முருகப்பெருமான் ஆலயங்கள்

முருகப்பெருமான் ஆலயங்கள். கந்தன்குடி.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளத்தில் இருந்து திருநள்ளாறு செல்லும் சாலையில் அமைந்துள்ளது அந்த கந்தன்குடி ஆலயம்.

முருகப்பெருமான் குடிகொண்டுள்ள ஆலயங்களில் இந்த கந்தன்குடி ஆலயமும் மகா முக்கியமானது.

இந்த ஆலயம் அமைந்த வரலாறு சுவாரஸ்யமானது. அது இரு வரலாறுகளுடன் தொடர்புடையது.

முதலில் அந்த அம்பரன், அம்பன் எனும் அசுரர்கள் கதையினை கொண்ட வரலாறு உண்டு. துர்வாச முனிவர் அவசரமான காரியம் ஒன்றிற்காக சென்றபோது அசுர பெண் ஒருத்தி அவர்மூலம் குழந்தை ஒன்றை கேட்டு சிரித்தாள்.

அவளின் பரிகாசத்தை கண்டு, முற்றும் துறந்த தன்னிடம் அவள் விளையாடுவதை கண்டு கோபமுற்ற முனி, உன் பிள்ளைகள் உனக்கு சாபமாய் அமையட்டும் என சபித்துவிட்டு சென்றார்.

முனிவர் சாபத்தால் அவளுக்கு அம்பரன், அம்பன் என இரு மகன்கள் பிறந்தனர். இயல்பிலே முரடர்களாகவும் பேராசைக்காரர்களாவும் விளங்கிய அவர்கள் சிவனிடம் வேண்டி வரம்பல பெற்று அட்டகாசத்தை அதிகரித்தனர்.

அவர்கள் எல்லா உலகையும் போட்டு நசுக்கி எல்லா உயிர்களையும் இம்சித்தனர். இந்திரலோகத்தை கைப்பற்றி அடாதன அத்தனையும் அகங்காரத்தில் செய்தனர்.

அவர்களிடமிருந்து தப்பிக்கவும், தேவர்களை காக்கவும் வேண்டி இந்திரன் மகள் பூலோகம் வந்தாள். தேன்காடு எனும் வனத்தில் பன்னீர் மரத்தடியில் அவள் தவமிருந்தாள். தவமென்றால் மாபெரும் தவம்

அம்பரன், அம்பன் அசுரர்களின் அட்டகாசம் எல்லை மீறி செல்ல அவர்களை அழிக்க முருகப்பெருமானே நேரடியாக அவர்களை வதம் செய்ய கிளம்பினார்.

ஆனால், அதே நேரம் பார்வதி அன்னையின் சக்தி ஒன்று காளியாக உருவாகி அசுரர்களை அழிக்க வந்தது, அன்னை காளி முருகப்பெருமானை தடுத்து தானே அந்த அசுரர்களை அழிக்கச் செல்வதாக சொன்னாள்.

முருகப்பெருமான் அவள் சொன்னதை ஏற்றுக்கொண்டு தான் திரும்பி செல்வதாக கூறினார், அன்னையோ அந்த தேன்காட்டில் அமரும்படியும் அங்கே அவர் இங்குவந்த நோக்கம் நிறைவேறும் எனவும் சொல்லி அனுப்பினாள்.

முருகப்பெருமான் இந்த தேன்காட்டு வனத்துக்கு வந்தபோது தேவயானை அவரைக் கண்டாள், அவர்தான் அசுரரை அழித்து எல்லோரையும் காப்பவர் எனும் பெரும் நம்பிக்கை கொண்டு தன் தவம் முடித்து வானகம் ஏகினாள்.

(பின் அவளை சூரபத்மனை வதம் செய்தபின் முருகப்பெருமான் மணந்துகொண்டது நடந்தது)

இங்குதான் அவள் முருகப்பெருமானை முதலில் கண்டாள்.

இங்கே இந்த சம்பவம் நடக்க அங்கே அம்பம், அம்பரன் என் இரு அசுரர்களையும் சம்ஹாரம் செய்தாள் அன்னை, அந்த இடம் அம்பரகத்தூர் என்றாயிற்று.

இன்றும் அம்பரக‌த்தூர் காளிக்கும் அவள் ஆலயத்துக்கும் சக்தி அதிகம்.

அந்த அம்பரகத்தூர் காளி முருகனை அந்த தேன்காட்டில் குடியிருந்து அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க சொன்னார், முருகப்பெருமானும் அப்படியே அமர்ந்து அருள்பாலிக்க தொடங்கினார்.

கந்தபெருமான் இப்படி குடி அமர்ந்த இடமாதலால் அது கந்தன்குடி என்றாயிற்று.

இந்த புராண சம்பவம் நீண்ட நெடுங்காலத்துக்கு முன் நடந்தது, பின் அப்பக்கம் மக்கள் பெருகிய காலத்தில் இந்தப் பக்கம் மேய்சலுக்கு வந்த பசுவொன்று இந்த இடத்தில் இருந்த புற்றின் மேல் அனுதினமும் பால் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது.

இதை கவனித்த மக்கள் அந்தப் புற்றினை தோண்டி பார்க்க உள்ளே முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சமேதராக முருகப்பெருமான் நின்ற திருக்கோல சிலை கிடைத்தது.

அந்தப் பன்னீர் மரத்தடியே முருகப்பெருமானுக்கு ஆலயம் கட்டி வழிபட தொடங்கினார்கள் பக்தர்கள், கந்தன்குடி ஆலயம் மெல்ல மெல்ல பிரசித்தியாயிற்று

அதிசயம் நிகழ நிழக பக்தர் கூட்டம் தேடிவந்தது.

எவ்வளவோ பேர் திருப்பணிகள் செய்தார்கள், அதில் மருதுபிள்ளை என்பவர் முக்கியமானவர், அவர்
இந்தக் கோவிலை 3 ஏக்கர் பரப்பில் கட்டிவைத்து, எதிரே குளமும் கட்டிவைத்து நன்செய் நிலம் 21 ஏக்கர், புன்செய் நிலம் 10 ஏக்கர் என எழுதிவைத்து வழிபாடுகள் தடையற நடக்க வழிசெய்தார்.

கந்தன்குடி ஆலயம் இன்று பிரசித்தியாக விளங்குகின்றது, நம்பி சென்று நலமடைந்தோர் எண்ணிக்கை பெருக பெருக அது இன்று முருகன் கோவிலில் முக்கியமானதாக எழுந்து நிற்கின்றது

இந்த ஆலயமும் அதன் தத்துவமும் இரு விஷயங்களை இரு தாத்பரியங்களை சொல்கின்றன‌.

முதலாவது, முருகப்பெருமானை பக்தர்களுக்கு அருள்பாலிக்க சொல்லிவிட்டு அசுரர்களை அழிக்க சென்றாள் அன்னை என்பது, முருகப்பெருமானிடம் வேண்டினால் அன்னை தானாக வந்து வரமருள்வாள் என்பதை சொல்கின்றது.

அன்னையின் அருள் ஒவ்வொருவருக்கும் அவசியம், அன்னையின் அருள்தான் ஒவ்வொரு விஷயத்தையும் முழுமையாக்கும்.

“ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டு எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே”

சித்தர்களில் முக்கியமானவரான திருமூலர் இப்படி அன்னையின் பெருமையினை அவளை வழிபட வேண்டிய அவசியத்தை சொல்கின்றார்.

இதைத்தான் சிவாலயம் பக்கமெல்லாம் காளி கோவில் கட்டி, தில்லை காளி என்றும் சிதம்பரத்தில் வைத்தார்கள்.

காரைக்கால் அம்மையார் சிவனை தவிர யாரையும் வழிபடமாட்டேன் என்றபோது காளியே வந்து அவளுக்கு உண்மை உரைத்து “வழிகாட்டும் காளி” என அமர்ந்ததெல்லாம் பக்தர்கள் வாழ்வில் உண்டு.

ஆம். அன்னையினை வணங்காமல் யோக வாழ்வு, தியானம் , தவவாழ்வு என எதுவும் சிறக்காது, எதுவுமே முழுமை அடையாது.

அதனால் முருகப்பெருமானை வணங்கினால் அன்னையின் அருள் பரிபூரணம் என்பதை சொல்லும் ஆலயம் இது.

அப்படியே தெய்வானை இங்கே காத்திருந்தாள் என்பது ஜீவாத்மா பரமாத்மாவுக்காக காத்திருப்பதை குறிப்பது.

பரமனை காண, இறை நிம்மதியினை காண, பல்வேறு தொல்லைகளால் கர்ம வினைகளால் ஆறுதல் தேடி அலையும் ஆத்மா நிம்மதி அடையும் தலம் இது என்பது பொருள்.

அசுரர்கள் என்பது தீரா தொல்லைகள், பெரும் வினைகள் அந்த வினைதீர்க்க வந்த ஆத்மா அதுபற்றி அஞ்சி ஒடுங்கி கலங்கி நிற்கும் போது முருகப்பெருமான் ஆறுதல் தருவார் என்பது அதன் தாத்பரியம்.

ஆம். முருகப்பெருமானை அண்டினால் ஆத்மா நிம்மதி அடையும் அதன் கர்மவினை தீரும் என்பது முதல் தாத்பரியம்.

அப்படியே முருகப்பெருமானை அண்டினால் இங்கே வந்து வணங்கினால் அன்னையின் அருள் கைகூடும் என்பது இன்னொரு தாத்பரியம்.

இந்த தலத்துக்கு செல்வோர் முதலில் அம்பரகத்தூர் காளியினை வணங்கிவிட்டு இந்த தலத்துக்கு வந்தால் நல்லது, அன்னையின் அருளோடு முருகப்பெருமானின் அருளும் நிறைய கிடைக்கும்

குடி என்றால் எல்லாம் நிறைந்த எனப் பொருள், குடித்தனம் என குடி என குடும்பத்தை சொல்வார்கள். ஊரை சொல்வார்கள் அதாவது எல்லா நல்ல விஷயமும் வாழும் விஷயமும் நிறைந்த ஒரு சேர்க்கை எனப் பொருள்

கந்தபெருமான் குடியிருக்கும் இந்த ஆலயமும் அப்படி எல்லா நலன்களாலும் நிறைந்தது அது நல்ல குடிவாழ்வை குடும்ப வாழ்வை தரும்.

ஆம். இது எல்லா தடைகளையும் நீக்கி, எல்லா இடர்பாடுகளை எல்லாம் நீக்கி பெரும் வரம் அருளும் ஆலயம்.

உங்கள் வாழ்வில் எல்லா பிரச்சினைகளும் இருக்கலாம், திருமண தடை இருக்கலாம், குடும்பத்தில் பெரிய குழபங்கள் இருக்கலாம், வாழவிடாத எதிரிகள் இருக்கலாம் , இன்னும் என்னென்ன வில்லங்கமும் இருக்கலாம்.

அதனை எல்லாம் இந்த ஆலயம் போக்கும்.

அம்பரகத்தூர் காளி எல்லா வில்லங்கமும் இடையூறும் நீக்கி நலமெல்லாம் தருவாள், முருகப்பெருமான் உங்களுக்கு எல்லா வரமும், அறிவும், ஞானமும் தந்து குடியும் குடும்பமுகாக வாழவைப்பான்.

குடி என்பது எல்லா வாழ்வியல் அம்சமும் தேவைகளும் நிறைந்த நிலை. அப்படி எல்லா வளமும் அறிவும் தெளிவும் ஞானமும் செல்வமும் எல்லாமும் உங்களை சூழ்ந்து வாழவைக்கும்.

கந்தன் குடியில் குடியிருக்கும் எம்பிரான் தன்னை அண்டியோர் குடியெல்லாம் கொடிகட்டி வாழ அருள்புரிவார்.

இந்த தலம் அற்புதமனாது அங்கே விநாயகப் பெருமான், வள்ளி, தெய்வானை என எல்லோருக்க்கும் தனி தனி சன்னதி உண்டு.

தெய்வானை வந்த காட்சியின் சாட்சியாக ஐராவதமும் அங்கு உண்டு.

இங்கிருக்கும் தேவசேனா எனும் தேவயானையின் அழகும் கம்பீரமும் ஐஸ்வர்யமும் அவ்வளவு அழகானது, அவளை தரிசித்து சென்றாலே மணமாகா பெண்களுக்கு மணமாகும்.

பன்னீர்மரம் இங்கு தலவிருட்சம். பன்னீர் மர இலை மருத்துவகுணமும் பிரபஞ்ச சக்தியும் கொண்டது, அதனாலே திருச்செந்தூரில் பன்னீர் இலை விபூதி எப்போதும் பிரசித்தி.

அந்த பன்னீர் மரமே இங்கு தலவிருட்சம்.

காசியினை போல இங்கும் விஸ்வநாதருக்கும், விசாலாட்சிக்கும் தனி தனி சன்னதிகள் உண்டு.

இங்கிருக்கும் பைரவர் தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானை தரிசித்தால் மிக்க பலன் தரும் விஷயம்.

இந்த ஆலயம் அருணகிரி நாதரால் பாடப்பட்ட ஆலயம், அவர் தன் திருப்புகழில் பாடுகின்றார்,

“எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
யென்றுந்துயர் பொன்றும்படி …… யொருநாளே

இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
யென்றும்படி பந்தங்கெட …… மயிலேறி

வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
மண்டும்படி நின்றுஞ்சுட …… ரொளிபோலும்

வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
வண்டன்தமி யன்றன்பவம் …… ஒழியாதோ

தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு …… மணியாரம்

சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
சம்புந்தொழ நின்றுந்தினம் …… விளையாடும்

கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு …… வருவோனே

கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
கந்தன்குடி யின்தங்கிய …… பெருமாளே.”

இதன் பொருள் இப்படி அமையும்.

முருகப்பெருமானின் திருவடிகளில் ஒலிக்கும் ஓசையினை காட்டி இந்தப் பாதத்தில் தஞ்சத்தை அருள்கின்றேன் என்னும் பொருள்பட ஒலிக்கின்ற சிறிய மணிமாலைகளின் சந்த ஒலியைக் கேட்டு, திருமால், சிவபிரான், பிரமன் மூவரும் தொழ நின்றும், தினந்தோறும் அருள் விளையாடல் புரிகின்ற கந்தப் பெருமாளே

அடியேனுடைய இதய குகையில் வீற்றிருப்பவரே! அடியேனது குருநாதரே! என்றெல்லாம் தொழுத அன்பராகிய நக்கீரதேவரின் அருட்பாடலைச் செவிமடுத்து, அவர் உய்யுமாறு அன்றொருநாள் அன்போடு வந்தவரே!

கற்கண்டின் இனிப்புச் சுவையுள்ள பழங்கள் சிந்துவதால் சுவைமிக்க நீர் உள்ள நிலைகள் விளங்கும் கந்தன்குடி என்ற திருத்தலத்தில் தங்கியுள்ள பெருமையில் மிக்கவரே!

எலும்பு முதலிய பல அங்கங்களால் ஆன எனது உடம்பு பலவகையான துன்பத்தைத் தருகின்ற தொடர்புகள் காரணமாக, எக்காலத்தும் அனுபவிக்கின்ற துயரமானது ஒழியும்படியான நாள் ஒன்று உண்டாகுமோ?
இன்பத்தைத் தரும் செம்பொன்னால் ஆன வீரக்கழல்களை அணிந்த திருவடிகளைத் தந்தும், பின்பு எப்போதும் போல எனது பாச பந்தங்கள் அழிய தேவரீர் மயில் ஏறி வந்தும், வீரவேகத்துடன், வெளியுலக அண்டங்கள், பூவுலகம் ஆகிய எவ்விடத்தும், திசைகளெல்லாம் நிறையும்படி அருட்சோதி வடிவமாக தேவரீர் நின்று அருள் புரிவதால், வஞ்சகமே குடிகொண்டு திரிகின்ற நெஞ்சினை உடையவனும், குற்றத்தையே எப்போதும் செய்கின்ற தீயவனும், துணை ஏதும் அற்றவனும் ஆகிய எனது பிறப்பு நீங்காதோ?” என்பது பாடலின் பொருள்.

ஆம். இந்த ஆலயம் கர்ம வினை எனும் அசுரர்களை ஒழித்து நல்வாழ்வு எனும் தேவர்கள் சம்பத்தை தரும் ஆலயம்.

இங்கே எல்லா முருகப்பெருமான் பண்டிகைகளும் விசேஷம். தைபூசம் முதல் சூரசம்ஹாரம் வரை எல்லாமுமே விமரிசை.

ஆயினும் சித்ராபௌர்ணமி கால தேரோட்டம் பிரசித்தியானது, அப்போது முருகப்பெருமான் முகத்தில் தேனீக்கள் மொய்க்கும் அதிசயம் நடைபெறும்.

இது தேன்காடு. இங்குதான் தேன் சொரியும் மரத்தடியில் முருகப்பெருமான் குடிகொண்டர். அவர் எல்லா மக்களுக்கும் இனிமையான தேன்போன்ற வரங்களை கொடுக்கின்றார் என்பதை சொல்ல இன்றும் அந்த அதிசயம் நடக்கும்.

முருகப்பெருமான் தேரோட்ட நிகழ்வில் தேனீக்கள் வந்து முருகனை மொய்த்து கொண்டிருக்கும் அந்த மெய்சிலிர்க்கவைக்கும் காட்சி மானுடரே முருகப்பெருமானை விட்டுவிடாதீர்கள், வாழ்வுக்கான தேன் அவனே அந்த பரமாத்மாவிடம் இருந்து நல்ல அருளை பெற்றுவாழுங்கள் என போதிக்கும் காட்சி‌

ஆம். தேனீக்களே தேன்காடு, மதுவனம் என சொல்லப்படும் கந்தன்குடியில் முருகப்பெருமான் குடியிருப்பதன் பெரும் சாட்சி.

அந்த முருகப்பெருமானை சரணடையுங்கள், நீங்கள் குடியும் குடும்பமுமாக வாழ, குடிகள் எனும் குலம் தழைத்து வாழ அம்பரகத்தூர் அன்னையோடு முருகப்பெருமான் உங்கள் கர்மவினையெல்லாம் தீர்த்து அருள்புரிவார். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயம் : திருவிடைக்கழி.

“கோவினைப் பவளக் குழமணக் கோலக்
குழாங்கள் சூழ்கோழி வெல் கொடியோன்
காவல்நற் சேனையென் னக்காப் பவனென்
பொன்னை மேகலை கவர்வானே ?
தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயி லூரும்
சுப்பிர மண்ணியன் தானே”

என ஒன்பதாம் திருமுறையில் புகழப்படும் தலம் இது, சேந்தனார் பாடிய பாடல் இது.

முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமான ஆலயங்களில் ஒன்று திருவிடைக்கழி. இது மயிலாடுதுறையில் இருந்து தில்லையாடி செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

திருக்கடையூர் அபிராமி அன்னை ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள முருகப்பெருமான் தலமிது.

இங்கு சிவனின் பெயர் காமேசுவரர், அன்னை பெயர் காமேசுவரி.

இந்தத் தலம் முருகப்பெருமான் தலங்களில் கொஞ்சம் வித்தியாசமானது. காரணம், மற்ற தலங்களெல்லாம் மலையில் அல்லது குன்றில் அமைந்திருக்கும், இந்த தலம் தரையில் அமைந்திருக்கின்றது.

இந்தத் தலத்தின் வரலாறு முருகப்பெருமானோடு நேரடியாக தொடர்புபட்டது. சூரபத்மனை முருகப்பெருமான் அழிக்க போரிட்டபோது அவன் மகன் இரண்யாசுரன் கடலினுள் ஒளிந்து கொண்டான்.

முருகப்பெருமான் அவனை கடலைக் கலக்கி வற்றச் செய்து ஒழித்தார். சிவபக்தனான அவனை ஒழித்தபோது அவருக்கு தோஷம் ஒட்டிக்கொண்டது.

அதற்கான பரிகாரத்தை இந்த இடத்தில் இருந்த குரா மரத்தின் அடியில் தவமிருந்து லிங்க வடிவத்தில் சிவனை வழிபட்டார். நீண்ட வழிபாட்டுக்கு பின் சிவனிடம் இருந்து அவருக்கு உத்தரவு கிடைத்தது.

“முருகா, உன் தவம் ஏற்கப்பட்டது, நீ என் முன்னால் அமர்ந்து இங்கு வரும் பக்தர்களின் குறைகளை களைவாயாக” எனச் சிவபெருமானே கட்டளை இட்ட தலம் அது.

ஆம். சிவபெருமானும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள் வழங்கும் தலம் இது, அங்கிருந்து இந்த தலத்தின் வரலாறு தொடங்குகின்றது.

முருகப்பெருமானின் சாபம் விடைபெற்று கழிந்த தலமாதலால் அது விடைக்கழி என்றாயிற்று, அதுவே “திருவிடைக்கழி” எனவும் மாறிற்று.

முருகப்பெருமான் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர், அதனால் சிவனின் எல்லா இயல்புகளையும் கொண்டிருப்பார், சிவன் வேறு முருகப்பெருமான் வேறு அல்ல என்பதால் இது சிவனுக்கும், முருகப்பெருமானுக்குமான தலமாக விளங்குகின்றது.

இந்த ஆலயம் இதனால் சிவபக்தர்களாலும் முருகபக்தர்களாலும் அக்காலத்தில் இருந்தே ஒருசேர வணங்கப்பட்டு வந்த தலம்.

சிறந்த சிவபக்தர்கள் என அறியப்பட்ட முசுகுந்த சக்கரவர்த்தி, வசிஷ்டர் எனப் பலர் வந்து வணங்கிய தலம் இது.

சேந்தனார் வாழ்க்கை எல்லோரும் அறிந்த ஒன்று, மிக சிறந்த சிவபக்தரான அவரால்தான் திருவாதிரை களி செய்து சிவனுக்கு படைக்கும் ஏற்பாடே வந்தது.

சிவனே சிதம்பரத்தில் உலகறிய தன் பக்தன் சேந்தன் எனச் சொன்ன பெருமை அவருக்கு உண்டு.

அந்த சேந்தனார் இங்குதான் முக்தி அடைந்தார். அவர் பாடிய சேந்தனார் பதிகத்தில் இத்தலத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கின்றது.

அருணகிரி நாதர் இங்கு வந்து முருகப்பெருமானை பாடி பணிந்தார், அவர் கால்பட்டதால் இது முருகப்பெருமான் தலங்களில் முக்கிய தலம் என்பதும் உறுதியாகின்றது.

“அருணையில் இடைக்கழியில் உரககிரி யிற்புவியில்
அழகிய செருத்தணியில் வாழ்கற்ப காடவியில்
அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறியென இமைப் பொழுதில் வாழ்வித்த வேதியனும்”

“சிவனுக் கொருசொல் பகர்வோனே-
கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக்
கழியில் குமரப் பெருமாளே”

“இடைக்கழியிற் பயில்வோனே !
இப் பவக் கடலைக் கடக்க இனிக்
குறித்திரு பொற் கழற்புணையைத் தருவாயே”

என அருணகிரிநாதர் பல இடங்களில் இந்த ஆலயத்தைப் பாடுகின்றார்.

இந்த தலத்தின் வரலாறு சுருக்கமானது என்றாலும் அது சொல்லும் தத்துவமும், அதை ஒவ்வொரு மனிதரும் அறிந்து பின்பற்ற வேண்டியது அவசியம்.

இங்கு முருகப்பெருமான் தவமிருந்தார், அதுவும் சூரபத்மனின் மகனை கொன்ற பாவத்துக்காக தவமிருந்தார் என்பதுதான் கவனிக்கதக்க விஷயம்.

முருகப்பெருமான் சிவவடிவம், அவர் அசுரர்களை அழிக்கவே அவதரித்தவர், எண்ணற்ற அசுரர்களை அழித்துப் போட்டு தேவர்களை காத்தவர், அப்படியான முருகப்பெருமான் இந்த இரண்யாசுரனை அழித்ததில் மட்டும் இப்படி தவமிருந்தார்.

ஆம். அந்த இரண்யாசுரன் சூரபத்மனை போல் சிவபக்தன், சூரனை முருகப்பெருமான் தன்னோடு சேர்த்துக்கொண்டார், இவனை அழித்துவிட்டார் இது முதல் பழி.

இரண்டாவது, அந்த இரண்யாசுரனை அழிக்கும் போது முருகப்பெருமான் கடலை கடைந்தார், ஏகப்பட்ட உயிர்கள் அழிந்தன, எண்ணற்ற உயிர்கள் அழிந்தன‌.

இந்த தத்துவத்தில்தான் இந்த ஆலயத்தை நோக்க வேண்டும்.

என்னதான் பெரிய காரியம், புனிதமான காரியம், மாபெரும் பொதுநல காரியத்தை நாம் முன்னெடுத்தாலும் நம்மை அறியாமல் பலப்பல உயிர்களை காயப்படுத்துகின்றோம், ஒருவன் செய்யும் நல்ல காரியங்களில் கூட ஏகப்பட்ட பாவங்களை அறியாமல் செய்துவிடுகின்றான்.

மனிதன் குறைவுள்ளவன், அவன் காட்டை திருத்தும்போது நாகங்களை, பல உயிர்களை அழிக்கத்தான் வேண்டியுள்ளது.

ஒவ்வொரு நல்ல காரியம், அதர்மத்தை ஒழிக்கும் காரியம் செய்யும் போதும் சில அறியா பாவங்களை செய்கின்றோம்.

இதற்கு ராமனும், கண்ணனுமே தப்பமுடியாது, எந்த அவதாரங்களும் ஏன் முருகப்பெருமானுமே தப்பமுடியாது எனும் போது மனிதன் எம்மாத்திரம்.

அதனால் ஞானியர், ரிஷிகள், பக்தர்கள் என எல்லோரும் அப்படியே அதே நேரம் அந்த கணக்கை தீர்க்காமல் முக்தி இல்லை.

அதற்குத்தான் முருகப்பெருமானே வழிகாட்டினார், முருகப்பெருமான் வழியில் சிவனே இந்த ஆலயத்தை அடையாளம் காட்டினார்.

மலைமேல் இருக்கும் முருகப்பெருமான் இங்கே தரையில் இருப்பது தன் தாழ்ச்சியான தவக்கோலத்தை காட்டுவதற்கே, அவர் தன்னிலையில் இருந்து இறங்கினார்.

இந்த ஆலயம் அந்தத் தத்துவத்தை சொல்வது, இங்கே குற்றமற்றவர் என யாருமில்லை. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் குற்றம் செய்தவர்களே, அந்த அறியா பாவம் நீங்க இங்கு வழிபடுதல் அவசியம்.

அந்த அறியா பாவம், நம்மை அறியாமல் செய்த பாவங்கள் கெட்ட கர்மா, ஏதோ ஒருவழியில் அது நம்மை அலைகழிக்கும், அந்த பாவமும் சாபமும் நீங்கி கணக்கை சரி செய்ய இங்கு வந்து வழிபடுதல் அவசியம்.

மிகச் சிறந்த உதாரணம் வசிஷ்டரும், சேந்தனாரும்.

சேந்தனார் ஒரு விறகுவெட்டி. விறகு வெட்டியாக இருந்து சிவனடியார்க்கு அமுதுபடைத்து வந்தவர், அவர் நோக்கம். தூய்மையானது அர்ப்பணிப்பானது. சிவனுக்காய் வாழவேண்டும் எனும் பக்திமார்க்கமானது.

ஆனால், மரம் வெட்டும்போது ஏகப்பட்ட பறவைகள் உள்ளிட்ட உயிர்கள் அவரால் பாதிக்கப்பட்டன, அவர் அதனை அறியாமல் இருந்தார், அந்த பாவங்கள் அவர் மாபெரும் சிவபக்தனாய் இருந்தும் அவருக்கு முக்தி கிடைக்கவில்லை.

அந்த சேர்ந்தனார் இங்குவந்துதான் முக்திப் பெற்றார், அவர் அங்குதான் முழு சாபமும் நீங்கி முழுமை அடைந்தார்.

வசிஷ்டர் வாழ்விலும் இது உண்டு, தன் மகனை கொன்ற ஒரு அசுரனை அவர் அழித்தார். முனிவர் நியதிப்படி அதுவும் பிரம்ம ரிஷி எனும் மாபெரும் நிலையில் இருந்து அவர் செய்தல் தகாதது, அதுவும் தனக்குஇன்னொரு மகவு வந்தபின்னும் அவர் பழிவாங்கியது ஒரு அறியாப் பாவம்.

அதையே திரிசங்குவினை வார்த்தையால் வதைத்தார், விசுவாமித்திரரின் மன உளைச்சலுக்கும் ஆளானார்.

இப்படி தன்னை அறியாமல் மகா முனியே தவறுகளை செய்தார்.

அந்த தன்னை அறியாப் பாவம் வசிஷ்டருக்கு இங்குதான் தீர்ந்தது. சோழ மன்னர்களில் சிறந்தவனும் இந்திரனுக்கே துணைக்கு சென்று சப்தவிடங்கர் லிங்கங்களை பெற்றவனுமான முசுகுந்த சக்கரவர்த்தி நிலையும் அதுவேதான்.

அவனின் அறியாப் பாவம் தன்னை அறியாமல் பெற்ற சாபங்களை இங்கேதான் தீர்த்தான்.

ஆம். குறைவுள்ளவன் மனிதன் அவன் முழுமையானவன் அல்ல. அவனின் நல்ல நோக்கத்தில் கூட அறியா பிழைகள் வந்து அவனுக்கு கெட்ட கர்மா என பதிந்துவிடுகின்றது. அதை நீக்கும் ஆலயம் திருவிடைக்கழி.

அறியா விடைகள் கழியும் இடம் இது.

இந்த ஆலயம் முழு சரணடைதலை செய்யும் ஆலயம் என்பதால் இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் முருகப்பெருமானும், அதை ஒட்டி சிவபெருமானும் காட்சிதருகின்றார்கள்.

இந்த ஆலயம் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் எழுந்து நிற்கின்றது.

இங்கு சிவனும் முருகப்பெருமானும் எழுந்திருப்பதால் விமானம் இரண்டு. அப்படியே தல விருட்சமும் இரண்டு.

முருகப்பெருமானுக்கு குரா மரமும், சிவனுக்கு மகிழம் மரமும் இங்கு விருட்சமாக உண்டு. குரா மரத்தை சமவெளிகளில் அதிகம் காணமுடியாது. இங்கே அதைக் காணலாம்.

சிவச்சண்டேசுவரர், குகச்சண்டேசுவரர் என்று இறைவனுக்கும் முருகனுக்கும் தனி பெயர்களும் உண்டு.

முருகப்பெருமானிடம் விடைபெற்று தெய்வானை திருத்தணிக்கு எழுந்தருளிய இடம் என்பதால் இங்கு தெய்வானைக்கும் சன்னதி உண்டு.

பல உருவங்கள் ஆலய சுவர்களில் உண்டு. ஒரு மேடையில் ரிஷபம், இடையன், குடம், பாம்பு முதலிய உருவங்களும், சற்றுத் தள்ளி மானிட‌ன் ஒருவன் உள்ளிட்ட பல உருவங்களும் உண்டு.

இது திருமூலர் தொடர்புடையதாக இருக்கலாம் அல்லது யோக சித்தரின் ரகசியமாக இருக்கலாம். குடம் எனும் உடலில் நாகம் எனும் குண்டலினியினை எழுப்பினால் விடைமேல் வரும் சிவனை அடையலாம் என்பது பொருளாக இருக்கலாம்.

இந்த ஆலய முருகப்பெருமானுக்கு “திருக்குராத்துடையார்” எனப்பெயர்.

முருகப்பெருமான் தலங்களில் அருள் தரும் ஆலயங்கள் நிறைய உண்டு, எல்லாமே அருளையும் தனித் சிறப்பையும் பெற்றுத்தரும்.

இந்த ஆலயமோ முழுமை அடையச் செய்யும், அறியா பாவமெல்லாம் அகலும்.

எந்த மனிதனும் முழுமை இல்லை, எல்லோரும் அறியாப் பாவமும் தன்னை அறியா குறைகளும் கொண்டிருப்பார்கள். அவர்கள் சிவனை சரணடைந்து ஒரு துளி மாசு இல்லாமல், துளி பாவமோ சாபமோ இல்லாமல் முக்தி அடைதல் வேண்டும் என்பது இந்த ஆலயத்தின் தாத்பர்யம்.

இந்த ஆலயம், முழுமை தரும் ஆலயம். திருக்கடையூர் அருகில் இருப்பதும் தற்செயலாக அமைந்தது அல்ல‌.

திருக்கடையூர் தலம் பல வகைகளில் சிறப்பு என்றாலும் அறுபதாம் கல்யாணம், இன்னும் முதிர்த்த மக்கள் வாழ்வின் நிறைவில் நிற்கும் மக்கள் வழிபடும் ஆலயம்.

அந்நிலையில் இருப்போர் இந்த ஆலயத்துக்கு செல்லுதல் அவசியம்.

முதிர்வயதில் அவர்கள் தங்களை அறியாமல் முன்பு செய்த பாவங்களுக்கு மன்னிப்பு பெறவும், அறியாமல் செய்த பிழைகள் பொறுக்கவும் இங்கு வழிபடுதல் அவசியம்.

திருக்கடையூர் செல்பவர்கள் யாராக இருந்தாலும் இங்கு வழிபட்டு சென்றால் அந்தப் பயணம் முழுமையடையும், அறியாப் பாவங்கள், தன்னை அறியாப் பிழைகளின் சாபமெல்லாம் மாறும். தீரும்.

முருகப்பெருமானே வந்து சிவனை வணங்கி வழிகாட்டிய ஆலயத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவர் பாவமும் சாபமும் அங்கு தீரும், அது வாழ்வினை அடுத்த படிநிலைக்கு உயர்த்தும். இது சத்தியம்.

அருணகிரி நாதர் அந்தத் தலத்தை பற்றி பாடியபாடலோடு அந்த முருகப்பெருமானை தொழுதால் நிச்சயம் முழு பலன் உண்டு.

“பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப் பலவாழ்வும்

பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் தருவாழ்வும்

புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் பெருவாழ்வும்

புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ்ப லத்தினைத் தரவேணும்

தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற் பயில்வோனே

தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் திருமார்பா

சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர்க் குமரேசா

செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
றிருவி டைக்கழிப் பெருமாளே “

முருகபெருமான் ஆலயங்கள் : தோரண மலை முருகன்.

முருகபெருமான் ஆலயங்கள் : தோரண மலை முருகன்.

முருகபெருமான் ஆலயங்களில் தனித்துவமானது தோரண மலை ஆலயம், இது நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் வழியில் கடையம் அருகே அமைந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையின் குன்றுகளில் ஒன்று இந்த தோரண மலை, இந்த மலைக்கு முருகபெருமான் வந்து அமர்ந்து அருள்பாலிக்க காரணம் அகத்திய மாமுனி.

சிவபெருமான் பார்வதி திருணமத்தை முன்னிட்டு தேவர்களெல்லாம் கயிலாயத்தில் குவிய, வடக்கே கீழ்றிறங்கி தென்பாகம் மேலே உயர்ந்தது,அதனை சமபடுத்த அகத்தியரை தெற்கே அனுப்பிவைத்தார் சிவபெருமான்

அகத்தியர் தென் திசை செல்லவேண்டும் அங்கிருந்து மானுடர்க்கு நிறைய நல்ல வழிகளை எல்லா வகையிலும் காட்டுதல் வேண்டும் என சிவபெருமானின் சித்தம் அதுவாக இருந்தது அப்படி நிறைவேறிற்று.

அகத்தியர் தென்னகம் வந்தபோது பல இடங்களில் சுற்றி திரிந்தார், இந்த தோரண மலைக்கு வரும் போது பெரும் ஆச்சரியமடைந்தார்

காரணம் அவர் தேடிய சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகள் அங்கேதான் இருந்தன, கண்களை மூடி சிவனை தியானித்தவர், தான் வந்த காரணத்தை உணர்ந்து அங்கே வைத்தியசாலை அமைத்தார்.

அகத்தியருக்கு எல்லாமே முருகபெருமான், அவரின் ஞானம், தமிழ், யோகம் , இசை என எப்போதும் ஆய்வுகளைசெய்யும் போது முருகபெருமானை வணங்காமல் அவர் தொடங்கியதில்லை.

அப்படிபட்ட அகத்தியர் முருகபெருமானுக்கோர் சிலை செய்து அங்கே வைத்து பிரதிர்ஷ்டித்து தன் மூலிகை மருத்துவ ஆய்வினை செய்தார்.

குடில் அமைத்து மூலிகை மருந்துகள் தயாரிப்பு கடும் யோகம், தியானம், தெய்வங்களோடு உரையாடி நுணுக்கமான விஷயங் களை பெற்றுகொள்ளுதல் என அவர் மனுகுல சேவையினை செய்தார்

இங்கிருந்துதான் 21 வகையான மருத்துவ பெரும் தொகுப்பை அவர் கொடுத்தர், சித்த மருத்துவத்தின் மூலம் அதுதான் இங்கே அவரின் மருத்துவ குடிலும் ஆய்வும் இருந்தது, அங்கே வந்து மாணவராக சேர்ந்தவர்தான் தேரையர் அவரின் இயற்பெயர் ராமதேவன், சேர நாட்டை சார்ந்தவராக இருக்கலாம்.

அகத்தியரின் சீடராக அவர் உடன் இருந்து ராமதேவன் சிறப்பாக மருததுவமும் சித்த யோகமும் கற்றுவந்தார்.

அப்போது காசிவர்மன் எனும் அரசன் இருந்தான், இவன் நாசிவழியாக நீரை இழுக்கும் யோகம் ஒன்றை செய்தான், அதன்படி நீரை ஒரு நாசியில் இழுத்து இன்னொரு நாசியில் விடும் யோகத்தை செய்து கொண்டிருந்தான்.

அப்போது குட்டி தேரை ஒன்று அந்நீரில் இருந்தது அது அவன் அறியாமல் அவன் நீரை இழுக்கும்போது நாசிக்குள் சென்று தலைக்குள் ஏறி மூளையில் அமர்ந்தது.

மன்னனுக்கு தேரை வளர வளர தலைவலி அதிகரித்தது, அகத்தியர் அதற்கான காரணம் அறிந்து அவனுக்கு கபாலம் திறக்கும் அறுவைசிகிச்சை செய்ய முனைந்தார்.

அதெல்லாம் அன்று இயல்பான ஒன்றாய் இருந்தது.

அகத்தியர் அச்சிகிச்சையில் அவன் கபாலத்தை திறந்தார் ஆனால் தேரை சிக்கலான இடத்தில் இருந்தது அதை தொட்டால் பெரும் சிக்கலாகும்.

இதை எப்படி எதிர்கொள்வது என அகத்தியர் சிந்தித்தபோதே, ராமதேவன் ஒரு பாத்திரத்தில் நீரை கொண்டுவந்து கைகளால் அதை அலசிகொண்டிருந்தார்.

தேரை புதிய நீர்நிலை வந்துவிட்டதாக கருதி பாத்திரத்தில் குதித்தது, மிக சாமார்த்தியமாக தேரையினை எடுத்ததால் அவர் தேரையர் என்றானார்.

இந்த தேரையர் சித்தர்கல் 18 பேரில் முக்கியமானவர் பெரும் மருத்துவநூல்களை தந்தவர், பெரும் முருக பக்தர்.

இப்படி அகத்தியரும் தேரையரும் முருகபெருமானை வணங்கி ஏராளமான ஆண்டுகள் மருத்துவம் பயின்ற இடம், முருகபெருமான் ஆலயம் மருத்துவநிலையமாக வளர்ந்த இடம்.

அகத்தியர் அங்கே எல்லா தேவர்களையும் கண்டார், முருகபெருமான் அடிக்கடி வந்தார் இன்னும் பல தெய்வங்கள் வந்தன‌.

ராமபிரானே தன் மனைவியினை தேடி அலையும் போது அங்கே வந்தார், அகத்தியர் அங்குதான் அவருக்கு “ஆதித்ய ஹிருதயம்” எனும் மந்திரத்தை போதித்தார்

பின்பு அகத்தியர் தமிழ் வளர்க்கும்பொருட்டும் பல வேலைகளின் பொருட்டும் பொதிகை மலை ஏகினார், தேரையர் இந்த மலையிலே முருகனை வழிபட்டு மருத்துவ மூலிகளை ஆய்வ செய்து அங்கே ஜீவசமாதியானார்.

இன்றும் அகத்தியரும் தேரையரும் மூலிகை அரைத்த குழிகளும், பாறைகளும் அங்கு உண்டு.

அகத்தியர் தேரையர் காலத்துக்கு பின்பும் சித்தர்கள் அங்கே பூஜித்து வந்தார்கள், அது சித்தர்கள் வழிபட்டு முருகபெருமானிடம் வரம்பெற்ற இடமாகவும், சித்தர்களின் ரகசிய மூலிகைக்ள் கிடைக்கும் இடமாகவும் இருந்தது.

காலவோட்டத்தில் எல்லாம் மெல்ல மெல்ல மறைந்து அங்கே யாருமில்லை எனும் அளவு நிலமை மாறி அது காடாகவே அறியபட்டது

ஆனால் முருகபெருமான் கலிகாலத்தில், தான் அங்கே குடிகொண்டிருப்பதையும் மறுபடி அங்கே வந்து மக்களுக்கு அருள்பாலிக்க தயாராக இருப்பதையும் சொல்ல விளைந்தார், தனக்கு தொண்டு செய்ய ஒரு அடியாரையும் அவரே தேர்ந்தெடுத்தார்.

அதன்படி அந்த தோரண மலை அருகே அமைந்திருக்கும் முத்துமாலைபுரத்தில் இருக்கும் பெருமாள் என்பவரை அவர் தொட்டார், அந்நேரம் வறட்சியும் மக்களிடம் குழப்பமும் அச்சமும் இருந்த காலம்.

எதிர்காலம் தெரியாமல் அவர்கள் அஞ்சி குழம்பிய காலம், அப்போது அந்த அடியார் பெருமாள் கனவில் எழுந்தருளிய முருகபெருமான் புன்னகையே உருவாக சொன்னார்.

“அடியாரே நாம் மலையின் உச்சி சுனையின் அடியில் கிடக்கின்றோம், எம்மை மீட்டு குகையில் வைத்து வணங்க எல்லாமும் செழிக்கும்” என சொல்லி ம்றைந்தார்.

அடியார் பெருமாள் அவ்வண்ணமே சென்று மலை உச்சி சுனையில் தேடியபோது அகத்தியர் வழிபட்ட அந்த முருகபெருமான் சிலை கிடைத்தது

அதனை பொக்கிஷமாக கொண்டுவந்தவர்கள் குகையில் வைத்து வழிபட தொடங்கினார்கள், அது சித்தர்களின் தலைவரான அகத்தியரால் செய்யபட்ட சிலை என்பதாலும, சித்தர்கள் என்றும் அரூபியாய் நடமாடும் இடம் என்பதாலும் அங்கு செல்லும் பக்தர்கள் கேட்கும் வரமெல்லாம் கிடைத்தது.

அதனால் சாட்சிகள் பெருகின, நம்பிக்கையோடு பக்தர்கள் வந்து பணிந்து அதிசயங்களை எளிதாக பெற்று செல்ல செல்ல அந்த பக்தி மணம் ஏகபட்ட மக்கள் வெள்ளத்தை மலர் வண்டை ஈர்ப்பது போல் ஈர்த்தது.

பெருமாள் எனும் அடியார் மூலம் அந்த ஆலயம் கலிகாலத்தில் மீண்டது.

அது அகத்தியரால அடையாளம் காணபட்டு ஸ்தாபிக்கபட்டாலும் பின்னாளில் ஏன் மறைக்கபட்டது, பின் உரிய காலத்தில் ஏன் தன்னை மீட்டு வெளிவந்தது என்பதெல்லாம் முருகபெருமானின் திருவிளையாடல்.

எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கும் தனக்கான எழுச்சி வரும் காலங்களில் இதெல்லாம் வெளிவரட்ட்டும் என்பதாக இருக்கலாம்.

சக்திமிக்க ஆயுதங்களை உரிய காலம் வரும் வரை காக்கத்தான் வேண்டும், பொக்கிஷங்கள் மறைவாக இருத்தலே நன்று.

அப்படி பெருமாள் எனும் அடியார் மீட்டெடெடுத்த ஆலயம் அவர் மகன் ஆதிநாராயணன் காலத்தில் ஆயிரம் படிகள் அமைக்கபட்டு ஒரு வடிவம் பெற்றது, அவரின் அர்பணிப்பாலே இன்று தோரண மலை உச்சி வரை செல்லமுடிகின்றது.

இப்போது அவர் மகன் சென்பகராமன் திருப்பணிகளை திறம்பட செய்துவருகின்றார்.

இத்தலம் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், தவம், தியானம் ஆகிய ஐம்பெரும் சிறப்புகளை உடையது.

சுமார் 65 விதமான வற்றாத சுனை ஊற்றுகள் தோரணமலையில் உள்ளன, அவை எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தவை.

மலை அடிவாரத்தில் வல்லப விநாயகர், சப்தகன்னியர், குருபகவான் மற்றும் நவகிரகங்களுக்கு தனி சன்னதிகள் அமைந்துள்ளது.

இன்னும் சிவபெருமான், சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் சன்னதிகளும் உள்ளது.

தோரணமலை முருகன் பக்தர்களின் நோய்களை தீர்க்கும் தீர்க்கும் கடவுளாக கடவுளாக விளங்குகிறார். அகத்தியரை இங்கு அழைத்து வந்தவரும் தேரையரை இங்கு இன்றும் நிறுத்தி வைத்திருப்பதும் முருகபெருமானே

இந்த ஆலயம் அறுபடை விடுகளை போல மகா சக்தியானது, அகத்தியர் முதல் தேரையர் என எல்லா சித்தர்களும் வாழ்ந்த இடம் அவர்கள் இன்றும் அரூபிகளாக உண்டு

தேரையர் அங்கே ஜீவசமாதிகொண்டு அரூபியாக அருள் வழங்கி கொண்டிருகின்றார்.

மகா சக்திவாய்ந்த ஆலயம் இது, இங்கே வழிபடும் போது இயற்கையாகவே பல நல்ல அதிர்வுகள் கிடைக்கும்.

அந்த மலையினை சுற்றி ஏகபட்ட மூலிகைகள் உண்டு என்பது அகத்தியரே சொல்லிதந்த காட்சி, அதனால் அந்த மூலிகை காற்றின் சூழல் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கொடுக்கும், புத்துணர்ச்சி கொடுக்கும்.

