நாச்சியார் திருமொழி : 26

அன்று ஒரு பொய்கையிலே நீராட விளைகின்றாள் ஆண்டாள், பொய்கை என்பதும் சுனை என்பதும் இயற்கையாக அமைந்தவை, குளம் என்பது செயற்கையாக அமைய பெற்றது

அந்த பொய்கைக்கு தான் தன் தோழியரோடு நீராட செல்கின்றாள் ஆண்டாள், தாமரை மலர்கள் பூத்து குலுங்கும் தடாகம் அது

வழக்கமாக கண்ணன் வருவதும் ஆடைகளை எடுத்து விளையாடுவதுமாக இருப்பதால் இம்முறை தோழி ஒருவரை ஆடைக்கு காவல் வைப்பது என முடிவாயிற்று

ஆண்டாளுக்கு அதனில் மெல்லிய வருத்தம் இருந்தது, கண்ணன் வருவதும் ஆடைகளை மறையவைத்து தன்னை தவிக்க வைத்து பாடவிடுவதும் அவளுக்காக என்பதையும் அவளை அப்படி தவிக்க வைத்து சந்திப்பதில் ஒரு மகிழ்ச்சி அவனுக்கு உண்டு என்பதையும் மனதார ரசித்துகொண்டிருந்தாள்

ஆனால் அதனை வெளியில் சொல்லமுடியாத நிலையில் சிக்கியிருந்தாள், தோழியரிடம் அவள் மறைக்கவேண்டிய அவசியமும் இருந்தது

இதனால் மனதால் வாடினாலும் வெளியில் “ஆமாம், அந்த கண்ணன் வந்து ஆடை எடுக்கமுடியாதபடி நம்மில் ஒருவர் காவல் இருக்கட்டும், மீறி வந்தால் நாம் சத்தமிட்டு ஊரை அழைக்கலாம்” என சொல்லிகொண்டாள்

அதையும் உள்ளூர மிகுந்த வருத்ததுடனே சொன்னாள்

தோழியரில் ஒருத்தியினை உடைகளுக்கு காவல் வைத்துவிட்டு மற்றவர்கள் ஆண்டாளோடு நீராடினார்கள், எனினும் ஆண்டாள் உற்சாகமின்றி ஒருவித சோகத்துடனேதான் நீராடிகொண்டிருந்தாள்

ஆண்டாளின் தோழியரில் ஒருத்திக்கு அவளின் சோகம் தெரிந்தது, தாமரை குளத்தில் பூக்கள் வெளிதெரியுமே தவிர அதன் வலுவான தண்டுகளும் கொடிகளும் வெளிதெரியாது, அதனால் குளத்தில் நீராடுவோரின் பாதங்களில் அது சுற்றிகொள்ளும், அந்த தண்டின் கணுக்கள் காலில் குத்தும்பொழுது பெரும் வலி ஏற்படும்

அப்படி ஏற்படும் வலி கூட தெரியாமல் சிலை போல நின்றாள் ஆண்டாள், அவளிடம் சென்ற தோழி “என்ன ஆண்டாளே கண்ணனை தேடுகின்றாயோ?” என்றாள்

“இல்லை, அவன் இப்பொழுதெல்லாம் மிகுந்த சர்ச்சையாகிவிட்டான், நான் தேடவில்லை” என சமாளித்தவள் தோளை தொட்டு கேட்டாள் தோழி

அதற்கு மேலும் ஆண்டாளால் மறைக்க முடியவில்லை , மெல்ல அவனை சில நாட்கள் காணவில்லை என சொல்லி தலை குனிந்து கொண்டவள் நீரை எடுத்து முகத்தை கழுவினாள்

அவள் கண்ணீரை மறைக்க அவள் அப்படி செய்தாள் என்பதை அறிந்த தோழி புன்னகைத்தாள், சரி இப்பொழுது கண்ணன் வந்தால் நீ என்ன பாடுவாய்?” என கேட்டாள்

விரக்தியாக புன்னகைத்த ஆண்டாளை தேற்றி, “பாடு ஆண்டாளே ஒருவேளை அவனுக்கு கேட்டு வருவான் அல்லவா?” என்றாள்

