நாச்சியார் திருமொழி : 27
நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய்…
தோழியுடன் நீராட சென்றாள் ஆண்டாள், இப்பொழுதெல்லாம் கண்ணன் வருவதில்லை, அவள் ஆடையினை திருடுகின்றான் எனும் பழியினை அவன் தவிர்த்துவிட்டான், ஆண்டாளுக்கு அவன் வருவதில்லை என்பது சோகம் என்றாலும் வெளிகாட்டவில்லை
எப்பொழுதும் கண்ணன் நினைவாக இருந்தவள் நீராடும் பொழுதும் அவன் நினைவினிலே நீராடினாள், சுற்றி பார்த்து கொண்டே இருந்தாள், கண்ணன் வருவான் என கண்கள் பூக்க பார்த்து கொண்டிருந்தாள், கரையில் இருந்த ஆடைகள் காணமல் போகாதா? அவனை நோக்கி பாடி அழைக்க முடியாதா என ஏங்கி கொண்டிருந்தாள்
ஆனால் அவன் வரவே இல்லை
ஆண்டாளின் சோகம் அழுகையாக மாறிற்று, நீருக்குள் மீன் அழுதால் அது வெளி தெரிவதில்லை என அழுது கொண்டாள், குளத்தில் கண்ணீரை மறைத்தாலும் சோகத்தை மறைக்கமுடியாதல்லவா?
ஆண்டாள் கற்பனையில் மூழ்கினாள், நிறைவேறாத ஆசைகளையும் எதிர்ப்பார்ப்பையும் கற்பனை செய்வது போல் நிம்மதி ஏதும் இருக்கமுடியாது
அந்த ஆடைகளை கண்ணன் எடுப்பது போலவும், அவனை நோக்கி அவள் ஆடை கேட்டு பாடுவதாகவும் கற்பனை செய்தாள், அந்த நொடியில் அவளுக்குள் யுக யுகமான சந்தோஷங்கள் கூடின
உற்சாகமாக ஆனால் உருக்கமாக பாடினாள்
“நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழியெல் லாமுணர் வானே
ஆர்வ முனக்கே யுடையோம் அம்மனை மார்காணி லொட்டார்
போர விடாயெங்கள் பட்டைப் பூங்குருந் தேறியி ராதே”
(நீரிலேயே வெகு நேரம் நின்றதால் கால்கள் அயர்ந்து விட்டன.உன்னை விரும்புபவர்களை நீ இப்படி வாட்டுவது நியாயமா? இப்பொய்கையிலிருந்து எங்கள் கிராமம் வெகு தொலைவில் உள்ளது.விதி உணர்ந்தவனே
எங்களது எண்ணம் எல்லாம் நீதான்.நீ செய்த செயல்களை ,எங்களது தாய், தந்தையர் பார்த்தால் உன்னை இங்கேயே வர விடமாட்டார்கள்.எங்களது பட்டாடைகளை எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் ஏறி அமராமல், ஆடைகளைக் கொடுத்துவிடு)
ஆண்டாளின் பாடலை கேட்ட தோழி சிரித்து கொண்டே கேட்டாள், என்ன ஆண்டாளே பாடினாய்? இங்கே கண்ணன் வரவில்லையே பின்னர் ஏன் இந்த பாடல்?
இல்லை இல்லை நான் பொதுவாக பாடினேன் என சமாளித்தாள் ஆண்டாள்
மறைக்காதே ஆண்டாளே, இது கண்ணனை நினைந்து பாடியதுதானே, என்னிடமுமா மறைப்பாய்?, உன் காதல் எனக்கு மட்டுமா தெரியும், அதுதான் ஊரறிந்த செய்தியாயிற்றே என்றாள் தோழி
ஆண்டாள் விரக்தியாக புன்னகைத்தாள், பதிலேதும் பேசாமல் கழுத்தளவு நீரில் மூழ்கியிருந்து வானத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்
கண்ணனை சில நாட்களாக காணாததாலும் அவனிடம் ஆசையாக பேசி நாளாகிவிட்டதாலும் அவள் சோர்ந்திருந்தாள், ஆடைகளை கண்ணன் திருட வராததும் அவளின் சோகத்தை அதிகமாக்கின
தோழி அவள் அருகில் வந்தாள், ஆண்டாளின் முகத்தை உற்று நோக்கினாள், ஆண்டாள் மெல்ல தலைகுனிந்துகொண்டாள், சிறிய விசும்பல் அவளிடம் இருந்து வெளிபட்டது
ஆண்டாளே, இன்னொருமுறை பாடு ஒருவேளை கண்ணன் வரகூடும் என சொன்னாள் தோழி