அந்த புத்துணர்ச்சியில் நோய் நீங்கும்

இங்குள்ள் சுனைகளில் மூலிகை கலந்த நீர் வருவதால் அதை குடித்தால் தீராத நோயெல்லாம் தீரும், அந்த நீரில் குளித்தால் தேகம் சம்பந்தமான நோய்கள் அகலும்.

இந்த ஆலயத்தின் முருகன் சிலை அகத்திய முனிவரால் கொடுக்கபட்டது, இதை தவிர வேறெங்கும் அவர் சிலை கொடுத்ததாக செய்திகள் இல்லை.

அகத்திய முனிவரே செய்த சிலை என்பதால் அது பழனியில் இருக்கும் நவபாஷான சிலைக்கு ஈடான சக்தி கொண்டது.

இந்த முருகன் சன்னதிக்கு சென்று வேண்டினால் தீராத வினை இல்லை , குணமாகா நோய் இல்லை, கிடைக்காத வரமில்லை.

அந்த தலம் பாரதியார் வந்து வழிப்ட்டு “குகைவாழ் குகனே” என பாடிய தலம், பாரதியும் ஒரு சித்தன் என்பது குறிப்பிடதக்கது

தோரணமலை என்பது சித்தர்கள் ராஜ்ஜியம் செய்யும் பகுதி 18 சித்தர்களும் இன்னும் ஏகபட்ட சித்தர்களும் அருள் வழங்குமிடம்

அங்கே பவுர்ணமியில் எல்லா சித்தர்களும் வந்து ஆசிவழங்குவது ஐதீகம் என்பதால் அன்று மக்கள் கூட்டம் அதிகம்.

சித்திராபவுர்ணமி அங்கே விஷேஷம் இன்னும் வைகாசி விசாகம் முதல் பல பண்டிகைகள் வெகு உற்சகமாய் கொண்டாபடுகின்றன.

நெல்லை குற்றாலம் பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தை த்வாறாமல் தரிசியுங்கள், அந்த தலத்தின் மலை உச்சிக்கு சென்றால் தியானம் செய்ய அருமையான சூழல் அமையும், அந்த இதமான சுழலும் அமைதியும் சித்தர்களின் சூட்சும அருளும் தியானத்தை சித்தியாக்கும்.

ஆம், தியானம் செய்ய மிக நல்ல தலம், ஒருமுறை முயன்று பாருங்கள் மனம் பூரண அமைதியில் வாய்க்கும், சர்வ அமைதியும் தெளிவும் மனதில் குடியேறும்.

சித்தர்கள் அருளோடு முருகபெருமான் அருளும் கொட்டிகிடக்கும் இந்த ஆலயம் அறுபடை வீடுகளுக்கு சமமான பலனை அள்ளி தரும்.

சித்தர்கள் எக்காலமும் இங்கு உண்டு, அது எந்த அளவுக்கு கன்ணில் தெரியுமென்றால் நாக வடிவில் தெரியும்.

சித்தர்கள் எக்காலத்திலும் நாகலோகத்துடன் தொடர்புடையவர்கள், நாகவடிவிலே தங்களை வெளிகாட்டுபவர்கள்.

இந்த ஆலயத்தில் தைபூசம் அன்று படைக்கபடும் இலையின் தவறாமல் வரும் நாகம் ஒன்று சட்டையினை உரித்துவைத்து சாட்சியாக செல்வது வழமை.

ஆண்டுதோறும் அந்த நாக சாட்சி உண்டு, அதுபோக ஏகபட்ட அமா னுஷ்ய சூட்சும சாட்சிகள் உண்டு.

முருகபெருமானை நினைந்து சென்று சித்தர்களை அழைத்து அவர்கள் சாட்சியாக அங்கு வைக்கும் எல்லா வேண்டுதலும் கிடைக்கும், அங்கே குடிக்கும் ஒரு துளி தீர்த்தம் எல்லா நோயினையும் தீர்க்கும்.

உங்கள் வம்சம் வாழையடி வாழையாக நோயற்று கவலையற்று சித்தர்கள் ஆசியில் நிம்மதியாக வாழும் இது சத்தியம்.

அந்த தோரணமலை முருகன் உங்கள் வாழ்வினை உயர்த்தி தனி தோரணம் தருவான், அந்த உயர்ந்த மலைபோல் உங்கள் வாழ்வை உயர்த்திவைப்பான் இது நிச்சயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : ஆய்க்குடி முருகன் (பாலசுப்ரமணிய சுவாமி)

முருகப்பெருமான் ஆலயங்கள் : ஆய்க்குடி முருகன் (பாலசுப்ரமணிய சுவாமி)

“தாட்பட கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
சாய்த்தொடுப் பராவுநீள் கழல்தாவிச் சாற்றுமக் கோரவுரு
கூற்றுதைத் தார்மவுலி தாழ்க்கவஜ் ராயுதனும்இமையோரும் ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடும்
ஆய்க்குடிக் காவல்உ ததமீதே
ஆர்க்குமத் தானவரை வேற்கரத் தால்வரையை
ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே”

எனத் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமையினை கொண்டது இந்த ஆய்க்குடி முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயத்தில் வித்தியாசமானதும், ஆழ்ந்த தத்துவத்தினை சொல்லும் கோவில் ஆய்க்குடி முருகப்பெருமான் ஆலயம்.

தென்காசி அருகே அமைந்திருக்கின்றது அந்த ஆய்க்குடி பாலசுப்பிரமணியர் ஆலயம், பொதிகை மலைச்சாரலில் அமைந்துள்ளது அந்த ஆலயம். இந்தப் பொதிகை மலை என்பது அகத்தியர் வந்து தங்கிய ஆலயம், முருகப்பெருமானை அவர் அடிக்கடி தரிசித்த பகுதி என்பதால், சித்தர்களும் முருகப்பெருமானும் அளவளாவிய இடம் என்பதாலும் இங்கிருக்கும் முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சக்தி அதிகம்.

அவ்வகையில் முக்கியமானதும் சக்தியும் கொண்டது இந்த ஆய்க்குடி ஆலயம்.

ஆய் எனும் மன்னன் குலத்தவர் ஆண்ட பகுதி என்பதால் ஆய்நாடு என்று அழைக்கப்பட்டது, ஆயர்கள் எனும் இடையர்கள் ஆண்ட பகுதி என்பதால் ஆய்நாடு என்றும் அழைக்கப்பட்டது.

இந்த ஆய்நாட்டில் எக்காலமும் முருக வழிபாடு இருந்தது. அகத்தியர் காலத்தில் தொடங்கி இருந்தது. ஏகப்பட்ட ஆலயங்கள் இருந்தன.‌ சமணர்காலத்திலும் பௌத்த காலத்திலும் இதர மன்னர்கள் காலத்தில் ஏற்பட்ட குழப்பங்களிலும் பல அடையாளமற்று போயின‌.

பல ஆலயங்கள் மாலிக்காபூர் காலத்தில் இந்துக்களால் மறைக்கப்பட்டன, மாலிக்காபூர், துக்ளக், பிஜப்பூர் சுல்தான்கள், பின் மொகலாய கொள்ளையர்களுக்கு அஞ்சி அவை மறைக்கப்பட்டு சுவாமி விக்கிரகங்களெல்லாம் மண்ணில் புதைக்கப்பட்டன‌.

இப்படி காலத்தால் அவை மறைந்தாலும் சக்திமிக்க முருகப்பெருமானும் அவன் வழி சித்தர்களும் அதை மீட்டுக் கொடுத்து கொண்டே இருந்தார்கள்.

இங்கு இந்துமதம் அதன் எதிரிகளால் சரிக்கப்டுவதும், பின் அது தானே மீள எழுந்து வருவதும் காலமெல்லாம் நடக்கும் விளையாட்டு. தன் சக்தி என்ன என நிரூபிக்க இந்துமதம் அப்படியான காரியங்களைச் செய்யும்.

அப்படி இந்த ஆலயமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அடையாளமற்று பின் மீண்டது.

அது எப்படி மீண்டது என்பதில்தான் சுவாரஸ்யமும் முருகப்பெருமானின் வல்லமையும் உள்ளது.

இந்த ஆய்க்குடி அருகே மல்லிபுரம் எனுமிடத்தில் ஒரு குளத்தை தூர்வாரும் போது ஒரு பெட்டி கிடைத்தது, அதில் ஒரு அழகான சுப்பிரமணிய சுவாமி சிலை இருந்தது.

இந்தச் சிலை முன்பு ஆப்கானிய கொள்ளையர்களுக்கு அஞ்சி புதைக்கப்பட்டிருக்கலாம் என்பது அனுமானம்.

அந்தச் சிலையினை மல்லன் எனும் இடையன் பெற்றுக் கொண்டான், அவன் ஆகமவிதி அறியாதவன்; அவனுக்கு சாஸ்திரமோ சம்பிரதாயமோ தெரியாது. அதனால் அவனுக்கு தெரிந்தவரை ஆட்டுத் தொழுவத்தில் வைத்து வழிபட்டு வந்தான்.

முருகப்பெருமான் தன் சிலை மட்டுமல்ல தன் ஆலயமும் எல்லா மக்களுக்குமானதாக எழவேண்டும், தன் ஆலயம் மறுபடியும் தழைத்தோங்கி அருள்வழங்க திருவுளம் கொண்டார்.

அதன்படி அந்த மல்லன் கனவில் அவரே வந்து அரசும், வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில் தன் சிலையினை வைத்து வணங்கும்படி சொன்னார்.

கனவில் அவரைக் கண்ட மல்லன் மனதார மகிழ்ந்தான். அவனுக்கு முருகப்பெருமானை கண்டதில் பெரும் மகிழ்ச்சி என்றாலும் அந்த இடம் எது, எப்படி செல்லவேண்டும் என்பது தெரியவில்லை.

இதுபற்றி அவன் குழம்பிக்கொண்டிருந்தபோதே அவனுக்கு அசரீரி ஒலித்து, “மல்லா, மந்தையின் செம்மறிக் கடா செல்லும் வழியில் விக்ரஹத்தை எடுத்துச் செல், அது எங்கே நிற்குமோ அங்கே வைத்து பூஜை செய்” எனும் வார்த்தை வந்தது.

அதன்படி சுத்தமாக குளித்து நீறுபூசியவன் சிலையினை தொட்டு எடுத்தான், மந்தையில் பெரிய செம்மறிக் கிடா தானே எழும்பி அவன் முன் வந்தது.

அசரீரி சொன்ன வாக்கை நினைந்து மகிழ்ந்தவன், அந்தக் கிடா வழிகாட்ட பின் தொடர்ந்தான். அது அரசமரமும், வேம்பும் சேர்ந்து நின்ற இடம் வரும்போது அனுமன் நதிக்கரையில் நின்றது.

மகிழ்ந்த மல்லன் முருகப்பெருமான் சொன்ன எல்லா அடையாளமும் பொருந்தி வந்ததை அறிந்து அங்கே சிலையினை ஸ்தாபித்தான்.

அதிலிருந்து ஆய்க்குடி ஆலயம் மீள உருவாகி வந்து இன்றிருக்கும் நிலையினை எட்டியிருக்கின்றது.

இந்த ஆலயம் மீள உருவான நாளில் இருந்து அங்கு தன்னை நம்பிவரும் பக்தர்கள் யாரும் வெறும்கையோடு திரும்பியதில்லை எனும் அளவு அவ்வாலயம் அருள்மழை பொழியும் தலமாக விளங்குகின்றது.

இதற்கு சாட்சி மதுரை வணிகன் கதை.

இந்த ஆலயம் மலையாள தேசம் செல்லும் செங்கோட்டை கணவாய் வழியில் அமைந்திருப்பதால் அவ்வழி செல்லும் பக்தர்களெல்லாம் வணங்குவது வாடிக்கை, அப்படி ஒரு வணிகன் பிள்ளைவரம் வேண்டி வணங்கினான்.

சில காலங்களில் அவனுக்கு பிள்ளை பிறந்தது, செல்லுமிடமெல்லாம் ஆலயங்களில் பிள்ளைவரம் கேட்டவன் இந்த ஆலயத்தை மறந்துவிட்டான்.

ஆனால் முருகப்பெருமான் மறக்கவில்லை.

அவர் அந்த வணிகன் மனைவியின் கனவில் சென்று அவன் வேண்டிய வகையினை எடுத்துச் சொன்னார். அதன்படி, அவன் தன் வேண்டுதலை நினைவு கூர்ந்து மனைவியோடு வந்து வைரவேல் சாற்றி வணங்கி பாயாச நிவேதனம் செய்தான்.

அன்றிலிருந்து இன்றுவரை அங்கு படிப்பாயாசம் பிரதானம், அதை செய்யும் பக்தர்களுக்கு பிள்ளைவரம் நிச்சயம்.

இன்றும் அது பக்தர்களால் நடத்தப்படுகின்றது, வேண்டிய பிள்ளைவரம் பெற்றோர் அதை செலுத்துகின்றார்கள்.

ஒரு படி முதல் 12 படி வரையில் அரிசிப் பாயசம் செய்வது இங்கே பிரார்த்தனைகளில் முக்கியமானதாகும். இவர் பால சுப்ரமணியராக இருப்பதால், படிப்பாயசத்தில் சுக்கு, ஜீரகம், பாசிப்பருப்பு முதலியன சேர்க்கப்படுகின்றது.

இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் ஒரு முகம் கொண்டு, நான்கு கரத்துடன் ஒரு பாலனாகத் திகழ்கிறார். முருகனுக்கு அருகே இருக்கும் மயிலின் முகம் இடது புறம் நோக்கியுள்ளது.

இங்கு சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, கணபதி ஆகிய பஞ்ச தேவதையர்கள் குடியிருக்கும் அரசு,வேம்பு, மாவிலங்கு, மாதுளை, ஆலமரம் எனும் பஞ்சவிருட்சங்கள் இக்கோயிலில் உள்ளது.

இதனால் முருகப்பெருமானின் அருள் மட்டுமல்ல, சன்மார்க்கம் எனும் ஆறுவகையான மரபுகளின் வழி ஆசியும் பலனும் இங்கே கிடைக்கும்.

இந்தப் பகுதி மலையாள மன்னர்களும் ஆண்டப் பகுதி என்பதால் மலையாள தொடர்புகள் அதிகம், அவ்வகையில் மலையாளிகள் இதனை “ஹரிராமசுப்ரமணியர்’ என்ற பெயரினை இட்டார்கள்.

அது இன்றும் நிலைபெற்றுவிட்டது.

இந்த ஆலயம் ஆழ்ந்த தாத்பர்யம் ஒன்றை சொல்கின்றது, அது நோக்கத்தக்கது.

முருகப்பெருமானுக்கு இங்கு செம்மறிக் கிடாவே வழிகாட்டியது என்பது வெறும் செய்தி அல்ல; அதிசயம் அல்ல; அது ஞானபோதனை.

முருகப்பெருமானுக்கு மயில் வாகனம் எனும்போதும், பிணிமுகம் எனும் யானையும், செம்மறிக் கிடாவும் வாகனமாக உண்டு.

புராணத்தில் அந்தச் செய்தி உண்டு. நாரத முனிவர் ஒரு யாகம் செய்ய அந்த யாகத்திலிருந்து ஒரு ஆட்டுக்கிடா தோன்றி அது எல்லா உலகத்தாரையும் துன்புறுத்த முருகப்பெருமான் அதை அடக்கி தன் வாகனமாக வைத்து கொண்டார் என்றொரு சம்பவம் உண்டு.

“நெருப்பில் உதித்து அங்கண் புவனம் அழித்துலவும்
செங்கட் சிடா அதனை சென்று சென்று கொணர்ந்து
அதன் மீது இவர்ந்து எண்திக்கும் விளையாடும் நாதா’

எனக் கந்தர் கலிவெண்பா அக்காட்சியினை சொல்லும்.

அப்படி இங்கு முருகப்பெருமான் ஆலயத்தை ஆட்டுக்கிடாவே வழிகாட்டி அமைய உதவிற்று என்பது முருகனே தான் தேடிவந்து அமர்ந்ததன் கூடுதல் சாட்சி.

இந்தப் புராணக்கதை ஞான தத்துவம் ஒன்றையும் போதிக்கின்றது.

நாரத முனி என்றால் நிலையில்லா மனம், நெருப்பு என்றால் பேராசை, அந்த ஆடு என்பது அகங்காரத்தை சொல்வது.

மந்தையில் கிடா என்பது அகங்காரம் கொண்டது, தன் தலையால் யாரையும் வீழ்த்தமுடியும் என மோதுவது, அந்த ஆட்டுக்கிடா என்பது இங்கே அகங்காரத்தின் வடிவம்.

முருகப்பெருமானை அண்டினால் அகங்காரம் தீரும், ஆணவம் அழியும் என்பதே இதன் பொருள்.

ஆணவம் அழியும் நெஞ்சில் எல்லா நலன்களும் கைகூடும், அந்த அருளை இங்கே முருகப்பெருமான் அருள்கின்றார்.

இந்தத் தலம் குழந்தைவரத்துக்கான தலம் என்பதிலே ஆணவம் அழியும் காட்சி உண்டு, எந்த செல்வத்தையும் சேர்க்கலாம், வாங்கலாம். ஆனால், பிள்ளை செல்வம் அப்படி அல்ல‌.

அங்கே தன் ஆணவம் மீறி சரணடையும் போது முருகப்பெருமான் அருள் புரிகின்றார், இது குழந்தை வரம் மட்டுமல்ல எல்லா வகையிலும் எல்லா வகை சிக்கலிலும் துன்பத்திலும் இனி முருகா என்னால் ஆவதில்லை உன்னைச் சரணடைந்தேன் என ஆணவம் நீங்கி அவரை பணியும் போது முருகப்பெருமான் அருள்பாலித்து துயர் துடைக்கின்றார்.

நான்கு கைகளுடன் அருள்பாலிக்கும் முருகன் சிலை காலத்தால் மூத்தது, கௌமாரம் என்ற முருகப்பெருமானை வணங்கும் மரபில் நான்கு வேதங்களுக்கும் அவனே அதிபதி என அமைக்கப்பட்டு, நான்கு திசைகளிலும் அவன் காவல் இருப்பான் என்பதை சொல்லும் தத்துவம் அது.

அந்த முருகனை நம்பி பணிந்தோர், ஆணவம் நீங்கி பணிந்தோர் எல்லா நலமும் அருளும் பெறுவார்கள் இது சத்தியம்.

இங்கு ராமர் வந்து சென்றார், அவரும் அனுமனும் வந்தார்கள். அதன் அடிப்படையிலே அது அனுமன் நதி ஆயிற்று, அதனால் சில வித்தியாசமான சம்பிரதாயமும் இங்கு உண்டு.

அடிப்படையில், மூலவருக்கு வைதீக ஆகமமுறையிலும், உற்சவருக்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடத்தப்படுகிறது. இது மலையாளம், தமிழகம் என இரு பக்க சம்பிரதாயங்களும் மாறி மாறி வந்ததால் பொதுவாக ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம்.

குற்றாலம் பக்கம், தென்காசி பக்கம் சென்றால் இந்த ஆலயம் செல்ல தவறாதீர்கள்.

தைப்பூசம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டி விரதம் என எல்லா முக்கிய முருகப்பெருமான் பண்டிகைகளும் இங்கு பெரும் பக்தர் கூட்டத்துடன் விமரிசையாக கொண்டாடப்படும்.

ஆய்க்குடி என்றால் ஆடுகளை மேய்க்கும் இடையர் குடி என்றொரு பொருள் உண்டு, ஒரு நல்ல இடையன் எப்படி தன் ஆடுகளை கண்ணும் கருத்துமாக பார்ப்பானோ, எப்படி தன் மந்தைக்கு காவல் இருப்பானோ அப்படி உங்களை முருகப்பெருமான் காவலிருந்து காத்து, குடியுயர செய்வான் அந்த வேலவன்.

ஆய்க்குடி முருகன் குடிகாத்து, குலம் காப்பான் என நம்பிச் சென்று வணங்குங்கள். எல்லா நலமும், செழுமையும், அறிவும் உங்களுக்கு கை கூடும்.

முருகப்பெருமான் ஆலயங்கள். ஊத்துமலை பாலசுப்ரமணியர் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள். ஊத்துமலை பாலசுப்ரமணியர் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானதும், வித்தியாசமானதும், ஒரு கண் கண்ட சக்தி கொண்டதுமானது அந்த ஊத்துமலை ஆலயம்.

சேலத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் சீலநாயக்கன்பட்டி அருகே அமைந்துள்ளது ஊத்துமலை முருகன் கோயில்.

அந்த ஆலயம் சித்தர்களின் தலைவரான அகத்திய மாமுனியால் உருவாக்கப்பட்டது. அகத்திய முனி எல்லா இடமும் சென்று பல விஷயங்களை ஏற்படுத்தியவர். அவர் மருத்துவம் முதல் ஆன்மீகம் வரை தமிழ்பேசும் பகுதியெல்லாம் பெரும் தொண்டாற்றி நல்ல அடித்தளம் அமைத்தார்.

அவர் இங்கு எல்லா அடித்தள ஏற்பாடுகளையும் முருகப்பெருமானை முன்னிறுத்தியே செய்தார். அவர் கால்வைத்த இடமெல்லாம் முருகப்பெருமானின் பக்தியினை நிறுத்தி, முருகன் பீடங்கள் ஸ்தாபித்து எல்லா மக்களும் காலம் காலமாக முருகனை பின்பற்றி வர வழி செய்தார்.

முருகப்பெருமானும் அவர் வேண்டுகோளை ஏற்று அந்த ஆலயங்களில் எப்போதும் நின்று அருள்பாலிக்கின்றார்.

அப்படியான ஆலயங்களில் ஒன்று இந்த ஊத்துமலை.

மலைசூழ நடுவில் அமைந்துள்ள இந்த மலை சித்தர்களின் ஸ்தலமாக இருந்ததால் ஸ்தலமலை என்றானது.
அகத்தியர் தன் பிரதான நூலான “அகத்தியம்” என்பதை முருகப்பெருமானிடம் இங்கிருந்தே பெற்றுக்கொண்டார் என்பதும் வரலாறு.

போகர் முதலான அகத்தியரின் சீடர்கள் வந்து பயின்ற தலம் இது, அவர்கள் வணங்கிய முருகப்பெருமான் இங்கே பால சுப்ரமணியனாக ஸ்தாபிக்கபட்டார்.

இதைச் சுற்றி ஸ்கந்தகிரி, நாமகிரி, குமரகிரி, பத்மகிரி என நான்கு மலைகள் நடுவில் இந்த மலை அமைந்துள்ளது. முருகப்பெருமானின் நான்கு கரங்கள் அவை என்பது ஒரு கோணம்.

இந்த ஆலயம் அகத்தியர் காலத்தது என்பதால் காலத்தால் மூத்தது.

இந்த மலையில் முருகப்பெருமான் ஆலயம் காலத்தால் மூத்தது. அதன் பின் சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம், சத்ய‌ நாராயண சித்தர் கோவில் என மூன்று ஆலயங்களோடு மிளிர்கின்றது

முருகன் கோவில் என்றால் அங்கொரு சித்தர் கண்டிப்பாக இருத்தல் மரபு, அப்படி அகத்திய முனியால் உருவாக்கப்பட்டு பல சித்தர்களால் வணங்கப்பட்ட அந்த ஊத்துமலையில் சத்ய நாராயண சித்தரும் அருள் பாலிக்கின்றார்.

சுமார் 500 மீட்டர் உயரத்தில் முருகப்பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.

அங்கு முருகப்பெருமான் பால சுப்ரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார்.

அவரின் இடப்பக்கம் விநாயகரும், வலப்பக்கம் நந்தியுடன் கூடிய சிவலிங்கமும் உண்டு. அதாவது விநாயகருக்கும், சிவபெருமானுக்கும் நடுவில் நின்று ஞான தெய்வமாக முருகப்பெருமான் அருள்பாலிக்கின்றார்.

இதன் எதிரே கபில முனி தங்கி தவம் செய்த இடம் இன்றும் உண்டு. அங்கு அந்த கபிலமுனியின் சூட்சும நடமாட்டம் எக்காலமும் உண்டு.

அகத்தியர் தவமியற்றிய இடம் புடைப்பு சிற்பத்தால் அடையாளம் காட்டப்படுகின்றது.

அகத்தியர் சித்தர்களின் தலைமகன் என்பதால் எல்லா சித்தர்களும் வந்து அவரை சந்தித்த தலம் இது, அங்குதான் தவம் செய்தார்கள், பல ஆற்றல்களை ஸ்தாபித்தார்கள்.

சித்தர்கள் அழிவற்றவர்கள். அவர்கள் சக்தி மகா பெரிது என்பதால் இப்போதும் அவர்கள் நடமாட்டம் இங்கு உண்டு, அவர்கள் அருளாசி உண்டு.

சிவசித்தர், கஞ்சமலை சித்தர், கரடி சித்தர், பழநி போகர் ஆகியோர் இங்கு வழிபட்டவர்கள்.

அகத்தியர் காலத்திலே கிளிவடிவ சுக முனிவரும், கன்ம முனியும் இங்கு தவம் செய்துள்ளனர்.

அப்படி சித்தர்களின் தலமான இந்த தலத்தில் எக்காலமும் அவர்கள் வந்து செல்வதுண்டு. முருகப்பெருமானை வேண்டும் அடியார்க்கு எல்லா அருளையும் சித்தர்களும் பொழிவது உண்டு.

கொங்கு மண்டல சதகம் எனும் நூலும், பாபநாச புராண ஓலைச்சுவடியும் இங்கு சிவராத்திரி அன்று, சப்தரிஷிகளும் இங்கு வந்து அங்குள்ள சுனை, தீர்த்தங்களில் நீராடிவிட்டு சதாசிவ மூர்த்திக்கு சப்தரிஷி பூஜை செய்வதை தெளிவாக சொல்கின்றன‌.

இந்த மலையின் மாபெரும் ஆற்றலும் சக்தியுமானது அந்த அகத்திய முனிவர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்கரம். இது மகா சூட்சுமமானது.

இன்னும் யாராலும் முழுக்க புரிந்துகொள்ளமுடியா அளவு சூட்சுமமும் ஞான தத்துவமும் கொண்டது.

அகத்தியரின் மனைவி லோபமுத்ரா சக்திவழிபாடு செய்பவள், அவளே லலிதா சகஸ்ரநாமம் எனும் ஆயிரம் பெயர் கொண்ட மந்திரத்தை தொகுத்தவள்.

சக்ரவழிபாட்டில் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தவள், அந்த சூட்சும சக்கரத்தை வரைந்தே வழிபாடுகளை செய்து சக்தியினை பெற்றுகொள்வாள்.

சக்கரம் என்றாலும், யந்திரம் என்றாலும் தொடர்ந்து இயங்குவது, தொடர்ந்து சக்தி தருவது எனப் பொருள், அப்படி பிரபஞ்ச சக்தியினை பெற்றுதரும் சக்தி கொண்டது இந்த யந்திரம்.

ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பு இப்படி அமையும் ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது. மைய பகுதியில் உள்ள பிந்துவை சுற்றி நாற்பத்தி மூன்று (43 ) முக்கோணங்கள் மற்றும் இருபத்தி நான்கு (24 ) தாமரை இதழ் போன்ற அரண்கள் உள்ளன. அவற்றை சுற்றி மூன்று மதில்களை போன்ற வட்ட வடிவமும், நான்கு வாயில்களைக் கொண்ட சதுரங்க கட்டங்களும் கொண்டது.

அந்த பிந்துவின் மைய பகுதியில் இருந்து அதன் மீது நேரான பாதையில் மேல் நோக்கிய நிலையில் காணப்படும் நான்கு முக்கோணங்கள் சிவ கோணங்கள். அதாவது ஆண் சக்தியைக் குறிக்கும் கோணங்கள். அதை போலவேதான் கீழ் நோக்கிய நிலையில் காணப்படும் ஐந்து முக்கோணங்களை சக்தி கோணங்கள் என்பதாக கூறுகின்றார்கள்.

பிந்துவை சுற்றி உள்ள அந்த ஒன்பது முக்கோணங்கள் சிவ சக்தியைக் குறிப்பதாக கூறுகின்றார்கள்.

ஸ்ரீ சக்கரம் எனப்படும் மஹா மேருவை மேரு பிரஸ்தாரம், கைலாச பிரஸ்தாரம் மற்றும் பூ பிரஸ்தாரம் என்ற மூன்று பிரிவுகளில் கூறுகின்றார்கள். ஒவ்வொரு ஆவரணத்திலும், அந்தந்த ஆவரணத்தை ஆட்சி செய்வதற்காக, சக்ரேஸ்வரி என்று அழைக்கப்படும் ஒரு அதி தேவதை இருக்கின்றாள். அவளுடன் இணைந்தே அங்குள்ள பல்வேறு தேவதைகளும் யோகினிகளும் அன்னை லலிதாம்பிகையை அடையும் வழியில் பாதுகாவலர்களாக உள்ளார்கள்.

மந்திர உச்சாடனைகள் செய்து அவர்களை திருப்திபடுத்திய பின்னரே, சாதகர்களால் ஒவ்வொரு ஆவரணத்தையும் கடந்து சென்று மையப் பகுதியான ஸ்ரீ புறத்தின் வாயிலை அடைய முடியும்.

ஸ்ரீ சக்கரம் என்பது ஒன்பது ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது என்பது தத்துவம்.

இதன் பெருமை பிரமாண்ட புராணத்தில் வியாசரால் சொல்லபட்டிருக்கின்றது. ஹயக்ரீவர் வர்ணனை அகத்தியருக்கு உபதேசித்த காட்சி அங்கே முக்கியமானது.

அகஸ்தியர் ஹயக்கிரீவரைப் பணிந்து, “தேவியின் யந்திரமாகிய ஸ்ரீ சக்ரத்தின் மகிமைகள் யாவை? அதை எவ்வாறு வழிபட வேண்டும் ” என்று வேண்டிக் கொள்ள, ஹயக்ரீவர் கூறுகிறார்:

“தேவியின் யந்திரம் ஸ்ரீ சக்கரமே. அவளே திரிபுராம்பிகை, அவளே ஸ்ரீ மஹாலக்ஷ்மியும் ஆவாள். தேவியானவள் தானே தன் ஜோதிமயமான வடிவைத் தன் கண்களால் கண்டாள். அதுவே ஸ்ரீ சக்கரமாம். ஆதலால் சாட்சாத் ஆதிலட்சுமிதான் ஸ்ரீ சக்கரமென்பது தத்துவமாகும். அதை அர்ச்சித்துத்தான் ஸ்ரீ விஷ்ணுவே மோகினி அவதாரம் எடுத்தார். ஈஸ்வரன் சர்வ வித்யாதரன் ஆனார். ப்ரம்மாவும் படைக்கும் சக்தியைப் பெற்றார்.”

ஆம், இங்கு எந்த பேதமுமில்லை, அவள் “நிர்பேதா” அதாவது பேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவள் அவள்.

அதனாலந்த சக்கரம் விநாயகர் கோவில், முருகன் கோவில், சிவன் கோவில், விஷ்ணு கோவில், அம்மன் கோவில், ஐயப்பன், ஆஞ்சநேயர் கோவில்கள் என எல்லா ஆலயங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட தடை இல்லை.

வெண்மை நிறமுடைய வாசனை மிகுந்த மலர்களால் ஸ்ரீ சக்கரத்தை அர்ச்சிப்பவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் நிறையும்.

துளசியாலும், தாமரையிதழ்களாலும் ஸ்ரீ சக்கரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தன ஆகர்ஷணமும், லக்ஷ்மி கடாட்சமும் நிறையும்.

மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் நோய்கள் அகலும், அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) அர்ச்சித்து வர நோயிலிருந்து விடுபடுவர்.
ஸ்ரீ சக்கரம் எந்த இல்லத்தில் உள்ளதோ அங்கு எவ்விதமான வாஸ்து தோஷங்கள் இருப்பினும் அவை கட்டுப்படும்.

பொது இடங்களாகிய ஆலயங்கள், திருமடங்கள், தியான பீடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவற்றில் எல்லோரும் நலம் பெற வேண்டி “பிரஜா பிரதிஷ்டை” முறைப்படி ஸ்ரீ சக்கரம் அமைக்கபட்டால் ஒற்றுமையும், அமைதியும் அன்பும் உலகெங்கும் நிலவும் என அதன் சக்தி அளப்பறியது.

இது ஒருவகை கணிதம், ஒருவகை சூட்சும சக்திகளை இழுக்கும் சக்தி கொண்டவை, முறையான வகையில் அமைக்கப்படும் அந்த வடிவம் பிரபஞ்ச சக்தியினை ஈர்த்துதரும்.

இந்துக்கள் வழிபாட்டின் அடிப்படை அவை, இந்து ஆலயங்களின் சக்தி பீடங்கள் அதன் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும்.

அப்படியான சக்கரத்தை சக்தி மையத்தை அகத்தியர் தன் மனைவி வழிபட அங்கே கல்லில் பதித்துள்ளார்.

அந்த சக்கரம் சக்திமிக்கது, அதன் முன்னால் நின்று வழிபட்டால் எல்லா நோய்களும் அகலும்: சித்தம் தெளியும்; அறிவு மிகுந்துவரும்; சிந்தனை அதிகரிக்கும்; மந்தம் அகலும்.

அந்தச் சக்கரம் உடல் ரீதியான எல்லா நோய்களையும் மனரீதியான எல்லா சிக்கலையும் அகற்றும் சக்தி கொண்டது.

முருகப்பெருமான் தலங்களில் சித்தர்கள் பல சூட்சும வகைகளை ஏற்படுத்தி இங்கு வருவோர் குறையெல்லாம் தீர்க்கும்படி செய்த தலம் அது.

அந்த ஊத்துமலைக்கு நம்பி செல்லுங்கள் முருகப்பெருமானை ஆராதித்து வணங்குங்கள், சத்ய நாராயண சித்தரை வணங்குங்கள், அன்னை சாமுண்டீஸ்வரியினை வணங்குங்கள்.

கபில முனி தங்கிய குகையில் அமர்ந்திருங்கள். நல்ல அதிர்வுகள் உடலிலும் மனதிலும் வரும்.

பின் அகத்தியரை வணங்கி, அவர் மனைவியும் வணங்கி அந்த சக்கரம் முன்னால் அமர்ந்திருங்கள்.

உடலின் எல்லா நோயும், மனதின் எல்லா நோயும் அந்த நொடியில் அகலும்.

உயரமான மலையில் சரியான வகையில் பிரபஞ்ச சக்தியினை ஈர்த்து தரும்படி அந்த சக்கரம் அகத்தியப்பெருமானால் அருளப்பட்டிருக்கின்றது.

அந்த பலன் கங்கைபோல் எப்போதும் பிரவாகமானது. அதை அள்ளி அள்ளி எடுத்துக் கொள்ளுங்கள், உங்களின் உடல் மனம் என எல்லா நோயும் தீரும்.

சிந்தனை சிறக்கும், வாழ்வே மாறும்.

சேலம் பக்கம் செல்லும் போது அந்த ஊத்துமலை முருகப்பெருமானை காணத் தவறாதீர்கள். அந்த முருகப்பெருமானையும், அகத்தியரையும் சந்தித்தால் உங்கள் வாழ்வில் இன்பமும், நிம்மதியும், ஆரோக்கியமும், தெளிவும் ஊற்றுபோல் பெருகிகொண்டே இருக்கும். வற்றாமல் வந்து கொண்டே இருக்கும். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் . பச்சைமலை மற்றும் பவளமலை.

முருகப்பெருமான் ஆலயங்கள் . பச்சைமலை மற்றும் பவளமலை.

தமிழகத்தின் கொங்குப் பிரதேசம் எப்போதும் முருகப்பெருமான் வழிபாட்டினை உயிரணைய கொண்டாடும் பகுதி. முருக பக்தி என்பது அங்கு ரத்தத்தில் கலந்த ஒன்று.

அந்தக் கொங்கு நாட்டில் மருதமலை போன்ற முக்கிய முருகப்பெருமான் ஆலயங்கள் உண்டு; சென்னிமலை உண்டு: அந்த வரிசையில் இந்த பச்சைமலை மற்றும் பவளமலை ஆலயங்களை காணலாம்.

பச்சைமலை பாலசுப்பிரமணியர் ஆலயம் கோபிசெட்டிபாளையம் அருகே சிறிய மலையில் அமைந்துள்ளது, இதன் வரலாறு மிகத் தொன்மையானது.

“பச்சைமலை, பவளமலை எங்கள் நாடு, பரமேஸ்வரன் வாழும் மலை எங்கள் நாடு” எனக் குற்றால குறவஞ்சியில் வரும் வரிபோல மிகப் பழமையான காலத்திலே குறவர்கள் வாழ்ந்த பகுதி.

வள்ளியினை முருகப்பெருமான் மணந்த வகையில் இந்த மலைகளெல்லாம் முருகப்பெருமான் வழிபாடு அன்றே நடந்த இடங்கள். ஆனால், ஆலயங்களோ, பீடங்களோ அன்று அமைக்கப்படவில்லை.

பின்னாளில் இந்த ஆலயம் அமைய காரணமானவர் துர்வாச முனிவர்.

முனிவர்கள் என்பவர்கள் காற்றைப் போன்றவர்கள், எங்கும் நிலையாய் இராதவர்கள், அப்படி துர்வாச முனிவர் இப்பக்கம் வரும்போது வழமையான சிவபூஜை செய்ய எண்ணி இடம் தேடினார்.

பூஜை எல்லா இடத்திலும் செய்யமுடியாது. நீர் வளம், பூக்கள் எனப் பல விஷயம் வேண்டும். நல்ல ஆகர்ஷன பூமியாக இருத்தல் வேண்டும். அதனால் துர்வாசர் மொடச்சூர் எனும் பக்கம் வந்தார்.

அவர் தன் பூஜையினை தொடங்கினார். வழமையான பூஜை முடிந்ததும் கண்களை மூடி முருகப்பெருமானை காண விருப்பம் கொண்டார்.

அவருக்கு அருகில் இருக்கும் பச்சைமலை குன்றில் முருகன் தென்பட்டார். அந்த குன்றை நோக்கிச் சென்ற துர்வாசர் அங்கே முருகப்பெருமானின் தரிசனம் பெற்று வணங்குகின்றார். அப்போதே முருகப்பெருமான் இத்தலத்தில் நின்று அருள்பாலிக்க வேண்டும் என வரம்பெற்று அவருக்கான யந்திரம் ஸ்தாபித்து இந்த ஆலயத்தை நிர்மாணம் செய்கின்றார்.

பழனிபோல் மேற்கே முருகப்பெருமான் நிற்கும் ஆலயம் இது. ஆம். இது மேற்கு நோக்கிய வாசல் கொண்ட, முருகப்பெருமானும் மேற்கு நோக்கி நிற்கும் தலம்.

பழனிபோல் இதுவும் அவ்வகையில் முக்தி ஞானம் அருளும் தலம்.

இந்தத் தலம் அன்றிலிருந்தே பிரசித்தி. கொங்கு நாட்டின் மிக முக்கிய ஆலயமாக விளங்கின்றது. பக்தர்கள் நாடி வந்து பெற்ற வரங்கள் ஏராளம்.

நாயக்க மன்னர்கள் காலம் வரை அந்த மலை சகல சௌபாக்கியம் தரும் ஆலயமாக ஒளிவீசிக்கொண்டிருந்தது.

பச்சைமலை என்பது சமஸ்கிருதத்தில் மரகதசலம் எனக் கொண்டாடப்பட்டு அப்பெயரும் நிலைத்து அது மரகதகிரி என்றெல்லாம் அழைக்கப்பட்டது.

ஆனால், பின்னாளில் அரசியல் குழப்பங்கள் வந்தபோது அது பொலிவிழந்தது, ஒரு இருள்கவ்விய காலம் வந்தது. ஆனால், உரிய காலத்தில் முருகப்பெருமான் தன் பக்தர் மூலம் அதை மீட்டெடுத்தார்.

அந்தக் கோவிலுக்கு வணங்க சென்ற குப்புசாமி கவுண்டர் என்பவருக்கு முருகப்பெருமான் ஜோதிவடிவில் காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டார், அவர் மூலமாக அவரோடு இருந்து இந்த ஆலயத்தை முருகப்பெருமானே சீர்படுத்தி பழையபடி பொலிவுறச் செய்தார்.

இது 1954ம் ஆண்டு தொடங்கிற்று.

அன்று தொடங்கி இந்த ஆலயம் கேட்கும் வரமெல்லாம் தரும் அருள்மிக்க ஆலயமாக அருள் வழங்கிக்கொண்டிருக்கின்றது.

இங்கு தாரா அபிஷேகம் மிக விசேஷம். 108 லிட்டர் பால் கொண்டு 11 முறை ருத்ரம் ஓதி செய்யப்படும் இந்த வழிபாட்டால் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்வும் உண்டு.

இந்த ஆலயத்தில் நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு கிட்டாமல் இருந்தவர்கள் 7 நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு குழந்தை பெற்ற சாட்சிகள் நிரம்ப உண்டு.

திருமண தடைகள் நீங்க 6 செவ்வாய் கிழமைகளில் கல்யாண சுப்ரமணியருக்கு நெய் தீபம் இட்டு ஆராதனைகள் செய்தால் நிச்சயம் திருமண தடைகள் நீங்கும்.

இங்கு இளம் குமரனாக‌ மேற்குநோக்கி சொர்ண பந்த பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளார் முருகப்பெருமான். வலக்கையில் தண்டமும் இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும் சக்தி வேலுடனும் சேவற்கொடியுடன் தரிசனம் தரூகின்றார்.

அர்த்த மண்டபத்தின் ஒரு புறம் ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களுடன் வள்ளி தெய்வயானை சமேதரராய் அருள்கின்றார். மறுபுறம் கல்யாண சுப்ரமணியராய் வள்ளி தெய்வயானையுடன் மணக்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

சஷ்டி, தைப்பூசம் போன்ற காலங்களில் இந்த கருவறையில் சக்தி மிகுந்த அதிர்வு தென்படுவதும் அதை தாங்கமுடியாமல் அர்ச்சகர்களே தள்ளி நிற்பதும் அடிக்கடி நடக்கும்.

இங்கு கடம்பமரம் தலவிருட்சம், தீர்த்தம் சரவண தீர்த்தம்.

இங்கும் பழநிமலையில் மூலவருக்கு அமைந்துள்ளதைப் போன்றே சொர்ண பந்தனம் செய்விக்கப்பட்டுள்ளது. பழநி மலையில் நடப்பதைப் போன்றே இங்கும் காலை, மாலை நேரங்களில் இராக்கால மகா அபிஷேகம் நடைபெறுகின்றன.

அதுவும் சத்ரு சம்ஹார திரிசடை அர்ச்சனை எனும் எதிரிகளை ஒழிக்கும் அபிஷேகம் இங்கு மிகச் சிறப்பு.

எப்போதும் அதிசயங்களை எளிமையாக இயல்பாக செய்யும் ஆலயம் இது, கோடையில் தரையில் நீர் இல்லாவிட்டாலும் மலையில் நீர் சுரக்கும் அதிசயம் கொண்ட தலம் இது, எல்லாம் முருகன் அருள்.

இந்த ஆலயம் பச்சைமலை என்றும் அந்த நிறத்தால் மட்டும் அறியப்படவில்லை. அம்மலை அப்படி பச்சை நிறம் அல்ல, மரகதகிரி என அழைக்கப்பட்டாலும் அது அந்த நிறத்தால் அல்ல‌.

அது முருகனுக்குரிய ஒரு சிறப்பான வரத்தால்.

பச்சை நிறம் என்பது புதனுக்குரியது, ராகு கிரகத்துகுரிய நிறமும் அதுவே.

புதன் என்பது வாக்கு வன்மை தரும் கிரகம், சொல்வன்மை அறிவு புத்தி எல்லாம் அருளும் கிரகம், ராகு என்பது அதை இன்னும் நல்லவகையில் அதிகரித்து தரும் கிரகம்.

இந்த ஆலயம் சொல்வன்மை , செல்வாக்கு, அறிவு, கல்வி எல்லாம் தரும் ஆலயம்.

துர்வாசர் இந்த ஆலயத்தை ஸ்தாபித்தார் என்பது வெறும் புராணம் அல்ல, தலபுராண செய்தி அல்ல. துர்வாசர் வாக்கு வன்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்.

அவர் வார்த்தைக்கு எல்லோரும் அஞ்சினார்கள், மதித்தார்கள். அவர் சொல்லுக்கு பெரும் பலமும், சக்தியும் இருந்தது.

அந்த சொல்வன்மை தரும் ஆலயம் அறிவும் ஞானமும் பண்பும் கொண்ட நல்ல செல்வாக்கும் சொல்வாக்கும் தரும் ஆலயம் இது.

இந்தத் தன்மையினை பெற்றவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்; மக்கள் வசமாவார்கள்; எதிரிகள் ஒழிவார்கள்; இந்த ஆலயம் அந்த வரத்தை தரும்.

மக்களை வசீகரிக்கும் சக்தியினை இந்த ஆலயம் அருளும். தனிபெரும் வசீகரம் பேச்சினில், வாக்கினில், சிந்தையில் உங்களுக்கு உருவாகும்.

பச்சைமலை முருகனை வணங்கினால் வாழ்வில் பசுமை கூடும், உங்கள் சொல்லுக்கு தனிபெரும் சக்தி கிடைக்கும்.

அந்த சக்திக்கான ஞானமும் தெளிவும் முருகப்பெருமான் தருவார், இது சத்தியம்.

அடுத்த ஆலயம் பவளமலை.

இதுவும் அதன் அருகில்தான் அதாவது பச்சைமலை அருகில்தான் அமைந்துள்ளது.

இதனை ஸ்தாபித்தவரும் துர்வாச முனிவர்தான், இம்மலையிலும் முருகப்பெருமான் அருள்பாலிக்க அவரே சித்தம் கொண்டார்.

இந்த ஆலயம் அமைந்திருக்கும் குன்று பற்றி ஒரு புராண கதை உண்டு.

ஒரு முறை வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர் என்ற தகராறு ஏற்பட்டது.

அந்த போட்டி போராக மாறியது. தங்கள் பலத்தையும் சக்தியையும் காட்டி அவர்கள் போர் செய்தனர்.

