சரஸ்வதி அந்தாதி : 14

சரஸ்வதி அந்தாதி : 14

“வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து
நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே.”

இந்த பாடல் இப்படி விரிந்து பொருள் தரும்.

“வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போத உருவாகி எங்கும் பொதிந்த விந்து
நாதமும் நாத வண் டார்க்கும் வெண்டாமரை நாயகியே”

இனி பாடலின் பொருளைக் காணலாம்.

முதல் வரி “வேதமும் வேதத்தின் அந்தமும் அந்தத்தின் மெய்ப்பொருளாம்” என வருகின்றது. அதாவது வேதமும், வேதாந்தமும், வேதாந்தத்தின் மெய்ப்பொருளும் எனப் பொருள்.

இரண்டாம் வரி “பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும்”. பேதம் என்றால் பிரிவுகள். பிரிவுகளும் அந்த பிரிவுகளின் வழி வரும் பிணக்கும், அந்த பிணக்கை அறுக்கும் எனப் பொருள்.

மூன்றாம் வரி “போதமும் போத உருவாகி எங்கும் பொதிந்த விந்து” , போதம் என்றால் ஞானம், அறிவு. ஞானமும் அறிவும் கொண்டு எங்கும் ஜொலிக்கும் எங்கும் பரவிய விந்து எனப் பொருள்.

நான்காம் வரி “நாதமும் நாத வண் டார்க்கும் வெண்டாமரை நாயகியே” நாதமும் நாத வண்டு ஆர்ப்பரிக்கும் வெண்தாமரை மலர்மேல் அமர்ந்திருக்கும் அன்னையே எனப் பொருள்.

ஆகப் பாடலின் பொருள் இதுதான்.

“வேதமும் வேதாந்த பொருளுமானவள் நீ. இந்த வேத வேதாந்த ஆன்மீக தத்துவ மோதல்களால் வரும் இந்த வேத வேதாந்த பிணக்குகளால் வெளிப்படும் மெய் பொருளும் நீ. அதனால் உருவாகும் ஞானமும் நீ. நாதமும் விந்தும் அதாவது ஒலியும் ஒளியும் கலந்த பெரும் பிரபஞ்சமும் நீ. வண்டுகள் ஆர்ப்பரிக்கும் வெண் தாமரையில் அமர்ந்திருப்பவளும் நீ.”

இந்தப் பாடல் கொஞ்சம் ஆழமானது. பெரும் ஆன்மீக தத்துவத்தை வேத, வேதாந்தங்களை போதிக்கும் பாடல் இது.

கம்பன் தன் வழமையான வார்த்தை ஜாலங்களுடன் அற்புதமான சொல்லாடலுடன் பாடும் இப்பாடல் மிகப் பெரும் பிரபஞ்ச ரகசியத்தை, மாபெரும் ஞான தாத்பரியத்தை போதிக்கின்றது.

வேதமும் வேதாந்தமும் அந்த வேதாந்தத்தின் மெய்ப்பொருளும் எனப் பாடலைத் தொடங்குகின்றான் கம்பன்.

வேதம் என்றால் கர்மகாண்டம், வேதாந்தம் என்கிற ஞானகாண்டம் அனைத்தும் அடங்கியது என்பார்கள் ஞானியர்கள். கர்மகாண்டம் என ஏன் சொல்வார்கள் என்றால் யாகம், வழிபாடு இன்னபிற சம்பிரதாய சடங்குகளெல்லாம் வேதவழி வருபவை, அவசியம் செய்தாக வேண்டியவை எல்லாம் சொல்லப்பட்டுள்ளது.

தேவர்களுக்கு சக்தி கொடுக்கவும் இன்னும் உலக விஷயங்களுக்கு வலுவூட்டவும் வேதங்கள் சொல்லும் எல்லா யாகங்களும் இதர சம்பிரதாய வழிபாடுகளும் அவசியம்.

வேதாந்தம் என்றால் முழு ஞானநிலை. இறைவனை ஜோதிவடிவான இறைவனை உணர்ந்து மனதால் கலந்துவிட்ட பெருநிலை.

ஆன்மீக உலகில் எப்போதும் இந்த கருத்துக்களுக்குள் ஒரு மோதல் உண்டு.

