தேவி மாஹாத்மியம் : 09 / 13 – ரக்த பீஜ வதம்

த்யானம் – தேவி துதி

“செந்நிற மேனி கொண்டு அலை அலையாய் கருணை பொழியும் ப்ரகாசத்துடன் கூடிய மிக அழகான கண்களைக்கொண்டு, கையில் பாசம், அங்குசம், வில், மலர் அம்புகளை ஏந்தி, தன் கிரணங்களாலேயே அனைவரையும் கவர்ந்து, அனிமா, மகிமா போன்ற அஷ்டமா ஸித்திகளை தன்னுள் நிறுத்தி என்னுள் நிறைந்த பைரவியை நான் வணங்குகிறேன்”

சண்டனுங் கொல்லப்பட்டு முண்டனும் வீழ்த்தப் பட்டு, சைனியமும் வெகுவாக நாசமாக்கப்பட்டபின் பிரதாபம் மிக்க அசுர ராஜனான சும்பன் கோபத்தால் மதிகெட்டு, அசுரர் சேனைகள் அனைத்தையும் திரட்ட உத்திரவிட்டான்.

இப்போதே (முக்கிய வீரர்களான) எண்பத்தாறு அசுரர்களும் எல்லாச் சேனைகளுடனும், கம்புகுல வீரர்கள் எண்பத்திநான்கு பேர்களும் தங்கள் சேனைகளால் சூழப் பெற்றும் புறப்படட்டும்.

கோடிவீரர்கள் எனப்பட்ட அசுரர்களின் ஐம்பது குலத்தினரும், எனது கட்டளைப்படி புறப்பட்டுச் செல்லட்டும்’.

மற்றும் காலகர், தௌர்ஹ்நதர், மௌரியர், கால கேயர் என்ற அசுரர்களும் யுத்தத்திற்குத் தயாராக விரைவில் என் கட்டளைப்படி செல்லட்டும்.”

கடுமையாய்க் கட்டளையிடும் அசுர ராஜனான சும்பனும் இவ்வாறு கட்டளையிட்டு விட்டுப் பல்லாயிரக் கணக்கில் பெருஞ்சைனியங்கள் சூழப் புறப்பட்டான்.

மிகவும் பயங்கரமான அந்தச் சேனை வருவதைக் கண்ட சண்டிகை நாணொலியால் பூமியையும் வானவெளியையும் நிரப்பினாள்.

பின்னர் சிங்கமானது மிகவும் உரக்க கர்ஜனை செய்தது. மணியோசையால் அந்த நாதத்தை அம்பிகை மேலும் வளரச் செய்தாள்.

காளிதேவி வாயை அகலத் திறந்து செய்த பயங்கரமான சப்தத்தால் திக்குத்திசைகளை நிரப்புபவளாய் வில்லின் நாணொலி, சிங்கநாதம், மணியோசையாகியவற்றையும் மீறினாள்.

அவ்வொலியைக் கேட்டு அசுர சைனியங்கள் (சண்டிகா) தேவியையும் சிங்கத்தையும் காளிதேவியையும் கோபத்துடன் நாற்புறமும் சூழ்ந்து கொண்டன.

அதே சமயத்தில் தேவ சிரேஷ்டர்களின் நன்மைக்காகவும், தேவ சத்ருக்களின் நாசத்திற்காகவும், பிரம்மா, ஈசுவரன், குகன், விஷ்ணு, இந்திரன் முதலியவர்களின் சக்திகள் பலமும் வீரியமும் மிக்கவர்களாய் அவர்கள் சரீரங்களினின்று வெளிப்போந்து அவரவர்கள் வடிவில் சண்டி கையையடைந்தனர்.

எந்த தேவனுக்கு எந்த வடிவமோ, எவ்வகை பூஷணமோ, வாகனமோ அதேமாதிரி அந்த சக்தி அசுரர்களுடன் போருக்குச் சென்றாள்.

ஹம்ஸத்துடன் கூடிய விமானத்தின் மேல் அக்ஷமாலையும் கமண்டுலுவும் ஏந்தி எழுந்தருளிய பிரம்ம சக்தி பிரம்மாணீ எனப்படுகின்றாள்.

விருஷபத்தின் மேல் வீற்றுச் சிறந்த திரிசூலமேந்தி, சிறந்த ஸர்ப்பங்களைத் தோள்வளைகளாய்க் கொண்டு சந்திர கலையால் அலங்கரிக்கப் பெற்று மாஹேசுவரி எழுந்தருளினாள்.

