திருமுருகாற்றுப்படை : 01

முதல் பத்து வரிகள்

“உலக முவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித்
தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத்
திருள்படப் பொதுளிய பராரை மராஅத்
துருள்பூந் தண்டார் புரளு மார்பினன்”

திருப்பரங்குன்றத்தையும் அங்கிருக்கும் முருகப்பெருமானையும் பற்றி நக்கீரர் பாடும் பாடலின் முதல் பத்து வரிகள் இவை.

May be an image of 1 person and temple

முதல் வரிகள் இப்படிப் பிரிந்து வருகின்றன‌.

“உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு”

உலகம் மகிழும்படி, அதாவது உலக வாழ் உயிர்களெல்லாம் மகிழும்படி கடலில் இருந்து எழுந்து வலம் வரும் சூரியன் போல, எல்லோரும் புகழ்ந்து வணங்கும் சூரியன் போல எனப் பொருள்.

இங்கே மிக அழகான உருவகம் ஒன்றைச் சொல்கின்றார் கவிஞர். அதாவது சூரியன் இருளை அகற்றும். எல்லா உயிர்கள் வாழ்வுக்கும் காரணமாகும்.

அப்படி உலக உயிர்களின் ஒளியாக, வாழ்வாக எழுகின்றான் முருகன். பக்தர்களின் அக இருளையும் போக்க வருகின்றான் என கவித்துவமாக பாடுகின்றார்.

சூரியனாலேயே உலக இயக்கம் நடைபெறும். சூரிய வெளிச்சத்தில் நல்ல விஷயமெல்லாம் நடக்கும். அந்த ஒளியில் யாரும் தவறிழைக்க விரும்பமாட்டார்கள். இருளில்தான் பெரும் பெரும் தவறுகளும் பாவங்களும் நடக்கும். இருளில்தான் பலர் வழிதவறி செல்வார்கள்.

ஆக முருகப்பெருமான் அறத்தை காக்க எழும் சூரியன் என பாடும் நக்கீரர், இன்னொரு அழகான உருவகத்தையும் வைக்கின்றார்.

அதாவது நீலக்கடல் மேல் எழுந்து வரும் சூரியன்போல், நீல மயில்மேல் அழகான ஜொலிப்புடன் வருகின்றான் முருகப்பெருமான் எனப் பாடுகின்றார்.

யாரும் சூரியனை இதோ சூரியன் எனக் காட்டவேண்டிய அவசியமில்லை. அப்படி உலகுக்கு இதோ முருகன் என யாரும் சொல்லாமலே விளங்கிக்கொள்ளும் பெரும் தெய்வம் முருகப்பெருமான் என அவரின் தனிப்பெரும் சிறப்பை முதல் வரிகளில் பாடித் தொடங்குகின்றார்.

சூரியன் தனித்து வணங்கப்படும் தெய்வம். அவனுக்குரிய சிறப்புகள் எல்லோரும் அறிந்தது. அப்படியான பெரும் சிறப்புக்களை கொண்டவன் முருகப்பெருமான் எனப் பாடுகின்றார்.

அடுத்து “ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி” என்கின்றார்.

“ஓ அற இமைக்கும்” என்றால் கொஞ்சம் ஆழமான வார்த்தை இது. “ஓ” என்றால் இடைவிடாத எனப் பொருள், ஓ எனக் கத்தும் கடல் என அதைத்தான் சொல்வார்கள்.

அற என்றால் அறைதல், கத்துதல் அல்லது பரவுதல், இமைத்தல் என்றால் வீசுதல்.

ஆக, பெரும் முடிவில்லாமல் பரவும் ஒளி என்றாகின்றது.

“சேண் விளங்கு அவிர்” என்றால் இப்படி பொருள் வரும். சேண் என்பதற்கு நெடுந்தூரம் எனப் பொருள், மிக மிக நீண்ட தூரம் மறைக்கப்படமுடியா ஒளி எனப் பொருள்.