விசும்பிய குரலுடன் கலங்கிய கண்களுடன் இன்னொருமுறை பாடினாள் , கைகளை கூப்பி மனதுக்குள் கண்ணா என்னை மன்னித்துவிடு என வேண்டியபடி பாடினாள்
அப்பொழுதும் கண்ணன் வரவில்லை
ஆண்டாளே, இன்னும் அவன் வரவில்லையே, ஏதோ திட்டத்துடன் இருப்பான் போலிருக்கின்றது என்றவள், சரி வா கிளம்பலாம் என்றாள்
இல்லை என்ன ஆனாலும் சரி, அவன் வரும்வரை நகரமாட்டேன் என நீருக்குள் நின்றுகொண்டாள் ஆண்டாள், அந்த வரிகளை பாடி கொண்டே இருந்தாள்
“நீரிலே நின்றயர்க் கின்றோம்
நீதியல் லாதன செய்தாய்” என சொல்லி கொண்டே இருந்தாள், நீரில் நின்று மந்திரம் போல் சொல்லி கொண்டே இருந்தாள், அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது, குளிரில் உதடுகளும் வார்த்தைகளும் ஒடுங்க தொடங்கியது
அப்பொழுதும் அவள் சொல்லிகொண்டே இருந்தாள், ஒரு கட்டத்தில் முடியாமல் நீரில் வீழ ஆரம்பித்தாள் , அவளை தாங்கினாள் அந்த தோழி
ஆண்டாளே எனும் அவள் குரல் மெல்ல மாறிற்று, அவள் மெல்லிய கரங்கள் ஆண்டாளை இறுக்கமாக பலமாக பற்றின
அந்த குரலை கேட்டதும் அவசரமாக கண் திறந்தாள் ஆண்டாள், அப்படியே மகிழ்ந்து கட்டிகொண்டாள் அங்கு கண்ணன் அவளை அணைத்திருந்தான் அதுவரை தோழி உருவில் நின்ற கண்ணன் அவளை கட்டிகொண்டான்
“கண்ணா நீயா?, நீயா என் அருகில் இருந்தாய்?” என சொல்லி சொல்லி மகிழ்ந்தாள் ஆண்டாள்
“உன்னைவிட்டு நான் எங்கே செல்வேன் ஆண்டாளே” என்றான் கண்ணன்
“ஏன் இவ்வளவு நாளாக என்னை தேடவில்லை ” என்றாள் ஆண்டாள்
“அருகில் நான் இருப்பது தெரியமால் நீ தடுமாறியதை ரசிக்கத்தான்” என்றான் கண்ணன்
அந்த நீர் அப்பொழுது குளிரவில்லை, குளிரும் நடுக்கமும் ஆண்டாளை விட்டு அகன்றிருந்தது, தன்னை மறந்த நிலையில் கண்ணனோடு அணைந்திருந்தாள்
ஏன் அப்படி பாடினாய் ஆண்டாளே என்றான் கண்ணன், அவள் தொடர்ந்தாள்
“
பின் எப்படி பாடுவது கண்ணா?
நீரிலே ஏன் இப்படி நின்றுகொண்டிருக்கின்றாய், உடல்நிலை என்னாகும்?
ஒரு நாள் அழியபோகும் உடல்தானே கண்ணா, அது என்ன ஆனால் என்ன?
ஆண்டாளே, அது இருக்கும்வரைதானே வாழ்வு
அதனால்தான் அழுகின்றேன் கண்ணா, அந்த வாழ்வு முடியட்டும் அப்பொழுதுதானே உன்னில் கலக்க முடியும்
விதிக்கபட்ட கர்மாவினை சுமந்துதானே ஆகவேண்டும் ஆண்டாளே
அதைத்தான் பாடினேன் கண்ணா, எவ்வளவு நாள் இப்பிறவியிலே நான் வாடுவது, என்னை இப்படி தவிக்க விடுவது உனக்கு சரியோ, என் ஆத்ம துடிப்பினை அறிவாயோ?
அறிவேன் ஆண்டாளே, நான் அறியாமல் யார் அறிவார்?
இந்த மானுட பிறப்புக்கும் நான் அடைய வேண்டிய நீ இருக்குமிடத்துக்கும் எவ்வளவு தொலைவு உண்டு என்பதை அறிவாய் அல்லவா? , எல்லாவற்றின் தொடக்கமும் முடிவும் தெரிந்த உனக்கு இது தெரியாதா?
ஆமாம்,தெரியும் அதனால் என்ன?
அதனால் என்னவா? எப்பொழுது நான் அங்கு அடைவது கண்ணா, இந்த மாய பூமியில் என்னை ஆயிரமாயிரம் சிக்கல்கள் சூழ்ந்திருக்கின்றன, அவை என்னை எப்படியும் மூழ்கடித்துவிடுமோ என அஞ்சுகின்றேன், அப்படி அவைகள் என்னை பிடித்துவிட்டால் எப்படி நான் அங்கு வரமுடியும்?
