தேவி மஹாத்மியம் : 05 / 13 – தேவி துதி (அபராஜித ஸ்துதி)

“முப்பத்து முக்கோடி தேவர்களால் சூழப்பட்டவளும், ஜயத்தை விரும்பும் பக்தர்களால் ஆராதிக்கப்பட்டவளும், தனது ஒளியால் மூவுலகங்களிலும் இருளை அகற்றுபவளும், தனது கடைக்கண் பார்வையால் எதிரிகளின் மனதில் அச்சத்தை உண்டாக்குபவளும், தீயனவற்றை தூசு போல சுட்டெரித்து ஒளிர்பவளும், கரங்களில் சங்கு, சக்கரம், வாள், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி, சிரசில் பிறைசந்திரனை சூடியவளும், மூன்று கண்களையுடையவளும், சிங்கத்தின் மீது அமர்ந்தவளுமான ஜயா என்ற பெயருடைய துர்க்கையை நான் தியானிக்கிறேன்”

வீரியம் மிக்கவனாயினும் துராத்மாவாகிய அம்மஹிஷாசுரனும் அவ்வசுரச்சேனையும் தேவியால் அழிக்கப்பட்ட பின் தேவேந்திரனும் தேவகணங்களும் வணக்கத்தால் வளைந்த கழுத்தும் தோளும் மகிழ்ச்சியால் புளகாங்கித மடைந்து அழகிய உடல்களுமுடையவர்களாய் அந்த தேவியைச் சொற்கொண்டு போற்றினார்கள்.

“எந்த தேவி தனது சக்தியால் இவ்வுலகை யெல்லாம் வியாபிக்கின்றாளோ, எல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில் ஒன்று கூடுகின்றனவோ, எல்லா தேவர்களாலும் மகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ அந்த அம்பிகையை நாங்கள் பக்தியுடன் வணங்குகின்றோம். அவள் நமக்கு நலன்களை அருளவேண்டும்.

எவளுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும் பலத்தையும் மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் சிவனும்கூட வர்ணிக்க இயலாதோ அந்தச் சண்டிகை அசுபத்தினாலேற்படும் பயத்தைப் போக்கி அகில உலகையும் பரிபாலிக்கத் திருவுளங் கொள்ளவேண்டும்.

புண்ணியவான்களுடைய வீடுகளில் ஸ்ரீதேவியாகவும், பாவிகளுடைய வீடுகளில் மூதேவியாகவும், திருந்திய மதியுடையவர்களின் உள்ளத்தில் புத்தியாகவும், நல்லோர்களிடம் சிரத்தையாகவும், நற்குலத்துதித்தோரிடம் வெட்கமாகவும் எவள் தானே விளங்குகின்றாளோ அவளேயாகிய உன்னை வணங்குகின்றோம். தேவியே, உலகனைத்தையும் காத்தருள வேண்டும்.

தேவியே! உனது நினைத்தற்கரிய வடிவையோ, அசுரர்களை அழிக்கும் அளவு கடந்த வீரியத்தையோ, எல்லா தேவகணங்களிடையும் அசுர கணங்களிடையும் நிகழ்ந்த போரில் உனது அற்புதச் செயல்களையோ எங்ஙனம் வர்ணிப்போம்?

உலகனைத்திற்கும் காரணம் நீ ; நீ முக்குண வடிவினளாயினும் குண தோஷங்களுடன் காணப்படுபவளல்ல. ஹரி ஹராதியர்க்கும் எட்டாதவள்; எல்லோருக்கும் புகலிடம்; இவ்வுலகெல்லாம் உன்னுடைய ஒரு அம்சத்தில் தோன்றியுளது; முதன்மையானதும் மாறுபடாததும் உயர்ந்ததுமான மூலப்பிரகிருதி நீ.

தேவி! எல்லா யாகங்களிலும் எந்த உச்சாரணத்தால் தேவர்களனைவரும் திருப்தியடைகின்றார்களோ அந்த ‘ஸ்வாஹா வடிவினளாய் நீயே விளங்குகின்றாய். பிதிருகணங்களின் திருப்திக்கும் காரணம் நீயே; ஆதலாலேயே ஜனங்களால் ‘ஸ்வதா’ எனவும் உச்சரிக்கப் பெறுகின்றாய்.

தேவி ! நீ பகவதி. முக்திக்கு வித்தானதும் நினைத்தற்கரியதுமான மகாவிரதமும், பரவித்தையும் எதுவோ அதுவும் நீ. இந்திரியங்களை யடக்கியவர்களும் தத்துவத்தின் ஸாரத்தைக் கைக்கொண்டவர்களும், மோக்ஷத்தில் நாட்டமுள்ளவர்களும், முழுவதும் மாசற்றவர்களுமான முனிவர்களால் (அப்பியாசம் செய்யப்படுகின்றனை) இடையறாது நாடப்படுகின்றனை.