வாயுபகவான் தனது சக்தியை எல்லாம் திரட்டி மேரு மலையை தகர்த்துக்காட்டுகிறேன் என்று சவால் விட்டு மலையுடன் மோதுகிறார். காற்றின் வேகத்தை தாங்க முடியாக மேரு மலையின் சில பாகங்கள் மலையை விட்டு பறந்தன. அதில் ஒரு துளி விழுந்த இடம்தான் பவளமலை என்கிறது பவளமலையின் தல புராணம்.

இங்கு மலை பறந்துவந்ததா? காற்று இழுத்து வந்ததா என்பது விஷயம் அல்ல, அது புராண செய்தி.

அதன் பொருள் மூச்சு பயிற்சியினால் பிரணாயமத்தினால் இங்கிருந்தே மேருமலையில் இருந்து செய்யும் தவப்பயனை அடையலாம், கயிலாய அருளை அடையலாம் என்பது பொருள்.

ஆம். மேருமலையின் பலனை இங்கேயே தரும் ஆலயம் இது.

மேருமலையின் ஒரு துண்டில் உருவானது என்பதாலே இங்குள்ள சிவனுக்கு கைலாயநாதர் என பெயர் உண்டு, அதுவும் அவர் சுயம்பு லிங்கம்.

இங்குள்ள கைலாசநாதர் லிங்கம் சுயம்புவாக தோன்றியது என்பது சிறப்பு.

இங்குதான் முருகப்பெருமான் முத்துகுமாரசாமியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்றார், இங்கே அவர் பிரம்மச்சரிய கோலத்தில் நிற்கின்றார்.

பவளமலை முருகனை காண படியேறி சென்றால் அதுவரை பக்தர்களின் எண்ணங்களில் குடிகொண்டிருந்த துன்பங்களும், துயரங்களும் காணாமல் போகும்.

பவளமலை கோவிலில் மிக முக்கிய அம்சம் சிவனுக்கு ஈடாக முருகப்பெருமானுக்கு திரிசத அர்ச்சனை எனும் அர்ச்சனை நடப்பது.

திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதம் என்பது முந்நூறு.

அதாவது முருகப்பெருமானுக்கு செய்யப்படும் புகழ்மிக்க அர்ச்சனை இது. ஆறுமுகக்கடவுள் என்று போற்றப்படும் முருகன், பன்னிரு கைகள், ஆறு முகத்துடன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று சிவபெருமானை போன்று ஐந்தொழில்களையும் மேற்கொள்பவராக இருக்கிறார்.

அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது ஒரு முகத்துக்கு 50 அர்ச்சனைகள் வீதம், ஆறு முகங்களுக்கும் சேர்த்து 300 அர்ச்சனைகள் செய்வதே திரிசத அர்ச்சனை.

இந்த அர்ச்சனை இந்த ஆலயத்தில் நடப்பது மகா விஷேசம்.

இந்த திரிசத அர்ச்சனையினை தொடங்கி வைத்தது இந்திரன்
அதாவது சூரபத்மனை வதம் செய்து இந்திரலோகத்து தேவர்களை எல்லாம் முருக கடவுள் சிறைமீட்டார். அப்படியன முருகனை பணிந்த தேவர்களின் அரசன் இந்திரன் தலைமையில் தேவர்களால் செய்யப்பட்ட அர்ச்சனையே திரிசத அர்ச்சனை.

இதுஎதிரிகளை வீழ்த்தும் திரிசத அர்ச்சனை என்றும் இது அழைக்கப்பட்டது.

மூலவர் முத்துக்குமார சுவாமி பிரம்மசாரியாக எழுந்தருளியுள்ளார். வாயு மூலையில் வள்ளி தெய்வானையாகிய இருவரும் முருகனைத் திருமணம் செய்து கொள்வதற்காக தவம் இருக்கின்றனர்.

திருமணத்துக்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு தரிசிக்கலாம்.

இந்த ஆலயமும் பவளமலை என அழைக்கபடுவது அதன் நிறத்தால் அல்ல. மாறாக, முருகப்பெருமானின் தனி அருளால்.

பவளம் என்பது செவ்வாயின் நிறம், இந்த தலம் செவ்வாயின் ஆதிக்கமிக்கது. முருகப்பெருமான் செவ்வாய்க்கு அதிபதி.

இந்த ஆலயத்தில் செவ்வாய் தோஷம் நீங்கும், திருமண தடைகள் நீங்கும்.

தெய்வானை, வள்ளி இங்கே தவமிருப்பர் என்பது முருகப்பெருமானை நினைந்து இங்கு வழிபட்டால் வாழ்வில் எல்லா தடங்கல்களும் தீரும் என்பது.

இந்த ஆலயம் செவ்வாயின் பலத்தை தரும் ஆலயம். ஜாதகரீதியாக அந்த வலு இங்கே கூடும், செவ்வாயின் கோளாறுகள் சரியாகும்.

செவ்வாய் என்பது வைராக்கியம் மற்றும் தைரியம் தரும் கிரஹம். போராட்ட குணத்தை அதிகரிக்கும்.

இந்த முருகனை வழிபட்டால் அந்தப் போராட்டம், தைரியம், வைராக்கியம் வளரும்.

ஆம். பச்சை மலையும் பவள மலையும் இரட்டை ஆலயங்கள். வாழ்வில் கண்டிப்பாய் ஒரே நேரத்தில் தரிசிக்க வேண்டிய தலங்கள்.

பச்சைமலை செல்வாக்கு அறிவு புத்தி எல்லாம் தரும், பவளமலை வைராக்கியம், தைரியம் எல்லாம் தரும்.

அறிவும் தெளிவும் இருந்தாலும் தைரியம் அவசியம். ஞானம் இருந்தாலும் வைராக்கியம் அவசியம். இவற்றை ஒருசேர தரும் ஆலயங்கள் பச்சைமலையும், பவளமலை ஆலயங்கள்.

இங்கு துர்வாசமுனி சரியான இடமாக அடையாளம் கண்டு, பிரபஞ்ச சக்தி குவியும் இடமாக அடையாளம் கண்டு தன் தனி சக்தியினால் முருகப்பெருமானை அழைத்து இந்த ஆலயத்தை ஸ்தாபித்தார்.

அவை எக்காலமும் மக்களுக்கு எல்லா அருளும் வளமும் தர அவர் வழி செய்தார், அவர் வழி வந்த முருகப்பெருமான் என்றென்றும் நின்று அருள் பாலிக்கின்றார்.

பச்சைமலை அறிவும் தெளிவும் அதில் முழுமையும், இன்னும் இன்னும் தேடலும் தரும் தலம், பவளமலை என்பது வைராக்கியம் தரும்.

பச்சை என்பது புதனை குறிப்பது அது அறிவு வாக்கு, தெளிவு ராகு என்பது அதிகப்படுத்தும் கிரகம் தேடலை தரும்.

இந்த தலம் புதனுக்கும், ராகுவுக்குமான தலம். இங்கே வழிபட்டால் அந்தத் தாக்கம் குறையும், ஜாதகம் சரியாகும். முருகப்பெருமான் அந்த அற்புதத்தை தருவார்.

பவளமலை செவ்வாய்கிரக பலன்களை தரும், வாயு பாவான் மேருமலையினை இழுத்துவந்தார் என்பது பெரும் சக்தியினை மூச்சு பயிற்சியினால் பிரணாயாமத்தால் பெறலாம் என்பதை சொல்லும், வள்ளி தெய்வானை தவக்கோலமும் முருகப்பெருமானின் பிரம்மச்சரிய கோலமும் அங்கே தியானம் கைகூடும் என்பதை சூசகமாக சொல்லும்.

யோகத்தில் கைகூடும் வரத்தை அந்த ஆலயம் அருளும். யோகம் கைகூட வைராக்கியம் முக்கியம். உறுதியும் தைரியமும் விடாபிடி முயற்சியும் அவசியம்.

அந்த தன்னம்பிக்கை, வைராக்கியமெல்லாம் அந்த தலம் அருளும்.

ஈரோடு பக்கம், கோபிசெட்டி பாளையம் பக்கம் செல்லும் போது இந்த ஆலயங்களை மறவாமல் தவறாமல் தரிசியுங்கள்.

இங்கே அமர்ந்து திருமுருகாற்றுப்படை, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் போன்ற பாடல்களைப் பாடி முருகனை துதியுங்கள்.

உங்கள் சொல்வாக்கு, செல்வாக்கு, அறிவு , ஞானம் எல்லாம் மிகுந்த தைரியத்துடன் அதிகரிக்கும். வாழ்வு மாறும். பெரும் திருப்பமும் ஏற்றமும் முருகப்பெருமான் அருள்வார். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள். பாலசுப்ரமணியன் ஆலயம், இளையனார் வேலூர்.

முருகப்பெருமான் ஆலயங்கள்.
பாலசுப்ரமணியன் ஆலயம், இளையனார் வேலூர்.

தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது இளையனார் வேலூர் பாலசுப்ரமணியன் ஆலயம்.

இந்த ஆலயம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே இளையனார் வேலூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

இதன் அருகில் உள்ள இடம் கடம்பரை, கடம்ப மலர்கள் நிறைந்திருந்த இடத்தில் எழுந்த சிவனுக்கு கடம்பரை நாதர் எனப் பெயர் உண்டு, அங்கு அன்னை ஆவுடை நாயகி.

இந்தத் தலத்தின் புராணச் செய்திபடி சேயாற்று கரையான இந்தக் கடம்பரையில் காசிப முனிவர் பெரும் யாகம் செய்திருகின்றார், அதனை ம‌லையன், மாகறன் என இரு அசுரர்கள் தடுத்து பெரும் அட்டகாசம் செய்திருக்கின்றார்கள்.

அவர்கள் தொல்லை தாளாத காசிப முனிவர் அவர்கள் பொருட்டு சிவனிடம் முறையிட்டார், சிவபெருமான் அந்த வேள்வியினை காக்க‌ முருகப்பெருமானை அழைக்கச் சொன்னார்.

அப்படி காசிப முனிவரின் வேண்டுதலுக்கு ஏற்ப முருகப் பெருமானே வந்து அந்த இரு அசுரர்களையும் அழித்து தன் ‘வேலை’ அங்கு காவலாக நட்டுவைத்தார்.

ஆம். அந்த வரலாறு பெரியது.

அங்கே வந்த முருகப்பெருமான் முதலில் மலையனையும், மாகறனையும் அழைத்து அறிவுரை செய்தார். ஆனால், கர்வம் தலைக்கேறிய அவர்கள் முருகனின் நல்லுரையை ஏற்கவில்லை.

அதன் பின்பே முருகப்பெருமான் தன் கையிலிருந்த வேலாயுதத்தை காசிப முனிவரின் வேள்விக்கு காவலாக நிறுத்திவிட்டு மாகறன் தலையினை வெட்டி வீழ்த்தினார்.

தம்பி மாகறனுக்காக பழிவாங்க எழுந்த மலையன் அசுரர்குல திலகம் சூரமத்மனின் தாயாகிய மாயாவினை தியானித்து சக்திபெற்று யுத்தகளம் வந்தான்.

அவனையும் முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். அந்த இடம் இன்று மாகறல் என்று அழைக்கப்படுகிறது.

பின் சிவனின் உத்தரவுப்படி தன் ‘வேலை’ அங்கு காவலாக நிறுத்தினார், அவர் தன் ‘வேலை’ ஆழமாக ஊன்றிய இடம் வேலூர், முருகன் சிவனுக்கு இளையமகன் என்பதால் இளையனார்.

அந்த இளையானார் வேல் ஊன்றிய இடம் இளையனார் வேலூர்.

இங்கே முருகப்பெருமானின் வேல் ஆழப்பதிந்தது, அது எவ்வளவு ஆழமாக பதிந்தது என்பதை சொல்லமுடியாதபடி இன்றும் அங்கிருக்கும் வேலின் ஆழம் நீண்டது , அதன் முடிவு அறிந்தவரில்லை.

இந்த ஆலயம் முருகப்பெருமானின் வேல் நின்ற இடம் என்பதால் இங்கு முருகன் தனியாகத்தான் காட்சி தருவார், தமிழகத்தில் வேலுக்கென தனி சன்னதி கொண்ட ஆலயமும் இதுதான்.

அந்த வேல் கருங்கல் வேல் தனி சன்னதியில் உண்டு, அங்கு வழிபாடுகள் நடக்கும்.

மிக நுணுக்கமாக‌ பாதி வள்ளியும், பாதி தெய்வானையும் ஒருங்கே அமைந்த கஜவள்ளியாக இங்கே எழுந்தருளி இருக்கிறார்கள்.

வள்ளி, தெய்வயானை இணைந்த கஜவள்ளி தோற்றத்தை கொண்ட வெகுசில ஆலயங்களில் இதுவும் ஒன்று.

இங்கு திருபுரசுந்தரிக்கு தனி சன்னதி உண்டு. அப்படியே பெரும்தண்ட சிவன் சன்னதி, இன்னும் அண்ணாமலையார் சன்னதி, ஏகாம்பர நாதர் சன்னதியும் உண்டு.

இங்கு கடம்பர நாத மூர்த்தியாக ஈசான மூலையில் சிவன் உண்டு, அந்த சிவனை நாள்தொறும் முருகப்பெருமான் வழிபடுகின்றார்.

இந்த ஆலயம் காலத்தால் மிக மிக முற்பட்டது , பல நூறு ஆண்டு பழமையான இந்த ஆலயத்தினை சுவாமிநாத சித்தர் என்பவர் மீள உருவாக்கி இன்றிருக்கும் ஆலய வடிவினை கொடுத்தார்.

சுவாமிநாத சித்தர்தான் இந்த ஆலயத்தின் மகா முக்கிய பக்தர், இந்த ஆலயத்தில் வழிபட்டு சித்தர் நிலையினை அடைந்த மஹான் அவர்.

அவருக்கு தனி சன்னதி உண்டு.

இவர் திருவாடுதுறையின் ஆதீனமாக இருந்த முனிபுங்கவ தேசிகர், திருநெல்வேலியில் கட்டளை தம்பிரானாகவும் இருந்தார்.

முருகப்பெருமான் அழைப்பின் பேரில் இந்தத் தலம் வந்து வேலுக்கு பூஜை செய்து இங்கே திருப்பணி செய்தார்.

தமிழ், வடமொழி என இரு மொழியிலும் தேர்ச்சி பெற்ற அவர்தான் “இளையனார் வேலூர் தலவரலாறு” எனும் காவியத்தை எழுதினார்.

அதில் இந்த முருகப்பெருமானின் கீர்த்திகள் முழுக்க சொல்லப்பட்டிருக்கின்றன‌.

ஞான சித்தரான சுவாமிநாத சுவாமிகளுக்கு தமிழ்வருடம் ஐப்பசி மாதம் பௌர்ணமியின் போது அன்னாபிஷேகம் மிக பிரமாண்டமாக நடக்கும்.

அனுதின பூஜை இந்த சித்தருக்கு முதலில் செய்யப்பட்ட பின்பே இதர சன்னதிகளுக்கு செல்லும்.

இந்த ஆலயத்தில் சிவாலயங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரைப் போலன்றி சுமித்திரை சண்டிகேஸ்வர் சன்னதி அமைந்திருப்பது மிகவும் விசேஷம்.

ஆலயம் ஆயிரம் வருடங்களுக்கும் மேற்பட்டது. காசிப முனிவர் தவமிருந்து, இத்தலத்துக்கு அருகில் உள்ள நெய்யடிப்பாக்கம் என்ற ஊரில் சமாதி அடைந்தார்.

இப்படி மகா சிறப்புக்களை கொண்ட ஆலயம் அது.

இந்த ஆலயம் பல சிறப்புக்களை கொண்டது போல ஆழ்ந்த தத்துவமும் கொண்டது, அந்த இரு அசுரர்களும் லௌகீகம் மற்றும் ஆன்மீகம் என இருவகை எதிரிகள் வடிவம்.

ஒரு மனிதன் புவியில் நல்லமுறையில் வாழ்ந்து மறுமையில் நற்கதி அடையவேண்டும். இந்த இரண்டையும் தடுக்கும் மாயைகளை, சோதனைகளை முருகன் தன் ஞானத்தால் அருள்வான் என்பதுதான் இந்த ஆலய தாத்பரியம்.

வள்ளி என்பது பூலோக வடிவம், தெய்வானை என்பவள் வானலோக குறியீடு.

அவர்கள் இருவரும் கலந்திருக்கும் வடிவம் என்பது இம்மைக்கும் மறுமைக்குமான வரத்தை ஐஸ்வர்யத்தை முருகப்பெருமான் தருவார் என்பது.

இந்த ஆலயம் எதிரிகளை ஒழிக்கும், காசிப முனி தன் கர்மப்படி யாகம் செய்யவந்தார். அவரின் யாகம் தங்களுக்கு உவப்பானது அல்ல எனக் கருதிய அசுரர்கள் அவரின் கர்மத்தில் தலையிட்டு தொல்லை கொடுத்தனர்.

அப்போதுதான் முருகப்பெருமான் வந்து அவர்களை ஒழித்து ‘வேலை’ ஊன்றினார்.

உங்கள் கர்மத்தை இயல்பாக அதன் வழியில் செய்யும் போது, பூமிக்கு நீங்கள் வந்த கடமையினை செய்யும் போது அதனை எதிரிகள் தடுக்க பல தொல்லைகளை செய்யும் போது நீங்கள் இந்த முருகனிடம் முறையிட்டால் தொல்லை எல்லாம் நீங்கும்.

ஆம். இந்த ஆலயம் எதிரிகளை அழித்து இம்மையிலும் மறுமையிலும் ஒருவன் பலனடையும் வரத்தை தரும் ஆலயம்.

இங்கு செல்லும் போது முதலில் காசிப முனிவரின் சமாதி இருக்கும் நெய்யடிப்பாக்கம் எனும் தலத்துக்கு சென்று அவரை வணங்கிவிட்டு இத்தலம் வரவேண்டும்.

இங்கே முதலில் சிவபெருமானை தொழுதுவிட்டு பின் அன்னையினை தொழுதுவிட்டு அவரிடம் உத்தரவு வாங்கியபின்பே முருகப்பெருமான் வேலினை தொழ வேண்டும்.

அந்த வேல் முன்னால் நின்று மனமார தொழுது நின்றால் எல்லா கஷ்டமும் தீரும், அபிஷேகம் செய்தால் கூடுதல் பலன் உண்டு.

அதன் பின்பு சுவாமிநாத சித்தர் சன்னதியில் அமர்ந்து அவரிடம் மனம்விட்டு தியானம் செய்வது இன்னும் நல்லது.

சித்தர் சன்னதி மகா முக்கியம்.

இப்படி அந்த ஆலயத்தில் தரிசனம் செய்தால் எல்லா பலனும் கிட்டும், அதன் பின் வாழ்வே மாறும்.

மனதாலும் உடலாலும், சிந்தையாலும் செய்கையாலும், ஆன்மீகத்திலும் லௌகீகத்திலும் வரும் எல்லா சிக்கலையும் இந்த தலம் போக்கும்.

இங்கு சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்கள் விசேஷம், வைகாசி விசாகம் போன்றவை இன்னும் சிறப்பு. ஆடி கிருத்திகை அன்று சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடைபெறும்.

இங்கே சஷ்டி விரதம் உண்டு. ஆனால், சூரசம்ஹாரமில்லை.

மாறாக, மலையன் மாகறன் வதம் நடைபெறும், உலகிலே இந்த இரு அசுரர்களை அழிக்கும் சம்ஹாரம் நடக்கும் ஒரே தலம் இதுதான்.

புரட்டாசி மாத கஜவள்ளி பூஜை இன்னும் விசேஷம்.

முருகப்பெருமான் வழிபாட்டின் தொடக்கம் வேல் வழிபாடுதான், அவ்வகையில் இலங்கையின் கதிர்காமம் மூத்தது.

அங்கு வேல்தான் பிரசித்தி.

அதாவது, காலத்தால் அவ்வளவு பழைய வழிபாடு அது, இங்கே முருகப்பெருமான் ஆலயத்தில் கருங்கல்லில் வேல் என்பது இந்த ஆலயத்தின் தொன்மையினை காட்டுகின்றது.

அவ்வளவுக்கு மகா மூத்த தொன்மையான ஆலயம் இது.

இங்கு சென்று வழிபட்டு காசிபமுனிவர், கடம்பரநாதர் ஆவுடை நாயகி, கஜவள்ளி, முருகப்பெருமான், சுவாமிநாத சித்தர் என எல்லோரையும் வணங்கினால் வாழ்வு மாறும், தீயது அகலும்.

எல்லா வளமும் நலமும் உங்களை இம்மையிலும் மறுமையிலும் சூழும்.

“அதிக ராய்ப்பொரு ளீவார் நேர்படில்
ரசனை காட்டிக ளீயார் கூடினும்
அகல வோட்டிகள் மாயா ரூபிகள் …… நண்புபோலே

அசட ராக்கிகள் மார்மே லேபடு
முலைகள் காட்டிகள் கூசா தேவிழும்
அழகு காட்டிக ளாரோ டாகிலு …… மன்புபோலே

சதிர தாய்த்திரி வோயா வேசிகள்
கருணை நோக்கமி லாமா பாவிகள்
தருமு பேட்சைசெய் தோஷா தோஷிகள் …… நம்பொணாத

சரச வார்த்தையி னாலே வாதுசெய்
விரக மாக்கிவி டாமூ தேவிகள்
தகைமை நீத்துன தாளே சேர்வதும் …… எந்தநாளோ

மதுரை நாட்டினி லேவாழ் வாகிய
அருகர் வாக்கினி லேசார் வாகிய
வழுதி மேற்றிரு நீறே பூசிநி ….. மிர்ந்துகூனும்
மருவு மாற்றெதிர் வீறே டேறிட
அழகி போற்றிய மாறா லாகிய
மகிமை யாற்சமண் வேரோ டேகெட …… வென்றகோவே

புதிய மாக்கனி வீழ்தே னூறல்கள்
பகலி ராத்திரி யோயா ஆலைகள்
புரள மேற்செல வூரூர் பாயஅ …… ணைந்துபோதும்

புகழி னாற்கடல் சூழ்பார் மீதினி
லளகை போற்பல வாழ்வால் வீறிய
புலவர் போற்றிய வேலூர் மேவிய …… தம்பிரானே.”

என அருணகிரி நாதர் பாடிய தலம் இது.

வேல் வழிபாடு என்பது ஞானத்துக்கான வழிபாடு, முருகப்பெருமானின் வேல் அடியாழம் காணமுடியா வகையில் பதிந்துள்ளது என்பது ஆழமான ஞானம் அங்கே குடிகொண்டுள்ளதை சொல்லும்.

அந்த ஞானத்தை வணங்கி பெற்றுகொள்ள அந்த தலத்துக்கு செல்லுங்கள், ஞானத்தோடு பெரும் வாழ்வினை அந்த ஞானப்பண்டிதன் அருள்வான்.

இன்றும் பல இடங்களில் பல பிரச்சினைகளுக்காக அகத்திய முனியின் நாடி ஜோதிடம் பார்க்குமிடத்தில் இந்த ஆலயதுக்கு செல்லச் சொல்லி அகத்தியர் சொல்வதும், அங்கு சென்றுவரும் மக்களுக்கு நல்வழி பிறப்பதும், வாழ்க்கை நல்லபடியாக மாறுவதும் அடிக்கடி நடக்கும் ஆச்சரியங்கள். அவர்கள்தான் இந்த ஆலயத்தின் இன்றைய பெரும் சாட்சிகள்.

முருகப்பெருமான் ஆலயங்கள். சிறுவாய்புரி, ஆண்டார்குப்பம் மற்றும் பெரும்பேடு முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள்.

சிறுவாய்புரி, ஆண்டார்குப்பம் மற்றும் பெரும்பேடு முருகன் ஆலயம்.

சென்னையினை தாண்டிய பொன்னேரி அருகே இந்த மூன்று ஆலயங்களும் அருகருகே முக்கோண வடிவில் இந்த ஆலயங்கள் அமைந்திருக்கின்றன‌.

அப்படி அமைந்த முதல் ஆலயம் இந்த சிறுவாய்புரி. இது யுகங்களை தாண்டிய மிகப் பழமையான ஆலயம், முருகப்பெருமான் வள்ளியினை மணம் முடித்து இங்குதான் ஒய்வெடுத்தார், அந்த காலத்தில் இருந்தே அமைந்த ஆலயம் இது.

இந்த ஆலயம் முருகப்பெருமான் காலத்தில் இருந்தே பிரசித்தி. வள்ளித்தாயார் முருகப்பெருமானை தவமிருந்து அடைந்தவர் என்பதால் அந்த சாயல் பலன் இங்கு வழிபடுவோர்க்கும் உண்டு.

இங்கு யாரெல்லாம் முருகப்பெருமானை மனதார பணிந்து தேடுகின்றார்களோ அவர்கள் தாங்கள் இழந்ததை பெறுவர், தனக்கு உரியதை பெறுவார்கள்.

தங்களுக்கு எது உரிமையோ எது சொந்தமானதோ அதை அடைவார்கள்.

சில சாபங்களால் பாதிக்கப்பட்ட இந்திரன் இங்குவந்து தவமிருந்து பின் முருகப்பெருமானால் அமுதம் பெற்று அதன் பின்பே தான் இழந்த சொர்க்கத்தை பெற்றான்.

இன்னொரு மகா முக்கிய சம்பவம் அல்லது சாட்சி இராமாயண காலத்தில் நடந்தது.

இராமபிரானுக்கு குச-லவா என இரு மகன்கள் என்பதும், ராமன் ஆட்சி செய்தபோது அவர்கள் சீதையோடு கானகத்தில் இருந்தார்கள் என்பதும் எல்லோரும் அறிந்தது.

அவர்கள் கானகத்தில் வால்கீகி முனிவரின் காவலில் இருந்தாலும் பல இடங்களில் மாறி மாறி தங்கினார்கள், அதன் பொருள் காடுகளில் தவம் செய்யும் முனிவர்களை காப்பது, அங்கு வரும் தொந்தரவுகளை அழிப்பது.

ராமன் விஸ்வாமித்திரருக்கு என்ன செய்தானோ அதே கடமையினைத்தான் லவனும் குசனும் எல்லா ரிஷிகளுக்கும் செய்தார்கள்.

காரணங்கள் இன்றி காரியங்கள் இல்லை, தசரதனை பிரிந்து ராமன் விஸ்வாமித்திரரோடு காடு காடாக சுற்றியதிலும், சீதை ராமனை பிரிந்து தன் மகன்களோடு காடுமேடாக சென்றதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை.

அப்படியான நிலையில் ராமன் அஸ்வமேத யாகம் ஒன்றை நடத்தினார். பிரம்மதேவரின் பேரனாகிய இராவணனை சமஹரித்த பாவம் போக அஸ்வமேத யாகம் செய்யவேண்டும் என அகத்தியமுனி சொல்ல, அதனை நடத்திக் கொடுத்தவர் வசிஷ்டர்.

இராமபிரானுக்கு எதிரிகள் என யாருமில்லை அப்படி இருந்தால் அறியவும் அவர்களை அடக்கவும் அந்த யாகம் செய்யப்பட்டது.

யாக முடிவில் இராமனின் பட்டத்துகுதிரை அவிழ்த்துவிடப்பட்டது, அது செல்லுமிடமெல்லாம் ராஜமரியாதை கிடைத்து திரும்பவந்தால் யாகம் வெற்றி. ராமனுக்கு எதிரிகளே இல்லை எனப் பொருள்.

அப்படி அக்குதிரை இந்தப் பக்கம் வந்தபோது குசனும், லவனும் அதை பிடித்து கட்டிவைத்தார்கள். ஆச்சரியமடைந்த ராமனின் சேனைகள் தேடிவந்து இவர்கள் யாரென தெரியாமலே மிரட்டின‌.

இருவரும் எங்களை மீறி குதிரையினை தொடுங்கள் என சவால்விட யுத்தம் தொடங்கிற்று. அந்த யுத்தத்துக்கு இந்த ஆலய முருகப்பெருமானையும், சிவனையும் வணங்கி விட்டு சென்றனர் ராமனின் மைந்தர்கள்.

அங்கே சிறுவன் குசன் பெரும் வீரம் காட்டினான், யாராலும் அவனை வெல்லமுடியவில்லை அனுமனே வந்தாலும் முடியவில்லை, கடைசியில் அவர்கள் யார் என அறியப்பட்டு ராஜ்ஜியமே அவர்களுடையது, ராமனின் வாரிசு அவர்களே, ராஜ்ஜியம் அவர்கள் உரிமை என முடிவானது.

அதாவது எது குசனின் உரிமையோ அதை முருகப்பெருமான் கொடுத்தார்.

இங்கே இராமனின் மகன் குசன் சிறுவனாக நின்று போரிட்டு இழந்ததை மீட்டதால் இது குசபுரி என்றும், சிறுவனான குசன் நினைவாக சிறுவாய்புரி என்றும் அழைக்கப்பட்டது.

இன்று சிறுவாய்புரி நிலைத்துவிட்டது.

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயிலின் உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைரவர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள்.

அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார். மூலவர் பால சுப்ரமணிய சுவாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை.

பச்சை நிறம் என்பது புதனை சொல்வது, ராகுவினை சொல்வது. இங்கே வணங்கினால் அறிவும், சொல்வன்மையும், செல்வாக்கும் கூடும் என வரமருளும் செய்தியினை சொல்வது.

கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது. திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

‘சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தன் சிறுவை தனில் மேவு பெருமானே…”

என அருணகிரிநாதர் இந்த ஆலயத்தைப் பாடிப் பணிந்துள்ளார்.

இங்கு தன்னை நம்பிவரும் பக்தர்களை முருகப்பெருமான் எப்படி காப்பார் என்பதற்கு அங்கு நடந்த சம்பவமே சாட்சி.

முருகம்மை என்ற முருக பக்தர் சிறுவாபுரியில் வாழ்ந்து வந்தார். இந்த அம்மையார் எப்போதும் முருகன் நாமத்தையே உச்சரித்து வந்தார். மனைவியின் அதிதீவிர பக்தி கணவருக்கு ஆத்திரம் உண்டாக்கியது.

ஒருநாள் அவர் இந்த ஆலயம் வந்து கண்மூடி முருகனை தியானிக்கும் போது , அதை பொறுக்காத கணவன் ஆத்திரத்தில் அவர் கரத்தை துண்டித்துவிட்டார். அந்த பெண்ணோ கை வெட்டப்பட்ட நிலையிலும் முருகப்பெருமானையே நினைத்து போற்றிக்கொண்டிருந்தார். அவர் பக்திக்கு இறங்கிய முருகப்பெருமான் வெட்டுப்பட்ட கரங்களை சேர்த்து அருள்புரிந்தார்.

அந்த அதிசயம் அங்கே முருகபக்தைக்கு நடந்தது, அவள் சிறுவாய்புரி முருகனுக்கு முழு சாட்சியாய் இருந்தாள்.

தவத்திரு முருகதாச சுவாமிகள் இந்த அதிசயத்தையெல்லாம் தன் பாடல்களில் பதிந்துள்ளார்.

அப்படியான இந்த ஆலயம் எல்லா அருளையும் அருளும், திருமண தடை அகலும், நோய் நொடிகள் தீரும், செல்வம் பெருகும்.

முக்கியமாக சொந்தவீடு அமையும், உங்களுக்கு இந்த பூமியில் எதெல்லாம் உரிமையோ அதெல்லாம் வில்லங்கம் நீங்கி கைக்கு வரும்.

அந்த வரத்தை தரும் ஆலயம் இது, அந்த மூன்று ஆலயங்களில் முதல் முக்கிய ஆலயம் இது.

அடுத்து ஆண்டார்குப்பம்.

இதுவும் பொன்னேரி அருகிலே அமைந்துள்ளது, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது, இதன் சிறப்பு ஆழமானது.

இந்த தலத்தின் வரலாறு பிரம்மனுக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை கண்முன் நிறுத்தும் ஆலயம் இது. ஆணவமிக்க பிரம்மனுக்கு முருகப்பெருமானே குருவாக நின்று பிரணவ மந்திரத்தை ஓதியதை சொல்லும் தாத்பரியத்தை கொண்ட ஆலயம் இது.

இந்த ஆலயத்தில் காலையில் பாலகனாகவும், மதியம் இளைஞனாகவும், இரவில் முதுமையானரவாகவும் முருகப்பெருமான் காட்சி கொடுப்பது வழமை.

இந்த தத்துவம் இங்கு மட்டும்தான் உண்டு, அதாவது வாழ்வின் நிலையாமையினை சொல்லி, இந்த நிலையற்ற வாழ்வில் முருகப்பெருமானை பற்றி கொண்டு முக்தி அடைவதே சரியானது, முருகப்பெருமானை பற்றிகொண்டு அழியும் இந்த வாழ்வில் இருந்து விடுதலை அடைதல் வேண்டும் என்பதை சொல்லும் தத்துவம் இது.

இரு காரணங்களுக்காக இரு திருவிளையாடலுக்காக இந்தத் தலம் ஆண்டார் குப்பம் என அழைக்கப்படுகின்றது.

முதலாவது, முருகப்பெருமான் தன் பக்தர்களுக்கு ஆண்டி கோலத்தில் காட்சியளித்த தலம் இது, ஒருமுறை இப்பக்கம் சில முருக பக்தர்கள் வந்தபோது கடும் தாகம் எடுத்தது, அவர்கள் முருகனை வேண்ட ஆண்டி கோலத்தில் வந்த முருகனே தன் வேலால் நீரூற்று வரச்செய்து அவர்கள் தாகம் தீர்த்தான்.

அந்த தீர்த்தம் இப்போதும் வேலாயுத தீர்த்தம் என உண்டு.

அப்படி முருகன் ஆண்டி கோலத்தில் வந்ததால் இது ஆண்டியார் குப்பம் என்றும், அதுவே ஆண்டார் குப்பம் என மாறிற்று என்பார்களும் உண்டு.

தன் அடியாருக்காக முருகப்பெருமான் பிரம்மனுக்கு பாடம் சொன்ன காட்சியினை காட்டினார், சம்வர்த்தனர் என்ற பக்தருக்காகவே இங்கே அக்காட்சியினை காட்டி, அதன்பின் பாலநதியை உண்டாக்கி, முருகன் கோயில் கொண்டார்.

பொதுவாக அதிகாரம் இருப்பவர்தான் உத்தரவிடமுடியும்.

பிரம்மனுக்கே முருகன் அதிகாரத்தோடு உத்தரவிட்டான் என்பதால் இது ஆண்டார் குப்பம் என்றாயிற்று என்பதும் ஒரு செய்தி.

இங்கே முருகனுக்கு இரு யானைகள் உண்டு, யானை வாகனம் உண்டு, முருகன் அதிகார முருகன் என அழைக்கப்படுகின்றார்.

இங்கே முருகன் ஆயுதத்தோடு காட்சி தருவதில்லை. இரு கைகளையும் இடுப்பில் வைத்த அதிகார தோரணையில் காட்சி தருகின்றார்.

இந்த ஆலயத்தின் தாத்பரியம் எளியது, இது அதிகாரத்தை தரும் நல்ல செல்வாக்கை தரும் என்பது. பொறுப்பான பதவிகள், பெரும் அதிகாரம் கொண்ட பதவிகளை இந்த ஆலயத்தின் முருகப்பெருமான் அருள்வார்.

இந்த கோயிலின் நுழைவாயிலுக்கு அருகில் வலது பக்கத்தில் வேம்படி விநாயகர் சந்நிதி மற்றும் பாதாள கங்கை அம்மன் சந்நிதிஉண்டு.

உள்ளே கொடிமரம், பலிபீடம், மயில் மற்றும் சிம்ம வாகனத்தைக் கடந்து அழகிய தூண் சிற்பங்களுடன் கூடிய 16 கால் மண்டபம் உண்டு.

அதனை அடுத்து ஶ்ரீ பிரசன்ன விநாயகர், ஸ்ரீ காசிவிஸ்வநாதர், ஶ்ரீ விசாலாட்சி ஆகியோருக்கு நடுவே கோயிலின் மூலவரான பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி வேலும், மயிலும், வள்ளி தெய்வானை இல்லாமல் தனித்து அருளும் அதிகார முருகனாக அருள்பாலிக்கின்றார்.

இதைத்தவிர, உற்சவர் வள்ளி, தேவசேனா, சண்முகர், நடராஜர் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன.

வெளிப் பிரகாரத்தில் சம்வர்த்தன முனிவர் சந்நிதியும், சண்டிகேஸ்வரர், நவக்கிரக சந்நிதியும் அமைந்துள்ளது. கொடிமரத்துக்கு அருகில் பிரம்மா சங்கிலியால் கட்டி சிறைவைக்கப்பட்ட கருங்கல் இன்றும் அப்படியே உள்ளது. இந்த நிகழ்வுகள் கோயில் தூணில் செதுக்கப்பட்டுள்ளது மிகச் சிறப்பு.

தன் அடியார்க்காக முருகனே வந்து தன்னை காட்டி நின்ற தன் பராக்கிரம காட்சியினை காட்டிய அத்தலம் கிருபானந்தவாரியார், பாம்பன்சுவாமிகள் எனப் பல முருகபக்தர்களால் வழிபடபட்ட சிறப்பினை கொண்டது.

இங்கு சென்று வழிபட்டு நல்ல பதவி உயர்வும் அதிகாரம் கொண்ட பெரும் பணியும் பெறுங்கள் முருகப்பெருமான் ஆசீர்வதிப்பார்.

அடுத்தது, மூன்றாம் ஆலயம் பெரும்பேடு முருகன். இதுவும் முக்கோணவடிவ ஆலயங்களில் ஒன்று.

இந்த ஆலயம் காலத்தால் மிக மிகப் பழமையானது.‌ இதன் தொன்மை அறிவாரில்லை. ஆனால், மிகப் பழங்கால ஆலயம் மண்ணில் புதைந்து நெடுங்காலம் வெளிஉலகுக்கு தெரியாமல் இருந்தது.

பின் வண்டிக்காரன் ஒருவர் தன் வண்டி அந்த இடத்தில் தடுமாறும் போது ஏற்பட்ட சந்தேகத்தில் தோண்டி பார்க்க இந்த ஆலயம் தென்பட்டது.

பூமிபிளந்து வந்த ஆலயம் எனவும் அதற்குப் பெயர் உண்டு.

பொன்னேரியை அடுத்த பெரும்பேடு பகுதியில் உள்ளது முத்துக்குமாரசுவாமி திருக்கோயில். சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கோயில் மண்ணில் புதையுண்டு இருந்ததாகவும், பின்னர் வண்டிக்காரர் ஒருவர் கண்ணுக்கு சுயம்புவாக வெளிப்பட்டதாகவும் வரலாறு.

இந்த ஆலயத்தில் ஆறரை அடி உயர முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை சமேதராய் காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்தில் முருகப்பெருமானின் வலப்புறத்தில் தெய்வானை இடம் பெற்றுள்ளார்.

இந்த கோயிலில் பிரம்மசாஸ்தா அம்சமாக முருகன் காட்சி அளிக்கிறார். கோயிலில் மூலவராகவும் உற்சவர் ஆகவும் முத்துக்குமாரசுவாமி அருள் பாலிக்கிறார்.

முத்துக்குமாரசுவாமி கோயில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை அம்மன், சுந்தரேஸ்வரர், சண்டிகேஸ்வரர், கால பைரவர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர்.

இங்கு வணங்கினால் பிறவியினால் வரும் சிக்கலெல்லாம் சொந்தபந்தங்கள், குடும்பம் சொந்த மண் என பிறப்பினால் வரும் சிக்கல் எல்லாம் தீரும், உடலில் வரும் நோய்கள் மறையும், மனதின் ஆற்றல் அனைத்தும் பெருகி கல்வி, கலை, சொல்,செயல் என கலைகளாக தொழிலகளாக மாறும் .

உங்கள் திறனை பெருக்கி அதன் மூலம் உங்களை உலகுக்கே அடையாளம் காட்டும் தலம் இது.

இந்த மூன்று தலங்களும் அருகருகே அமைந்துள்ளன‌.

சிறுவாய்புரி முருகன் உங்களுக்கு உரிமையான எல்லாம் தருவான், இப்பிறவியில் எதெல்லாம் உங்களுக்கு உரியதோ அதெல்லாம் தருவார்.

ஆண்டார்குப்பம் முருகன் உங்களுக்கு நல்ல அதிகாரம் தருவார், பெரும் பொறுப்பும் பதவியும் தந்து உயர்த்துவார்.

பெரும்பேடு முருகன் உங்களின் பெரும் பாரமெல்லாம் அகற்றி பெரும்பாடுகளை அறுத்துப்போட்டு உங்கள் திறமையால் உங்களை உலகிற்கு காட்டுவார்.

உங்களுக்கு இந்த பிறவியில் எதெல்லாம் உரிமையோ அதெல்லாம் பெற்று, பெரிய பதவி பெரிய அதிகாரத்துடன் விளங்கி, உங்கள் திறமையெல்லாம் உலகறிந்து செல்வாக்கும் புகழும் பெற்றுவாழ இந்த மூன்று ஆலயங்களையும் தரிசித்துவாருங்கள்.

இந்த வரங்களை அந்த முருகவேள் பெருமானே தந்து உங்களை வாழ்வாங்குவாழ வைத்து தன்பதம் சேர்த்துகொள்வார். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள். செய்யூர் கந்தசுவாமி ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள். செய்யூர் கந்தசுவாமி ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்களில் தனித்துவமானது செய்யூர் அல்லது சேயூர் கந்தசாமி கோவில்.

இது சென்னை அருகே மதுராந்தகத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சேயூர், இந்திய தமிழகத்தில் கந்தசாமி ஆலயம் என அழைக்கப்படும் மூன்று ஆலயங்களில் இதுவும் ஒன்று.

திருப்போரூர், கந்தக்கோட்டம் என்பவை மற்ற இரு ஆலயங்கள்.

முருகப்பெருமானுக்கு எத்தனையோ பெயர்களில் ஆலயம் இருந்தாலும் இந்த “ஸ்கந்த” அல்லது “கந்தன்” எனும் பெயர் அவர் அசுரர்களை அழித்த அந்த தேவசேனாதிபதி திருக்கோலத்தை காட்டுவது.

அதாவது எதிரிகளை அழித்த கோலத்தில் நின்று அருள்பாலிப்பது, தன் பெரும் பராக்கிரம நிலையினை காட்டுவது.

சூரபத்மனை அழிக்க முருகனோடு வந்த சிவகணங்கள் அந்த கொடும்போர் முடிந்தபின் முருகப்பெருமானோடு இப்பக்கம் வந்தார்கள். முருகப்பெருமான் சிவபக்தனான‌ சூரனையும், அவன் மகன்களையும் வதைத்த தோஷத்தை இங்கே சிவனை வழிபட்டு நிவர்த்தி செய்தார்.

அவருடன் சிவபூத கணங்களும் சிவனை நினைந்து வழிபட்டு சாபநிவர்த்தி பெற்றனர். பின் சிவனின் உத்தரவுப்படி முருகப்பெருமானும், சிவகணங்களும் அங்கிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினர்.

அதிலிருந்து இந்த ஆலயவரலாறு தொடங்குகின்றது, சோழமன்னர்களான வளவன்கள் இதனைக் கட்டி எழுப்பியதால் இந்த ஊர் வளவாபுரி என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது.

சிவனின் சேய் வந்து நின்ற இடம் என்பதால் சேயூர் என்றும் ஆயிற்று.

இந்த ஆலயத்தின் மாபெரும் சிறப்பு தனித்துவமானது, அதாவது இங்கு எல்லாமே முருகன் மற்றும் பைரவ வடிவங்கள்.

அதன் ஆழமான தத்துவம் சிவனே முருக அம்சம்; சிவனே சிவகணங்களிலும் இருக்கின்றார்; அங்கு எல்லாமே சிவம்; காணும் காணாதவை எல்லாமே சிவ அம்சம் என்பது.

மிக தனித்துவமாக 27 நட்சத்திரங்களும், அவற்றின் அதி தேவதைகளும் சிவ வடிவமே என்பதால் அவைகளும் 27 வேதாளங்களாக‌ இங்கு வணங்கப்படுகின்றார்கள்.

நட்சத்திரங்களின் அதிபதிகள் சிவஅம்சமே எனும் வகையிலும் அந்த தேவதைகள் சிவனின் உத்தரவை செய்வதால் வேதாளம் எனும் பைரவ அம்சமே என இங்கு பைரவர்களாக வணங்கப்படுகின்றார்கள்.

இங்குள்ள கோயிலின் நுழைவாயிலுக்குக் கோபுரம் கிடையாது. இந்த கோயில் தெற்கு நோக்கியும், அதன் மூலஸ்தானம் கிழக்கு நோக்கியும் உள்ளது. இரண்டு பிரகாரங்களைக் கொண்ட இக்கோயிலில் கிழக்குப் பகுதியில் மற்றொரு நுழைவாயில் உள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கர்ப்பகிரகத்தில் மூலவர் கந்தஸ்வாமி வள்ளி-தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். இருபுறமும் சுவீரன், சுஜனன் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.

கோவிலின் பிரதான வாயிலில் நுழைந்ததும் வெளிப்பிரகாரம் காணப்படுகிறது. இந்த வெளிப்பிரகாரத்தில் இருந்து முன் மண்டபத்தில் நுழைந்ததும், இடப்புறத்தில் ஸ்ரீ சோமநாதர், மீனாட்சியம்மை சன்னதியும், அதன் அருகில் பள்ளியறை இருப்பதையும் காணலாம். இச்சன்னதியின் முன் நந்தி தேவரும், இருபுறம் பிரம்மாவும், விஷ்ணுவும் காட்சியளிக்கின்றனர்.

தெற்கு வாயில் மூலமாக உட்பிரகாரத்தை அடைந்து முருகனை தரிசிக்கலாம். மூலஸ்தானத்தை நோக்கியவாறு வெளிப் பிரகாரத்தில் பலிபீடம், மயில் வாகனம் மற்றும் துவஜ ஸ்தம்பம் ஆகியவற்றைக் காணலாம். துவஜ ஸ்தம்பத்திற்குப் பின்னால் ஒரு உயரமான கல் தீப ஸ்தம்பமும் உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மூன்று நாட்கள் இந்த தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்படுகிறது.

கிழக்கு வாயிலின் மூலமும் நாம் உட்பிரகாரத்தையும், தீபாராதனை மண்டபத்தையும் அடையலாம். கருவறை வெளிப்புறத்தில் இருபுறங்களிலும் முறையே துவார கணபதியும், துவார லட்சுமியும் காட்சி தருகின்றனர்.