அதாவது, சூரிய ஒளியானது சில இடங்களில் ஊடுருவமுடியாது. இரவில் வராது. பகலில் கண்ணை மூடிக்கொண்டால் அதனால் ஊடுருவ முடியாது. குகைக்குள், இன்னும் ஆழ்கடலுக்குள் அது செல்லாது.

ஆனால் முருகப்பெருமானின் பேரோளியோ அறியாமை இருளை அகற்றும். மனக்குகையில் பாயும். இன்னும் ஆழ்மனம் வரை ஊடுருவி ஞானச்சுடர் ஏற்றும்.

அதனால் எங்கும் பரவியிருக்கும் பேரோளி, எங்கும் வீசிக்கொண்டிருக்கும் சுடரொளி என்கின்றார் நக்கீரர்.

அதாவது ஒளிவடிவானவன் இறைவன் என்பது இந்துமத தாத்பரியம். அவ்வகையில் மூலப்பரம்பொருளும் முருகப்பெருமான். அதிலிருந்து ஆத்ம சுடராய் மனதில் இருப்பவனும் எம்பெருமான். அவனே ஒளிக்கடவுள், அவனே பேரோளி.

தியானிப்போர் மனதிலும் உள்ளத்திலும் ஒளியாய் பிரவகிப்பவன் அவனே. எல்லையில்லா அந்தப் பெரும் பேரோளி அவனே எனப் பாடுகின்றார் நக்கீரர்.

அடுத்து “உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்” என வரும்.

உறுநர் என்றால் சார்ந்தோர், தாங்கிய என்றால் தாங்குதல், மதன் என்றால் அழகு, உடை என்றால் உடைய, நோன் என்றால் வலிய‌, தாள் என்றால் பாதம்.

தம்மைச் சார்ந்திருக்கும் அடியார்களை, தனக்கு உரித்தானவர்களை காக்கும் அந்த பலமான கால்கள் எனப் பொருள்.

“செறுகர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை”

செறுநர் என்றால் பகைவர். தேய்த்த செல் என்றால் இடி. உறழ் என்றால் போன்ற, தடக்கை என்றால் வலிமையான கை எனப் பொருள்.

முருகப்பெருமான் பகைவர்களை இடி போன்ற தன் கைகளால் அழிக்கின்றான் என்கின்றார் புலவர்.

இறைவன் நட்பு பகை, விருப்பு வெறுப்பெல்லாம் கடந்த நிலையில் இருக்கும் சக்தி. ஆனால் தன் அடியார்க்கு வரும் பகையெல்லாம் தன் பகையாகக் கருதி இறங்கிவந்து, தன்னைச் சார்ந்து நிற்போரையெல்லாம் காக்க, தானே இறங்கிவந்து பெரும் வல்லமை காட்டி தன் கரங்களால் காத்து நிற்பார் என்பது பொருள்.

அடுத்து “மறுவில் கற்பின் வாணுதல் (வாள் நுதல்)” கணவன்” என்கின்றார்.

இந்த வரிக்கு மாற்று சொல்லமுடியாத கற்புடையவள் வாள் நுதல் போன்ற நெற்றியினை உடையவள் எனப் பொருள்.

இங்கே நுணுக்கமான ஒரு விஷயத்தை சொல்கின்றார்.

தமிழர் மரபில் களவழி, கற்புவழி காதல் என இரண்டு உண்டு. முருகப்பெருமான் வள்ளியினை செய்தது களவு வழி திருமணம். தெய்வானையினைச் செய்தது கற்புவழி மணம்.

அதனால் மாசுமறு இல்லாத, குறையில்லாத கற்புடைய எனச் சூசகமாக தெய்வானையினைச் சொல்கின்றார். வானுதல் என்பதற்கு வாள் நுதல் என்பது போலவே வான் நுதல் எனப் பொருளும் வரும்.

அதாவது வானலோகப் பெண் எனப் பொருள்.

திருப்பரங்குன்றமே தெய்வானையினை முருகப்பெருமான் வானவர் துணையுடன் மணந்த இடம் என்பதை இப்படி சூசகமாக சொல்லித் தொடங்குகின்றார் நக்கீரர்.

