சுப்பிரமணிய புஜங்கம் : 02 / 06
(இரண்டாம் முதல் ஏழாம் ஸ்லோகம் வரை)
இரண்டாம் ஸ்லோகம்
“ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம்”
இந்த பாடல் வரியினை பிரித்து பொருளை காணலாம்.
“ந ஜானாமி சப்தம்”, பகவானே எனக்கு ஒரு வார்த்தை கூட பதமாக நயமாக பேச தெரியாது, “ந ஜானாமி சார்த்தம்” பொருளின் அர்த்தம் புரியாது, “ந ஜானாமி பத்யம்”, இலக்கண மரபுபடி யாப்பும் அறியேன், சொற்களை முறைபடி அடுக்கும் வகையும் அறியேன், “ந ஜானாமி கத்யம்”, தொடர்ச்சியாக நாலுவார்த்தை பேசவோ எழுதவோ வராது
“சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே” என்பது மூன்றாம் வரி
“சிதேகா ஷ்டாஸ்யா” என்றால் ஆறுமுகங்கள் கூடிய, “மே ஹிருதி” என்றால் என்னுடைய இருதயத்தில், “த்யோததே மே” ஒரு ஒளி என்னில் பிரகாசிகின்றது,
நான்காம் வரி “முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம்” என்பது
அதாவது “முகாத் நிஸ்ஸ்ரத்தே” என்னுடைய வாக்கில் இருந்து முகத்தின் வாயில் இருந்து, “கிரஸ்சாபி சித்ரம்” அழகான வார்த்தைகள் அருவி போல் கொட்டுகின்றதே, இது என்ன ஆச்சரியம்?
ஆக பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
“முருகபெருமானே நான் எதையும் சிந்திக்க தெரியாதவன், அழகாக பேசவோ பாடவோ தெரியாதவன், எனக்கு கவிதை நயம் தெரியாது யாப்பு தெரியாது, தொடர்ந்து பேசும் பாடும் வகை கூட அறிந்திராதவன்
ஆனால் என் மனதில் உன் ஆறுமுகவடிவம் மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் போது, அந்த ஒளியின் பிரவாகத்தில் என் முகம் மலர்ந்து வாயில் இருந்து அழகான வார்த்தைகள் கவிதை அருவியாய் கொட்டுகின்றதே, எல்லாம் உன் அருள், உன் கருணை, உன்னை போற்றுகின்றேன்” என்பது பொருள்
“அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்பதையும் “ஆட்டிவைத்தார் யாரொருவர் ஆடாதாரே ” என்பதையும் இங்கு சொல்கின்றார் ஆதிசங்கரர்
என்னை பாடவைப்பது நீ, என்னுள் இருந்து வார்த்தைகள் தந்து இயக்குவது நீயே முருகா என சொல்லி தொடர்கின்றார்
மூன்றாம் ஸ்லோகம் இதோ
“மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம்
மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோக பாலம்”
இந்த பாடல் வரியினை பிரித்து பொருளை காணலாம்
முதல் வரி “மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்”
“மயூராதிரூடம்” என்பது “மயிரா அதிரூடம்” என பிரிந்து வரும், மயூரா என்றால் மயில், அதிரூடம் என்றால் அமர்ந்திருப்பது என பொருள்
“மஹாவாக்ய கூடம்” எனும் வரி கவனிக்கதக்கது, வேதங்களைத்தான் மகா வாக்கியம் என்பார்கள், கூடம் என்றால் கூடுதல்
முருகப்பெருமானுக்கு வேதங்களே மயிலாக வந்து அவரை தாங்குவதாக புராணங்கள் சொல்லும், அப்படி வேதங்களால் தாங்கபடுபவர் எம்பெருமான் என்பது பொருள்
இரண்டாம் வரி “மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம்” என வரும்
“மனோஹாரி தேஹம்” மனதை கொள்ளை கொள்ளும் வசீகர அழகோடு இருக்கும் என பொருள். “மஹத்சித்த கேஹம்” என்பது ” மஹ சித்த கேஹம்” என பிரிந்து வரும்