அதாவது வேதங்கள் சொல்லும் சடங்குகள் சம்பிரதாயங்களெல்லாம் அர்த்தமில்லாதவை இறைவன் அவற்றை விரும்புவதில்லை, அது இறைவனை அடையும் வழி அல்ல, இறைவனை அடைய தியானம் தவம் போதும், அவனை பற்றிய தேடல் போதும், வேதங்கள் இல்லாமலும் இறைவனை அடையலாம் என்பது எக்காலமும் ஒருசாரார் கொள்கை.

இந்த கருத்து மோதல் வாதங்கள் எக்காலமும் உண்டு, பவுத்தம் போன்றவை இப்படி எழும்பியவைத்தான். புத்தன் கொள்கையே வேதவழி அல்லாமல் இறைவனை அடையலாம் என்பதே.

இந்த கருத்துமோதல் இந்துக்களிடையே பிரசித்தம், அதைத்தான் “பேதமும் பேதத்தின் மார்க்கமும்” என்கின்றான் கம்பன்.

அவன் இந்துக்களிடம் இருந்த ஆறுவகை வழிபாடுகள் அதாவது சிவன், சக்தி, விஷ்ணு, முருகன், விநாயகன், சூரியன் எனும் ஷண் மதப் பிரிவுகள் பற்றி, அந்த பேதம் பற்றிச் சொல்லவில்லை.

இந்த ஆறு பிரிவுகளுக்கும் பொதுவான விஷயம் வேதம், அவை சொல்லும் வழிபாடுகள். வேதங்களே இந்த வழிகளைச் சொல்லி அந்தந்த தெய்வங்களுக்கான சம்பிரதாயங்களை, யாகங்களை, வழிபடும் மந்திரங்களைச் சொல்லி பயிற்றுவிக்கின்றது.

ஆகமவிதி, வழிபாட்டு விதி, பூஜை விதி, யாகவிதி, பண்டிகை விதி, சாமி ஊர்வலம், மந்திர உச்சாடனைகள் என அது ஏகப்பட்ட விஷயங்களை வரையறுக்கின்றது.

வேதாந்தம் என்பது இதையெல்லாம் கடந்து தெய்வத்துடன் கூடிவிடும் நிலை. வேதத்தின் அந்தம் வேதாந்தம், அதாவது இந்த வேத வழிபாடுகளையெல்லாம் சரியாகச் செய்தால் அதனால் சித்தம் சுத்தியடைந்து, அதன் பலனாக எண்ணம், சிந்தனை தெளிவுற்று பேருண்மையை உணரும் நிலை, சித்தர்கள், மகா ரிஷிகள் பெற்ற உன்னத நிலை.

“வேதாந்தம்” என்றால் வேதத்தின் ஞான காண்டமான உபநிஷத் என்பார்கள்.

வேதங்கள் சொல்லும் போதனை எப்படியானது என்றால் ஒரு சிகரத்தை அடைய படிக்கட்டுகள் அவசியம், ஒருவன் பட்டபடிப்பு பெற தொடக்கக் கல்வி அவசியம்.

இந்த வேதங்கள் வழி யாகங்களும் வழிபாடும் பூஜைகளும் சிறிது சிறிதாக இறைவனை நோக்கி இழுத்துச் செல்லுதல் அவசியம். கடைசியில் பரபிரம்மத்தை உணரும் நிலைக்கு, பரம்பொருளை அடையும் நிலைக்கு இழுத்துச் செல்லுதல் அவசியம்.

பறக்கும் விமானம் என்றாலும் முதலில் ஓட வேண்டியிருக்கின்றது. பின் பறக்க ஆரம்பித்ததும் அதற்கு ஓடுதளம் அவசியமில்லை.

அப்படியே சிகரம் எட்ட படிக்கட்டுகள் வேண்டியிருக்கின்றது, தீபம் ஏற்ற தீக்குச்சி வேண்டியிருக்கின்றது.

இந்த வழிபாடுகளெல்லாம் இந்த வேதமுறைகளெல்லாம் தொடக்கத்தில் அவசியம், பக்குவம் பெற்றவனுக்கு அது அவசியமில்லை.