என்ன பாடுவது என கேட்டாள் ஆண்டாள்

அந்த தாமரை மொட்டுக்கள் காற்றில் அசைவதை பார், அது கரகாட்டம் ஆடுவோர் போல் இல்லையா? தலையில் கும்பம் வைத்து ஆடுவது போல் இல்லையா , அப்படி ஏதும் பாடு என்றாள் தோழி

ஆண்டாள் அந்த தாமரை குளத்தில் தான் நின்ற கோலத்தை உணர்கின்றாள்., அப்படியே தாமரை மொட்டுக்கள் ஆடுவது கண்டாள், அவளுக்குள் ஏதோ தோன்றிற்று

கண்ணா.. கண்ணா என்ற ஆண்டாள் மனம் நெகிழ்ந்து பாடினாள், கண்களை மூடிகொண்டு பாடினாள்

“தடத்தவிழ் தாமரைப் பொய்கைத்
தாள்களெங் காலைக் கதுவ
விடத்தே ளெறிந்தாலே போல
வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை யெடுத்தேற விட்டுக்
கூத்தாட வல்லஎங் கோவே
படிற்றையெல் லாம்தவிர்ந்
தெங்கள் பட்டைப் பணித்தரு ளாயே”

(பொய்கையில் மலர்ந்த பெரிய தாமரையின் தண்டுகளானது எங்கள் கால்களைப் பற்ற விஷம் கொண்ட தேள் கொட்டினாற் போல மிகுந்த வேதனை அடைந்தோம், குடத்தில் தலையில் எடுத்து ஏற விட்டு (கரகம்)
கூத்தாட வல்ல எங்கள் அரசனே உன் குற்றங்கள் எல்லாம் நீ தவிர்த்து எங்கள் பட்டு ஆடையை கொடுத்தருள்க என பொருள்)

அந்த பாடலை பாடி முடித்து கண் விழித்தால் அழகான சோலையின் தடாகம் ஒன்றின் கரையில் ஆண்டாள் அமர்ந்திருக்கின்றாள், அந்த தடாகத்தில் தாமரைகள் அழகாய் மலரும் மொட்டுமாக காட்சியளிக்கின்றன, வண்டுகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கின்றது, அன்னங்கள் நீந்தி கொண்டிருக்கின்றன‌

சுகமான தென்றல் வீச எங்கும் பூத்த புதுமணங்களின் வாசம் அங்கு ஒரு ஏகாந்த சுகத்தை கொடுக்க அமர்ந்திருக்கின்றாள் ஆண்டாள், இனிய குழலோசை ஒன்று ஒலிக்க அங்கு வருகின்றான் கண்ணன்

அவனை கண்டதும் ஆண்டாளுக்கு ஓடி சென்று கட்டிகொள்ள வேண்டும் என தோன்றினாலும், இயல்பான நாணம் தடுத்ததால் ஒருபக்கம் முகம் திருப்பி கடைவிழியால் அவனை கண்டும் காணாதது போல் நடித்து அமர்ந்திருந்தாள்

கண்ணன் மெல்ல வந்து ஆண்டாளே என அந்த கரத்தை பற்றினான்

மேகத்தின் துளி பட்டதும் சிலிர்க்கும் மயிலாய் ஆண்டாளுக்குள் சிலிர்ப்பு வந்தது, மாயன் வழமையான புன்னகையுடன் “என்ன ஆண்டாளே எனக்காக காவல் எல்லாம் இடபட்டிருக்கின்றது?” என்றான்

“அடிக்கடி வம்பு செய்தால் அப்படித்தான் செய்வார்கள், இம்முறை உன்னால் முடியவில்லை அல்லவா?” என மெல்ல சிரித்தவள் அவன் முகத்தையே நோக்கினாள்

சட்டென அவளை அணைத்து கொண்டான் கண்ணன், அவன் மார்பில் புதைது ஒட்டி கொண்டாள் ஆண்டாள்

“ஆண்டாளே, என்ன பாடல் அது?” என்றான் கண்ணன்

“தடாகத்தில் தாமரை தண்டுகளிடையே வலியில் வேறு என்ன பாடுவதாம்” என்றாள் ஆண்டாள், அவள் குரலில் மெல்லிய மயக்கம் இருந்தது

