தேவி மஹாத்மியம் 01 / 13 : மதுகைடப வதம்

மார்க்கண்டேய மஹரிஷி கூறினார்

“எவர் சூரிய குமாரனோ, எவர் ஸாவர்ணி என்கிற எட்டாவது மனுவாக கூறப்பட்டுள்ளானோ, அந்த மனுவினுடைய சரிதத்தை விரிவாகச் சொல்கிறேன், கேட்பீராக. ஸாவர்ணி மனு, மஹாமாயையினுடைய கருணையால் அனைத்து மந்வந்த்ரங்களுக்கும் அதிபரானார்.

முன்பு ஸ்வாரோசிஷன் என்ற மனுவின் கால முடிவில் சைத்ர வம்சத்தில் உதித்த, ஸுரதன் என்னும் அரசன் இப்பூமண்டலம் முழுமைக்கும் தலைவனாயிருந்தான்.

நாட்டு மக்களை தன் குழந்தைகளைப் போல பாதுகாத்து ஆட்சி புரிந்து வந்த பொழுது கோலாவித்வம்சிகள் எனப்பட்ட க்ஷத்திரிய குல எதிரி மன்னர்கள், அவனை போரில் ஜெயித்தனர்.

வெற்றி கொள்ளப்பட்டதும் உத்தமரான ஸுரதன் தனது நாட்டிற்கு மட்டுமே அதிபராய் இருந்து வந்தான்.

வேட்டையாட தனித்து கானகத்துக்குச் சென்றான். அந்த கானகத்தில் ஸுமேதஸ் என்ற அந்தணர் ஆசிரமம், வேதம் ஓதும் சிஷ்யர்களாலும், சாந்தமாய் இருந்தது. மன்னன் அங்கேயே சில காலம் வசித்து வந்தான்.

அப்பொழுது ஸுரதன், கலங்கிய மனதோடு தன் நாட்டை பற்றிய நினைவிலிருந்தான். ஒருநாள், ஸமாதி எனும் வைசியனை அந்த ஆசிரமத்தருகில் கண்டு அவன் விசாரித்தான். அவனும் தன் குடும்பத்தால் துரத்திவிடப்பட்ட சோகத்தை சொன்னான்.

அடுத்து, ஸமாதி என்ற வைசியனும், ராஜா ஸுரதனும் சேர்ந்து அம் முனிவரிடம் சென்றனர். அரசன் சொன்னான், நாங்கள் இருவரும் குடும்பத்தால் விரட்டப்பட்டாலும், மனமும் சித்தமும் அவர்கள் பற்றியே சிந்தித்து, வேதனையடைவதன் காரணமென்ன?

மஹரிஷியே! விவேகமுள்ள எங்களுக்கு இந்த மயக்கம் எப்படி ஏற்பட்டது? நானும் இந்த வைசியனும் அறிவிலிகளாக இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

மஹரிஷி கூறினார். ஓ பாக்யவான்களே! மனிதர்கள் மஹாமாயா தேவியைனுடைய மகிமையால், நான் எனது என்ற அபிமானம் அடைந்து லௌகீக கார்யங்களிலேயே உழல்கின்றனர்.

மஹாமாயை எனப்படுகிற ஆனந்த வடிவான அந்த தேவியானவள், உலகநாதனாகிய ஸ்ரீ மஹாவிஷ்ணுவினுடைய யோக நித்திரையாகிறாள். அந்த மாயையே இந்த பூமியை மோகமடையும்படி செய்கிறாள். அதனால் நீ இவ்விஷயத்தில் வியப்பு அடையத் தேவையில்லை.

மேலும் பலவாறு மஹாமாயை பற்றி ரிஷி சொன்னார். அரசன் கேட்டான்.

மஹரிஷியே! இவ்விடத்தில் மஹாமாயை என்று தாங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? அவள் யார்? அவள் எப்படி தோன்றினாள்? அந்த தேவியினுடைய பணிதான் என்ன? அவள் மகிமை என்ன? அவள் ஸ்வரூபம் எப்படி இருக்கும்? அவள் எப்படி உண்டானாள்? இந்த விவரங்கள் கேட்க ஆவலாயிருக்கிறேன்.