அடுத்து “கார்கோள் முகந்த கமம் சூல் மாமழை” என்கின்றார்.

அதாவது சூல் கொண்ட மேகம் நிறைவான (கமம்) மழையினைக் கொட்டுவது போல என்கின்றார்.

இங்கே ஒரு அழகான உருவகத்தை காட்டுகின்றார் நக்கீரர். முருகப்பெருமான் சிவன் பார்வதியின் பிள்ளை. அப்படி வானமும் சூரியனும் பெற்றெடுத்த மேகம் அருள் வழங்குவதைப் போல சிவனும் பார்வதியும் கூடி வளர்த்த பிள்ளை பெரும் அருள்மழை வழங்குகின்றது என சூசகமாகச் சொல்கின்றார்.

அடுத்து “வாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறி” என்கின்றார்.

வாளால் பிளந்தது போல மின்னல் வெட்டி (போழ்) மழைகொட்டும். கடும் மழை கொட்டியதால் எனப் பொருள்.

அடுத்து “தலைப்பெயல் தலைஇய தண் நறும் கானத்து” வரும்.

“தலைபெயல்” என்றால் முதல்மழை எனப் பொருள். அப்படி மழைபொழியத் தொடங்கியதும் குளிர்ந்த மணம் நிறைந்த காட்டினில் எனப் பொருள்.

அடுத்து “இருள்படப் பொதுளிய பராரை மரா அத்து” என வரும். இருள் புகாதவாறு பெரும் அடிப்பாகத்தை உடைய செங்கடம்பு மரங்கள் நெருக்கமாக நிறைந்த காடு எனப் பொருள்.

இங்கே சூசகமாக அவர் சொல்லவரும் விஷயம், அடிபெருத்து நெருக்கமாகி இருள் நிறைந்த காட்டின் மேலே மணமிக்க மலர் பூத்திருக்கின்றது என்கின்றார்.

ஆழ்மனம் இருளானது, சூரிய ஒளியால் புகமுடியாத காடுபோல் மிக மிக கடுமையானது. ஆனால் முருகப்பெருமானின் பேரோளி அங்கும் செல்லக் கூடியது. செங்கடம்ப மலரை முருகப்பெருமான் அணிவான் என்பது அந்த மனக்காட்டுக்குள் அவன் ஒளி சென்று ஞானம் அருளும் என்பதை சூசகமாக சொல்வது.

அடுத்து “உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்”

குளிர்ந்த செங்கடம்பு மலர்கள் நெஞ்சில் புரளும் மார்பினைக் கொண்ட முருகன் எனப் பொருள்.

பொதுவாக போர் தெய்வங்களுக்கு செந்நிற பூக்களைக் கொண்டு வழிபடுதல் மரபு. காளி போன்ற உக்கிர தெய்வங்களுக்கு அரளிப்பூ மாலை சாற்றுவது வழமை.

அப்படி செங்கடம்பு மலர்களை சூடிய மார்பன் முருகன். தீமையினை அழிக்க அவன் போர்கோலத்தில் இருகின்றான். பக்தர்களைக் காக்க தயாராக இருக்கின்றான் என்பதைச் சொல்கின்றார்.

ஆக முதல் பத்து வரிகளில் முருகப்பெருமானை பற்றி உருக்கமாக, கவித்துவமாக பாடுகின்றார்.

உலகுக்கே ஒளி சூரியன் என்பது போல எல்லா மாந்தர்க்கும் ஒளியான முருகா, எல்லா ஆத்மாக்களுக்கும் ஒளியான முருகா, நீலகடலேறி வரும் சூரியன் போல் நீல மயிலேறி வரும் எம்பெருமானே என அவரை உலகக் கடவுளாக எல்லா உயிர்க்கும் ஒளியான தெய்வமாகப் போற்றி பாடலைத் தொடங்குகின்றார்.