நீ சப்தவடிவினள், பரிசுத்தமான ரிக் வேதத்திற்கும் யஜுர் வேதத்திற்கும் பாடுதற்கினிய பதங்களுடன் கூடிய உத்கீதத்தால் அழகுபெற்ற ஸாமவேதத்திற்கும் உறைவிடம் நீயே.

மூன்று வேத வடிவான தேவி நீ; நீயே உலகைப் போஷிக்கும் ஜீவனம்; உலகனைத்தின் துன்பத்தைப் போக்கும் பரதேவதை.

சாஸ்திரங்களனைத்தின் ஸாரத்தையுணரும் புத்தி வடிவினள் நீ. கடத்தற்கரிய பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் பற்றின்மை எனும் படகாகிய துர்க்காதேவி நீ. விஷ்ணுவின் இருதயத்தைத் தனியிடமாகக் கொண்டு விளங்கும் ஸ்ரீதேவி நீ. சந்திரமௌலியிடம் பிரியாதுறையும் கௌரியும் நீயே.

பரிசுத்தமான புன்முறுவலுடன் பரிபூரண சந்திர பிம்பம் போலும் மாசற்ற பொன்போலும் ஒளி வீசிய உனது திருமுகம் காணப்பட்டபோது கோபத்தின் வசமான மஹிஷாசுரனால் விரைவில் அது தாக்கப்பட்டது வெகு ஆச்சரியம்

தேவி! உதயத்தில் சிவந்த சந்திரன் போலவும் கோபத்தால் புருவம் நெரிந்து கடுமையாகவும் விளங்கிய உனது முகத்தைக் கண்டதும் மஹிஷாசுரன் உடனே பிராணனை இழக்காததும் மிக்க விசித்திரமே. கோபங்கொண்ட யமனைக் கண்ட பின்னும் எவரால் ஜீவிக்க முடியும்?

தேவி! அருள் புரிய வேண்டும். உன்னை மீறியவர் எவருமில்லை. நீ கோபங்கொண்டால் (உலகின்) நன்மைக்காக (அசுரர்) குலங்களை அப்போதே அழிக்கின்றாய். மஹிஷாசுரனுடைய பரந்த சேனை நாசமாக்கப்பட்டபோதே அது நன்கு உணரப்பட்டதாயிற்று.

எப்போதும் உயர்வற உயர் நலமளிக்கும் நீ எவர்களிடம் பிரீதியடைகின்றாயோ அவர்களே ஜன ஸமூகத்தில் ஸம்மானம் பெறுகின்றார்கள். அவர்களுக்கே செல்வமும், அவர்களுக்கே புகழும் (உரித்தாகின்றன). அவர்களுடைய தர்மவர்க்கம் குறைவு படுவதில்லை. மனைவிமாரும் மக்களும் பணியாட்களும் நிறைந்து அவர்கள் செல்வவான்களாய் விளங்குவர்.

தேவி! உனதருளால் நல்வாழ்க்கை எய்தியவன் மிகுந்த ஆதரவுடன் நாள்தோறும் இடைவிடாது தருமகாரியங்களை யெல்லாம் செய்கிறான், பிறகு சுவர்க்கத்தையடையகிறான். ஆகையால் முவ்வுலகிலும் பயனையளிப்பவள் நீயே அன்றோ?

கடத்தற்கரிய கஷ்டத்தில் நினைக்கப்பட்டால் நீ எல்லா ஜீவர்களுடைய பயத்தைபும் போக்குகிறாய். இன்பத்தில் நினைக்கப்பட்டால் நலன் மிக்க மதியை அளிக்கின்றாய். ஏழ்மையையும், துன்பத்தையும், பயத்தையும் போக்குபவளே! எல்லோருக்கும் உபகாரம் செய்ய எப்போதும் உருகும் நெஞ்சுடையவர் உன்னைத் தவிர யார் உளர்?

தேவி! (கொடியோராகிய) இவர்கள் கொல்லப்பட்டதால் உலகம் இன்பம் எய்துகின்றது. ‘நரகத்தில் நித்திய வாசம் செய்யக்கூடிய பிரபலமான பாவத்தை இவர்கள் செய்தாலும் செய்யட்டும்! அதனால் போரில் (என்னிடம்) உயிர் துறந்து தேவலோகம் செல்லட்டும்!” என்று எண்ணியே நிச்சயமாக நீ எதிரிகளைக் கொல்கின்றாய் போலும்.

அசுரர்களை யெல்லாம் பார்த்த மாத்திரத்தாலேயே நீ பஸ்மமாக்க முடியாதா? எனினும் எதிரிகள்மேல் ஆயுதங்களைப் பிரயோகிப்பதால் “இவர்கள் சத்துருக்களாயினும் (எனது) ஆயுதங்களால் புனிதமாகி நல்லுலகங்களை அடையட்டும்” என்பதே அவர்களிடமும் மிகுந்த கருணைவாய்ந்த உனது எண்ணமாயிருக்கவேண்டும்.

