மாட்டுப்பொங்கல்
இன்று காளைமாடுகள் விவசாயத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. உழவு, வண்டி மாடு, ஏற்றம் இறைத்தல் என காளைகளின் எல்லா வேலைகளையும் எந்திரங்கள் பறித்துக்கொண்டன, காலமாற்றம்.
விவசாயம் மட்டுமல்லாது செக்கு இழுத்தல், பாரங்களை இழுத்தல் என எல்லா கனரக தொழிலிலும் காளைகள்தான் அக்காலத்தில் இருந்தன, இனி அப்படியான காலம் இல்லை.
பாலுக்காகவும் உணவுக்காகவும் மட்டும் மாடுகள் பராமரிக்கப்படும் காலமிது, அந்த தேவையும் இல்லையென்றால் மாடுகளை இனி மனிதன் மறந்து விடுவான்.
குதிரைகளும், யானைகளும் மனிதனிடமிருந்து விலகியதைப் போல மாடுகளும் பின்னொரு காலத்தில் விலகலாம், கலிகாலத்தில் எல்லாம் சாத்தியம்.
காளைகளுடன் விவசாயம் செய்த கடைசி தலைமுறை நாமே என்பதையும், இனி காளைகளை வளர்த்து பழக்கி மூக்கணாங்கயிறுகட்டி ஆண்மை நீக்கம் செய்து லாடம் கட்டி வண்டியிழுக்கும் உழவுக்கு பழக்கக் கூட யாருமில்லை. அந்த தொழிலே அழிந்துவிட்டது என்பதும் அதிர்ச்சி.
எவ்வளவு அழகான கலை அது? எவ்வளவு அறிவார்ந்த விஷயம் அது?
உருவத்தால் பெரிய காளையினை குட்டியில் இருந்தே பழக்கி அதற்கு ஆபத்தில்லாமல் பல காரியங்களை செய்து அதோடு உறவாடி வீட்டில் ஒருவரைப்போல் வளர்ப்பது பெரும் கலை.
அக்கலை இந்துக்களுக்கு பூரணமாக இருந்திருக்கின்றது, காளைகளின் வளர்ப்பாலே தான் விவசாயம் செழித்து இந்துஸ்தானம் உலகின் பொன்விளையும் பூமியாக இருந்தது.
காளைகள் இருக்கும் வரை இங்கே எந்திரம் விற்கமுடியாது, எந்திரம் விற்காமல் மேற்குலகம் வாழ முடியாது என திட்டமிட்டு பசுவதைகள் நடந்தன. மாட்டுக்கறி கொடுமை நடந்தது இதெல்லாம் அன்றே தொடங்கிற்று.
இனி காளை விவசாயம் என்பது கனவுதான், ஆனால் அந்த நினைவுகள் சுகமானவை, நினைத்தாலே மனம் குளிரும் அழகிய காலங்கள் அவை.
நிச்சயம் முன்னோர்கள் நிம்மதியாக வாழ்ந்திருக்கின்றார்கள், மாடுகளும் கன்றுகளுமாக சந்தோஷமாக வாழ்ந்திருக்கின்றார்கள், இன்று விஞ்ஞானம் என மகிழ்ச்சி தொலைத்த சமூகமாகிவிட்டோம், நோய்களும் மருந்துகளும் உண்ணும் நோயாளி சமூகமாகிவிட்டோம்.
காலம் 1990க்கு பின்னதர்தான் வேகமாக மாறிற்று. அதற்கு முன்பு கூட காளைகள் அதிகம் இருந்தன. அப்போதும் அதற்கு முன்பும் வாழ்ந்த ஒவ்வொரு மக்களிடமும் அந்த பாதிப்பு உண்டு.
சில வருடங்களுக்கு முன் ஒரு முதியவரை சந்திக்கும் போது அது தெரிந்தது, அவருக்கு அப்போது 85 வயது இருக்கலாம், பிரிட்டிஷார் காலத்தில் மலேசியா வந்தவர் அங்கேயே தங்கிவிட்டார்.
பழைய தென்னக நினைவுகள் அவருக்கு பிரசித்தியானது என்பதால் நிறைய சொல்லித் தருவார், மாடுகள் பற்றி பேசும்போது அவர் சொன்னது மறக்க முடியாதது.