மஹரிஷி சொன்னார். அந்த தேவி நிலையானவளாக இருப்பினும் தேவர்களின் பணியை நிறைவேற்றும் பொருட்டு எப்பொழுது அவதரிக்கிறாளோ அப்பொழுது முதல் இப்பிரபஞ்சத்தில் தோன்றினாள் என கூறப்படுகிறது.

பிரளய காலத்தில் உலகமே நீரில் மூழ்கியிருந்தபொழுது பகவானான ஸ்ரீ விஷ்ணுவானவர் பாம்பனையில் பள்ளி கொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயத்தில் அவரது காது அழுக்கிலிருந்து, மது, கைடபன் என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர் அந்த இருவரும் ப்ரம்மாவை கொல்ல முற்பட்டனர்.

அந்த நேரத்தில் ப்ரம்மா ஸ்ரீ விஷ்ணுவை துயில் எழுப்புவதற்காக அவரிந் கண்ணின் இமையில் வாசம் செய்பவளும், பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்து இருப்பவளும், உலகை காப்பாற்றுபவளும், இணையற்றவளுமும், ஒளிவடிவான ஸ்ரீ விஷ்ணுவின் யோக நித்திரை வடிவினளும், ஒப்பற்றவளுமான அந்த மஹாமாயையைத் துதிக்கலானார்.

ப்ரஹ்மத்தின் உருவாய் அழியாது நிலைத்திருக்கும் தேவியே! தேவகணங்களுக்கு திருப்தியை உண்டாக்கும், பித்ருக்களுக்கு திருப்தியை உண்டாக்கும் தேவி உருவோடும் அனைத்து கர்ம பல வடிவான ஸ்வர்கத்தை அடையும் வழியும் நீயேயல்லவா?

இந்த அகிலம் உன்னால் படைத்து, காத்து, அழிக்கப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் உன்னாலேயே இவ்வுலகம் தாங்கப்படுகிறது.

நீயே மஹாவித்யையாகவும், மஹா மாயையாகவும், மஹா புத்தியும், மஹா ஞானியும், மோஹ வடிவானவளும், தேவ சக்தியாகவும், அசுர சக்தியாகவும் இருக்கிறாய்.

ஓ அன்னையே! சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களையும் இயக்குபவளும், அனைத்துப் பொருட்களுக்கும் மூலாதாரமாக விளங்குபவளும் நீயே அல்லவா? பிரளய காலத்தின் இறுதியில் தோன்றும் காலராத்ரியின் உருவாகவும், மஹாராத்ரியின் தோற்றமாகவும், மோஹ ராத்ரியின் ரூபமாகவும் இருப்பவள் நீயே அல்லவோ!

அன்னையே! செல்வத்தின் வடிவான லட்சுமியும், ஈஸ்வரனின் துணைவியும், விஷ்ணுவும், ஸ்திரமான புத்தியும், மன அமைதியும், பொறுமையும், நாணமும், வளர்ச்சியும் சந்தோஷமும் நீயேயல்லவா?

பத்துக் கரங்களிலும் வாள், சூலம், சிரசு, கதை, சக்ரம், சங்கு, வில், பாணம், புஸுண்டி, பரிகம் என்ற ஆயுதங்களோடு இருப்பவளுமான அன்னையும் நீயேயல்லவா!

இவ்வுலகில் என்றும் எங்கும் ரூபமாயும், அரூபமாயுமுள்ள, அணுவளவு சிறிய பொருளிலும் உனது சக்தியன்றோ நிரம்பியிருக்கிறது. அப்படியிருக்கையில் உன்னை எவ்விதம் ஸ்தோத்தரிப்பேன்.

இவ்வாறு ப்ரம்மா தேவியின் பல பெருமைகளைக் கூறி மேலும் துதித்தார்.

உனது அற்புதத்தினால் ஜகந்நாதனாகிய அச்சுதனையும் விரைவில் விழிப்படைய செய்வாயாக! இப்பெரிய அரக்கர்களை சம்ஹரிக்கும் எண்ணத்தையும் தோற்றுவிப்பாயாக!

உறக்கத்தின் உருவாயுள்ள தாமஸீ தேவியானவள் மதுகைடபர்களை அழிப்பதற்கும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் துயிலெழுவதற்கும், அவரின் கண்கள், வாய், மூக்கு, கைகள், ஹ்ருதயம் ஆகிய இடங்களிலிருந்து வெளிப்பட்டு ப்ரஹ்ம தேவனின் முன் தோன்றினாள்.