அதாவது “மஹ” என்றால் மஹான்கள், சித்தம் என்றால் மனம் , “கேஹம்” என்றால் வீடு, ஆக மகான்களின் மனதில் வசிக்கும் எம்பெருமானே என்பது பொருள்
மூன்றாம் வரி “மஹீதேவதேவம் மஹாவேத பாவம்”
“மஹீ தேவ தேவம்” என்றால் மஹான்கள், தேவர்கள், தேவமக்கள் எனப்படும் பக்திமான்கள் என எல்லோராலும் போற்றபடும் என்பது பொருள்
“மஹா வேத பாவம்” என்றால் நான்கு வேதங்களின் அம்சத்தை பாவத்தை கொண்டிருப்பர் என பொருள்
நான்காம் வரி “மஹாதேவ பாலம் பஜே லோகபா லம்”
“மஹாதேவ பாலம்” என்றால் இரு பொருள்படும், மாஹாதேவனான சிவபெருமானின் மகன் அவரின் தொடர்ச்சி என பொருள், இன்னொரு வகையில் மஹாதேவனே பணிந்து நின்று உபதேசம் கேட்ட பாலன் என்றொரு பொருள் வரும்
“லோக பாலம்” என்றால் உலகங்களையெல்லாம் காப்பவர் என பொருள்
ஆக மூன்றாம் பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
“வேதங்களே மயிலாக அந்து உம்மை தாங்கி அதன்மேல் அமர்ந்திருக்கும் முருகபெருமானே, மிக்க அழகான கோலத்தில் காண்பர் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும் அழகிய கந்தனே, நான்கு வேதங்களின் அம்சத்தை கொண்டிருப்பவரும் மகான்களாலும் தேவர்களாலும் ரிஷிகள் ஞானியர்களாலும் துதிக்கபடுகின்றவரே
சிவனின் மகனாக வந்து சிவனுக்கு போதித்தவரே, உலகத்தை காக்கும் முருகப்பெருமானே உன்னை போற்றுகின்றேன்”
வேதங்களின் வடிவம் முருகப்பெருமான் , பாலகுருசாமி, சிவகுமரன் , ஞானபண்டிதன், உலக காவலன் என முருகபெருமானை போற்றி புகழ்கின்றார் ஆதிசங்கரர்
இனி நான்காம் ஸ்லோகம்
“யதா ஸந்நிதானம் கதாமானவா மே
பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ
இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்”
பாடலின் பொருளை விளக்கி காணலாம்
முதல் வரி “யதா ஸந்நிதானம் கதாமானவா மே”
“யதா” என்றால் எப்போது, சுதா மானவா” என்றால் பக்குவர்ர மனிதர்கள் “மே” என்றால் என் என பொருள், சன்னிதான பெயர் எல்லோரும் அறிந்தது
எப்போதெல்லாம் மனிதர்கள் என்னுடைய சன்னிதானத்தின் முன் வருகின்றார்களோ என பொருள்
இரண்டாம் வரி “பவாம் போதிபாரம் கதாஸ் தே ததைவ”
“பவாம்போதி பாரம் கதாஹா” அதாவது சம்ஸாரம் என்னும் சமுத்திரத்திலிருந்து விடுபட்டு என பொருள, “தே தைதவ” என்றால் அப்போதே அவர்கள் என பொருள்
அவர்கள் பிறவிகடலில் இருந்து விடுபடுகின்றார்கள் என்பது பொருள்
மூன்றாம் வரி “இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே”
அதாவது “இதி வ்யஞ்ஜயன்” என்றால் இந்த விஷயத்தை புரிந்து என பொருள்., “ஸிந்து தீரேயே” என்றால் இந்த கடற்கரையின் தீரத்தில் அல்லது ஓரத்தில். “ய அஸ்தே” என்றால் பகவான் இருக்குமிடத்தில் என பொருள்
இந்த கடற்கரையில் பகவான் இருக்கின்றார் என்பதை அறிந்து என பொருள்
நான்காம் வரி “தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்” என வரும்
“தம் ஈடே” என்பது போற்றுதலை சொல்வது , “பவித்ரம்” என்றால் மகா புனிதமான என பொருள், “பராசக்தி” என்றால் அன்னை சக்தியின் மகன் என பொருள்
புனிதமானவரும் பராச்கதி மகனுமான முருகபெருமானை வணங்குகின்றேன் என பொருள்