“குடத்தை வைத்து கூத்தாடுபவன்” என்றாயே நான் என்ன கூத்தாடுபவனா? என்றான் கண்ணன்

“கூத்தாடி என்றால் எல்லோரையும் மகிழ்விப்பவன் என்றுதான அர்த்தம், நீயும் உன் மாய வேலைகளால் எவ்வளவு பேரை மகிழ்விக்கின்றாய், குடத்தினை எடுத்து அதனுள் இருக்கும் வெண்ணையெல்லாம் எடுத்தவன் அல்லவா நீ?, அதைத்தான் சொன்னேன்” என புன்னகைத்தாள் ஆண்டாள்

கண்ணன் புன்னகைத்தான்

கொஞ்ச நேரம் மவுனம் நீடித்தது, அந்த மவுனத்தை இருவருமே ரசித்தார்கள், பின் யார் அந்த மவுனத்தை கலைப்பது எனும் போட்டியில் மவுனத்தை நீட்டினார்கள்

அந்த மவுனம் நீண்டுகொண்டே சென்றது, மவுனத்தில் காதலை ரசிப்பதொரு பரவசம் என இருவருக்குமே தெரிந்தது

ஆண்டாளுக்கு அந்த பரவசத்திலும் மெல்லிய அச்சம் வந்தது, அவன் சென்றாலும் சென்றுவிடுவான் என அஞ்சியவள் இறுக அவன் கரத்தை பற்றியபடி கேட்டாள்

“ஏன் கண்ணா பாடல் பிடிக்கவில்லையா?” என்றாள்

“அர்த்தம் சொன்னால் இன்னும் பிடிக்க்கும்” என்றான் கண்ணன்

“என்னை பாட வைப்பதுமில்லாமல், விளக்கி சொல்ல வைப்பதிலும் உனக்கு விருப்பம் அதிகம்” என்றாள் ஆண்டாள்

புன்னகைத்து அவளின் தலையினை வருடினான் கண்ணன்

அவன் கைகளை பற்றிகொண்டு அவன் விரல்களை வருடியபடி சொன்னாள் ஆண்டாள்

“கண்ணா, இந்த பூலோகம் என்பது அந்த தடாகம், தானாக உருவான தடாகம். அங்கு நீராட வந்த ஆத்மா மானிட ஆத்மா

அந்த ஆத்மாவின் நீராடல் என்பது மானிட வாழ்வு. அந்த வாழ்வில்தான் எவ்வளவு சிக்கல்கள? காலை சுற்றி பந்தம் பாசம் எனும் விலங்குகள், தளைத்து பின்னி கிடைக்கும் பிரச்சினைகள்

கண்ணா இந்த குளத்து தாமரை கொடிகள் போல எங்கள் ஆத்மா மானிட வாழ்வின் லவுகீக பிடிகளில் சிக்கி தவிக்கின்றது, இந்த கொடிகளின் கணுக்கள் குத்துவது தேளின் கடித்தது போல வலிக்கும் அல்லவா? அப்படி மானிட ஆத்மா ஒவ்வொரு சிக்கலிலும் வேதனையிலும் அழுது புலம்புகின்றது

இந்த சிக்கல்களில் இருந்து வெளியேறி ஓட ஞானம் எனும் ஆடை வேண்டும் அல்லவா கண்ணா? அது இருந்தால்தானே கரையேறி செல்லமுடியும், வீடுபேறு எனும் மோட்சம் அடையமுடியும்?

மாறாக அந்த ஞானம் இல்லாமல் இந்த தளைகளின் பிடியிலும் இந்த வலியிலுமே சிக்கி கிடந்தால் என்னாகும்?