உடன், ஸ்ரீ மஹாவிஷ்ணு உறக்கத்தை விட்டு எழுந்திருந்தார். அவர் மது கைடபர்களை நோக்கினார். பிறகு ஐயாயிரம் ஆண்டுகள் தன் கரங்களையே ஆயுதமாகக் கொண்டு அவர்களோடு போரிட்டார்.

அதிகளவு பலமிருக்கும் பெருமையின் காரணமாக ஏற்பட்ட செருக்கினால் அவ்விரு அசுரர்களும், மஹாமாயா தேவியால் அறிவு மயக்கப்பட்டு கேசவனை நோக்கி, ‘எங்களிடம் தேவையான வரத்தைக் கேளும்” என்றனர்.

ஸ்ரீ விஷ்ணு பகவான் கூறினார். “ இத்தருணத்தில் என்னால் மகிழ்ச்சி அடைந்த நீங்கள் இருவரும் என்னால் கொல்லப்பட வேண்டும். எனக்கு தேவைப்படுவது இது தான்.”

இவ்வாறு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவ்விருவரும் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருப்பதைப் பார்த்து, ஸ்ரீ விஷ்ணுவிடம் ஜலமே இல்லாத பூமியில் வைத்து எங்களை சம்ஹரிக்கலாம் என்று கூறினார்கள்.

சங்கு, சக்கரம், கதை இவைகளை ஏந்திக் கொண்டிருக்கிற பகவானும் “அப்படியே ஆகட்டும்” எனக் கூறிவிட்டு அவர்களுடைய சிரசுகளை தனது மடியின் மீது இருத்தி சக்கராயுதத்தால் சேதித்தார்.

இவ்வாறு மஹாமாயா தேவியானவள் ப்ரம்மாவினால் நன்கு ஸ்தோத்தரிக்கப்பட்டு தேவர்களுடைய காரியத்தின் நிமித்தம் தானாகவே தோன்றினாள். இந்த தேவீயினுடைய மஹாத்மியத்தை ஓ ஸுரதனே! மேலும் உனக்கு கூறுகிறேன். நீ கேட்பாயாக.”

இது மஹாமாயி எனும் அந்த ஆதிசக்தி தன்னை வெளிகாட்டும் தருணம் என மார்கண்டேய மஹரிஷியினால் சொல்லபடுகின்றது

ஸ்லோகத்தின் பொருளை கவனியுங்கள்

அந்த அரசனும் , வைஸ்யனும் நிம்மதி தேடி வருகின்றார்கள், தங்கள் மனம் ஏன் இப்படி மயங்கி கிடப்பதை

ரிஷியிடம் கேட்டு நிற்கின்றார்கள், ஏன் இப்படி அறிவு மயங்கி கிடக்கின்றோம் என பரிதாபமாக கேட்கின்றார்கள்

அவர்கள் தெளிவடைய அன்னையின் பெரும் ஆற்றல் ஒன்றுபற்றி சொல்கின்றார் முனிவர்

பிரளய காலத்து வெள்ளத்தில் விஷ்ணு தூக்கம் எனும் மயக்கத்தில் விழுகின்றார் மயங்கிய அவரிடம் இருந்து இரு அசுரர்கள் தோன்றி தொல்லைகொடுக்கின்றார்கள்

படைப்புக்கு அதிபதியான பிரம்மன் ஆதிபராசக்தியினை நோக்கி அழைக்க அவள் வந்து விஷ்ணுவினை விழிக்க வைத்து அந்த அசுரர்களை அழிக்கும் வழி சொல்கின்றாள்

அப்படியே அந்த பிரளய வெள்ளத்தில் இருந்து நிலம் மீட்கபடும் வகையினை சொல்லி, அவர்களை அழிய செய்து பிரம்மனின் படைப்புதொழில் பெருக வழி செய்கின்றாள்

இதுதான் சுருக்கமான பொருள், மது கைபடவன் எனும் அரக்கர்களை கொன்றதாலே அவன் மதுசூதனன்

இங்கே முனிவர் போதிக்கும் தத்துவம் என்னவென்றால் ஒரு மனிதன் மயக்கத்தில் வீழும்போது அவனிடமிருந்து அறியாமை பிறக்கின்றது

