பொங்கல்
வேதங்களில் சூரியன்
சங்க காலத்திலோ இல்லை பண்டைய காலத்திலோ உழவனுக்கு விழா, உழவர் பண்டிகை என ஏதுமில்லை, 18ம் நூற்றாண்டுக்கு முன் அப்படி ஒரு விழா கொண்டாடப்பட்டதாக எந்த ஆதாரமுமில்லை.
தைமாதம் அறுவடை நாள் என்பதெல்லாம் சரி, ஆனால் முப்போகம் விளைந்த மண்ணில் ஒவ்வொரு நான்கு மாதத்துக்கு ஒருமுறை அறுவடை நடந்து கொண்டேதான் இருந்தது, அதனால் இது அறுவடை விழா என சொல்லிவிடுவதிலும் அர்த்தமல்ல.
உழவுக்கும் உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமானது சூரியன் என்பதை உணர்ந்த இந்துமதம் அவரை பிராதானமாக கொண்டாடியது, உலக இயக்கத்தை கூர்ந்து நோக்கிய இந்துமதம் கிருமிகள் முதல் பயிர்கள் மானுடம் வரை உருவாகி வளர அடிப்படை காரணம் சூரியனே என வணங்கி நின்றது.
உழவன் விழா , உழவர் திருநாள், தமிழர் திருநாள் என ஒன்றுமே நடந்த ஆதாரமில்லையே தவிர இந்துக்களின் பிரதான வழிபாடான சூரிய வழிபாடு இருந்தது, அதற்கு பல வகை காரணமும் இருந்தது

சூரிய வழிபாடு சௌமார பிரிவு என பெரிதாக இருந்த இடம் இது, சௌராஷ்ட்ரா போன்ற பகுதிகள் அப்படித்தான் அழைக்கவும் பட்டன, வடக்கே கோனார்க்கில் இருந்து தமிழக சோழ மண்டல சூரியனார் கோவில் வரை ஆலயம் உண்டு
கடலுள் மூழ்கிய பூம்புகாரிலும் இதர தென்னக பரப்பிலும் சூரிய வழிபாடு இருந்திருக்கின்றது
இதனை இரு இடங்களிலும் அதாவது வேதங்கள் சொல்லும் வழிபாட்டிலும் தமிழ் பேசும் இந்துக்கள் படைத்த சங்க கால பாடல்களிலும் காணலாம்
வேதங்களில் சூரியனுக்கு தனி இடம் கொடுத்து போற்றபடுகின்றது, அதனை பற்றி சொல்லாத வேதமில்லை, மந்திரங்களில் சிறந்ததான காயத்திரி கூட சூரியனை போற்றித்தான் பாடுகின்றது
அகத்தியர் ராமனுக்கு அருளிய அந்த “ஆதித்ய ஹிருதயம்” எனும் ஸ்லோகத்தின் சக்தியும் புனிதமுமே மகா பெரிது
ரிக் வேதம் சூரியனை அக்னியின் முதல்வன் என்று போற்றுகிறது.
யசூர் வேதம் சகல உலகத்தையும் காப்பவன் என்று பாடி பணிகிறது.
சாம வேதம் உலகத்தை ஒளிர்விப்பவன் என கீதம் இசைக்கின்றது.
சதபத ப்ராம்மணம் சூரியனை சோதி பிழம்பு என்றும் தங்க ஆரங்களால் ஆன வட்டம் எனவும் வியந்து போற்றுகிறது.
பவிச புராணம், பிரம்ம புராணம், வராக புராணம், மச்ச புராணம், அக்னி புராணம், கருட புராணம், பவிசோதிர புராணம், காளிகா புராணம், மார்க்கண்டேய புராணம் ஆகிய பழம்பெரும் புராணங்களில் சூரிய வழிபாட்டின் மேன்மைகள் விவரிக்கப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக கண்ணன் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வேத சாஸ்திரத்தில் நான் சாம வேதமாகவும், பிரகாசிக்கும் பொருட்களில் நான் சூரியனாகவும் இருக்கிறேன் என தெளிவாக சொல்கின்றான்
ராமாயணத்தில் பாடபடும் சூரியன் புகழ் மகாபாரத்தின் பல இடங்களிலும் பாஞ்சாலிக்கு அவன் அட்சய பாத்திரம் கொடுத்தது வரை பல இடங்களில் பாடபடுகின்றது
“‘த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண ஸரஸிஜாஸன
ஸந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவான் கிரீடீ ஹாரி ஹிரண்யவபு: த்ருத சங்கசக்ர:” எனும் ஒரு ஸ்லோகம் சொன்னது ஆயிரம் விளக்கங்களுக்கு சமம்.
