திருமுருகாற்றுப்படை 04
40 முதல் 60 வரிகள்
“சூரர மகளி ராடுஞ் சோலை
மந்தியு மறியா மான்பயி லடுக்கத்துச்
சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்
சூர்முத றடிந்த சுடரிலை நெடுவே
லுலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட்
டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள்
குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணந்தின் வாய டுணங்கை தூங்க”

திருப்பரங்குன்றத்தின் காட்சியினை விளக்கும் நக்கீரர், முதல் 40 வரிகளில் அம்மலைக்கு வரும் தேவலோக மகளிரின் அலங்கார அழகைச் சொல்லி முருகப்பெருமானின் பெருமைகளை பாடுகின்றார்.
அதை இங்கும் தொடர்கின்றார்.
“சூரர மகளி ராடுஞ் சோலை
மந்தியு மறியா மான்பயி லடுக்கத்துச்
சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்”
அதாவது அப்படி அலங்காரம் செய்த தேவலோக மங்கையர்கள் வந்து சோலையில் அலங்காரத்தோடு முருகன் பெயரைச் சொல்லி ஆடிப்பாடுகின்றார்கள்.
அந்த முருகன் எப்படியான மலர்களை அணிந்திருக்கின்றான் என்றால் குரங்குகள் கூட ஏறமுடியா மலை உச்சியில் பூத்திருப்பதும், வண்டுகள் கூட வாய் வைக்காத புத்தம் புதிய செங்காந்தள் மலர்களை சூடியிருக்கின்றான்.
அப்படியான சுத்தமான புதிய காந்தள் மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையினை,
அதாவது முருகப்பெருமான் பரிசுத்தமானவன், அவன் சூடியிருக்கும் பூக் கூட மாசு இல்லாதது என்பதைச் சொல்கின்றார் புலவர்.
இதுவரை அதாவது 45ம் வரி வரை முருகப்பெருமானின் அழகையும் அவரை போற்றிப்பாடும் தேவலோக மங்கையரையும் அந்த திருப்பரங்குன்ற மலை அழகையும் பாடும் நக்கீரர் இப்போது முருகப்பெருமானின் வேல் பெருமையினை பாடுகின்றார்.
பாடலின் முந்தைய வரிகளெல்லாம் அவரின் கை அழகு, முக அழகு, கால் அழகு என போற்றிப்பாடி, இனி அவரின் வேலின் பெருமையினை சொல்கின்றார் நக்கீரர்.
“பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்
சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேல்”
அந்த வேல் எப்படியானது என்றால் இலை வடிவில் ஒளிகொண்டது போல் கூர்மையானது, அது பாறைகள் நிரம்பிய குளிர்ச்சியான கடலில் பாய்ந்து சூரர்குல முதல்வனை பிளந்தவேல் என்கின்றார்.
சூரசம்ஹாரத்தில் முருகப்பெருமானின் வேல் செய்த சாகசத்தோடு தொடங்குகின்றார் நக்கீரர், அந்த சூரன் முருப்கபெருமானை வெல்லமுடியாமல் கடலில் புகுந்துகொண்டான், அது பாறைகள் பெருகிய கடல்; குளிர்ந்த கடல்.
முருகப்பெருமானின் வேல் அந்த கடலை கலக்கி பின் வற்றச் செய்து அந்த சூரனை பிளந்தது. அப்படியான வேலினை, இலைவடிவ கூரிய வேலினைக் கொண்டவர் முருகப்பெருமான் எனகின்றார்.
“உலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட்
டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள்”
இந்த வரிகளில் அந்த வேல் ஆடும் போர்க்கள் காட்சிபற்றி சொல்கின்றார் நக்கீரர், போர்க்கள காட்சிகளை சொல்வது ஒரு இலக்கிய வகை, பரணி போன்றவை அப்படியானது.
முருகப்பெருமானின் வேல் ஆடும் களம் எப்படியிருக்கும் என்பதை பேய்கள் ஆடும் ஆட்டத்தினை காட்டிச் சொல்கின்றார் நக்கீரர்.
முன்பு தேவமகளிர் அழகாக அகலங்கரித்து நயமாக ஆடுவதற்கு தலைகீழாக அலங்கோலமான தோற்றத்துடன் பெரும் அச்சுறுத்தும் விதமாக இந்தப் பேய்ப்பெண்கள் ஆடுவதைச் சொல்கின்றார்.
மிக அழகாக தேவலோக பெண்களை சொன்ன நக்கீரர் அப்படியே தலைகீழாக பேய்களை பற்றிச் சொல்கின்றார்.
களத்தில் விழும் உடல்களை பேய்கள் மிக ஆவேசமாய் உண்ணுமாம், அப்படி பேய்களுக்கான பலியினை களவேள்வி என்பார்கள். முருகப்பெருமான் அந்த வேள்வியினைச் செய்து இவற்றுக்கு பசி போக்குகின்றாராம்.