அறியாமையால் அவன் பெரும் துன்பங்களை சந்திக்கின்றான், அவன் அடையும் துன்பங்களுக்கெல்லாம் அறியாமை என ஒன்றே காரணமாகின்றது

இந்த அறியாமை சித்தம், புத்தி ஆகியவற்றில் இருந்து உருவாகி செயலில் பிரதிபலித்து பெரும் இன்னல் கொடுக்கின்றது

அன்னையினை வேண்டினால் அவள் இந்த அறியாமையினை வெல்லும் வழி தருவாள்

ஒருவகையில் இதெல்லாம் அன்னையின் விளையாட்டு, விஷ்ணுவினை உறங்க வைப்பதும் அவளே அவனை எழுப்புபவளும் அவளே

மதுகைடபவரை அறியாமையில் வரம்கேட்க சொல்பவள் அவளே, அப்படியே நிலம் உருவாக காரணமும் அவளே

இப்படி அவள் தன் மாயவிளையாட்டால் பிரளய காலத்தில் நீரில் மிதந்த இந்த உலகை மறுபடி இயங்க வைத்தாள்

பிரம்மன் அவளை வேண்டியதால் எதை இழந்தானோ, அதவாது படைப்புதொழில் நிலம் இல்லாமல் இழந்தானோ அதை மீளபெற்றான்

விஷ்ணு தன் சக்தியினை பெற்றான், அன்னையே இங்கு எல்லாவற்றையும் இயக்குகின்றாள் அவள் “மகாமாயி”

ஏ அரசனே, ஏ வைசியனேஅன்னை அப்படியானவள், இங்கு எல்லாமே அவள் இயக்கம் , இந்த உலகை இயக்குபவளே நம்மையும் இயக்குகின்றாள், அவளாலே இங்கு எல்லாமும் நடக்கின்றது

அவள் உங்களுக்கு அறியாமை கொடுத்து என்னை தேடிவர செய்தாள், அறியாமையினால் நீங்கள் மயங்கி கிடப்பதை பற்றி கேள்வி கேட்க வைத்தவளும அவளே

அதனால் தன் சக்தியினை உங்களை அறிந்துகொள்ள செய்தவளும் அவளே

அவளின் ஒவ்வொரு செயலும் அர்த்தமானவை, ஞானமானவை அவளின்றி இங்கு ஏதும் நடப்பதில்லை, அறிவு அறியாமை மாயை வெற்றி ஞானம் என எல்லாமும் அவளிடம் இருந்தே வருகின்றது

அவளே இடத்துக்கு தக்க ஒவ்வொரு குணத்திலும் தன்மையிலும் தன்னை வெளிபடுத்தி இந்த உலகை இயக்குகின்றாள், எல்லாமே அவள் செயல் , எல்லாமே நன்மையினை நோக்கி செல்லும் செயல்

எல்லோரையும் அவளே இயக்குகின்றாள் நன்மைக்காக இயக்குகின்றாள் உங்களையும் இங்கு அவளை பற்றி அறிந்துகொள்ளவே அறியாமை துயரில் தள்ளி அழைத்து வந்துள்ளாள் என சூசகமாக போதிக்கின்றார் முனிவர்

ஆம், அன்னையே எல்லாவற்றிலும் இருக்கும் மகமாயி, நன்மை தீமை அறியாமை அறிவு ஞானம் என எல்லாமும் அவளிடமிருந்தே வருகின்றன‌

அவள் மானிடரின் அறியாமை மூலம் தன்னை அறியசெய்கின்றாள், அவளை பணிந்து வேண்டினால் எல்லா ந்லமும் வளமும் கிட்டும், தனக்கு விருப்பமனோர் தன்னை தேட அறியாமையினை மாயையினை ஏவும் அவள், அவர்கள் தன்னிடம் வந்தபின் ஞானதெளிவு கொடுக்கின்றாள்

அந்த ஞானமே காளி , அந்த மாபெரும் சக்தியே மகா காளி எனும் “மகாமாயீ” என்பதே இந்த் காட்சியின் பொருளாகும்

இன்று சிந்திக்கவேண்டிய விஷயமும் அதுவே