யாகங்களோ வழிபாடுகளோ பூஜைகளோ சில தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் அவசியமானவை. இங்கு புரிந்துகொள்ள வேண்டியது அவை எல்லாம் குறைவுள்ளவை. அவற்றுக்கும் சில தேவைகள் உண்டு.

மானுட உலகம், தேவர் உலகம் என ஏதோ ஒரு நியதிக்காக ஒரு இயக்கத்துக்காக படைக்கபட்டுள்ளது. பரம்பொருள் அதைச் செய்துள்ளது. மானுடன் அதற்கேற்ற பணிகளை செய்வது அவசியம்.

ஒவ்வொருவரும் அவனவன் கர்மாவினை செய்தல்வேண்டும். அது கர்மகாண்டம். ஆனால் கர்மத்தின் முடிவில் இறைவனை உணர்தல் வேண்டும்.

எல்லா கர்மமும் எல்லா வேதமும் இறைவனில் முடியவடைய வேண்டும்.

இந்த ஞானத்தைத்தான் “மார்க்கப் பிணக்கறுக்கும் போதமும் போத உருவாகி” என்கின்றான் கம்பன்.

இங்கு எல்லாமே மனதை ஒருமுகப்படுத்தும், தூய்மைப்படுத்தும் பயிற்சி. பாலர் பள்ளியில் சொல்லிக்கொடுத்து ஒருவனை பட்டதாரியாக்குவது போல ஆன்மீக தொடக்கத்தில் பல காரியங்களில் பழக்கி அவனை முழு ஞானமும் தெரிந்தவனாக்கும் பயிற்சி.

அந்த பயிற்சியில் அவன் உலகுக்கும் இறைவனின் சக்திகளுக்கும் பலனுள்ள வாழ்வை வாழ பணிக்கப்படுகின்றான். எந்த ஞானி என்றாலும் மனிதனுக்கும் பரம்பொருளுக்குமான கர்மத்தை செய்தல் அவசியம், முழு ஞானி என்றாலும் போதனையோடு கூடிய கர்மம் அவசியம்.

இதனாலேயே அகத்தியர் போன்றோர், போகர் போன்றோர் பெரும் மருத்துவர்களாய் இருந்தார்கள். இதர சித்தர்கள் பல சித்துக்கள் மூலம் மக்களுக்கு நல்வழி காட்டினார்கள். பயனுள்ளவர்களாய் இருந்தார்கள்.

இறைவனை உணர்தலை நோக்கி அழைத்துச் செல்லுதலும், உணர்ந்தபின் மக்களுக்கு பயனுள்ள வழிகளைக் காட்டுவதே உன்னதமான இந்து தர்ம போதனை.

அந்த உண்மையினை புரிந்து கொள்வதே ஞானம். அந்த ஞானத்தை அருள்பவள் அன்னை எனப் பாடுகின்றான் கம்பன்.

உண்மையில் யாகம் என்பது என்ன?

யாகம் என்பது மந்த்ரம், தேவதை, ஹவிஸ் என்ற மூன்று ஸ்வரூபமாக உள்ளது. அவைகளுள் மந்த்ரம் என்பது வாயால் சொல்லப்பட வேண்டும். தேவதையை மனஸால் தியானம் செய்ய வேண்டும். ஹோமம் செய்வதற்கு முக்கியமாக வேண்டிய திரவியமே ஹவிஸ்.

அது காரியத்தில் ஆஹுதியாக அக்னியில் செலுத்தப்பட வேண்டியது. இவ்வாறு மனோ-வாக்-காயம் என்ற மூன்றும் ஒருமுகப்படுத்தப் பெறுகின்றன.

இது படிப்படியாக முன்னேறி இறைவனை ஆத்ம சொரூபத்துடன் உணரவைப்பது அல்லது அடைய வைப்பது அதுதான் கடைசி நிலை.

அது அல்லாமல் எரியும் நெருப்பில் நெய்யினை ஊற்றிக்கொண்டே இருப்பது சரியல்ல. ஆத்ம போதம் நோக்கி இழுத்துச் செல்லாத எதுவும் பலனளிக்காது.

வேதங்கள் வழி அவசியம் என்றாலும், சில பூலோக விதிகளுக்கு முக்கியம் என்றாலும், அதனைக் கடந்து ஞானநிலைக்குச் செல்லாவிட்டால் அதனால் பலனில்லை.

