தேவி மஹாத்மியம் : 08 / 13 – சண்ட முண்ட வதம்

த்யானம் – தேவி துதி

“சிரசில் பிறை சந்திரனை சூடியவளும், நெற்றியில் கலை நுட்பத்துடன் கூடிய திலகம் அணிந்தவளும் மென்மையான மதத்துடன் கூடிய புன்சிரிப்பு தவழும் அழகிய முகம் உடையவளும், உடலோடு ஒட்டிய சிவந்த நிற பட்டாடை, ஆம்பல் பூமாலை தரித்தவளும், கையில் சங்கு பாத்திரத்துடன், தாமரையின் மீது காலை பதித்தபடி கிளிகளின் இனிய மொழியை கேட்டவாறே கைகளால் வீணையை வாசித்துக் கொண்டு, நவரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அம்ருதமயமான ராஜமாதங்கியை நான் த்யானிக்கிறேன்.”

அங்ஙனம் கட்டளையிடப்பட்ட சண்டமுண்டர்கள் முன் செல்லச் சதுரங்க சேனைகளுடன் ஆயுதபாணிகளாய் அசுரர்கள் புறப்பட்டனர்.

மலையரசின் பொன்மயமான பெரிய சிகரத்தில் சிங்கத்தின் மேல் புன்முறுவலுடன் வீற்றிருந்த தேவியை அவர்கள் கண்டனர்.

அவளைக்கண்டு அவர்கள் பரபரப்புடன் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர். வில்லை வளைத்துக் கொண்டும், வாளை உருவிக் கொண்டும் மற்றும் சிலர் அவளை நெருங்கினர்.

அப்போது அம்பிகை அவ்வெதிரிகளை நோக்கிக் கோபத்தின் உச்சநிலையடைந்தாள். கோபத்தால் அவளுடைய முகம் அப்போது மைவண்ணமாயிற்று.

புருவ நெரிப்புடன் கூடிய அவளுடைய நெற்றித் தலத்திலிருந்து விரைவில் பயங்கரமான முகமுடைய காளியானவள் கத்தியும் பாசமும் கைக்கொண்டு வெளிப் போந்தாள்.

விசித்திரமான கட்வாங்கத்தை ஏந்திக்கொண்டு நர மாலையை பூஷணமாயணிந்து, வரிப்புலியின் தோலை ஆடையாய்க்கொண்டு, உடலில் மாம்ஸம் உலர்ந்து மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் நின்றாள்

நாக்குச் சுழல்வதால் பயங்கரமாயிருக்கும் அகன்ற வாயுடன், குழிந்தும் சிவந்ததுமான கண்களுடன், தனது கர்ஜனையால் திக்கு முதலியவைகளை நிரப்புபவளாய் நின்றாள்

அந்த தேவசத்துருக்களின் சைனியத்தில் அவள் வேகமாய்ப் புகுந்து வலிமிக்க அசுரர்களைக் கொன்று அந்தச் சேனையைப் பக்ஷித்தாள்.

யானைப்படையின் பின்புறமிருந்தவர், யானைப்பாகர்கள், போர் வீரர்கள் மணிகள் எல்லாவற்றுடனும் யானைகளை ஒரே கையால் வாரி விழுங்கினாள்.

அவ்வாறே குதிரைப்படைகளையும் குதிரைகள், தேர், ஸாரதிகளுடன் வாயில் போட்டுக்கொண்டு மிகவும் பயங்கரமாகப் பற்களால் மென்றாள்.

ஒருவனைக் கேசத்தால் பிடித்தாள்; மற்றொருவனைக் கழுத்தால் பிடித்தாள்; இன்னொருவனைக் காலால் மிதித்து வதைத்தாள்; மற்றும் ஒருவனை உரத்தால் உந்தி வீழ்த்தினாள்.

அவ்வசுரர்களால் விடப்பட்ட சஸ்திரங்களையும் மகா அஸ்திரங்களையும் தன் வாயில் வாங்கிக்கொண்டு கோபத்துடன் மென்றாள்.

வலியவர்களும் கொடியவர்களுமான அவ்வசுரர்களின் சேனை முழுவதையும், சிலவற்றை அடித்து வீழ்த்தியும் சிலவற்றை எடுத்து விழுங்கியும் அவள் அழித்தாள்.

சிலர் வாளால் கொல்லப்பட்டனர்; சிலர் கட்வாங்கத்தால் தாக்கி வீழ்த்தப்பட்டனர்; பற்களின் நுனிகளில் அரைக்கப்பட்டு அவ்வாறே அசுரர்கள் நாசமடைந்தனர்.

அசுரர்களின் அச்சேனை முழுதும் ஒரு கணத்தில் வீழ்த்தப்பட்டதைக் கண்டு சண்டன் மிகவும் பயங்கர வடிவு கொண்ட அக்காளி தேவியை நோக்கி ஓடினான்.

அம்மகாசுரன் பயங்கரமான பார்வையுடைய அந்த தேவியை மிக்க பயங்கரமான அம்புகளைப் பொழிந்து மறைத்தான். முண்டன் ஆயிரக்கணக்கான சக்கரங்களை எய்தான்

அநேக சக்கரங்கள் அவள் வாயில் புகுந்தது பல சூரிய பிம்பங்கள் மேகத்தினிடை புகுந்தாற்போலிருந்தது.

அப்போது காளி பயங்கரமாய் கர்ஜித்துக்கொண்டு, மிகுந்த கோபத்துடன் பயங்கரமான வாயினுள் பார்க்கக் கூசும்படி ஜ்வலிக்கும் பற்களுடன் பயங்கரமாய்ச் சிரித்தாள்.

தேவியானவள் பெருமை மிக்க சிங்கத்தின் மீது ஏறிக் கொண்டு சண்டன்மேல் பாய்ந்தாள். அவனைக் கேசத்தால் பிடித்து அவன் தலையைத் தன் வாளால் சேதித்தாள்.

சண்டன் விழுந்ததைக் கண்டு முண்டன் அவள்மேல் பாய்ந்தான். அவள் கோபத்துடன் அவனையும் வாளால் வெட்டி பூமியில் வீழ்த்தினாள்.

கொன்றது போக எஞ்சிய சைனியம் சண்டனும் மகா வீரியவானான முண்டனும் வீழ்த்தப்பட்டதைக் கண்ணுற்று பயத்தால் நடுங்கி நாற்றிசைகளிலும் ஓடிற்று.

காளியோ சண்டனுடைய சிரத்தையும், முண்டனுடைய முண்டத்தையும் எடுத்துக்கொண்டு சண்டிகையிடம் உரத்த அட்டஹாஸத்துடன் கலந்த வார்த்தைகளைக் கூறினாள்.

“இந்த யுத்தமாகிய யாகத்தில் சண்ட முண்டர்களாகிய பெரிய பிராணிகள் இரண்டும் என்னால் ( இதோ உன்னிடம் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன, இனி நீயே சும்பனையும் நிசும்பனையும் கொல்லப் போகிறாய்”

அசுர வீரர்களான சண்ட முண்டர்கள் அவ்வாறு கொண்டு வரப்பட்டதைக் கண்ணுற்றுச் சண்டிகையானவள் காளியை நோக்கி “தேவி ! சண்டனையும் முண்டனையும் நீ எடுத்துக்கொண்டு வந்ததால் நீ சாமுண்டா என உலகில் பிரசித்தி அடையப் போகின்றாய்” என மதுர மொழியில் கூறினாள்.