தேவி மாஹாத்மியம் : 10 / 13 – சும்ப நிசும்ப வதம்

த்யானம் – தேவி துதி
“ஓம். முக்கண் உடையவளும், சாம்பல் நிறமான பந்தூக புஷ்பத்தின் நிறத்துடன், உருக்கிய தங்கமாய் ஜொலிப்பவளும், கைகளில் பாசம், அங்குசம், புஷ்பபானம் கொண்டு அபய முத்திரையுடன், அந்த அர்த்தநாரீஸ்வரரின் பாதியாகவும், மூன்று கண்களுடன் பிறை சந்திரனையே தன் ஆபரணமாக்கி கொண்ட என் தாயை இரவு பகலுமாக எந்நேரமும் போற்றி வணங்குகிறேன்.
ஓம். தீயில் சுடப்பட்ட பசும்பொன்னாய் மிளிர்ந்து, சூரியன், சந்திரன், அக்னி ஆகிய தேவர்களையே தன் முக்கண்களாய் கொண்டு, அழகிய கரங்களில் பாசம், அங்குசம், வில், மலர், அம்புகளுடன், தனது சிரசில் பிறை சந்திரனை சூடி அந்த பரம சிவனிற்கே சக்தியாக, சிவசக்தி சொரூபமாய் நிற்கும் அந்த காமேஸ்வரியை என் இதயத்தில் தியானிக்கிறேன்”
ரக்தபீஜன் வீழ்ச்சியுற்று மற்றவர்களும் யுத்தத்தில் கொல்லப்பட்டபின் சும்பாஸுரனும் நிசும்பனும் நிகரற்ற கோபத்தை யடைந்தனர்.
பெருத்த சைனியம் அழிக்கப்பட்டதைக் கண்ணுற்றுக் கோபாவேசத்துடன் நிசும்பன் முக்கியமான அரசு சேனைகளுடன் முனைந்து சென்றான்.
அவனுக்கு முன்னும் பின்னும் பக்கங்களிலும் கோபத்தால் உதடுகளைக் கடித்துக்கொண்டு தேவியைக் கொல்லும் பொருட்டுக் கொடிய அசுரர்கள் சென்றனர்.
மகாவீரியவானான சும்பனும் தனது சேனாபலத்தால் சூழப்பட்டு மாத்ரு தேவதைகளுடன் யுத்தம் செய்துவிட்டுச் சண்டிகையைக் கொல்ல எண்ணி முற்பட்டான்.
மேகத்திடையிருந்து மழை பொழிவது போல் மிகவுங் கடுமையாக அம்புகளைப் பொழியும் சும்ப நிசும்பர்களுக்கும் தேவிக்கும் கொடிய யுத்தம் ஆரம்பமாயிற்று.
அவர்களால் விடப்பட்ட அம்புகளைச் சண்டிகை தன் அம்புக் கூட்டங்களால் பிளந்தாள்; அவ்வசுரபதிகளைத் தனது ஆயுதக் கூட்டங்களால் அங்கங்களில் அடித்தாள்.
நிசும்பன் கூரிய வாளையும் பிரகாசமான கேடயத்தையும் எடுத்துக்கொண்டு தேவியின் உத்தம வாகன மாகிய சிங்கத்தைத் தலையில் அடித்தான்.
வாகனம் அடிக்கப்பட்டதும் தேவியானவள் கூரிய பாணத்தால் நிசும்பனுடைய சிறந்த வாளையும் அஷ்ட சந்திரப் பிரபையுடன் கூடிய கேடயத்தையும் துண்டித்தாள்.
கேடயமும் கத்தியும் துண்டிக்கப்பட்டதும், அவ்வசுரன் ஈட்டியை எய்தினான். தன்னை நோக்கிவந்த அதையும் சக்கரத்தால் (தேவி) இரண்டு துண்டாக்கினாள்.
பின்னர் கோபங்கொண்டு நிசும்பாசுரன் சூலத்தை எடுத்தான். அது வரும்போதே தேவியானவள் முஷ்டியால் குத்திப் பொடியாக்கினாள்.
அதன்மேல் அவன் கதையைச் சுழற்றிச் சண்டிகையை நோக்கி எறிந்தான். அது தேவியின் திரிசூலத்தால் உடைப்பட்டுச் சாம்பலாயிற்று.
பின்பு பரசுவைக் கைக்கொண்டு எதிர்த்த அந்த அசுர சிரேஷ்டனைப் பாணக் கூட்டங்களால் அடித்துப் பூமியில் வீழ்த்தினாள்.
பயங்கரமான பராக்கிரமம் படைத்த சகோதரனாகிய நிசும்பன் தரையில் சாய்ந்ததும், மிகவும் அதிகமாய்க் கோபங்கொண்டு சும்பன் அம்பிகையைக் கொல்லுவதற்கு முற்போந்தான்.