கீதை இதைத்தான் சொல்கின்றது.

பிருஹதாரண்யக உபநிஷமும் சொல்கின்றது “எவன் ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்து கொண்டு விட்டானோ அவனுக்கு அந்த நிலையில் வேதம் அத்தனையும் வேதமில்லாமல் போய்விடும்; தேவர்கள் யாவரும் தேவரல்லாமல் போய்விடுவார்கள்; பிராமணர்கள் பிராமணரில்லாமல் ஆகிவிடுவார்கள்; சண்டாளன் சண்டாளனில்லாதவனாகி விடுவான், இந்த நிலையினை அடைபவன் எல்லாம் கடந்தவனாகிவிடுவான்” என்கின்றது.

“வேத கர்மாவும் உபாஸனையும் ஞானத்தில் கொண்டு போய் விடாவிட்டால் பிரயோஜனம் இல்லை” என்று கீதையான ஸ்மிருதி சொல்கிறது.

தாருகாவனத்து ரிஷிகள் கதை இதனை தெளிவாகச் சொல்கின்றது. கர்மாவினை மட்டும் செய்துகொண்டு ஆத்ம ஞானத்தை அடையாவிட்டால் பலனில்லை என்கின்றது.

இதே போன்ற காட்சி பாகவதத்திலும் உண்டு.

கர்மகாண்டம் ஞான காண்டத்தில் முடியவேண்டும். ஆத்ம ரீதியாக இறைவனை உணர்தல் வேண்டும். எல்லாம் கடந்த தெய்வநிலைக்கு மனிதன் உயரவேண்டும் என்பதே ஞானபோதனை.

பிருஹதாரண்யக உபநிஷம் சொல்கின்றது.

“ஸகல தேவதைகளும் எதில் தோன்றியிருக்கின்றனவோ, அந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகி விடுகிற ஞானிக்கு அந்தத் தேவதைகளும் அந்நியமில்லை.

பரமாத்மோவோடு பரமாத்மாவாக இவன் இரண்டறக் கலந்துவிட்ட பிறகு, தேவதைகளுங்கூட இவனுக்குள் இருக்கிறவர்களே. தேவதைகளை உபாஸிக்கிற காலத்திலேயே இவனுக்கு இது அநுபவத்தில வராவிட்டாலுங்கூட, ‘நாம் வெளியே நமக்கு வேறாக தேவதை என்று ஒன்றை உபாஸனை பண்ணுகிறோமே, இதுவுங்கூட ஆத்மாவுக்கு அந்நியமானதில்லை என்ற எண்ணம் இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.

இந்த வித்யாசங்கள் எல்லாம் ஒடுங்கிப் போகிற ஒரே மூல தத்வத்தில் நாம் கடைசியிலே சேரவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும். இப்படியில்லாமல் “எவனொருவன் தேவதையைத் தனக்கு முழுக்க வேறானது என்றே நினைத்து உபாஸித்திருக்கிறானோ, அவன் ச‌த்தியத்தைத் தெரிந்து கொள்ளாதவன்”

அதாவது தான் வேறு தெய்வம் வேறு என்ற எண்ணத்தில் வழிபாட்டை தொடங்கி, கர்மத்தை செய்து அதிலே மனதை லயிக்க வைத்து, அதோடு கரைந்துபோய் கடைசியில் தான் வேறு தெய்வம் வேறு அல்ல. தானும் பரம்பிரம்மமும் ஒன்றே என அறியும் நிலைதான் ஞான நிலை.

அதுதான் ஞானகாண்டம், அதை அடைதலே ஆன்மீகத்தின் கடைநிலை.

ஆதிசங்கரர் தன் ஆன்மபோதத்தில் சொல்கின்றார்.

“அதத்-வ்யாஹ்ருத்தி-ரூபேண வேதாந்தைர் லக்ஷ்யதே-அத்வயம் |
அகண்டானந்தம்-ஏகம் யத்-தத்-ப்ரஹ்மேத்-அவதாரயேத் ||”

அதாவது வேதங்களின் முடிவில் உள்ள உபநிஷத்துகள், எப்படி இருப்பதுபோலத் தெரிவதையெல்லாம் இதுவல்ல, இதுவல்ல என்று மறுதலித்து எதை விளக்குகின்றனவோ, எது அழிவில்லாததாயும், இடைவிடாத இன்பம் தருவதாயும், எப்போதும் ஒன்றாய் இருப்பதாகுமோ அது தானே பிரம்ம சொரூபமாய் விளங்கும் என்று தெளியக்கடவாய் என்பது பொருள்.