“மாடும் வீடும் வேறு வேறுன்னு வாழலய்யா, மாடுகள வீட்டுல ஒருத்தங்களாகத்தான் வளத்தோம், மாடு இல்லண்ணா விவசாயமே இல்ல.
ஒரு ஜோடி காளை இருந்தா ஒருவன் எப்படியும் பிழைச்சுக்குவான், மாட்டு வண்டி, மாட்டு லாடம், மாட்டுக்கு கயிறு, வைக்கோல் வியாபாரம்னு பெரிய தொழில் மாடுகள வச்சி இருந்திச்சி.
சொன்னா நம்பமாட்டீக, திடீர்னு கல்யாணம் இல்ல வேற செலவுண்ணா மாடுகள விற்கணும், அப்ப ஒரு வீடே கதறி அழும்.
பொதுவா வீட்டு பொம்பிளைங்கதான் பசு, கண்ணுகுட்டின்னு வளர்ப்பாங்க, காளைகள் பெரும்பாலும் வயல் தோட்டம் வண்டிமாடுன்னு போயிரும், பசுவும் கண்ணுகளும் வீட்டிலே கிடக்கும், பெண்கள்தான் பார்த்துப்பாங்க.
அப்ப கல்யாணம் கட்டி போற பொண்ணுங்க, அப்பா அம்மாவ கூட பொறந்தவகள கட்டி பிடிச்சு அழுவுறமாதிரி மாடுகளையும் கட்டி பிடிச்சி அழுவாங்க, மாடுகளுக்கும் அறிவு உண்டுய்யா. அதுகளும் மிரண்டு நிற்கும், சில மாடுகள் அந்த பெண்கள் போன அப்புறம் சாப்பிடாது மேயாது, எதையோ பறிகொடுத்தது போல கிடக்கும்.
அப்புறம் அந்த பெண்கள் வந்துட்டா வாலை சுழட்டி ஓடும் உரசும், நாக்கால நக்கும். பாவமா நிக்கும்யா, பிறகு அந்த பொண்ணுங்க வீட்டுக்கே கொடுத்து விட்டுருவாக.
மேலப்பாளையம் சந்தை இன்னும் பல மாட்டு சந்தைகள் விசேஷம், ஆனால் விக்குற எவனும் மாட்டை சந்தோஷமா விற்கமாட்டான், அதுகளும் சந்தோஷமா வராது.
ரயில்வே ஸ்டேஷன்ல வழியனுப்ப வரவுக அழுற மாதிரி ஆளாளுக்கு அழுவாக.
அதெல்லாம் ஒரு காலம், மாட்டோடதான் நாலுமணிக்கு தண்ணி இறைக்க போவோம், மாட்டோட உழுவோம், மாட்டு வண்டியிலே வருவோம்.
இன்னும் பஞ்சம் வந்துட்டா கிணறு தோண்டனும். மாடு இல்லாம முடியாதுல்லா, அவ்வளவு பாடுபடும்.
விளைஞ்சத விக்கணும்னா அதுகதான் முக்கியம், வண்டி கட்டிகிட்டு சாத்தூர் விருதுநகர் தாண்டி மதுரை வரை போகணும், இந்த பக்கம் கோட்டார் திருவனந்தபுரம் தாண்டி போகணும் அதுகதான் மாசக்கணக்குல நடக்கும்.
திருவிழா காலம்னா என்னங்கிறிய? பகவதி அம்மனோ, செந்தூர் முருகனோ, முத்தாரம்மனோ எந்த பண்டிகைன்னாலும் மாடுகட்ட இடம், வண்டி குவிக்க இடம்னு எல்லாம் காளையாகத்தான் கிடக்கும்.
திருவிழான்னா மாடுகளுக்கு புல்லுவிக்க, வைக்கோல் விக்கன்னு தனி சந்தையே இருக்கும்.
மாடு வீட்டுக்கு மட்டும் இல்லய்யா நாட்டுக்கே தொழில் கொடுத்துச்சி, மாடுதான் பெரிய பணம், பெரிய தொழில் வருமானம், “மாடல்லது மற்றயவை”ன்னு வள்ளுவன் சும்மா சொல்லல.