தேரின்மேல் நின்றுகொண்டு மிகவும் உயரத்தூக்கிய நிகரற்ற எட்டுக் கைகளிலும் சிறந்த ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு ஆகாயத்தையே மிச்சமில்லாமல் வியாபித்தவன் போல் தோன்றினான்.
அவன் வருவதைக் கண்டு தேவி சங்கநாதம் செய்தாள்; சகிக்கொணாத வில்லின் நாணொலியையுங் கிளப்பினாள்.
எல்லா தைத்திய சைனியங்களின் வீரியத்தையுமழிக்கும் வகையில் தன் மணியின் ஓசையால் தேவி திசைகளை நிரப்பினாள்.
பின்பு சிங்கம் தனது உரத்த கர்ஜனையால் யானைகள் பயந்து மத ஜலத்தைப் பெருக்கும்படி செய்துகொண்டு பூமியையும் ஆகாயத்தையும் பத்துத் திசைகளையும் நிரப்பிற்று.
பின்பு காளி கிளம்பி ஆகாயத்தையும் பூமியையும் கைகளால் அறைந்தாள். அந்த நாதத்தில் முன்னிருந்த ஒலிகள் மறைந்தன.
சிவதூதீ அமங்களமான கொடிய அட்டஹாஸம் செய்தாள். அந்த சப்தத்தால் அசுரர்கள் நடுங்கினர். சும்பன் கடுமையான கோபத்தை யடைந்தான்.
அம்பிகையானவள் சும்பனைப் பார்த்து ‘தீமையே உருக்கொண்டவனே! நில்! நில்!’ என்று எப்போது கூறினாளோ அப்போது வான வெளியில் நின்ற தேவர்களால் ‘ஜய’ எனும் முழக்கத்துடன் போற்றப்பட்டாள்.
அங்கு வந்து நெருப்புக் குவிந்தாற்போல் கடுமையாய் ஜ்வலிக்கும் எந்த சக்தி ஆயுதம் சும்பனால் விடப்பட்டதோ அது வருகையில் பெரிய வால்நக்ஷத்திரம் போன்றதொரு அஸ்திரத்தால் தேவியால் அழிக்கப்பட்டது.
சும்பனுடைய சிங்கநாதத்தால் மூவுலகங்களின் இடைவெளி நிறைந்தது; ஆனால் தேவியின் கோரமான இடிமுழக்கம் அதை மீறி நின்றது.
நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் சும்பன் விட்ட அம்புகளை தேவியும், தேவி விட்ட அம்புகளைச் சும்பனும் சேதித்தனர்.
அதன் பின் சண்டிகை கோபங்கொண்டு சூலத்தால் அவனை அடித்தாள். அங்ஙனம் அடிக்கப்பட்ட அவன் மூர்ச்சித்து பூமியில் சாய்ந்தான்.
பின்னர் நிசும்பன் மூர்ச்சை தெளிந்து வில்லை எடுத்துக்கொண்டு, அம்புகளால் சண்டிகா தேவியையும், காளி தேவியையும், சிங்கத்தையும் அடித்தான்.
திதி புத்திரனான அசுரராஜன் ஆயிரங்கைகளைத் தோற்றுவித்துக் கொண்டு ஆயிரம் சக்ராயுதங்களால் சண்டிகையை மறைத்தான்.
பின்னர் கடக்க முடியாத கஷ்டத்தைப் போக்குவிக்கும் பகவதீ துர்க்காதேவி கோபங்கொண்டு அச்சக்கரங்களையும் அவன் விட்ட பாணங்களையும் தனது பாணங்களால் சேதித்தாள்.
அதன்பின் நிசும்பன் கதையை எடுத்துக்கொண்டு தைத்தியசேனைகள் சூழ வேகமாகச் சண்டிகையைக் கொல்வதற்குப் பாய்ந்தான்.
பாயும்போதே விரைவில் சண்டிகை அவனுடைய கதையைக் கூரிய முனையுள்ள வாளால் பிளந்தாள்; அவன் சூலத்தை எடுத்துக் கொண்டான்.
சூலத்தைக் கையிற்கொண்டு எதிர்த்த தேவர்களின் பீடையாகிய நிசும்பனைச் சண்டிகை வேகமாய் எய்யப்பட்ட தனது சூலத்தால் இருதயத்தில் பிளந்தாள்.
சூலத்தால் பிளக்கப்பட்ட அவனுடைய இருதயத்திலிருந்து மகாபலசாலியும் மகாவீரியவானுமான மற்றொரு புருஷன் ‘நில்’ என்று சொல்லிக்கொண்டு வெளிப் போந்தான்.