அந்தப் பேய்கள் எப்படியான தோற்றம் கொண்டவை என்பதை சொல்கின்றார் நக்கீரர்.
அந்த பேய்மகளின் தலை ஈரமில்லாமல் உலர்ந்த செடிபோல் பரட்டையாய் இருக்கும், அவளின் பற்கள் சீராக இல்லாமல் ஒன்றுக்கொன்று மாறுபட்டு திசைக்கொன்றாக முளைத்து எழுந்திருக்கும், அந்த கோரப்பல்லை கண்டாலே அச்சம் மேலிடும் .
அப்படி கொடிய பற்களை உடையவள் வாய் எப்படி இருக்கும் என்றால் அது பெரியதும் ஆழமானதுமாக இருக்கும், பெரிய யானையே விழுங்கும் அளவு பெரிய வாய் அது.
பிறண்டு போன பற்கள், ஆழமான பெரிய வாய் கொண்டிருக்கும் அவளின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். பார்ப்போரை அது அச்சுறுத்தும்.
அவள் காதில் அணிகலனாக கண்களை சுழற்றும் கோட்டான்களும், நஞ்சை கொப்பளிப்பும் பாம்புகளும் தொங்கிக் கொண்டிருக்கும். அதாவது காதில் குழைபோல் கோட்டான் கண்களை உருட்டியபடி தொங்கி கொண்டிருக்கும், அந்தக் கோட்டானை காதோடு இணைத்தபடி பாம்புகள் நீண்டு தொங்கும்.
அந்தப் பாம்புகள் அவள் மார்பு வரை நீண்டு அதன் மேல் ஆடும், அவளின் வயிறு பனைமரம் போல சொரசொரப்பானது. அப்படி காண்போர் அஞ்சத்தக்கும் வகையில் வருபவள் அந்த பேய்மகள்.
அடுத்த வரிகள் இப்படி வரும்.
“குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணந்தின் வாய டுணங்கை தூங்க””
அவள் எப்படி களத்தில் அச்சுறுத்துகின்றாள் என்றால், அசுரனின் தலை தனியே கிடப்பதை காண்கின்றாள். பனைமரத்து நுங்கினை மனிடர்கள் உண்பது போல் அதனை தன் கூரிய நகங்களை பதித்து உண்கின்றாள், அந்த தலையினை கையில் வைத்தபடியே நடக்கின்றாள்.
இதனால் அவள் கைகள் குருதியால் சிவக்கின்றன, இதுதான் தனக்கு மருதாணி என்பது போல் அவள் எண்ணிக் கொள்கின்றாள்.
இப்படிப்பட்ட அச்சுறுத்தும் கோலத்துடன் அவள் களத்தின் மாமிசத்தை புசித்தபடி தன் வயிறு நிறைந்த மகிழ்ச்சியில் முருகப்பெருமானை போற்றிப் பாடி துணுங்கு ஆட்டம் ஆடுகின்றாள்.
அதாவது அந்த இருளில் ஆடும் வெறிபிடித்த ஆட்டமான துணுக்கு ஆட்டம் ஆடித் தீர்க்கின்றாள்.
நக்கீரர் ஒரு அழகான உருவகத்தை இரு காட்சிகளாக சொல்கின்றார், முதலில் மிக அழகான தேவலோக மங்கையர் வானவரை காத்தவனும் இந்திரனின் மகளை மணந்தவனும் மகா சக்தி படைத்தவருமான முருகப்பெருமானை மிக்க அலங்காரதோடு வந்து அழகு ஜொலிக்க ஆடிப் பாடி புகழும் காட்சியினை சொல்கின்றார்.
அடுத்து களத்தில் கூளிகள் எனும் பிணம் உண்ணும் பேய்கள், முருகனால் அசுரர் உடலை உண்டு நிறைவு கொண்டு, அந்த முருகனின் பெருமையினை போற்றி புகழ்வதை சொல்கின்றார்.
இதனால் நக்கீரர் சொல்லவரும் தத்துவம் எளிதானது. முருகப்பெருமான் எல்லாம் கடந்த ஞான நிலையில் இருப்பவர். அவர் நன்மை தீமைக்கு அப்பாற்பட்ட ஞானவடிவ பெருவடிவம். ஞான ஜோதியாய் நின்று தனக்கு கீழ் எல்லாவற்றையும் சமமாக வைத்திருப்பவர். அற்புதமான சக்தி படைத்த பரம்பொருள் என்பதை சூட்சுமமாக சொல்கின்றார் நக்கீரர்.
முருகபெருமான் மயிலும் பாம்பும் கொண்டு நிற்பதை இப்படி தேவலோக பெண்கள் மற்றும் கூளி பேய்களை சொல்லி அழகாக உருவகபடுத்தி பாடலை தொடர்கின்றார் நக்கீரர்.
(தொடரும்..)