதே சக்தி பூமியில் படைப்பினை இயக்குகின்றது. வெயில், மழை, குளிர், கடல். நதி என எல்லாமும் இயக்குகின்றது. உயிர்களை உடல்களை இயக்குவது அதுவே.
சூரியனின் வெப்பம், கோள்களின் சுழற்சி என எல்லா தீரா இயக்கத்துக்கும் அதுதான் காரணம்.
அதுதான் தேனீக்களை, கரையானை எனப் பலவற்றை இயக்குகின்றது. சிப்பிக்கள் இயக்கம் முதல் கஸ்தூரி மானின் கஸ்தூரி உருவாக்கம் வரை அதன் இயக்கமே.
எறும்புகள், எலிகள் உணவைச் சேர்த்துவைக்கும் ஞானம் கொடுத்து இயக்குவதும் அதுதான்.
அந்தச் சக்திதான் மானுட உடலைக் கொழுப்பு சக்தியாகவும், மானுட வாழ்வினைச் செல்வமாகவும் இயக்குகின்றது. அந்த அருள் மிக மிக அவசியம்.
அதனாலே வைஷ்ணவி தேவி என அச்சக்திக்குப் பெயரிட்டு இந்துக்கள் வழிபடச் சொன்னார்கள்.
இந்தத் தேவி யுத்தத்தில் அதாவது சண்டமுண்டன், மகிஷாசுரன் போன்ற கொடும் அசுரர்களின் சண்டையில் எப்படி பங்கெடுத்தாள் என்றால் படைகளுக்கு தீரா சக்தியினை வழங்கிக் கொண்டே இருந்தாள்.
யுத்தத்தில் ஒரு சக்தி வழங்கல் அவசியம், சக்திகள் எல்லாவகையிலும் கிடைத்துக் கொண்டே இருத்தல் வேண்டும். அன்னையின் தத்துவம் அதைச் சொல்கின்றது.
அவள் சக்தியினைத் தொடர்ந்து அருள்வாள், இயக்கு சக்தியினை அருள்வாள், இயக்குவாள், பலத்தைத் தருவாள் என்பதே இந்த அன்னையின் அருள்வழங்கும் தாத்பரியம்.
யோக சாஸ்திரத்தில் இந்த வைஷ்ணவி அநாகத சக்கரம் அதாவது மார்பு பகுதி இருக்கும் இடத்தின் அதிபதி.
அங்கேதான் இதயம்,நுரையீரல் என அதிமுக்கிய சக்திகள் இருக்கின்றன. கொழுப்பு பாதிப்படைந்தால் தாக்கும் இதயமும் அங்கேதான் இருக்கின்றது.
எதெல்லாம் சக்திவழங்கும் உறுப்புக்களோ அது இருக்குமிடம் அநாகதம், ஈரல், நுரையீரல், இதயம் என மிக முக்கிய பாகங்கள் அங்கேதான் உண்டு.
அன்னை சக்தி வழங்குகின்றாள், உடல் இயங்க சக்தி கொடுக்கின்றாள் என்பது இங்கே மிகச் சரியாகின்றது.
நுரையீரல் மூச்சு சக்தி, இதயம் ரத்த ஓட்ட சக்தி, இதர சக்திகளின்மையம் அதுதான். அன்னை அங்கேதான் சக்தியாக இருந்து ஆட்சி செய்கின்றாள்.
உடலின் பெரும் சக்தி மூச்சு அந்த மூச்சு நுரையீரலினால் சாத்தியமாகின்றது. மூச்சு எனும் வாயு சக்தி இருக்குமிடமும் அநாகதம். அங்கே அன்னை இயக்கு சக்தியாய் நிற்கின்றாள்.
உடலை இயக்கும் இதயத்தைத் துடிக்கவைப்பவள் அவளே. அதற்கான சக்தியினைக் கொடுப்பதும் அவளே.
இந்த இயக்கம் உடல் இயக்கம் சரியாக நடக்கவும், அப்படியே குடும்பத்தின் செல்வநிலை சரியாக இருக்கவும் அன்னையின் அருள் அவசியம்.
அதனால் அவளைத் தேடி வணங்குதல் வேண்டும், அவள் அருள் இல்லாமல் உடல் இயக்கம் குடும்ப இயக்கம் என எதுவுமில்லை.
குடும்பத்தினை எல்லா வகையிலும் இயக்குபவள் பெண்கள் என்பதால் அவள் அன்னையின் அருளை பெறுதல் அவசியம் என்றார்கள்.
இந்த வைஷ்ணவி ஏதோ பெரும் ஆலயங்களில் ஏழுபேரோடு அமர்ந்திருப்பவள் மட்டுமல்ல, கிராமங்களில் இருக்கும் தெய்வங்களிலும் அவள் உண்டு.
ஜகத் ஜனனிதான் கலை அம்சங்களுடன் கிராம தேவதைகளாக அவதரித்துக் கொள்கிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன. எந்த தேவி மூன்று சக்திகளும் ஒன்றானவளோ அந்த தேவியே இந்த கிராம தேவதைகளில் உருவத்தில் உள்ளாள்.
“யா யாஸ்ச க்ராம தேவ்ய: ஸ்யுஸ்தா: சர்வா:
ப்ரக்ருதே களா”
என்பது ஸ்லோகம்
அதாவது “ப்ரக்ருதியாகிய சக்தியின் அம்சங்களே கிராம தேவதைகள்” என்பது தேவீ பாகவதத்தின் கூற்று.
அவ்வகையில் அங்கம் ஆளும் அங்காளம்மன் என்பது இந்த வைஷ்ணவி தேவிதான், உடலின் அங்கம் மட்டுமல்ல வாழ்வின் அங்கமான செல்வத்தையும் ஆள்வது அவள்தான்.
அங்காளம்மன் என வணங்கப்படும் அம்மன் இந்த வைஷ்ணவி தேவிதான்.
“ஆரியங்காவு இயக்கி” எனச் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் அந்த இயக்கி எனும் இசக்கியும் இவள் வடிவமே, கிராமப்புறங்களில் இசக்கி அம்மன் எனச் சொல்லப்படும் அம்மனும் இந்த வைஷ்ணவ தேவியின் அம்சமே.
பூவாயி அம்மன் என்றால் பூவில் இருக்கும் அம்மன், பூ+ஆயி எனப் பொருள், அந்த பூவாயி அம்மனும் வைஷணவியின் சாயலே.
இந்த அங்காளம்மன், இசக்கியின் இன்னொரு வடிவம்தான். இயமத்தின் காஷ்மீரத்தில் இருக்கும் வைஷ்ணவோ தேவி.
இங்கு எதுவுமே தனி அல்ல, எல்லாமே ஒன்று எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடயவை. அப்படி நுணுக்கமான பிணைப்பினை இந்துமதம் கொடுத்திருக்கின்றது.
“சதுர்ப்பி ஸ்ரீகண்டை சிவ யுவதிபி பஞ்சபிரபி ப்ரபின்னாபி
சம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி
சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாசர-த்ரிவலய
த்ரிரேகாபி சார்த்தம் தவ சரணகோணா பரிணதா:|| “
சதுர்ப்பி: – சதுர் என்றால் நான்கு; ஸ்ரீகண்டை:- சிவ சக்கரங்கள். அதாவது சிவசக்ரமான நான்கும், (பஞ்சபிரபி) – பஞ்ச – ஐந்து சக்தி சக்கரங்களும் சேர்ந்து ஒன்பதாக உள்ள பிரபஞ்சத்தின் (மூலப்ரக்ருதிபி:) மூலகாரணமான தத்வங்களுடன் கூடிய இருப்பிடமான ஸ்ரீயந்த்ரம், எட்டுத்தளம் (வஸீதல), பதினாறு தளம் (கலாச்ர), மூன்று வட்டங்கள் (த்ரிவலய), மூன்று கோடுகள் (த்ரி-ரோகாபி:) ஆகியவற்றுடன் (சார்த்தம்) கூடி பரிணமிக்கும் (பரிணத) நாற்பத்து நான்காக (சது: சத்வாரிம்சத்) இருக்கிறது.
அதாவது, நான்கு மூலை எட்டுத் திக்கு பதினாறு கோணத்தில் உள்ள எல்லாவற்றின் இயக்கு சக்தி நீயே என்கின்றார், எல்லா இயக்கத்தையும் நடத்தும் அன்னை மானுட உடல் வாழ்வு என அந்த இயக்கத்தையும் தாங்குகின்றாள்.
அவளை லலிதா சஹஸ்ரநாமம் “த்ரிகோணாந்தரதீபிகா”, “சக்ரராஜநிகேதநா”, “த்ரிகோணகா”, “
ஸ்ரீசக்ரராஜநிலயா” என்கின்றது
சக்கரம் என்றால் நில்லாத இயக்கம் அதிலிருந்து வரும் பெரும் சக்தி, நில்லாமல் கிடைக்கும் சக்தி.
ஆக, அன்னை வைஷ்ணவி தேவி இயக்கும் சக்தி தருவாள், பெரும் பலம் தருவாள், உடலையும் வாழ்வையும் அவளே காப்பாள்.
மனதின் மகிழ்ச்சிக்கும் காரணம் அவளே, மகிழ்ச்சியாய் ஆனந்தமாய் இருக்கும் மனம் நோயில் விழாது, கெட்ட கொழுப்புகள் உருவாகி இதயபாதிப்பு வர மனத்துயரமும் ஒரு காரணம் என்கின்றது மருத்துவம்.
மனம் மகிழ்ச்சியாய் இருந்தால் நோய்கள் வராது, அன்னை அந்த வரத்தை கெட்ட கொழுப்போ தடைகளோ இல்லா வரத்தை மனதின் மகிழ்ச்சிமூலம் அருள்வாள்.
இந்த அன்னை வழிபட்ட ஆலயமாக தஞ்சாவூர் அருகே அந்த சப்த கன்னி தலங்கள் அமைந்திருக்கும் இடங்களில் ஒன்றான நந்திமங்கை எனும் நல்லிச்சேரி விளங்குகின்றது.
இங்குள்ள சிவனுக்கு ஜம்புகேஸ்வரர் எனப் பெயர், இந்த தலம் நடுவில்சேரி எனவும் வழங்கப்படுகின்றது. அநாகத சக்கரம் உடலின் நடுப்பாகத்தில் அமைந்திருப்பதும் கவனிக்கதக்கது.
வைஷ்ணவி தேவி தன் இழந்த சக்தியினை இங்கே சிவனை வேண்டி மீளப்பெற்றாள், சோழ மன்னர்கள் தங்களுக்கு சக்திவழங்கும் தலமாக, தொடர் இயக்க சக்தி கிடைக்கும் தலமாக இதனை வணங்கினார்கள்.
இந்த ஆலயத்தில் வணங்க வணங்க குடும்பத்தின் செல்வவளம் பெருகும், உடலில் கொழுப்பினால் ஏற்படும் எல்லாச் சிக்கலும் தீர்ந்து உடல் சமநிலை அடையும், உடல் நல்ல இயக்கத்தை பெறும்.
பெண்களுக்கு இந்தத் தலம் விசேஷமானது, ஆண்களை விட பெண்கள் பல கடமைகளைக் கொண்டவர்கள், குடும்ப நிதிவிவகாரம் முதல் பெற்ற குழந்தைக்கு மார்பில் பாலூட்டி வளர்க்கும் கடமை அவர்களுடையது.
தாய்பால்தான் ஒரு மானுடன் பெரும் முதல் சக்தி.
அந்த வரத்தை அன்னை தருள்வாள். இது குடும்பபெண்கள் வணங்கவேண்டிய முக்கியமான தலம், உடலும் உள்ளமும் குடும்பமும் வாழும் நல்ல பலத்தை அன்னை குலப்பெண்களுக்கு கொடுப்பாள்.
இந்த ஆலயத்துக்குச் சென்றுவழிபட முடிந்தால் வழிபடுங்கள், இல்லையேல் அங்காளம்மன், இசக்கி அம்மன் எனச் சக்தி தரும் தெய்வங்களை இந்த வைஷ்ணவ தேவி வழிபாட்டை நினைத்து வணங்குங்கள். எல்லா வளமும் கிடைக்கும்.
காஷ்மீரில் இருக்கும் வைஷ்ணவ தேவி தனிசக்தி வாய்ந்தவள். முடிந்தவர்கள் அவளையும் தரிசிக்கலாம்.
சென்னை அருகே இருக்கும் திருமுல்லைவாயில் என்பதும் வைஷ்ண தேவிக்கு மிகச் சக்தியான தலம்.
வைஷ்ணவ தேவியின் காயத்ரி மந்திரம் இதோ.