தேவியானவள் அப்போது உரக்கச் சிரித்துக் கொண்டு அவ்வாறு வெளிப் போந்தவனுடைய தலையைக் கத்தியால் வெட்டினாள். அதனால் அவன் பூமியில் விழுந்தான்.
பின்னர் சிங்கமும் பற்களால் பிளவுண்ட கழுத்தினரான அவ்வசுரர்களை உக்கிரமாகத் தின்றது. அவ்வாறே காளியும் சிவதூதியும் பிறரைத் தின்றனர்.
கௌமாரியின் சக்தி ஆயுதத்தால் பிளவுண்டு சில பெரிய அசுரர்கள் நாசமடைந்தனர். பிரம்மாணியின் மந்திர பாவனமான கமண்டுலு ஜலத்தால் மற்றும் சிலர் நிராகரிக்கப்பட்டனர்.
மகேசுவரியின் திரிசூலத்தால் பிளவுண்டு அவ்வாறே சிலர் வீழ்ந்தனர். வாராஹியின் நாசி முனையால் தாக்கப்பட்டுச் சிலர் பூமியில் தள்ளிப் பொடியாக்கப்பட்டனர்.
வைஷ்ணவியின் சக்கரத்தால் சில. தானவர்கள் துண்டந் துண்டமாக வெட்டப்பட்டனர். மற்றுஞ் சிலர் அவ்வாறே ஐந்த்ரியின் நுனிக்கையினின்று வஜ்ராயுதத்தால் வெட்டப்பட்டனர்.
மீதியிருந்தவர்களில் தாங்களாகவே பயத்தால் சில அசுரர்கள் மாண்டனர் ; சிலர் மகாயுத்தத்தினின்று காணாமற் போயினர்; பிறர் காளியாலும் சிவதூதியாலும் சிங்கத்தாலும் பக்ஷிக்கப்பட்டனர்.
பிராணனுக்கு நிகரான சகோதரன் நிசும்பன் கொல்லப்பட்டதையும் சைனியம் அழிக்கப்பட்டதையும் கண்டு சும்பன் கோபங்கொண்டு துர்க்கா தேவியைப் பார்த்துப் பின் வரும் வார்த்தையைச் சொன்னான்.
“பலத்தினால் கொழுப்புப்பிடித்து மதிகெட்ட துர்க்கையே! நீ கர்வத்தை இங்கு என்னிடம் கொண்டு வராதே. நீ மிகவும் கர்வம் கொண்டுள்ளாய் எனினும் பிறருடைய பலத்தைக் கொண்டே யுத்தம் செய்கின்றாய்”
தேவி கூறினாள்
“இங்கு உலகில் உள்ளவள் நான் ஒருத்தியே. என்னைத்தவிர இரண்டாவதாக என்ன உளது? புத்தி கெட்டவனே! இவர்களெல்லாம் எனது அம்சாவதாரமானவர்கள் என்னைத்தவிர வேறல்லர். என்னிடமே புகுவதைக் காண்பாய்”
பின்னர் பிரம்மாணீ முதலான அந்த தேவிகளெல்லாம் அந்த கௌசிகீ தேவியின் உடலில் புகுந்தனர். அம்பிகை ஒருத்தி மட்டுந்தான் அப்போது இருந்தாள்.
என்னுடைய ஐசுவரிய சக்தியால் எந்தப் பல வடிவங்களைத் தோற்றுவித்தேனோ அவை என்னால் மீண்டும் கவரப் பட்டன; ஒருத்தியாகவே நிற்கிறேன்; யுத்தத்தில் ஸ்திரங் கொள்வாய்.
பின்னர் எல்லா தேவர்களும் அசுரர்களும் பார்த்துக் கொண்டிருக்கச் சும்பனுக்கும் தேவிக்கும் இருவருக்கு மிடையில் யுத்தம் தொடங்கிற்று.
பாண வர்ஷத்துடனும் கூரிய சஸ்திரங்களுடனும், அவ்வாறே கொடிய அஸ்திரங்களுடனும் உலகனைத்தையும் நடுங்கச் செய்யும் போர் அவர்களிடை மீண்டும் மூண்டது.
அம்பிகை நூற்றுக் கணக்கில் விட்ட திவ்யாஸ்திரங்கள் எவையோ அவற்றை அசுர ராஜன் எதிர்த்து வெட்டும் அஸ்திரங்களால் வெட்டினான்.
மேலும் அவன் விடுத்த திவ்யாஸ்திரங்களைப் பரமேசுவரி உக்கிரமான ஹுங்காரம். உச்சாரணம் முதலிய வற்றால் விளையாட்டாக அழித்தாள்.
