திருமுருகாற்றுப்படை : 03

இருபத்தொன்று முதல் 40ம் வரி வரை

“செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்
துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு
உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண்டாது அப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
‘கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென்று ஏத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி”

இந்த வரிகளின் பொருள் இப்படி வரும்.

அந்த தேவமகளிரின் கூந்தலை அவர்களின் தோழியர்கள் மிக மிக அழகாக அலங்கரித்திருந்தனர். ஒரு பெண் தன் கூந்தலைத் தானே அலங்கரிக்க முடியாது என்பதால் தோழியர் உதவினார்கள். அது மிகுந்த அலங்காரமான கூந்தலாய் இருந்தது.

வெட்சி செடியில் பூத்த சிவந்த காம்பை உடைய மலர்களைக் கொய்து, அதனை நீரில் பூத்த அழகான குவளை மலர்களின் இதழ்களோடு நாரில் தொடுத்து, நெற்றி நடுவில் சிறிய வலம்புரி சங்கு (தேவலோக அடையாளம்) இருக்கும்படி அழகான மாலையாகத் தொடுத்து தலையில் சூடிக் கொண்டிருந்தனர். இந்த வலம்புரி சங்கும் வெட்சிப் பூக்களும் குவளை இதழ்களும் கலந்த கொடியானது நெற்றியினை மறைக்காமல், மணம் கமழும் கூந்தலை மறைக்காமல் நெற்றிக்கு அழகு சேர்த்தது.

உச்சிக்கொண்டையில் அழகான செண்பக மலர்களைச் சொருகியிருந்தார்கள். அது மகரப் பொன்வாய் எனக் காதில் அணிந்த அணிகலன் வரை நீண்டிருந்தது. கருமையான புற இதழையும் பிசிறுகளையும் கொண்ட மருதம்பூக் கொத்துக்களைச் சூடியிருந்தனர். சிறிய அரும்புகளை அசோகத் தளிர்களுடன் கட்டிக் காதோரம் சொருகியிருந்தனர்.

(அதாவது அப்பெண்கள் தங்கள் காதுகளில் இப்படி மலைமரத்துப் பூக்களையும், தளிர் எனும் குழைகளையும் அணிந்திருந்தனர், கொத்து என்றால் குழை என்றொரு பெயர் உண்டு.

இது அக்கால வழமையாய் இருந்தது. பின்னாளில் அணிகலன்கள் மாறினாலும் குழை காது எனும் பெயர் மட்டும் மாறவில்லை. அது இன்று வரை உண்டு.

அப்பெண்கள் மலர்க் கொத்தும் அசோக மரத் தளிருமாக காதில் அணிந்திருந்த குழைகள் பார்வைக்கு அழகும் இனிய மணமும் கொண்டதாய் இருந்தது. அந்த குழைகள் காதிலிருந்து மார்பு வரை நீண்டதாக தொங்கிக் கொண்டிருந்தன. சீரான அழகான அந்தக் குழைகள் அப்பெண்களுக்கு அழகு சேர்த்தன)

வைரம் பாய்ந்த உறுதியான சந்தனக் கட்டைகளை இழைத்து மார்பில் பூசியிருந்தார்கள் அப்பெண்கள். அது கோங்கம்பூவின் இளம்மொட்டுக்கள் மேல் மருதம்பூக்களின் மகரந்த தாது கொட்டி கிடந்ததுபோல் அழகாய் இருந்தது. அதனோடு வேங்கை பூக்களின் தாதுக்களும் அந்த மார்பின் மேல் பரவிக் கிடந்தது இன்னும் அழகைக் கூட்டிற்று.

இப்படி அழகான காட்சி கொண்ட தேவ மங்கையர்கள், வில்வ மரத் தளிர்களை ஒருவர் மேல் ஒருவர் வீசி விளையாடியபடி வரும் அந்த தேவ மங்கையர், கோழி அதாவது சேவல் கோழி தாங்கிய கொடியினை வாழ்த்தி, அந்த மலையெல்லாம் எதிரொலிக்கும்படி ஒரு சேர வாழ்த்தி வருகின்றனர்.

சேவல்கொடி முருகப்பெருமானுடையது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகனை இப்படி அழகும் ஒப்பனையும் செய்த பெண்கள் சேவல் கொடியோன் வாழ்க என அவன் கொடியினைப் போற்றி ஆடிப்பாடி வருகின்றார்கள் என்கின்றார் நக்கீரர்.

இங்கே ஒரு கேள்வி எழலாம். அது ஏன் இந்த பெண்களின் அலங்காரத்தை நக்கீரர் விவரித்துச் சொல்கின்றார் என்பது.

நக்கீரர் திருப்பரங்குன்ற மலையின் அழகினைச் சொல்கின்றார். வளத்தினைச் சொல்கின்றார். அதை தேவ மங்கையரின் குணத்தோடு பொருத்திச் சொல்கின்றார்.

பொதுவாக பெண்களுக்கு அலங்காரம் பிடிக்கும். அதுவும் கோவிலுக்குச் செல்லும்போது தலைவாரி பூச்சூடி அலங்காரமில்லாமல் இந்து பெண்கள் செல்வதில்லை. கோவில் அவர்களுக்கு மங்களகரமான இடம். அரசர்களின் அரசனான தெய்வம் வாழுமிடம்.