நானும் ஒரு ஜோடி மாடு வச்சிருந்தேன், மயிலை காளன்னு பெயரு. முழுக்க வெள்ளையா இருந்தா அப்படி சொல்வாக.
சிந்தி, காங்கேயம், ஓட்டங்காளைன்னு பல ரகம் உண்டு, ஒட்டங்காளை பந்தய வண்டிக்கு வரும், பரமகுடி காளையெல்லாம் ஜல்லிக்கட்டுக்கு.
உழைக்கிறதுக்கு சில காளைகள்தான் சரியா வரும், மயிலை காளை ரகம் அதுல ஒண்ணு.
அந்த மாட்டுல ஒரு மாடுக்கு அவ்வளவு அறிவு, ஒரு முறை சொல்லிட்டா அப்படி பிடிச்சிக்கோம், அத பத்தி நினைச்சாலே அழுகையும் சிரிப்பும் மாறி மாறி வரும்.
அவ்வளவு அறிவுய்யா, நான் சந்தோஷமா இருந்ததே அப்பத்தான்.
வயல்ல விட்டா வரப்பு புல் மட்டும் மேயும், பயிர்ல வாய் வைக்காது, வண்டில கட்டினா மேடு வந்துட்டா தூரமா இருந்தே ஓடிப் போய் ஏறிக்கும்.
மதுரையில இருந்து வண்டி கட்டினா ஊருக்கு தானா வரும், அதுபோக்குல வரும்.
ஒரு தடவ கோட்டார்ல இருந்து வரும்போது முப்பந்தல் பக்கம் கோவில் பக்கத்துலே நின்னுட்டு, ஒரு அடி எடுத்து வைக்கல, நான் அடிச்சும் நகரல. கொஞ்ச நேரம் கழிச்சு நடந்திச்சு.
கோவில் முன்னாடி வந்ததும் தலைய திருப்பி அம்மன பார்த்து ஆட்டுச்சுது, அம்மன் அங்க நடந்து போயிருக்கா அது கண்ணுக்கு தெரிஞ்சுருக்கு.
ரொம்ப அறிவுய்யா, நாம கோபமா இருந்தா தள்ளி நிக்கும், சிரிச்சி பேசினா முதுகுல வந்து உரசும், எனக்கும் அதுக்கும் அவ்வளவு பொருத்தம்.
ஒரு அடி அடிக்க வேண்டாம், ஒரு குத்து குத்தவேண்டாம். உழவோ வண்டியோ பூட்டியாச்சின்னா அதுபோக்குல வேலை செய்யும்.
அதுக்கு “நல்லமான் கன்று” அப்படி பெயர் வச்சி வளத்தேன், அது இல்லாம நான் இல்ல.
நல்லா உழைச்சி கொட்டிச்சியா, அப்புறம் வயசாயிட்டு. வீட்டுல கட்டிவச்சோம், பல் எல்லாம் விழுந்துட்டு. கஞ்சி வச்சி கொடுத்து காப்பாத்தினோம்.
ஒருநாள் செத்துபோச்சி, மாட்ட எடுக்கிறவன் வந்தான், தூரமா கொண்டு போய் உரிச்சிக்க. எங்க ஊர் பக்கம் உரிக்காதன்னு அனுப்பினோம்.
அது போன அப்புறம் வீட்டுல ஒருத்தர் போனமாதிரி இருந்திச்சி, அப்புறம் நான் இங்க வந்துட்டேன், அப்பப்ப ஊருக்கு போவேன் அந்தவரப்பு, அந்த வயல், அந்த வீடெல்லாம் அந்த மாடுதான் நினவுக்கு வரும்.
அது நெத்தியில ஒரு சங்கு கட்டியிருந்தேன், கழுத்துல மணி உண்டு, இரண்டையும் இப்ப வரைக்கும் பத்திரமா வச்சிருக்கேன்.
இந்த ஊர்ல நான் முதல்ல கூலிவேலைதான் செஞ்சேன், ஐஸ் கடையில பாரம் சுமக்கணும், ஒவ்வொரு நாளும் வேலைக்கு போகும் போது அந்த மாடு நினைப்பு வரும்.