ஆக பாடலின் பொருள் இதுதான்
“எப்போது ஒருவன் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் இந்த கடற்கரைக்கு வருகின்றானோ, அவர் இருப்பதை அறிந்து இந்த கடலோரம் நிற்கின்றானோ, அப்போதே அவன் பிறவி கடலை தாண்டுகின்றான், மகா புனிதமும் பரிசுத்தமுமானவரும் பராசக்தியின் மகனும் கடற்கரையோரம் குடிகொண்டவருமான முருகபெருமானை பணிகின்றேன்”
தன்னை தேடி வரும் பக்தர்கள் பிறவி கட்லாஇ கடப்பதை சொல்லும் விதமாக கடற்கரையோரம் முருகன் குடிகொண்டிருக்கின்றார் என நயமான உவமையாக சொல்கின்றார் ஆதி சங்கரர்
ஏன் பராசக்தியினை சொல்கின்றார் என்றால், சிவனும் பார்வதியும் விநாயகரும் கயிலாயத்தில் இருக்கின்றார்கள், நான் கடலோரத்தில் நிற்கின்றேன்
அதாவது அவர்கள் உயர்ந்த இடத்தில் இருக்கின்றார்கள் தான் தாழநிற்கின்றேன் , காரணம் தாழகிடக்கும் என் பக்தர்களை பிறவிகடல் தாண்டி மகா மோட்ச நிலைக்கு கொண்டு செல்ல இங்கு நிற்கின்றேன் என முருகப்பெருமான் சொல்லாமல் சொல்வதாக பாடுகின்றார் ஆதிசங்கரர்
இனி ஐந்தாம் ஸ்லோகம்
“யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ததைவாபத ஸந்நிதெள ஸேவதாம் மே
இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்”
முதல்வரி “யதா அப்தேஸ் தரங்கா லயம் யாந்தி துங்கா” என பிரிந்து வரும்
‘யதா ” என்றால் எப்போதெல்லாம் என பொருள், “அப்தேஸ் தரங்கா” என்றால் வெண்மையான கடல் அலை என பொருள்
“லயம் யாந்தி” என்றால் அப்படியே சீற்றம் அடங்கி என்பது பொருள், “துங்கா” என்றால் பெரிய என பொருள்
ஆக எப்படி பெரிய பெரிய அலைகள் சீறிவந்து கடற்கரையினை தொட்டவுடன் அடங்குமோ என பொருள்
இரண்டாம் வரி “ததைவ பத ஸந்நிதெள ஸேவதாம் மே” என வரும்
“ததைவ” என்பது “ததை ஆபத” என வரும் அதாவது அப்படியே எந்த ஆபத்து என்றாலும் என பொருள், “ஸந்நிதெள” என்றால் சன்னதியில் என பொருள், “ஸேவதாம்” என்றால் சேவித்தல் வணங்குதல் என பொருள், “மே” என்றால் நான் என வரும்
என்னுடைய சன்னதிக்கு வந்து யார் வணங்குகின்றார்களோ அவர்களுக்கு எந்த ஆபத்து என்றாலும் என பொருளாகின்றது
மூன்றாம் வரி “இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்”
“இதீ ஊர்மிகிபங்கி” என்றால் இந்த ஊரில் அலை அலையாக மோதும் அலைகள், “அருணம் தர்சயந்தம்” என்றால் வந்து மறையும் அலைகளை காட்டி கொண்டிருக்கின்றார் என பொருள்
கடற்கரையில் வந்து வந்து போதும் அலைகலை காட்டும் எம்பெருமான் என பொருள்
நான்காம் வரி “ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்” என வரும்
“ஸதா” என்றால் எப்போதும் என பொருள், “பாவயே” என்றால் ஜெபம் தியானம் என பொருள், “ஹ்ருத்ஸரோஜே” அதாவது ‘ஹிருத சரோஜம்”, அப்படியென்றால் மனமெனும் தாமரையில் வீற்றிருக்கும் குகன் (குஹ) எனும் எம்பெருமானை என பொருள்
ஆக பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