“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்”
அன்னைக்குரிய தியான ஸ்லோகம் இதோ
“ஸங்க சக்ர தராதேவீ கிரீடமகுடாந்விதா;
ஸீஸ்தநா சாருவத
நாஸ்யாமாபா ச் சுலோசநா
பீதாம்பரதரா தேவீ
கிரீட மகுடாந்விதா;
ராஜவ்ருட்சம் ஸமாச்ரித்ய
கருட த்வஜ வாஹிநீ;
வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்,
விஷ்ணு பூஷண பூஷிதாம்”
அன்னைகுரிய மூலமந்திரம் “ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-வம் – வைஸ்ணவ்யை நம” என்பது
அன்னை மகாலட்சுமியின் அம்சம் என்பதால் வெள்ளிக்கிழமைகளில் அவளைத் தொழுதல் நன்று, அந்த வைஷ்ணவ தேவிக்கு வெள்ளிக்கிழமை வெண்மலர்களை சாற்றி தூபமிட்டு புளியோதரை நைவேத்தியம் செய்து நெய்யினை வெள்ளிவிளக்கில் ஏற்றிவர அவள் கடாட்சம் கிடைக்கும்.
அந்த வைஷ்ணவ தேவியினை வணங்க வணங்க மனதில் தைரியம் வரும், செல்வம் வரும், உடலில் கொழுப்பு சம்பந்தமான சிக்கல் தீர்ந்து நலம் வரும். அதற்கான ஞானத்தையும் சக்தியும் அவளே அருள்வாள். அவளை வணங்க வணங்க குலம் செழிக்கும், குடுமபம் சீராக செல்வாக்கோடு சக்தியோடு இயங்கும். இது சத்தியம்.
சப்த கன்னியர் 05 : வராஹி தேவி.
சப்த கன்னியரில் ஐந்தாம் தேவி இந்த வராஹி, வராகம் எனப் பகவான் விஷ்ணு அவதாரம் எடுத்து உலகை மீட்டது வராக புராணம் சொல்லும் பெரும் வரலாறு.
அந்த வராக பெருமானின் பெண் வடிவமாக அவதரித்தவள் இந்த அன்னை.
இவள் மற்ற சப்த கன்னியரில் இருந்து இவள் கொஞ்சம் வித்தியாசமானவள். அதி உச்ச பலசாலி மிருக பலம் கொண்டவள், அதே நேரம் கனிவும் அன்பும் நிரம்பிய மனம் கொண்டவள்.
லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
வராகமூர்த்தியின் சக்தி மிகப் பெரிது. இவள் நீல நிறமானவள். பன்றியின் வராஹ முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார்.
இவளது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
புராணம் சொல்லும் பெரிய போர்களிலெல்லாம் இவள் படையோடு வந்து வெற்றிக்கொடுப்பாள். முருக பெருமானின் போர், அம்பிகைகள் செய்த போர், சிவன் செய்த போர், விஷ்ணு செய்தபோர் என எல்லா போர்களிலும் வந்து எதிரிகளை ஒழித்துக் கட்டுவாள்.
ஆஷாட மாத பஞ்சமி திதியில் அவள் அவதரித்தாள் என்பது புராணம்.
லலிதா பரமேஸ்வரியின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி[சதுரங்க சேனா நாயிகா]எனும் தண்டினி தான் அன்னை வராஹி.
‘தந்திரராஜ தந்த்ரம்’ எனும் நூல் வராஹி அம்மனை ‘லலிதையின் தந்தை’ என்கிறது.
ஆம். வராஹி அம்மன் பெண் தெய்வமாக இருப்பினும் தம்முடைய காக்கும் திறத்தாலும் ஆற்றல் வளத்தாலும் ஆண் தெய்வமாகவே ‘தந்திரராஜ தந்த்ரம்’ எனும் நூல் வராஹி அம்மனைப் போற்றுகிறது.
இதே கருத்தை ‘பாவனோபநிஷத்’எனும் நூல்,’‘வாராஹி பித்ரு ரூபா’’ என்கிறது.
‘பஞ்சமி பஞ்சபூதேஸி’ என லலிதா ஸஹஸ்ரநாமம் வராஹியைப் போற்றுவதையும் நாம் உணரவேண்டும்.
வாராஹியை பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, ஸமயஸங்கேதா, வாராஹி,போத்ரிணீ, ஷிவா, வார்த்தாலீ, மஹாஸேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்னீ போன்ற நாமாக்களைக் கூறி வழிபடல் பெரும்புண்ணியம்.
‘” வாராஹி மாலை” எனும் நூலில் ”சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே” எனக் கூறியுள்ளதிலிருந்து அம்மையப்பன் எனும் சிவசக்தி வடிவமாக வராஹி அம்மன் திகழ்கிறாள் என்பது தெளிவு.
இந்தத் தேவியினைப் பற்றி கொஞ்சம் அழமாகக் காணவேண்டும்.
இந்த அன்னைக்கு ஏன் வராஹி என வடிவம் கொடுத்தார்கள் என்றால் அவள் சக்தி அப்படியானது, அவளின் ஆற்றல் எப்படியானது எனச் சொல்ல வராஹத்தைக் காட்டினார்கள்.
அதைப் பன்றி எனச் சொல்லக் கூடாது, பன்றி என்பது வேறு வராஹம் என்பது வேறு. காட்டில் சுத்தமான இடங்களில் இருப்பது வராஹம்,சுத்தமான தாவர பட்சி, கிழங்குகளை மட்டும் உண்ணும் வழக்கம் கொண்டது, அபார பலம் கொண்டது.
பன்றியும் வராஹமும் ஒன்றல்ல. ஒரே சாயல் கொண்டவை அன்றி இரண்டும் வேறு வேறானவை.
வராகத்துக்கு எந்த விலங்குக்கும் இல்லா சிறப்பு ஒன்று உண்டு. அது அகழ்ந்தெடுப்பது
பூமியினைத் தோண்டிச் சென்று கிழங்கும் இதர வேர்களையும் கண்டறியும் சக்தி வராகத்துக்கு மட்டும்தான் உண்டு.
காட்டில் பலமானதும் வெல்லமுடியாதமுமான அந்த வராஹம் ஒன்றே பூமியினை அகழும்.
இதைக் கவனித்த ரிஷிகள் மனதின் ஆழம் வரை சென்று ஆசை, அகங்காரம், வன்மம், கோபம், காமம் என எல்லாவற்றையும் வேறோடு கிள்ளி எறியும் சக்திக்கு அந்த வடிவம் கொடுத்தார்கள்.
பகையோ, படையோ எது என்றாலும் அடியாழம் வரை ஆதிவேர் வரை கருவறுக்கும் சக்திக்கு அந்த உருவைக் கொடுத்தார்கள்.
ஒரு செடியின் மரத்தின் கிழங்கு இருக்கும் வரை அது முளைத்துக் கொண்டே இருக்கும். மண்ணுக்கு மேல் வெட்டினாலும் அது துளிர்த்துக்கொண்டே இருக்கும், வெட்ட வெட்ட துளிர்க்கும்.
ஒரு பெரும் பிரச்சினை அல்லது விவகாரம் தீர அதன் அடியாழம் வரை சென்று அகழ்ந்து எடுக்க வேண்டும். அதைச் செய்யும் சக்தியினை வராஹத்தின் வடிவம் எனச் சொல்லி புரியவைத்தார்கள்.
படையோ, எதிரியோ, பகையோ, மனமோ எது என்றாலும் அடியாழம் வரை சென்று எல்லாம் எடுத்து வெளியில் போட்டு அழித்தல் என்பதே பாதுகாப்பு.
அந்த முழுப்பாதுகாப்பை தரும் சக்தியினை வராஹி என்றார்கள், எளிதில் புரியும்படி சொன்னார்கள்.
இன்னொரு சூட்சுமான விஷயத்தையும் காட்டில் தவமிருந்த ரிஷிகள் உணர்ந்தார்கள். அது நுட்பமானது.
அதாவது வராஹத்தின் மூச்சு கிட்டதட்ட பிரணவ மந்திரம் போன்ற ஒலியுடையது.
இதை எல்லாம் குறியீடாக வைத்துத்தான் ‘ஓம்’ என மந்திரத்தில் லயித்து மனம் தியானத்தில் இருந்தால் அகத்தின் அடியில் இருக்கும் எல்லாத் தீயக் குணங்களையும் இறைசக்தி வராகம் பூமியினைக் கிளறி எடுப்பது போல் எடுக்கும் என உணர்த்த வராஹத்தை தெய்வ உருவமாக்கினார்கள்.
அந்த உருவுக்கு இந்தத் தெய்வம் எதிரியினை அடிவேர் வரை சென்று அகற்றும், எதிரி மீண்டும் தழைக்க முடியாதபடி ஒழிக்கும் எனச் சொல்லி வழிபடச் சொன்னார்கள்.
இந்துக்களின் தெய்வங்களெல்லாம் விலங்கு முகங்கள் என ஒதுக்கமுடியாதவை, ஏதோ ஒரு காலத்தில் செய்த மூடநம்பிக்கை எனத் தள்ளமுடியாதவை.
அவை எல்லாம் தத்துவரூபங்கள், ஒரு காலத்தில் மானிடருக்கு புரியும் வகையில் பெரும் சக்தியினை உதாரணமாக வடித்து வைத்த பிரபஞ்ச ரகசியங்கள், இறைசக்தியின் வல்லமையினைச் சொல்லும் வடிவங்கள்.
அந்த இறைசக்தி தியானத்தில் வராஹி என வரச்சொன்னால் அது அகத்தில் வந்து பொல்லா குணங்களின் கிழங்குவரை வேர் வரை அகழுகின்றது.
அதை ஆபத்தில் அழைத்தால் அது எதிரியின் மூலவேர் வரை சென்று ஒழித்து நிர்மூலமாக்கி பக்தனைக் காக்கின்றது.
எது மூழ்கிவிட்டதோ, எது புதைந்துவிட்டதோ அதைத் திரும்ப மீட்டுக் கொடுப்பது வராஹ தெய்வம், விஷ்ணு வராகமாக வந்து பூமியினை மீட்டது அப்படித்தான்.
( வராகர் பூமாதேவியிடம் பேசும் விதமாக அமைந்த ‘வராகப் புராணம்’ இந்து மதத்தின் சிறப்புமிக்க 18 புராணங்களுள் ஒன்று.
மிகப்பெரும் தத்துவசாரத்தை அந்தப் புராணம் கொடுக்கின்றது. மறைந்திருக்கும் இரகசியங்களைத் தோண்டி எடுத்து தருவது போல வராஹமாக வந்து ரகசியங்களைத் தோண்டி தோண்டி தருகின்றார் பெருமான்)
அன்னை வராஹியாய் வந்து அசுரர்கள் குலத்தை வேர்வரை ஒழித்ததும் அப்படித்தான்.
புகழ்மிக்கதாக கொண்டாடப்பட்ட வராஹி தேவி இந்துக்களில் சிறப்பான இடத்தை பெற்றிருக்கின்றாள், அவள் வழிபாடு அவ்வளவு பிரசித்தியானது.
அவளை வணங்கினால் தோல்வி வாரா, அவமானங்கள் வாரா, கண்ணீரோ கவலையோ வாரா, அதனாலே அவள் வராஹி எனப்பட்டாள்.
எங்கெல்லாம் வெற்றி வேண்டுமோ அங்கெல்லாம் அவள் வழிபடப்பட்டாள். புராணங்களில் இருந்தும் இன்னும் பல இந்துமன்னர்களின் சரித்திரத்திலும் அவள் இடம்பெற்றாள்.
இராஜராஜ சோழனுக்கு அவள் தனிபெரும் தெய்வம், தோல்வியே பெறாத அவனுக்கு அவளே வழிகாட்டினாள், அவளை அனுதினமும் தொழுத இராஜராஜன் வெற்றிமேல் வெற்றிபெற்றான்.
தஞ்சை பெரியகோவிலுக்கு அவன் இடம் தேடியபொழுது அவளே வராக உருவில் இடம் காட்டினாள், அவளுக்கு இன்றும் அக்கோவிலில் சன்னதி உண்டு.
பாரதகண்டம் ஆப்கானிய இஸ்லாமியரிடம் சிக்கித் தென்னகம் இந்துஆலயங்களின் அழிவில் இருந்த நேரம் அவளே விஜயநகர அரசை எழுப்பினாள், அவர்களின் கொடியாக அமர்ந்தாள்.
வராஹ கொடியே தென்னகத்தில் சுல்தான் ஆட்சியினை ஒழித்து இந்து ஆட்சியினை நிறுத்தி பறந்தது. அப்படிப்பட்ட வராஹியின் சிறப்புக்கள் ஒன்றல்ல இரண்டல்ல, ஏராளம்.