தலையில சுமைய வைக்கும் போது அந்த மாடு வண்டி நுகக்கால ஓடி வந்து தலைய கொடுத்து தாங்கும் பாத்தியளா, அதுதான் நினைவுக்கு வரும்.
எவ்வளவோ வேலை செஞ்சேன் தொழில் செஞ்சேன், அம்மா அப்பா போயாச்சி பேரப் பிள்ளைகள் வளந்துட்டாக.
உறவு, சொந்தம் பந்தம்னு எவ்வளவோ மாறிட்டு, நிறைய மறந்துட்டு, ஆனா அந்த மாட்டு முகம் மறக்கல.
இன்னவரைக்கும் மாட்டுக்கறி தொட்டதில்ல, மாட்டுபொங்கல்னா முழு விரதம்ய்யா.
மாடுங்கிறது வெறும் மிருகம் இல்ல, அது மனசோட வந்த பாசம்யா, இப்போ எல்லாம் மாறிட்டு. இனி காளை, வண்டி உழவுன்னு யாரும் செய்யப் போறதில்ல.
இனி காளைகள பாக்கணும்னா இந்து கோவில்கள்ல மட்டும்தான் பார்க்கலாம், இந்துமதம் இருக்கிறவரை காளை அழியாதுய்யா அதுதான் ஆறுதல்”
ஆம், உண்மையும் அதுதான். ஆனால் லட்சோப லட்சம் ஆண்டுகளாக மாட்டுக்கும் மனிதனுக்கும் குறிப்பாக இந்துக்களுக்கும் மாடுகளுக்கும் இடையேயான பந்தம் காலத்தால் அழியாதது , இந்துமதம் அப்படி நிறுத்தி வைத்தது.
அதன் தெய்வங்களெல்லாம் மாடுகளை மேய்த்தன, நந்தியாகவும் பசுவாகவும் மாடுகளோடே நின்றன, அவைகளின் வழிபாடுகள் பால், நெய், தயிர் என மாடுகளின் பங்களிப்பு இல்லாமல் இருந்ததே இல்லாதவாறு அமைக்கப்பட்டன.
மாட்டின் தோல் இசை கூட அவசியம் எனும் அளவு மாடுகளுக்கு தனி இடம் கொடுத்தது இந்துமதம்.
மாடுகளை மனுகுலத்தின் ஆதாரமாக அது கொண்டாடி காட்டியது, அதனாலே கோவில் காளைகள், கோசாலைகள் என மாடுகள் காலம் காலமாக பாதுகாக்கப் பட்டன.
ஜல்லிகட்டு எனும் ஏறுதழுவுதல் கோவில் விழாவாக இருந்தது, இதனால் ஆண்கள் உடல்பலமும் வலுவாயிற்று. போராட்டமும் வீரமும் வளர்ந்தது, தைரியமும் போர்குணமும் வளர்ந்தது.
வலுவான காளைகளும் உருவாயின, காளை இனப்பெருக்கம் சரியாக நடந்தது.
இந்துமதம் அவ்வளவு ஞானமாக எது அன்றைய மக்களின் உயிர்நாடியோ அதனை நந்தி என்றும், விடை என்றும், கோமாதா என்றும் கொண்டாட வைத்து மக்கள் வாழ்வை காத்தது.
இனி எதிர்காலத்தில் மக்கள் வாழ்வில் இருந்து மாடுகள் அகலும், கொஞ்சம் கொஞ்சமாக அகலும்.
ஆனால் இந்துமத ஆலயங்கள் ஒன்றே வரலாற்றையும் அன்று மக்கள் வாழ்ந்த வாழ்வையும் மாடுகள் செய்த பெரும் பங்களிப்பையும் காத்து நிற்கும்.
இந்துகோவிலும் மதங்களும் இருக்கும் வரை பசுக்களும் காளைகளும் நிலைத்து நிற்கும்.
இந்துமதம் ஞானமானது நன்றியுடையது, இந்துக்கள் வாழ்வில் எதெல்லாம் உழைத்து கொட்டியதோ எதெல்லாம் அவர்கள் வாழ்வை காத்து வந்ததோ அதற்கெல்லாம் தனி இடம் கொடுத்தது
உழவுக்கும் தொழிலுக்கும் பயன்பட்ட மாடுகளை, ஆதாரமாக நின்ற மாடுகளை மனிதன் மறந்தாலும் இந்துமதம் மறக்காது தவிர்க்காது, அங்கே தவிர்க்க முடியாது.