“எப்படி பெரிய பெரிய அலைகள் சீறி வந்து கடற்கரையினை தொட்டதும் சத்தமில்லாமல் அடங்குமோ அப்படி தன்னை அண்டிவரும் பக்தர்களின் குறை எல்லாம் அவர்களை மிரட்டும் பெரிய பெரிய துன்பமெல்லாம் நொடியில் அடங்கும் என்பதை சொல்லி இக்கடற்கரையில் இருகின்றார் முருகப்பெருமான் , அப்படி தத்துவத்தை அருளி அலையாடும் இந்த் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் எம்பெருமானை என் மனதின் தாமரையில் அமர்ந்திருக்கும் குகனை வணங்கி பாடுகின்றேன்” என்பது பொருள்
இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் ஆதிசங்கரர் நோய்வாய்பட்ட நிலையில் பாடுகின்றார், ஒருவருக்கு நோய் பல விதங்களில் வரும் என்றாலும் மூன்று முக்கிய காரணம் உண்டு
அதனை ஆத்யாத்மீகம், ஆதிதைவிதம், ஆதிபௌதிகம் என மூன்றாய் ஞானியர் பிரிப்பார்கள்
ஆத்யாத்மீகம் என்றால் கவலை, வேதனை, அழுகை, பயம், கண்டதையும் உண்பது, கட்டுபாடில்லா வாழ்க்கை என நமக்கு நாமே வரவைக்கும் நோய்கள். ஆதிதைவிதம் என்றால் பூர்வ ஜென்மவிதிபடி வரும் நோய்
ஆதிபௌதிகம் என்றால் பஞ்சபூத மாறுதல்கள் சீதோஷ்ண நிலை நோய்கள், பருவகால நோய்கள்
இம்மூன்று நோய்களும் முருகப்பெருமான் முன்னால் தீரும் என்பதுதான் இப்பாடலின் மறைமுக போதனை
உடல்வியாதி, மனோவியாதி, பருவகால வியாதி என எல்லாமும் முருகபெருமானால் தீரும், இந்த தலத்தில் தீரும் என்பது இந்தபாடலில் அவர் சொல்லும் போதனை
கடலில் அலை அலையாக வரும் பெரும் சீற்றமெல்லாம் முருகப்பெருமானின் காலடி கரையில் அடங்குவது போல பெரும்பெரும் வகை வகையான நோய்களெல்லாம் அந்த இடத்தில் காணாமல் போகும் என்பது பொருள்
இனி ஆறாம் ஸ்லோகம்
“கிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா
இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூடா
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து”
இந்த பாடலை காணுமுன் திருசெந்தூர் கோவிலின் அருகிருக்கும் கந்தமலை எனும் சிறிய குன்றினை தெரிந்துகொள்ளல் வேண்டும்,வள்ளி குகை அங்கேதான் உண்டு. முருகப்பெருமானுக்கு ஒரு சன்னதியும் உண்டு
அந்த மலையினை பற்றி பாடுகின்றார் சங்கரர்
முதல்வரி “கிரெள மந்நிவாஸே நரா யேயதி ரூடா”
அதாவது “கிரௌ என்றால் சிறியமலை “மந்நிவாஸே” என்றால் வாசம் செய்யும் மலை என பொருள், “நாராயே” என்றால் நரன் எனும் மனிதர்கள் “அதிரூடா” எனறால் அந்த மலை ஏறி வருகின்றவர்கள் அங்கு வந்து அமர்ந்து தரிசிப்பவர்கள் என பொருள்
இரண்டாம் வரி “ததா பர்வதே ராஜதே தே(ஸ்)தி ரூடா” என்றாகின்றது,
“தாதா” என்றால் அப்படியே என பொருள்”பர்வதே ராஜதம் ” என்றல் வெள்ளி என பொருள், அவ்வகையில் வெள்ளிமலை கைலாய மலை என பொருள் “தே அதிரூடா” என்றால் அப்படி ஏறி தரிசிக்கும் போதே என பொருள்
மூன்றாம் வரி “இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூடா”
“இதி பரூவன்” என்றால் இப்படி சொல்லும்படி என பொருள் “கந்த சைல அதிரூடா” அதாவது கந்த மலையில் அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் என பொருள்
நான்காம் வரி “ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து”
“ஸ்தேவ” என்றால் தேவவடிவம் எனபொருள் “முதமே ஸ்தா” என்றால் எப்போதும் மகிழ்ச்சி கொடுக்கும் என பொருள் “ஷ்ண்முகோஸ்து” என்றால் ஆறுமுகவடிவம் எனபொருள்