கந்தஸ்வாமிக்கு முன்னால் 5 அடி உயரக் கல்லாலான வேல் அமைந்துள்ளது.

பொதுவாக சிவாலயங்களில் கருவறை சுற்றுச்சுவரில் கோஷ்ட தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர்(விஷ்ணு), பிரம்மா, துர்க்கையைத் தான் வைத்திருப்பார்கள்.

ஆனால், இங்கு இந்த தெய்வங்களுக்குப் பதிலாக முருகப்பெருமானின் ஐந்து வெவ்வேறு வடிவங்கள் உள்ளன.

விநாயகப் பெருமானுக்குப் பதிலாக நிருத்த ஸ்கந்தன் (நடன முருகன்) இருக்கிறார். தட்சிணாமூர்த்திக்குப் பதிலாக சிவகுரு நாதர் (சிவத்தைக் கற்பிப்பவர்) அமர்ந்திருக்கின்றார்.

லிங்கோத்பவர்(விஷ்ணு) பதிலாகப் பால ஸ்கந்தா (குழந்தை சண்முகர்) அமர்ந்திருக்கின்றார்.

பிரம்மாவுக்குப் பதிலாகப் பிரம்ம சாஸ்தா (பிரம்மாவிலிருந்து உருவாக்கப்பட்டவர்) மற்றும் துர்க்கைக்குப் பதிலாக புலிந்தர் (வேடர் உருவில் இருக்கும் முருகன்) இடம் பெற்றுள்ளனர்.

அப்படியே இங்கு சூரியனும் முருகனின் அம்சமாகவே கருதப்பட்டு குஹா சூரியன் என்று அழைக்கப்படுகிறார்.

கோயிலினுள் இடதுபுறத்தில் பிரதான கணபதியைத் தரிசிக்கலாம். பொதுவாகக் கணபதியின் மேற்கரத்தில் பாசம், அங்குசம் போன்ற ஆயுதங்கள் காணப்படும். ஆனால், இங்கு இடது மேற்கரத்தில் ஜபமாலையுடன் அவர் வீற்றிருக்கிறார்.

இந்த கணபதி சந்நிதிக்குள் ஒரு சிறிய அறை உள்ளது. முற்காலத்தில் சித்தர் ஒருவர் அந்த அறையில் மரகதலிங்கத்தை வைத்து முறையாக வழிபட்டதாகவும், அந்த மரகதலிங்கம் இருந்த இடத்தில் தற்போது ஒரு அணையா விளக்கு ஏற்றப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த விளக்கை வெளிப்புறத்திலிருந்து ஒரு சிறிய துளை வழியாகக் காணமுடிகிறது.

இக்கோயிலின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி அமைந்துள்ள 27 வேதாளங்களும் 27 நட்சத்திரங்களுக்குரியவை ஆகும்.

முன்பே பார்த்தபடி வேதாளம் எல்லாமே சிவனின் அம்சமாக இங்கே நட்சத்திரக்களை பிரதிபலித்து நிற்பவை. இந்த பைரவர்களுக்கு தேய்பிறை அஷ்டமியின் போது வழிபாடு நடத்தப்படும். அப்போது செவ்வரளி மாலைகள் சாற்றப்படும்.

இந்த தலத்தின் பைரவ பூஜைகள் பெரும் சக்திவாய்ந்தவை, எல்லா பலன்களையும் பெற்றுதா தரும்.
இதனால் தேய்பிறை அஷ்டமி இங்கு விசேஷம்.

அன்று மாலை விநாயகருக்குப் பூஜையுடன் தொடங்கி, 5 மணிக்கு வேதாள கணங்கள் 27க்கும் செவ்வரளி பூஜையும், 7 மணிக்கு மூலவருக்கு பூஜையும் 8 மணிக்கு பைரவருக்குப் பூஜையும் விமரிசையாகச் செய்கின்றனர்.

இந்த ஆலயம் பழம்பெருமை மிக்கது. பெரும் பெரும் மன்னர்களால் கொண்டாடப்பட்டது, பெரும் பெரும் அடியார்களால் பாடப்பட்டது.

“வேதாள கணம் புகழ் வேலவனே” எனப் பாடினார் அருணகிரியார்.

அந்தகக்கவி எனப் புகழப்பட்ட வீரராகவ முதலியார் இந்தக் கந்தஸ்வாமி பெருமானைப் போற்றி சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர் கலம்பகம் ஆகியவை இயற்றியுள்ளார்.

சேறை கவிராயப்பிள்ளை என்பவர் சேயூர் முருகன் உரை எனும் நூலையும், முருகதாஸ் ஸ்வாமிகள் சேயூர் முருகன் பதிகக்கோவை என்பதையும் எழுதியுள்ளார்கள்.

சிவப்பிரகாச சுவாமிகளும் நெஞ்சுவிடு தூது என்ற நூலை எழுதியுள்ளார்.

அப்படி பெரும் அடியார்கள் நெஞ்சை கொள்ளைக்கொண்டு நூல்களாக, நூலின் சான்றாக நிற்கும் கந்தசுவாமி ஆலயம் இது.

இந்த ஆலயத்தின் தாத்பரியம் எளிதானது. அதாவது, இந்த ஆலயம் வேதாளங்கள், பைரவ வடிவில் நிற்கும் தலம், சிவகணங்களான வேதாளங்கள் முருகனோடு சிவனை வணங்கும் தலம்.

அது கந்தசாமி ஆலயம், கந்தன் எனும் முருகன் சிவ அம்சமாக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்ததால் அவரும் சிவ அம்சமே.

ஆக, முருகனும் சிவனும் வேறல்ல, என்பதும் சிவகணங்கள் எனும் வேதாளங்களும் பைரவர்களும் சிவ அம்சமே என்பதை சொல்லும் தத்துவமிக்க ஆலயம் இது.

சிவனின் ருத்ர அம்சங்கள் எல்லாவற்றின் அருளும் பார்வையும் கொண்ட ஆலயம் இது.

இங்கே வணங்குவோர்க்கு, 27 வகை நட்சத்திரங்களில் யாராக இருந்தாலும் அங்கே பகை தீரும். எதிரிகள் ஒழிவார்கள். எது தடையோ எது பெரும் இடைஞ்சலோ அது அகலும்.

எது ஒருவனுக்கு துர்குணமோ, எந்த குணம் ஒருவனை தடுத்து முன்னேற விடாமல் வைத்திருக்கின்றதோ அந்த குணங்கள் அகலும்.

ஆன்மீக மொழியில் இந்த பைரவர்கள் அகங்காரம் ஒழிப்பார்கள், ஆணவம் உள்ளிட்ட மும்மலத்தை ஒழிப்பார்கள், மூவகை குணத்தினை ஒழித்து அவனுக்கு முக்திஞானம் தருவார்கள்.

இந்த ஆலயம் எந்தப் பெரிய தடை இருந்தாலும், இன்ன்ல் இருந்தாலும் நீங்கித் தரும்
முருகப்பெருமான் அருளால் சிவகணங்கள் அருளால் அது நீங்கும்.

உங்கள் வாழ்வின் பிரச்சினை வெல்லமுடியா எதிரிகளாக இருக்கலாம்; மிக பலமான எதிரியாக இருக்கலாம்; அது தீரா நோயாக இருக்கலாம்; வற்றாத வறுமை, பெருகும் குழப்பம் என எதுவாகவும் இருக்கலாம்.

இந்த செய்யூர் தலத்தில் பணிந்து அந்த 27 வேதாளங்களையும் வணங்கி முருகப்பெருமானை பணிந்து அந்த சிவனையும் வேண்டிக்கொண்டால் எல்லாமே தீரும்.

இந்த ஆலயம் மிக நுணுக்கமான தத்துவத்தை சொல்கின்றது. அது ஒரே மகாசக்தி எல்லாமுமாக இருக்கின்றது; மும்மூர்த்தியும் அதுதான்; முருகன் விநாயகனும் அதுதான்; நவக்கிரகங்களும் அதுதான்; 27 நட்சத்திரங்களும் அதுவேதான்.

எல்லாமுமாக இருக்கும் ஒரே ஒரு சக்தி அது, பல வடிவங்களில் வந்துநிற்கும் ஒரே சக்தி, ஒரே பரம்பிரம்மம் அது எனும் ஆழமான தத்துவத்தை அந்த ஆலயம் போதிக்கின்றது.

செங்கல்பட்டு, மகாபலிபுரம் பக்கம் செல்லும் போது இந்த சேயூர் முருகனை காணத் தவறாதீர்கள்.

சேயினை தாய் எப்படி பரிவுடன் அன்புடன் காத்துவருவாளோ அப்படி உங்களை அந்த சேயூர் கந்தசாமி பரிவுடன் அணைத்து உங்கள் துயரெல்லாம் தீர்ப்பார்.

எல்லா தடைகளும் அகலும், எல்லா பெரும் விக்கினங்களும், வில்லங்க மும் மறையும். வாழ்வு காவலும் சுபிட்சமும் நிறைந்ததாகும்.

“முகிலாமெனும் வார்குழ லார்சிலை
புருவார்கயல் வேல்விழி யார்சசி
முகவார்தர ளாமென வேநகை …… புரிமாதர்

முலைமாலிணை கோபுர மாமென
வடமாடிட வேகொடி நூலிடை
முதுபாளித சேலைகு லாவிய …… மயில்போல்வார்

அகிசேரல்கு லார்தொடை வாழையின்
அழகார்கழ லார்தர வேய்தரு
அழகார்கன நூபுர மாடிட …… நடைமேவி

அனமாமென யாரையு மால்கொள
விழியால்சுழ லாவிடு பாவையர்
அவர்பாயலி லேயடி யேனுட …… லழிவேனோ

ககனார்பதி யோர்முறை கோவென
இருள்காரசு ரார்படை தூள்பட
கடலேழ்கிரி நாகமு நூறிட …… விடும்வேலா

கமலாலய நாயகி வானவர்
தொழுமீசுர னாரிட மேவிய
கருணாகர ஞானப ராபரை …… யருள்பாலா

மகிழ்மாலதி நாவல்ப லாகமு
குடனாடநி லாமயில் கோகில
மகிழ்நாடுறை மால்வளி நாயகி …… மணவாளா

மதிமாமுக வாவடி யேனிரு
வினைதூள்பட வேயயி லேவிய
வளவாபுரி வாழ்மயில் வாகன …… பெருமாளே.”

என அருணகிரிநாதர் வந்து பாடிய தலம்.

இந்த ஆலயம் காலத்தால் பழமையானது. எத்தனையோ மன்னர்களால் வழிவழியாக கொண்டாடப்பட்ட அத்தலம் இப்போது சரியான ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை, உரிய வகையில் பராமரிப்பில்லை என்பது வேதனையான விஷயம்.

இதெல்லாம் அரசின் இந்து அறநிலையதுறையின் பணி, அவர்கள் கைவிரித்தால் ஆதீனங்களின் பெரும் பணி. ஆனால் அவர்களும் செய்ததாக தெரியவில்லை.

மிக அபூர்வமான இந்த கந்தசாமி ஆலயத்தை பொலிவுபெற செய்ய, கும்பாம்பிஷேகம் செய்ய பக்தர்கள் ஆங்காங்கே குழுவாக திரண்டு முயலுகின்றார்கள், அந்த முயற்சி வெற்றிபெற முருகப்பெருமான் அருள்புரியட்டும்.

27 நட்சத்திரங்களும் சிவ கணங்களே, அவை சிவனின் அம்சமே, முருகனும் சிவனும் வேறல்ல எனும் பெரும் தத்துவத்தைபோதித்து இங்கு வழிபடுவோர் வாழ்வின் எல்லா போராட்டங்களையும் பெரும் பெரும் எதிரிகளையும் தீர்த்துவைக்கும் ஆலயம், உங்கள் எல்லோர் போராட்டத்தையும் முடித்து நல்வாழ்வு அருளட்டும்.

முருகப்பெருமான் ஆலயங்கள். விராலிமலை.

முருகப்பெருமான் ஆலயங்கள். விராலிமலை.

தமிழகத்தில் இருக்கும் முருகப்பெருமானின் ஆலயங்களில் தனித்துவமானதும், அதி சூட்சுமமான சக்தி மிக்கதும், முருகப்பெருமான் மெய்சிலிர்க்கும் விதமாக நின்று பேசும் ஆலயமுமானது விராலிமலை முருகன் ஆலயம்.

திருச்சிக்கு அடுத்து சுமார் 20 கிமீ தொலைவில் மதுரை திருச்சி நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள ஆலயம் இது, செல்லும் வழி எளிதானது.

அறுபடை வீடுகள் அனைத்தும் ஒருபக்கம் என்றால் விராவிமலை முருகன் ஆலயத்தை தனித்து தட்டில் வைத்தால் தராசுமுள் சரி எனும் அளவு சூட்சுமமானது, பெரும் சக்தி மிக்கது.

இந்தத் தலம் விராலி எனும் குராமரங்கள் நிறைந்த இடம். இதனால் விராலி மலை என்றானது. மூலவர் முருகப்பெருமான் 10அடி உயரத்தில் இருப்பது தனி சிறப்பானது.

இந்த ஆலயம் எப்போது உருவானது என்றால் யுகங்களை தாண்டியது, பிரம்மதேவர் முதன்முதலாக படைத்ததாகக் கூறப்படும் சனகர், சதானந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும், தியானம் செய்த இடத்துக்கே முருகப் பெருமான் வந்து அருள்பாலித்த தலம் அது.

வசிஷ்டரின் மனைவி அருந்ததி சாபம் நீங்கப்பெற்ற தலம் இது, அதாவது சரவணப் பொய்கையில் முருகப் பெருமான் தோன்றிய சமயத்தில், வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி, முருகனுக்கு உணவு அளிக்க மறந்து விடுகிறார். இதனால் முனிவர் மனைவியை சபித்து விடுகிறார்.

அந்த சாபம் நீங்கி அருந்ததி சாபம் நீங்கிய தலம் இதுதான்.

வள்ளி திருமணம் நடந்த தலம் என்றும் ஒரு செய்தி உண்டு.

திருவண்ணாமலைக்கு ஈடானது. ஏராளமான ஞான சித்தா்கள் இந்த மலையில் தவம் செய்துள்ளனா். திருவாரூா் தட்சிணா மூா்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலமும் இது.

விராலிமலை சண்முக நாதா் கோயிலில் நாரதா் உற்சவராக இருக்கிறார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவன் அவரது ஒரு தலையைக் கொய்தார். அப்போது நாரதா் தன் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார்.

இதனால் அவா் சிவநிந்தனைக்கு ஆளானார். அவரது தம்புராவும் வளைந்தது. எனவே இத்தலத்தில் முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார்.

இதனால் இங்கு நாரதா் உற்சவராக இருக்கிறார்.

காசிப முனிவர் வந்து வழிபட்ட தலம் இது.

இப்படியான பிரசித்தியான தலம் பின்னாளில் பௌத்த சமண குழப்பத்தால் அடையாளமற்று போனது, உரிய காலத்தில் முருகப்பெருமானே அதை மீட்டெடுத்தார்.

வேங்கை ஒன்றை வேடன் விரட்டி போக அது இந்த ஆலயம் இருக்கும் குராமரத்தினுள் பாய்ந்து மறைந்தே போனது, திகைத்த வேடன் அந்த இடத்தின் சூட்சும சக்தியினை கண்டு அஞ்சி தேடியபோது இந்த கோவில் மீண்டும் துலங்கிற்று.

வேடுவர்களின் கோவிலாக அறியப்பட்டு பின் எல்லா மக்களுக்குமானது.

இந்த ஆலயத்தை அகிலம் அறிந்துகொள்ள முருகப்பெருமான் பயன்படுத்திய அடியார் அந்த அருணகிரிநாதர். அருணகிரியார் முருகப்பெருமானை தேடி ஒவ்வொரு ஆலயமாக சென்றபோது வயலூர் ஆலயத்தில் நின்று முருகப்பெருமானை வணங்கியபோது அவரை விராலிமலைக்கு வரச்சொன்னார் முருகன்.

அந்த ஆலயம் செல்ல வழிதெரியாநிலையில் வேடுவன் வடிவில் வந்த முருகனே அவருக்கு கோவிலை அடையாளம் காட்டிச் சென்றார். ஆம். முருகனே அருணகிரியாரை வழிகாட்டி அழைத்து சென்ற ஆலயம் அது.

அந்த ஆலயம்தான் அருணகிரியாருக்கு மிகப் பிடித்த ஆலயம், வேறெந்த ஆலயமும் இல்லாதபடி தன் பாடல்களில் சுமார் 18 இடங்களில் இந்த விராலிமலை முருகனைப் பற்றி பாடியுள்ளார்.

விராலி மலையில்தான் அஷ்டமா சித்திகளை அருணகிரியாருக்கு முருகப்பெருமான் வழங்கினார். ஆம். கூடுவிட்டு கூடுபாய்தல் உள்ளிட்ட அற்புத சித்துக்கள் அங்கிருந்துதான் அவருக்கு கிடைத்தன‌.

கடைசி காலத்தில் கிளி உடலில் அருணகிரியார் ஆவி இருந்தது. அப்படி கூடுவிட்டு கூடு பாயும் அந்த சூட்சும வித்தையினை இங்குதான் பெற்றுக்கொண்டார் அருணகிரியார்.

அவ்வளவுக்கு அற்புதமான ஆற்றல் நிறைந்த தலம் இது.

ஆம். முருகப்பெருமான் தான் மிகப்பெரிய வல்லமையுடன் வீற்றிருப்பதை அருணகிரியார் எனும் தன் அடியார் மூலம் சொல்லி, இது சித்துநிலை வழங்கும் மலை, அஷ்டமா சக்திகளை அள்ளிதரும் மலை என்பதை உலகுக்குச் சொன்னார்.

இங்குள்ள வீரபாகுவின் திருமேனி ஐந்து அடி உயரத்திற்கு மேல் இருப்பது நாம் எந்த ஆலயத்திலும் காணாத காட்சி ஆகும்.

பாதி மலையேறியதும் இடும்பர் கடம்பர் சன்னிதி உள்ளது.

விராலிமலை ஆலயம் 207 படிகள் கொண்ட சிறிய மலை. மலையின் அடிவாரத்தில் தெற்குப் பகுதியில் சரவண பொய்கை அமைந்துள்ளது.

இத்தீர்த்தத்தின் நடுவில் நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. படி ஏறும் முன் இடது புறம் சிறிய விநாயகர் சன்னிதியும் வலது புறம் கொடிமரம் பலிபீடத்துடன் கூடிய குமாரசாமி சன்னிதியும் உள்ளது. அதன் எதிரில் ஒரு கல் மண்டபம் உள்ளது. விநாயகர் சன்னிதியை அடுத்து வீரகேஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபெருமான் தனிச்சன்னதியில் அருள்கிறார்.

இடும்பன் சன்னதி அருகே விராலிமலையில் முருகனை அருணகிரிநாதர் வழிபாடு செய்வது போல் சுதைச்சிற்பம் உள்ளது.

அதையடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ஒரு சிறிய குகை சன்னதியும் உள்ளது.

இராஜ கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் ஒரே பிரகாரத்துடன் சண்முக மூர்த்தி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள கல் தூண்களில், நாரதமுனிவர், காசிப முனிவர், அருந்ததி, அருணகிரிநாதர், வசிஷ்டர், ஆறுமுகப் பெருமான் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

முன்பு சொன்னபடி இவர்களெல்லாம் இந்த ஆலயத்தோடு தொடர்புடையவர்கள், பலன் பெற்றவர்கள் என்பதால் அது தவறாது குறிக்கப்பட்டுள்ளது.

கருவறைக்குள் நுழையும் வழியில் இடதுபுறம் சிவன், குரு தட்சிணாமூர்த்தி சன்னதிகளும் வலதுபுறம் பார்வதி சன்னதியும் அமைந்துள்ளது. கிழக்குப் பகுதியில் மைக்கண்ணுடையாள் அம்மன் சன்னதி உள்ளது.

அம்மன் சன்னதியின் எதிரே நவக்கிரகங்கள் சன்னதி உள்ளது. பிரகார முடிவில் காலபைரவர் அருள்கிறார். கோஷ்டத்தில் கணபதி, மித்திரசண்டர், பிரம்மா, துர்க்கை போன்ற கோஷ்ட தேவதைகள் உள்ளன.

பிரகார வலம் முடிந்ததும் கருவறைக்கு வெளியே மகா மண்டபம் உள்ளது. அதன் வாயிலில் முருகப்பெருமானின் தம்பியும் படைத்தளபதியுமான வீரபாகுவிற்கு வேறெந்த கோவிலிலும் இல்லாத வகையில் பெரிய திரு உருவம் உள்ளது.

மகாமண்டபத்தில் நுழைந்ததும் நடராஜர், சிவகாமி, மாணிக்க விநாயகர், பெருமாள், தாயார், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், விநாயகர் மற்றும் நாரதருக்கு உற்சவர் சிலைகள் உள்ளன.

மகாமண்டபத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் வள்ளல் விராலிமலை முருகப் பெருமான் 10 அடி உயரத்தில் ஆறு முகங்களும் பன்னிருதோளும் கொண்டு அசுர மயில் மேல் அமர்ந்த திருக்கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலிக்கின்றார்.

இந்த ஆலயத்தில் நடந்த அற்புதங்கள் ஏராளம், அதுவும் யுகம் யகமாக தலைமுறை தலைமுறையாக கண்ட மெய்சிலிர்க்கும் அற்புதங்கள் ஏராளம்.

முருகப்பெருமான் இங்கு எக்காலமும் உண்டு என்பதற்கான சான்றுகள் அவை, காலம் தோறும் நடந்தவை. நடப்பவை.

அவற்றில் மூன்று சம்பவங்கள் காலம் கடந்து நிற்பவை, அந்த மூன்றையும் கண்டால் முழு சக்தியும் புரியும்.

முதலாவது, இந்த ஆலயம் குழந்தை பாக்கியம் தரும் ஆலயம், அதாவது தவமிருந்து, நோன்பிருந்து வேண்டினால் பிள்ளை பாக்கியம் உறுதி.

“தவத்துக்கு வாங்கிய பிள்ளை” என அந்த முருகன் அருளால் பிறந்த குழந்தைகளை அழைப்பார்கள், அது பின்னாளில் மருவி தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை என்றாயிற்று.

ஆம். தவிடு கொடுத்து பிள்ளை வாங்கும் மரபாக அது மாறிற்று.

இன்றும் “தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை” என்பது இந்துக்களிடையே தமிழகத்தில் நிலைத்துவிட்ட பெயர். அதன் மூலம் இந்த ஆலயம்தான்.

இதனால் இன்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வந்து நேர்ச்சை செய்வதும், முருகன் அருளால் குழந்தை பிறந்தபின் அதை கோவிலுக்கு கொடுப்பதும் பின் குழந்தையின் தாய்மாமன் தவிடு கொடுத்து குழந்தையினை தன் குடும்பத்துக்கு அழைத்து செல்லுதல் வழமை.

“தவிட்டுக்கு வாங்கிய குழந்தை” என பக்தரின் வேண்டுதலுக்கு இணங்கி முருகப்பெருமான் குழந்தை வரம் அருளும் ஆலயம் இது, இதுவரை இங்கு குழந்தை வரம் வேண்டி கிடைக்காமல் போனவர்கள் யாருமில்லை.

அந்த அளவு இந்த முருகப்பெருமான் நம்பி வந்தவர்களை கைவிடுவதில்லை.

இரண்டாம் முக்கிய சம்பவம் அந்த கருப்பமுத்து எனும் பக்தர்.

அப்போது இந்தக் கோவிலில் திருப்பணி நடந்து கொண்டிருந்தது, அப்போது ஆற்றில் வெள்ளம் வந்திருக்கின்றது. அதை கடக்க யோசித்து நின்றிருக்கின்றார் கருப்ப முத்து.

அந்த கொட்டும் மழையில் குளிர்தாங்காமல் பக்தரான கருப்பமுத்து ஆற்றை கடக்க யோசித்தபடியே சுருட்டு புகைத்திருக்கின்றார், அவரிடம் குளிரில் நடுங்கியபடி வந்த ஒருவர் சுருட்டு கேட்டிருக்கின்றார். இவரும் கொடுத்துவிட்டார்.

அந்த நபர் எனக்கு சுருட்டு தந்த உமக்கு ஆற்றை கடக்க உதவுகின்றேன் எனச் சொல்லி ஆற்றை கடக்கவைத்துவிட்டு மறைந்துவிட்டார்.

கருப்பமுத்து குழம்பியபடியே கோவிலை வந்தடைந்தால் அங்கே அவர் அந்த நபருக்கு கொடுத்த சுருட்டு முருகப்பெருமான் முன் கிடந்திருக்கின்றது.

வந்தது முருகப்பெருமானே எனப் பணிந்தார் கருப்பமுத்து.

அதிலிருந்து முருகப்பெருமானுக்கு சுருட்டு வைத்து வழிபடும் வழமை வந்தது, இது பெருகிற்று.

இது புகைக்கும் வழக்கத்தை ஊக்குவிப்பதாக சர்ச்சைகள் எழுந்தன, அன்றைய புதுகோட்டை மகாராஜா இந்த சுருட்டு வைக்கும் வழக்கத்தை தடைசெய்தார்.

அவர் கனவில் சென்ற முருகன் “பக்தர்கள் பிரச்சினைகளை புகையாக போகவிடுவதில் உனக்கென்ன பிரச்சினை?” எனக் கேட்டுவிட அந்தத் தடையினை அகற்றினார் புதுகோட்டை ராஜா.

அந்த வழக்கம் இன்றுவரை உண்டு.

விராலிமலை முருகன் சாட்சாத் அங்கு உண்டு என மெய்சிலிர்க்க, கேட்போர் கண்களில் நீர்பெருக நடந்த சம்பவம் ஒன்று உண்டு. ஆங்கிலேய நீதிபதி எழுதிவைத்த உண்மை சம்பவம் அது. நீதிமன்றத்திலே பதிவும் செய்யப் பட்டிருக்கின்றது.

அதாவது, அப்போது ஆங்கிலேயர் வந்து நீதிமன்றமெல்லாம் அமைத்த 18ம் நூற்றாண்டின் அந்திம காலத்தில் தேவகோட்டை பக்கம் பழனியப்ப செட்டியார் என்றொருவர் இருந்தார், சிறந்த முருகபக்தர்.

இவர் மணப்பாறை சந்தைக்கு மாடு வாங்கச் சென்றார்.

அன்று பரமக்குடி, மணப்பாறை, மேலப்பாளையம் எனப் புகழ்பெற்ற மாட்டுசந்தைகள் இருந்தன. தினமும் ஆயிரகணக்கான மாடுகள் வந்த சந்தைகள் அவை.

அப்படி மணப்பாறைக்கு சென்று அந்திம பொழுதில் மாடுவாங்கிய பழனியப்ப செட்டியார் அதை ஓட்டிவரும் வழியில் விராலிமலை முருகன் கோவில் அருகில் இருட்டிவிட்டதால் தங்கிவிட்டார்.

மரத்தில் மாட்டை கட்டிபோட்டு சற்று தள்ளி அவர் “முருகா ” எனச் சொல்லியபடி படுத்துக்கொண்டார், முருகப்பெருமான் காவலிருப்பான் என்பது அவர் நம்பிக்கை.

ஆனால், நள்ளிரவில் மேலமலை குறவன் ஒருவன் வந்து அவருக்குத் தெரியாமல் மாட்டை அவிழ்ந்6து சென்றுவிட்டான். காலை கண்விழித்த பழனியப்ப செட்டி மாடு இல்லாததால் பதறினார்.

அங்குமிங்கும் தேடியவர் மாட்டின் சாணம் கால்தடமெல்லாம் கண்டு ஓடி ஓடி தேடியதில் மாடு குறவன் வீட்டில் இருப்பது தெரிந்தது, அவனோ இது தன் மாடு எனச் சாதித்தான்.

அவனுக்கு இதுவே தொழிலாக இருந்தது.

வேறுவழியின்றி செட்டியார் நீதிமன்றம் நாடினார், குறவனோ தேர்ந்த திருடன் என்பதால் சொன்னான், “ஐயா, நான் இந்த மாட்டை அவிழ்த்துவிடுகின்றேன் அது அவர் வீட்டுக்குச் சென்றால் அவர் மாடு.

இல்லை அவர் அந்த மாட்டின் அங்க அடையாளம் ஒன்றை ரகசிய அடையாளத்தை சொல்லட்டும் சரியாக இருந்தால் கொடுத்துவிடுவேன்.

இல்லை சந்தையில் இருந்து சாட்சி விற்ற மாட்டுக்காரனை அழைத்துவரட்டும் நான் கொடுத்துவிடுகின்றேன்”

செட்டியார் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார்.

காரணம், அது புதுமாடு அவர் வீடே அறியாதது இதனால் அது அவிழ்த்துவிட்டாலும் அவர் வீடு செல்லாது.

இரண்டாவது, அந்த மாட்டை அப்போது சிலமணிநேரம் முன்னாடிதான் வாங்கியிருந்தார். அதன் அங்க அடையாளம் நிறமெல்லாம் பெரிதாக அவர் மனதில் பதியவில்லை.

மூன்றாவது, அது தினமும் ஆயிரகணக்கில் மாடுவரும் பெரிய சந்தை, சுற்றும் தரகர்கள் ஏராளம், யார் யாரிடம் வாங்கினார், விற்றார் என்பதெல்லாம் அறிய வாய்ப்பில்லாத விஷயம்.

சாட்சி அங்கே ஏதுமில்லை என்பது குறவனுக்கு சாதகம், நீதிமன்றமோ சாட்சியின்றி ஏதும் செய்யமுடியாது.

“உமக்கு சாட்சி உண்டா?” என ஆங்கிலேய நீதிபதி கேட்டபோது, மனமுடைந்த பழனியப்ப செட்டி சொன்னார், “மலையில் இருக்கும் விராலிமலை முருகனே சாட்சி, நான் அவனை நம்பித்தான் அங்கே மாட்டை கட்டினேன்”

நீதிபதி சட்டபடி தீர்ப்பை எழுத தயாரானபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

எங்கிருந்தோ பறந்து வந்த மயில் ஒன்று நீதிபதி முன்னால் நின்று தோகைவிரித்து ஆடியது, அதை எல்லொரும் கண்டார்கள்.

ஆனால், அந்த மயில்மேல் முருகன் இருந்தது நீதிபதி கண்ணுக்கு மட்டும் தெரிந்தது.

நீதிபதி எழுந்து நின்று மயிலையே பார்த்து கொண்டிருந்தார், மயில் உடனே திரும்பி சென்றது, அவையே அந்த அதிசயம் கண்டு மௌனித்து நின்றது, யாரிடமும் வார்த்தை இல்லை.

நீதிபதி தீர்ப்பை எழுதினார். எல்லா வாய்களும் மூடி அவரையே நோக்கின, பழனியப்ப செட்டிக்கு என்ன நடக்கின்றது என்பதே தெரியவில்லை.

நீதிபதி தீர்ப்பை வாசித்தார், “இங்கு மயிலே வந்து சாட்சி சொன்னது, நான் அந்த மயில்மேல் இருந்த முருகப்பெருமானை கண்டேன், இந்தச் சாட்சியினை ஏற்றுக்கொண்டு அந்த மாடு செட்டியாருக்குரியது எனத் தீர்பளிக்கின்றேன்”

குறவன் தண்டனை பெற்றான், பசுவினை பெற்றார் செட்டி.

பழனியப்ப செட்டிக்கு மனமெல்லாம் முருகனே நிறைந்திருந்தார், அந்த நன்றிபெருக்கில் அந்த அதிசயத்தில் மனம் நெகிழ்ந்தவர் “முருகா” என்றபடி அந்தப் பசுவினை விராலிமலை கோவில் கொண்டு கட்டிவைத்து திரும்பினார்.

அது கோவில் பசுவானது, பின் செட்டியாரின் தொழில்கள் பெரிதாக வளர அந்தப் பசுவோடு நிறைய பசுக்களை சேர்த்து கோசாலை அமைத்துக் கொடுத்தார், அந்த கோசாலை இன்றும் உண்டு.

இப்படி மயிலே வந்து சாட்சி சொன்ன அதிசயத்தை முருகன் விராலிமலையில் இருந்து செய்தார், அந்த அற்புத காட்சியினை கிறிஸ்தவ ஆங்கில நீதிபதி எழுதிய சாட்சி இன்றும் உண்டு.

இப்படி அன்றில் இருந்து முதல் யுகத்தில் இருந்து இந்த கலியுகம் வரை முருகப்பெருமான் நின்று கண்கண்ட தெய்வமாக வரமருளும் ஆலயம் விராலிமலை ஆலயம்.

ஆம். முருகப்பெருமான் மிக சக்தியாய் நின்று கேட்டவரம் தரும் ஆலயம் இது.

இங்கே மாதாந்திர ஷஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், சூரசம்ஹாரம், ஆடி கிருத்திகையெல்லாம் மிகப்பெரிய பண்டிகைகள்.

எப்போதும் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தலெல்லாம் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும், வேண்டுதல் நடப்பதெல்லாம் சாதாரண விஷயம்.

இந்தத் தலம் ஆன்மீக தவமிருப்போர்க்கு அஷ்டமா சித்துக்களை பெரும் ஞான சித்துக்களை வழங்கும் தலம்.

அருணகிரியாருக்கு தனி பாடும் வரம் தந்த ஆலயம் எனும் வகையில் கல்வி ஞானம் அருளும் ஆலயம் இது.

இங்கு ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் அடிபிரதட்சணம் செய்து வேண்டுதல் அன்றாட காட்சிகள்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சுருட்டு காணிக்கை வைப்பதும், பிள்ளைவரம் பெற்றோர் தவிட்டு மூட்டை வைத்து காணிக்கை செலுத்தும் காட்சியும் அன்றாடம் உண்டு.

நீங்கள் யாராகவும் இருங்கள், முன்பின் ஆலய வாசல் மிதிக்காதவர்களாக கூட இருங்கள், ஆனால் உங்கள் வேண்டுதல் எது என்றாலும் இந்த முருகப்பெருமான் நிறைவேற்றி தருவான்.

அது உமிபோல் முருகப்பெருமான் முன்னால் பறந்தோடும், பகைபோல் சுருட்டு கட்டிலே எரிந்து போகும்.

இந்த ஆலயத்தின் தாத்பரியத்தை கவனியுங்கள், அதன் மாபெரும் வல்லமை புரியும்.

வேங்கை குராமரத்தில் மறைந்தது என்பது ஆன்மா பரமாத்மாவுடன் கூடி கலந்துவிடும் ஆலயம் இது என்பதை சொல்வது, இது ஆன்மாவினை ஈர்க்கும் ஆலயம் என்பது.

இங்கேதான் பிரம்மனின் குமாரர் நால்வர் சாபம் நீங்கினார்கள் என்பது படைப்பு தொழில் சரியான தத்துவம், இங்கே வழிபட்டால் உங்கள் தலைவிதி மாறும்.

நாரத முனியினை வேறு எங்கும் நீங்கள் சிற்பமாக பெரும்பாலும் காணமுடியாது, அந்த நாரத முனியே இங்கு சாபம் நீங்கபெற்றார் என்றால் அதன் பொருள் இக்கோவில் கல்வி ஞானம் , கலை ஞானம் அருளும் என்பது.

நாரதர் நின்ற இடம் என்பது மனம் ஒருமுக பட்ட தத்துவம், மனதை நாரதருக்கு ஒப்பிடுவது இந்துதர்மம், கல்வி கேள்விக்கு பிரசித்தியானவரும் நாரதரே.

நாரத முனிக்கு அருள்கொடுத்த இத்தலம் அதே வரத்தை அருணகிரியாருக்கும் கொடுத்தது, அதே வரத்தை இங்கு வந்துவழிபடும் ஒவ்வொருவருக்கும் கொடுக்க காத்துக் கொண்டிருக்கின்றது.

இது சதுரகிரி போல ஞானம் வழங்கும் மலை, முருகனை தேடிவந்து தவம் செய்தால் நிச்சயம் அந்த யோக நிலை சித்தியாகும்.

முக்கியமாக குழந்தை வரம் அருளும் சக்திவாய்ந்த ஆலயம் இது.

எது நீதியோ, எது தர்மமோ அதை தேடிவந்து தீர்க்கும் ஆலயமும் இதுதான். எங்காவது நீங்கள் வஞ்சிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு யாரும் இல்லாமல் இருந்தால், அனாதையாக விடப்பட்டவர்களாக இருந்து நியாயம் கேட்டு நீங்கள் கதறினால் இந்த முருகன் பெயரை சொல்லி நம்பிக்கையுடன் அழையுங்கள்.

பழனியப்ப செட்டியார்க்கு செய்த அந்த அற்புதத்தை உங்களுக்கும் முருகப்பெருமான் செய்து நியாயம் பெற்று தருவார்.

இப்படி லௌகீகம், ஆன்மீகம் என இரு வடிவிலும் ஏகப்பட்ட பலன்களை தரும் இந்த ஆலயத்தை தவறவிடாதீர்கள், தெற்கே செல்லும் போது திருச்சி தாண்டி முதலில் வழிபடவேண்டிய ஆலயம் இதுதான்.

அருணகிரியாரை அழைத்து தானே வழிகாட்டி அழைத்துச் சென்ற முருகன், கருப்பமுத்துவினை தானே கைபிடித்து அழைத்து சென்ற முருகன் உங்களையும் அழைத்துச்செல்ல தயாராக இருக்கின்றார்.

அவரை நோக்கி கைகளை நீட்டுங்கள் போதும், அந்தக் குமரனே வந்து உங்களை அழைத்துச் சென்று உங்கள் குறைகளெல்லாம் நீக்கி வாழ்வை மாற்றித் தருவார்.

இது சத்தியம். சத்தியம். முக்கால சத்தியம்.

“கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து
குலாவியவ மேதி ரிந்து புவிமீதே

எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
எலாவறுமை தீர அன்று னருள்பேணேன்

சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
சுகாதரம தாயொ ழுங்கி லொழுகாமல்

கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
கிலாதவுட லாவி நொந்து மடியாமுன்

தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
சொலேழுலக மீனு மம்பை யருள்பாலா

நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
நபோமணி சமான துங்க வடிவேலா

படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து
பசேலெனவு மேத ழைந்து தினமேதான்

விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
விராலிமலை மீது கந்த பெருமாளே.”

முருகப்பெருமான் ஆலயங்கள். பாலமலை முருகன்.

முருகப்பெருமான் ஆலயங்கள். பாலமலை முருகன்.

கரூர் ஆனிலை பசுபதீஸ்வரர் ஆலயத்தின் மேற்காக அமைந்துள்ளது இந்த பாலமலை ஆலயம். ஆனிலை பசுபதீஸ்வரர் சிவாலயம் எறிபத்த நாயனார், புகழ்துணை நாயனார் வழிபட்ட சிறப்பினை கொண்டது. மகா பிரசித்தியானது.

அதன் அருகே பாலமலை ஆலயமாக ஒரு குன்றின் மேல் இது அமைந்துள்ளது. அது சுமார் 50 படிகள் கொண்ட சிறிய குன்று.

இந்த ஆலயத்தின் வரலாறு காலத்தால் முற்பட்டது, மகா மகா தொன்மையானது.

அதாவது முசுகுந்த சக்கரவர்த்தி எனும் சோழமன்னன் காலத்து ஆலயம் இது. முசுகுந்த சக்கரவர்த்தி சோழ மன்னர்களில் தலை சிறந்தவர். முற்கால சோழர்களின் பிதாமகன் அவர்தான்.

இந்த முசுகுந்த சக்கவர்த்தியின் வரலாறும் பூர்வ ஜென்மமும் சுவாரஸ்யமானது. அதனை சொன்னால்தான் இந்த ஆலயத்தின் பெருமை விளங்கும்.

முசுகுந்த சக்கரவர்ர்த்தியின் வரலாறு கயிலாயத்தின் வனத்தில் இருந்து துவங்குகின்றது. சிவபெருமான் ஒருமுறை தியானம் செய்தபோது அங்கு வந்த குரங்கு ஒன்று அவர்மேல் வில்வ இலைகளை வீசி வம்பு செய்தது. குரங்கின் குணம் அது.

அந்த குரங்கின் சேட்டை அடிக்கடி தொடர்ந்தது. சிவனோ அவர்போக்கில் இருந்தார். ஆனால், அதை கண்டுவிட்ட பார்வதி தேவி குரங்கின் மேல் கோபம் கொண்டு விரட்டினார்.

அப்போது கண்விழித்த சிவன் சொன்னார், “அது அதனை அறியாமலே வில்வ இலைகளால் எம்மை அர்ச்சித்திருக்கின்றது, அந்த புண்ணியம் அதனை பெருவாழ்வு வாழவைக்கும்” என்றார்.

சிவனின் பார்வை பட்ட அந்த குரங்கு அங்கே ஞானம் பெற்று இந்த வரத்துக்கு நன்றி சொல்லி அந்த பெருவாழ்வையும் அர்த்தமுள்ள பக்தியுள்ள பயனுள்ள வாழ்வாக வாழ வரம் கேட்டது. சிவனும் வரமருளினார்.

அதன்படி அந்தக் குரங்கின் அடுத்த பிறவி இஷ்வாகு எனும் சூரியகுல மன்னர்கள் வழிவந்த சோழ குலத்தில் அமைந்தது. முசுகுந்தன் எனும் மன்னனாக அது அவதரித்தது.

சிவனின் வரத்தால் முசுகுந்தனுக்கு எல்லா வளமும் பலமும் எளிதில் வாய்த்தன; இறைபக்தியும் அதிகம் இருந்தது; இறைவனைப் பற்றிய தேடல் எப்போதும் இருந்தது.

அந்தத் தேடலில் வசிஷ்ட மகரிஷி அவரை முருகனை வழிபடச் சொல்லி முருகனின் பெருமையெல்லாம் தெரிவித்தார், முருகனை மனதார வழிபட தொடங்கினான் முசுகுந்தன்.

அந்த பக்தி நாளுக்கு நாள் வளர்ந்தது, அந்த பக்திக்கு கட்டுப்பட்டு முருகப்பெருமானே காட்சியளித்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார்.

“பூலோகம் முழுவதும் ஆளும் பாக்கியம் வேண்டும்” என்றான் முசுகுந்தன், அவனுக்கு அந்த வரத்தை முருகப்பெருமானே அருளினார்.

அதன்படி பூலோகம் முழுவதும் முசுகுந்தனின் அரசாங்கமாயிற்று.

கரூர் அக்கால சோழர்களின் தலைநகரமென்பதால் அவன் அங்கிருந்தே இராஜபரிபாலனம் செய்தான். பூமியில் அவனை விட பெரிய மன்னர்களோ பலசாலிகளோ அப்போது இல்லை.

முருகப்பெருமானின் தனி அருள் அவனோடு இருந்தது, அவன் புகழ் வானலோகம் வரை எட்டியிருந்தது.

அந்த யுகத்தில் மானிடரும் தேவரும் ஒன்றாய் உறவாடினார்கள். இருவருக்குமான நெருக்கம் அதிகமிருந்தது. அடிக்கடி அவர்கள் பல உலகங்களுக்கு சென்றுவர முடிந்தது.

பூலோகத்துக்கு இந்திரன் வருவதும், முசுகுந்தன் தேவலோகம் செல்வதும் அடிக்கடி நடந்தன‌.

அந்நிலையில் வல்லாசுரன் என்பவன் தேவலோகத்தை கைப்பற்றி பெரும் அட்டகாசம் செய்தான். இந்திரன் முசுகுந்தன் உதவியினை நாடினான். முசுகுந்தனும் வல்லாசுரனை முறியடித்து தேவலோகத்தை மீட்டு இந்திரனுக்கே கொடுத்தான்.

அப்போது அவன் பெற்ற லிங்கங்களே சப்த விடங்க லிங்கங்கள். அதை சோழநாட்டில் ஆலயமாக வைத்தான். அந்த போரில் தனக்கு துணையாக இருந்த முருகப்பெருமானுக்கு திருவாரூரில் ஆலயம் கட்டினான் முசுகுந்தன்.

இவை எல்லாம் இப்போதும் உண்டு.

அந்தக் கால கட்டங்களில் அதாவது இந்திரன் தேவலோகம் இல்லாமல் பூலோகத்தில் முசுகுந்தனிடம் அடைக்கலமான காலங்களில் தேவேந்திரன் முருகப்பெருமானை நினைந்து மலைமேல் வேல் வைத்து வழிபட்டான், அப்படியே பவித்திரம் எனும் ஊரில் இருக்கும் லிங்கத்தையும் வழிபட்டான்.

அதனால் அது தேவேந்திர லிங்கம் எனப் பெயர்பெற்றது. அது இன்றும் உண்டு.

இந்திரன் முருகனை வழிபட்டது அந்தப் பாலமலை, அங்கே வேல் ஊன்றி முருகப்பெருமானை முதலில் வணங்கியது இந்திரனே, தவம்போல் அதை செய்தான்.

அந்த ஆலய வரலாறு அங்கிருந்துதான் தொடங்குகின்றது.

பின் முசுகுந்தனால் தன் இராஜ்ஜியத்தை திரும்பபெற்றவன் அங்குச் சென்றான், அவன் வழிபட்ட இடம் அப்படியே இருந்தது.

அங்கே மாடு மேயும் போது ஒரு பசு இந்திரன் வழிபட்ட வேல் மண்மூடி இருந்த நிலையில் அங்கே பால் சொரிந்தது, அடிக்கடி அது பால்சொரியும் காட்சியினை கண்ட இடையன் அதை மன்னரிடம் தெரிவித்தான்.

மன்னன் முசுகுந்தன் அதுபற்றி சிந்தித்த நேரம் அவன் கனவில் காட்சி கொடுத்த முருகப்பெருமான் தான் அங்கே இருப்பதாகவும் தனக்கோர் கோவில் கட்டவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

முசுகுந்த சக்கரவர்த்தி ஒப்பற்ற முருக பக்தன் என்பதால் அதனை உடனே செய்தான், அப்படி உருவான ஆலயம் இந்தப் பாலமலை ஆலயம்.

பசு பால் சொரிந்து முருகப்பெருமானை காட்டிய மலை அது. பால தண்டாயுதபாணியாய் முருகப்பெருமான் அருள் வழங்கும் தலம் அது.

இந்தத் தலம் காலத்தால் முநதையதும் யுகங்களை தாண்டியதும் சோழர்களின் முற்கால பிதாமகன் காலம் தொடங்கி இன்றுவரை அருள் பாலித்து கொண்டிருக்கும் தலம்.