வராஹிதான் இழந்ததை மீட்டெடுத்து தருவாள், வராஹிதான் இரகசியங்களை சொல்வாள், வராஹிதான் எது செய்யவேண்டும் எதை செய்யக் கூடாது, செய்யவேண்டிய காரியத்தை எப்படிச் செய்யவேண்டும் எனும் முழு ஞானத்தையும் கொடுப்பாள்.
அதைத்தான் இந்து அரசர்களுக்கு அன்று கொடுத்தாள், நாயக்கர்களோ இராஜராஜசோழனோ இதர பலமான இந்து அரசர்களோ அதனாலே அவளைக் கொண்டாடினார்கள்.
இந்த அன்னைதான் எதைச் செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது , எதை விலக்கவேண்டும், எது பகை, எது நட்பு என எல்லாத் தெளிவைக் கொடுப்பாள்.
மறைந்திருக்கும் ஆபத்துக்களை எல்லாம் அம்பலப்படுத்துவாள். அவள்தான் வஞ்சகம், சூது, சூழ்ச்சி வெட்டப்பட்ட புதைகுழிகள் என எல்லாமும் காட்டித்தருவாள்.
குலபெண்கள் வராஹியினை வழிபட சொன்ன தத்துவம் அதுதான். குடும்பத்திற்கு பலவகையான மறைமுக பிரச்சினைகள் சொந்தபந்தம், அக்கம் பக்கம் எனப் பல வழிகளில் இருந்து வரலாம்.
அதை முன்னமே அறிந்து அதை அகற்றும் பெரும் அறிவினை அன்னை தருவாள், எல்லா ஆபத்துக்களையும் கடக்கும் அறிவும் தைரியமும் முன் எச்சரிக்கையும் தருவாள்.
குடும்பம் எதிரிகள் தொல்லையின்றி, வஞ்சகர்கள் தொல்லையின்றி இருக்க, முழு காவலோடு இருக்க அவள் வழிபாடு அவசியம்.
இந்த வராஹிதான் உடலின் தசைக்கு அதிபதி. தசைதான் ஒருவனின் வலிமையினைக் காட்டும் விஷயம், அழகும் பொலிவும் அதுதான் கொடுக்கின்றது.
இதனாலே அன்னையினைத் தாங்கும் பிருஷ்டம் என அவளை சூசகமாக சொல்கின்றது புராணம்.
தசைகள் உடலுக்கு மகா பிராதானம். மானுட உடல் எலும்பு தசை, வரியற்ற தசை, இதயதசை எனப் பல வகை தசைகள் உண்டு.
இந்த தசைகள்தான் உடலின் இயக்கத்துக்கு பலம் கொடுக்கின்ற வழி செய்கின்றன. உடலைக் காக்கின்றன. உடலின் 72 ஆயிரம் நாடி நரம்புகள் இதன் வழியாகவே செயல்படுகின்றன.
தசைகள்தான் நோய் காக்கும் அம்சம், உடலை எத்தனையோ வழிகளில் இருந்து காக்கும் அம்சம்.
ஆபத்து என்றால் முதலில் தாங்குவது தசைகள்தான். காயமோ எதுவோ நோயோ எது என்றாலும் தசைகள்தான் தாங்கி உடலை மீட்டெடுக்கும்.
தசைகள் உறுதியாக இருக்கும் உடல் நோயில் வீழ்வதில்லை, தசைகளின் வலிமையே உடலின் வலிமை, தசைகளின தோற்றமே உடலின் பொலிவு.
அப்படி நாடி நரம்புகள், முக்கியமான சுரப்பிகள் உடலெல்லாம் காவல் எனச் சூழ்நின்று காப்பவை தசைகள்.
இந்தத் தசைகளின் மூல தெய்வம் அன்னை வராஹி.
தசைகள்தான் ஒரு உடலின் பாகங்களை மறைத்து அழகு செய்து உரியன செய்து காவல் செய்யும், பலம் கொடுக்கும். அதுதான் அன்னையின் தன்மை.
இதனாலே அவளை தசைகளுக்கு காவல் என்றார்கள். மூலம் என்றார்கள்.
இது மானுட உடலுக்கு மட்டுமல்ல பிரபஞ்சத்தின் எல்லாப் படைப்புக்கும், எல்லாப் இயக்கங்களுக்கும் கோள்களுக்கும் பூலோக படைபுக்களுக்கும் மரத்துக்கும் செடிக்கும், மலைக்கும், கடலுக்கும் கூட இப்படி ஒரு கவசம் உண்டு.
அந்தக் கவசம், அந்தப் பாதுகாப்பே அன்னை.
வராஹத்தின் சதைதான் அதன் சக்தி. மிக இறுகிய அந்தத் தசைகள்தான் அதனை இயக்குகின்றன. அதனால் அன்னையினை அந்தக் காவல் சக்திக்கு அடையாளமாகச் சொன்னார்கள்.
நரம்புகளும் தசைகளும் ஒன்றோடோன்று பொருந்தியவை. இந்த நரம்புகள்தான் தகவல்களைக் கொண்டு செல்லும் உணர்வுகளைக் கடத்தும், தகவல் தொடர்பு முதல் எல்லாம் கொடுக்கும்.
படைக்கும் அது அவசியம். குடும்ப வாழ்வுக்கும் மானுட வாழ்வுக்கும் இந்த தொடர்புகள் மிக அவசியம். அதனாலே அன்னையினை அங்கே வராஹி தத்துவமாக நிறுத்தினார்கள்.
உடலின் சக்கரங்களுக்கு இவள் ஐந்தாம் சக்க்ரமான விசுத்தி சக்கரத்தின் அதிபதி.
அநாதகத்துக்கு மேல் கழுத்து பக்கம் அமைந்திருக்கும் ஐந்தாம் சக்கரம் விசுத்தி. இதுபற்றி சித்தர்களும் ஞானியர்களும் நிரம்பச் சொல்லியிருக்கின்றார்கள்.
மிகப் பொருத்தமாக வராஹத்தின் கழுத்து எப்படிப் பலமானதோ, அந்த பலமிக்க கழுத்தால் அது எப்படிப் பூமியினை அகழ்கின்றதோ, எப்படிச் சண்டையிடுகின்றதோ அதைச் சொல்லி விசுத்தி எனும் மானுட கழுத்தின் சக்தி அன்னை வராஹி எனப் பொருந்த சொன்னார்கள்.
வராஹத்தின் பலம் அதன் கழுத்து. அப்படியே மானுட உடலின் முக்கியமான விசுத்தி சக்கரத்தின் தேவதை அன்னை வராஹி.
அநாகத தளத்தில் இருந்து மேலே 12 விரல்கடை உயரத்தில் இந்தச் சக்கரம் அமைந்துள்ளது. கழுத்தின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது.
கழுத்தில் அமைந்துள்ள இந்தச் சக்கரம்த்தின் தாத்பரியம் முக்கியமானது.
இதுதான் தலைக்கும் உடலுக்குமான இணைப்பினைக் கொடுக்கும். அதாவது தலை என்பது கட்டுப்பாடு கொண்ட இடம். மூளை உள்ளிட்ட கட்டளைகள் உருவாகும் இடம், முழுக்கட்டுப்பாடு இருக்கும் இடம் அதுதான்.
தலைக்கு ஒன்று என்றால் உடல் இயங்காமல் போவதும் அப்படித்தான். உடல் என்பது செயல்படும் எந்திரம், எல்லா இயக்கமும் இங்கிருந்துதான் நடக்கும்.
ஆக, இயக்கும் இடத்தையும் இயங்கும் சக்தியும் ஒன்றாகச் சேரும் இடம் கழுத்து. இதுதான் இயக்கு சக்தியினை இயங்கு சக்தியாக மாற்ற எல்லா வேலைகளையும் செய்து இணைக்கின்றது.
இந்த இணைப்பைக் கொடுப்பதுதான் விசுத்தி.
இந்த விசுத்தி இருக்குமிடத்தில்தான் குரல்வளை, மூச்சுக் குழாய், தைராய்டு சுரப்பிகள் எனப் பல முக்கிய பாகங்கள் வரும்.
இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கினால் கழுத்துச் சார்பான உடலியல் நோய் வராது. குரல், சிக்கல் தைராய்டு பிரச்சினை, மூச்சுக்குழாய் சிக்கல், உணவுக் குழாய் என இன்னும் பல நுணுக்கமான சிக்கலெல்லாம் வராது எல்லா இயக்கமும் சரியாக நடக்கும்.
கலைஞர்கள், பாடகர்கள் இன்னும் ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள், இசை அமைப்பாளர்கள் எனப் பெரும் பெரும் கலைஞர்களுக்கெல்லாம் இச்சக்கரம் சரியாகத் துலங்கியிருக்கும்.
உண்மையில் இந்துக்களின் ஏழு ஸ்வரங்களும் ஏழு சக்கரங்களைத் துலக்கும் உத்திகள்.
அவ்வகையில் ஐந்தாம் ஸ்வரம் தாண்டி யாரும் அதிகம் பாடுவதில்லை, ஐந்தாம் ஸ்வரத்துகான பலன் இச்சக்கரம் துலங்குவது, மேற்கொண்டு பாடிக்கொண்டே இருந்தால் அவர்களுக்கு ஏழு சக்கரமும் துலங்கும். நாயன்மார் பாடினார்கள், ஆழ்வார்கள் பாடினார்கள், சங்கீத மும்மூர்த்திகள் பாடினார்கள், எல்லோரும் பாடி இறைவனை அடைந்தார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஏழு ஸ்வரங்களைப் பாட பாட ஏழு சக்கரமும் சரியாகும். அந்நிலையில் இறைநிலை எளிதில் வாய்க்கும்.
இசை இறைவனையே வசப்படுத்தும் என்பது இந்தச் சூட்சுமமே.
இந்தச் சக்கரம் சரியில்லை என்றால் கூச்சம், படைப்புத் திறன் முடங்கியிருத்தல், பிறருடன் பேச, பழக அச்சப்படுதல் அல்லது அளவுக்கு அதிகமாகப் பேசுதல், கேலிக்கு ஆளாவோம் என்ற பயத்தில் மனதில் இருப்பதைப் பேசாதிருத்தல், உபயோகமற்ற பேச்சு பேசுதல், பிறர் பேசுவதை சரியாகக் கவனிக்காதிருத்தல்,
பொது மேடைகளில் பேசத் தயங்குதல், சமூக தொடர்புகளைத் தவிர்த்தல், நினைப்பதை வெளிப்படுத்த இயலாமை, பொய் பேசுதல், பதட்டம், பிடிவாதம், பாதுகாப்பற்று இருப்பதாக உணர்தல், கவனக் குறைபாடு ஆகிய குறைகள் வரும். இது ஒரு மனிதனை முழுக்க முடக்கும்.
ஒரு மனிதன் எவ்வளவு பெரும் திறமையானவனாக அறிவாளியாக பெரும் ஞானம் கொண்டவனாக இருந்தாலும் சரியாக அதை வெளிப்படுத்தாவிட்டால் பலனில்லை.
அந்த வெளிப்படுத்தும் கலை, அது பேச்சு, பாடல், எழுத்து, ஓவியம் என எவ்வகையிலாவது ஒருவன் தன்னை வெளிபடுத்தும் அந்த நல்ல தன்மையினை இந்தச் சக்கரம் தரும்.
விசுத்தி என்றால் சுத்தமான எனப் பொருள். யாரால் தன்னை அச்சமின்றி கொஞ்சமும் தயக்கமுமின்றி வெளிபடுத்தமுடியும் என்றால் தன்னிடம் உண்மையும் சத்தியமும் இருப்பவன் அதனை வெளிப்படுத்துவான்.
யார் தன்னை வெளிப்படுத்தமுடியும் என்றால் மனம் முழுக்க நல்ல விஷயம் கொண்டவன், யாரும் குற்றம் சொல்லமுடியாதவன் தன்னை வெளிப்படுத்துவான்.
அந்த நல்லமுறையில் ஒருவன் தன்னை உலகுக்குக் காட்டி பல நல்ல விஷயங்களைச் சொல்ல இந்தச் சக்கரம் துலங்குதல் அவசியம்.
இந்தச் சக்கரம்தான் ஒருவனுக்கும் உலகுக்கும் தொடர்பைக் கொடுக்கும். உலகுக்கு அவனால் பல நல்ல விஷயங்களைக் கொடுக்கும்.
அது பேச்சு, எழுத்து, போதனை, பாடல் என ஏதோ ஒருவழியில் அவனை இயங்கவைக்கும்.
இந்தச் சக்கரத்தால்தான் நமக்கு வேதங்கள், உபநிடதங்கள், புராணம், கீதை, அழியா நூல்கள், பாடல்கள், இசைகோர்வைகள் என எல்லாமும் கிடைத்தன.