தைத்தியர்களுடன் போர் புரிவதற்குச் சக்தியைக் கையிலேந்தி, மயில் வாகனத்தில் குக வடிவினளான அம்பிகை கௌமாரீ எழுந்தருளினாள்

அவ்வாறே வைஷ்ணவீ சக்தியும் கருடன்மேல் வீற்றுச் சங்கம், சக்கரம், கதை, சார்ங்கம், வாள் ஆகியவற்றைக் கைக்கொண்டு தோன்றினாள்.

ஹரியின் ஒப்புயர்வற்ற யஜ்ஞவாராஹ வடிவத்தை எடுத்துக்கொண்ட சக்தி எவளோ அவளும் அங்கு வாராஹீ வடிவு தாங்கி வந்து சேர்ந்தாள்.

நரசிம்மத்திற்கொப்பான உடல் தாங்கிக்கொண்டு பிடரியின் சிலிர்ப்பால் நக்ஷத்திரக் கூட்டங்களை உலுக்கிக் கொண்டு அங்கு நாரசிம்மீ வந்தாள்.

யானையரசின்மேல் வீற்று இந்திரன் எவ்வண்ணமோ அவ்வண்ணமே ஆயிரங்கண்ணுடன் வஜ்ராயுதமேந்தி ஐந்ந்ரீ தேவி வந்தாள்.

பின்னர் ஈசானன் அந்த தேவ சக்திகளால் சூழப் பெற்றவராய் “என் பிரீதிக்காக விரைவில் அசுரர்கள் கொல்லப்படட்டும்” என்று சண்டிகையை நோக்கிக் கூறினார்.

அதன் பின் தேவியின் சரீரத்தினின்று மிக்க பயங்கரமானவளும், நூறு நரிகளைப் போல் சப்திப்பவளும், மிகவும் உக்கிரமானவளும் ஆகிய சண்டிகா (கெளசிகீ) தேவியின் சக்தி (சிவதூதீ) தோன்றினாள்.

அந்த ஜயிக்கமுடியாத சக்தியானவள் செஞ்சடைச் சிவனிடம் “ஈசனே! சும்ப நிசும்பர்களிடம் தாங்கள் தூதுவராய்ச் செல்ல வேண்டும்.

கர்வம் மிக்க அசுரர்களாகிய சும்பனிடமும் நிசும்பனிடமும், அங்கு யுத்தத்திற்காகக் கூடியிருக்கும் மற்ற அசுரர்கள் எவர்களோ அவர்களிடமும் (இதை) சொல்ல வேண்டும்.

இந்திரன் மூவுலக ஆட்சியை (மீண்டும்) பெற வேண்டும். தேவர்கள் யஜ்ஞபாகங்களைப் புசிப்பவர்களாக வேண்டும். நீங்கள் உயிருடனிருக்க விரும்பினால் பாதாளம் செல்ல வேண்டும்.

ஆனால் பலத்தின் கொழுப்பால் நீங்கள் யுத்தத்தை விரும்புவீர்களெனின், அப்போது வரலாம். என்னுடைய நரிகள் உங்களுடைய மாமிசத்தால் திருப்தியடையட்டும்”

கௌசிகி தேவியால் சிவனே தூது செல்லுதலில் ஏவப்பட்டமையால் அதுமுதல் இவ்வுலகில் அவள் சிவதூதீ எனப் பிரக்கியாதி யடைந்தாள்.

அம்மகா அசுரர்களோ சிவன் கூறிய தேவியின் மொழிகளைக் கேட்டுக் கோபமூண்டு காத்யாயனீ (கௌசிகீ) இருந்த இடத்தை நாடிச் சென்றனர்.

அத்தேவ சத்ருக்கள் கோபமேலீட்டால் ஆரம்பத்திலேயே முதன் முதலாக அந்த தேவியை நோக்கி அம்பு, ஈட்டி, வாள் இவற்றை மழைபோல் பொழிந்தனர்.

அவளோ அங்ஙனம் எறியப்பட்ட அம்புகளையும் சூலங்களையும், ஈட்டிகளையும் பரசுகளையும் தன் வில்லினின்று விளையாட்டுப்போல் விட்ட சிறந்த அம்புகளால் பிளந்து வீழ்த்தினாள்.

அவ்வாறே காளிதேவி அவன் (அந்தச் சும்பன்) முன்னிலையிலேயே சூலத்தால் பிளக்கப்பட்ட எதிரிகளைக் கட்வாங்கத்தால் நசுக்கிக்கொண்டு உலவி வந்தாள்.

