சுப்பிரமணிய புஜங்கம் : 05 / 06
(இருபதாம் முதல் இருபத்தைந்தாம் ஸ்லோகம் முடிய)
இதுவரை முருகனின் ஆலயம், முருகப்பெருமானின் அழகான கோலம் என உருகிப் பாடிய ஆதிசங்கரப் பெருமான் இப்போது மனக்கவலையால் ஏற்படும் நோய், பூர்வ ஜென்ம கர்மாவினால் ஏற்படும் நோய், சூழலால் ஏற்படும் நோய் என மூவகை நோய்களையும் முருகப்பெருமான் தீர்த்து வைப்பான், அவன் ஒருவனாலேயே பூர்வ ஜென்ம வினைகளையும் விதியினையும் மாற்றிவைக்க முடியும் என உருகிப் பாடி நிற்கின்றார் சங்கரர்.
இது அவருக்காக மட்டும் பாடிய பாடல் அல்ல, நோயுற்றிருக்கும் எல்லா மாந்தரும் முருகப்பெருமானை அண்டினால் பலன் உண்டு என்பதை போதித்துப் பாடுகின்றார். கந்த சஷ்டி கவசம் அமைய ஒரு வகையில் இப்பாடல்களும் அடிப்படையானவை.
இதோ இருபதாவது ஸ்லோகம்.
“ப்ரசாந்தேந்த்ரியே நஷ்ட-ஸம்க்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்-கம்பி காத்ரே
ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம்”
முதல்வரி “ப்ரசாந்தே இந்த்ரியே நஷ்ட-ஸம்க்ஞே விசேஷ்டே ” என வரும்
அதாவது ப்ரசாந்தே என்றால் (அந்திமகாலத்தில் ) அமைதியடைந்து / அடங்கி, இந்த்ரியே என்றால் உடல் உறுப்புகள் / புலன்கள், நஷ்ட என்றால் இழந்து, ஸம்க்ஞே என்றால் நினைவு, விசேஷ்டே என்றால் தடுமாறும் போது
இரண்டாம் வரி “கபோத்காரி வக்த்ரே பய உத்கம்பி காத்ரே”
கப என்றால் கபம் / சளி, உத்காரி என்றால் வெளிவருதல் / துப்புதல்,வக்த்ரே என்றால் முகம் / வாய்
பய என்றால் பயத்தால், உத்கம்பி என்றால் நடுக்கம், காத்ரே என்றால் சரீரம்
மூன்றாம் வரி “ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்”
ப்ரயாணோன் என்றால் ப்ரயாணம், உன்முகே என்றால் கடைசி, மய் என்றால்நான், அநாதே என்றால் அனாதை , ததானீம் என்றால் அப்பொழுது
நான்காம் வரி “த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம்”
த்ருதம் என்றால் விரைந்து, மே என்றால் என்னிடம், தயாளோ என்றால் தயாளனே, பவா க்ரே என்றால் முன்னால் வருவாய், குஹ த்வம் என்றால் குஹனே நீ
பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
‘பக்தர்களைக் காக்கும் குஹனே, தயாளனே! என் புலன்கள் எல்லாம் அடங்கி, நினைவிழந்து, தடுமாறும் போது, கபம், கோழை வாயிலிருந்து வழிய, என் உடல் பயத்தினால் நடுங்க, இறக்கும் தருவாயில் (கடைசி பயணத்தின் போது ) நான் உதவியற்று இருக்கும் அந்த நேரத்தில், விரைந்து என் முன்னே நீ வந்திடுவாய்”
இருபத்தோறாவது ஸ்லோகம்
“க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷுகோபா
த்தஹச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு
மயூரம் ஸமாருஹ்ய மாபைரிதி த்வம்
புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் “
முதல் வரி “க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷு கோபா”
அதாவது க்ருதாந்தஸ்ய என்றால் யமனின், தூதேஷு என்றால் தூதர்கள், சண்டேஷு என்றால் கோர உருவத்துடன்
இரண்டாம் வரி “த்தஹ ச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு”
தஹ என்றால் அவனை எரி சின்தி என்றால் வெட்டு, பிந்தீதி என்றால் பிள, மாம் என்றால் என்னை, தர்ஜயத்ஸு என்றால் பயமுறுத்தும் போது
மூன்றாம் வரி “மயூரம் ஸமாருஹ்ய மா பை இதி த்வம்” என வரும்
அதாவது மயூரம் என்றால் மயில், ஸம ஆருஹ்ய என்றால் ஏறி , மா பை என்றால் பயப்படாதே
இதி என்றால் என, த்வம் என்றால் நீ
நான்காம் வரி “புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம்