கரூர் அருகே அமைந்திருக்கும் அத்தலம் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது, குன்றின் அடியில் மயில் சிலையுடன் கூடிய மண்டபத்தில் இருந்து மேல் ஏறினால் இடும்பன் சன்னதி தாண்டி இந்த ஆலயம் வரும், அங்கே விநாயகர் மாதேஸ்வரர் சன்னதிகளை கடந்தால் இந்த பால சுப்பிரமணிய சுவாமியினை தரிசிக்கலாம்.

அதன் அருகே திருக்குளம் ஒன்று உண்டு, அது எல்லாப் பாவங்களின் பரிகார தலமாக அமைந்திருக்கின்றது.

இந்தத் தலத்தின் முருகப் பெருமானிடம் எதை பக்தியுடன் கேட்டாலும் தருவார், எதை இழந்தோமோ அதை திரும்ப மீட்டு தருவார்.

இந்த முருகப்பெருமான் ஆலயத்தில் எல்லா அற்புதங்களும் எப்போதும் உண்டு, பக்தர்கள் வந்து வேண்டுவதும் பின் வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திகடன் செய்வதும் வாடிக்கை.

செவ்வாய்கிழமை இங்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. கிருத்திகை மற்றும் விசாக நட்சத்திரநாள் ஒன்பது நெய்விளக்குகள் ஏற்றி வேண்ட வரம் தவறாமல் கிடைக்கும்.

இந்த ஆலயத்தில் தை பூசம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, சூரசம்ஹார கால சஷ்டி விரதமெல்லாம் மிக விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த ஆலயம் முருகப்பெருமான் ஆலயங்களில் கொங்கு பிரதேசத்தில் அமைந்திருக்கும் மகா தொன்மையான ஆலயம் இது.

இங்கு வழிபட்டால் எதனை இழந்தீர்களோ அது திரும்ப கிடைக்கும், முற்பிறவியின் பலன் எதுவோ அது பன்மடங்காய் திரும்ப வரும்.

கொங்குப்பிரதேசம் எப்போதும் முருகபக்தியில் சிறந்தது. மருதமலை உள்ளிட்ட அற்புதமான தலங்களையும், எத்தனையோ முருகப்பெருமான் அடியார்களையும் கொடுத்தது.

அதற்கெல்லாம் மூத்த அடிக்கல்லாக முதல் முருகபக்தனாக அந்த முசுகுந்த சோழனை அடையாளம் காட்டியபடி முருகப்பெருமானின் அருளை நிரம்ப சுமந்தபடி, கொங்கு மண்டலம் என்றல்ல தமிழக முருகப்பெருமான் ஆலயங்களின் மூல கோவிலாக நின்று சாட்சி சொல்கின்றது அந்த பாலமலை ஆலயம்.

கரூர் செல்லும் போது இந்த முருகப்பெருமான் ஆலயத்ததில் வழிபட தவறாதீர்கள். முசுகுந்த சக்கரவர்த்தி, தேவேந்திரன் முதல் எண்ணற்ற அடியார்களை காலம் காலமாக காப்பாற்றி அருள்வழங்கிவரும் முருகப்பெருமான் உங்களுக்கும் அற்புதம் செய்ய தயாராக இருக்கின்றார்.

அங்கு செல்லும் போது அந்த பால சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்ய மறவாதீர்கள், வில்வம் கிள்ளி போட்ட குரங்குக்கே பெரும் அருள் செய்த அந்த பரம்பொருள் இங்கே பால் ஊற்றி வழிபடும் உங்களை இந்த பிறப்பிலே எல்லா கர்மமும் நீக்கி அடுத்த பிறப்பில் பெரும் வாழ்வு வாழவைப்பார். அந்த வரத்தை பெற்றுகொள்ளும் வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.

முருகப்பெருமான் ஆலயங்கள். குமாரகோவில் வேளிமலை மற்றும் வெள்ளிமலை.

முருகப்பெருமான் ஆலயங்கள். குமாரகோவில் வேளிமலை மற்றும் வெள்ளிமலை.

முருகப்பெருமானுக்கு எத்தனையோ தலங்கள் இருந்தாலும் குமரிமாவட்டத்தில் இருக்கும் இரு முருகப்பெருமான் தலங்கள் முக்கியமானவை.

அவை குமாரகோவிலில் இருக்கும் வேளிமலை அல்லது வள்ளிமலை முருகன், அப்படியே சற்று தள்ளி அமைந்திருக்கும் வெள்ளிமலை முருகன் ஆலயம்.

இவை இரண்டும் நாகர்கோவில் திருவனந்தபுரம் பாதையில் மலையில் அமைந்துள்ளன‌.

இந்தக் குமாரகோவில் என்பது மிக மிக தொன்மையான கோவில். முருகனின் தனித்தன்மை வாய்ந்த ஆலயமென சொல்லப்பட காரணம், வள்ளி இங்குதான் வாழ்ந்தாள் என்பதும், நம்பிராஜன் அங்கேதான் வசித்தான் என்பதுமாகும்.

முருகப்பெருமான் திருத்தணியில் வள்ளியினை திருமணம் செய்தார் எனச் சொல்லப்பட்டாலும், அவள் வளர்ந்த இடமும், முருகன் அவளை சந்தித்து குறவர் இனத்தின் நடுவில் திருமணம் செய்த இடம் இதுதான் என்பது எக்காலமும் உள்ள செய்தி.

அந்த மலை எப்போதும் குறவன் மலை என்றே அழைக்கப்படும். அந்த நீண்ட மலைத்தொடரின் தெற்கு முடிவில்தான் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

இங்கே வள்ளி வாழ்ந்ததால் வள்ளி மலை என்றும், வள்ளியின் காதல் வேள்வி நடந்ததால் வேள்வி மலை என்றும் சொல்லப்பட்டு பின் வேளிமலையாயிற்று என்பார்கள்.

மலையாளத்தில் “வேளி” என்றால் திருமணம், இந்தப் பகுதி மலையாள பூர்வீக‌ பகுதி என்பதால் அது வள்ளிதிருமணத்தை சுட்டிக் காட்டியே “வேளி” மலை என்றாயிற்று.

அங்கே வள்ளியினை மணம்புரிய வந்த‌ குமரனுக்கான கோவில் குமாரன் கோவில் என்றாயிற்று.

குமாரகோவில் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உண்டு. “சேரநாட்டு ஏராகம்” என அது சொல்லு குறிப்பு இந்த மலைதான். மலையாளத்தில் இது குமார ஷேத்திரம், குமார ஸ்தலா என அழைக்கப்படும்.

குமாரகோவில் கலம்பகம், குமார கோவில் பிள்ளைத்தமிழ் என இந்த முருகன் மேல் பாடப்பட்ட பாடல்கள் நிரம்ப உண்டு.

இந்த மலையின் அடிவாரத்தில் கோயிலுக்கு நேர் கீழாக அழகான திருக்குளம் உள்ளது. அதன் கரையில் ஒரு விநாயகர் சந்நிதி. இவரை வணங்கி விட்டு, 38 படிகள் ஏறிச் சென்றால், குன்றின் உச்சியில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது திருக்கோயில். கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம். அதைத் தாண்டிச் சென்றால், இடப் புறம் விநாயகர் காட்சியளிப்பார்.

பிரதான மூர்த்தியான முருகப் பெருமான் சுமார் 8 அடி 8 அங்குல உயரத்தில், அழகிய இரு திருக்கரங்களுடன் கருவறையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இடக் கரம் இயல்பான நிலையில் பாதத்தை நோக்கியிருக்க, வலக் கரம் வரத முத்திரையுடன் திகழ்கிறது. இவர் பெரும்பாலான நாட்களில் சந்தனக் காப்புடன் தரிசனம் தருகிறார்.

எட்டு அங்குலம் எட்டு அடி என்பது வாழ்வின் எட்டு நிலைகள், ஆன்மீகத்தின் எட்டு நிலைகளை சரியாக சொல்வது, வாழ்வின் எல்லாப் பருவத்துக்கான அருளும் எம்பிரான் அருள்வார் என்பதை சிலையிலே சொல்லி வைத்தார்கள்.

மிகவும் பழமையான இக்கோயிலில் மூலவரான முருகப்பெருமான் தென்கிழக்கு பக்கமாக திரும்பி அருள் பாலிக்கின்றார். தென்கிழக்கு என்றால் அக்னி மூலையினை குறிப்பது, ஆத்மம் எனும் சுடரை முருகப்பெருமான் அருளால் பிரகாசிக்க செய்யும் ஆலயம் இது.

அக்னி எனும் சூடுதான் உடலை இயக்கும், எல்லா இயக்கத்துக்கும் காரணம் அக்னி, இந்தத் தலம் அப்படி நல்ல ஆரோக்கியமும் நல்ல சக்தியும் தரும் ஆலயம்.

சுவாமியின் காதுகள் நீண்டு காணப்படும், நம் நீண்ட கோரிக்கையினையும் முருகப்பெருமான் பொறுமையாக கேட்டு அருள் வழங்குவார் எனும் அடையாளம் அவை.

முருகப்பெருமானுக்கு இடப்புறம் சுமார் 6 அடி 2 அங்குல உயரத்தில் வள்ளிதேவி. இங்கு, முருகப் பெருமானின் அருகில் வள்ளிதேவியை மட்டுமே தரிசிக்க முடியும்.

இது வள்ளி திருமணத்தை சொல்லும் ஆலயம் என்பதால் தெய்வயானைக்கு இங்கு சன்னதி இல்லை.

இங்கு எல்லா காட்சிகளும் வள்ளி திருமணத்தை நினைவுபடுத்தியே அமைந்திருக்கும், அங்கு உற்சவர் மணவாள குமாரன், தல விருட்சம் வேங்கைமரம்.

வேங்கை மரத்துக்கு அங்கு தனி சன்னதியே உண்டு.

ஆம். வள்ளியும் முருகப்பெருமானும் தினைவயலில் சந்தித்தபோது வள்ளியைத் தேடி அங்கே குறவர்கள் வர, முருகப் பெருமான் வேங்கை மரமாக மாறினார் என்கிறது புராணம். அதனால் இங்கு வேங்கை மரம் கொண்டாடப்படுகின்றது.

வேங்கை மரத்தை முருகப்பெருமானாகவே பாவித்து வேட்டி கட்டி பூஜை செய்யும் வழிபாடு அங்கு உண்டு.

இந்தக் கோவில் மிக மிக நுணுக்கமான தத்துவத்தை சொல்கின்றது, அந்த மகா முக்கிய காரணத்தை, தனிப் பெருமையினை வேறு எந்த கோவிலும் சொல்லவில்லை.

இந்தக் கோவில் ஒன்றுதான் அதை தெளிவாக அழுத்தமாக சொல்கின்றது. ஆம். தட்சன் ஆட்டுதலையுடன் தனி சன்னதி கொண்டிருக்கும் ஆலயம் இதுதான்.

அதாவது தட்சனின் யாகத்தில் அவன் அகங்காரத்தை வெறுத்து சிவன் செல்லவில்லை. ஆனால், தேவியும் இதர தேவர்களும் சென்றார்கள். சிவனை மீறிச் சென்றார்கள்.

அங்கே தேவி சதியில் வீழ்ந்ததும், பின் தட்சன் சாபத்திற்கு ஆளாகி ஆட்டுதலை பெற்றதும் நடந்தது.

தேவியின் பிரிவால் சிவன் ஆழ்ந்த தவத்துக்கு செல்ல, அந்த சிவனை மீறி தட்சன் யாகத்துக்கு சென்ற தண்டனை பெரும் விதமாக சூரபத்மன் எழுந்து ஆடினான்.

அந்த சூரனின் அட்டகாசம் எல்லை மீறிச் செல்லும் போதுதான் அவனை அழிக்க முருகப்பெருமான் அவதரித்தார். பின், அவதார நோக்கம் முடிந்து கடைசியாக வள்ளி திருமணத்துடன் அவரின் வரலாறு கந்தபுராணத்தில் முடிகின்றது.

அந்த முருகப்பெருமானின் அவதாரத்தின் தொடக்கம் தட்சன் யாகம் எனச் சொல்லி, முடிவு வள்ளி திருமணம் எனக் காட்டி கந்தபுராணத்தையே இந்த ஆலயம் அமைதியாக விளக்குகின்றது. இந்த சிறப்பு வேறு எங்குமில்லை.

இந்த ஆலயத்தின் மகா முக்கிய விசேஷம் “கஞ்சி தர்மம்”.

திருக்குளத்தின் அருகே கஞ்சி தர்மத்துக்கான ‘கஞ்சிப்புரை’ அமைந்துள்ளது. இங்கு வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ‘கஞ்சி தர்மம்’ விசேஷமானது.

இது தீராத நோய் தீர்க்கும் வைபவமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இன்றும் கஞ்சி தர்மம் உண்டு, அந்த கஞ்சி நோயினை அகற்றும்.

அக்காலத்தில் கஞ்சி தர்மம் முடிந்ததும் அந்த இடத்தில் தொழுநோயாளிகள் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள். அதாவது நோயினால் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள், மக்கள் உண்டு முடித்தபின்பு அங்கே அங்க பிரதட்சனம் செய்து புண்ணியத்தை பெறுவார்கள்.

அப்போது தொழுநோய் தீர்ந்த அதிசயமெல்லாம் நடந்த சாட்சி உண்டு.

இப்போதும் நோயாளிகள் தங்கள் நோய் தீர “கஞ்சி தர்மம்” எனக் கஞ்சி பிரசாதமாக செய்து ஊற்றுவதும், அதனால் அவர்க்கும், அதை பருகுவோர்க்கும் நோய் தீர்வதும் நடக்கும் விஷயம் வாடிக்கையானது.

கோயிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகையை ‘வள்ளிக் குகை’ என்பர். முருகப்பெருமான், வள்ளி திருமணம் இந்தப் பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த இடத்தையொட்டி முருகன், வள்ளி திருமண சம்பவத்துடன் தொடர்பு கொண்ட தினைப்புனம், வள்ளிச் சோலை, வட்டச் சோலை, கிழவன் சோலை ஆகிய இடங்கள் உள்ளன.

முருகன் கிழவன் வடிவில் வந்து வள்ளியினை மிரட்டிய சோலை அதுதான், அங்கே விநாயகர் யானை வடிவில் வந்து முருகனின் காதலுக்கு உதவினார்.

இதனால் வள்ளிதேவி நீராடிய சுனை அருகே பாறையில் விநாயகர், வேலவர், வள்ளிதேவி ஆகியோரது புடைப்புச் சிற்பங்கள் உண்டு.

வள்ளிதிருமணம் இங்குதான் நடந்தது என்பதை மிக மிக ஆதாரமாக சொல்லும் விழாவும், அந்த குறமகள் திருமணத்தை சொல்லும் சம்பிரதாயமும் இங்குதான் நடக்கின்றது.

அதுவும் காலம் காலமாக குறவர்கள் இது எங்கள் பாரம்பரியம், எங்கள் குலத்தின் வள்ளியினைத்தான் முருகப்பெருமான் திருமணம் செய்தார் என விடாமல், விட்டுக்கொடுக்காமல் வழிபட்டு கொண்டாடி அந்த பெருமையினை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஆம். வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சாட்சி ஒன்றை இத்தலம் சொல்கின்றது.

பங்குனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில்தான் முருகன் வள்ளி திருமணம் நடந்தது என ஆதாரத்தோடு சொல்லி அதற்கு விழா எடுக்கும் ஒரே ஆலயம் இதுதான்.

பங்குனி அனுஷ வள்ளிதிருமணம் இங்கு மகா விசேஷமானது.

அன்று காலையில் பல்லக்கில் எழுந்தருளும் முருகப்பெருமான், வள்ளி குகை அருகே உள்ள கல்யாண மண்டபத்துக்குச் செல்கிறார்.

பின், மண்டபத்தில் தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெறும். பிற்பகலில் முருகன், வள்ளி தம்பதியை பல்லக்கில் அழைத்து வருகிறார்கள். அதாவது முருகப்பெருமான் வள்ளியினை அழைத்துச் செல்கின்றாராம்.

அப்போது ‘குறவர் படுகளம்” எனும் நிகழ்ச்சி நடக்கும், மலைப்பாதை முழுக்க நடக்கும்.

அதாவது வள்ளியினை முருகப்பெருமான் அழைத்துச் செல்லும்போது அவருக்கும் குறவர்களுக்கும் சண்டை நடந்தது என்பது புராணச் செய்தி.

அந்த சண்டையினை இங்கு நடத்தி காட்டுவார்கள் குறவர்கள், இதனில் குறவர் இன மக்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

முருகப்பெருமானுக்கு எல்லா ஆலயங்களிலும் சூரசம்ஹாரம், சஷ்டி விழா, திருக்கல்யாணம் நடக்கும், ஆடி கிருத்தியை, வைகாசி விசாகமெல்லாம் நடக்கும்.

ஆனால், அவர் “குறவர் படுகளம்’ எனக் குறவர்களோடு மோதும் வைபவம் இங்கு மட்டுமேதான் நடக்கும் ஒன்று.

அன்று இரவு பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்தில் முறைப்படி வள்ளிக்கும் முருகனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன் பின்னர் தேன், தினைமாவு மற்றும் குங்குமம் ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

முருகனுக்கு தேனும் தினைமாவும் வைத்து வணங்கும் ஆலயம் இதுதான்.

இந்த ஆலயம்தான் வள்ளிதிருமணம் நடந்த ஆலயம் என்பதில் எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. அந்த ஆலயத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வழிபாட்டு ஏற்பாடும் அதை தெளிவாகச் சொல்கின்றன‌.

இங்கே வழிபட்டால் வாழ்வின் தடைகளெல்லாம் தீரும், எதற்காக காத்திருக்கின்றோமோ அது நிச்சயம் கிடைக்கும்.

திருமண வாழ்வு சிறக்கும், எல்லா மகிழ்வும் நிறைவும் தேனும் தினைமாவுமாக பெருகும்.

மிக முக்கியமாக எந்த கொடும் நோயும் இங்கு அகலும், நீங்கள் எந்த நோயில் பாதிக்கப்பட்டிருந்தாலும் இங்கே “கஞ்சி தர்மம்” செய்தாலும், பங்கெடுத்தாலும் அந்நோய் அகலும். இது சத்தியம்.

கன்னியாகுமரி பக்கம் செல்லும் போது இந்த குமாரகோவில் முருகனை காணத் தவறாதீர்கள். தேனும் திணைமாவும் வைத்து அவனை வணங்கினால் எல்லா நலமும் அருளும் வரும்.

வள்ளி என்பவள் சுக்கிர கிரஹத்தை குறிக்கும் தெய்வம், அங்கே வணங்கினால் சுக்கிரபகவானின் அருள் எல்லாம் பெருகும், தடைகள் விலகும்.

ஜாதகத்தில் சுக்கிர குறைபாடு உள்ளோர், நிவர்த்தி தேடுவோர் வணங்க வேண்டிய தலங்களில் முக்கியமான ஆலயம் இதுதான்.

லௌகீக வாழ்க்கைக்கான செல்வம், ஆரோக்கியம், தெளிவான சிந்தனை, போராடும் வைராக்கியம், அதில் வெற்றி என எல்லாமும் அருளும் ஆலயம் இது.

அடுத்த ஆலயம் வெள்ளி மலை ஆலயம். இது திங்கள்சந்தை பக்கம் அமைந்துள்ளது.

இந்த மலை காக்கைபொன் எனும் தாது கொட்டி கிடந்த மலை. அவை வெயிலில் வெள்ளிபோல் மின்னுவதால் வெள்ளிமலை என்றாயிற்று என்பார்கள்.

அதே நேரம் வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் அலைமோதும் மலை என்பதால் வெள்ளிமலை என்றாயிற்று என்பதும் ஒரு செய்தி. இது சரியாக இருக்கலாம்

இந்த ஆலயத்தின் வரலாறு அங்கே வாழ்ந்த சித்தர் ஒருவரால் தொடங்கப்பட்டது, அவர் அகத்தியர் வழிவந்த முருகப்பெருமான் அடியார் சித்தர் என்கின்றது வரலாறு.

அவர்தான் அங்கிருக்கும் குகையில் வசித்து வந்தார்; தன்னை தேடிவந்த மக்களுக்கு தெய்வீக சக்தியால் நலம் அருளினார். அவரை நாடி மக்கள் வரும்போது அவர் வழிபட சொன்ன ஆலயம்தான் இந்த முருகன் ஆலயம்.

ஒருநாள் பக்தர்கள் முன்னிலையில் அவர் முருகப்பெருமானை தரிசித்தவாறே மறைந்து போனார், முருகனில் கரைந்தே போனார்.

அவர் உருவாக்கிக் கொடுத்த முருகன் ஆலயம் அவர் விட்டு சென்ற அருள்மழையினை பொழிந்து கொண்டிருக்கின்றது.

இந்த ஆலய தலவிருட்சம் வெப்பாலை மரம்.

இங்கு அந்த சித்தர் செய்த அதிசயங்களில் ஒன்று, மலை உச்சியில் உள்ள வேப்பிலை கசப்பு தன்மை இல்லாமல் கருவேப்பிலையின் சுவையுடன் இருப்பது, இது நோய் தீர்க்கும் மருந்தாக இன்றும் உண்டு.

வெள்ளிமலையின் உச்சியில் கோயில் உண்டு, அது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் மூலையில் சித்தி விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.

இங்குள்ள முருகப்பெருமான் விக்ரஹம் அவ்வளவு அழகானது உருக்கமானது.

அதைபோன்றதொரு மிக அழகிய உருவத்தை, காண்போர் மனம் அப்படியே கரைந்து அழவைக்கும் உருவத்தை, மனதை கரைத்து தன்னிலே ஈர்க்கும் முருகப்பெருமான் உருவத்தை வேறு எங்கும் காணுதல் அரிது அல்லது இல்லை.

மிக மிக அழகான முருகப்பெருமான் திருவுருவம் அந்த ஆலயத்தில்தான் அமைந்துள்ளது, அவ்வளவு வசீகரம்.

காண்போரை அப்படியே ஆட்கொள்ளும் இந்த முருகப்பெருமான் சிலைக்கு ஈடாக இன்னொரு சிலை எங்கும் இல்லை, அவ்வளவு அழகானது.

இத்தலத்தில் என்ன வேண்டுதலை யார் செய்தாலும் தடைகள் நீங்கி மகிழ்ச்சியை அடைவர். நோய்வாய்பட்டவர்கள் சில நாட்கள் இங்கு தங்கினால் அதிக நிவாரணம் கிடைக்கும். இந்த மலைக் கோயிலுக்குப் புனித தரிசனம் செய்வதன் மூலம் மனஉளைச்சல் மற்றும் கவலைகள் குறையும்.

எல்லா வெள்ளிக்கிழமையும் இங்கு முக்கியம். அதில் கடைசி வெள்ளிக்கிழமை இங்கு சிறப்பானது.

கர்ப்பிணிப் பெண்கள் இந்தக் கோயிலில் வணங்கினால் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்பதால் கர்ப்பிணிகள் அதிகம் வந்து வணங்கும் ஆலயம் இது.

அமாவாசை, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் இங்குள்ள தீர்த்தக்கிணறில் நீராடி சஷ்டி கவசத்தைத் தவறாது ஓதிவந்தால் பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கும் பிள்ளைகள் கிடைக்கும், கடன் தொல்லை இருப்பவர்கள் அதில் இருந்து விடுபடுவர்.

இந்தக் கோவிலின் பெரும் சிறப்பானது, சித்திரை மாதம் 10 ஆம் தேதி முருகப்பெருமான் காலடியில் விழும் சூரிய ஒளி.

வருடாவருடம் அந்த சித்திரை பத்தாம் தேதி அந்த ஒளி விழும், ஏன் சித்திரை பத்தாம் தேதியினை தேர்ந்தெடுத்தார்கள்.

தெற்கே விவசாய பூமியில் ஒரு வானிலை கணக்கு உண்டு “சித்திரை பத்து சிறந்த பெரும்காற்று” என்பார்கள்.

அதாவது சித்திரை பத்தாம் தேதி காற்று வீசும் அளவு, அன்று வானில் வரும் அடையாளம், காற்றின் ஈரபதம் அது சுழன்றடிக்கும் முறை எல்லாம் கண்டு அந்த ஆண்டின் மழை அளவை கணிப்பார்கள்.

இது அன்று இயல்பாக நடந்த ஒன்று.

சித்திரை 10 அவ்வளவு முக்கியமான நாள். பருவகாலத்தின் தொடக்கத்தை கணிக்கும் நாள். அந்த ஆண்டில் விவசாயத்தை முருகப்பெருமான் காலடியில் இருந்தே தொடங்குகின்றோம், கால நேரம் என எல்லாவற்றுக்கும் அதிபதியான அப்பெருமான் நல்ல மழையினை நல்ல விளைச்சலை தரட்டும் என வேண்டி கொள்வார்கள்.

இதனாலே அந்த ஆலயத்தில் முற்றிலும் நெற்கதிர்களால் உருவாக்கப்பட்ட, அலங்காரப் பொருள் போன்ற விசிறியை மேல் கூரையில் வைத்திருப்பார்கள், அங்கு செல்வோர் காணலாம்.

பக்தர்கள் தங்கள் முதல் அறுவடையில் விளைந்த கதிரை முருகப் பெருமானுக்குப் படைப் பதற்காகக் கொண்டுவந்து இங்கு கொடுப்பார்கள், அவை விசிறி போல் முருகப்பெருமானுக்கு தலைக்கு மேல் சாட்சியாக சாற்றப்படும்.

அதாவது நல்ல விளைச்சல் கொடுத்ததற்காக நன்றி என சமர்பிப்பார்கள், இப்போதும் அது உண்டு. எப்போதும் உண்டு.

இந்த ஆலயம் நோய் தீர்க்கும், குழந்தை வரம் அருளும், மகா முக்கியமாக தொழில் வளம் அருளும், இங்கு வணங்கிவிட்டுத்தான் விதைப்பார்கள், அவை பெரும் தனமாய் கொட்டும் அதை நெல்லாக படைப்பார்கள்.

ஒவ்வொருவர் தொழிலையும் துலங்க வைக்கும் ஆலயம் இது, நீங்கள் தொழில் ரீதியாக முடங்கிக்கிடந்தால் நஷ்டமும் பெரும் குழப்பமும் எதிர்காலம் தெரியா இருள் நிலையில் இருந்தால் சித்திரை 10 ஆம் தேதி இந்த ஆலயம் வாருங்கள்.

அந்த முருகப்பெருமானின் தனி அழகில் உருகி நின்று உங்கள் கவலை எல்லாம் கொட்டுங்கள்.

அந்த முருகப்பெருமான் திருவடியில் சூரியன் கதிர் விழுவதை கண்டு தொழுங்கள், அக்கணம் முதல் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும், உங்கள் தொழில் முழுக்க லாபமாக செல்வமாக மாறும்.

குமரிமாவட்டம் என்றால் கன்னியாகுமரி திற்பரப்பு நாகர்கோவில் மட்டுமல்ல, இந்த அற்புதமான இரு முருகன் ஆலயங்களும் குமாரகோவில் வேளி மலை, வெள்ளிமலை என உண்டு.

இங்கு வந்து வணங்கிவிட்டு செல்லுங்கள். உங்கள் வாழ்வு பெருமாற்றம் அடையும். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள். குமாரகோவில் வேளிமலை மற்றும் வெள்ளிமலை.

முருகப்பெருமான் ஆலயங்கள். குமாரகோவில் வேளிமலை மற்றும் வெள்ளிமலை.

முருகப்பெருமானுக்கு எத்தனையோ தலங்கள் இருந்தாலும் குமரிமாவட்டத்தில் இருக்கும் இரு முருகப்பெருமான் தலங்கள் முக்கியமானவை.

அவை குமாரகோவிலில் இருக்கும் வேளிமலை அல்லது வள்ளிமலை முருகன், அப்படியே சற்று தள்ளி அமைந்திருக்கும் வெள்ளிமலை முருகன் ஆலயம்.

இவை இரண்டும் நாகர்கோவில் திருவனந்தபுரம் பாதையில் மலையில் அமைந்துள்ளன‌.

இந்தக் குமாரகோவில் என்பது மிக மிக தொன்மையான கோவில். முருகனின் தனித்தன்மை வாய்ந்த ஆலயமென சொல்லப்பட காரணம், வள்ளி இங்குதான் வாழ்ந்தாள் என்பதும், நம்பிராஜன் அங்கேதான் வசித்தான் என்பதுமாகும்.

முருகப்பெருமான் திருத்தணியில் வள்ளியினை திருமணம் செய்தார் எனச் சொல்லப்பட்டாலும், அவள் வளர்ந்த இடமும், முருகன் அவளை சந்தித்து குறவர் இனத்தின் நடுவில் திருமணம் செய்த இடம் இதுதான் என்பது எக்காலமும் உள்ள செய்தி.

அந்த மலை எப்போதும் குறவன் மலை என்றே அழைக்கப்படும். அந்த நீண்ட மலைத்தொடரின் தெற்கு முடிவில்தான் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

இங்கே வள்ளி வாழ்ந்ததால் வள்ளி மலை என்றும், வள்ளியின் காதல் வேள்வி நடந்ததால் வேள்வி மலை என்றும் சொல்லப்பட்டு பின் வேளிமலையாயிற்று என்பார்கள்.

மலையாளத்தில் “வேளி” என்றால் திருமணம், இந்தப் பகுதி மலையாள பூர்வீக‌ பகுதி என்பதால் அது வள்ளிதிருமணத்தை சுட்டிக் காட்டியே “வேளி” மலை என்றாயிற்று.

அங்கே வள்ளியினை மணம்புரிய வந்த‌ குமரனுக்கான கோவில் குமாரன் கோவில் என்றாயிற்று.

குமாரகோவில் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உண்டு. “சேரநாட்டு ஏராகம்” என அது சொல்லு குறிப்பு இந்த மலைதான். மலையாளத்தில் இது குமார ஷேத்திரம், குமார ஸ்தலா என அழைக்கப்படும்.

குமாரகோவில் கலம்பகம், குமார கோவில் பிள்ளைத்தமிழ் என இந்த முருகன் மேல் பாடப்பட்ட பாடல்கள் நிரம்ப உண்டு.

இந்த மலையின் அடிவாரத்தில் கோயிலுக்கு நேர் கீழாக அழகான திருக்குளம் உள்ளது. அதன் கரையில் ஒரு விநாயகர் சந்நிதி. இவரை வணங்கி விட்டு, 38 படிகள் ஏறிச் சென்றால், குன்றின் உச்சியில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது திருக்கோயில். கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம். அதைத் தாண்டிச் சென்றால், இடப் புறம் விநாயகர் காட்சியளிப்பார்.

பிரதான மூர்த்தியான முருகப் பெருமான் சுமார் 8 அடி 8 அங்குல உயரத்தில், அழகிய இரு திருக்கரங்களுடன் கருவறையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இடக் கரம் இயல்பான நிலையில் பாதத்தை நோக்கியிருக்க, வலக் கரம் வரத முத்திரையுடன் திகழ்கிறது. இவர் பெரும்பாலான நாட்களில் சந்தனக் காப்புடன் தரிசனம் தருகிறார்.

எட்டு அங்குலம் எட்டு அடி என்பது வாழ்வின் எட்டு நிலைகள், ஆன்மீகத்தின் எட்டு நிலைகளை சரியாக சொல்வது, வாழ்வின் எல்லாப் பருவத்துக்கான அருளும் எம்பிரான் அருள்வார் என்பதை சிலையிலே சொல்லி வைத்தார்கள்.

மிகவும் பழமையான இக்கோயிலில் மூலவரான முருகப்பெருமான் தென்கிழக்கு பக்கமாக திரும்பி அருள் பாலிக்கின்றார். தென்கிழக்கு என்றால் அக்னி மூலையினை குறிப்பது, ஆத்மம் எனும் சுடரை முருகப்பெருமான் அருளால் பிரகாசிக்க செய்யும் ஆலயம் இது.

அக்னி எனும் சூடுதான் உடலை இயக்கும், எல்லா இயக்கத்துக்கும் காரணம் அக்னி, இந்தத் தலம் அப்படி நல்ல ஆரோக்கியமும் நல்ல சக்தியும் தரும் ஆலயம்.

சுவாமியின் காதுகள் நீண்டு காணப்படும், நம் நீண்ட கோரிக்கையினையும் முருகப்பெருமான் பொறுமையாக கேட்டு அருள் வழங்குவார் எனும் அடையாளம் அவை.

முருகப்பெருமானுக்கு இடப்புறம் சுமார் 6 அடி 2 அங்குல உயரத்தில் வள்ளிதேவி. இங்கு, முருகப் பெருமானின் அருகில் வள்ளிதேவியை மட்டுமே தரிசிக்க முடியும்.

இது வள்ளி திருமணத்தை சொல்லும் ஆலயம் என்பதால் தெய்வயானைக்கு இங்கு சன்னதி இல்லை.

இங்கு எல்லா காட்சிகளும் வள்ளி திருமணத்தை நினைவுபடுத்தியே அமைந்திருக்கும், அங்கு உற்சவர் மணவாள குமாரன், தல விருட்சம் வேங்கைமரம்.

வேங்கை மரத்துக்கு அங்கு தனி சன்னதியே உண்டு.

ஆம். வள்ளியும் முருகப்பெருமானும் தினைவயலில் சந்தித்தபோது வள்ளியைத் தேடி அங்கே குறவர்கள் வர, முருகப் பெருமான் வேங்கை மரமாக மாறினார் என்கிறது புராணம். அதனால் இங்கு வேங்கை மரம் கொண்டாடப்படுகின்றது.

வேங்கை மரத்தை முருகப்பெருமானாகவே பாவித்து வேட்டி கட்டி பூஜை செய்யும் வழிபாடு அங்கு உண்டு.

இந்தக் கோவில் மிக மிக நுணுக்கமான தத்துவத்தை சொல்கின்றது, அந்த மகா முக்கிய காரணத்தை, தனிப் பெருமையினை வேறு எந்த கோவிலும் சொல்லவில்லை.

இந்தக் கோவில் ஒன்றுதான் அதை தெளிவாக அழுத்தமாக சொல்கின்றது. ஆம். தட்சன் ஆட்டுதலையுடன் தனி சன்னதி கொண்டிருக்கும் ஆலயம் இதுதான்.

அதாவது தட்சனின் யாகத்தில் அவன் அகங்காரத்தை வெறுத்து சிவன் செல்லவில்லை. ஆனால், தேவியும் இதர தேவர்களும் சென்றார்கள். சிவனை மீறிச் சென்றார்கள்.

அங்கே தேவி சதியில் வீழ்ந்ததும், பின் தட்சன் சாபத்திற்கு ஆளாகி ஆட்டுதலை பெற்றதும் நடந்தது.

தேவியின் பிரிவால் சிவன் ஆழ்ந்த தவத்துக்கு செல்ல, அந்த சிவனை மீறி தட்சன் யாகத்துக்கு சென்ற தண்டனை பெரும் விதமாக சூரபத்மன் எழுந்து ஆடினான்.

அந்த சூரனின் அட்டகாசம் எல்லை மீறிச் செல்லும் போதுதான் அவனை அழிக்க முருகப்பெருமான் அவதரித்தார். பின், அவதார நோக்கம் முடிந்து கடைசியாக வள்ளி திருமணத்துடன் அவரின் வரலாறு கந்தபுராணத்தில் முடிகின்றது.

அந்த முருகப்பெருமானின் அவதாரத்தின் தொடக்கம் தட்சன் யாகம் எனச் சொல்லி, முடிவு வள்ளி திருமணம் எனக் காட்டி கந்தபுராணத்தையே இந்த ஆலயம் அமைதியாக விளக்குகின்றது. இந்த சிறப்பு வேறு எங்குமில்லை.

இந்த ஆலயத்தின் மகா முக்கிய விசேஷம் “கஞ்சி தர்மம்”.

திருக்குளத்தின் அருகே கஞ்சி தர்மத்துக்கான ‘கஞ்சிப்புரை’ அமைந்துள்ளது. இங்கு வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ‘கஞ்சி தர்மம்’ விசேஷமானது.

இது தீராத நோய் தீர்க்கும் வைபவமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இன்றும் கஞ்சி தர்மம் உண்டு, அந்த கஞ்சி நோயினை அகற்றும்.

அக்காலத்தில் கஞ்சி தர்மம் முடிந்ததும் அந்த இடத்தில் தொழுநோயாளிகள் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள். அதாவது நோயினால் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள், மக்கள் உண்டு முடித்தபின்பு அங்கே அங்க பிரதட்சனம் செய்து புண்ணியத்தை பெறுவார்கள்.

அப்போது தொழுநோய் தீர்ந்த அதிசயமெல்லாம் நடந்த சாட்சி உண்டு.

இப்போதும் நோயாளிகள் தங்கள் நோய் தீர “கஞ்சி தர்மம்” எனக் கஞ்சி பிரசாதமாக செய்து ஊற்றுவதும், அதனால் அவர்க்கும், அதை பருகுவோர்க்கும் நோய் தீர்வதும் நடக்கும் விஷயம் வாடிக்கையானது.

கோயிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகையை ‘வள்ளிக் குகை’ என்பர். முருகப்பெருமான், வள்ளி திருமணம் இந்தப் பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த இடத்தையொட்டி முருகன், வள்ளி திருமண சம்பவத்துடன் தொடர்பு கொண்ட தினைப்புனம், வள்ளிச் சோலை, வட்டச் சோலை, கிழவன் சோலை ஆகிய இடங்கள் உள்ளன.

முருகன் கிழவன் வடிவில் வந்து வள்ளியினை மிரட்டிய சோலை அதுதான், அங்கே விநாயகர் யானை வடிவில் வந்து முருகனின் காதலுக்கு உதவினார்.

இதனால் வள்ளிதேவி நீராடிய சுனை அருகே பாறையில் விநாயகர், வேலவர், வள்ளிதேவி ஆகியோரது புடைப்புச் சிற்பங்கள் உண்டு.

வள்ளிதிருமணம் இங்குதான் நடந்தது என்பதை மிக மிக ஆதாரமாக சொல்லும் விழாவும், அந்த குறமகள் திருமணத்தை சொல்லும் சம்பிரதாயமும் இங்குதான் நடக்கின்றது.

அதுவும் காலம் காலமாக குறவர்கள் இது எங்கள் பாரம்பரியம், எங்கள் குலத்தின் வள்ளியினைத்தான் முருகப்பெருமான் திருமணம் செய்தார் என விடாமல், விட்டுக்கொடுக்காமல் வழிபட்டு கொண்டாடி அந்த பெருமையினை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஆம். வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சாட்சி ஒன்றை இத்தலம் சொல்கின்றது.

பங்குனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில்தான் முருகன் வள்ளி திருமணம் நடந்தது என ஆதாரத்தோடு சொல்லி அதற்கு விழா எடுக்கும் ஒரே ஆலயம் இதுதான்.

பங்குனி அனுஷ வள்ளிதிருமணம் இங்கு மகா விசேஷமானது.

அன்று காலையில் பல்லக்கில் எழுந்தருளும் முருகப்பெருமான், வள்ளி குகை அருகே உள்ள கல்யாண மண்டபத்துக்குச் செல்கிறார்.

பின், மண்டபத்தில் தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெறும். பிற்பகலில் முருகன், வள்ளி தம்பதியை பல்லக்கில் அழைத்து வருகிறார்கள். அதாவது முருகப்பெருமான் வள்ளியினை அழைத்துச் செல்கின்றாராம்.

அப்போது ‘குறவர் படுகளம்” எனும் நிகழ்ச்சி நடக்கும், மலைப்பாதை முழுக்க நடக்கும்.

அதாவது வள்ளியினை முருகப்பெருமான் அழைத்துச் செல்லும்போது அவருக்கும் குறவர்களுக்கும் சண்டை நடந்தது என்பது புராணச் செய்தி.

அந்த சண்டையினை இங்கு நடத்தி காட்டுவார்கள் குறவர்கள், இதனில் குறவர் இன மக்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

முருகப்பெருமானுக்கு எல்லா ஆலயங்களிலும் சூரசம்ஹாரம், சஷ்டி விழா, திருக்கல்யாணம் நடக்கும், ஆடி கிருத்தியை, வைகாசி விசாகமெல்லாம் நடக்கும்.

ஆனால், அவர் “குறவர் படுகளம்’ எனக் குறவர்களோடு மோதும் வைபவம் இங்கு மட்டுமேதான் நடக்கும் ஒன்று.

அன்று இரவு பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்தில் முறைப்படி வள்ளிக்கும் முருகனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன் பின்னர் தேன், தினைமாவு மற்றும் குங்குமம் ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

முருகனுக்கு தேனும் தினைமாவும் வைத்து வணங்கும் ஆலயம் இதுதான்.

இந்த ஆலயம்தான் வள்ளிதிருமணம் நடந்த ஆலயம் என்பதில் எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. அந்த ஆலயத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வழிபாட்டு ஏற்பாடும் அதை தெளிவாகச் சொல்கின்றன‌.

இங்கே வழிபட்டால் வாழ்வின் தடைகளெல்லாம் தீரும், எதற்காக காத்திருக்கின்றோமோ அது நிச்சயம் கிடைக்கும்.

திருமண வாழ்வு சிறக்கும், எல்லா மகிழ்வும் நிறைவும் தேனும் தினைமாவுமாக பெருகும்.

மிக முக்கியமாக எந்த கொடும் நோயும் இங்கு அகலும், நீங்கள் எந்த நோயில் பாதிக்கப்பட்டிருந்தாலும் இங்கே “கஞ்சி தர்மம்” செய்தாலும், பங்கெடுத்தாலும் அந்நோய் அகலும். இது சத்தியம்.

கன்னியாகுமரி பக்கம் செல்லும் போது இந்த குமாரகோவில் முருகனை காணத் தவறாதீர்கள். தேனும் திணைமாவும் வைத்து அவனை வணங்கினால் எல்லா நலமும் அருளும் வரும்.

வள்ளி என்பவள் சுக்கிர கிரஹத்தை குறிக்கும் தெய்வம், அங்கே வணங்கினால் சுக்கிரபகவானின் அருள் எல்லாம் பெருகும், தடைகள் விலகும்.

ஜாதகத்தில் சுக்கிர குறைபாடு உள்ளோர், நிவர்த்தி தேடுவோர் வணங்க வேண்டிய தலங்களில் முக்கியமான ஆலயம் இதுதான்.

லௌகீக வாழ்க்கைக்கான செல்வம், ஆரோக்கியம், தெளிவான சிந்தனை, போராடும் வைராக்கியம், அதில் வெற்றி என எல்லாமும் அருளும் ஆலயம் இது.

அடுத்த ஆலயம் வெள்ளி மலை ஆலயம். இது திங்கள்சந்தை பக்கம் அமைந்துள்ளது.

இந்த மலை காக்கைபொன் எனும் தாது கொட்டி கிடந்த மலை. அவை வெயிலில் வெள்ளிபோல் மின்னுவதால் வெள்ளிமலை என்றாயிற்று என்பார்கள்.

அதே நேரம் வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் அலைமோதும் மலை என்பதால் வெள்ளிமலை என்றாயிற்று என்பதும் ஒரு செய்தி. இது சரியாக இருக்கலாம்

இந்த ஆலயத்தின் வரலாறு அங்கே வாழ்ந்த சித்தர் ஒருவரால் தொடங்கப்பட்டது, அவர் அகத்தியர் வழிவந்த முருகப்பெருமான் அடியார் சித்தர் என்கின்றது வரலாறு.

அவர்தான் அங்கிருக்கும் குகையில் வசித்து வந்தார்; தன்னை தேடிவந்த மக்களுக்கு தெய்வீக சக்தியால் நலம் அருளினார். அவரை நாடி மக்கள் வரும்போது அவர் வழிபட சொன்ன ஆலயம்தான் இந்த முருகன் ஆலயம்.

ஒருநாள் பக்தர்கள் முன்னிலையில் அவர் முருகப்பெருமானை தரிசித்தவாறே மறைந்து போனார், முருகனில் கரைந்தே போனார்.

அவர் உருவாக்கிக் கொடுத்த முருகன் ஆலயம் அவர் விட்டு சென்ற அருள்மழையினை பொழிந்து கொண்டிருக்கின்றது.

இந்த ஆலய தலவிருட்சம் வெப்பாலை மரம்.

இங்கு அந்த சித்தர் செய்த அதிசயங்களில் ஒன்று, மலை உச்சியில் உள்ள வேப்பிலை கசப்பு தன்மை இல்லாமல் கருவேப்பிலையின் சுவையுடன் இருப்பது, இது நோய் தீர்க்கும் மருந்தாக இன்றும் உண்டு.

வெள்ளிமலையின் உச்சியில் கோயில் உண்டு, அது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் மூலையில் சித்தி விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.

இங்குள்ள முருகப்பெருமான் விக்ரஹம் அவ்வளவு அழகானது உருக்கமானது.

அதைபோன்றதொரு மிக அழகிய உருவத்தை, காண்போர் மனம் அப்படியே கரைந்து அழவைக்கும் உருவத்தை, மனதை கரைத்து தன்னிலே ஈர்க்கும் முருகப்பெருமான் உருவத்தை வேறு எங்கும் காணுதல் அரிது அல்லது இல்லை.

மிக மிக அழகான முருகப்பெருமான் திருவுருவம் அந்த ஆலயத்தில்தான் அமைந்துள்ளது, அவ்வளவு வசீகரம்.

காண்போரை அப்படியே ஆட்கொள்ளும் இந்த முருகப்பெருமான் சிலைக்கு ஈடாக இன்னொரு சிலை எங்கும் இல்லை, அவ்வளவு அழகானது.

இத்தலத்தில் என்ன வேண்டுதலை யார் செய்தாலும் தடைகள் நீங்கி மகிழ்ச்சியை அடைவர். நோய்வாய்பட்டவர்கள் சில நாட்கள் இங்கு தங்கினால் அதிக நிவாரணம் கிடைக்கும். இந்த மலைக் கோயிலுக்குப் புனித தரிசனம் செய்வதன் மூலம் மனஉளைச்சல் மற்றும் கவலைகள் குறையும்.

எல்லா வெள்ளிக்கிழமையும் இங்கு முக்கியம். அதில் கடைசி வெள்ளிக்கிழமை இங்கு சிறப்பானது.

கர்ப்பிணிப் பெண்கள் இந்தக் கோயிலில் வணங்கினால் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்பதால் கர்ப்பிணிகள் அதிகம் வந்து வணங்கும் ஆலயம் இது.

