தேவி மஹாமித்யம் : 07 / 13 – தூம்ரலோசன வதம்

த்யானம் –

“நாகங்களின் தலைவனான நாகராஜனை குடையாகக் கொண்டவளும், தனது கொடி போன்ற மேனியில் விலைமதிப்பற்ற நாகரத்தினங்களாலான நாகாபரணங்களை அணிந்தவளும், சூரிய கதிர்களை போல் ஒளிரும் முக்கண்களை உடையவளும், ஜெபமாலை, அமிர்த கலசம், கபாலம் மற்றும் தாமரையைக் கைகளில் ஏந்தியவளும், தலையில் பிறை சந்திரனை சூடியவளும், தர்பையை ஆசனமாக கொண்ட பைரவரின் மடியில் அமர்ந்து காட்சியளிப்பவளுமான பத்மாவதி தாயை நான் தியானிக்கிறேன்”

தேவி சும்பனுக்கு கூறிய பதிலை தூதன் சென்று தெரிவித்தான், தேவி தங்களை போருக்கு அழைத்தது கண்டு அசுரனின் அவை கொந்தளித்தது.

அந்த தூதனுடைய அவ்வார்த்தையை அசுரராஜன் செவியுற்றுப் பின்னர் கோபங்கொண்டு சேனாதிபதியாகிய தூம்ரலோசனனிடம் பின் வருமாறு கூறினான்.

“தூம்ரலோசனா! உனது சைனியம் புடைசூழ நீ விரைந்து அந்த துஷ்டையைக் கேசத்தைப் பற்றியிழுத்து விலவிலக்கும்படி பலாத்காரமாய் இங்கு கொண்டுவா.

வேறு யாராவது அமரனோ, யக்ஷனோ, கந்தர்வனோ, எவனாயினும் சரி, அவளைக் காப்பவனாக நிற்பானெனின், அவன் கொல்லப்படவேண்டும்.

அந்த அசுரன் தூம்ரலோசனன் இங்ஙனம் அவனால் கட்டளையிடப்பட்டபின் அறுபதினாயிரம் அசுரர்கள் புடை சூழ விரைவில் சென்றான்.

பனிமலைமேல் வீற்றிருந்த அந்த தேவியை அவன் பார்த்து உரக்க சொன்னான்

“சும்ப நிசும்பர்கள் முன்வந்து நிற்குமாறு உடனே புறப்படு நீ வரமாவிட்டால் , எனது யஜமானனிடம் நீ பிரீதியாக இப்போது சென்றடையாவிட்டால், பின்னர் கேசத்தைப்பற்றி யிழுத்து விலவிலக்க உன்னை பலாத்காரமாய்க் கொண்டு செல்வேன்”

தேவி கூறினாள் “நீ தைத்ய ராஜனால் அனுப்பப்பட்டவன், பலவான், சைனியத்தால் சூழப்பட்டிருக்கின்றாய். பலாத்காரமாக என்னை இப்படியே, கொண்டுபோகப் போகிறாய். அப்படியிருக்க உனக்கு நான் என்ன செய்ய முடியும்?

இங்ஙனம் கூறப்பட்ட அவ்வசுரன் தூம்ரலோசனன் அவளை நோக்கிப் பாய்ந்தான். அப்போது அம்பிகை அவனை ஹுங்காரத்தால் சாம்பலாக்கினாள்.

அதன்பின் கோபத்தால் மூண்டெழுந்த அசுரர்களின் பெருஞ்சைனியம் அம்பிகையின் மேல் கூரிய அம்புகளையும், ஈட்டிகளையும், கட்டாரிகளையும் பொழிந்தது.

பின்னர், தேவிக்கே சொந்த வாகனமாகிய சிங்கம் கோபத்தால் பிடரியைச் சிலிர்த்துக்கொண்டும் பயங்கரமாய்க் கர்ஜித்துக் கொண்டும் அசுர சேனையின் மேல் பாய்ந்தது.

சில அசுரர்களை முன்னங்காலால் அறைந்தும், சிலரை வாயால் (கவ்வியும்), பிறரைப் பின் கால்களால் மிதித்தும் வலிமிக்க அசுரர்களைக் கொன்று முடித்தது.

அச்சிங்கம் சிலருடைய வயிற்றை நகங்களால் கிழித்தது; அவ்வாறே முன்னங்காலால் அறைந்து சிரங்களைத் துணித்து வீழ்த்தியது.

இன்னும் சிலர் அவ்வாறே அச்சிங்கத்தால் தோள்களும் சிரங்களும் இழந்தவர்களாக்கப்பட்டனர். வேறு சிலருடைய வயிற்றினின்று பெருகிய ரத்தத்தைப் பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு அது குடித்தது.

ஒரு கணத்தில் அந்தச் சேனை முழுவதும் கடுங்கோபங்கொண்ட தேவியின் வாகனமும் மகாத்மாவுமான அந்தச் சிங்கத்தால் நாசமாக்கப்பட்டது.

தூம்ரலோசனாசுரன் தேவியினால் கொல்லப்பட்டான் என்றும் சேனை முழுவதும் தேவியின் சிங்கத்தால் அழிக்கப்பட்டதென்றும் கேள்வியுற்று, அசுரராஜனான சும்பன் கோபங்கொண்டு உதடு துடிக்கச் சண்டன் முண்டன் என்ற அசுர சிரேஷ்டர்களை அழைத்துப் பின்வருமாறு கட்டளை யிட்டான்.

“சண்டா ! முண்டா ! பலவகைச் சேனைகள் புடை சூழ அங்கு செல்லுங்கள். சென்று விரைவில் அவளைக் கொண்டுவர வேண்டும்.

கேசத்தைப்பற்றியிழுத்தோ, கட்டியோ (கொண்டு வாருங்கள்). அதில் ஏதாவது ஸம்சயம் ஏற்பட்டால் யுத்தத்தில் எல்லா ஆயுதங்களைக்கொண்டு எல்லா அசுரர்களாலும் அவள் கொல்லப்படலாம்.

அந்த துஷ்டை வீழ்த்தப்பட்டுச் சிங்கமும் வீழ்த்தப்பட்டபின் விரைவில் திரும்பி வாருங்கள். அல்லது கூடுமானால் அம்பிகையைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்.”