முருகப்பெருமான் அடியார் உள்ளத்தில் இடையறாது ஜொலிக்கும் ஆத்மசுடர், ஞானியர் காணும் ஒளிச்சுடர் முருகன், தியானத்தின் பொருளும் அருளும் முருகப்பெருமான்.

அவன் வலிமையான பாதம் பணிந்தோர்க்கு ஒரு குறையுமில்லை, எந்த கவலையுமில்லை.

பொல்லோரை அழிக்கும் அந்த கைகள் நல்லோரை தேவரை மானிடரை காக்கின்றது. தேவயானியின் மணாளன் அவர், எல்லா உயிர்களையும் காக்கின்றார்.

கடலும் சூரியனும் இணைந்து கொடுக்கும் மழைபொல சிவனும் சக்தியும் கொடுத்த அந்த ஞானமகன், மழை உயிர்களை வாழவைப்பது போல் இந்த உலகை அருள்மழையால் வாழ வைக்கின்றான்.

செங்கடம்ப மாலைகளை அணிந்த முருகன் பக்தர்களின் அருள் வாழ்வுக்கு காவலனாக வீற்றிருக்கின்றான் எனப் பாடுகின்றார்.

முதலில் முருகப்பெருமானின் முகத்தைச் சொல்லி அது சூரியன் போல பிரகாசமானது எனச் சொல்லும் நக்கீரர், முருகனின் கால்களைப் பணிந்து கால் அழகைச் சொல்கின்றார்.

பின் அவரின் கைகளின் அழகை, வலிமையினைச் சொல்கின்றார். செங்கடம்பு மலர் தவளும் மார்பழகைச் சொல்கின்றார். அப்படியே தேவயானையினை மறைமுகமாகச் சொல்லி திருப்பரங்குன்ற அழகை சொல்லத் தொடங்குகின்றார் நக்கீரர்.

இந்த பாடல் திருமுருகாற்றுப்படையில் தொடக்கப்பாடல். அதுவும் முதல் அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தினை அறிமுகப்படுத்தி பாடப்படும் பாடல்.

முருகப்பெருமான் பேரொளிவடிவானவன் எனத் தொடங்கும் நக்கீரர், தொடர்ந்து மழையும் அவன், மலரும் அவன் என்கின்றார்.

ஞான ஒளி கொடுக்கும் சுடரொளி முருகன், பரமாத்மா எனும் மாபெரும் நித்திய ஒளிச்சுடர் முருகன் என முருகப்பெருமானே பரமாத்மா எனும் பேரொளி என்பதைச் சொல்கின்றார்.

அப்படியே தன்னை சார்ந்தோர் அனைவரையும் காப்பவன். தேவர்களின் அடைக்கலமாகி அதன் அர்த்தமாக தேவயானை எனும் தேவலோகப் பெண்ணை மணந்தவர் எனப் பாடலைத் தொடர்கின்றார்.

அப்படியே முருகப்பெருமான் நித்தியப் பேரொளி. அந்தப் பேரொளியாலே ஆன்மா சுடர்விடுகின்றது. அந்தப் பேரொளியே ஜீவாத்மாக்களை காக்கின்றது, தன்னோடு சேர்க்கின்றது என தத்வார்த்தமாகப் பாடத் தொடங்குகின்றார் நக்கீரர்.

இந்த முதல் பத்து வரிகளில் அழகாக ஒரு உண்மையினைச் சொல்கின்றார்.

சூரியனாலேதான் உலகம் இயங்கும், சூரியனாலேதான் மழை பெய்யும், மழையாலே காடு வளரும், காடுகளால் ஆறு வரும். ஆறுகளினால் உலகம் வாழும்.

ஆக, முருகப்பெருமானே வானாகவும், சூரியனாகவும், மழையாகவும், நிலமாகவும், காடாகவும், இன்னும் உலகம் வாழ வழி செய்யும் எல்லாமுமாக இருக்கின்றான். பூமியில் உள்ளோருக்கும் வானில் உள்ளோர்க்கும் அவனே அடைக்கலம் எனப் பாடலைத் தொடங்குகின்றார்.

(தொடரும்…)