அமாவாசை, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் இங்குள்ள தீர்த்தக்கிணறில் நீராடி சஷ்டி கவசத்தைத் தவறாது ஓதிவந்தால் பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கும் பிள்ளைகள் கிடைக்கும், கடன் தொல்லை இருப்பவர்கள் அதில் இருந்து விடுபடுவர்.

இந்தக் கோவிலின் பெரும் சிறப்பானது, சித்திரை மாதம் 10 ஆம் தேதி முருகப்பெருமான் காலடியில் விழும் சூரிய ஒளி.

வருடாவருடம் அந்த சித்திரை பத்தாம் தேதி அந்த ஒளி விழும், ஏன் சித்திரை பத்தாம் தேதியினை தேர்ந்தெடுத்தார்கள்.

தெற்கே விவசாய பூமியில் ஒரு வானிலை கணக்கு உண்டு “சித்திரை பத்து சிறந்த பெரும்காற்று” என்பார்கள்.

அதாவது சித்திரை பத்தாம் தேதி காற்று வீசும் அளவு, அன்று வானில் வரும் அடையாளம், காற்றின் ஈரபதம் அது சுழன்றடிக்கும் முறை எல்லாம் கண்டு அந்த ஆண்டின் மழை அளவை கணிப்பார்கள்.

இது அன்று இயல்பாக நடந்த ஒன்று.

சித்திரை 10 அவ்வளவு முக்கியமான நாள். பருவகாலத்தின் தொடக்கத்தை கணிக்கும் நாள். அந்த ஆண்டில் விவசாயத்தை முருகப்பெருமான் காலடியில் இருந்தே தொடங்குகின்றோம், கால நேரம் என எல்லாவற்றுக்கும் அதிபதியான அப்பெருமான் நல்ல மழையினை நல்ல விளைச்சலை தரட்டும் என வேண்டி கொள்வார்கள்.

இதனாலே அந்த ஆலயத்தில் முற்றிலும் நெற்கதிர்களால் உருவாக்கப்பட்ட, அலங்காரப் பொருள் போன்ற விசிறியை மேல் கூரையில் வைத்திருப்பார்கள், அங்கு செல்வோர் காணலாம்.

பக்தர்கள் தங்கள் முதல் அறுவடையில் விளைந்த கதிரை முருகப் பெருமானுக்குப் படைப் பதற்காகக் கொண்டுவந்து இங்கு கொடுப்பார்கள், அவை விசிறி போல் முருகப்பெருமானுக்கு தலைக்கு மேல் சாட்சியாக சாற்றப்படும்.

அதாவது நல்ல விளைச்சல் கொடுத்ததற்காக நன்றி என சமர்பிப்பார்கள், இப்போதும் அது உண்டு. எப்போதும் உண்டு.

இந்த ஆலயம் நோய் தீர்க்கும், குழந்தை வரம் அருளும், மகா முக்கியமாக தொழில் வளம் அருளும், இங்கு வணங்கிவிட்டுத்தான் விதைப்பார்கள், அவை பெரும் தனமாய் கொட்டும் அதை நெல்லாக படைப்பார்கள்.

ஒவ்வொருவர் தொழிலையும் துலங்க வைக்கும் ஆலயம் இது, நீங்கள் தொழில் ரீதியாக முடங்கிக்கிடந்தால் நஷ்டமும் பெரும் குழப்பமும் எதிர்காலம் தெரியா இருள் நிலையில் இருந்தால் சித்திரை 10 ஆம் தேதி இந்த ஆலயம் வாருங்கள்.

அந்த முருகப்பெருமானின் தனி அழகில் உருகி நின்று உங்கள் கவலை எல்லாம் கொட்டுங்கள்.

அந்த முருகப்பெருமான் திருவடியில் சூரியன் கதிர் விழுவதை கண்டு தொழுங்கள், அக்கணம் முதல் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும், உங்கள் தொழில் முழுக்க லாபமாக செல்வமாக மாறும்.

குமரிமாவட்டம் என்றால் கன்னியாகுமரி திற்பரப்பு நாகர்கோவில் மட்டுமல்ல, இந்த அற்புதமான இரு முருகன் ஆலயங்களும் குமாரகோவில் வேளி மலை, வெள்ளிமலை என உண்டு.

இங்கு வந்து வணங்கிவிட்டு செல்லுங்கள். உங்கள் வாழ்வு பெருமாற்றம் அடையும். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள். திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி மற்றும் பாதாள செம்பு முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள்.
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி மற்றும் பாதாள செம்பு முருகன் ஆலயம்.

பொதுவாக முருகப்பெருமான் ஆலயங்கள் மலைமேல் அமைந்திருக்கும். ஆனால், வெகு அபூர்வமாக சில ஆலயங்கள் தரைமட்டத்துக்கு கீழ் அமைந்திருக்கும். கடற்கரையில் திருசெந்தூர் ஆலயம் அப்படியானது. அப்படி இரு ஆலயங்களை இன்று காணலாம்.

இரண்டுமே திண்டுக்கல் பகுதியில் அமைந்துள்ளது. முதலாவது, ஆலயம் திருமலைக்கேணி, இது அடர்ந்த வனத்தின் இடையில் அமைந்துள்ளது.

இந்தத் தலத்தின் வரலாறு ஒரு பாண்டிய மன்னன் காலத்தில் தொடங்குகின்றது. அவன் மிகச்சிறந்த முருகபக்தனாய் இருந்தான். முருகப்பெருமானுக்கு கோவில் எழுப்பவேண்டும் என்பது அவன் விருப்பங்களில் ஒன்று.

அப்படியான மனவிருப்பத்துடன் சுற்றிக்கொண்டிருந்தவன் ஒருமுறை இப்பக்கம் வரும்போது தாகத்தால் வறண்டான். அந்தக் கொடும்தாகம் தணிக்க இந்த சுனையில் நீர் பருக வந்தான்; தாகம் தீர்ந்தவன் கடும் களைப்பால் அங்கேயே உறங்கியும் விட்டான்.

அவன் கனவில் வந்த முருகப்பெருமான், “பாண்டியா,, எமக்கு நீ விரும்பிய கோவிலை கட்ட இதுதான் சரியான இடம்” எனச் சொல்லி மறைந்தார்.

அதன் பின் பாண்டிய மன்னன் பெரும் மகிழ்ச்சியுடன் அங்கே கோவில் எழுப்பினான். தனக்கு பிடித்த முருகனை அங்கே பெரும் பூஜையுடன் நிறுத்தினான்.

அக்கோவில் அன்றில் இருந்து பெரும் பெயருடன் கொண்டாடப்பட்டு வந்தது.

ஆனால், காலப்போக்கில் அது இந்து அரசுகள் வீழ்ந்ததால் பொலிவு இழந்தது. திப்புசுல்தானின் அட்டகாசம் திண்டுக்கல் வரை நீண்ட நிலையில் இம்மாதிரியான ஆலயங்கள் பல சிதிலம் அடைந்தன‌.

அப்படி இந்த ஆலயமும் சிக்கிக்கிடந்தது, இதனை திரும்ப மீட்டெடுத்தவர் திருமுருக கிருபானந்தவாரியார்.

அவர் 1979 ல் இந்த ஆலயத்தை மீள புனரமைத்தார். அப்போது புதிய முருகன் சிலை ஒன்று அவரால் செய்யப்பட்டது, அவர் அதை பழைய முருகன் சிலைக்கு பதிலாக ஸ்தாபிக்கும் போதுதான் முருகப்பெருமானின் சித்தம் புரிந்தது.

அந்தப் பாண்டிய மன்னன் ஸ்தாபித்த சிலையினை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை, எவ்வளவோ முயன்றும் சிலை அசையவில்லை.

இதனால் கிருபானந்தவாரியார் சிந்தித்தார். இதுதான் முருகப்பெருமானின் விருப்பம் என உணர்ந்து அந்த சிலைமேல் சன்னதி கட்டி பழைய சிலைக்கு மேல்மாடத்தில் புதிய சிலையினை ஸ்தாபித்துவிட்டார்.

இரு அடுக்கு சன்னதியாக அது அப்படியே நிலைத்துவிட்டது.

அந்த முருகன் எப்போதும் ராஜ அலங்காரத்தில் காட்சியளிப்பது இந்த ஆலய முருகனின் சிறப்பு. இந்த ஆலயத்தில் வணங்கினால் செல்வாக்கு வரும்; சொல்வாக்கு வரும்; பணி உயர்வு வரும்; அரச வாழ்வு வரும்.

எந்த நிலையில் நீங்கள் அந்த முருகனை பணிகின்றீர்களோ, மறுமுறை நீங்கள் அங்கு செல்லும் போது உங்கள் நிலை அதைவிட மிக மிக உயர்ந்திருக்கும்.

வாழ்வில் பெரும் உயர்வை தரும் ஆலயம் இது.

எல்லா முருகன் கோவிலும் பெரும்பாலும் ஒரு சித்தரை கொண்டிருக்கும், அப்படி இங்கு ஜீவசமாதி அடைந்தவர் மௌனகுரு சித்தர்.

அவரின் ஜீவசமாதி இங்குதான் அமைந்துள்ளது, அந்த சமாதி முன் மண்டியிட்டு மனமுருகி கேட்டால் கிடைக்காத வரமில்லை.

திண்டுக்கல் பக்கம் செல்லும்போது இந்த ராஜ அலங்கார முருகனை சந்திக்க மறவாதீர்கள். முருகப்பெருமான் தானே தேடி வந்து அமர்ந்த தலம் அது.

இந்தக் காலகட்டத்தில் நாம் கண்கண்ட முருகபக்தராக அவன் அருள் பெற்றவராக இருந்த‌ திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மூலம், தான் இந்த ஆலயத்தில் உண்டு எனக் காட்டிய ஆலயம் இது.

அசைக்கமுடியா அந்தப் பழைய சிலை போலவே அங்கு முருகப்பெருமானின் அருள் எக்காலமும் பலமாய் உறுதியாய் உண்டு.

இந்த ஆலயம் கீழ் இறங்கி செல்லும்படி அமைந்துள்ளதால் “கீழ் பழனி” என அழைக்கப்படுகின்றது, பழனியில் வழிபட்டால் என்னென்ன அருள் கிடைக்குமோ அதெல்லாம் இங்கும் கிடைக்கும்.

மலையில் ஒரு கிணறு போல் இந்த ஆலயம் அமைந்துள்ளதால் இது மலைக்கேணி என்றாகி பின் திருமலைக்கேணி என்றாயிற்று. இத்திருக்கோயிலில் உள்ள நீர் ஒரு இடத்தில் சாதாரணமான நீராகவும், இன்னொரு இடத்தில் வெந்நீராகவும், மற்றொரு இடத்தில் குளிர்ந்த நீராகவும் இருப்பது சிறப்பு.

இந்த ஆலயத்தில் சந்தனக்காப்பு மகா விசேஷம், வேண்டுதல் நிறைவேறியோர் அதை செய்துதான் நன்றி தெரிவிப்பார்கள்.

அப்பக்கம் செல்லும் போது இந்தத் திருமலைக்கேணி “கீழ் பழனி” முருகனை காணத் தவறாதீர்கள். அவனைத் தரிசித்தால் எல்லா பாக்கியமும் வீடுவந்து சேரும்; வாழ்வு வளமாகும்.

அடுத்த ஆலயம் அதே திண்டுக்கல் அருகே இராமலிங்கம்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது, இதன் பெயர் “பாதாள செம்பு முருகன் ஆலயம்”

இது பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் ஒரு குகைபோன்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் வரலாறு அதிசயமானது.

அகத்தியரின் சீடரும், பழனி நவபாஷாண முருகன் சிலையினை வடித்தவரும், இன்னும் 18 சித்தர்களில் முக்கியமானவரும், பெரும் பெரும் அதிசயங்களை செய்தவருமான போகர் பற்றி எல்லோரும் அறிந்திருப்போம்.

சித்தர்கள் மறுஜென்மாவில் வருபவர்கள்; மறுபடி மறுபடி பிறந்து அந்தந்த காலகட்டத்துக்குரிய பணிகளை செய்பவர்கள் அல்லது உரிய நபர்களை ஆட்கொண்டு தங்கள் பணியினை தொடர்பவர்கள்.

அப்படி போகரின் மறுபிறப்பாக கருதப்படுபவர் திருக்கோவிலூர் சித்தர்.

இவர் சுமார் 600 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர்; பெரும் சித்துக்களை செய்தவர்; மகா அற்புதமான காரியங்களை மின்னல்வெட்டும் நேரத்தில் செய்துகாட்டிய மகா சித்தர்.

இவர் இந்த பாதாள இடத்தில் செப்பினால் செய்த முருகனை சுமார் 1.5 அடி உயரத்தில் செய்து வழிபட்டார், ஒருவித காவல் தெய்வமாக அவரை ஸ்தாபித்தார்.

போர்கோல முருகன் சாயலை அந்த வழிபாடு கொண்டிருந்தது. அந்த தலம் பெரும் போர் அல்லது பெரும் சவால்கள் ஆபத்துக்களை எதிர்கொள்வோர் வணங்கி தைரியம் பெரும் தலம் இது.

அப்படி இருந்த இந்த ஆலயம் பின்னாளில் சிதிலமடைந்தது. பின்னாளில் இராமநாதபுர மன்னரான பாஸ்கர சேதுபதியின் வம்சமான சுத்தமாறன் என்பவர் அந்தப் பூஜைகளை தொடர்ந்தார்.

இது காவலை வழங்கும் கோவில், சூட்சும சக்திகள் தொல்லை முதல் எல்லா எதிரிகளின் தொல்லையினையும் ஒழித்து காவல் தரும் பெரும் ஆலயம்.

அதனால் முகப்பிலே 12 அடி உயர சங்கிலி கருப்பு சிலை உண்டு. முருகன் கோயிலில் சங்கிலி கருப்பு சிலை இருப்பது இங்கு மட்டும் தான்.

மேலும் கோயிலின் முன்பு ஜலகண்டேஸ்வரர் சிலையும் உள்ளது. அதை தொடர்ந்து கால பைரவர் சிலையும் உண்டு.

அதைத் தாண்டித்தான் 16 அடி ஆழத்தில் முருகனை 18 படி கொண்ட குகையில் இறங்கி, 8 அடிக்கு 8 அடியிலான கருவறையில் செம்பு உலோகத்தலான பாதாள செம்பு முருகனை தரிசிக்கலாம்.

ஆம். மற்ற கோவில்களில் ஏறி சென்று தரிசித்துவிட்டு இறங்கி வரவேண்டும், இங்கு இறங்கி தரிசித்துவிட்டு மீண்டும் மேலேறி வரவேண்டும்.

ஆம். முருகனை சந்தித்துச் சென்றால் வாழ்வின் படிநிலை தாழகிடந்து உயரும். முருகப்பெருமான் படியேற்றி வைப்பார் எனும் தத்துவம் இது.

எதிரிகளை, போராட்டங்களை, வம்பு வழக்குகளை முடித்து வைத்து பெரும் ஏற்றம் தரும் ஆலயம் இது.

இந்தக் கோயிலுக்கு 9 வாரங்கள் தொடர்ந்து சென்றால் நினைத்த காரியம் கைக்கூடும்.

இந்த ஆலயத்தில் வழிபட்டு, அதனால் எதிரிகள் தொல்லை ஒழிந்து வாழ்வில் மேன்மை அடைந்தோர் எல்லாத் துறைகளிலும் நிரம்ப உண்டு. அரசியல் உள்பட‌.

இக்கோவிலில் கருங்காலி மாலைகள் பிரசித்தியானது‌. முருகன் பாதத்தில் வைக்கப்பட்ட பின் கொடுக்கப்படும் அந்த கருங்காலி மாலைகள் சக்திவாய்ந்தவை.

கருங்காலி மரம் நல்ல அதிர்வுகளை கொடுப்பது; சூட்சும சக்திகளை கட்டுப்படுத்துவது; நல்ல வரம் அருள்வது‌.

அது முருகப்பெருமான் காலடியில் அதுவும் சித்தரால் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்த முருகப்பெருமானின் காலடியில் சக்திமிக்கதாகின்றது.

இதனால் அது எளிதாக அற்புதங்களை நிகழ்த்துகின்றது, அதை அணிவதால் எல்லா நன்மையும் சூழ்கின்றன‌.

ராகு கேது சிக்கல்கள், செவ்வாய் தோஷம் என எல்லாவற்றுக்கும் இத்தலம் நிரம்ப பரிகாரம் தரும்.

இந்த இரு ஆலயங்களுமே திண்டுக்கல் அருகே அமைந்துள்ளன. வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருந்து உங்களை படியேற்றி வைக்கும் ஆலயங்கள் இவை.

ஆன்மீக தத்துவத்தில் மனக்குகையில் வாழும் அந்தக் குகன், இங்கு வழிபட்டால் அடியாழத்தில் இருந்து எழும் உன்னத அருளால் உங்களை ஆட்கொண்டு நடத்துவான் என்பதன் தத்துவம் இது.

திண்டுக்கல் பக்கம்செல்லும் போது இந்த இரு முருகப்பெருமான் ஆலயங்களையும் காணத் தவறாதீர்கள்.

திருமலைக்கேணி ஆலயம் உங்களுக்கு எல்லா ஐஸ்வரயங்களையும் ஊற்றெடுக்க வைத்து ராஜவாழ்வு தரும். அந்த ராஜ அலங்கார முருகன் எல்லா சௌபாக்கியங்களையும் அருள்வார்.

இந்தப் பாதாள செம்பு முருகன் ஆலயம் எதிரிகளை எல்லாம் ஒழித்துக்கட்டி, போராட்டம் எல்லாம் வெற்றிபெற செய்து நலமெல்லாம் அருளும். நிம்மதியும் காவலும் அருளும்.

சூட்சும சக்தி தொல்லை, செய்வினை தொல்லை, பேய் பிசாசுகள், வம்பு வழக்குகள், நாள்பட்ட போராட்டம் என எல்லாமும் தீர்த்து தரும் ஆலயம் இது.

அந்த முருகனை பணியுங்கள். கருங்காலி மாலைகளை பக்தியோடு பெற்றுக் கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் எல்லா போராட்டமும் மனத்தாலும் செயலாலும் முடிந்தே போகும். ஆட்டிவைத்த பிரச்சினைகளெல்லாம் அடங்கிப்போகும். எல்லா வகையிலும் நிம்மதி ஒன்றே உங்களை சூழும். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குண்டுக்கரை மற்றும் தேனிமலை முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குண்டுக்கரை மற்றும் தேனிமலை முருகன் ஆலயம்.

இராமநாதபுரம் அருகே குண்டுக்கரையில் அமைந்துள்ளது அந்தப் பிரசித்தியான முருகப்பெருமான் ஆலயம். இது தனித்துவமான சிறப்புக்களை கொண்டிருக்கின்றது.

இந்த ஆலயம் பழமையானது. எவ்வளவு பழமையானது என்றால் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யுமுன் தன் விஸ்வரூபம் காட்டி தான் யாரென சொன்ன தலம் இதுதான்.

அங்கே அவர் 11 முகங்களும், 22 கைகளும் கொண்டவராக நின்றார். அந்த காட்சியின் அடிப்படையில் இப்போதும் 11 முகமும் 22 கைகளும் கொண்ட முருகன் சிலை நிற்கின்றது.

முருகப்பெருமானுக்கு ஆறு முகமும் 12 கரங்களும் இருப்பது எல்லோரும் அறிந்தது, இங்கே 11 முகம் அதாவது கூடுதலாக 5 முகம் இருக்கிறது என்றால் அதுதான் இந்தத் தலத்தின் தாத்பரியம்.

ஆம். சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என ஐந்து. இது ஐந்து தொழிலை குறிப்பது.

முருகப்பெருமான் சிவ வடிவம், முருகனும் சிவனும் வேறல்ல. முருகப்பெருமானின் சக்தியில் சிவனும் முழுக்க உண்டு என்பதை சொல்வதே இந்த பதினோரு முக தத்துவம்.

அப்படியே சிவனுக்குரிய 10 கைகளும் இணைந்து 22 கரங்களாயிற்று.

11 முகம் கொண்ட முருகப்பெருமான், சிவனின் பலத்தைதன்னோடு வாங்கிய முருகப்பெருமான் இங்கே தன்னை வெளிப்படுத்தி அசுரர்களை அழித்துப் போட்டான் என்பது இத்தலத்தின் தாத்பரியம்.

அதாவது சிவனும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள் வழங்கும் ஆலயமிது.

இத்தலம் “சுவாமிநாத சுவாமி” என ஏன் அழைக்கப்படுகின்றது என்றால் காரணம் உருக்கமானது.

சுமார் 300 வருடத்துக்கு முன் புதுகோட்டை அரசவம்சத்தில் ஒருவரான பாஸ்கர சேதுபதி என்பவர் பெரும் முருக பக்தராக விளங்கினார். அனுதினமும் இந்தக் குண்டுக்கரை முருகனை வணங்கினார். எல்லா தலத்தின் முருகனையும் அவர் வணங்கினாலும் சுவாமிமலை முருகன் மேல் தனிபற்று கொண்டிருந்தார்.

அதன்படி அவர் அடிக்கடி சுவாமிமலை சென்று தரிசித்து வருவது வழக்கமான ஒன்று. நாட்டில் மக்கள் பல குறைகளில் இருப்பதையும், பல பிணிகள் வறுமைகளெல்லாம் தன் நாட்டில் இருப்பது பற்றியும் அவர் மனவருத்தம் கொண்டிருந்தார்.

அப்படி அவர் ஒருமுறை தரிசித்து வந்து கண்ணயர்ந்த போது அவர் கனவில் வந்த முருகப்பெருமான் “சேதுபதியே, நீ தினமும் செல்லும் குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் விக்கிரகத்தை எடுத்துவிட்டு, புதிதாக ஒரு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபடு. அப்படிச் செய்தால் உனக்கும், உனது மக்களுக்கும் பல நன்மைகள் ஏற்படும். எனது பழைய உருவம் போன்றே புதிய விக்கிரகத்தை அமைக்கவும்” எனச் சொல்லி மறைந்தார்.

முருகப்பெருமானின் கட்டளைக்கு ஏற்ப அந்த பாஸ்கர சேதுபதி அமைத்ததுதான் இப்போதிருக்கும் விக்ரஹம்.

அந்த சுவாமிமலை முருகனே வந்து தனக்கு இங்கு சிலையினை புதுபிக்க சொன்னதால் மன்னர் இந்த முருகனுக்கும் “சுவாமிநாத சுவாமி” எனப் பெயரிட்டார். அது நிலைத்தே விட்டது.

சுவாமி மலை ஞானம் வழங்கும் ஆலயம்; அங்கேதான் தந்தைக்கு மகன் சுவாமியாய் நின்று போதித்த காட்சி உண்டு; முருகப்பெருமான் மன்னருக்கு சொன்னபடி அந்த ஞானமூர்த்தியாகவே இங்கும் எழுந்தருளியிருக்கின்றார்.

அதனால் மற்ற ஆலயங்களில் சிவன் மடியில் முருகன் அமர்ந்து தந்தைக்கு போதிக்கும் காட்சிக்கு மாற்றாக இத்தலத்தில் முருகப் பெருமான் ஒரு குன்றின் மேல் அமர்ந்து தனது தந்தை சிவபெருமானுக்கு பிரணவப் பொருளுக்கு விளக்கம் அளிக்க, அதை சிவபெருமான் கீழே தாழ‌ நின்று கேட்கும் நிலையில் நிற்பதை காணலாம்.

ஆம். ஞானம் வழங்கும் ஆலயம் இது.

ஆலயத்தின் உள்ளே முதலில் நந்திதேவருக்கு அருகில் வேல், மயில், பாம்புடன் கூடிய கொடிமரம் அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் ஸ்ரீஜெய துர்கா தேவி அம்மன், தட்சிணாமூர்த்தி சுவாமி, விநாயகர், பால முருகன், நவக்கிரகங்கள், அருணகிரிநாதர், வீரபாகு உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.

கோயிலுக்குள் 18 கரங்களுடன் கூடிய 7 அடி உயர துர்கை அம்மன் அருள்பாலிக்கிறார்.

இங்கு வள்ளி, தெய்வானை சன்னதியும் உண்டு.

முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை என்பது வெறும் கணவன் மனைவியர் காட்சி அல்ல, அது ஒரு ஞான தத்துவம்.

இம்மூன்று வடிவமும் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்பதை சொல்பவை.

வள்ளி என்பவர் இச்சா சக்தியின் வடிவம், செயலை செய்ய தூண்டும் ஆற்றலை அருளும் சக்தி அவர். இதனாலே முருகப்பெருமானின் வலது புறத்தில் இருக்கும் வள்ளி தன் வலது கையில் தாமரை மலரை ஏந்தியிருப்பாள்.

இந்த மலர், முருகனின் கண்ணில் இருந்து வரும் சூரிய காந்தத்தால் எப்போதும் மலர்ந்திருக்கும். அதாவது ஒரு காரியம் அல்லது கர்மா செய்ய அடிப்படை ஆசை அல்லது விருப்பம் அவளால் இடைவிடாமல் அருளப்படும் என்பது தாத்பரியம்.

முருகப்பெருமானின் கிரியா சக்தியாக இருப்பவள் தெய்வயானை. கிரியா என்றால் உருவாக்கும் திறன் என்பது பொருள், தெய்வானை என்பவள் ஒரு செயலை செய்யவைக்கும் ஆற்றலை செயலுக்கான சக்தியினை தருபவள்.

தெய்வானை தன் கையில் கருங்குவளை மலரை ஏந்தியிருப்பாள். இந்த மலர் முருகப் பெருமானின் இடது கண்ணில் இருந்து வரும் சந்திர ஒளி பட்டு எப்போதும் மலர்ந்திருக்கும்.

இவர்கள் நடுவில் ஞான சக்தியாக தன் கையில் வேல் ஏந்தி நிற்பார் முருகப்பெருமான்.

ஆக, முருகப்பெருமான் சிவனின் வடிவம், சிவன் என்றால் தன்னில் பாதியினை கொண்ட சிவ‌சக்தியின் வடிவம்.

முருகப்பெருமானின் இடது கண் சக்திதேவியின் கண் என்றாகின்றது, வலதுகண் சிவனின் கண்ணாகின்றது.

இந்த இடது கண் என்பது இயக்கும் சக்தியின் வடிவம் அதை தருபவள் தெய்வானை, வலது கண் என்பது அடிப்படை தூண்டலை அடிப்படை சக்தியினை தருவது இதை தருபவள் வள்ளி.

இடையில் முருகப்பெருமான் ஞானவேல் ஏந்திய கோலத்தில் நிற்பது, ஒரு செயலை ஞானமாக சிந்தித்து ஞானமாக செய்யவைக்கும் அருளை முருகப்பெருமான் தருவார் என்பது.

சுவாமி மலை தத்துவம் அதுதான். அங்கே வழிபட்டால் ஒரு காரியம் நன்றாய் அறிவாய் தொடங்கி ஞானமாய் முடியும்.

அந்த வரத்தை இங்கும் இந்த குண்டுகரை தலத்திலும் முருகப்பெருமான் தருகின்றார்.

இங்கு வைகாசி விசாகம், சூரசம்ஹார விழா, கார்த்திகைத் திருவிழா, தைப்பூச விழா, பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹார விழா இத்தலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது விசேஷம். திருகல்யாணம் இன்னும் விசேஷம்.

இங்கே சித்திரை வருடப் பிறப்பு தினத்தில் துர்கை அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

தைப்பொங்கல் தினத்தில் காய்கறி மற்றும் பழங்களால் ஆன சாகம்பரி அலங்காரத்தில் அம்பிகை காட்சி அருள்வதைக் காண எண்ணற்ற பக்தர்கள் குவிவது வழக்கம்.

இத்தல முருகப்பெருமானை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம், மனக்கிலேசம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் மனக்கிலேசம் நீங்கும், கலங்கிய சிந்தை உள்ளவர்கள் தெளிவார்கள்.

இந்த முருகனை பக்தர்கள் நிரம்ப வேண்டுவதும், வேண்டியன கிடைத்தபின் முருகனுக்கு பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், முடி இறக்குதல் உள்ளிட்டவற்றையும் செய்வது வழமை.

இந்தத் தலம் ஞானம் அருளும் தலம், மாபெரும் நல்ல சிந்தனைகளை நல்ல கர்மங்களை செய்யவைக்கும் தலம்.

இத்தலத்தில் பாம்பன் சுவாமிகள் உள்ளிட்ட பலர் வழிபட்டிருக்கின்றனர். இந்தத் தலம் எவ்வளவு சக்திவாய்ந்தது என்றால் அந்த பாஸ்கர சேதுபதியே சாட்சி.

அந்த பாஸ்கர சேதுபதி வம்சத்தில் வந்த இராமநாதபுர மன்னர்தான் பின் சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவுக்கு இந்துமதம் பரப்ப அனுப்பி இந்துக்கள் வரலாற்றில் அழியா இடம் தேடிக் கொண்டார்.

இப்படியான சிலிர்ப்பான வரலாறுகளை கொண்டது அந்த குண்டுக்கரை ஆலயம்.

இராமநாதபுரம் பக்கம் செல்லும்போது இந்தக் குண்டுகரை ஆலயத்தை தரிசிக்கத் தவறாதீர்கள். அந்த ஆலயம் பெரும் ஞானத்தை உங்களுக்குத் தரும். நல்ல அறிவை தெளிவினை எல்லா காலத்திலும் தரும்.

கிரியா சக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி என மூன்றும் அங்கே அருளப்படும், அந்த பெரும் அருளில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். இது சத்தியம்.

அடுத்த ஆலயம் தேன்மலை ஆலயம், இது புதுகோட்டை மாவட்டம் பொன் அமராவதி அருகே அமைந்துள்ளது.

இந்துஸ்தானின் பல மலைகள் சூட்சுமமானவை; கடற்கரைகளின் பல இடங்கள் மகா சக்தி நிரம்பியவை; இவை பிரபஞ்ச அருள் பெற்று நிலைத்திருப்பவை; ஏதோ ஒரு பெரும் தெய்வத்தின் அல்லது பிரபஞ்சத்தின் சூட்சுமத்தை அள்ளிக் கொடுப்பவை.

கயிலாய மலை, வேங்கட மலை, சதுரகிரி மலை, திருவண்ணாமலை என ஏகப்பட்ட மலைகள், குன்றுகள் அப்படி உண்டு. அவை வெறும் கல் அல்ல; வெறும் பாறை அல்ல; புரிந்துகொள்ள முடியா வகையில் பிரபஞ்ச பெரும் சக்தி, ஒரு தனி அருளை அள்ளி அள்ளிக் கொடுக்கும் குவியல்கள் அவை.

அப்படியான மலைகளில், புண்ணியமானதும் சக்திமிக்கதுமான குன்றுகளில் ஒன்று அந்தத் தேனிமலை.

இந்தத் தேனிமலைப் பாறைகள் பவள நிறத்தில் காட்சி தருகின்றன. செந்நிறம் என்பது செவ்வாயின் அதிபதியான முருகப்பெருமானுக்கு உவப்பானது. அவ்வகையில் இந்தக் குன்றுகள் இயற்கையாகவே அவன் அருளை பெற்று நிற்கின்றன‌.

செந்நிற தேரிகாட்டுக்கு அருகில் திருச்செந்தூரில் தனி சக்தியோடு நிற்கும் அந்தக் கந்தவேள் இந்த தேனிமலையின் பவள நிற குன்றுகளிலும் தனி சக்தி கொண்டு ஆட்சி செய்கின்றான்.

அந்தத் தேனிமலையில் பல பாறைகள் உண்டு. கொப்புப் பாறை, குடகுப் பாறை, சிரிகிரிப் பாறை, அருணோதயப் பாறை, தேவச் சந்திரப் பாறை என ஐந்துண்டு.

இவை பிரபஞ்ச சக்தியும், அற்புதமான மூலிகை சக்திகளும் கொண்ட பாறைகள். இந்த பாறைகளின் விசேஷ சக்தி பற்றி பாடலே உண்டு, அத்தலம் பற்றிய பாடல் சொல்கின்றது.

“பச்சிலை சாறு பதியும் பாறை தேவ
எச்சிலில் தீரும் சதிகால் நோய்கள்
உச்சிலைப் பேறு விதியும் மாறும்
அச்சிலைதானே ஆறுமுகத் தேனீ!!”

என்ற பாடல் மூலமாக தேனிமலை முருகப் பெருமானின் சிறப்பினையும், இங்குள்ள பாறைகளின் சிறப்பினையும் அறிய முடிகிறது.

இந்த மலையின் இயற்கையான வரமும் விசேஷ தாதுக்களும் அந்த அற்புதமான மூலிகையும் இயல்பாகவே மருத்துவ தன்மை கொண்டவையாக காணப்படுகின்றன. அந்தச் சுனையில் இருந்து வரும் நீருக்கு பிருகு நீர் எனப் பெயர் உண்டு.

இந்தப் பிருகு நீர் பல மருத்துவ குணங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

இந்தப் பாறையில் ஓடும் நீரானது மூலிகை, தண்ணீர், மணல், காற்று, அக்னி என எல்லாவற்றையும் கலந்த தண்ணீராக இது ஓடி வருவதாலும், அந்த சக்திவாய்ந்த பாறைகளின் கதிர்வீச்சு மற்றும் சிறப்பு சக்திகளாலும் நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த மலையில் பூசநாங்கண்ணி என்றொரு மூலிகை உள்ளது. இந்த மூலிகைச் செடியில் பட்டுத் தெறிக்கும் ஒரு துளி தண்ணீரில் கூட மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த மூலிகை கலந்த நீர் அற்புதமான நிவாரணி.

இங்குள்ள பாறை சூரியன், சந்திரன் போன்ற கிரகங்களில் இருந்து வரும் ஒளிக் கதிர்களை பூமியில் வாழும் ஜீவராசிகளுக்கு நல்ல கதிர்வீச்சாக மாற்றும் சக்தி படைத்தவை, சூரிய சந்திர கதிர்கள் என்றல்ல கிரகங்களின் கதிர்வீச்சையும் நன்மை பயக்கும் விதமாக மாற்றும் சக்தி கொண்டவை.

அதாவது சாளகிராம கற்களின் தன்மையினை தன்னில் கொண்டிருப்பவை. இங்கிருக்கும் பாறையில் மலரும் ஒரு விதமான மூலிகையைக் கொண்டு கண் நோய்களை குணப்படுத்த முடியும் .

திருவண்ணாமலையை போலவே இந்த மலையையும் பலர் சுற்றிவந்து நல்ல பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாத கார்த்திகை தினம், விசாகம், பரணி, அஸ்வினி போன்ற தினங்களிலும், பௌர்ணமி, செவ்வாய்க்கிழமை, தினமும் வருகின்ற செவ்வாய் ஹோரை நேரங்கள் என கிரிவலம் வருவதற்கான நேரங்களில், நாட்களில் சுற்றிவர அளவிடற்கரிய நலன்களைப் பெறமுடியும்.

இந்தத் தலம் சித்தர்கள் பலர் வாழ்ந்த தலம், அவர்கள் மருத்துவசோதனை, தவம், தியானம் என அந்த மலையில் இருந்து அற்புதமான மூலிகை மருந்துகளை உருவாக்கிய தலம்.

இந்த மலையில் முதலில் சித்தர்கள்தான் முருகனை வழிபாட்டார்கள், அவர்கள் ஸ்தாபித்த ஆலயமே முதலில் இருந்தது.

பின்னாளில் அது சிதிலமடைந்து யாரும் செல்லாத அளவு போனது, அப்போது முருகப்பெருமானே அதனை தன் சக்தியால் புதுப்பித்துக் கொண்டார்.

அப்பக்கம் வேட்டைக்கு வந்த புதுகோட்டை மகாராஜாவுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட உடன் வந்தவர்கள் செய்வது அறியாது திணறினார்கள். அப்போது ஆடுமேய்க்கும் சிறுவன் உருவத்தில் வந்த முருகப்பெருமான் அவருக்கு அந்த சுனையில் இருந்து நீர் கொண்டுவந்து குடிக்கக் கொடுத்து நொடியில் வயிற்றுவலி அகலச் செய்தார்.

மன்னர், நீ யார் என விசாரிக்க மலைமேல் வந்துபார் எனச் சொல்லி மறைந்தார் முருகன்.

அதன்பின் மலைக்கு மேல் சென்ற மன்னர் பழைய முருகவழிபாடுகள் இருந்த இடத்தில் இப்போதிருக்கும் ஆலயத்தை ஸ்தாபித்தார்.

அப்போது இருந்து மீண்டும் இந்த ஆலயம் பிரசித்தியானது, பக்தர்கள் அலை அலையாய் வரத் தொடங்கினார்கள்.

செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து அந்தச் சுனையில் நீராடி சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் செவ்வாய் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

அவ்வாறே செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இத்தல முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும்.

கார்த்திகை தோறும் இங்கே நீராடி முருகனுக்கு விளக்கேற்றி வணங்கினால் எல்லா பலனும் வரமும் கிடைக்கும், நினைத்தது நடக்கும்.

பங்குனி உத்திர நாளில் அக்கம் பக்கமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் இக்கோயில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.

எல்லா முருகன் கோவிலிலும் குறைந்தபட்சம் ஒரு சித்தராவது இருப்பார்கள். இங்கே தேனிமலை ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள் சமாதி உண்டு, அவர் இங்குதான் வாழ்ந்தார். பெரும் அற்புதங்களை முருகன் பெயரால் செய்தார்.

இன்றும் அவர் அரூபியாய் அருள்பாலிக்கும் தலமிது.

இந்த மலைக்கு தேனிமலை எனப் பெயர் வந்தது அங்கு உலாவும் தேனீக்களால் மட்டுமல்ல, அந்த தேனீக்களை கொண்டு முருகப்பெருமான் செய்யும் அற்புதங்களாலே.

அந்தத் தேனீக்கள் முருகனுக்கு பணிவிடை செய்து கர்மம் கழிக்கும் ஆத்மாக்களின் மறுபிறப்பு, அந்த அளவு அவை முருகப்பெருமானின் கட்டளைகளை மக்களுக்கு சொல்கின்றது.

இந்தத் தொக்குபாறையின் இடுக்கில் தேனீக்கள் கார்த்திகை மாதம் தேன்கூடு கட்டுதல் உண்டு. தவறாமல் அது நடக்கும்.

அந்த இடுக்கில் மூன்று தேன் கூடுகள் இருந்தால் அவ்வருடம் மிக செழிப்பு, இரு தேன்கூடு இருந்தால் குறைந்த விளைச்சல், ஒரு தேன் கூடு மட்டும் இருந்தால் ஆக குறைந்த விளைச்சல் என அடையாளம்.

எத்தனையோ நூற்றாண்டாக மாறா வழமை இது, இந்தக் கணிப்பு ஒருநாளும் பொய்த்ததில்லை.

தேனீக்கள் எனும் ஆத்மாக்கள் வழியாக முருகப்பெருமான் தன் பக்தர்களுக்கு அங்கு இப்படி பருவகால அறிவிப்பினை செய்கின்றார். இந்த வழக்கம் எக்காலமும் உண்டு.

இந்தத் தேன் கூட்டு அதிசயத்தாலே அம்மலை தேன்மலை என்றாயிற்று.

அந்தத் தேன் சக்திமிக்கது. மூலிகைகளின் பூக்களில் இருந்து வருவதால் அவை சக்தியுமிக்கது, ஆலய அபிஷேகத்துக்கு பின் அவை வழங்கப்படும்.

புதுகோட்டை, இராமநாதபுரம் பக்கம் செல்லும் போது இந்த ஆலயங்களை காணத் தவறாதீர்கள்.

குண்டுக்கரை ஆலயம் சுவாமிநாத ஆலயம், இந்த தேன்மலை முருகன் ஆலயம் என இரண்டையும் தரிசிக்க தவறாதீர்கள்.

குண்டுக்கரை ஆலயம் ஞானம் வழங்கும்; மிகச் சிறந்த தெளிவினை தரும்; சிவனும் முருகனுமாக கலந்து அருள்பாலிக்கும் அந்த அற்புத தலம் உங்கள் கிரியா சக்தி, ஞான சக்தி, இச்சா சக்தி எனும் மூன்று சக்திகளையும் நல்ல ஞானமாக தரும்.

அப்படியே இந்த தேன்மலையினை தரிசியுங்கள். அந்தச் சுனையின் அற்புதமான மூலிகை நீரும் அந்த மலையின் சித்தர்கள் அருள் கலந்த பாறைகளின் நல்ல கதிர்வீச்சும் உங்கள் ஆரோக்கியத்தை காக்கும். தீராத நோய் எல்லாம் தீரும்.

அந்தச் சுனையில் நீராடி முருகனை தரிசித்து விளக்கேற்றி அந்த அற்புதமான மூலிகை நிறைந்த, ஞான சக்தி மலையில் அமர்ந்திருந்து அந்த முருகப்பெருமானை நினைத்து அமர்ந்திருங்கள்.

அந்த ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள் சமாதியினை தரிசித்து வழிபட மறவாதீர்கள்.

முன்பு மன்னனின் நோய் தீர்த்த முருகப்பெருமான் உங்களின் எல்லா பிணியும் நோயும் தீர்த்து தருவார், அங்கே எந்த கடும் வெயிலில் வெறும் காலோடு மலை ஏறினாலும் அந்தப் பாறை சுடாது. அப்படியாக முருகப்பெருமான் உங்கள் பாதங்களை காக்கும் தலம் அது.

அப்படி தன்னை காண மலை ஏறிவரும் பக்தர்களின் பாதத்தை தாங்கும் எம்பெருமான் உங்கள் வாழ்க்கை பயணத்திலும் உங்கள் பாதங்களை தாங்கி எந்த சிரமமும் வலியுமில்லாமல் காத்து வருவார். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வெண்ணெய் மலை முருகன் ஆலயம், திண்டல் குழந்தை வேலாயுத சுவாமி, புகழிமலை முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் :
வெண்ணெய் மலை முருகன் ஆலயம், திண்டல் குழந்தை வேலாயுத சுவாமி, புகழிமலை முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது கரூர் பக்கம் அமைந்திருக்கும் ஆலயங்கள், அதில் அமராவதி வடகரையில் அமைந்துள்ள வெண்ணெய் மலை முருகன் ஆலயம்.

இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது; காலத்தால் மூத்தது; யுகங்களைத் தாண்டியது; இங்கு மூலவர் பால காசி விஸ்வநாதர்; அன்னை விசாலாட்சி; முருகனுக்கு தனி சன்னதி உண்டு.

முன்பொரு காலத்தில் பிரம்மன் தன் படைப்பு தொழில் குறித்து கர்வம் கொண்டான்; அவனின் கர்வத்தால் பல குழப்பங்கள் ஏற்பட ஈசன் அவரை ஒரு பார்வை பார்க்க எல்லாம் மறந்தான் பிரம்மன்; அந்த சாபம் தீர அவன் வஞ்சிவனத்துக்கு தவம் செய்யச் சென்றான்.

அந்நேரம் உலக உயிர்களுக்கு உணவளிக்கவும், இன்னும் பலகாரியங்கள் நடக்கவும் காமதேனு எனும் அந்தத் தெய்வீக பசுவே இறங்கிவந்து பல காரியங்களை செய்தது. வெண்ணையினை மலைபோல் குவித்து வைத்து மக்களை பயன்படுத்த வழி செய்தது, அப்படியே ஒரு தீர்த்தமும் உருவாக்கிற்று.

அது காமதேனு தீர்த்தம் என அழைக்கப்பட்டு, இப்போது தேனு தீர்த்தம் என்றாயிற்று.

இப்படி தொடங்குகின்றது இந்த ஆலயத்தின் தல புராணம், அந்த யுகம் கடந்த காலத்தில் இருந்து தொடரும் ஆலயம் இது.

இங்கே வெண்ணெய் மலை என்பது மாபெரும் தத்துவம், தாத்பரியம்.

பாற்கடலை கடைந்து அமிர்தம் வந்தது என்பதும், கண்ணன் வெண்ணை உண்டான் என்பதும் வெறும் லௌகீக காட்சி அல்ல. அது உன்னைக் கடைந்து ஞானம் அடையவேண்டும், உன் மனதைக் கடைந்து அங்கே ஞானம் எனும் வெண்ணையினை பெறவேண்டும் எனும் பெரும் ஞான போதனை.

ஆம். இந்த ஆலயம் மாய பற்றுக்களை அறுக்கும், பெரும் ஞானம் போதிக்கும். இங்கே வழிபட்டால் ஞானமும் அறிவும் பெருகி பற்றற்ற கோலமும் தெளிவும் கிடைக்கும்.

பால தண்டாயுதபாணி என முருகப்பெருமான் தனித்து நிற்கும் கோலம் கொண்ட ஆலயங்கள் எல்லாமே ஞானம் வழங்கும் ஆலயங்கள்.

இந்த மலைக்கு சாட்சி, முருகன் இங்கு எக்காலமும் உண்டு என்பதன் சாட்சி இருவர்.

ஒருவர் கருவூர் சித்தர். கருவூர் சித்தர் பற்றி எல்லோரும் அறிந்திருப்போம். கரூர் எனும் இப்பகுதியில் அவதரித்தவர், பெரும் சித்த நிலையினை அடைந்து இராஜராஜசோழனுக்கு குருவாக இருந்தவர்.

அவர் இந்த மலையில் தவம் செய்திருக்கின்றார், அவர் வழிபட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று.

அவருக்கு இங்கு தனி சன்னதி உண்டு. இது தவிர தஞ்சை பெரிய கோவில், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் என இரு இடங்களில் மட்டும் அவருக்கு சன்னதி உண்டு. அந்த அளவு அவரின் வாழ்க்கையில் கலந்த ஆலயம் இது.

இந்த ஆலயத்தின் கண்கண்ட சாட்சி யோகி பகவான் எனும் சித்தர்.

இவர் வடநாட்டுக்காரர். இமயமலையில் தவம் செய்தபோது காவேரிக்கரையில் இருக்கும் வெண்ணெய் மலையில் வந்து தன்னை வழிபடும்படி முருகப்பெருமான் தோன்றி சொன்னார்.

உடனே இங்கு விரைந்தார் யோகி.

அவருக்கு முன்பின் இந்தப் பகுதி தெரியாது; ஆறோ மலையோ தெரியாது; அவர் எங்கெல்லாமோ தேடி கடைசியில் இம்மலையினை கண்டு மகிழ்ந்து, கரூரில் இருந்த சோழமன்னனிட்ம தான் கண்ட காட்சியினை தெரிவித்தார்.