வேதங்களையும் உபநிஷதங்களையும் அனுபவித்து உணர்ந்து கடந்து உண்மைப் பொருளை அடையவேண்டும் என்கின்றார் சங்கரர்.

அடுத்து சொல்கின்றார்.

“தத்-யுக்தம்-அகிலம் வஸ்து வ்யவகார-சததன்விதஹ |
தஸ்மாத்-சர்வகதம் ப்ரஹ்மா க்ஷீரே சர்பிரிவ-அகிலே ||

அதாவது எல்லாப் பொருட்களும் பிரம்மத்தினிடமே இருக்கின்றன. அதனால் எல்லாச் செய்கைகளும் அதை அனுசரித்தே நடக்கின்றன. பால் முழுவதும் நெய் பரவி இருப்பது போல, பிரம்மம் எங்கும் பரவி வியாபித்து இருக்கின்றது என்கின்றார்.

(ஓளவை இதையே தன் ஞானகுறளில் போதிக்கின்றார்

“பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து”

அதாவது பாலுக்குள் நெய்யானது எமது கண்களுக்குத் தெரியாதவாறு கலந்திருப்பதுபோல எல்லா உயிரினங்களிலும் சிவன் கலந்திருக்கிறான்.

“கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு”

அதாவது கரும்புக்குள் உள்ள தித்திப்பான சுவைபோல சிவம் உடலினுள் கலந்துள்ளது. நன்கு காச்சிய பாலில் வெளிவரும் நெய்போல யோகப்பயிற்சிகள், தியானங்கள் செய்து மனதை ஒருநிலைப்படுத்த, மனம் ஒடுங்கி சிவனை அறியும் ஆற்றல் வரும். அப்போது பழுக்கக்காச்சிய இரும்பின்மீது நீரை ஊற்ற அந்த நீரானது அந்த இரும்பின் வெப்பத்தைத் தணித்துக் காணாமல் போவதுபோல பக்குவப்பட்ட ஆன்மாவானது சிவனுடன் கலக்கும்.)

ஆதிசங்கரர் இன்னும் சொல்கின்றார்.

“அனணு-அஸ்தூலம்-அஹ்ரஸ்வ(ம்) அதீர்கம்-அஜம்-அவ்யயம் |
அரூப-குண-வர்ணாக்யம் தத்-ப்ரஹ்மேத்-அவதாரயேத் ||”

அதாவது எது உருவமாக, நுண்ணியதாகவோ இல்லாது, தொடக்கம் முடிவு இல்லாது, சுருங்கி குறுகியதாகவோ நீண்டதாகவோ இல்லாது; உருவம், குணம், குலம், பெயர் என்று ஏதும் இல்லாது இருக்கிறதோ, அதைக் கூர்த்த மதியால் உணர்ந்து பிரம்மம் என்று அறிய வேண்டும்.

இந்த பிரம்மத்தை உணர்ந்து அடைவதுதான் ஞானமார்க்கம், வேதாந்தம் என்பது இதுதான்.

இன்னும் சொல்கின்றார் ஆதிசங்கரர்.

“அகண்டானந்த-ரூபஸ்ய தஸ்ய-(ஆ)னந்த-லவாஸ்ரிதாஹா |
ப்ரஹ்மாத்யா-தாரதம்யேன பவன்தி-(ஆ)னந்தினோ-(அ)கிலா ||”

அதாவது எங்கும் பரவி, எப்போதும் ஆனந்தமயமாய் இருக்கும் ஆன்மாவின் சுகத்தில் இருந்து, தேவர்களாக விளங்கும் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் முதலானோர் அவரவர் தகுதிக்கு ஏற்ப சொற்பமான சுகத்தையே பெற்று உயர்வும், பெருமையும் அடைந்தவர்கள் என்பதை திடமாக அறிவாய் என்கின்றார்.