அதனால் கண்ணா நாங்கள் அழுது கேட்கின்றோம், லவுகீக வாழ்வின் இயல்பான பந்தங்கள் கால்களை பிணைக்க, அதனில் கடமை இன்னொரு வளையமாக பின்ன , பொறுப்பும் தேடலும் லவுகீக சிக்கலும் தேள் வலியாய் கொட்ட நாங்கள் துடிக்கின்றோம் கண்ணா

இந்த பிறவி துன்பம்போதும் கண்ணா, இந்த மானிட வாழ்வின் அவலம் போதும், அறியாமை பிறவியில் மாய தளைகளில் சிக்கி, பந்த பாசம் எனும் வலிகளோடு நாங்கள் கதறுவதில் இருந்து வெளியேற வேண்டும் கண்ணா

அதற்கு ஞானம் வேண்டும், உன் அருள் வேண்டும் உன் காவல் வேண்டும்” என கதறி அவன் காலிலே பணிந்தாள் ஆண்டாள்

அவள் முகம் தொட்டு தூக்கி தோளை தொட்டு கேட்டான் கண்ணன், “என்னை ஏன் குடமாடும் கூத்தாடி என்றாய்?”

அவனின் புன்னகைக்கு அவன் கரங்களை தன் கன்னத்தோடு வைத்தபடி சொன்னாள்

“கண்ணா, அந்த தடாகத்தில் தாமரை மொட்டுக்கல் காற்றில் அசையும் காட்சி என் தோழிக்கு கரகாட்டம் ஆடுவோரை போல் தெரிந்தது, ஆனால் எனக்கு நீ கோவர்த்தன மலையினை தூக்கி நின்றாய் அல்லவா? அந்த கோலம்தான் தெரிந்தது

அதனால்தான் உன்னை அப்படி பாடினேன், குடம்போல் மலையினை தூக்கி மக்களை காத்தவன் அல்லவா நீ? இன்றும் வெண்ணை குடத்துடன் காட்சிதந்து அருள் வழங்குபவன் அல்லவா நீ? அதனால்தான் பாடினேன் , உனக்கும் “குடமாடும் கூத்தன் கோவில்” என்றொரு ஆலயம் உண்டுதானே கண்ணா” என்றாள்

“ஆமாம் உண்டு, மேலும் வெண்ணை குடத்தோடு அருள்பாலிக்கும் இடமெல்லாம் என்னை அப்படியும் அழைபபர்கள்” என்றான் கண்ணன்

“அதைத்தான் சொன்னேன் கண்ணா, எனக்கும் அந்த அருளை அளிப்பாயா? எல்லா உயிருக்கும் அடைக்கலமான நீ, சதா காலமும் உன்னையே நினைந்துவாழும் எனக்கும் நற்கதி அளிப்பாயா? இந்த உலகம் முன்னால் நான் நாணி தலைகுனியாதபடி என்னை கைவிடாமல் காப்பாயா?” என மருகினாள்கக்

கண்ணன் பெருமிதமாய் தலையசைத்தான், அவன் பார்வையில் ஆண்டாள் மேல் தனி கருணை வந்திருப்பது தெரிந்தது

ஆண்டாள் அவன் மடியில் தலைவைத்து கொண்டாள், அவள் தலையினை அன்பாக வருடிவிட்டு கொண்டிருந்தான் கண்ணன்

ஆண்டாள் கண்களை மூடினாள்

கண்ணை திறக்கும் பொழுது அவள் அதே தடாகத்தில் நீராடி கொண்டிருந்தாள், அவளின் தோழி அருகில்தான் நின்றாள், மற்ற தோழிகள் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்

எப்பொழுது கண்ணன் வந்தான்? தான் எங்கே சென்று அவனை சந்தித்தேன்? எப்பொழுது திரும்பினேன்? என குழம்பியவள் ஈரம் சொட்டும் தலையுடன் முகம் மூடி சிரித்து கொண்டாள்

“ஆண்டாளே, இனி நீ துணிக்கு காவல் இரு, நாங்கள் நீராட வேண்டும்” என தோழியர் அழைக்க, நாணத்தால் சிவந்த முகத்துடன் வேகமாக செல்ல தொடங்கினாள் ஆண்டாள், கண்ணன் அவளுக்குள் பூரணமாக இறங்கி நிறைந்திருந்தான்