அது காளைகளை பசுக்களை எக்காலமும் தன்னோடு வைத்துக்கொள்ளும்.
எதிர்காலத்தில் விஞ்ஞானம் தோற்கலாம், எரிபொருள் பாவனை தோற்கலாம், காந்தபுலம் மாறினால் மின்சாரமின்றி எந்திரங்களே முடங்கலாம்.
அப்படி ஒரு காலம் வரின் மானிட இனம் காளைகளிடமே சரணடையும், அந்த மறுவாழ்வை இந்துமதமே வழங்கும், அதன் ஞானம் அப்படியானது.
இந்துமதம் என ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் யானை குதிரை காளை பசு என எல்லாமே எதிர்கால சந்தத்திக்கு தெரியாமல் போயிருக்கும். அதன் பின் மீள கொண்டுவருதல் என்பது முடியாது.
மானிடரின் எல்லா பக்கத்தையும் காத்து நிற்கும் இந்துமதம் மாடுகள் எனும் பெரும் ஆதாரத்தையும் தன்னுள் காத்து நிற்கும், அழிவில்லாத இந்துமதம் மாடுகளையும் அழியவிடாது.
அது அர்த்தமுள்ள இந்துமதம் மட்டுமல்ல, முழு மகா ஞானமுள்ள இந்துமதம் கூட.
“ஓ உலக மாந்தரே, எங்கள் இந்துமதம் மானிடருக்கானது மட்டுமன்று. அது பாரத தேசத்தில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்குமானது.
அந்த மகா ஞான மதத்தால் எல்லா உயிர்களும் காக்கப்படுகின்றன, எங்கள் மதம் நாகங்களுக்கும் பால் ஊற்றுகின்றது, பசுக்களுக்கும் காளைகளுக்கும் தெய்வத்தின் பெயரால் உணவூட்டி காக்கின்றது.
பசுவினை கோமாதா எனச் சொல்லி வணங்குகின்றவர்கள் நாங்கள், காளைகளை இறைவாகனமாகக் கருதி நின்று காப்பவர்கள் நாங்கள்.
இதனாலே எங்கள் மண்ணில் எல்லா உயிர்களும் பெரும் இடம் பெற்றன, அவை எங்களோடு உழைத்தன. எங்கள் மண்ணை வளமான நாடாக்கின.
அந்த நாட்டை தேடித்தான் எல்லா மாந்தரும் வந்து அடிமை படுத்தினார்கள், அதை எதிர்த்து நடந்த போர்களில் சத்ரபதி சிவாஜியோடு மாடுகளும் போராடின என்பதை நீங்கள் அறிந்திருக்கமுடியாது.
எங்கள் வாழ்வும் மாடுகளோடுதான் இருந்தது, தனக்காக வாழும் மாடுகளை தெய்வத்தின் சாயலாகக் கருதி அவை வாழ்ந்தால் சமூகம் வாழும் என வழிபட்ட தர்மம் எங்களுடையது.
அப்படி ஒரு உன்னத வழக்கம் உலகில் வேறு எங்கும் இருப்பதை உங்களால் காட்டமுடியுமா? நாங்கள் அந்த பெரும் ஞானநிலையினை கொண்டிருந்தோம்.
மாடுகள் வடிவில் இறைசக்தியே உதவுவது எனச் சொல்லி, பரம்பொருள் நமக்கு தந்த சக்தி இது எனச் சொல்லி விலங்குகளிலும் இறைவடிவத்தைக் கண்ட பெருமைமிக்க ஞானச்சமூகம் எங்களுடையது.
எங்கள் பாரதம் ஞானமானது, அது விலங்குகளையும் தெய்வத்தின் பெயரால் அரவணைத்து அதனை வாழவைத்து தானும் வாழ்ந்து உலகுக்கே வழிகாட்டிய உன்னத தர்மம் கொண்டது” என சுவாமி விவேகானந்தர் சொன்னது முக்கால உண்மை.