புர என்றால் முன்னே, சக்திபாணிர் என்றால் வேலவனே, மம என்றால் என், ஆயாஹி வா
சீக்ரம் என்றால் சீக்கிரம்
பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
“மரணபயம் வரும் நேரம் யம தூதர்கள் என் அருகே வந்து கோர உருவத்துடன், கோபத்துடன் அவனை நெருப்பிலிடு, வெட்டு, பிளந்திடு என என்னை பயமுறுத்தும் போது பயமேன் என்று மயிலேறி வேலவனே, நீ என் முன்னே விரைவில் ஓடி வா”
இருபத்திரண்டாவது ஸ்லோகம்
“ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம்
நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே
ந கார்யாந்த காலே மனாகப்யுபேக்ஷா”
முதல்வரி “ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ் தே பதித்வா”
அதாவது ப்ரணம்யா என்றால் வணங்குகிறேன், ஸக்ருத் என்றால் இப்போதே, பாதயோ என்றால் பாதங்களில் / காலடியில், தே என்றால் உன், பதித்வா என்றால் வீழ்ந்து
இரண்டாம் வரி “ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயே அனேக வாரம்”
ப்ரஸாத்ய என்றால் இதமாய், ப்ரபோ என்றால் ப்ரபுவே, ப்ரார்த்தயே என்றால் ப்ரார்த்திக்கிறேன் / வேண்டுகிறேன், அனேக என்றால் பல, வாரம் என்றால் முறை
மூன்றாம் வரி “நவக்தும் க்ஷம அஹம் ததானீம் க்ருபாப்தே”
நவக்தும் என்றால் அப்பொழுது, க்ஷம என்றால் முடியாது, அஹம் என்றால் நான், ததானீம் என்றால் அப்பொழுது க்ருபாப்தே என்றால் கருணைக் கடலே
நான்காம் வரி “ந கார்யாந்த காலே மனாக் அபி உபேக்ஷா”
ந என்றால் இல்ல, கார்யாந்த என்றால் அந்திம (வந்த காரியம் / வேலை முடிந்து), காலே என்றால் காலத்தில்
மனாக் என்றால் கொஞ்சம், அபி என்றால் கூட உபேக்ஷா என்றால் கண்டுகொள்ளமல் / தவிர்த்தல்
பாடலின் பொருள் இதுதான்
“உன் காலடியில் வீழ்ந்து இப்பொழுதே வணங்குகின்றேன். பிரபுவே. பல முறை வேண்டுகிறேன். பேசவும் இயலாத அந்த அந்திம நேரத்தில், கருணைக்கடலே! என்னைத் துளியும் கண்டுகொள்ளாமல் கைவிட்டு விடாதே”
இருபத்திமூணாவது ஸ்லோகம்
“ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா
ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி”
முதல்வரி “ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா”
ஸஹஸ்ராண்ட என்றால் ஆயிரம் அண்டங்களை, போக்தா என்றால் போகித்த / அனுபவித்த, த்வயா என்றால் உன்னால், ஸூரநாமா என்றால் சூரன்
இரண்டாம்வரி “ஹதஸ் தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய “
ஹதஸ் என்றால் கொன்ற, தாரக என்றால் தாரகன், ஸிம்ஹவக்த்ரச்ச என்றால் சிங்கமுகன், தைத்ய என்றால் அசுரன்
மூன்றாம் வரி “மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசம ஏகம் ‘
மம அந்தர் என்றால் என் உள்ளே, ஹ்ருதிஸ்தம் என்றால் ஹ்ருதயம், மன க்லேசம ஏகம் என்றால் ஒரு மனக் கலக்கம்
நான்காம் வரி “ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாமி”
ந ஹம்ஸி என்றால் அழிக்கவில்லை, ப்ரபோ என்றால் ப்ரபு, கிம் என்றால் என்ன, கரோமி என்றால் செய்வேன்
க்வ என்றால் எங்கு யாமி என்றால் செல்வேன்
பாடலின் பொருள் இதுதான்
“பல்லாயிரம் அண்டங்களை அனுபவித்த சூரபத்மனையும், தாரகாசுரனையும், சிங்கமுக அசுரனையும், நீ அழித்தாய். என் இதயத்தின் உள்ளே இருக்கும் மனக்குறை ஒன்றையும் அழிக்கவில்லை. ப்ரபோ!
என்ன செய்வேன் எங்கு செல்வேன்?”
எவ்வளவு பலசாலியானாலும் அந்த அசுரர்கள் அழித்த நீ, என் ஒரு மனக்கவலையை அழிக்க முடியாதா? என வேண்டுகிறார்.
இருபத்திநாலாவது ஸ்லோகம்.
“அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே
பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாசயோமா ஸுதத்வம்”
முதல் வரி “அஹம் ஸர்வதா துக்கபார அவஸந்நோ “
அஹம் என்றால் நான், ஸர்வதா என்றால் எப்பொழுதும், துக்க பார என்றால் நிறைய துக்கத்தால்
அவஸந்ந ஹ என்றால் வளைந்து / அமிழ்ந்து.
இரண்டாம் வரி “பவான் தீன பந்து ஸ்த்வத் அன்யம் நயாசே “
பவான் என்றால் நீ, தீன பந்து என்றால் பலமற்றவர்களின் பந்து (உறவினன்), த்வத் என்றால் உன்னை
அன்யம் என்றால்அன்றி (அன்னியமாய்), ந யாசே என்றால் யாசிக்க மாட்டேன்
மூன்றாம் வரி “பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம் “
பவத் என்றால் உன்னை,பக்தி என்றால் பக்தி,ரோதம் என்றால் தடுப்பது, ஸதா என்றால் எப்பொழுதும்
க்லுப்த என்றால் வருவதை. பாதம் என்றால் தடங்கல்
நான்காம் வரி “ம மாதிம் த்ருதம் நாச உமா ஸுத த்த்வம்’
மமா ஆதி என்றால் மன துக்கத்தை , த்ருதம் என்றால் விரைந்து, நாச என்றால் அழித்தல்
உமா ஸுத என்றால் உமை மைந்தன், த்வம் என்றால் நீ
பாடலின் பொருள் இதுதான்
“நான் எப்பொழுதும் துன்பச்சுமையில் அமிழ்ந்து இருக்கிறேன். ஏழைப் பங்காளனே, உன்னை பக்தி செய்து வேண்டுவதற்கு தடையாய் என்றும் கவலைகள் பீடித்தபடியால், உமை மைந்தனே, என் மனக்கஷ்டத்தை விரைவில் நீ அழித்திட வேண்டும். உன்னை அன்றி யாரிடமும் யாசிக்க மாட்டேன்”
இருபத்தைந்தாவது ஸ்லோகம்
“அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ஃப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே”
“அபஸ்மார குஷ்ட க்ஷய அர்ச ர்ச ஃப்ரமேஹ “. அபஸ்மார என்றால் வலிப்பு, குஷ்ட என்றால் தொழுநோய், க்ஷய என்றால் காச / புற்று நோய், அர்ச என்றால் மூல நோய், ப்ரமேஹ என்றால் நீரழிவு
“ஜ்வர உன்மாத குல்ம ஆதி ரோஹான் மஹாந்த”
ஜ்வர என்றால் ஜுரம், உன்மாத என்றால் பைத்தியம், குல்ம என்றால் சளி, ஆதி என்றால் மற்றும், ரோஹான் என்றால் வியாதிகள், மஹாந்த என்றால்பெரிய
“பிசாசாஸ் ச ஸர்வே பவத் பத்ர பூதிம்”
பிசாசாஸ் ச என்றால் பேய், பிசாசு மற்றும் ஸர்வே என்றால் எல்லாம், பவத் என்றால் உன், பத்ர என்றால் இலை (பன்னீர்), பூதிம் என்றால் விபூதியை
“விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே”
விலோக்ய என்றால் பார்த்த, க்ஷணாத் என்றால் க்ஷணத்தில் / நொடியில், தார காரே என்றால் தாரகனை வென்றவனே, த்ரவந்தே என்றால் ஓடிவிடும்.
பாடலின் பொருள் இதுதான்
“வலிப்பு நோயும், குஷ்டமும், காச நோயும், மூலமும், நீரிழிவு நோயும், காய்ச்சலும், பைத்தியமும், சளி, கபமும் மற்றும் பெருநோய்கள் பலவும் பேய் பிசாசுகளும், தாரகனையும் வென்றவனே ! உன் பன்னீரிலை திருநீரைப் பார்த்த மாத்திரத்தில் ஓடிடுமே”
திருச்செந்தூர் கோவிலில் தல விருட்சம் பன்னீர் மரம். விபூதியினை அம்மர இலையில் கொடுப்பது மரபாய் இருந்தது, இன்றும் அத்இன்றும் பன்னீர்மர இலையில் வைத்து விபூதி ப்ரசாதம் கொடுக்கும் வழக்கம் உண்டு
ஆதிசங்கரர் அந்த இலைவிபூதியின் பெருமையினையும் அதன் மருத்துவ குணங்களையும் சொல்லிபாடுகின்றார்
கந்த சஷ்டி கவசத்தின் மூலப்பாடல் இதுதான், சுப்பிரமணிய புஜங்கம் எனும் இந்த ஸ்லோகம்தான் அதற்கு அடிப்படை.
(தொடரும்..)