பின்னர் அவ்வசுரன் நூற்றுக்கணக்கான பாணங்களால் தேவியை மறைத்தான். அந்த தேவியும் கோபித்து அவனுடைய வில்லை அம்புகளால் ஒடித்தாள்.
வில்லொடிக்கப்பட்டதும் அசுரராஜன் சக்தி ஆயுதத்தை எடுத்துக்கொண்டான். அதையும் தேவி தன் கையிலிருந்த சக்கராயுதத்தால் வெட்டினாள்.
பின்பு அசுர ராஜாதிராஜன் வாளையும் பிரகாசம் பொருந்திய சத சந்திரம் எனும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு தேவியை அப்போது எதிர்த்துப் பாய்ந்தான்.
அவன் பாயும்போதே விரைவில் சண்டிகை அவன் வாளையும் சூரியன் போல் ஒளி பொருந்திய கேடயத்தையும் தனது வில்லினின்று விடுத்த பாணங்களால் சேதித்தாள்.
அப்போது குதிரையுங் கொல்லப்பட்டு ஸாரதியுமின்றி வில்லும் ஒடிக்கப்பட்டு அவ்வசுரன் அம்பிகையைக் கொல்ல முயல்பவனாய் முத்கர ஆயுதத்தை எடுத்துக்கொண்டான்.
கூரிய பாணங்களால் தேவி எதிர்த்து வரும் அவனுடைய முத்கரத்தைப் பிளந்தாள். அப்படியும் அவன் முஷ்டியை உயர்த்திக்கொண்டு வேகமாக அவளை நோக்கிப் பாய்ந்தான்.
அசுரசிரேஷ்டன் தேவியின் இருதயத்தில் முஷ்டியால் குத்தினான். தேவியும் அவன் மார்பில் உள்ளங் கையால் அறைந்தாள்.
கைத்தலத்தால் அறையுண்ட அவ்வசுர ராஜன் பூதலத்தில் வீழ்ந்தான்; விரைவில் மீண்டும் எழுந்தான்.
தேவியை எடுத்துக்கொண்டு ஆகாயத்தில் கிளம்பி நின்றான். அங்கும் ஆதாரமின்றியே அந்தச் சண்டிகா தேவி அவனுடன் போர் புரிந்தாள்.
சண்டிகையும் அசுரனும் ஆகாய வெளியில் அப்போது ஒருவருடனொருவர் புது முறையில் ஸித்தர்களும் முனிவர்களும் அதிசயிக்கும்படி நெருங்கி யுத்தம் செய்தனர்.
அம்பிகை நெடுநேரம் அவனுடன் நெருங்கி அவ்வாறு யுத்தம் செய்த பின் அவனைத் தூக்கிச் சுழற்றிப் பூதலத்தில் எறிந்தாள்.
எறியப்பட்ட அந்த துஷ்டாத்மா பூமியையடைந்து முஷ்டியை உயர்த்திக்கொண்டு சண்டிகையைக் கொல்ல விரும்பி வேகமாகப் பாய்ந்தான்.
தைத்திய மக்களின் அதிபனாகிய அவன் அங்ஙனம் வரும்போதே தேவியானவள் அவன் மார்பில் சூலத்தால் குத்திப் பிளந்து பூமியில் வீழ்த்தினாள்.
தேவியின் சூலத்தின் நுனியால் பிளவுண்ட அவன் கடல்களுடனும் துவீபங்களுடனும் மலைகளுடனும் கூடிய பூமி முழுவதையும் நடுங்க வைத்துக்கொண்டு பிராணனை விட்டுத் தரையில் வீழ்ந்தான்.
அந்த துராத்மா கொல்லப்பட்டதும் உலகனைத்தும் ஆனந்தத்தில் மெய்மறந்தது. ஆகாயமும் நிர்மலமாய் விளங்கிற்று.
வால் நக்ஷத்திரங்களுடன் கூடிய துர்நிமித்தங்கள் எவை முன் காணப்பட்டனவோ அவை சாந்தமடைந்தன. அவன் அங்கு வீழ்ச்சியுற்றதும் நதிகள் தம் வழியில் அடங்கிச் சென்றன.
அவன் கொல்லப்பட்ட பின்னர் எல்லா தேவகணங்களும் ஆனந்தம் பொங்கும் மனத்தினராயினர். கந்தர்வர்கள் இனிமையாய்ப் பாடினர்.
சிலர் அப்ஸர வாத்தியங்களை முழங்கினர். கணங்கள் நர்த்தனம் செய்தனர். காற்றுச் சுபமாய் வீசிற்று. சூரியன் அழகிய பிரபையுடன் விளங்கினான். அக்கினிகள் சாந்தமாக ஜ்வலித்தன. திக்குகளில் எழுந்த ஒலிகளும் சாந்தமடைந்தன.