இப்படி வேதங்களும் ஸ்லோகங்களும் கொண்டாடி தனி தேவதையாக பாடிய அந்த சூரியனை கோவில் கட்டி கொண்டாடியது இந்துமதம்
அவனுக்கான நாளையும் அதுவே குறித்தது
வாரத்தின் முதல் நாள் சூரியனுக்கு என குறித்த இந்து முன்னோர்கள், நாளெல்லாம் சூரியனை வணங்கிவிட்டு வேலையினை தொடர செய்த இந்துக்கள், ஞாயிற்று கிழமையினை ஞாயிறு எனும் சூரியனுக்கு படைத்தனர்
அதுதான் இந்துக்களின் வார தொடக்கநாளாக இருந்தது, அன்று சூரியனை சிறப்பாக வணங்குவது அவர்களின் இயல்பான ஒன்று
சில இடங்களில் ஞாயிற்று கிழமை சூரிய விரதம் இருக்கும் காட்சிகளும் அன்று இருந்தன
இப்படியெல்லாம் சூரியனை மிக மிக கொண்டாடிய இந்துமதம் பருவகால ரீதியாகவும், வானியல் ரீதியாகவும் தை மாதம் முதல் நாளையொட்டி மகர சங்கராந்தியாக பெரிதாக கொண்டாட முனைந்தது
பருவகால அடிப்படையில் அது பனிநீங்கி, மழை நீங்கி சூரியன் வெளிபடும் தருணம் கடந்த சில மாதங்களாக இருந்த பனியாலும் மழையாலும் சில நோய்கள் பரவும், சூரியன் மங்கிய இடத்தில் நோய்கிருமிகளும் பூஞ்சைகளும் வளரும்
சூரியன் வரும் காலத்தில் இனி அந்த நிலைமாறும் என்பதால் உற்சாகமாகி அதனை வரவேற்கும் விழாவாக அது இருந்தது
சில மாதங்களாக சூரிய ஒளி சரியாக விழுந்திருக்காது அது மருத்துவ மொழியில் “விட்டமின் டி” குறைபாட்டை உருவாக்கும், இதனால் சூரியன் சரியாக வர தொடங்கியதும் அந்த வெயில் படுமாறு எல்லோரும் வெளியில் வரவேண்டும்
பொங்கல் கால கொண்டாட்டமெல்லாம் இப்படி தொடங்கியதே
இன்னொரு காரணம் மகர ராசியில் சூரியன் நுழையும் காலமாய் இருந்தது, நீர் ராசியான மகர ராசியில் சூரியன் வரும் போது , மழைக்கும் நீருக்கும் ஆதாரமான சூரியனை நன்றி செலுத்தும் விதமாக உண்டு
இது இன்றளவும் மகர சங்கராந்தி என மற்ற மாகாணங்களில் கொண்டாடபடுவதை காணலாம்
மகர ராசிக்கு அதிபதி சனிபகவான், சனிபகவான் என்றால் அடிதட்டு மக்களின் மனநிலைக்கு காரணமானவர் என பொருள், அந்த ராசிக்கு சூரியன் வரும்பொழுது சில கொண்டாட்டமும் உற்சாகமும் மனரீதியாக அவர்களுக்கு அவசியம்
இதனால் வீடுகளுக்கு வெள்ளை அடிப்பதும் இன்னும் பல வகை உணர்ச்சி போராட்டங்களில் சிக்கிய மனதை திசை திருப்புதலும் அவசியம்
ஒரு மனிதனின் குழப்பமான நிலை உணர்ச்சிவசபட்ட நிலை என்பது ஆபத்தானது , உணர்ச்சிவயமான நிலையிலே ஒரு மனிதன் தடுமாறுவான்
அப்படிபட்டவனை உற்சாகமாக வைக்க பண்டிகையும் கொண்டாட்டமும் அவசியம், அவன் நினைவுகளை பாதிக்கும் பழைய பொருட்களை பழைய நினைவுகளோடு வீசிவிட்டு அவனுக்கு புதிதாக எல்லாம் கொடுப்பதும் அவசியம்
வீட்டின் சுவர்கள் கூட எண்ண அலைகளை தாங்கி நிற்பவை என்பது இந்துக்கள் நம்பிக்கை இதனாலே ஒருவர் இறந்தாலும், சுபகாரியம் தொடங்கினாலும் வீட்டுக்கு சுண்ணம் அடிப்பது வழமை அது வெறும் அலங்கார அல்ல, ஆயிரமாயிரம் சூட்சுமங்களை உள்ளடக்கியது
இப்படியெல்லாம் தொடங்கிய சூரிய விழாவின் முந்தைய நாள் இந்திரனுக்கானது என்பது மரபு
இந்திர வழிபாடு கோவர்த்தன மலையினை கண்ணன் தூக்கி இந்திரனின் கர்வத்தை அடக்கியபின் இல்லை என்பதெல்லாம் சரியல்ல, அது பூம்புகார் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இருந்தது
கொண்டாட்டத்துக்கும் உணர்ச்சி கொந்தளிப்புக்கும் காரணம் அதே நேரம் சுகமும் போகமும் தருபவன் அவனே, அவனுக்கு நன்றி சொல்லித்தான் அந்நாள் போகி என்றானது
மறுநாள் மகர ராசிக்கு வரும் சூரியனை வரவேற்று வழிபாடுகள் நடக்கும், சூரியனால் பெற்று கொண்ட நன்மைகளை அடையாளம் காட்டும் சடங்கு அது