மன்னரும் மரத்தடியில் உயர்ந்த கோபுரம், மண்டபம் அமைத்து முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார்.

சன்னதிக்கு தென்புறத்தில் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் அமைத்தார். முருகன் சன்னதிக்கு வடபுறத்தில் முருகனின் யந்திரத்தை அந்த யோகி பகவானே ஸ்தாபனம் செய்தார்.

ஆம். இது சாதாரண விஷயம் அல்ல. காமதேனுவால் உருவாக்கப்பட்டு, கருவூர் சித்தரால் அடையாளம் காட்டப்பட்டு, யோகி பகவானிடம் தான் இந்த மலையில் இருப்பதை உலகிற்கு சொல்ல இமயத்திலே முருகப்பெருமான் அவருக்கு கட்டளையிட்டு அழைத்து வந்த தலம் இது.

இங்கு வந்து வழிபட்டால் எல்லா வினையும் தீரும். ஞானம் பெருகும்.

இந்த மலை பெயருக்கு ஏற்றபடி கடும் வெயில் காலத்திலும் குளிர்ச்சியாகத்தான் இருக்கும். அப்படி ஒரு அபூர்வ மலை இது.

இங்குச் சென்று வழிபடுங்கள். அந்த பாலதண்டாயுத பாணியிடம் உங்கள் குறைகளெல்லாம் சொல்லுங்கள். அப்படியே காசிவாழ் சிவனையும் அன்னை விசாலாட்சியினையும் விழுந்து வணங்குங்கள்.

அன்னை விசாலாட்சிதான் அன்னபூரணி, கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளக்கும் அந்தக் கருணையான சிவபெருமான் இங்கும் உயிர்களின் பசியாற்ற காமதேனு மூலம் வெண்ணெயினை மலையாய் குவித்தார்.

ஆம். இங்கு வழிபட்டுச் சென்றால் உங்கள் குலவம்சம் பசியால் வாடாது, பசி என்பதே உங்கள் சன்னதிக்கு வராது.

இந்த மலையினைச் சுற்றி வழிபட்டால் ஞானம் பெருகும்; தயிரில் இருந்து வெண்ணெய் வருவது போல உங்கள் உயிரில் இருந்து இறைவனைக் காணமுடியும்; அதனை இந்த ஆலயம் வரமாகத் தரும்.

இன்னும் திருமணத் தடை, நோய், வறுமை என எல்லாம் நீங்கும்; அந்த மலை ஒரு அட்சய பாத்திரம்; சென்று வேண்டியதை அள்ளிக் கொள்ளுங்கள்.

மறக்காமல் அங்கே கருவூர் சித்தரை வழிபடுங்கள்; யோகி பகவானுக்கும் விளக்கேற்றிப் பணியுங்கள்; அந்த மகா சித்தர்கள் உங்களை எல்லா வகையிலும் காக்கும் வரம் அருள்வார்கள்.

தைப்பூசம், கார்த்திகை மாத சிறப்புக்கள் அதுவும் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாள், வைகாசி விசாகம் எனப் பல பண்டிகைகள் இங்கு உற்சாகமாக பெரும் மக்களோடு கொண்டாடப்படும் ஆலயம் இது.

அடுத்த ஆலயம் ஈரோடு அருகே பெருந்துறையினை அண்மித்து நிற்கும் திண்டல் ஆலயம்.

இது சிறிய குன்றில் ஒரு திண்டுபோன்ற பகுதியில் அமைந்துள்ளது.

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் இதுவும் ஒன்று. இவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

இங்கு இடும்பனார் மிக விசேஷம். ஒருமுறை மழை பொய்த்தபோது முருகப்பெருமானே இந்த இடும்பனை வேண்ட சொன்னாராம். அப்படி வேண்டுதல் செய்யப்பட்டு பெரும்மழை கொட்டி பஞ்சம் நீங்கியதில் இருந்து இந்த இடும்பனாருக்கு சிறப்பு அதிகம்.

இன்றும் அந்த வழிபாடு அங்கு உண்டு, குறிப்பாக மழை வேண்டி உண்டு.

கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் ஒரு வித்தியாசம் எப்போதும் உண்டு. அது தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது இதில் கார்த்திகை தீபத்தன்று பெரும் ஜோதி திருவண்ணாமலை போலவே ஏற்றப்படும்.

இந்த தீபஸ்தம்பம் அற்புதமான கலைவடிவில் உருவாக்கப்பட்டிருப்பது முருகனை போலவே அழகு .

ஆலயத்தின் உள்ளே முகப்பில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, மயில்வாகனம், சிவன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் உள்ளனர். முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர், நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆம். இரு விநாயகர்களும் அங்கு விசேஷம். ஒன்று, புத்தி விநாயகர் இரண்டாவது, ராகு கேது தோஷம் போக்கும் சித்தி விநாயகர்

மண்டபத்தில் வேலாயுதசாமி சிலை அமையப்பெற்றுள்ளது. அடுத்து இடும்பன் சன்னதி, அதை அடுத்து மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணம் கருவறையில் வேலாயுத சுவாமி அமர்ந்திருகின்றார்.

இந்த ஆலயத்தின் சிறப்பு அந்த தன்னாசி குகை, அங்கேதான் கொங்கு நாட்டின் பிரதான சித்தரும் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் சமாதி கொண்டிருப்பவருமான அந்த தன்னாசி சித்தர் தவம் செய்த இடம் இது.

இன்றும் அரூபியாய் அவர் அங்கே ஆசி வழங்குகின்றார். கார்த்திகை தீபம் அன்று இந்தக் குகையில் வழிபாடுகள் செய்யப்பட்டு விளக்கு ஏற்றப்படும்.

இக்கோவில் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இடம்பெற்றுள்ள சிறப்புடையது.

மாதம்தோறும் கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது.

தமிழ்ப்புத்தாண்டு மிக விசேஷம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயகசதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கும்.

காண்போரை வசீகரிக்கும் முருகப்பெருமான் திண்டல் மலையில் வீற்றிருக்கின்றார். அங்குச் சென்று அவரை வழிபட்டு அந்த தன்னாசி குகையில் அமர்ந்து தன்னாசி சித்தர் அருளையும் பெற்று வாருங்கள்.

அடுத்து புகலிமலை அல்லது புகழிமலை எனப்படும் முருகன் ஆலயம். இது கரூர் அருகே அமைந்திருக்கின்றது.

இது தொன்மையான ஆலயம், எவ்வளவுக்கு தொன்மை என்றால் இலங்கையின் கதிர்காமம் போல வேல் ஊன்றி வழிபாடுகள் தொடங்கப்பட்ட மலை இது, இன்றளவும் இது விசேஷம்.

இது சமணர்களுக்கு புகலிடம் அருளியதால் புகலிட மலை என்றும், பின் புகலிமலை என்றும் திரிந்தது.

காவிரி ஆற்றங்கரையில் தென்பகுதியில் உள்ள ஆறு கிராமங்களுக்கு இம்மலை பொதுவானதால் இந்த மலை, ‘ஆறுநாட்டார் மலை’ என்றும் அழைக்கப்படும்.

“பொருத வரு சூரன் கிரியுருவ வளிபுனல் சுவர வேலை எறிவோனே” என‌த் தன் திருப்புகழில் இம்மலை பற்றி பாடுகிறார் அருணகிரியார்.

கரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது புகழூர். இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் புகழிமலை அமைந்துள்ளது. வேலாயுதம்பாளையம் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், 315 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது.

கோயிலின் விமான அமைப்பு, கன்னட பகுதிகளில் இருக்கும் விமானங்கள் போல அமைந்திருக்கிறது.

சுமார் 400 அடி உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் விநாயகர் சன்னிதி உள்ளது. மலையின் நுழைவாயில் மண்டபத்தில் மலையை நோக்கி மேற்குத் திசையில் முருகனுடைய மயில்வாகன சன்னிதி அமைந்துள்ளது. மலைக் காவல் ஐயனாருக்கு எனத் தனிச் சன்னிதி உள்ளது.

கொஞ்சம் ஏறியவுடன் தென் திசையில் உள்ள சிறிய குகையில் சிவன், பார்வதி, ஒளவையார் சுதைகள் அமர்ந்த நிலையில் உள்ளன.

இவற்றின் அருகில் கிழக்குத் திசை நோக்கி ஏழு கன்னிமார்கள் சன்னதி உள்ளது. கடும் தவத்தில் இருக்கும் சுதையாலான அகத்தியரின் சிலையைத் தரிசிக்கலாம். மேலும் 14 படிகள் ஏறினால் வட திசை பார்த்த இடும்பன் சன்னிதி உள்ளது. தொடர்ந்து ஏறினால் கிழக்குத் திசையில் அமைந்துள்ள மூலஸ்தானத்துக்குள் நுழையலாம்.

மூலஸ்தானம் முன்பு முன் மகாமண்டபம் உள்ளது. அங்கே ஒரு கையில் வேலும், மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.

முருகனுக்குப் பின்புறம் இடது புறம் தலை சாய்த்தபடி தேவ மயில் உள்ளது. வஜ்ஜிரம், சக்தி ஆகிய படைக்கலன்களையும் அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடன் பாலசுப்பிரமணியராக கருவறைக் கடவுள் காட்சி நல்குகிறார்.

முருகனைத் தரிசத்துப் பின் சன்னிதியை விட்டு வெளியே வந்தவுடன், வலப்புறம் சிவலிங்கம், மீனாட்சி அம்மன் கொடிமரம் மற்றும் நவக்கிரகங்களைத் தரிசிக்கலாம்.

கோயிலின் பின்புறம் ஆதியில் நட்ட வேல் ஒன்றும், கிணறு ஒன்றும் உள்ளன. இத்திருக்கோயிலில் தைப்பூச உற்சவத்துக்கு சிவன் சன்னிதி, கொடிமரம், சுப்ரமணியர் கோயில் கொடிமரம் இரண்டிலும் கொடியேற்றி 13 நாட்கள் உற்சவம் நடைபெறும்.

தைப்பூசத் தேர் சிறப்பாக நடைபெறும். ஐப்பசி கந்தசஷ்டி உற்சவம் சூரசம்காரத்துடன் ஏழு நாட்கள் நடைபெறும். அதில் 50 ஆயிரம் பக்தர்களுக்குக் குறையாமல் கலந்துகொள்வார்கள். கார்த்திகை தீபம், ஆடிக் கிருத்திகை, மாதக் கிருத்திகை, சஷ்டி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தீபாவளி, தை பிறப்பின் போதும் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.

இந்தத் தலத்தில் உள்ள விஷ்ணு, துர்க்கையை 12 வாரம் வேண்டிக்கொண்டு எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றி வணங்கினால் கல்யாணம் கைகூடும். சஷ்டி விரதம் இருந்து மலையில் உள்ள கார்த்திகேயனை வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது உறுதி.

இந்த ஆலயம் நீங்கள் எந்த நிலையில் எதற்கு அஞ்சி அடைக்கலமாகின்றீர்களோ, எதை எண்ணி அஞ்சி அங்கே புகலிடம் தேடி அவர் பாதம் அமர்வீர்களோ அந்த அச்சத்தை போக்கி அதனை புகழாக மாற்றி தரும் ஆலயம்.

உங்கள் பிரச்சினை மானுடரால் தீர்க்கமுடியாததாக இருக்கலாம், பெரும் பழியும் அவமானமும் பெரும் பெரும் சிக்கலானதாகவும் இருக்கலாம்.

எதுவாயினும் இந்த முருகனை சரணடைந்து புகலிடமைடைந்து மன்றாடுங்கள். ஆனானப்பட்ட கொடிய சமணருக்கே அடைக்கலம் அளித்து காத்த எம்பெருமான் தன் அடியார்களை கைவிடுவாரா? அவர்கள் அச்சம் பயம் எல்லாமே பெரும் புகழாக மாறும். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள். குமரகிரி, வட்டமலை மற்றும் கதித்தமலை.

முருகப்பெருமான் ஆலயங்கள். குமரகிரி, வட்டமலை மற்றும் கதித்தமலை.

சைவ பூமியான கொங்கு நாட்டுத் தலங்களில் முக்கியமானவை இத்தலங்கள். குமரகிரித்தலம் சேலம் அம்மாபேட்டை அருகே அமைந்துள்ளது, இந்த ஆலயம் உருவான விதம் வியப்பானது.

அக்காலத்தில் ஒரு முருகபக்தர் இருந்தார்‌, அவர் பழனி நோக்கித் திருப்பயணம் சென்றார், செல்லும் வழியில் இந்த இடத்தில் தியானம் செய்ய விரும்பி இவ்விடம் வந்தார், அப்போது அவருக்கு ஒரு அசரீரிக் கேட்டது, “கயிலாயத்தில் இருந்து பழனிச் சென்ற முருகன் இங்கேதான் இளைப்பாறினார், அவர் தங்கிய இடத்தில் நீயும் அமர்ந்திருக்கின்றாய், பாக்கியம் செய்தவன் நீ” எனச் சொல்லி சிரித்து மறைந்தது.

அந்தப் பக்தர் சிலிர்த்துப் போனார். தான் இருந்த இடத்தில் இருந்து வேகமாக அகன்றார், தள்ளி நின்று பின் விழுந்து வணங்கினார்.

எவ்வளவு முக்கியமான இடம் இது எனத் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டார், பின் பயபக்தியாக அடையாளத்துக்கு ஒரு கல்லை நட்டுவைத்தார்.

அவர் மனதில் தன்னிடம் மட்டும் பொருள் இருந்தால் இந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்டலாமே எனும் எண்ணம் திரும்ப திரும்ப அலைமோதிற்று.

பின் பழனிக்குச் சென்று முருகனை தரிசித்தவர் அந்த மலை அடியில் அமர்ந்திருக்கும்போது ஒரு முதியவர் வந்தார், இவரை நோக்கி அந்த முதியவர் சிரித்தார்.

இவர் அவரைக் கலக்கத்துடன் பார்த்தார்.

முதியவர் சொன்னார், “என்னப்பா, கையில் காசு இருந்தால் கோவில் கட்டலாம் என நினைக்கின்றாயே, காசு வரும் ஆனால் நீ என்ன கொடுப்பாய்?” எனக் கேட்டுச் சிரித்தார்.

இவரிடம் பதில் இல்லை. பின், “என்ன வேண்டுமானாலும் கொடுக்கின்றேன்” என்றார்.

“என்ன வேண்டுமானாலுமா?

ஆமாம்.

சரி. உன்னைக் கொடு.

என்னை என்றால்?

நீ, உனது என எல்லாம் விட்டு நீ ஒன்றுமில்லை என்றாகிவிடு.

அப்படி என்றால்?

இதோ திருவோடு, உன் ஆணவம் அகங்காரமெல்லாம் விட்டு மானம் மரியாதை எனும் மாயை எல்லாம் விட்டு பிச்சை எடு, உனக்குப் பொருள் கிடைக்கும், உன் கனவு நடக்கும்” எனச் சொல்லி மறைந்தார்.

அந்நொடி அந்தப் பக்தருக்கு ஞானம் வந்தது. பழனியில் ஆண்டிக்கோலத்தில் நிற்கும் முருகப்பெருமானே தன்னை அவன் வழியில் நடக்கச் சொல்கின்றான் என உணர்ந்தவர் உடனே அந்த முதியவர் கொடுத்த திருவோட்டுடன் “முருகனுக்கு அரோகரா” எனக் கிளம்பினார்.

அப்படி அவரின் யாசகத்தால் கட்டப்பட்ட ஆலயம் இது.

அந்தப் பக்தரே சித்தருமானார், அங்கே தங்கினார், பழனிக்கு செல்லும் முருகன் தங்கிய இடம் என்பதால் இங்கு மாம்பழம் சாற்றி வழிபடும் முறையினை அவரே உருவாக்கினார்.

அன்றில் இருந்து இன்றுவரை அந்தத் தலத்தில் மாம்பழம் சாற்றி வழிபட்டால் நடக்காத விஷயமில்லை.

இந்த ஆலயம், ஒரு பக்தன் முருகப் பெருமானால் ஞானமடைந்து சித்தி அடைந்த ஆலயம் என்பதால் ஆன்மீக ஞானம் தேடுவோர்க்கு அருள் பாலிக்கும் தலம்.

அப்படியே இங்குவழிபடும் போது அகங்காரம் ஆணவம் நீங்கி ஒரு ஆண்டியின் மனநிலையில் வழிபட்டால் எல்லாமும் கிடைக்கும்.

இங்கு வழிபட்டால் காரியத் தடைகள் அகலும், நோய் தீரும், பிரிந்தவர் ஒன்று கூடுவர், கடன் சுமை குறையும், மனதில் நல்ல தெளிவு வரும்.

சேலம் பக்கம் செல்வோர் இந்த அம்மாபேட்டை அருகிருக்கும் குமரகிரிப் பாலசுப்ரமண்ய சுவாமி எனும் குமரனை மாம்பழத்துடன் வணங்குங்கள். உங்கள் குறையெல்லாம் தீர்த்துப் பெரும் அருள் செய்வான் அந்தக் கந்தன்.

அப்பக்கம் உள்ள இன்னொரு தலம் வட்டமலை.

இந்த ஆலயம் காலத்தால் மூத்தது. இந்த இடத்தில் கொங்கண சித்தர் இருந்திருக்கின்றார், அவர் காலத்திலே இந்த ஆலயம் இருந்திருக்கின்றது.

அவர்தான் இதனை தொடங்கிவைத்தார். ராகு கேது தலமாகவும் இதனை அவர் உருவாக்கினார், அந்தச் சிற்பங்கள் இன்றும் உண்டு.

இது நாகப்பரிகாரத் தலம் என்பதால் முருகன் அருகே ஆதிசேஷன் திருமேனியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு பெரிய நாகம் ஒன்று வலம் வந்து முருகனை வழிபட்டதால் இம்முருகனுக்கு அருகே சிலை அமைந்தது என்பாரும் உண்டு.

இன்றும் அடிக்கடி நாகம் ஒன்று வந்து வணங்கிச் செல்லும் அபூர்வ நிகழ்வும் உண்டு.

மகா மண்டபத்தின் மையத்தில் தாமரை மலர்ந்து விரிந்த நிலையில் உள்ளது போல் மகன்யாச பீடம் அமைக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தன்று இப்பீடத்தின் மீது தீர்த்தம் நிரம்பிய கலசம் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும்.

அடிவாரத்தில் சரவண தீர்த்தம் என்ற சுனை உள்ளது. இதில் ஊறும் நீர் சுவையான நீராகும். இடி விழுந்து உண்டான ஊற்று ஆனதால் இதற்கு நீரடி நெருப்படி சுனை என்றும் பெயர்.

கருவறையில் அழகுடன் எழிலாக சதுர்புஜ நாயகனாக திரிசூலம், சட்கோணம், அங்குசம் மற்றும் அபய ஹஸ்த முத்திரை தாங்கி நின்ற கோலத்தில் முத்துக்குமார சுவாமியாக அருள்புரிகின்றார்.

கோயிலுக்கு வெளியே தீபஸ்தம்பத்துடன் கூடிய மண்டபமும் உள்ளது, மூன்று நிலை இராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் வசந்த மண்டபத்தில் விநாயகர், பலிபீடமும், கொடிக்கம்பம், மயில் மண்டபம் உண்டு.

12 தூண்களைக் கொண்ட வாத்திய மண்டபத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிலையும், இக்கோயிலை நிர்மாணித்த சேர‌ மன்னன் சிலையும் உள்ளது.

உள் பிராகாரத்தில் மண்டப வெளிப்புற சுவற்றிலும் தூண்களிலும் யோக நரசிம்மர், அனுமன், விஷ்ணு, பத்திரகாளியம்மன், ராமர் போன்ற புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகிறது.

அர்த்த மண்டப தென் பகுதியில் உள்ள வெளிப்புற சுவற்றில் அழகிய வடிவமைப்புடன் கூடிய வீரபத்திரரின் புடைப்பு சிற்பத்தைக் காணலாம். நான்கு தூண்களைக் கொண்ட மகா மண்டபத்தின் தென் மேற்கு பகுதியில் ஈசன் லிங்க வடிவில் பார்வதி தேவியோடு அருள்பாலிக்கின்றார்.

சேரர்கள் கட்டிய ஆலயம் என்பதால் கொஞ்சம் வித்தியாசமான சிற்பங்கள் உண்டு. பின்னாளில் பாண்டியர் செய்த திருப்பணிக்காக மீன் முத்திரையும் உண்டு.

கொங்கண சித்தரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆலயம் முருகப்பெருமானின் தனி அருளால் ராகு கேது உள்ளிட்ட நாகதோஷம் இதர நாக தோஷங்களை நீக்கி நல்வாழ்வு தரும் ஆலயம்‌

திருமணத் தடை, குழந்தைப்பேறு இல்லாமை, தீராத மனக் கவலை ஆகிய பிரச்னைகள் நீங்கி வாழ்க்கை சிறக்கவும், தொழில் வளம் பெறவும் வரம் அருளும் ஆலயம் இது.

பங்குனி உத்திரம், தைப்பூசம், கிருத்திகை ஆகிய திரு நாட்கள் இங்கே வெகுவிசேஷம். அதேபோல், பெளர்ணமியில் கிரிவலம் வந்து வணங்குவதும் நல்ல பலனைத்தரும்.

பவானி கூடுதுறையில் சங்கமிக்கும் அமிர்த நதி, காவிரி, பவானி ஆகிய மூன்று நதி தீர்த்தங்களும் இந்த ஆலய தீர்த்த கிணற்றில் ஊறுவதால் இந்த தீர்த்தம் புனிதமிக்கது, அந்தத் தீர்த்தம் அங்கு துயர் நீக்கும் பிரசாதம்.

வட்டமலையில் அமர்ந்திருக்கும் முருகன் உங்கள் வாட்டமெல்லாம் நீக்கித்தருவான், கொங்கு நாட்டின் நாகப்பரிகாரத் தலம் இது, வழிபட்டால் எல்லா நலமும் கிடைக்கும்.

இந்தத் தலத்தின் வரலாறு அகத்தியரிடம் இருந்து தொடங்குகின்றது, இங்கு நாரதர் உள்ளிட்ட தேவர்களுடன் பூஜை செய்யவந்த அகத்திய முனிவர் நீரின்றி தவித்தார்.

அப்போது முருகப்பெருமானே நேரில் வந்து தன்வேலால் நிலத்தை குத்த அதிலிருந்து ஊற்று எழுந்தது, அந்த ஊற்றுக் குழி தான் பின்பு ஊத்துக்குழி என்றாயிற்று.

இன்றும் அந்த ஊற்று வற்றாமல் உண்டு.

முருகப்பெருமான் அகத்தியருக்கு அருள் செய்த அந்த இடத்தில் கட்டப்பட்ட ஆலயம் அருள்தலமாயிற்று.

கதித்த என்றால் கதியான கதி அடைந்த இடம் எனப் பொருள், தன்னையே கதி என வரும் பக்தர்களை முருகப்பெருமான் காக்கும் இடம் இது.

இக்கோவில் மலையின் மீது ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு அழகிய மண்டபத்துடன் கூடிய சந்நிதியில் முருகன் தனியாக காட்சித் தருகிறார். வள்ளி மற்றும் தெய்வானைக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

இந்த மலை மயில்வடிவில் இருப்பதால் இம்மலை மயூரகிரி என்றானது, இங்கு வாழ்ந்த சித்தர் மயூரகிரி சித்தர் என்றானார், அவர் வழிபட்டு சமாதி அடைந்த இடம் இதுதான்.

இக்கோவில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட பெருமை கொண்டது, திருப்புகழில் அவர் அதனைப் பாடியுள்ளார்.

அருணகிரிநாதர் இத்தல முருகனைப் பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார்.

இங்கு சிவபெருமான் சந்நிதி உண்டு, அங்கு காளையின் பாதம் உண்டு, தென்கிழக்கு பகுதியின் சுப்பராயர் புற்று கோவிலும் அருள் மிக்கவை, பழமையான பாலை மரத்தின்அடியில் சுக்குமலையான் சந்நிதி இன்னும் விசேஷமானது.

ஊத்துக்குளி என்பது வெண்ணைக்கு மட்டுமான அடையாளம் அல்ல, முருகப் பெருமானே உருவாக்கிய அந்த ஊற்றும், அவன் குடிகொண்ட இந்த கதித்த மலையுமே மகா முக்கிய அடையாளம்.

கொங்குநாட்டின் திருப்பூர் பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தை தரிசிக்க மறவாதீர்கள், முருகப்பெருமான் உருவாக்கிய தீர்த்தம் பருகி, வழிபட்டு அகத்திய முனி நினைவுடன் மயூரகிரி சித்தர் பாதம் பணிந்து வாருங்கள். அதன்பின் வாழ்வில் எல்லா மாற்றமும் நன்மையாகவே நடக்கும்.

இந்த மூன்று ஆலயங்களும் அப்பக்கம் முருகப்பெருமானின் சாட்சியாக நிற்பவை, மூன்றுமே முருகன் தன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருளிய தலங்கள் என்பதால் அந்த அருள் உங்களுக்கும் நிச்சயம் கிடைக்கும். தவறாமல் தரிசியுங்கள்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : தவளகிரி மற்றும் அனுவாவி.

முருகப்பெருமான் ஆலயங்கள் : தவளகிரி மற்றும் அனுவாவி.

கொங்கு மண்டலத்தின் முக்கிய முருகப்பெருமான் தலங்களில் தவளகிரி முக்கியமானது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொடிவேரி பக்கம் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

தவளம் என்றால் வெண்மை எனப் பொருள். இயல்பிலே வெண்ணிறமான இந்த மலை வெண்குன்று எனும் பெயரில் தவளைகிரி என்றானது.

இந்த ஆலயத்தின் வரலாறு யுகங்களைக் கடந்தது. துர்வாசமுனி காலத்தில் உருவானது.

அத்ரி முனிவர் அனுசுயா தம்பதியர் மகனான துர்வாச முனிவர் திரிவேணி சங்கமம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரரை நீராடி தரிசித்துவிட்டு வடக்கு திசை ஏகினார். அவர் அவசரமாக சென்றபோது பவானி நதி பெருக்கெடுத்து ஓடியது.

முனிவர் கோபக்காரர். முன்கோபத்துக்கு பெயர்பெற்றவர். அவரின் சாபம் பொல்லாதது, உடனே பலிக்கக் கூடியது. அப்படியான முனிவர் பவானியினை நிற்கச் சொல்லி தனக்கு வழிவிடச் சொல்லி உத்தரவிட்டார்.

எத்தனையோ இடங்களில் அவர் அதிசயம் செய்தவர், அவர் உத்தரவிட்டால் எந்த ஆச்சரியம் என்றாலும், என்ன அதிசயம் என்றாலும் உடனே நடக்கும். அவரின் தவத்தின் சக்திக்கு எல்லாமே கட்டுப்படும்.

ஆனால், அன்று பவானி ஆறு அடங்கவில்லை. கட்டுப்படவில்லை. தன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தது. முனிவர் மிகவும் வாடினார். தன் தவம் சக்தியெல்லாம் எங்கே போயிற்று என மிகவும் தளர்ந்து போனார்.

அப்போது ஒரு மயில் அவர் முன்னால் பறந்து சென்றது. முனிவர் அதை நோக்கிக் கொண்டே இருந்தார், அது நேரே தவளகிரி குன்றின் உச்சியில் அமர்ந்தது, அங்கு ஒரு வெள்ளை வெளிச்சம் தெரிந்தது.

முனிவர் குன்றின் உச்சிக்குச் சென்றார், அங்கே ஜோதிவடிவான முருகனைக் கண்டு பணிந்தார். முருகன் இந்த மலைமேல் இருந்தும் காணாமல் சென்ற தன்னை முருகன் அழைத்ததாக உருகினார்.

அவர்தான் அந்த முருகனை பிரதிஷ்டை செய்து அந்த ஆலயத்தை ஸ்தாபித்தார். அதிலிருந்து முருகப்பெருமான் அங்கிருந்து அருள் பாலித்து வருகின்றார்.

இந்த ஆலயத்தை அப்படியே பழனி முருகன் கோவில் வடிவில் அதே தோற்றத்தில் அச்செடுத்து செய்தது போல் துர்வாச முனிவர் அமைத்துக் கொடுத்தார்.

பழனி போலவே மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஆலயம் இது. இங்கு முருகப்பெருமானும் பழனியில் காட்சியளிப்பது போலவே அதே தண்டாயுதபாணி கோலத்தில் காட்சியளிக்கின்றார்.

மிக மிக நுணுக்கமாகப் பழனி முருகனின் வலது கையில் சுண்டு விரலில் ஒரு மோதிரம் உண்டு, தர்ஷினி மோதிரம் என அதற்குப் பெயர்.

அதே மோதிரம் இந்த முருகன் கையிலும் தர்ஷினி என உண்டு. இந்த சமஸ்கிருத வார்த்தையின் பொருள் ஞானம், முழு ஞானம் எனப் பொருள்.

இந்த ஆலயம் கடும் முன்கோபம் எனும் துர்குணம் கொண்ட துர்வாசருக்கே ஞானம் அளித்த தலம், பழனி ஆலயமும் ஆண்டிக் கோலத்தில் நின்று முருகப்பெருமான் ஞானம் வழங்குமிடம், ஞானபழத்தினை தேடி அங்கு நிற்கும் அந்த ஞானபண்டிதன் வழங்குவதெல்லாம் பெரும் ஞானம்.

இந்தத் தலம் ஞானம் வழங்குமிடம், சென்று வணங்குவோர்க்கு எல்லா அறிவும், தெளிவும், ஞானமும் பரிபூரணமாகும்.

பழனியின் பிரதியாக இருக்கும் இந்த ஆலயத்தை தரிசித்தால் பழனிக்குச் சென்ற எல்லாப் பலனும் கிடைக்கும்.

மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த முருகன் ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் மூன்று நாட்களில் சூரியன் மறையும் முன், முதல் நாள் மூலவர் பால தண்டாயுதபாணியின் பாதங்களிலும், இரண்டாம் நாள் மார்பிலும், மூன்றாம் நாள் முகத்திலும் சூரிய ஒளி விழும்.

அவ்வளவு துல்லியமாக துர்வாசர் இதனை உருவாக்கியிருக்கின்றார்.

வருடத்தின் முதல் நாள் சூரியனின் பலனைப் பெற்றுக் கொள்ளும் சூட்சுமமான ஏற்பாடு. சூரியன் மேஷ ராசியில் நுழையும் அந்நாளில் முருகனின் பாதம் தொட்டு எல்லா மக்களையும் சூரியன் ஆசீர்வதிக்கும்படி இந்த ஏற்பாட்டை முனிவர் செய்தார்.

இப்படி ஒளிவிழும் நேரம் இங்கு பூஜைகள் நிறைய உண்டு என்பதால் சித்திரை முதல் மூன்று தினங்கள் இங்கு கூட்டம் அலைமோதும்.

தவளகிரி மலை ஆலயம் 270 படிகள் கொண்டது. படியேறிச் சென்றால் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் இடும்பனைக் காணலாம்.

மேலேறிச் செல்ல செல்ல தனித்தனி சந்நிதிகளில் பால விநாயகரும், வள்ளி தெய்வானையும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். இங்கு வள்ளி, தெய்வானை இருவரும் முருகனை அடைய வேண்டும் என்ற நோக்கில் கன்னிப் பெண்களாக தவக்கோலத்தில் காட்சி தருகின்றனர்.

இந்த வள்ளி தெய்வானைக்கு விரதம் இருந்து பட்டு சாற்றினால் திருமணமாகாப் பெண்களுக்கு திருமணம் நடக்கும்.

கருவறையில் முருகன் பால தண்டாயுதபாணியாக மேற்கு பார்த்தவாறு வலது கையில் தண்டாயுதமும், இடது கையினை இடுப்பில் வைத்து பெரும் கம்பீர அழகோடு அருள் புரிகின்றார்.

சத்தியமங்கலம் பக்கம் செல்லும் போது இந்த ஆலயம் செல்லத் தவறாதீர்கள். பயணத்தில் பெரும் தடை ஏற்பட்ட துர்வாசர் ஸ்தாபித்த ஆலயம் இது.

இந்த ஆலயம் ஞானம் தரும், வாழ்வின் தடைகளை நீக்கித் தரும், திருமணத் தடை, வேலையில் தடை என எல்லாத் தடைகளையும் தகர்த்துத்தரும், விவசாயம் முதல் எல்லாத் தொழிலையும் செழிக்க வைக்கும் ஆலயம் இது.

அந்த ஞானபண்டிதன் எல்லா நலமும் தர அந்த தவளகிரி மலையில் தண்டாயுதபாணியாக காத்திருகின்றார், பழனிக்கு சமமாக அருள் வழங்க இந்த இரண்டாம் பழனியில் எழுந்தருளி நிற்கின்றார்.

அடுத்த ஆலயம் அனுவாவி எனும் அனுமன் வாவி.

இது கோயமுத்தூருக்கு மேற்கே மருதமலை முருகன் கோவிலை அண்மித்து மலையில் அமைந்திருக்கின்றது.

இந்த ஆலயத்தின் வரலாறு இராமாயண காலத்தில் இருந்து தொடங்குகின்றது, இராவணுடனான பெரும் போரில் இலட்சுமணன் மாய அஸ்திரத்தால் கட்டுப்பட்டபோது அனுமன் அவனை குணப்படுத்தும் மூலிகை தேடி வந்த காட்சியில் இருந்து தொடங்குகின்றது.

மூலிகையினைத் தேடி எடுக்க நேரமில்லாததால் சஞ்சீவி மலையினை அப்படியே பெயர்த்து எடுத்து சுமந்து வந்தான்.

அப்படி வரும் வழியில் அவனுக்கு களைப்பும் தாகமும் ஏற்பட்டது. அப்படி அவன் தாகத்தால் வாடி இப்பக்கம் அமர்ந்த போது முருகப் பெருமானே அவனுக்கு தன் வேலால் ஒரு ஊற்றை ஏற்படுத்தி தாகம் தீர்த்தார்.

அந்த ஊற்றுத்தான் வாவி, அனுமனுக்கு தாகம் தீர்த்த அனுமன் வாவி. அது அனுவாவி என்றாயிற்று, அதிலிருந்து இந்த ஆலயம் பிரசித்தியாகி இன்றுவரை அருள்பாலிக்கின்றது.

500 படிகட்டு கொண்ட இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலிக்கின்றார், ஆலய வாயிலில் இடும்பன் சந்நிதி உண்டு.

ஆலயத்தின் முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரபாகு அருள்கின்றனர். நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன.சிவன் சந்நிதியும் உண்டு.

ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கின்றார்.

முருகப்பெருமான் அனுமனுக்கு ஏற்படுத்திய நீரூற்று இன்றும் அற்புதமாக ஓடிக் கொண்டிருக்கின்றது, எக்காலமும் அது முருகனின் அருள் போல் வற்றுவதே இல்லை.

இந்த தலத்தின் முருகன் தனி அருள் மிக்கவர். அவர் தலையில், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் பூ வைத்து காரியத்துக்கு அனுமதி கேட்கும் வழக்கம் உண்டு. இந்தப் பூ விழும் கணிப்பு பொய்த்தது இல்லை.

அனுமன் மலை சுமந்தான் அவனுக்கு முருகப்பெருமான் களைப்பு நீக்கி தாகம் தீர்த்தார் என்பது ஒருவரியில் கடந்து செல்லும் விஷயம் அல்ல‌.

ஒவ்வொருவரும் வாழ்வு எனும் பெரும் கர்மத்தை சுமக்கின்றோம், அந்தக் கர்மத்தினைச் சுமக்கும் பலனை முருகப்பெருமானே நமக்கு தருவார், ஒவ்வொரு கட்டத்திலும் தருவார் என்பதே இந்த ஆலயத்தின் தாத்பரியம்.

கொங்கு நாட்டு மலைகள் ஆறுகள் என்பது சித்தர்களும் மகான்களும் நடமாடிய அற்புதப் பகுதி, அங்கு எக்காலமும் அருள்மிக்க ஆலயங்கள் உண்டு, அவ்வகையில் இவையும் முக்கிய ஆலயங்கள். கொங்கு பக்கம் செல்லும் போது மறக்காமல் இவைகளை தரிசித்து முருகப்பெருமானின் அருளைப் பெற்றுக்கொள்ளுங்கள். எல்லா நலமும் அருளும் பாக்கியமும் உங்களைச் சூழும்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வையப்ப மலை மற்றும் தத்தகிரி முருகப்பெருமான் ஆலயங்கள்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வையப்ப மலை மற்றும் தத்தகிரி முருகப்பெருமான் ஆலயங்கள்.

கொங்கு நாட்டு முருகப்பெருமான் தலங்களில் முக்கியமானது வையப்ப மலை முருகன் ஆலயம். இது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அமைந்துள்ளது.

இந்த ஆலயம் மகா தொன்மையானது. பழனியில் முருகன் குடிகொண்ட காலத்தினை ஒட்டியது.

அக்காலத்தில் இம்மலையில் சித்தர்கள் பலர் இருந்தார்கள். சித்தர்கள் எப்போதும் உலக மக்களின் நலனையே சிந்திப்பவர்கள். மக்களின் சுமை தீர என்ன செய்யலாம் எனச் சதாகாலமும் சிந்திப்பவர்கள்.

இப்படியான இந்த சித்தர்கள் மக்களின் வாழ்வியல் சுமை நீங்க தங்கம் செய்தால் என்ன? எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க பொன் செய்து குவித்தால் என்ன எனத் தவமிருந்து தேடத் துவங்கினார்கள்.

ரசவாத வித்தைகளை பயின்று மெல்ல மெல்ல தேறினார்கள்.

அவர்கள் தேடல் இறைவனை மறந்து தங்கம் செய்வது அதை பாதுகாப்பது எனப் பெருகிற்று. அதையே நாடினார்கள். தேடினார்கள். ஓடி ஓடி தங்கம் செய்து சிறுக சிறுக அங்கிருக்கும் பாறை இடுக்கு, குகைகளில் சேர்த்து வைத்தார்கள்.

சித்தர்கள் இறைவனில் கலந்து இறை சித்தப்படி மக்களை நடத்தவேண்டியவர்கள். ஞானம் போதிக்க கடமைபட்டவர்கள், அதற்கே அழைக்கபட்டவர்கள்.

தன்னை ஒறுத்து தவம் செய்து ஞானச் சுடராக எரிந்து ஞானவழி காட்டவேண்டியவர்கள், அவர்கள் லௌகீக வாழ்வின் தங்கம் தேடி திசைமாறி செல்வதை அறிந்த முருகப்பெருமான் ஞானம் கொடுக்க சித்தம் கொண்டார்.

அதன்படி ஆடுமேய்கும் சிறுவன் வடிவில் அப்பக்கம் வந்தவர் திடீரென அந்த சித்தர்கள் வைத்திருந்த தங்கத்தை எடுத்து ஓட தொடங்கினார்.

சித்தர் கூட்டம் அவரை விரட்டியது. தங்கள் தவசக்தியால் அவரை முடக்கப் பார்த்தது, “நில் நில்” என பின்னால் ஓடியபடி முயற்சித்தது.

ஆனால், சிரித்துக்கொண்டே போக்கு காட்டி ஓடிக்கொண்டிருந்தார் முருகப்பெருமான்.

அந்நேரம் பழனியில் தங்கியிருந்த போகருக்கு முருகனின் திருவிளையாடல் ஞான திருஷ்டியில் தெரிந்தது. அவர் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.

சித்தர்கள் தங்களால் பிடிக்க முடியாத ஆடுமேய்க்கும் சிறுவன் பின்னால் ஓடினார்கள், அந்நேரம் அங்கு எதிர்பட்ட ஓளவையார் “வை பொன்னை” என்றார்.

முருகப்பெருமான் சிரித்தபடி அதனை வைக்க அந்தப் பொன் கல்லாக மாறிற்று. ஒளவையார் வாக்குப்படி “வை பொன்னை” என சொன்ன இடம் வைப்பொன் மலை என்றாகி பின் வையப்ப மலையாயிற்று.

நடந்ததை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த போகர் நடந்த சம்பவத்துக்கு சாட்சியாய் நின்றார். இது பழனி முருகனின் திருவிளையாடல் என்றார். அதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்கிற்று.

இது “சிறு பழனி” எனக் கொண்டாட போகரே காரணமானார்.

இதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது. பொன் செய்த சித்தர்களுக்கு முருகன் செய்த திருவிளையாடலில் இருந்து தொடங்குகின்றது.

வாழ்வில் செல்வம் முக்கியமல்ல, தேடல் முழுக்க செல்வமல்ல, இறைவனை தேடுவதே பிறப்பின் நோக்கம். இறைவனைத் தேடினால் எல்லாமே கைகூடும். இறைவனை மறந்து போனால் எதுவும் நிலைக்காது என்பதே இந்த தலத்தில் முருகப்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடலின் தாத்பரியம்.

இந்த ஆலயம் இன்னும் ஒருவகையில் பிரசித்தியானது, அது கந்தபுராணத்து யாகத்தின் காட்சி.

நாரதர் ஒரு யாகம் செய்து அதிலிருந்து ஒரு பெரிய ஆட்டுகடா தோன்றி அதனை யாரும் அடக்கமுடியாமல் அது பெரும் அட்டகாசம் செய்தது நடந்தது. அந்தக் கிடாவினை முருக பெருமானே அடக்கி தன் வாகனமாக்கினார்.

அந்தக் கிடா முருகனிடம் அடங்கிய தலம் இதுதான்.

இந்தக் குறிப்புகள் “கொங்குவேளாளர் புராணவரலாறு” என்ற நூலிலும், கல்லாடம் என்ற பழைய ஏட்டிலும் உண்டு.

“நாரதன் ஓம்பிய செந்தீக்கொடுத்த திருகுபுரி கோட்டுத் தகர்வரு மதியோய்” என அவ்வரி குறிப்பிடப்பட்டுள்ளது.

“அங்கட் புவனம் அனைத்தும் அழித்துலவும் செங்கட்கிடாயதனை சென்றுகொணர்ந்து எங்கோன்” எனக் கந்தர் கலிவெண்பா சொல்கின்றது.

“கொல்லியும் வைகை அலைவாய் பழனி பொற்கொங்கணவர்
வில்லியும் ஓதி வராகம் தலைமலை வெண்ணெய்மலை
அல்லியை சென்னிகிரி கஞ்சம் வெள்ளி அரவகிரி
வல்லியும் வாளை மலை சூழ்வது கொங்கு மண்டலமே”

என்று கார்மேக கவிஞரின் “கொங்கு மண்டல சதகம்” இந்த ஆலயம் பற்றி கூறுகிறது.

வைகைபொன்மலை மகத்துவ பாசுரம், முருகொளி, வையப்பமலை குமாரர்மேல் தாய்-மகள் ஏசல், சுப்பிரமணியர் பாடல் ஆகிய நூல்கள் இந்தத் தலத்தைப் பற்றி பாடப்பட்டுள்ளன‌.

இந்த ஆலயத்தின் மூலவர் சிலை கொங்கண முனிவரால் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு வழிபடபட்டது, பழனி போலவே மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஆலயம் இது.

இந்த முருகப்பெருமானின் தண்டாயுதபாணி தோற்றம் சிலாகிப்பானது. குமாரதந்திரம் மற்றும் ஸ்ரீ தத்துவ நிதி ஆகிய நூல்கள் பெருமானின் இந்த திருக்கோலத்தை மிகச் சிறப்பானதாகக் குறிப்பிடுகின்றன. மூலஸ்தானத்தில் இரண்டு கரத்தினராக இடையில் கையை ஊன்றியவராகக் காட்சி அளிக்கிறார் சுப்பிரமணியர்.

எத்தனையோ சித்தர்களால் மகான்களால் வழிபடப்பட்ட இந்த ஆலயம் இக்காலத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், சுத்தானந்த பாரதி, குன்றக்குடி அடிகளார், சுப்பிரமணியக் கவிராயர், முருகொளி வைத்தியலிங்கம் எனப் பலராலும் வழிபடப்பட்டு கொண்டாடப்பட்டது.

முருகப்பெருமான் ஆலயம் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. படிகளில் ஏறும் முன் கீழே சந்நிதி கொண்டுள்ள விநாயகப் பெருமானை தரிசித்தல் வேண்டும்.

படி வழியில் சப்தகன்னியர் சந்நிதி, அருகே கருப்பண்ணசுவாமி, கொடிமரம் ஆகிய அமைப்புடன் அமைந்திருக்கிறது இந்த ஆலயம்.

மேலே கோயிலுக்குச் சென்றவுடன் சிவாலய காவலராக விளங்கும் பைரவ‌ மூர்த்தி, நவக்கிரகங்களின் சந்நிதிகள் உண்டு.

மார்க்கண்டேயனின் உயிர்காக்க காலசம்ஹாரனாக வெளிப்பட்ட சிவபிரான் அமிர்தகடேஸ்வரர் என்கிற திருநாமத்துடன் லிங்கத் திருமேனியாகத் தரிசனம் அளிக்கிறார்.

இங்கு அம்பிகை அபிராமி வள்ளியாகச் சந்நிதி கொண்டிருக்கிறார். இதனைத் தாண்டி முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக அருள்பாலிக்கின்றார்.

இந்த ஆலயம் பழனி ஆலயத்தின் இன்னொரு வடிவம். அதே போல் மேற்கு பார்த்து அமைந்திருக்கும் அதே தண்டாயுதபாணி கோலம் கொண்ட ஆலயம்.

போகரும், கொங்கண முனிவரும் ஸ்தாபித்து தந்த ஆலயம். ஒளவையார் முருகனை நிறுத்தி அருள்பாலிக்க வைத்த ஆலயம்.

முருகப்பெருமானால் ஆட்கொள்ளபட்ட சித்தர்கள் முருகப்பெருமானை தியானத்தால் அடைந்து நல்ல அதிர்வுகளை ஈர்த்து நிறுத்திய இடம்.

பழனி திருத்தலத்திற்கு சண்முகநதி தீர்த்தமாக விளங்குவது போல வைகை பொன்மலைக்கு திருமணிமுத்தாறு விளங்குகிறது.

பழனி ஆலயம் ஆண்டி கோலத்தில் முருகன் நின்று ஞானம் போதிக்கும் ஆலயம். ஆணவம் அகற்றி இறைவனை வழிபட்டால் லௌகீக மாய ஆசைகளை மயக்கங்களை களைந்தால் ஞானம் பிறக்கும். அதனால் முக்தி கிடைக்கும் எனப் போதிக்கும் ஆலயம்.