கம்பன் இதைத்தான் தன் பாடலின் நான்காம் வரியில் சொல்கின்றான், சங்கரர் சொன்னதைச் சொல்கின்றான்.

“எங்கும் பொதிந்த விந்து நாதமும்” என்கின்றான். பிரபஞ்சமெல்லாம் பெருகி நிற்கும் ஒளி ஒலி வடிவான சக்தியே ஆன்மாவிலும் இருக்கின்றது. இந்த ஆன்மா மூலப் பரம்பொருளின் சாயல். அதுதான் அன்னை மகா சக்தி என்பது அவன் சொல்லும் தத்துவம்.

இந்தப் பாடலில் வேத வழி கர்மத்தால் செய்யும் பலனும் அன்னைகுரியது, காரணம் யாகங்கள் தேவர்கள் தெய்வங்களுக்கு உரியது என்றாலும் அவை அன்னையிடமிருந்தே வந்தவை, அந்த தெய்வங்களுக்கு செய்வதெல்லாம் அன்னைக்கே சேரும்.

வேதாந்தம் எனும் ஞானநிலை எல்லாமே பிரம்மம் என உணரும் நிலையும் அன்னையின் மகா சக்தியினை உணர்தலே ஆகும்.

வேதவழி அல்லாமல் தன்னால் முடியும் எனக் கிளம்பிச் சென்று ஞானம் தேடுவோரும், வேதங்கள் வேண்டாம் வழிபாடுகள் வேண்டாம், யாகம் வேண்டாம் மனதால் இறைவனை அடையலாம் எனச் செல்வோரும் உணர்வது அன்னையினையே.

ஆக எல்லா வழியும் ஆத்ம போதனையினை, ஆத்ம ஞானத்தை, பரம்பொருளை அறிவதில் தான் முடிகின்றன. அந்த பரம்பொருளும் பெரும்சக்தியுமாய் அன்னையே இருக்கின்றாள். அவளே ஆதிபராசக்தி. எல்லா வழிகளின் முடிவிலும், எல்லா பேதமான வழிகளாக இருந்தாலும் முடிவு அவளே என்கின்றான்.

அப்படியே ஒளியும் ஒலியும் பரவியிருக்கும் இந்தப் பிரபஞ்சம், ஒளியாலும் ஒலியாலும் (விந்து நாதம்) கலந்திருக்கும் இந்தப் பிரபஞ்சம் முழுக்க அவளே இருக்கின்றாள், எல்லாமே அவள் வடிவம் எனப் பாடுகின்றான் கம்பன்.

வண்டுகள் ஆர்ப்பரிக்கும் மலர்மேல் வெண் தாமரைமேல் அமர்ந்திருப்பவளே என்பது யோகத்தின் உச்சியினைக் குறிப்பது. அந்நேரம் ஒரு ரீங்கார ஒலி கேட்கும் என்பார்கள் ஞானியர். அதைத்தான் கிண்கிணி சலங்கை என கந்த சஷ்டி கவசமும், பாதச் சிலம்பு பலவிசைப்பாட என விநாயகர் அகவலும் சொல்லும்.

மாணிக்கவாசகருக்கு சிலம்பொலி கேட்கும் ரகசியம் அதுதான்.

அதாவது இந்த உலகை இயக்கும் சப்த ஒலிகள் ஒருவன் பிரபஞ்சத்தில் கலந்துவிடும்போது கேட்கத் தொடங்கும். ஞான தியானத்தின் உச்ச நிலை அது.

அந்த நிலைக்குச் செல்லும் ஒருவன் அன்னையின் அருளால் ஞானத்தின் உச்சியினை அடைகின்றான். அவனுக்கு எல்லா அருளும் கைக்கூடும். அதுதான் அதி உச்ச நிலை. வேதம் வேதாந்தம் கடந்த ஞானப்பெருநிலை, ஞானபிரம்ம நிலை. அன்னை அருளால் அது கைகூடும் என்பதுதான் கடைசி வரியின் பொருள். “வண்டுகள் ஆர்ப்பரிக்கும் தாமரை” என்பது அந்த நிலைதான். ஆயிரம் இதழ் கொண்ட சகஸ்ர சக்கரம் விரிந்து பிரபஞ்ச ஞானத்துடன் கலப்பதை அப்படிப் பாடுகின்றான் கம்பன்.