இந்தச் சக்கரமே ஒருவனுக்கு அடையாளமும் அங்கீகாரமும் கொடுக்கும். அழியாப் புகழ்பெற்றவர்கள் பெரும் அடையாளம் பெற்றவர்களெல்லாம் இச்சக்கரம் துலங்கியவர்களே.
யாரின் குரலுக்கு ஒரு மதிப்பு உண்டோ, யார் குரலுக்கு உலகம் செவிமடுக்குமோ, எந்தக் குரல் சமூகத்தை உலுக்குமோ, யார் குரலுக்குச் சமூகம் மகுடிக்குட்பட்ட பாம்பாக மயங்கி கிடக்குமோ அவர்களெல்லாம் இச்சக்கரம் தூண்டப்பெற்றவர்கள்.
அச்சக்கரமில்லாமல் தலையும் உடலும் இணையாது என்பது போல பிரபஞ்சத்தினை ஆளும், ஈர்க்கும் ஒரு சக்தி ஒருவனுக்கு கிடைக்கும். அது அவன் திறனை ஆற்றலைப் பிறர் வசீகரிக்கும் அளவில் வெளிப்படுத்தும்.
வியாபாரம் மட்டுமல்ல ஒவ்வொருவனின் வார்த்தையிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விஷயத்திலும் அழகுணர்ச்சி, வசீகர தன்மை, உண்மை, அழகு என எல்லாமே அவசியம்.
ஒரு ஈர்ப்பினை அது கொடுத்தல் வேண்டும்.
எல்லோரும் பேசுவார்கள், எழுதுவார்கள், பாடுவார்கள் ஆனால் எல்லோரும் உச்சம் தொடமுடியுமா பெரும் மக்களை ஈர்க்கமுடியுமா என்றால் முடியாது.
அதற்கு ஒரு பிரபஞ்ச சக்தி அவனில் இயங்கவேண்டும். அதுதான் அவனை இந்த உலகில் தனித்துக் காட்டும் சக்திவாய்ந்தவனாக காட்டும். பெரும் பெரும் ஆற்றலை அழியா இடத்தை அவனுக்குக் கொடுக்கும்.
வியாசர் முதல் தேவாரம் பாடியவர்கள் வரை, சங்கீத மும்மூர்த்திகள் வரை, காஞ்சி மகாபெரியவர் வரை இப்படித்தான் பெரும் இடம் பெற்றார்கள்.
அந்தப் பலத்தை அந்த வரத்தை அச்சக்கரம் தரும். அந்தச் சக்கரம் துலங்கும் வரத்தை இந்த ஆலயம் தரும். இங்கு வந்து வணங்குவோர்க்கு அந்த விசுத்தி சக்கரம் துலங்கும், அப்போது இருந்து அவர்கள் சொல்லுக்கு ஒரு தனிச் செல்வாக்கு கிடைக்கும்.
இந்த வரத்தை தருபவள் அன்னை வராஹி.
இந்த வரத்தை முழுமையாக பெற்றவர்கள் யாராயினும் அரசியலில் வெல்வார்கள். அது மன்னராட்சி என்றாலும் ஜனநாயக ஆட்சி என்றாலும் இந்தச சக்கரம் துலங்கியிருத்தல் அவசியம்.
அதை அருள்பவள் அன்னை வராஹி.
மன்னராட்சியில் எல்லா மன்னரும் நிலைத்ததில்லை. யாருக்கு எதிரியின் பலம் தன் பலம் தெரிந்ததோ, யாருக்கு இரகசியங்கள் பிடிபட்டதோ, தன் வசீகரத்தாலும் வீரத்தாலும் தந்திரத்தாலும் வார்த்தை செல்வாக்காலும் யாரால் எல்லோரையும் வசப்படுத்த முடியுமோ அவனே பெரும் மன்னன் என்றானான்.
அப்படி உருவானவன் இராஜராஜ சோழன், அதனாலே அவன் வராஹியினைத் தன் பெரியகோவிலில் வைத்து வணங்கினான், அவளின் அருள் அவனுக்கு இருந்தது.
ஜனநாயக ஆட்சியில் கவனியுங்கள், யார் நல்ல பேச்சும் சொல்வாக்கும் செல்வாக்கும் கொண்டவர்களோ, யார் தெளிந்த தோற்றம் நடை உடை பாவனையால், பேசும் கலையால் மக்களை நெருங்கினார்களோ அவர்கள்தான் உச்சம் தொட்டிருப்பார்கள்.
அவர்களுக்கு விசுத்தி சக்கரம் துலங்கியிருக்கும், ஒரு வசீகரம் இருக்கும், அந்த அருளைத்தான் வராஹியின் அருள் என்றார்கள் இந்துக்கள்.
நாட்டுக்கு நலம் தரும் வராஹி, வீட்டுக்கும் அதே வரம் தருகின்றாள். குலப்பெண்கள் அவளை வணங்கும் போது வீட்டை ஆளும், வீட்டை பாதுகாக்கும் எல்லா வரத்தையும் சக்தியினையும் பலத்தையும் அவளிடம் இருந்து பெறுவார்கள்.
அதனாலே சப்த கன்னியரில் இவளை வழிபடச் சொன்னார்கள் இந்துக்கள்.
ஆஷாட நவராத்திரி எனும் ஆடிமாத நவராத்திரி இவளுக்காகவே உருவாக்கப்பட்டது, கிராமங்களில் பைரவி என வழிபடும் தெய்வம் இவள்தான்.
அன்னைக்கு காசியில் ஆலயம் உண்டு. காசியில் அவள் பிரதான போர் தெய்வம், கால பைரவரை போல அவளுக்குப் பிரசித்தியான ஆலயம் உண்டு, தனி தெய்வமாக அங்கே அவள் உண்டு.
காஞ்சிபுரம் காமாட்சி அன்னையின் இடது புறத்தில் வராஹி தேவி அருள்பாலிக்கிறாள். பள்ளூர் வராஹி தனிச் சக்தி மிக்கவள்.
தமிழகத்தின் மிகப் பழமையான ஏன் உலகிலே மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்று உத்திரகோசமங்கை.
அந்த கோவிலின் அருகே மங்கள மகா காளி என்ற பெயரில் மிகப்புராதனமான சுயம்பு மகா வராஹி அம்மன் கோயில் உள்ளது. இது மிகப் புராதனமனது, இந்த வராஹியின் தீர்த்தமே அங்கு அபிஷேகத்துக்குப் பயன்படும்.
இது வராஹி வழிபாட்டின் பழமையினைச் சொல்வது
இன்னும் வேலூர் அருகில் உள்ள கீழ்மின்னல் வராஹி அம்மன் திருக்கோயில், இன்னும் சதுரங்கபட்டினத்திலிருக்கும் வராஹி அம்மன் என எத்தனையோ உண்டு.
மன்னர்கள் வழிபட்ட தெய்வம் வராஹி என்பதால் சிவகங்கை பக்கம் அவளுக்கு பெரும் ஆலயம் உண்டு. சிங்கம்புணரி முத்துவடுகநாத சித்தர் வராஹி பக்தர், அவரின் சமாதியில் அவள் சிலையும் வழிபாடும் உண்டு.
சித்தர் முத்துவடுக நாதர் இன்றளவும் அன்னை வராஹி அருளால் தன் பக்தர்களை அரவணைத்து காத்து நிற்கிறார். இவரை ”வராஹி சித்தர்” என்றே அன்பர்கள் அழைக்கிறார்கள்.
வராஹி சித்தர் சமாதி என அழைக்கப்படும் அந்தச் சமாதியில் எல்லா வினைகளும் தீர்கின்றன. எல்லா வரமும் கிடைத்து எதிரிகளின் பில்லிசூனியம் முதல் எல்லா ஆபத்துக்களும் அகற்றப்படுகின்றன.
தேடிவரும் பக்தர்கள் ஏராளம்.
நாகர்கோவில் அருகே அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருத்தலத்தில் முத்தாரம்மனுடன் வீற்றிருக்கும் வராஹி அன்னை சிறப்பானவள்.
செங்கல்பட்டு அருகில் உள்ள ஆத்தூர், சிவபுரம் (வாலாஜாபாத்) அண்ணாமலை கோவில் வராஹி எனப் பல தலங்கள் உண்டு.
கடலூர், மயிலாடுதுறை, பண்ருட்டி எனப் பல இடங்களில் அவளுக்கு ஆலய சன்னதி உண்டு. திருவதிகை ஆலயத்திலும் அவள் வீற்றிருப்பாள்.
மதுரை பக்கம் பல ஆலயங்களில் அவள் உண்டு, சோழிங்க நல்லூர் பிரத்யங்கரா திருக்கோயிலிலும் வராஹி அம்மன் சிறப்பாக எழுந்தருளி அருள்கிறாள்.
மதுரை உள்ளிட்ட பல ஆலயங்களில் அம்மன் வராஹி வடிவம் கொண்டு பவனிவருவது இயல்பு. அந்த வழமை
இன்னும் ஏகப்பட்ட இடங்களில் அவள் உண்டு.
அரசர்கள் வாழ்வு, பெரிய செல்வாக்கான குடும்பத்தின் இரகசிய வழிபாட்டுகளில், பரம இரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை.
இதனாலே அவளுக்க் தனிச்சன்னதி உண்டு.
பைரவரின் சக்தியாக இருப்பவளும் வராஹியே, வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக எந்த பில்லி சூன்யமோ வஞ்சனையோ வெல்லாது.
அதானாலேதான் ‘வராஹி காரனிடம் வாதாடாதே”என்பார்கள்.
வாக் சக்தி அருளும் அதிதேவதை வராஹி அம்மன்.
இதனால்தான் சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள், வாதிடுவோர், வழக்கறிஞர்கள் வழிபட வேண்டிய தெய்வம் வராகி அம்மன் என்பது போதனை.
அரசர்களும், ஆள்வோரும், தலைவர்களும் வழிபடவேண்டிய தெய்வம் அவளே. யாரெல்லாம் தலைமை பதவியில் குடும்பத்தில், நிறுவனங்களில் இன்னும் இராணுவத்தில் என எல்லா இடத்திலும் இருப்பார்களோ அவர்கள் அவளை வழிபடுதல் நன்று.
மாதுளை முத்துக்களைத் தேனில் சிறிது ஊறவைத்து அதனை வராஹி அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடுவார்கள்.
சர்க்கரை வள்ளி கிழங்கு வைத்து அவளை வழிபடுவோரும் உண்டு.
நெய் தீபம் அல்லது நல்எண்ணெய் தீபம் ஏற்றி,வராஹி அம்மனுக்கு செம்பருத்தி, சிகப்பு அரளி, மரிக்கொழுந்து சாற்றி வழிபாடு செய்து,கூடவே ”அபிராமி அந்தாதி” ,”லலிதா நவரத்தின மாலை” மற்றும் ”வராஹி மாலை” பாராயணம் செய்து, இப்படி தொடர்ந்து 8 பஞ்சமி நாட்களில் வழிபாடு செய்து வர வேண்டும் வரம் கிட்டும் என்பது சத்தியம்.
பகை, வறுமை, பிணி, பில்லி, சூன்யம், மாந்திரீகம், பகைவர்கள், தீயோர் என எல்லா பிரச்சினைகளையும் அவள் முடித்துத் தருவாள்.
எவ்வளவோ ஆலயங்களும் சந்நிதியும் அன்னைக்கு உண்டு என்றாலும் காசியில் இருக்கும் வராஹி போல தஞ்சை பெரியகோவிலில் இராஜராஜன் வணங்கிய வராஹி தனிச் சிறப்பானவள்.
அப்படியே சப்த கன்னியர் தலங்களில் பசுமங்கை எனும் ஆலயம் அவளுக்கானது. அதைச் கோச்செங்கெண்ண சோழன் எனும் நாயனார் கட்டி ஸ்தாபித்தார்.
அதிலிருந்துதான் சோழர்களின் பெரும் தெய்வமாக அவள் எழுந்து இராஜராஜசோழனுக்கு பெரும் காவலாய் இருந்தாள், அவனை அழியா வீர காவியமாக்கினாள்.
ஆம். வராஹிவழிபாடு அவ்வளவு முக்கியமானது.
இந்தச் சப்தமங்கையின் பசுமங்கை, இராஜராஜசோழனின் வராஹி, காசி வராஹி போன்ற தங்களில் வழிபட்டால தசைகள் சம்பந்தமான நோய்கள் தீரும்.
தலைமை பண்புக்கான குணமும் வீரமும் தைரியமும் வரும். விசுத்தி சக்கரம் துலங்கி அவர்களுக்கான செல்வாக்கு கூடும்.