என்ன சிக்கல் ஆண்டாளே?
மாயை பெற்றெடுத்த குழந்தைகளல்லாவா மானிடர்கள், அந்த மாயைதாய் என்னை விடமாட்டாள் கண்ணா
மாயனிடமே மாயை பற்றி பேசுகின்றாயா ஆண்டாளே
அதைத்தான் சொல்கின்றேன், என் மாயை நீக்கு கண்ணா, எனக்கு அறிவும் ஞானமும் தா, அப்பொழுதுதான் என்னால் தெளிவாக வாழ்ந்து உன்னை அடைய முடியும்
ஆண்டாளே இதையா பாடினாய்?
ஆம் கண்ணா, இந்த மானிட வாழ்வு இந்த குளம் போன்றது என்னால் இங்கு நிற்கமுடியாது, நான் யாரிடம் அழமுடியும் சொல்? மாயை என் தாய் போன்றவள், நான் இன்னும் அறிவும் ஞானமும் அடையாவிட்டால் அவளை மீறி வரமுடியாது, இந்த குளத்துக்கு மறுபடி மறுபடி வருவது போல மறுபடி மறுபடி பிறந்து கொண்டே இருக்க வேண்டும், நீ ஆதியும் அந்தமும் அறிந்தவன் அல்லவா? அதனால் ஞானமும் அறிவும் எனக்கு ஆடைபோல் கொடுத்துவிடு கண்ணா , நான் அதை கொண்டு கரையேறிவிடுவேன்
ஆண்டாளே, அஞ்சுகின்றாயா, நம்பிக்கை இல்லையா?
நம்பிக்கை இல்லையென்றால் காத்திருப்பேனா? அந்த நம்பிக்கையில்தானே வாழ்கின்றேன் கண்ணா, அந்த நம்பிக்கைதான் இந்த தவிப்பை கொடுக்கின்றது, அந்த தவிப்பில் உன்னிடம் கதறுகின்றேன்
ஒருநாள் உலகமும் ஊரும் அறிய நான் உன்னை ஏற்றுகொள்வேன் ஆண்டாளே
பட்டாடை தருவாயா?
உலகிலே அதி உன்னதமான பட்டு கொண்டு வந்து உனக்கு சாற்றி ஏற்றுகொள்வேன் போதுமா?
ஒவ்வொரு முறையும் நீ இதைத்தான் சொல்கின்றாய், நாட்கள் நீள்கின்றதே தவிர நீ என்னை சேர்த்துகொள்ளவில்லை, அதனால் நான் என்ன செய்யமுடியும் கண்ணா, காலத்துக்கு காத்திருப்பதை தவிர மானிடபிறவி என்ன செய்துவிட முடியும், நான் கதறி அழுவதால் நாளும் பொழுதும் வேகமாக நகருமா என்ன?
எது நகர்ந்தாலும் நகராவிட்டாலும் நான் உன்னைவிட்டு நகர்வேனா ஆண்டாளே?
அந்த நம்பிக்கையில்தான் கண்ணா வாழ்கின்றேன், சீக்கிரம் பட்டோடு வந்து என்னை அழைத்து கொண்டு போ
காலம் வரும்பொழுது கண்டிப்பாய் கண்ணே
கண்ணா, என்னை கைவிட்டுவிடாதே கண்ணா
அது என் உயிரை விட்டுவிடுவதற்கு சமம் ஆண்டாளே
கண்ணா
ஆண்டாளே வா நீரைவிட்டு வெளியேறலாம்
வெள்ளத்தில்தானே மச்சமாய் வந்தாய், நீரில்தானே நீ கூர்மமாய் வந்தாய், நீரில் தொலைந்த வேதங்களைதானே வராகமாய் மீட்டாய், அப்படி இந்த பிறவி வெள்ளத்தில் இருந்து என்னை மீனாய் வந்து தாங்கு, என்னை கூர்மமாய் காப்பாற்று கண்ணா, வராகமாய் பூமியினை உன் மூக்கில் தாங்கியது போல் என்னை உன் கரங்களால் தாங்கி கொள் கண்ணா
ஆண்டாளே நீரில் நின்று இதையா நினைந்து கொண்டாய்?
காணும் காணாத எல்லாவற்றிலும் உன்னை தேடாமல் வாழ்வது ஒரு வாழ்வா கண்ணா…”
கண்ணனிடம் பதில் இல்லை, ஆண்டாள் அவன் நெஞ்சில் இறுக்கமாக சாய்ந்து கொண்டாள், ஒரு அழகான பட்டு கொண்டு அவளை மூடிகொண்டான் கண்ணன், ஆண்டாள் மனம் சிலிர்த்து பரவசமாக கண்களை மூடிகொண்டாள்