பிரம்மாணியானவள் எங்கெங்கு சென்றாலும் அங்கங்கு தன் கமண்டலு ஜலத்தைத் தெளித்துச் சத்துருக்களை வீரியமற்றவர்களாகவும் களையற்றவர்களாகவும் செய்தாள்.

மிகவும் கோபங்கொண்ட மாஹேசுவரி திரிசூலத்தாலும், அவ்வாறே வைஷ்ணவீ சக்கரத்தாலும், கௌமாரீ ஈட்டியாலும் அசுரர்களை வதைத்தனர்.

ஐந்திரியின் வஜ்ராயுதத்தின் தாக்குதலால் பிளவுண்டு ரத்த வெள்ளத்தைப் பெருக்கிக்கொண்டு நூற்றுக் கணக்கான தைத்தியர்களும் தானவர்களும் வீழ்ந்தனர்.

வாராஹமூர்த்தியின் மூக்கால் தாக்கப்பட்டும் தெற்றிப் பல்லால் மார்பு கிழிக்கப்பட்டும் சக்கரத்தால் பிளக்கப் பட்டும் (அசுரர்கள்) வீழ்ந்தனர்.

நாரசிம்மியானவள் நகங்களால் ஏனையோரைக் கிழித்துக்கொண்டும், பெரிய அசுரர்களைப் பக்ஷித்துக்கொண்டும், தனது கர்ஜனையால் ஆகாயத்தையும் திசைகளையும் நிரப்பிக்கொண்டும் யுத்த பூமியில் உலவினாள்.

சிவதூதியின் பிரசண்டமான அட்டஹாஸத்தால் பயந்து அசுரர்கள் பூமியில் வீழ்ந்தார்கள் ; வீழ்ந்த அவர்களை அப்போதே அவள் தின்று ஒழித்தாள்.

கோபமூண்ட மாத்ரு கணங்கள் மகா அசுரர்களை பலமுறைகளில் வதைப்பதைக் கண்டு தேவ சத்துருக்களின் சைனியத்தைச் சார்ந்தவர்கள் ஓடி ஒளிந்தார்கள்.

மாத்ரு கணங்களால் பீடிக்கப்பட்டு ஓடுவதில் முனைந்த அசுரர்களைக் கண்டு ரக்தபீஜன் என்ற. மகா அசுரன் கோபத்துடன் யுத்தஞ்செய்ய வந்து சேர்ந்தான்.

அவனுடைய சரீரத்திலிருந்து ஒரு துளி ரத்தம் பூமியில் விழுந்தால் அப்போது பூமியிலிருந்து அவனைப்போல் உருக்கொண்ட ஒரு அசுரன் உதித்தான்.

அம்மகா அசுரன் கதை ஏந்தி இந்திரசக்தியுடன் யுத்தம் செய்தான். அப்போது இந்திரசக்தி தனது வஜ்ரத்தால் ரக்தபீஜனை அடித்தாள்.

வஜ்ரத்தாலடியுற்ற அவனிடமிருந்து வெகுவாக ரத்தம் விரைந்து பெருகிற்று. அதினின்று அவனைப்போலவே வடிவமும் வலிமையும் வாய்ந்த யுத்த வீரர்கள் கிளம்பினார்கள்.

அவன் சரீரத்திலிருந்து எத்தனை ரத்தத்துளிகள் விழுந்தனவோ அத்தனை புருஷர்கள் அவனைப்போல் வீரியமும் பலமும் உடையவர்களாய்த் தோன்றினர்.

ரத்தத்தில் தோன்றிய அப்புருஷர்களும் அங்கு மாத்ரு தேவதைகளுக்குச் சமமாக சஸ்திரங்களை எய்தி மிகவும் உக்கிரமாகவும் பயங்கரமாகவும் யுத்தம் செய்தனர்.

மற்றொரு முறை அந்த ரக்த பீஜனுடைய தலை வஜ்ராயுதத்தின் தாக்குதலால் காயமடைந்தபோது, ரத்தம் பெருகிற்று. அதனின்று ஆயிரக்கணக்கான புருஷர்கள் உண்டாயினர்.

வைஷ்ணவீ தேவி போரில் சக்ராயுதத்தால் அந்த ரக்தபீஜனை அடித்தாள். ஐந்த்ரீ அவ்வசுரராஜனைக் கதை யால் அடித்தாள்.