குலப்பெண்கள் கண்டிப்பாக வணங்கவேண்டிய தெய்வம் அவள், அப்படியே ஒவ்வொருவரும் வணங்கி நலம்பெற வேண்டிய அன்னை அவள்.
அவளின் காயத்ரி மந்திரம் இதோ.
“ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத் ”
அவளின் தியான மந்திரம் இதோ.
“ஒம் ஐம் க்லீம் சௌ ஐம் க்லெளம் ஓம் நமோ பகவதீ
வார்த் தாளி வார்த்தாளி
வாராஹி வராஹமுகி வராஹமுகிவராகமுகி
அந்தே அந்தினி நம
ருத்தே ருந்தினி நம
ஜம்பே ஜம்பினி நம
மோஹே மோஹினி நம
ஸதம்பே ஸ்தம்பினி நம
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம் க்லெளம் டஹடஹ டஹடஹ
ஹும் அஸ்த்ராயபட் ஸ்ரீ வராஹி அம்பாள் ஸ்வாகா”
அவளின் துதி இதோ.
“ஓம் குண்டலினி புரவாசினி சண்டமுண்ட விநாசினி
பண்டிதஸ்யமனோன்மணி வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி வாராஹீ நமோஸ்துதே”
அன்னையினை வணங்கினால் எல்லாப் பகைவரும் ஒழிவர். அவள் இரகசியங்களைப் புலப்படுத்துவாள், எதிரிகளின் வேர்வரை அழிப்பாள், மறைந்திருக்கும் ஆபத்தையெல்லாம் அகற்றி வாழவைப்பாள்.
முழு உடல்நலமும் உள்ள நலமும், தடைகளற்ற எதிரிகளற்ற வாழ்வும் வளமும் காவலும் அவள் தருவாள். தனிச் செல்வாக்கும் சொல்வாக்கும் கொண்ட பெரும் ஞானத்தை வீர ஞானத்தை அவள் வழங்குவாள். அது நித்ய சத்தியம்.
எது எல்லாம் இழக்கப்பட்டதோ எதெல்லாம் மறைக்கப்பட்டதோ அதையெல்லாம் மீட்டுத் தந்து காவல் இருந்து வாழவைப்பவள் அவள். அது சர்வ சத்தியம்.
சப்த கன்னியர் 06: இந்திராணி
“கடி கமழ்தருமலர் தார்முடிச் சேர்த்தவள்” என அவளைக் குமரகுருபரர் சொல்கின்றார். அவள் எப்போதும் மணக்கும் மலர்மாலை அணிந்த இந்திரனின் சக்தி என்கின்றார்.
சப்த கன்னியரில் ஆறாம் தேவி இந்த இந்திராணி.
இவள் இரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டி அருள் வழங்குபவள்.
மாகேந்திரி என்ற பெயரையும், ஐந்தரி எனும் பெயரையும் கொண்டவள். இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும். தேவேந்திரனின் அம்சமாக இந்திராணி போற்றப்படுகிறாள். மாகேந்திரி என்றும் ஐந்தரி என்றும் இத்தேவதை கொண்டாடப்படுகிறாள்.
இந்திரனைப் போலவே வஜ்ராயுதம் ஏந்தி வெள்ளை யானையில் வருபவள். விருத்திகாசுரன் என்ற மாபெரும் அசுர சக்தியை அழித்த சக்தியாக இவ்வம்மை வணங்கப்படுகிறாள்.
இந்தத் தேவியின் தத்துவம் பற்றிக் கொஞ்சம் ஆழமாகக் காணலாம்.
ப்.ரம்பொருள் இந்த உலகை வெகு ஞானமாக வெகு சூட்சுமமாக படைத்திருக்கின்றான். அந்தச் சிருஷ்டிகர்த்தா ஒவ்வொரு படைப்பிலும் ஒரு நிறைவையும் அதன் கடமையினையும் அப்படியே அது வழி வழியாக பெருகி வரவேண்டிய வழியினையும் நுணுக்கமாக ஏற்படுத்தியிருக்கின்றான்.
இது பிரபஞ்சத்தில் உண்டு. அதன் ஒவ்வொரு படைப்பிலும் உண்டு. படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும்
தன்னில் ஒரு நிறைவு அப்படியே தன் சந்ததிகளை உருவாக்கிச் செல்லுதல் எனும் விதி உண்டு.
இது கண்காணா கிருமி முதல் கண்காணும் எல்லாப் படைப்பிலும் உண்டு.
இங்கு எல்லாமே அதனதன் தன்மையில் ஒரு ஆனந்தம் கொண்டிருக்கின்றது, ஆனந்த மயமான இறைவன் அதை ஆனந்தமாகவே உணர வைத்திருக்கின்றான்.
வெயிலும் குளிரும் கூட அதனதன் வகையில் ஆனந்தம். இருளும் வெளிச்சமும் கூட அதனதன் இயல்பில் ஆனந்தம்.
இந்தப் பிரபஞ்சம் ஒரு ஆனந்தத்தில் இயங்குகின்றது. கோள்கள் ஒரு உணரமுடியா ஆனந்த மயக்கத்தில் சுற்றுகின்றன.
அப்படியே பிரபஞ்சம் தோன்றுவதும் மறைவதும் பின் தோன்றுவதும் உண்டு. பழையன கழிதலும் புதியன புகுதலும் அங்கும் உண்டு.
இந்தத் தத்துவம் ஜடப்பொருளில் உண்டு, கடலில் உண்டு நதியில் உண்டு, மலையில் உண்டு, எல்லாமே ஒரு ஆயுள் கொண்டவை, ஒரு ஆனந்தமும் கொண்டவை.
கடல் அதன் இயல்பில் ஆனந்தமானது. மலை அதன் இயல்பில் பனியும் காடுகளுமாக ஆனந்தம் கொண்டது.
இதே ஆனந்தம் மரம், செடி கொடிகளில் உண்டு. விலங்குகளில் உண்டு, அப்படியே மானிடரிலும் உண்டு.
ஒரு சந்ததி வாழும்போது அப்படியே இன்னொரு சந்ததி உருவாகின்றது, இதனாலே எல்லாக் காலமும் மரமும் கடலும் நதியும் செடிகொடிகளும் விலங்குகளும் பறவைகளும் மீன்களும் மானுடரும் இந்த உலகில் இருந்துகொண்டே இருக்கின்றார்கள்.
அந்தந்த இனம் அப்படியே இருக்கின்றது. சிருஷ்டிகர்த்தாவின் அற்புதமான ஞானம் இது.
உருவாக்கி வைத்தவள் தன்னிலேநிறைவு கொண்டு ஆனந்தம் கொண்டு இன்னொரு அச்சினை உருவாக்கி வைத்து எக்காலமும் இறைவன் நிறைவானவன், ஆனந்தமயமானவன், படைக்கும் சக்தி கொண்டவன். அந்த இறைவனின் சாயல் எல்லா உடலிலும் உண்டு. ஆனால் அதனை அவனவன் கர்மா மறைத்திருக்கின்றது.
இந்தக் கர்மாவினை தீர்த்தால் அந்த ஆனந்தம் தெரியும். அந்த நிறைவு தெரியும். அவன் இட்ட கட்டளையும் தெரியும்.
அந்த வரத்தை தருபவள்தான் இந்திராணி.
இந்திரன் போகத்துக்கு அதிபதி, ஆனந்த நிலைக்கு மகா இன்ப நிலைக்கு அதிபதி. அவன் இந்திரியங்கள் எனும் புலன்களின் இன்பங்களுக்கானவன். அதனாலே அவன் எல்லா இன்பங்களும் மகிழ்வும் கொட்டிகிடக்கும் இந்திரலோகத்து அரசன்.
அவன் ஆனந்தத்தின் சக்தி அந்த இந்திராணி.
இவள் இருவகை அருளை அருள்வாள். முதலில், நிறைவானா மகிழ்வான ஆனந்தமான வாழ்க்கை எல்லா வகையிலும் நிறைவான வாழ்க்கை.
இரண்டாவது, வாழ்ந்த வாழ்க்கைக்கும் சாட்சிக்குமான சந்ததி,வளமான பலமான சந்ததி.
இந்த இரண்டும் அவளின் பலன்கள்.
மானுட உடல் அப்படித்தான் எல்லா படைப்புக்களைப் போல படைக்கபட்டிருக்கின்றது. அந்த உடலுக்கு எல்லாப் படைப்புக்களைப் போலவே சில தேவைகள் உண்டு, சில இனம்புரியா மயக்கங்களும் உண்டு.
இதில்தான் இந்த உலகம் இயங்குகின்றது.
இந்த மானுட உடலுக்கு திருப்தி அவசியம், அது உணவால் உடலால் இன்னும் பலன்களின் மகிழ்வால் ஒரு நிறைவு அவசியம், அந்த எல்லா அவசியத்தையும் எல்லா நிறைவையும் அவளே தருவாள்.
நிறைவு என்பது எல்லோரும் அரசன் என்பதல்ல, எல்லோரும் சுகபோகம் என்பதல்ல, எல்லோரும் ஆள் அம்பாரத்துடன் வாழ்வது அல்ல.
மனம் நிறைய மகிழ்ச்சி எனும் உணர்வு, எல்லா வகையிலும் நிறைவு எனும் ஆனந்த நிலை, அந்த ஆனந்தத்தில உற்சாகமாக கடமை செய்யும் வழி.
இதனை தருபவள் அன்னை.
எல்லா வகை இன்பத்தையும் போகத்தையும் முழு நிறைவினையும் தந்து இப்பிறவி ஏக்கமற நிறைவுற எல்லாம் அனுபவித்துக் கடக்க அவள் அருள் செய்வாள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி முக்கியம், நிறைவு முக்கியம். தன்னில் மகிழ்ச்சியுள்ள நிறைவுள்ள ஒருவரே இன்னொருவரிடம் அன்பும் மகிழ்வும் கொண்டிருக்க முடியும் அதைக் கொடுக்கவும் பரப்பவும் முடியும்.
இதனால் குடும்பப் பெண்களுக்கு எப்போதும் மகிழ்வும் நிறைவும் புன்னகையும் ஆனந்த மனநிலையும் மகா முக்கியம். அதைத் தருபவள் இந்த இந்திராணி என்பதால் அவளை வணங்க சொன்னார்கள்.
உடலின் தத்துவத்தில் இவள் சுக்கிலம் எனும் மகா முக்கிய தாதுவுக்கு அதிபதி.
இந்தச் சுக்கிலம் என்பது தாம்பத்திய உறவிலும் சந்ததி பெருக்கதிலும் அடிப்படை. இந்தச் சுக்கில துளியில்தான் ஒரு மானுடன் ஜெனிக்கும் உயிரும் அதன் இரகசியமும் அடைக்கபட்டிருக்கின்றது. அதுதான் விதை.
அந்தச் சுக்கிலம் இப்படி மகா முக்கியமானது என்றாலும் பொதுவாக சுக்கில எனும் வார்த்தைக்கு முழுமை, பூரணம், நித்திய மகிழ்ச்சி எனப் பொருள் உண்டு, பேரின்ப நிலை என்பதும் பொருள்.
அப்படி ஒரு பெரும் போகம் தருவதாலே அந்தக் கிரகத்தை சுக்கிரன் என்றார்கள்.
அப்படிப் பெரும் மகிழ்வை, பெரும் மகிழ்ச்சியினை, நித்திய பேரானந்தத்தைத் தருபவள். இது போதும் எனும் மகா நிறைவினை உடலுக்கும் உள்ளத்துக்கும் தந்து மகிழ்ச்சியாய் வைத்திருப்பவள் இந்த அன்னை.
சுக்கிலம் ஒரு உடலின் ஆனந்தத் தாது, அதுதான் இன்னொரு உயிர் பிறக்க அடிப்படை. ஆனால், எந்த உயிரும் இன்னொரு உயிரை எளிதாக படைத்துவிடுவதில்லை.
அந்தச் சிருங்காரத்துக்கு இனம்புரியா மயக்கம் வேண்டும், ஒரு ஆனந்த நிலை வேண்டும், அந்த மயக்கத்தில்தான் உயிர்கள் உருவாகின்றன.
அந்த இன்பமான மயக்கத்தைக் கொடுத்து உயிர்களை உருவாக்குவதும் இவளே, இது எல்லா உயிரிலும் அவள்செய்யும் காரியம்.
மானுடர் முதல் மண்ணும் நீரும் கிடைத்துவிட்டால் நிலத்தைக் கீறி வரும் விதைமுதல் முட்டை உடைத்து வரும் பறவை வரை வானில் தோன்றும் நட்சத்திரம் வரை அவளே இதைச் செய்கின்றாள்.