உணவு, உடை, பால், இனிப்பு, ஆடுமாடு என எல்லாம் சூரியனிடம் இருந்து வந்ததை காட்டி நன்றி தெரிவித்து வணங்கும் நாள் அது
இதனை பல வகையில் தென்னக மக்களும் வணங்கியதை சங்கபாடல்கள் சொல்கின்றன
சூரியனை எப்படி போற்றி வணங்கினார்கள் என்பதை நக்கீரர் சொல்கின்றார்
“உலகம் உவப்ப வலனேர்பு திருதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு
ஓவற விமைக்கும் சேணவிளங் கவிரொளி” (திருமுருகு:1 – 3)
என்று செவ்வேல் குமரனுக்குப் பரிதியை உவமை கூறுகின்றார். மேலும் ஞாயிறு இல்லையென்றால் ஒளியில்லை, வளியில்லை, முகிலில்லை, மழையில்லை, அதாவது ஒன்றுமே இல்லை. அதனாலேயே ஞாயிற்றினை மக்கள் கண்கண்ட தெய்வமாகப் போற்றி பாடுகின்றார்
தொல்காப்பியம் சூரிய வழிபாட்டை சொல்கின்றது, தமிழ் இலக்கணத்தின் அஸ்திபாரமான அந்த நூலின் ஆதாரம் முக்கியமானது
“கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல்.பொருள்.புறம்,நூ-33)
நச்சினார்க்கினியர், சூரியனை “எல்லா நிறத்திற்கும் பொதுதெய்வம்” என் பாடி மகிழ்கின்றார், எல்லா நிறங்களும் சூரியனில் இருந்து வருகின்றன என சர்.சிவி ராமன் நோபல் பரிசு வாங்கியதன் நுட்பத்தை என்றோ அறிந்திருந்தனர் இந்துக்கள்
இறையனார்களவியல் உரையில் அதன் ஆசிரியர், “தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர்; வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர். பிறர் பகவதியையும், ஆதித்தனையும் தெய்வம் என்று வேண்டுவர்”. என்று கூறுகிறார்.
“பசுங்கதிர் மதியமொடு சுடர்கண்ணாக” (நற்,கடவுள் வாழ்த்து.4)
“ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” (சிலம்பு.மங்கலவாழ்த்து.4) என்று குறிப்பிடுகிறார்.
மகா முக்கியமானவரான அப்பர் சாமிகள் அருக்கன் எனும் சூரியனை போற்றுகின்றார்
“அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில்
அருக்கரைனுரு வல்லனோ”
முத்தமிழ் காப்பியமாகப் போற்றப்படும் சிலப்பதிகாரக் கானாத்திறமுரைத்த காதையின் பாடலடியில்,
“பகல் வாயிலுச்சிக் கிழான் கோட்டம்”(சிலம்பு,கானா.உ.கா: 10-11)
என்று பயின்றுவருகிறது. இங்கு ஒரு கோயில்பெயர் உள்ளது. உச்சிக்கிழான் என்பவன் சூரியன்,
“பகல்வாயில் உச்சிக்கிழான் என்பது பகல்பொழுதுக்கு வழியான உச்சிக்கிழான்” – சிலப்பதிகாரம்:
“கீழ்த்திசையில் தோன்றுகின்ற சூரியன் கோயில்” – சிலப்பதிகாரம்: அடியார்க்கு நல்லார் உரை.
இப்படி திரும்பும் பக்கமெல்லாம் சூரியனை பற்றி இந்துக்கள் செய்த வழிபாடும் அதன் தின்மையும் விளங்கும்
இப்படி வேதங்களும், இந்துக்களாய் வாழ்ந்த தமிழர் மரபும் அவர்கள் வாழ்வும் இலக்கியமும் சூரிய வழிபாட்டை அதுவும் மகர ராசிக்கு வரும் சூரியனை வரவேற்று போற்றிய நிகழ்வை தெரிவிக்கின்றது
ஆம், பொங்கல் என்பது அறுவடை நாள் அல்ல, உழவர் திருநாள் அல்ல அப்படி சொல்லபட்டதெல்லாம் இந்துக்களின் மரபை உடைக்கவும் குழப்பவும் சொன்ன ஏற்பாடுகள் அதனாலே பிரிட்டிஷ்காலத்தில்தான் அவை உருவானதை கவனிக்கலாம்
அது உண்மையில் சூரிய வழிபாடு, அனுதினும் வாரத்தின் தொடக்க நாளிலும் செய்யபடும் சூரிய வழிபாட்டினை மிக உச்சமாக கொண்டாடிய ஒரு வழிபாடு
அந்த வழிபாட்டை கொண்டாடும் எல்லா இந்துக்களுக்கும் “மகர சங்கராந்தி” வாழ்த்துக்கள்
சூரியன் போல் உங்கள் வாழ்வும் வளமும் பிரகாசிக்கவும், எந்நிலையிலும் பலன் எதிர்பாராது கடமை மட்டும் செய்யும் சூரியன் போல தேசத்துக்கான இந்து மதத்துகான கடமைகளை செய்ய சூரிய பகவான் எல்லா நலனையும் அருளட்டும்