அதனால் விசேஷ வீடுகள், அரண்மனை, செல்வாக்கானவர்களைக் காண எப்படி அலங்காரமாக, மங்களகரமாகச் செல்வார்களோ, அப்படித்தான் கோவிலுக்கும் செல்வார்கள். இது இந்து மரபு.

அப்போது மகளிர் தங்களை அலங்கரித்தல் வழமை.

இந்தப் பெண்கள் தேவலோகப் பெண்களாயினும், முருகப்பெருமானை காண வரும்போது மிகுந்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் அலங்காரம் செய்கின்றார்கள்.

முருகப்பெருமான் யார்? அவன் சிவகுமரன், மால் மருகன், இந்திரனின் மருமகன், தேவலோக சேனாதிபதி, ஞானகுரு, கந்தன் எனும் அழகு ரூபம் என அவனுக்கு பெருமைகளும் சிறப்பும் அதிகம்.

அப்படியான பெரிய சிறப்புடையவனைக் காண அலங்காரமின்றி எப்படிச் செல்ல முடியும்? அதனால் அலங்கரிக்கின்றார்கள்.

அப்போது தேவலோகப் பொருட்களை, பூக்களை, மரங்களை விட்டு இந்த திருப்பரங்குன்றத்தின் குறிஞ்சி நில மலர்களை விரும்பிச் சூடுகின்றார்கள்.

அந்த குறிஞ்சி நிலத்தில் பூக்கும் பூக்களான வெட்சி, குவளை, செண்பக மலர், மருதமலர், வெங்கை மலர், சிவந்த அரும்பு மலர் என்றும் அசோகத் தளிர், வில்வத் தளிர் என்றும் மலைவாழ் மரங்களின் விவரங்களை விளக்கிச் சொல்கின்றார் நக்கீரர்.

அப்படியே குறிஞ்சி நிலத்தின் அடையாளமான சந்தன மரத்தையும் தவறாமல் சொல்கின்றார்.

அவர்கள் தேவலோகத்து கற்பகத் தருவின் மலர்கள், கொழுந்துகளை அணிந்து வராமல், வானலோக மரங்களின் தளிர்களை அணிந்து வராமல் திருப்பரங்குன்றத்து மலர்களை அணிந்து வந்திருப்பதாகச் சொல்வது நக்கீரர் மறைமுகமாகச் சொல்லும் சூட்சும விஷயம்.

குறிஞ்சி நிலத்தின் தலைவன் முருகன். அந்த மலையின் அழகுக்கும் செழுமைக்கும் அவனே காரணகர்த்தா. அதனால் அவன் அருளால் வாழும் மலையின் கொடிகள், மலர்கள், தளிர்கள், சந்தனம் எனப் பூசிகொண்டு அவன் பெருமையினைச் சொல்கின்றார்கள்.

இப்படியெல்லாம் அருளும் வளமும் கொண்ட இடத்தின் தலைவன் முருகன். அவனுக்கு ஈடு சொர்க்கத்திலுமில்லை, எந்த லோகத்திலுமில்லை.

நாங்கள் தேவ மங்கையர்கள். புனிதமானது அன்றி எதையும் தொடுவதில்லை. அப்படிபட்ட நாங்களே திருப்பரங்குன்ற மலர்களையும் தளிர்களையும் தொட்டுச் சூடுகின்றோம் என்றால் அவை எவ்வளவு புனிதமானவை?

அந்த முருகப்பெருமானின் எல்லையில் இருக்கும் எல்லாமே புனிதம். அங்கு மண், நீர், மலை, மலர், செடி, கொடி என எல்லாமே புனிதம். அந்த புனிதமானவற்றை, பரிசுத்தமானவற்றைச் சூடிக் கொள்கின்றோம் என பெருமையாய் சூடிக் கொள்கின்றார்கள்.

அந்தப் பெருமையுடன் அந்தப் புனிதமான அடையாளத்துடன், முருகப்பெருமானின் எல்லையில் அவன் அருளின் அதிசயங்களைச் சூடி நின்று அவன் பெருமையினை வாழ்த்துகின்றார்கள்.

ஒரு மன்னனை, மகா பராக்கிரமசாலியினை வாழ்த்தும்போது அவனின் அடையாளம், கொடி போன்றவற்றைச் சொல்லி வாழ்த்துதல் மரபு.

அப்படி இந்த தேவலோகப் பெண்களும் முருகப்பெருமானின் கொடியினை சேவல் கொடியினை வாழ்த்திப் பாடி ஆர்ப்பரித்துக் கொண்டே வருகின்றார்கள்.

முருகப்பெருமான் பெருவீரன். அந்த சேனாதிபதியின் கொடி சேவல் கொடி. அது எப்போதும் தர்மத்தை மீட்டுப் பறக்கும். யாரையும் நேருக்கு நேர் நின்று வென்று நிற்கும். முருகப்பெருமானின் சாட்சியாகப் பறக்கும் கொடியின் புகழை, பெருமையினைப் பாடித் துதித்தபடி வருகின்றார்கள்.

இப்படித் திருப்பரங்குன்ற மலையில் இருந்து முருகப்பெருமானைப் பாடித் துதிக்கும் தேவலோக மங்கையர் அலங்காரத்தையும் அதன் மூலம் திருப்பரங்குன்றத்தின் இயற்கை வளத்தையும், அதன் தலைவன் முருகப்பெருமானின் பெருமைகளையும் சொல்கின்றார் நக்கீரர்

No photo description available.