தெய்வாம்சமான ஆறுமுகங்களை கொண்ட எம்பெருமானை தரிசித்தால் எப்போதும் மகிழ்ச்சி நிலைக்கும் என்பது அர்த்தமாகின்றது
ஆக பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
“கடலோரம் இருக்கும் கந்தமலையில் வள்ளி குகை இருக்கும் கந்தமலையினை ஏறி தரிசிப்போர்க்கு வெள்ளிமலையாம் கயிலாயத்தினை வணங்கிய பெரும் பேறு கிடைக்கும், அந்த ஆறுமுகனை மனமார தரிசித்தால் எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கும்படி எல்லா துன்பமும் நிரந்தரமாய் நீங்கி நிம்மதி கிடைக்கும்”
இங்கே ஆறுமுகம் என்பது ஆறுபேர்க்கு முருகன் தெளிவினை போதித்ததை சொல்வது
சனத்குமாரர், நாரதர், அகத்தியர், பிரம்மா, தேவேந்திரன், சரஸ்வதி என ஆறுபேர்க்கு அவர் போதித்தார்
“சரவண பவ” எனும் திருமந்திரம் இதிலிருந்துதான் வந்தது என்பதும் ஒரு ஐதீகம்
இந்த பாடலில் “சரவண பவ” எனும் திருமந்திரத்தை சொல்லி அந்த கந்தமலையில் ஏறி நின்று வழிபட்டால் எல்லா இடர்பாடும் தீரும், எல்லா சிக்கலும் ஓயும் என்பது பொருள்
இனி ஏழாம் ஸ்லோகம்
‘மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் “
முதல்வரி “மஹாம்போதி தீரே மஹாபாபசோரே” என வரும்
அதாவது “மாஹா அமோபோதி தீரே” என்றால் மாபெரும் கடற்கரையில் என பொருள், “மாஹா பாபசோரே” என்றால் நம் பெரிய பாவங்கள் எல்லாம் தானே களையும்படி என பொருள்
அடுத்தவரி “முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே” என வரும்
“முனீந்திர அனுகூல ஸூ கந்தா ஆக்ய சைல” என்றால் முனிவர்களுக்கு மிக மிக சாதகமான அதாவது தவம் கைகூட கூடிய கந்த மலையில்” என பொருள்
மூன்றாம் வரி “குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்” என வரும்
“குஹாயம் வசந்தம்” அந்த மலையின் குகையில் முருகப்பெருமான் வசிக்கின்றார், “ஸ்வபாஸா லஸந்தம்” என்றால் பிரகாசமான வெளிச்சம் என பொருள்
நான்காம் வரி “ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம் தம்” என வரும்
“ஜனார்திம் ஹரந்தம்” என்றால் மக்களின் கஷ்டத்தை போக்க கூடிய என பொருள், “ஸ்ரயாமோ குஹம் தம்” என்றால் அந்த குஹனை வணங்குகின்றேன் என பொருள்
ஆக பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
“முனிவர்களுக்கு தவம் கைகூடும் படியான அந்த கந்தமலையில், கடற்கரை ஓரமாக அமைந்திருக்கும் அந்த கந்த மலையில் நின்றால் நம் பாவமெல்லாம் நம்மை அறியாமலே கரைந்தோடும், பிரகாசத்தோடு அக்குகையில் வசிக்கும் குகன் எனும் முருகப்பெருமான் எல்லா மக்களின் கஷ்டத்தையும் போக்குபவர், அவரை வணங்குகின்றேன்”
இது ஒருவகையில் மனதில் முருகப்பெருமான் இருக்கின்றார், ஆழ்ந்த தியானத்தில் அவரை வணங்கினால் அந்த வெளிச்சம் பெருகி தெளிவும் ஞானமும் வரும் அப்போது அடியார் சிரமமும் அடியாரால் அடுத்த மக்கள் சிரமமும் தீர முருகப்பெருமான் அருள்புரிவார் எனவும் பொருள்படும்
கடற்கரையில் கந்த மலையில் தியானம் செய்தால் எல்லா வினைகளும் தீர்ந்து ஞானநிலையினை அடையலாம் என்பதும் ஒரு பொருளாகின்றது.
(தொடரும்)