வைஷ்ணவீ சக்ரத்தால் பிளவுண்ட அவனிடமிருந்து பெருகிய ரத்தத்தில் தோன்றியவர்களும் அவன் போன்ற வடிவுடையவர்களுமான ஆயிரக்கணக்கானவர்களால் உலகமே வியாபிக்கப்பட்டது.

கௌமாரீ தேவி சக்தி ஆயுதத்தாலும் வாராஹீ அவ்வாறே வாளாலும், மாஹேசுவரீ திரிசூலத்தாலும் மகா அசுரனாகிய ரக்தபீஜனை அடித்தனர்.

கோபாவேசங்கொண்ட தைத்தியனும் மகா அசுரனுமான அந்த ரக்தபீஜனும் கதையால் மாத்ருதேவதைகள் ஒவ்வொருவரையும் அடித்தான்.

சக்தி, சூலம் முதலியவற்றால் பலவாறாக அடிக்கப்பட்ட அவனிடமிருந்து பூமியில் வீழ்ந்த ரத்த வெள்ளம் எதுவோ அதினின்று நூற்றுக்கணக்கில் அசுரர்கள் உண்டாயினர்.

அவ்வசுரனுடைய ரத்தத்திலிருந்து தோன்றின அப்பேர்ப்பட்ட அசுரர்களால் உலகு முழுதும் வியாபிக்கப்பட்டது. அதனால் தேவர்கள் மிகவும் அதிகமாக பயத்தையடைந்தனர்.

யுத்தத்தில் ஆவேசத்துடன் கூடிய சண்டிகை கவலைகொண்ட அந்த தேவர்களைக் கண்ணுற்றுக் காளியிடம் கூறியதாவது: ”சாமுண்டே! உன் வாயை அகலத் திறந்து கொள். ரத்த பிந்துக்களினின்றுண்டான மகா அசுரர்களையும் எனது சஸ்திரங்களின் தாக்குதலால் உண்டாகும் ரத்த பிந்துக்களையும் விரைவில் இந்த வாயால் ஏற்றுக் கொள்வாய்”

“அவனிடமிருந்து (ரக்தபீஜனிடமிருந்து)தோன்றிய மகா அசுரர்களை விழுங்குபவளாய் நீ ரணகளத்தில் சஞ்சரிக்க வேண்டும். அதனால் இந்த தைத்தியன் ரத்தத்தையெல்லா மிழந்து நாசமடைவான்.

(இங்ஙனம்) உன்னால் விழுங்கப்பட்டால் வேறு அசுரர்கள் உண்டாக மாட்டார்கள்” என அவளிடம் கூறி தேவியானவள் சூலத்தால் அவனை (ரக்தபீஜனை) அடித்தாள்.

ரக்தபீஜனுடைய ரத்தத்தைக் காளியானவள் வாயில் ஏந்தினாள். அப்போது அங்கே அவன் சண்டிகையைக் கதையால் அடித்தான்.

அந்தக் கதையின் தாக்குதல் அவளுக்கு ஒரு சிறிதும் வேதனை செய்யவில்லை. அடிபட்ட அவனுடைய உடலினின்று ரத்தம் வெகுவாக எங்கெங்கு பெருகியதோ அங்கெல்லாம் அதைச் சாமுண்டாதேவி வாயில் ஏற்றுக் கொள்ளுகிறாள். இந்த யுத்தத்தின் முதலில் ரத்த வீழ்ச்சியால் தோன்றிய மகா அசுரர்கள் எவர்களோ அவர்களைத் தின்று விட்டு சாமுண்டா அந்த ரக்தபீஜனுடைய ரத்தத்தைக் குடித்தாள்.

சாமுண்டா தேவி ரத்தத்தைக் குடிக்கையில், (கௌசிகீ) தேவியானவள் ரக்தபீஜனை சூலத்தாலும் வஜ்ரத்தாலும் பாணங்களாலும், கத்திகளாலும், ஈட்டிகளாலும் அடித்தாள்.

ஆயுதக் கூட்டங்களால் அடிபட்ட அந்த மகா அசுரனாகிய ரக்தபீஜன் ரத்தமே இல்லாதவனாய்ப் பூதலத்தில் வீழ்ந்தான்.

அப்போது தேவர்கள் நிகரற்ற மகிழ்ச்சியடைந்தனர்.

பரதேவதையிடம் தோன்றிய மாத்ரு கணங்கள் ரத்தத்தால் மதோன் மத்தர்களாய் அவர்களிடை கூத்தாடினார்கள்.