அந்த வரத்தை மானுடருக்கும் அவள் தருவாள். உடலெல்லாம் மனமெல்லாம் ஆனந்தப் பரவசம் ஓடச்செய்வாள், அந்த நிறைவில் வேறேதும் தோன்றாது.
சூரியனின் பரவசம் அதன் ஒளி, கடலின் பரவசம் அதன் அலை, காற்றின் பரவசம் அசைவு என ஒவ்வொரு படைப்புக்குமான பரவச நிலையினைத் தரும். அன்னை மானிடரின் பரவசம், நித்திய நிறைவு என்பதால் அதை தருவாள்.
இந்த அன்னை யோக தத்துவத்தில் ஆக்ஞா எனும் புருவ மத்தி சக்கரத்தின் அதிபதி.
இந்தச் சக்கரம் ஆறாம் சக்கரம், இது ஆகாய தத்துவத்தைக் குறிப்பது. இந்த நெற்றிச் சக்கரம் புருவ மத்தியில் இருக்கும் சக்கரம் துலங்கும் பட்சத்தில் ஆகாயம் அளவு பரந்த மனமும் சிந்தையும் வாய்க்கும்.
ஞானியரெல்லாம் ரிஷிகளெல்லாம் சித்தர்களெல்லாம் இந்நிலை அடைந்தவர்கள்.
அவர்கள் தேவர்களுக்கு சமமான சக்தியினைப் பெறுவார்கள். இந்திராணி எனும் இந்திரனின் சக்தி அதனை அவர்களுக்கு வழங்குவாள்.
அவர்கள் எப்போதும் பேரின்ப பரவச மகிழ்வில் இருப்பார்கள். அந்த மகா பரவச நிலையில் வேறு எந்த இன்பமும் அவர்களுக்குப் பொருட்டாகத் தோன்றாது. அப்படி ஒரு பேரின்ப நிலை அது.
நெற்றிப்பொட்டில் இருக்கும் அந்தச் சக்கரம் துலங்குவது பேரின்ப நிலை, மகா பரவச நிலை.
ஞானக்கண் என்பதும், மூன்றாம் கண் என்பதும் இதுதான்.
இது மகா சூட்சுமமானது என்பதால் இந்துக்கள் திலகமிட்டு மறைக்குமிடமும் இதுதான். குரு தன் கட்டைவிரலால் அழுத்தி தீட்சை கொடுக்குமிடமும் இதுதான்.
ஆனந்த வாசலின் திறவுகோல்தான் தீட்சை. அந்த ஆனந்தம் அங்கேதான் இருக்கின்றது என்பது தாத்பரியம். இந்திராணி அந்தப் பேரின்பத்தை தருவாள். இந்தச் சக்கரம் பற்றி இந்து வேதங்கள் சொல்கின்றன. வேத நூல்கள் சூட்சுமமானவை. அதில் ஒரு வரி இப்படி வரும்.
“இரு நதிகள் இடையே தீவில் கன்னிப்பெண்ணொருத்தி நிற்கின்றாள், பலவந்தமாக அவளை அடைவாயாக”
இது திராவிட மொழிபெயர்ப்பில் கற்பழிப்பு என மாறிவிடும், உண்மை அது அல்ல.
இரு கண்களிடையே நிற்கும் இந்த ஆக்ஞா சக்கரத்தைத் துலக்கினால் பெரும் நித்திய பரவசம், பேரின்ப நிலை வாய்க்கும் என்பது.
அங்கேதான் இந்திராணி வாசம் செய்கின்றாள், அவள் அருள் கிடைத்துவிட்டால் பெரும் ஆனந்த நிலை எய்தலாம் என்பது.
பெண்கள் ஏன் அன்னையினை வணங்க வேண்டும் என்றால் இச்சக்கரம் சரியாக இல்லாவிட்டால் மனரீதியாக பதட்டம் பயம், கோபம் மன அழுத்தம், எரிச்சல், முன்கோபம், நம்பகதன்மை இல்லாமை, மூர்க்கம், தனிமை எனப் பல குழப்பங்கள் வரும்.
பெண்கள் அடிக்கடி திலகமிடச் சொன்னது, அதுவும் நெற்றி புருவ இடையில் அழுத்திப் திலகமிடச் சொன்ன ரகசியம் இதுவேதான். அந்தச் சக்கரமையம் துலங்கப்பெற்றால் பெண் எப்போதும் மகிழ்வும் அமைதியும் புன்னகையும் கொள்வாள், அவள் இருக்குமிடம் சொர்க்கமாகும்.
இனி இந்த ஆலயத்தோடு இச்சக்கரம் பொருந்துவதையும், இந்த ஆலாய்த்தின் நீல விடங்கரையும், அங்குச் சிவன் ஆடும் தாமரை நடனம் எனும் கமல நடனத்தையும் காணலாம்.
கவனியுங்கள். இந்த ஆலயத்தின் விடங்கர் பெயர் நீல விடங்கர். நீலம் என்றால் ஆகாயம். ஆகாய வெளி
நீலவேணி என்பது. அன்னை ஆகாயமாக இருக்கின்றாள் என்பதைச் சொல்வது. கண்ணனுக்கும் நீல நீறம் எனச் சொல்வதும் அப்படியே
கடலும் வானமும் பிரமாணமான வெளிகள், அந்த வெளியின் நிறம் மானிட கண்களுக்கு நீலம்,
அந்த ஆகாய தத்துவத்தைத்தான், பிரபஞ்ச பெருசக்தியில் ஒருவன் கலந்து ஆகாயம் போல எல்லாம் காணும் பெரும் விரிந்த பார்வை கொண்ட ஞானகண்ணைப் பெறுகின்றான் என்பதைத்தான் நீல விடங்கராக சொன்னார்கள்.
இந்த அன்னையினைப் பற்றி, சப்த கன்னியரைப் பற்றி ஆதிசங்கரரும் தன் சௌந்தர்ய லஹரியில் பாடுகின்றார்.
“க்ஷிதௌ ஷட்பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாஸ-துதகே
ஹுதாஸே த்வாசஷ்டிஹி சதுரதிக பஞ்சாஸ-தநிலே |
திவி த்விஹி ஷட்த்ரிம்ஸந்-மநஸிச சதுஷ்சஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம் ||”
அதாவது, “தேவியே, தாயே, ப்ருதிவீ தத்துவமான மூலாதாரத்தில் 56 கிரணங்களும், ஜல தத்துவமாகிய மணிபூரகத்தில் 52 கிரணங்களும், அக்னி தத்துவமாகிய ஸ்வாதிஷ்டானத்தில் 62 கிரணங்களும், வாயு தத்துவமாகிய அநாஹதத்தில் 54 கிரணங்களும், ஆகாச தத்துவமாகிய விசுத்தி சக்கரத்தில் 72 கிரணங்களும், மனஸ் தத்துவமாகிய ஆஜ்ஞா சக்கரத்தில் 64 கிரணங்களும் இருப்பதாக (யோக) சாஸ்திரம் சொல்கிறது.
இந்தச் சக்கரங்களுக்கு கிரணங்களுக்கு மேலே உள்ள ஸஹஸ்ரார கமலத்தின் மத்தியில் உன் திருவடிகள் விளங்குகின்றது.
இந்தக் கிரண கால அளவுகள் நுணுக்கமான கணக்கீடுகள், பூமியில் ஒருவன் வாழும் காலத்தைக் குறிப்பவை. அதன் மேல் உள்ள சஹஸ்ரார சக்கரம் என்பதுதான் அந்த சக்கரம் விரியப்பெற்றவன் கால நேரத்தை கடந்து நிற்பான் என்பதைச் சொல்கின்றது.
இன்னொரு பாடல் உண்டு. இது யோக நிலையை மேலிருந்து கீழாக, சஹஸ்ராரத்திலிருந்து குண்டலினிக்கு அன்னை வருவதை குறிக்கின்றது.
“ஸூதா-தாராஸாரைஹி சரணயுகலாந்தர்-விகலிதைஹி
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய-மஹஸஹ |
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்யுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி || “
அதாவது, “தாயே, உன் திருவடிகளிலிருந்து பெருகுகின்ற அமிர்தத்தின் பிரவாகத்தால், உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளை நனைக்கிறாய். பிறகு சந்திர மண்டலத்திலிருந்து உன் இருப்பிடமான ஆதார சக்கரத்தை அடைந்து தன் உருவத்தைச் சர்ப்பம் போல வட்டமாக அமைத்துக் கொண்டு, சிறிய துவாரமுள்ளதும், தாமரைக் கிழங்கு போன்றதுமான மூலாதார சக்கரத்தில் யோக நித்திரையில் அமர்ந்திருக்கிறாள்.
ஆம். அமிர்தம் சுரக்கும் அந்த நிலைதான் பேரானந்தம். அந்த அமிர்தம் உடலெல்லாம் பாய்ந்து ஒருவனை நித்திய மகிழ்ச்சியில் வைத்திருப்பதே பேரின்பம்.
அன்னை இந்த அருளைத் தருவாள்.
இந்திராணி என்பவள் உடலின் மனதின் நிறைவுக்கும் தித்திப்பான நிறைவுக்கும் பேரானந்தத்துக்கும் அதிபதி, எல்லாம் திருப்தியும் மகிழ்ச்சியும் அவளே தருவாள்.
உடலின் ஒவ்வொரு புலனும் அவளால் நிறைவடையும்.
இங்கே ஒரு சூட்சும இரகசியமும் உண்டு. யார் தன்னில் நிறைவில்லையோ யார் தன்னில் மகிழ்ச்சி இல்லை எனக் கருதுகின்றார்களோ அவர்கள் தான் போதை இதர தீய வழக்கங்களில் வழிதவறி செல்வார்கள்.
மீளமுடியாப் போதை அல்லது வெளிவரமுடியா சிக்கலில் வீழ்வோரெல்லாம் தன்னில் நிறைவும் மகிழ்ச்சியும் இல்லாதவர்கள் நிறைவு இல்லாதவர்கள், புலனோ உள்ளமோ ஒரு குறையான இன்பம் கொண்டவர்கள்.
அவர்களுக்கு முழு அருளும் அருளி அவர்கள் தன்னிலே நிறைவு கொண்டு வெளி இன்பங்களை மாய குழப்பங்களில் சிக்காமல் இருக்க அன்னை முழு அருள் தருவாள்.
அன்னைக்கு சப்த கன்னியர் ஆலயம் உண்டு. இது போக கிராமங்களில் மோகினி என அறியப்படுபவளும் அவள் சாயலே.
மோகினி என்பது பிசாசு அல்ல, பேய் அல்ல. அது ஒரு நிறைவினை முழு நிறைவினை முழு ஏகாந்தத்தை அருளும் சகிதி. பகவானின் மோகினி அவதாரம் அப்படி ஒரு நிறைவினைக் கொடுத்ததாலே அவர்கள் அமிர்தத்தை மறந்தார்கள்.
அன்னை முழு நிறைவினைக் கொடுப்பவள்.
அவளின் ஆலயங்கள் பல உண்டு என்றாலும் அவள் வழிபட்ட தலங்கள் இரண்டு. அதில் நாகப்பட்டினம் மாவட்டம் தருமபுரம் அபயாம்பிகை தருமபுரீஸ்வரர் கோவிலும் ஒன்று. இது திருஞான சம்பந்தரால் புனரமைக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் இந்திராணி வந்துவழிபட்டு தன் குறை தீர்ந்து அங்கு அமர்ந்து அருள்பாலிக்கின்றாள். அங்கே சென்று வணங்கினால் அவள் அருள் நிச்சயம்.
அப்படியே சப்த கன்னியர் தலமான தாழமங்கை அதில் முக்கியமானது.
அங்கே சிவனிடம் வரம்பெற்ற இராஜ ராஜேஸ்வரியாக அவள் அமர்ந்திருக்கின்றாள். தன் வாழ்நாளில் எல்லா வகையிலும் நிறைவும் மகிழ்வும் பெற்றிருந்த இராஜராஜ சோழன் தன் பிறந்த நாளான ஐப்பசி சதயம் அன்று இங்கு வந்து சந்தனம், குங்குமம் , புனுகு இட்டு வணங்கியதாக கல்வெட்டுகள் உண்டு.
அந்த அளவு அவன் இந்திராணியினை இங்கே வந்து வணங்கினான்.
இங்கே வந்து பெண்கள் வணங்கினால் அவர்கள் மனம் முழுக்க நிறைவு வரும், அவர்களின் எல்லா ஆனந்தமும் பூர்த்தியாகும். அப்பெண்கள் மிக மகிழ்ச்சியான வாழ்வை மிக ஆனந்தமான குடும்பத்தைப் பெறுவார்கள். அங்கே நிறைவும் மகிழ்வுமே நிலைத்திருக்கும்.
