தேவி மாஹாத்மியம் : 02 / 13 – ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகி

“தேவி மாஹாத்மியம்” நூலிலிருந்து சாரமான ஏழு ஸ்லோகங்களை எடுத்து “ஶ்ரீ துர்கா ஸப்தஶ்லோகீ ” என வகுத்துள்ளார்கள்.

ஆம், ஸ்ரீ தேவி மாஹாத்மியத்தில் இருக்கும் எழுநூறு ஸ்லோகங்களின் சாரமே, ‘ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகி”. இதை பாராயணம் செய்தால், ஸ்ரீ தேவிமாஹாத்மியம் பாராயணம் செய்த முழுப் பலனும் அடையலாம்.

அதுவும் அன்னைக்கு உகந்த நவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். தன்னை ஜபம் செய்வோர்க்கு, ஸ்ரீ துர்க்கா ஸப்த ச்லோகீ விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் தள்ளுவதற்கும் அன்னையின் அருளைப் பெற்றுத் தரும்.

வாசித்து தொழுதால் நிச்சயம் பலன் உண்டு. தேவி மஹாத்மியம் எனும் முழு நூலை படிப்பதும் இந்த சுருக்கத்தை படிப்பதும் ஒன்றே

இதோ அந்த ஸ்லோகம்

“ஓம் அஸ்ய ஶ்ரீ துர்கா ஸப்தஶ்லோகீ ஸ்தோத்ரமந்த்ரஸ்ய நாராயண ருஷி꞉, அனுஷ்டுப் சந்த꞉, ஶ்ரீ மஹாகாளீ மஹாலக்ஷ்மீ மஹாஸரஸ்வத்யோ தேவதா꞉, ஶ்ரீ துர்கா ப்ரீத்யர்தம் ஸப்தஶ்லோகீ துர்காபாடே வினியோக꞉

ஓம் ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா |

பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி

துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிம்-அஶேஷ ஜந்தோ꞉

ஸ்வஸ்தை꞉ ஸ்ம்ருதா மதிம்-அதீவ ஶுபாம் ததாஸி |

தாரித்ர்ய-து꞉க பய-ஹாரிணி கா த்வத்-அன்யா

ஸர்வோ உபகார கரணாய ஸதா-ஆர்த்ர சித்தா

ஸர்வ மங்கள மாங்கள்யே ஶிவே ஸர்வார்த ஸாதிகே |

ஶரண்யே த்ர்யம்பகே கௌரீ நாராயணீ நமோ(அ)ஸ்து தே

ஶரணாகத தீனார்த பரித்ராண பராயணே |

ஸர்வஸ்ய ஆர்தி-ஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே

ஸர்வ-ஸ்வரூபே ஸர்வேஶே ஸர்வ-ஶக்தி-ஸமன்விதே |

பயேப்யஸ்-த்ராஹி நோ தேவி துர்கே தேவி நமோ(அ)ஸ்து தே

ரோகான-அசேஷான்-அபஹம்ஸி துஷ்டா-ருஷ்டா து காமான் சகலான்-அபீஷ்டான் |

த்வாம்-ஆஶ்ரிதானாம் ந விபன்-னராணாம் த்வாம்-ஆஶ்ரிதா-ஹ்யாஶ்ரய-தாம் ப்ரயாந்தி

ஸர்வ-பாதா-ப்ரஶமனம் த்ரை-லோக்யஸ்ய-அகிலேஶ்வரி |

ஏவமேவ த்வயா கார்யம்-அஸ்மத்-வைரி வினாஶனம்

இதன் தமிழாக்கம் இதோ :

“மகாமாயையான பகவதி தேவி ஞானியரின் சித்தங்களையும் பலவந்தமாக தன் மாயா சக்தியால் இழுத்து மோகத்தில் செலுத்துகிறாள்.

துர்கே! உனை நினைத்த மாத்திரத்தில் எல்லா உயிரினங்களின் பயத்தையும் போக்குகின்றாய். இன்ப நிலையில் இருந்து கொண்டு ஸ்மரிக்கப்பட்டால் பரம மங்களமான நல்லறிவை நல்குகிறாய். வறுமை, துன்பம், பயம் ஆகியவற்றை நீக்குபவளே! ஸகலருக்கும் ஸர்வ உபகாரங்களையும் செய்வதற்காக சதாகாலமும் காத்திருக்கும், கருணையால் நிரம்பிய நெஞ்சுடையவர் உனையன்றி எவர் உண்டு?

மங்கள வஸ்துக்கள் அனைத்தினும் பரமமங்களமானவளே! மங்களமே வடிவான சிவனின் சக்தியே! சகல புருஷார்த்தங்களையும் சாதித்துத் தருபவளே! சரணாகத நிலையமே! முக்கண் படைத்த த்ரயம்பகியே! வெண்பொற் சோதியாம் கௌரி!! மனிதருக்கெல்லாம் அடைக்கலமாம் நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

‘சரண்’ என வந்த பலவீனரையும் துன்புற்றோரையும் மிக அருமையாகக் காப்பதையே தொழிலாகக் கொண்ட தேவி! அனைவரின் துன்பங்களையும் நீக்கும் நாராயணி! உனக்கு நமஸ்காரம்.

காணும் உருவனைத்தும் நீயே! அனைத்தையும் ஆளும் தேவி நீயே! சர்வ‌ சக்தியும் ஒன்றிய இடம் நீயே! தேவி துர்கே! உனக்கு வந்தனம்! எங்களை அச்சங்களினின்று ரட்சித்தருள்வாய்.!

(பக்தியினால்) நீ திருப்தியடைந்தால், சகல ரோகங்களையும் அறவே அகற்றுகிறாய். கோரும் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி அருள்கிறாய். உனை அரண் போல பாதுகாப்பாகக் கொண்ட மனிதருக்கு இடர் என்பதே இல்லை. அவர்களே பிறருக்கு காவலாகின்றனர் அன்றோ ?

அகிலாண்டேசுவரி! உன்னால் எமது பகைவர்கள் அழிக்கப் பெற வேண்டும். இவ்வாறே மூவுலகிலும் உள்ளவர்களின் சகல துன்பங்களையும் நீ அடியோடு அகற்றி அருள வேண்டும்.”

துர்கா பூஜையின் மூன்றாம் நாளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி அதன் தமிழாக்கத்தை தியானித்து அன்னையினை வணங்குதல் நல்ல பலன்களை தரும்

இன்றைய நாளினை இந்த வழிபாட்டு துதியுடன் முடிப்பது சால சிறந்தது