உனது வாளினின்று போந்த ஒளிக்கற்றையின் மின்னலாலும், சூலத்தின் முனையின்றும் போந்த காந்தியின் பெருக்காலும் அசுரர்களின் கண்கள் அவியவில்லை என்றால் அது அவர்கள் குளிர்ந்த கிரணங்களுடன் கூடிய சந்திரபிம்பம் போன்ற உனது திருமுகமண்டலத்தைக் காணப்பெற்றதால் தான்.

தேவி! கெட்டவர்களின் போக்கை அடக்குவது உனது இயற்கை. உனது உவமையற்ற இவ்வடிவழகு பிறரால் சிந்தித்தற்கரிது. தேவர்களின் பராக்கிரமத்தையபகரித்தவர்களை யழிப்பது உனது வீரியம். இதனால் (இப்போரால்) சத்துருக்களிடமும் உனது தயை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த உனது பராக்கிரமத்திற்கு எதை உவமை கூற இயலும்? (அடியார்களை) வசீகரிப்பதாயினும் சத்துருக்கள் மனத்தில் பயத்தை யுண்டாக்கும் இந்த வடிவழகு எங்குண்டு? வரமளிக்குந் தேவி ! சித்தத்தில் (இப்பேர்க்கொத்த) கிருபையும் யுத்தத்தில் கண்டிப்பும் முவ்வுலகிலும் உன்னிடமே காணப்பட்டது.

சத்துரு நாசத்தால் இம் மூவுலகு முழுதும் உன்னால் காக்கப்பட்டது. போர் முனையில் அச்சத்துரு கணங்கள் கொல்லப்பட்டு வானுலக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மதம் பிடித்த தேவசத்துருக்களிடமிருந்து தோன்றிய எங்கள் பயமும் போக்கப்பட்டது. உனக்கு நமஸ்காரம்.

தேவி! சூலத்தால் எங்களைக் காப்பாற்று. அம்பிகே! வாளாலும் காப்பாற்று. மணியோசையாலும் எங்களைக் காப்பாற்று. வில்லின் நாணொலியாலும் காப்பாற்று.

சண்டிகையே ! கிழக்கிலும் காப்பாய், மேற்கிலும் காப்பாய். ஈசுவரி ! அங்ஙனமே உனது சூலத்தைச் சுழற்றித் தெற்கிலும் வடக்கிலும் காப்பாய்.

முவ்வுலகிலும் சஞ்சரிக்கும் உனது அழகிய வடிவங்கள் எவையோ அவற்றாலும், அளவு கடந்த கோரமான வடிவங்கள் எவையோ அவற்றாலும் இப்பூவுலகையும் எங்களையும் காத்தருள்வாய்.

அம்பிகே! வாள், சூலம், கதை முதலிய ஆயுதங்கள் எவை உனது தளிர் போன்ற கரங்களில் ஏந்தப் பெறுகின்றனவோ அவற்றால் எத்திக்கிலும் எங்களைக் காப்பாய்.’

இங்ஙனம் தேவர்களால் துதிக்கப்பெற்றும், தேவலோக நந்தவனத்தில் புஷ்பித்த மலர்களால் அர்ச்சிக்கப் பெற்றும், வாசனைத் திரவியங்களால் பூசப்பெற்றும், திவ்ய தூபங்களால் தேவர்களனைவராலும் ஆராதிக்கப்பெற்றும், அருள் சுரந்த ஜகத்தாத்ரி தன்னை வணங்கி நின்ற தேவர்களனை வரையும் நோக்கிப் பின்வருமாறு கூறினாள்.

“தேவ கணங்களே ! உங்களுக்கு எது விருப்பமோ அதை வரமாக என்னிடம் கேட்கலாம்”

தேவர்கள் கேட்டார்கள்

“எங்கள் சத்துருவான மஹிஷாசுரன் கொல்லப் பட்டதால் வேண்டிய தெல்லாம் பகவதியால் செய்தாகிவிட்டது; இனி வேண்டுவதொன்றுமில்லை. இன்னும் உன்னால் எங்களுக்கு கொடுக்கத்தக்க வரம் உண்டெனில் (அது இதுவே).

நாங்கள் நினைக்குந்தோறும் எங்களுக்கேற்படும் பெரிய விபத்துக்களை நீ நாசம் செய்தல் வேண்டும். மாசற்ற வதனம் படைத்தவளே! எந்த மனிதனாயினும் இந்த ஸ்தோத்திரங்களால் உன்னைத் துதித்தால், அம்பிகே! எங்களிடம் அருள் சுரந்த நீ அவனுக்கும் எப்போதும் குறைவற்ற செல்வமும், பெருமையும், கோதனம் முதலியனவும், நல்ல ஸ்திரீகளும், ஸம்பத்தும் வளர அருள் புரியவேண்டும்.

உலகின் நன்மைக்காகவும் தேவர்களால் போற்றப்பட்ட பத்ர காளி அன்னை பதிலுரைத்தாள்

‘அங்ஙனமே ஆகுக” என்று கூறி மறைந்தருளினாள்.