அந்த வீடு நிறைவுபெற்று வாழும்.
இராஜ ராஜேஸ்வரி என வணங்கப்படும் அன்னை இந்த இந்திராணியே. இராஜ போகங்களை இராஜ வாழ்வின் சம்பத்துக்களை அவள் தந்து காவல் இருப்பாள். எல்லாப் போகமும் நிறைவும் அவள் தருவாள்.
அன்னைக்கான மூல மந்திரம் இதோ.
“ஓம் ஹ்ரீம் இந்திராணி ஆசனாயயாய நம
ஓம் ஹ்ரீம் இம் இந்திராணி மூர்த்தியை நம
ஓம் ஹ்ரீம் தம் இம் இந்திராணியே நம”
அன்னைக்கான காயத்ரரி மந்திரம் இதோ.
“ஓம் கஜத்வஜாயை வித்மஹே;
வஜ்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்”
அவளுக்கான தியான ஸ்லோகம்.
“ஏக வக்த்ராம் த்விநேத் ராம்
ச சதுர்புஜ ஸமன் விதாம்
ஸ ரத்ன மகுடோபேதாம் ஹேமவர்ண ஸ்வரூபிணீம்
வராபயகராம் போஜாம் வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
மாஹேந்த்ரீம் மாதரம்,
வந்தே கஜவாஹண ஸம்ஸ்த்திதாம்”
அன்னையினை வெள்ளிகிழமை வழிபடுதல் சிறப்பு. அன்று தாம்பூலமிட்டு சந்தனம் குங்குமமெல்லாம் வைத்து வழிபட நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அன்னை நிறைவினை எல்லா விதத்திலும் தருபவள். குடும்பம், வேலை, வாரிசுகள், நிதி, ஆரோக்கியம் என எல்லா வகையிலும் அவள் நிறைவினை மகிழ்ச்சியினை ஆனந்தத்தினைத் தருபவள்.
நல்ல இல்லற வாழ்க்கைக்கும் அதன் மகிழ்வுக்கும், கணவன் மனைவி இடையே பரஸ்பர பந்தம் புரிதல் காலமெல்லாம் நிலைத்திருக்கவும், நல்ல வாழ்க்கை துணை கிடக்கவும் அவளே பிரதான வரத்தைத் தருவாள்.
அவளைப் பணிந்தால் எல்லா விதமான குறைகளும் தீர்ந்து மானிட வாழ்வே ஆனந்தமாக நிறைவாக மாறும். அந்த வாழ்வு நல்ல வாழ்வாக நிம்மதியான வாழ்வாக பிறவி முடிக்க அருள்செய்யும். வாழ்வினை ஆனந்தமாக கடந்து செல்ல அவள் அருள் அவசியம், அவளை நாடி தருவோர்க்கு அதனை தர அவள் எப்போதும் காத்துக் கொண்டே இருக்கின்றாள்.
சப்த கன்னியர் 07 : சாமுண்டி
சப்த கன்னியரில் முதலில் தோன்றியவளும் அதிசக்திவாய்ந்தவளுமானவள் இந்த சாமுண்டி, இவள் அதிசக்தி மிக்கவள் மிகப்பெரிய வடிவாய் எல்லா வகையிலும் காவல் இருப்பவள்.
இந்த தேவி பற்றி குமர குருபரர் சொல்கின்றார்.
அதாவது, “கடகளிறு உதவு கபாய் மிசைப்போர்த்தவள்” மத யானை தந்த தோல் ஆகிய நிலை அங்கியை மேலே போர்தியவள் எனப் பொருள்.
அதாவது, அன்னை யானை வடிவில் வந்த அசுரனை அழித்துத் தோலைப் போர்த்திக் கொண்டவள் என்பது பொருள், இக்காட்சி தேவி மஹாமித்யத்தில் உண்டு.
இந்த அன்னையின் தோற்றமும் வல்லமையும் சண்ட முண்ட அசுரர்கள் வதத்தில் தெளிவாகச் சொல்லபட்டது. பெரிய பராக்கிரம சாலிகளான அவர்களை அழிக்க மற்ற ஆறுதேவியும் போராடும் போது இவளைத் துணையாக அன்னை அனுப்பினாள்.
அந்தப் பத்ரகாளியின் அம்சமாக வந்த அன்னை சண்ட முண்டனை அழித்ததால் சாமுண்டி என்றானாள்.
இரத்தபீஜனை வதம் செய்தவளும் இவளே.
பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள் இவள்.
சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல் தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே! இவளை வழிபட்டால் எல்லா வகையான காவலையும் பெறலாம்.
வேறு கதியில்லை எல்லாம் இனி அவளே எனச் சரணடைந்து அழைத்தாள் உடனே வருவாள். பல வடிவங்களில் வருவாள். முடியாததையும் முடித்துவைப்பாள். கறுப்பு நிறமானவள், பயங்கரமான தோற்றம் கொண்டவள்.
பிணத்தின் மேல் ஆடும் சாயல் கொண்டவள், கைகளில் கபாலம் கொண்டிருப்பாள்.
இவள் அன்னை பத்ரகாளியின் உக்கிர வடிவம், ருத்திரனின் ஆக்ரோஷ வடிவம், தீமைகளை அழித்து தர்மத்தைக் காக்கும் அம்சம்.
இந்த அன்னை காவல் அம்சம். முழுக்காவல் இருப்பாள். இவளே போரின் தளபதியாக நின்று வெற்றியினைத் தேடிக் கொடுப்பாள். அடங்காத அதர்மங்களை அடக்குவாள். தாழகிடக்கும் தர்மத்தை ஏற்றிவைப்பாள்.
எதற்கும் அச்சபடாதது இவளின் வரம். அச்சமன்ற தன்மை தருவாள். தனி ஒரு அடையாளம் தருவாள். இவளின் சக்தியும் தனித்துவமும் அதுதான்.
மானிட உடலில் தோலின் மூல தெய்வமாக அதன் அதிபதியாக இவள் போற்றப்படுகின்றாள். அவள் யானைத்தோல் போர்த்தியிருக்கின்றாள் எனச் சொல்லும் தத்துவம் அதுதான்.
ஆம். மானிட உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல். உடலை போர்த்தியிருக்கும் கவசம் அதுதான்.
தோல்தான் ஒரு உடலுக்கு அழகும் அழகான தோற்றமும் தருகின்றது. தோல் இல்லையென்றால் மானிடர் எலும்பும் சதையுமாக எல்லோரும் ஒரு பிண்டம் போல் காட்சியளிப்பார்கள்.
தோல்தான் உடலை மறைத்து ஒரு அழகு கொடுத்து வடிவம் கொடுத்து முறையான ஒரு வடிவம் கொடுப்பது இந்தத் தோல்தான்.
வெறும் அழகை மட்டும் கொடுப்பது அல்ல, அதுதான் கழிவுகளை வெளியேற்றும். அதுதான் பருவகால மாறுபாட்டுக்கு ஏற்ப உடலை வெப்பமாகவும் குளிராகவும் வைத்திருக்கும்.
நோய்கிருமிகள் இன்னும் சூரியக் கதிர்கள் வெப்பம், குளிர் என எல்லாவற்றில் இருந்தும் அதுதான் காவல் காக்ககும். உடலுக்கு ஆபத்து என்றால் அது தோலைத்தாண்டித்தான் வரமுடியும்.
அப்படி மிக மிக முக்கியமானதும் மகாபெரிய உறுப்புமானது மானிடரின் தோல். அதுதான் காவல் அரண், அதுதான் முன் அடுக்கில் நின்று எல்லாக் கவலையும் செய்யும்.
இந்த வடிவ அமைப்பு பிரபஞ்சத்தின் எல்லாப் படைப்பிலும் உண்டு. ஒவ்வொரு படைப்புக்கும் பல அடுக்குக் காவல்கள் உணடு. அது பிரபஞ்சத்தில் எல்லாப் படைக்கும் உண்டு.
கோள்களுக்கு உண்டு, மரம் செடி கொடிகளுக்கு உண்டு, இன்னும் ஆமை, நத்தை வரை எல்லாவற்றுக்குமே ஒரு கவசம் உண்டு.
அந்த முதல் அடுக்கு காவலின் அம்சம்தான் அன்னை சாமுண்டி. அதனாலே அவளைத் தோல் உறுப்பின் தெய்வம் என்றார்கள்.
குடும்பப் பெண்கள் இவளை ஏன் வழிபட வேண்டும் என்றால், குடும்பத்தின் பெண்களுக்கு தைரியமும் காவல் காக்கும் வைராக்கியமும் வேண்டும், எதிர்ப்புகளை ஆபத்துக்களைக் கண்டால் களைந்து போடும் பெரும் சக்தி வேண்டும்.
பெண்ணுக்கு தைரியம் முக்கியம், ஆபத்தைக் கண்டால் துச்சமென போராடி விரட்டி அழித்தல் முக்கியம். ஒரு தாய்கோழி எப்படி குஞ்சுகளைப் போராடி காக்குமோ, ஒரு தாய்புலி எப்படி குட்டிகளைக் காக்குமோ, கழுகு தன் குஞ்சுகளைத் தொட்டால் எப்படி விடாமல் அடித்துக் காக்குமோ அப்படி ஒரு வரமும் அருளும் போராடும் குணமும் அவசியம்.
அந்த வரத்தை தருபவள், பெரும் தைரியத்தோடு காவல் இருக்கும் தைரியத்தைப் போராடி காக்கும் குணத்தைத் தருபவள் இந்த அன்னை.
யோக தத்துவ வடிவில் இவள் உச்சந்தலையின் சகஸ்ர சக்கரத்துக்கு, துரிய சக்கரத்துக்கு தலைவி. அந்தச் சக்கரம்தான் யோக சக்கரத்தின் கடை நிலை.
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை மேலே தலையின் உச்சியில் இந்தச் சக்கரம் இருக்கின்றது.
இந்தச் சக்கரம்தான் இறைசக்தியுடன் சலனமற்ற நிலையில் கடலில் நதிபோல் கலக்கச் செய்கின்றது, எல்லாம் கடந்த எல்லா உணர்வு சுகதுக்கம் பாசபந்தம் விருப்பு வெறுப்பு கடந்த சமாதி நிலை எனும் அந்தக் கடைசி நிலை இங்கேதான் உருவாகும்.
இந்தச் சக்கரம் துலங்கும் ஒளிதான் ஞான ஒளி, பெரும் மகான்கள் ஞானியர் தலையினைச் சுற்றி ஒளிரும் ஞானவட்டம் இதுதான்.
இந்நிலையில்தான் எல்லா வடிவமும் தெய்வவடிமாக தோன்றும். காண்பவை காணாதவை எல்லாமே இறைவடிவம் என்பதும், மகா உயர்ந்த ஞான தத்துவங்களும் அப்போதுதான் புரியும்.
அந்நிலையில் பிறப்பில்லாப் பெரு நிலையினை, பெரு ஞான நிலையினை அடையமுடியும்.
(உடல்ரீதியாக இந்தச் சக்கரம் சரியாகத் துலங்காதவருக்கு தலைசார் நோய்கள், நரம்பு மண்டல பாதிப்பு, மறதி, மந்த செயல்பாடு போன்ற குழப்பம் வரும்.
மனரீதியாக தெளிவற்ற மனம், மூர்க்கம், ஊசலாடும் மனம், சுழலும் மனம் என மனம் சம்பந்தமான எல்லா வகை சீர்கேடுகளும் வரும்)
இந்தச் துரிய சக்கரம் துலங்கும் போது மனம் அண்டசராசரத்தில் கரைந்துவிடுகின்றது. நான் தனது எனும் எண்ணெமெல்லாம் மறைந்து தான் இறைவனின் ஒரு துளி எனும் அந்தப் பெரும் ஞான நிலை வாய்க்கின்றது.
“அகம் பிரம்மாஸ்மி” எனும் ஞான நிலை அதுதான்.
அத்வைதம் எனச் சங்கரர் போதித்த தத்துவம் அதுதான். தான் வேறு இறைவன் வேறு என எண்ணாமல் அந்தப் பெரும் சக்தியுடன் ஒன்றாகக் கலநதுவிடும் பெரும் தத்துவம்.
எல்லையில்லா அன்பை, எல்லையில்லாப் பேரன்பை எல்லோர் மேலும் எல்லா உயிர்கள் மேலும் கொட்டும் பெரும்ஞான நிலை, தெய்வீக நிலை.
இந்தச் சக்கரம் துலங்கி ஒருவன் சமாதி நிலை எனும் முழு ஞான நிலைக்கு, வாக்கும் செயலுமற்ற பெருஞான நிலைக்குச் செல்லும்போது அவன் இயக்கம் தெய்வ நிலைக்குச் சென்றுவிடும்.
அதாவது, நன்மை தீமை பகுத்தறியமுடியும், சுத்தமானதை மட்டும் ஏற்றுக்கொள்ளமுடியும்.
எல்லா உயிர்கள் மேலும் அன்பு, முழு அன்பு, ஞானம், முழு விழிப்பு நிலை, தெய்வத்தில் கலந்த ஞானப்பெருநிலையினை இந்த சக்கரம் அருளும், அதன் அதிபதி இந்த சாமுண்டி.
இந்தத் தெய்வநிலைதான் குலபபெண்களுக்கு அவசியம். குடும்பத்தை நடத்தும் பெண்கள் எல்லோர் மேலும் ஒரே விதமான அன்பு செலுத்தி, எல்லா உயிர்களையும் நேசித்து, முழு ஞானத்துடன் முழு விழிப்புடன் தெய்வ நிலையில் நின்று குடும்பத்தைக் காக்க வேண்டும்.
அந்த மாபெரும் மகோத்வ மனநிலையினை, தெய்வ நிலையினை, மகா சாந்த அருள் நிலையினை, எல்லாச் சூழலிலும் தெய்வாம்சமாக நின்று காக்கும் பெரும் நிலையினை அவள் அடைய வேண்டும்.
அந்த அருளை இந்தச் சாமுண்டிதான் தருவாள்.
அதனால் இவளை வணங்கி வழிபடச் சொன்னார்கள் இந்துக்கள். சப்த கன்னியரில் மகா முக்கியமான இவளின்
அருளே மீதி ஆறு சப்த கன்னியர் அருளையும் காக்கும் சக்தி என்றார்கள்.
ஆம். ஆறுபேர் அருளையும் காத்து நின்று வாழ்வை காப்பவள் இவள்தான். எப்படி தோல் இல்லையென்றால் மானிட உடல் காவல் இல்லாமல் வீணாகுமோ அப்படி எல்லா அவையங்களும் ஒரு ஒழுங்கு அமைப்பில் இருக்கவும் எப்படித் தோல் மகா முக்கியமோ அப்படி மானிட வாழ்வு வளமாகவும் காவலாகவும் இருக்க அன்னை அருள் முக்கியம்.
தனிப்பட்ட வடிவத்தைத் தோல் எப்படித் தருமோ அப்படி அன்னை ஒருகுடும்பத்துக்குத் தனிப்பட்ட செல்வமும் அருளும் நல்ல தோற்றமும் நற்பெயரும் தருவாள்.
சாமுண்டி என்பவள் இந்தியாவின் அரசகுடும்பத்து தெய்வமாக இருப்பவள், நாயக்க மன்னர்களின் குலதெய்வம் அவள்தான்.
கன்னட மாகாணத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி பெருமை எல்லோரும் அறிந்தது, அவள்தான் ஆப்கானிய ஆட்சியினை அகற்ற நாயக்க மன்னர்களுக்கு பலம் கொடுத்தவள்.
அதற்கு முன்பே அவள் பிரசித்தி.
அந்த அன்னைதான் தைரியம், வீரம், காவல், அன்பு, தெய்வீகம், கருணை, மகா வைராக்கியம் என எல்லாம் அவளை வழிபட்ட அரசர்களுக்குக் கொடுத்தாள்.
அந்த மரபில்தான் ராணி ருத்ரம்மா, ராணி மங்கம்மா போன்ற பிரசித்தியான இந்து அரசிகள் வந்தார்கள். எல்லாம் அவள் கொடுத்த ஞானம்.
மைசூர் சாமுண்டீஸ்வரி எக்காலமும் பிரதான தெய்வம். அவளை அண்டியோர்க்கு எதிரிகள் அழிவார்கள். பகை ஒழியும், தன் குலத்தை காக்கும் ஞானமும் அறிவும் நிரம்பக் கிடைக்கும்.
தைரியமும் வீரமும் அதைச் செயல்படுத்தும் வரமும் அள்ளித்தந்து அவள் காவலிருப்பாள்.
இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் சாமுண்டி மஹாபிரசித்தியனாவள். இன்னும் நாட்டின் எல்லா இடங்களிலும் ஏகப்பட்ட ஆலயங்கள் அவளுக்கு உண்டு.
மிக மிக முக்கிய ஆலயம் கேரளாவில் திருவனந்தபுரம் அருகே இருக்கும் கரிக்ககம் சாமுண்டி ஆலயம்.
மைசூர் சாமுண்டி போல இவளும் மஹா பிரசித்தி, பரசுராமரால் ஸ்தாபிக்கபட்ட இவள் கேரளாவின் மகா முக்கிய தெய்வம். மைசூர் சாமுண்டி நாயக்கர்களுக்கு என்றால் சேரமன்னர்களை உருவாக்கிக் காத்தவள் இந்தச சாமுண்டி.
மலையாள பகவதி இவள் அம்சமே.
அந்த கரிக்கத்தில் அவள் ஸ்ரீசாமுண்டி தேவி, இரத்தசாமுண்டி தேவி, பாலசாமுண்டிதேவி என மூன்று நிலைகளில் வணங்கப்படுகின்றாள், மகா காளியின் அம்சமாக அவள் நிறுவப்பட்டிருக்கின்றாள்.
தமிழகத்தில் பத்ரகாளி என்றும், கிராமபுறங்களில் பிடாரி எனவும் சொல்லப்படுபவள் அவளே. கையில் அவள் மண்டை ஓடு வைத்து யானைத்தோல் போர்த்தி அல்லது புலித்தோல் போர்த்தி பிணத்தின் மேல் நின்ற கோலம் காட்டுவது அவள் பிசாசு என்பதல்ல.
அவள் கபாலம் எனும் துரிய சக்கரத்தின் அதிபதி. அந்த வரத்தை தருபவள் என்பதை அப்படி சொல்கின்றாள். இன்னும் அவள் தோலைப் போர்த்தியிருப்பது தோல்போல் தான் காவல் என்கின்றாள்.
பிணத்தின் மேல் நிற்கும் காட்சி எதிர்ப்புகளை அழிப்பவள், எதிரிகளை அழித்து தன்னை நம்பியோரைக் காப்பவள் என்பது.
பிடரி என்றால் தலை, அதை கையில் ஏந்தியதால் அவள் பிடாரி. அந்தப் பெயரிலே கிராமங்களில் அழைக்கபடுகின்றாள்.
பத்ரகாளி, பீடாரி என அழைக்கப்படும் தெய்வமெல்லாம் அவளே. அவளை வணங்க வணங்க எல்லாப் பலமும் காவலும் அரச அறிவும் தலைமை பண்பும் கைக்கூடும்.
தனி ஒரு அடையாளத்தைச் செல்வாக்கை அவள் தருவாள்.
அன்னை சாமுண்டி வழிபட்ட சப்தகன்னி ஆலயமாக தஞ்சை அருகே உள்ள சப்த கன்னியர் தலங்களில் ஒன்றான திருபுள்ள மங்கை ஆலயம் விளங்குகின்றது.
சோழர்கள் ஓடி வந்து வணங்கி நின்ற தலம் இது.
அன்னை அஷ்ட நாக கன்னியரோடு இங்கு வந்து வணங்கினாள், அப்படி வந்து வணங்கி அவள் சாபமெல்லாம் தீரப்பெற்றாள்.
இந்தத் திருப்புள்ள மங்கையின் இன்னொரு பெயர் ஆலந்துறை. அந்த ஆலந்துறை ஆலயத்தை அதாவது இங்கு வந்து தேவாரம் பாடிய சம்பந்தர் அந்தப் பெயரைச் சொல்கின்றார்.
“மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில் சூழ் புளமங்கை
என்னானவன் இசையானவன் இள ஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே”
ஆம். இந்த ஆலயம் மன்னர்களை உருவாக்கும் ஆலயம். சோழமன்னர்கள் அப்படித்தான் உருவானார்கள்.
இந்தத் தலத்தில் வந்து வணங்கினால் உடல் ரீதியாக தோல்நோய் நீங்கும். அப்படியே தலைமை பண்பும் தெய்வீக மனநிலையும் வைராக்கியமும் பெரும் ஞானமும் குடும்பத்தைக் காத்து வழிநடத்தி எதிரிகளை எதிர்ப்புகளை ஒழித்து குலத்தை நடத்திச் செல்லும் எல்லா வளமும் பலமும் கைக்கூடும்.
அரசப்பதவியும் ஒரு குடும்பத்தைப் பெண் நடத்தும் காரியமும் ஒன்று. ஆட்சியும் நிர்வாகமும் அவ்வளவு சிரமமானது.
குடிகளைக் காத்து நிதிகளைப் பெருக்கி ஒரு மன்னன் ஆட்சி செய்வது எவ்வளவு கடினமோ அப்படிக் குடும்பத்தை நடத்தி செல்வதும் ஒரு ஞானம்.
அந்த ஞானத்தையும் வைராக்கியத்தையும் அன்னை தருவாள், ஆபத்துக்களை முறியடித்து வெற்றித் தருவாள்.
நீங்கள் குழப்பங்களில் இருக்கலாம், எதிரிகளின் அச்சுறுத்தலில் இருக்கலாம், வழிநடத்த யாருமில்லா நிலையில் இருக்கலாம்.
பெரும் பொறுப்பும் கடமையும் உங்கள் மேல் சுமத்தப்பட்டும் அதைச் செலுத்தும் அளவு அறிவோ திறமையோ தைரியமோ இல்லாதவராக இருக்கலாம்.
அந்நிலையில் நீங்கள் அன்னை சாமுண்டீஸ்வரியினை வணங்கினால் எல்லா ஞானமும் அறிவும் தைரியமும் வீரமும் கைக்கூடும்.
அவளின் சப்த கன்னியர் தலம் ஆலந்துறை எனும் திருப்புள்ளமங்கை, அங்குச் சென்று வழிபடலாம்.
முடிந்தவர்கள் மைசூர் சாமுண்டீஸ்வரியினைச் சென்று தரிசித்து வரலாம். பெரும் ஞானமும் அறிவும் வீரமும் வாய்க்கக் கடவீர்கள்.
கேரளாவின் கரிக்கதம்மன் சாமுண்டி இன்னும் விசேஷம்.
இந்த மூன்று ஆலயங்களுமே மன்னர்கள் வழிபட்ட ஆலயம். மூன்றுமே பெரும் ஆட்சிக்கான ஞானம் கொடுத்தவர்கள். குடும்பக் கலையும் அப்படியானதே.
சாமுண்டி என்பவள் மகா காளியின் ரூபம். அவளே மஹாலட்சுமி, மஹா சக்தி, மஹா சரஸ்வதி என மூன்றுமாக நிற்கின்றாள்.
இந்தக் கல்வி, செல்வம், வீரம் என மூன்றையும் அவள் வழங்குவாள். இதைப் பெற்றவர்கள் அரசவாழ்வு வாழ்வார்கள். இந்த யோகத்தை ஒருங்கிணையப் பெற்ற எல்லோரும் அரச வாழ்வு கொண்டவர்கள்.
குடும்பங்களில் இராஜபோகம் கிடைக்க, இராஜவாழ்வு வாழ அன்னை அருள்செய்வாள். அதைத்தான் அவளின் ஆலயங்களும் அவள் வரலாறும் அவளை நம்பி சென்று வரமும் நலமும் பெற்றோர் வாழ்வும் சொல்கின்றது.
அன்னைக்கான ஸ்லோகம் இதோ.
“ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ காளி ப்ரசோதயாத்”
அவளுக்கான காயத்ரி மந்திரம் இதோ.
“ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
சக்ரதாரிணி தீமஹி
தந்நோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்”
அன்னையினை வணங்கி வர வர அவள் கவசமாய் நின்று காத்துப் பெரும் அதிகாரமும் செல்வாக்கும் அருளி தெய்வநிலைக்கு உயர்த்துவாள். அவளை அண்டினால் அக்குடுமப்ம், அக்குலம், அந்த நாடு பெருவாழ்வு வாழும்.
கேரள சாமுண்டி, மைசூர் சாமுண்டி, ஆலந்துறை சாமுண்டி என எல்லா சாமுண்டி ஆலயமும் அதைச் சொல்கின்றது. அவளை நம்பிப் பணியுங்கள். உடலுக்குத் தோல்போல் அவள் உங்களுக்குக் கவ்சமாய் இருந்து தனி செல்வாக்கும் தனி அங்கீகாரமும் தனித்துவ பெருமையும் தருவாள்.
அப்படியே எதிரிகள் இல்லாத பெருவாழ்வு, ஆனந்த வாழ்வு, இறை அம்சத்தோடு கூடிய தெய்வீக வாழ்வினை அவள் தருவாள். அது சத்தியம்.