அதைத்தான் இந்த ஆலயமும் போதிக்கின்றது.

இங்கு வழிபட்டால் வாழ்வின் பொருளாதார சிக்கல் தீரும், ஆணவம் அகலும், அறிவும் சிந்தனையும் சீராகும், சாதுர்யம் கூடும், நோய்கள் பிணிகள் அகலும், எல்லாச் செல்வமும் வாய்க்கும், குடும்பம் செழிக்கும், செல்வாக்கும் பெரும் கீர்த்தியும் வாழ்வும் வளமும் சூழ்ந்து நிற்கும்.

தங்கம் உங்கள் வீட்டில் பெருகும்.

நாமக்கல் பக்கம் செல்லும் போது இங்கு தவறாமல் சென்று வழிபடுங்கள். முருகப்பெருமானே வந்து நின்ற மலையில் அவரிடம் மண்டியிட்டு வேண்டுங்கள்.

உங்களுக்கு எது தேவையோ அதனை அந்த முருகன் அருள்வார். அங்கோர் சித்தர் சமாதியும் உண்டு. அது கொங்கணவர் சமாதி .

அந்தச் சமாதியில் வழிபட்டு அந்தச் சித்தர்கள் இன்றும் தேனீக்களாக வாழும் தேனடையினை, பல நூறு ஆண்டுகாலமாக நிற்கும் தேன் கூட்டினையும் கண்டு சித்தர்கள் அருளையும் பெற்று வாருங்கள். உங்கள் வாழ்வே மாறும்‌. இது சத்தியம்.

அடுத்து சேர்ந்தமங்கலம் தத்தகிரி முருகன் ஆலயம்.

இது நாமக்கல் அருகே சேர்ந்தமங்கலம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த குன்று முதலில் சித்தர்கள் பலர் தவம் செய்த இடமாக இருந்துள்ளது “சித்தர் கரடு” என அதற்குப் பெயர்.

இந்த இடத்துக்கு வந்து ஆலயம் ஸ்தாபித்தவர் ஶ்ரீஸ்வயம்பிரகாச பிரம்மேந்திர சுவாமிகள்.

இவர் திருவெண்ணெய் நல்லூர் அருகே கல்பட்டு கிராமத்தில் பிறந்தவர். இவரின் பூர்வ ஜென்ம தொடர்பால் தத்தாத்ரேய மாமுனி இவரை ஆட்கொண்டார்.

தத்தாத்ரேயர் வியாச பகவானுக்கே குருவாக இருந்தவர். மும்மூர்த்திகளின் வடிவம், எல்லா வேதங்களுக்கும் அதிபதி, தியானத்தின் மூலம்.

அவர் இவரை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றார். எங்கெல்லாமோ சென்ற ஶ்ரீஸ்வயம்பிரகாச சுவாமிகள் கடைசியில் இந்த இடத்தில் நிலையாக அமர்ந்தார்.

அவர் உருவாக்கிய ஆலயம்தான் இந்த முருகன் ஆலயம். சித்தர்கள் எப்போதும் முருகப்பெருமானையே வழிபடுவார்கள். அப்படி ஶ்ரீஸ்வயம்பிரகாச சுவாமிகள் எனும் திகம்பர ஞான உருவம் உருவாக்கிய தலம் இது.

இந்த மலையின் அடிவாரத்தில்தான் தத்தாத்ரேயருக்கு ஒரு மடம் அமைத்து ஶ்ரீஸ்வயம்பிரகாச சுவாமிகள் தங்கியிருந்தார். அங்கேயே சமாதியும் அடைந்தார்.

இதனால் இம்மலை தத்தாத்ரி மலை என்றாயி பின் தத்தகிரி என்றாயிற்று.

குன்றின் அடியில் விநாயகரை வணங்கி முருகனை நோக்கிச் செல்ல வேண்டும். இடையில் கருப்பண்ண சந்நிதி உண்டு.

ததகங்கா தேவி சந்நிதியும் உண்டு.

இங்கிருக்கும் தூண்களிலெல்லாம் ஶ்ரீஸ்வயம்பிரகாச சுவாமிகளின் ஞானமொழிகள் வைக்கப்பட்டுள்ளன. மிக அருமையான வாழ்க்கை மற்றும் ஆன்மீக தத்துவங்கள் அவை.

ஆலயத்தின் இடப்புறம் ஐயப்பன் சாஸ்தா, வனதுர்க்கை அம்மன், சனீஸ்வரர், தஷிணாமூர்த்தி, மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோர் உண்டு.

இவர்கள் அனைவரும் கர்மயோக வடிவங்கள், சித்த ஞான தத்துவங்கள், பெரும் ஞானம் அருளும் தெய்வங்கள்.

ஆலய இடப்புறம் ஶ்ரீஸ்வயம்பிரகாச சுவாமிகள் சன்னதி உண்டு. அதன் அருகே முருகப்பெருமான் அருளாசி தருகின்றார்.

இந்த ஆலயம் சித்தர்களால் அடையாளம் காட்டப்பட்டு, மாபெரும் யோகியான ஶ்ரீஸ்வயம்பிரகாச சுவாமிகளால் உலகுக்குச் சொல்லப்பட்ட அருள் ஸ்தலம்.

எவ்வளவோ சித்தர்கள் இன்றும் நடமாடும் ஆலயம். முருகப்பெருமானோடு தத்தாத்ரேயரும், ஶ்ரீஸ்வயம்பிரகாச சுவாமிகளும் அருள் வழங்கும் ஆலயம்.

வாழ்வின் எல்லா வகை சிக்கலும் அற்புதமாகத் தீரும் தலம் இது. ஆன்மீகம் தேடும் மனதை அடுத்த படிநிலைக்கு உயர்த்தும் பெரும் பீடம் இது.

இங்கு முருகப்பெருமானை வழிபட்டு அப்படியே தத்தாத்ரேயரை வணங்கி ஶ்ரீஸ்வயம்பிரகாச சுவாமிகளையும் வேண்டி வருதல் பெரும் அருளைத்தரும்.

நாமக்கல் பக்கம் செல்லும் போது இந்த ஆலயங்களை தரிசிக்க‌ச் தவறாதீர்கள். இவை எல்லாம் மாபெரும் சித்தர்களும், மகான்களும் இன்றும் அரூபமாய் அருளாசி தரும் தலம். அந்த அருளுடன் முருகப்பெருமான் அருளும் சேர்ந்து பெரும் நல்ல மாற்றங்களை உங்கள் வாழ்வில் தரும்‌. இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : இலஞ்சி குமாரசாமி கோவில் கொழுந்தமாம‌லை முருகன் கோவில்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : இலஞ்சி குமாரசாமி கோவில் கொழுந்தமாம‌லை முருகன் கோவில்.

தமிழகத்து முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது இந்த இலஞ்சி ஆலயம். தென்காசி மாவட்டத்தில் திரு இலஞ்சி என திருக்குற்றாலம் அருகே அது அமைந்துள்ளது. குற்றாலத்தில் இருந்து வெகு சமீபமானது.

இந்த ஆலய வரலாறு அகத்திய முனியிடம் இருந்தே துவங்குகின்றது. வடக்கே சிவன் பார்வதி திருமணத்தை ஒட்டி தேவர்களும் இன்னும் யாரெல்லாமோ குவிய நிலம் வடக்கே சரிந்து தெற்கே உயர்ந்தது.

இந்தச் சமமில்லா நிலை பெரிய பாதிப்பை கொடுத்தது. ஆறுகள் வடக்கே சரிந்தன. கடல் மட்டம் குழம்பிற்று. மழை பெய்தாலும் விவசாயம் செய்ய வழியில்லை. நீர் தேக்க வழியில்லை, பெரும் குழப்பமானது, எல்லா உயிரும் பாதிக்கப்பட்டன‌.

அதனால் மறுபடி சமநிலை ஏற்படுத்த சித்தம் கொண்ட சிவபெருமான் அகத்தியரை தெற்கே அனுப்பினார். பொதிகை மலை பக்கம் வந்தார் அகத்திய மாமுனி.

அவர் பனிமலையில் சிவனைக் கண்டவர். எங்கும் பனிசூழ்ந்து கிடக்கும் வெண்ணிற பூமியில் சிவனைக் கண்டவர், அங்கு அவர் வழிபட்ட லிங்கமெல்லாம் வெண்ணிற லிங்கமே.

அந்த நினைவில் வெண்மணலால் ஒரு லிங்கம் செய்து சிவனைத தொழுதார். வெண்ணிற லிங்கத்தில் சிவனை ஆராதித்து தொழுதார், அது “இருவாலுக லிங்கம்” என்றாயிற்று.

“இருவாலுக” என்றால் வெண்மையான சுத்தமான என வடமொழி வார்த்தையின் சாயலில் வரும். இருவாச்சிப் பூ என வெண்ணிற மலர்க்குப் பெயர் வந்தது அப்படித்தான்.

அகத்தியவர் வழிபட்ட அந்தச் சிவன் இருவாலிக நாதர் என்றானார், அன்னை இருவாலிக நாயகி எனப் பெயர்பெற்றார்.

அகத்தியர் பொருட்டு அங்கே வெண்ணிற லிங்கமாய் கயிலாய தோற்றத்தில் சிவன் எழுந்தருள அதிலிருந்து இந்த ஆலயத்தின் வரலாறு தொடங்குகின்றது.

நீரும் தாமரையும் நிறைந்த இந்த இடம் இலஞ்சி எனப் பெயர் பெற்று சிவலிங்கத்தோடு நிலைத்தது இந்தத் தலம்.

இங்கே முருகப்பெருமான் குடிகொண்ட கதை சுவாரஸ்யமானது. அதற்கு காரணம் மூன்று மகா முனிகள்.

கபில முனி, துர்வாசமுனி, காசிப முனி என மூவர். அந்தக் காலத்தில் அகத்தியர் அத்ரி முனிவர் எனப் பெரும் முனிவர்களெல்லாம் பொதிகை மலையில் வசித்ததால் அங்கே குடில் அமைத்து தவம் செய்ததால் எப்போதும்
பலர் அவர்களைக் காண வருவார்கள், அந்த மலையின் அமைதியான சாரலில் தவமிருப்பார்கள்.

பொதிகை மலை என்பது அகத்தியர் மட்டும் இருந்த இடம் அல்ல, அவரைத் தேடி எத்தனையோ மாபெரும் ரிஷிகளெல்லாம் வந்து சந்தித்து ஆசிபெற்ற இடம், அப்படி இவர்களும் வந்தார்கள், வந்தவர்கள் வாதம் ஒன்றைத் தொடங்கினார்கள்.

மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர்? யார் இந்த பிரபஞ்சத்தில் முக்கியமானவர்? மூவரை இயக்கும் சக்தி எது எனப் பெரும் விவாதம் செய்தார்கள்.

காசிப முனிவர் எல்லாம் பிரம்மனே என்றார், துர்வாசர் எல்லாமே விஷ்ணு என்றார், கபில முனிவரோ சர்வம் சிவம் என்றார்.

படைப்பே பிரதானம் என்றார் ஒருவர், அழிப்பே பிரதானம் என்றார் இன்னொருவர், காத்தலே மகா முக்கியம் என்றார் இன்னொருவர்.

இவர்கள் இப்படி மகா பெரிய விவாதம் செய்து கொண்டே இருந்தார்கள், முடிவு எட்டப்படவில்லை.

இது சாதாரண சர்ச்சை அல்ல முழு ஞானம் கொண்ட , எல்லா நிலையிலும் முழுமையும் பரிபூரணமும் அடைந்த மகா ஞானம் கொண்டவர் அவசியம், அப்படிபட்ட ஞானவான் ஒருவராலே, இவர்களை விட மேம்பட்ட ஞானம் ஒருவராலேதான் அதை விளக்க முடியும்.

இதனால் சிந்தித்தார்கள். சித்தர்களுக்கு தலைமை சித்தர் அகத்தியர், அகத்தியருக்கும் தலைவர் முருகப்பெருமான்.

சித்தர்கள் இருக்குமிடமெல்லாம் முருகப்பெருமான் இருப்பார். காரணம், சித்தர்கள் பெரும் ஞானம் தேடுபவர்கள், அவர்களின் தேடலுக்கு ஞானபண்டிதனான முருகப்பெருமானிடம் மட்டுமே பதில் உண்டு.

இதனாலே இன்றும் முருகப்பெருமான் ஆலயத்தின் அருகில் நிச்சயம் ஒரு சித்தர் சமாதி இருக்கும் அல்லது சித்தர் வசிப்பார், இது விதி அல்லது முருகப்பெருமான் வழிபாட்டு தத்துவம்.

இதனால் முருகப்பெருமானிடமே முறையிட முனைந்தனர் மூவரும். அவரை அழைத்தனர்.

அவர்களுக்குத் தோன்றினார் முருகப்பெருமான். அவர்கள் அவரை வணங்கி கொண்டிருக்கும் போதே அவர் சிவன், பிரம்மன், விஷ்ணு என மாறி மாறி தோன்றினார்.

அப்போதுதான் இந்த ரிஷிகள் உண்மை உணார்ந்தார்கள். முருகப்பெருமானே எல்லாவற்றுக்கும் ஆதாரம், எல்லா ஞானமும் அவரிடம் இருந்தே வருகின்றது என்பதை உணர்ந்தார்கள்.

முத்தொழிலின் அடிப்படை ஞானம் முருகப்பெருமானுடையது. அவரே எல்லாத் தெய்வங்களிலும் ஞான வடிவாக நின்று இயக்குகின்றார் என முழுக்க உணர்ந்து பணிந்தார்கள்.

அவர்களின் எல்லாக் குழப்பமும் மறைந்தது. எல்லாமே முருகபெருமான் எனப் பணிந்தவர்கள் அவரிடம் ஒரு வரம் கேட்டார்கள். இந்த ஆலயத்தில் எப்போதும் முருகப்பெருமான் குடியிருந்து எல்லா மக்களின் குறைகளும் தீர்க்க வரம் கேட்டார்கள்.

அப்போதிருந்து அங்கே முருகப்பெருமான் அருள் பாலிக்கத் தொடங்கினார். அகத்தியர் ஸ்தாபித்த சிவாலயம் குமரன் ஆலயமாயிற்று.

இங்கு எல்லா மக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தர முருகப்பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

இங்கே எல்லா முருகபக்தர்களும் வந்து வணங்கினார்கள். அருணகிரி நாதர் ஓடோடி வந்து வணங்கினார்.

”கரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு துரந்தெரிகின்ற விழிவேலால்”

”கொந்தள ஓலை குலுங்கிடவாளி” ”கரங்கமலின் தரம்பவளம்வளை” ” மலையில் வந்து மாலை வழங்கு” எனத் தொடங்கும் பல பாடல்களில் இந்த ஆலயத்து முருகனைப் போற்றிப் பாடுகின்றார்.

திருகுற்றால புராணம் இந்த ஆலய பெருமையினைச் சொல்கின்றது. குற்றாலக் குறவஞ்சி எழுதிய திரிகூட ராசப்ப கவிராயர் இந்த ஆலயம் பற்றி பல இடங்களில் பாடியிருக்கின்றார்.

இந்த முருகனுக்கு “வரதராஜன்” எனப் பெயர் உண்டு. அதைத் தந்தவர் அருணகிரி நாதர். பொதுவாக வரத ராஜன் எனும் பெயர் பெருமாளுக்கே உண்டு. இங்கு வரம்பல அருள்வதாலும் விஷ்ணுவின் வடிவம் காட்டியதாலும் முருகனே “வரதராஜ குமரன்” எனக் கொண்டாடப்படுகின்றார்.

இந்த ஆலயம் சிறப்பானது. இங்கு அகத்தியர் ஸ்தாபித்த வெண்மணல் லிங்கம் இன்றும் உண்டு. ஆனால், வெள்ளி காப்பு இடப்பட்டு வணங்கப்படுகின்றது.

இங்குப் பல சன்னதிகள் உண்டு. பரிவார மூர்த்திகளாக அதிகார நந்தி, சூரியன், சுரதேவர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், கன்னி மூல கணபதி.

வேணு கோபாலர், காசி விசுவநாதர் விசாலாட்சி, திருக்குற்றாலநாதர் – குழல்வாய்மொழி அம்மை, ஐயனார், அகத்தியர், சப்த கன்னியர்கள், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், சண்முகப்பெருமான், நடராஜர், பைரவர், சந்திர பகவான் எனப் பலருக்கு சந்நிதி உண்டு.

சுவர்களில் அந்தத் துர்வாசர் முதலானவர்களுக்கு சிற்பமும் உண்டு.

இங்குப் பிரசாதமாக தோசை, அப்பம் முதலியன வழங்கப்படும். இந்த ஆலயம் மிக சக்தி மிக்கது.

அகத்தியர் காலம் தொடங்கி பின்னாளில் எல்லா மன்னர்களும் கொண்டாடினார்கள். பாண்டியரில் மாறவர்மன் குலசேகரன் இங்குப் பெரிய ஆலயம் அமைத்தான். சேர மன்னர்கள் இன்னும் திருப்பணி செய்தார்கள்.

இங்கே கந்த சஷ்டி விமரிசையாகக் கொண்டாடபடும்‌ அப்போது முருகப்பெருமான் மும்மூர்த்திகள் வடிவில் முதல் மூன்று நாட்களுக்கு காட்சி தருவார்.

இங்கு ஆண்டின் பிரதான திருவிழாவாக சித்திரை திருநாள் விசேஷமாக கொண்டாடப்படும். மற்ற காலங்களில் முருகப்பெருமானின் சஷ்டி நாட்கள் விசேஷம். தைப்பூசம், ஆடிக் கார்த்திகை, போன்றவை இன்னும் விசேஷமாக கொண்டாடப்படும்.

இந்த இலஞ்சி முருகன் ஞானப் பண்டிதன். மகா ஞானிகளுக்கு வந்த சிக்கலையே சந்தேகத்தையே தீர்த்து வைத்தவர்.

அதுவும் சிவன் “இருவாலிக லிங்கம்” என்றும், முருகப்பெருமான் வரதராஜ குமரன் என்றும் வீற்றிருப்பதால் இது மகா சக்தியான ஆலயம்.

வெண்மை என்பது பரிசுத்தமான ஞானத்தின் அடையாளம். அங்கு சிவனும் ஞானம் போதிப்பார். அவரோடு முருகப்பெருமானின் பெரும் அருள் கூடும் போது எல்லா நல்ல பலன்களும் கிடைக்கின்றன‌.

இங்குத் திருமணத் தடை நீங்கும், புத்திர பாக்கிய தரும், கடன் தொல்லை தீர்க்கும், எல்லா வளமும் தரும்.

குறிப்பாக, எது உங்கள் பெரும் சிக்கலோ அதனை ஞானமாக தீர்த்து வைக்கும் மாபெரும் வரத்தை இந்த ஆலயம் தரும்.

குற்றாலம் செல்லும் போது இலஞ்சியில் இருக்கும் இந்த வரதராஜ குமரனை அந்த வெண்மணல் லிங்க சிவனோடு தரிசிக்க மறவாதீர்கள். அங்குச் சென்று நீங்கள் முருகனைத் தரிசிக்கும் நொடியில் எல்லாச் சிக்கலும் வேதனையும் குழப்பமும் தீரும், வாழ்வு வளமாகத் தொடங்கும்.

இன்னொரு ஆலயம் நெல்லைமாவட்டம் சேரன்மகாதேவி அருகே அமைந்திருக்கும் கொழுந்துமாம‌லை முருகன் ஆலயம்.

இந்த ஆலயம் இராமாயண காலத்துடன் தொடர்புபட்டது. இலங்கைக்குச் சஞ்சீவ மலையினை அனுமன் சுமந்து சென்றபோது அதிலிருந்து விழுந்த ஒரு துண்டு இந்த மலை, மூலிகைகள் அதிகம் கொண்ட மலை இது.

இங்கே சித்தர்கள் பலர் தவம் செய்து அதனை சக்தி மிக்கதாக மாற்றினார்கள். இங்கே முருகன் எழுந்தருளியது தன் அடியார் ஒருவர் மூலமே.

திருசெந்தூரில் தன்னை தேடிப்பணிந்த அடியார்க்கு இந்த மலையில் வந்து அமர முருகன் கட்டளையிட்டார். அதன்படி அந்த அடியார் வந்து இங்கு அமர்ந்து தவம் செய்தார்.

அவரின் தவத்தின் பலனாக முருக பெருமானே அவருக்குப் பாலன் வடிவில் காட்சி அளித்தார்.‌ அவர் காட்சியளித்த இடத்தில்தான் இன்றைய ஆலயம் கட்டப்பட்டது.

கருவறையில் முருகப்பெருமான் நின்ற நிலையில் அபயகரத்துடன் காட்சி தருகின்றார். அங்கே விநாயகருக்குத் தனி சன்னதி உண்டு.

வெளியே இடும்பன் சன்னதி உண்டு. அப்படியே சிவபார்வதி கங்கை அம்மனுக்குத் தனி தனி சன்னதிகள் உண்டு.

ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் இளநீர் கிணறு ஒன்று உண்டு. அது அடியாருக்காக முருக பெருமானே ஏற்படுத்திய ஒன்று.

பால்போல் நீர் கொண்டது என்பதால் இது பாலூற்று என்றும் அழைக்கபடும். இளநீரின் சுவை கொண்ட இந்த நீர் சர்வ நோய்களையும் தீர்க்கும் சக்தி கொண்ட மூலிகை நீர், இந்த ஆலயத்தில் அது மகா விஷேசம்.

இங்கு முருகப்பெருமான் பால சுப்பிரமணியனாக அருள்பாலிக்கின்றார். மூலிகை நிரம்பிய இந்த மலையின் காற்றும் நீருமே ஆரோக்கியம் தரும். அதனோடு முருகப்பெருமானின் தனி அருளும் சேரும் போது எல்லா நோய்களும் தீர்கின்றன‌.

மாதத்தின் கடைசி வெள்ளி இங்கு பெரும் விசேஷம். தொடர்ந்து ஆறு கடைசிவெள்ளி அதாவது ஆறுமாதம் இங்கு கடைசி வெள்ளி விரதமிருந்து வழிபட்டால் கிடைக்காத வரம் என எதுவுமே இல்லை.

தெற்கே செல்லும் போது இந்த இரு ஆலயங்களையும் வழிபடத் தவறாதீர்கள். இரண்டுமே ஞானமும் அறிவும் நல்ல ஆரோக்கியமும் தரும் ஆலயங்கள். எல்லாத் தடைகளையும் தகர்த்து உங்கள் வேண்டுதலை நிறைவேற்றித் தரும் ஆலயங்கள். அங்கு வழிபட்டு எது உங்கள் தேவையோ எது இவ்வாழ்வில் அவசியமோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

வரதராஜ குமாரனாகவும் , பால சுப்பிரமணியனாகவும் நிற்கும் எம்பெருமான் உங்களுக்கு எல்லா வரமும் நிரம்ப அருள்வார். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : இலஞ்சி குமாரசாமி கோவில் கொழுந்தமாம‌லை முருகன் கோவில்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : இலஞ்சி குமாரசாமி கோவில் கொழுந்தமாம‌லை முருகன் கோவில்.

தமிழகத்து முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது இந்த இலஞ்சி ஆலயம். தென்காசி மாவட்டத்தில் திரு இலஞ்சி என திருக்குற்றாலம் அருகே அது அமைந்துள்ளது. குற்றாலத்தில் இருந்து வெகு சமீபமானது.

இந்த ஆலய வரலாறு அகத்திய முனியிடம் இருந்தே துவங்குகின்றது. வடக்கே சிவன் பார்வதி திருமணத்தை ஒட்டி தேவர்களும் இன்னும் யாரெல்லாமோ குவிய நிலம் வடக்கே சரிந்து தெற்கே உயர்ந்தது.

இந்தச் சமமில்லா நிலை பெரிய பாதிப்பை கொடுத்தது. ஆறுகள் வடக்கே சரிந்தன. கடல் மட்டம் குழம்பிற்று. மழை பெய்தாலும் விவசாயம் செய்ய வழியில்லை. நீர் தேக்க வழியில்லை, பெரும் குழப்பமானது, எல்லா உயிரும் பாதிக்கப்பட்டன‌.

அதனால் மறுபடி சமநிலை ஏற்படுத்த சித்தம் கொண்ட சிவபெருமான் அகத்தியரை தெற்கே அனுப்பினார். பொதிகை மலை பக்கம் வந்தார் அகத்திய மாமுனி.

அவர் பனிமலையில் சிவனைக் கண்டவர். எங்கும் பனிசூழ்ந்து கிடக்கும் வெண்ணிற பூமியில் சிவனைக் கண்டவர், அங்கு அவர் வழிபட்ட லிங்கமெல்லாம் வெண்ணிற லிங்கமே.

அந்த நினைவில் வெண்மணலால் ஒரு லிங்கம் செய்து சிவனைத தொழுதார். வெண்ணிற லிங்கத்தில் சிவனை ஆராதித்து தொழுதார், அது “இருவாலுக லிங்கம்” என்றாயிற்று.

“இருவாலுக” என்றால் வெண்மையான சுத்தமான என வடமொழி வார்த்தையின் சாயலில் வரும். இருவாச்சிப் பூ என வெண்ணிற மலர்க்குப் பெயர் வந்தது அப்படித்தான்.

அகத்தியவர் வழிபட்ட அந்தச் சிவன் இருவாலிக நாதர் என்றானார், அன்னை இருவாலிக நாயகி எனப் பெயர்பெற்றார்.

அகத்தியர் பொருட்டு அங்கே வெண்ணிற லிங்கமாய் கயிலாய தோற்றத்தில் சிவன் எழுந்தருள அதிலிருந்து இந்த ஆலயத்தின் வரலாறு தொடங்குகின்றது.

நீரும் தாமரையும் நிறைந்த இந்த இடம் இலஞ்சி எனப் பெயர் பெற்று சிவலிங்கத்தோடு நிலைத்தது இந்தத் தலம்.

இங்கே முருகப்பெருமான் குடிகொண்ட கதை சுவாரஸ்யமானது. அதற்கு காரணம் மூன்று மகா முனிகள்.

கபில முனி, துர்வாசமுனி, காசிப முனி என மூவர். அந்தக் காலத்தில் அகத்தியர் அத்ரி முனிவர் எனப் பெரும் முனிவர்களெல்லாம் பொதிகை மலையில் வசித்ததால் அங்கே குடில் அமைத்து தவம் செய்ததால் எப்போதும்
பலர் அவர்களைக் காண வருவார்கள், அந்த மலையின் அமைதியான சாரலில் தவமிருப்பார்கள்.

பொதிகை மலை என்பது அகத்தியர் மட்டும் இருந்த இடம் அல்ல, அவரைத் தேடி எத்தனையோ மாபெரும் ரிஷிகளெல்லாம் வந்து சந்தித்து ஆசிபெற்ற இடம், அப்படி இவர்களும் வந்தார்கள், வந்தவர்கள் வாதம் ஒன்றைத் தொடங்கினார்கள்.

மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர்? யார் இந்த பிரபஞ்சத்தில் முக்கியமானவர்? மூவரை இயக்கும் சக்தி எது எனப் பெரும் விவாதம் செய்தார்கள்.

காசிப முனிவர் எல்லாம் பிரம்மனே என்றார், துர்வாசர் எல்லாமே விஷ்ணு என்றார், கபில முனிவரோ சர்வம் சிவம் என்றார்.

படைப்பே பிரதானம் என்றார் ஒருவர், அழிப்பே பிரதானம் என்றார் இன்னொருவர், காத்தலே மகா முக்கியம் என்றார் இன்னொருவர்.

இவர்கள் இப்படி மகா பெரிய விவாதம் செய்து கொண்டே இருந்தார்கள், முடிவு எட்டப்படவில்லை.

இது சாதாரண சர்ச்சை அல்ல முழு ஞானம் கொண்ட , எல்லா நிலையிலும் முழுமையும் பரிபூரணமும் அடைந்த மகா ஞானம் கொண்டவர் அவசியம், அப்படிபட்ட ஞானவான் ஒருவராலே, இவர்களை விட மேம்பட்ட ஞானம் ஒருவராலேதான் அதை விளக்க முடியும்.

இதனால் சிந்தித்தார்கள். சித்தர்களுக்கு தலைமை சித்தர் அகத்தியர், அகத்தியருக்கும் தலைவர் முருகப்பெருமான்.

சித்தர்கள் இருக்குமிடமெல்லாம் முருகப்பெருமான் இருப்பார். காரணம், சித்தர்கள் பெரும் ஞானம் தேடுபவர்கள், அவர்களின் தேடலுக்கு ஞானபண்டிதனான முருகப்பெருமானிடம் மட்டுமே பதில் உண்டு.

இதனாலே இன்றும் முருகப்பெருமான் ஆலயத்தின் அருகில் நிச்சயம் ஒரு சித்தர் சமாதி இருக்கும் அல்லது சித்தர் வசிப்பார், இது விதி அல்லது முருகப்பெருமான் வழிபாட்டு தத்துவம்.

இதனால் முருகப்பெருமானிடமே முறையிட முனைந்தனர் மூவரும். அவரை அழைத்தனர்.

அவர்களுக்குத் தோன்றினார் முருகப்பெருமான். அவர்கள் அவரை வணங்கி கொண்டிருக்கும் போதே அவர் சிவன், பிரம்மன், விஷ்ணு என மாறி மாறி தோன்றினார்.

அப்போதுதான் இந்த ரிஷிகள் உண்மை உணார்ந்தார்கள். முருகப்பெருமானே எல்லாவற்றுக்கும் ஆதாரம், எல்லா ஞானமும் அவரிடம் இருந்தே வருகின்றது என்பதை உணர்ந்தார்கள்.

முத்தொழிலின் அடிப்படை ஞானம் முருகப்பெருமானுடையது. அவரே எல்லாத் தெய்வங்களிலும் ஞான வடிவாக நின்று இயக்குகின்றார் என முழுக்க உணர்ந்து பணிந்தார்கள்.

அவர்களின் எல்லாக் குழப்பமும் மறைந்தது. எல்லாமே முருகபெருமான் எனப் பணிந்தவர்கள் அவரிடம் ஒரு வரம் கேட்டார்கள். இந்த ஆலயத்தில் எப்போதும் முருகப்பெருமான் குடியிருந்து எல்லா மக்களின் குறைகளும் தீர்க்க வரம் கேட்டார்கள்.

அப்போதிருந்து அங்கே முருகப்பெருமான் அருள் பாலிக்கத் தொடங்கினார். அகத்தியர் ஸ்தாபித்த சிவாலயம் குமரன் ஆலயமாயிற்று.

இங்கு எல்லா மக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தர முருகப்பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

இங்கே எல்லா முருகபக்தர்களும் வந்து வணங்கினார்கள். அருணகிரி நாதர் ஓடோடி வந்து வணங்கினார்.

”கரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு துரந்தெரிகின்ற விழிவேலால்”

”கொந்தள ஓலை குலுங்கிடவாளி” ”கரங்கமலின் தரம்பவளம்வளை” ” மலையில் வந்து மாலை வழங்கு” எனத் தொடங்கும் பல பாடல்களில் இந்த ஆலயத்து முருகனைப் போற்றிப் பாடுகின்றார்.

திருகுற்றால புராணம் இந்த ஆலய பெருமையினைச் சொல்கின்றது. குற்றாலக் குறவஞ்சி எழுதிய திரிகூட ராசப்ப கவிராயர் இந்த ஆலயம் பற்றி பல இடங்களில் பாடியிருக்கின்றார்.

இந்த முருகனுக்கு “வரதராஜன்” எனப் பெயர் உண்டு. அதைத் தந்தவர் அருணகிரி நாதர். பொதுவாக வரத ராஜன் எனும் பெயர் பெருமாளுக்கே உண்டு. இங்கு வரம்பல அருள்வதாலும் விஷ்ணுவின் வடிவம் காட்டியதாலும் முருகனே “வரதராஜ குமரன்” எனக் கொண்டாடப்படுகின்றார்.

இந்த ஆலயம் சிறப்பானது. இங்கு அகத்தியர் ஸ்தாபித்த வெண்மணல் லிங்கம் இன்றும் உண்டு. ஆனால், வெள்ளி காப்பு இடப்பட்டு வணங்கப்படுகின்றது.

இங்குப் பல சன்னதிகள் உண்டு. பரிவார மூர்த்திகளாக அதிகார நந்தி, சூரியன், சுரதேவர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், கன்னி மூல கணபதி.

வேணு கோபாலர், காசி விசுவநாதர் விசாலாட்சி, திருக்குற்றாலநாதர் – குழல்வாய்மொழி அம்மை, ஐயனார், அகத்தியர், சப்த கன்னியர்கள், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், சண்முகப்பெருமான், நடராஜர், பைரவர், சந்திர பகவான் எனப் பலருக்கு சந்நிதி உண்டு.

சுவர்களில் அந்தத் துர்வாசர் முதலானவர்களுக்கு சிற்பமும் உண்டு.

இங்குப் பிரசாதமாக தோசை, அப்பம் முதலியன வழங்கப்படும். இந்த ஆலயம் மிக சக்தி மிக்கது.

அகத்தியர் காலம் தொடங்கி பின்னாளில் எல்லா மன்னர்களும் கொண்டாடினார்கள். பாண்டியரில் மாறவர்மன் குலசேகரன் இங்குப் பெரிய ஆலயம் அமைத்தான். சேர மன்னர்கள் இன்னும் திருப்பணி செய்தார்கள்.

இங்கே கந்த சஷ்டி விமரிசையாகக் கொண்டாடபடும்‌ அப்போது முருகப்பெருமான் மும்மூர்த்திகள் வடிவில் முதல் மூன்று நாட்களுக்கு காட்சி தருவார்.

இங்கு ஆண்டின் பிரதான திருவிழாவாக சித்திரை திருநாள் விசேஷமாக கொண்டாடப்படும். மற்ற காலங்களில் முருகப்பெருமானின் சஷ்டி நாட்கள் விசேஷம். தைப்பூசம், ஆடிக் கார்த்திகை, போன்றவை இன்னும் விசேஷமாக கொண்டாடப்படும்.

இந்த இலஞ்சி முருகன் ஞானப் பண்டிதன். மகா ஞானிகளுக்கு வந்த சிக்கலையே சந்தேகத்தையே தீர்த்து வைத்தவர்.

அதுவும் சிவன் “இருவாலிக லிங்கம்” என்றும், முருகப்பெருமான் வரதராஜ குமரன் என்றும் வீற்றிருப்பதால் இது மகா சக்தியான ஆலயம்.

வெண்மை என்பது பரிசுத்தமான ஞானத்தின் அடையாளம். அங்கு சிவனும் ஞானம் போதிப்பார். அவரோடு முருகப்பெருமானின் பெரும் அருள் கூடும் போது எல்லா நல்ல பலன்களும் கிடைக்கின்றன‌.

இங்குத் திருமணத் தடை நீங்கும், புத்திர பாக்கிய தரும், கடன் தொல்லை தீர்க்கும், எல்லா வளமும் தரும்.

குறிப்பாக, எது உங்கள் பெரும் சிக்கலோ அதனை ஞானமாக தீர்த்து வைக்கும் மாபெரும் வரத்தை இந்த ஆலயம் தரும்.

குற்றாலம் செல்லும் போது இலஞ்சியில் இருக்கும் இந்த வரதராஜ குமரனை அந்த வெண்மணல் லிங்க சிவனோடு தரிசிக்க மறவாதீர்கள். அங்குச் சென்று நீங்கள் முருகனைத் தரிசிக்கும் நொடியில் எல்லாச் சிக்கலும் வேதனையும் குழப்பமும் தீரும், வாழ்வு வளமாகத் தொடங்கும்.

இன்னொரு ஆலயம் நெல்லைமாவட்டம் சேரன்மகாதேவி அருகே அமைந்திருக்கும் கொழுந்துமாம‌லை முருகன் ஆலயம்.

இந்த ஆலயம் இராமாயண காலத்துடன் தொடர்புபட்டது. இலங்கைக்குச் சஞ்சீவ மலையினை அனுமன் சுமந்து சென்றபோது அதிலிருந்து விழுந்த ஒரு துண்டு இந்த மலை, மூலிகைகள் அதிகம் கொண்ட மலை இது.

இங்கே சித்தர்கள் பலர் தவம் செய்து அதனை சக்தி மிக்கதாக மாற்றினார்கள். இங்கே முருகன் எழுந்தருளியது தன் அடியார் ஒருவர் மூலமே.

திருசெந்தூரில் தன்னை தேடிப்பணிந்த அடியார்க்கு இந்த மலையில் வந்து அமர முருகன் கட்டளையிட்டார். அதன்படி அந்த அடியார் வந்து இங்கு அமர்ந்து தவம் செய்தார்.

அவரின் தவத்தின் பலனாக முருக பெருமானே அவருக்குப் பாலன் வடிவில் காட்சி அளித்தார்.‌ அவர் காட்சியளித்த இடத்தில்தான் இன்றைய ஆலயம் கட்டப்பட்டது.

கருவறையில் முருகப்பெருமான் நின்ற நிலையில் அபயகரத்துடன் காட்சி தருகின்றார். அங்கே விநாயகருக்குத் தனி சன்னதி உண்டு.

வெளியே இடும்பன் சன்னதி உண்டு. அப்படியே சிவபார்வதி கங்கை அம்மனுக்குத் தனி தனி சன்னதிகள் உண்டு.

ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் இளநீர் கிணறு ஒன்று உண்டு. அது அடியாருக்காக முருக பெருமானே ஏற்படுத்திய ஒன்று.

பால்போல் நீர் கொண்டது என்பதால் இது பாலூற்று என்றும் அழைக்கபடும். இளநீரின் சுவை கொண்ட இந்த நீர் சர்வ நோய்களையும் தீர்க்கும் சக்தி கொண்ட மூலிகை நீர், இந்த ஆலயத்தில் அது மகா விஷேசம்.

இங்கு முருகப்பெருமான் பால சுப்பிரமணியனாக அருள்பாலிக்கின்றார். மூலிகை நிரம்பிய இந்த மலையின் காற்றும் நீருமே ஆரோக்கியம் தரும். அதனோடு முருகப்பெருமானின் தனி அருளும் சேரும் போது எல்லா நோய்களும் தீர்கின்றன‌.

மாதத்தின் கடைசி வெள்ளி இங்கு பெரும் விசேஷம். தொடர்ந்து ஆறு கடைசிவெள்ளி அதாவது ஆறுமாதம் இங்கு கடைசி வெள்ளி விரதமிருந்து வழிபட்டால் கிடைக்காத வரம் என எதுவுமே இல்லை.

தெற்கே செல்லும் போது இந்த இரு ஆலயங்களையும் வழிபடத் தவறாதீர்கள். இரண்டுமே ஞானமும் அறிவும் நல்ல ஆரோக்கியமும் தரும் ஆலயங்கள். எல்லாத் தடைகளையும் தகர்த்து உங்கள் வேண்டுதலை நிறைவேற்றித் தரும் ஆலயங்கள். அங்கு வழிபட்டு எது உங்கள் தேவையோ எது இவ்வாழ்வில் அவசியமோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

வரதராஜ குமாரனாகவும் , பால சுப்பிரமணியனாகவும் நிற்கும் எம்பெருமான் உங்களுக்கு எல்லா வரமும் நிரம்ப அருள்வார். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : ஊதியூர், அலகுமலை மற்றும் சிவன்மலை.

முருகப்பெருமான் ஆலயங்கள் : ஊதியூர், அலகுமலை மற்றும் சிவன்மலை.

கொங்குப் பகுதியின் முருகப்பெருமான் தலங்களில் இன்னும் முக்கியமான தலம் ஊதியூர் முருகன் கோவில். இது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ளது. குன்றின் மேல் அமைந்துள்ள அற்புத ஆலயம் இது.

இந்த ஆலயம் கொங்கணச்சித்தர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது. முருக பக்தரான அந்த கொங்கண முனி இங்குதான் வசித்துள்ளார்.

சித்தர்கள் உலக மக்களின் நலனுக்காகவே வாழ்பவர்கள். அப்படி இந்தப் பக்கம் பெரும் பஞ்சம் வந்தபோது கொங்கணர் தன் சக சித்தர்களான தேரையர் முதலானவர்களுடன் கூடி பெரும் யாகம் நடத்தினார். அந்த யாகத்தின் நெருப்பில் வறண்ட அந்தக் காடே எரிவது போல் பெரும் நெருப்பு எரிந்தது.

முருகப்பெருமான் அந்தப் புகை நடுவே தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். சித்தர்கள் இம்மக்கள் வாழ வழிசெய்யவேண்டும்; வளமை செய்ய வேண்டும் எனக் கோரினார்கள். அப்படியே முருகப்பெருமான் வரம்புரிந்தார்.

அதன் பின் இப்பக்கம் செழிக்க ஆரம்பித்தது. சித்தர்கள் ஊதி ஊதி நெருப்பு வளர்த்த இடம் என்பதால் இது ஊதியூரானது என்றும், அவர்கள் மந்திரங்களை ஓதிய இடம் ஓதியூராகி பின் ஊதியூர் என மருவிற்று என்றும் குறிப்புகள் உண்டு.

ஓதி எனும் மரங்கள் வளர்ந்த இடம் என்பதால் ஓதியூராகி பின் ஊதியூராயிற்று என்பதும் ஒரு குறிப்பு. இம்மரத்தின் பூக்கள் பொன் போல் மிளிர்வதால் “பொன் ஊதியூர்” எனும் பெயரும் உண்டு.

அனுமன் சுமந்த சஞ்சீவ மலையின் ஒரு துண்டு இங்கு விழுந்தது என்பதும் புராணச் செய்தி. அவ்வளவுக்கு பெரும் மூலிகைகள் வளர்ந்து கிடப்பதால் அது சாத்தியமான உண்மை.

இந்த மலையில் முருகப்பெருமானை உத்தண்ட வேலாயுத சுவாமி என ஸ்தாபித்துள்ளார் கொங்கண முனிவர். உத்தண்டவர் என்றால் எல்லா அதிகாரமும் வல்லமையும் கொண்ட அரசன் எனப் பொருள்.

இந்த உத்தண்ட சுவாமி ஆலயம் அவரால் தொடங்கி வைக்கபட்டது. அதன் அருகே கொங்கண முனிவர் தவம் செய்த குகை மிகச் சிறிய குகை இன்றும் உண்டு.

இந்த உத்தண்ட முருகனின் சிலையினைச் சில திருடர்கள் தங்கமென நினைத்து எடுத்துச் சென்றதும், அது தங்கமில்லை என்பதால் எங்கோ வீசிவிட்டு சென்றதும் நடந்தது. கொங்கண முனி அதை மீள ஸ்தாபித்து உறுதியாக்கிக் கொடுத்தார். இப்போதும் அச்சிலை மிக உறுதியாக பதிந்திருக்கின்றது.

இந்தத் தலத்தின் அடிவாரத்தில் இருந்து பாதை தொடங்குமிடத்தில் சுதை சிற்பங்களைக் கொண்ட கோபுரத்துடன் மயில் மண்டபம் உள்ளது. இதில் கலை நயமிக்க 4 கல் தூண் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மலை மேல் ஏறி பாத விநாயகர் சந்நிதியைக் கடந்து படிப்பாதையில் மேலே சென்றால் இடும்பன் சந்நிதியை அடையலாம். இங்கு சக்திகிரி, சிவகிரியைக் காவடியில் வைத்து சுமந்த கோலத்தில் இடும்பக் குமரன் அருள்பாலிக்கிறார்.

அடுத்து ஆஞ்சநேயர் சந்நதி உண்டு.

300 அடி உயரத்தில் அமைந்துள்ளது உள்ளது இம்மலை. 156 படிகளை ஏறிச் சென்றால் மலைக் கோயிலை அடையலாம். நுழைவு வாயில் தெற்கு நோக்கி உள்ளது.

இராஜகோபுரத்துக்கு முன் தீபஸ்தம்பம் உள்ளது. இராஜ கோபுரத்தைக் கடந்து சென்றால் குறட்டு வாசல். கிழக்கு நோக்கிய வகையில் கோயில் அமைந்துள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் வாத்திய மண்டபம் என 4 பகுதிகளைக் கொண்டுள்ளது இந்த ஆலயம்.

கருவறையில் தண்டம் ஏந்தி இடது கையை இடுப்பில் வைத்து வெற்றி வேலுடன் நின்ற கோலத்தில் மலர் அலங்காரத்தில் வேலாயுத சுவாமி அருள்பாலிப்பார் உத்தண்ட வேலாயுத முருகன்.

இந்த முருகன் ஏகப்பட்டோருக்குக் குல தெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் அருள்பாலிப்பதால் இங்கு சுவாமி உத்தரவு கேட்கும் வழக்கம் மிக விசேஷம். அந்த உத்தரவுப்படியே மக்களும் செயல்படுவர். அது மிகச் சரியானதாகவும் அமையும்.

அரிய மூலிகைகள் கொண்ட மலையாக இருப்பதால், பல நோய்களுக்குத் தீர்வாக இம்மலை உள்ளது. மூலிகை கலந்த காற்றும் நீரும் இங்கு இயற்கையாகவே நோய் தீர்க்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றது. மிகச் சரியான இடத்திலே மக்களுக்கு ஆலயம் அமைத்து கொடுத்திருக்கின்றார் கொங்கண முனிவர்.

இந்த மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. அதற்கும் மேலே சென்றால் சொர்ணலிங்கேஸ்வரர் மலையின் உச்சியில் சிவபெருமான் கொங்கண‌ சித்தருக்கு காட்சி கொடுத்த இடம், சிவலிங்கம் ஆகியன உள்ளன.

இந்த சொர்ணலிங்கேஸ்வர மலை, வெள்ளியங்கிரி மலையைப் போலவே 7 குன்றுகளையும், 3 பாறைகளுக்கு மத்தியில் சிவபெருமான் காட்சி அருள்வதாகவும் அமைந்துள்ளது. இதற்கு சின்ன வெள்ளியங்கிரி என்றும் பெயர் உண்டு.

எந்த மலைக்கும் இல்லாச் சிறப்பு இந்த ஓதியூர் மலைக்கு உண்டு. அதாவது பௌர்ணமி தினத்தில் மலைப் பாறைகளில் சந்திரகாந்தக் கல்லின் சக்தி அதிகரிக்கும், இது நோய் தீர்க்கும் இந்த சக்தியால் அனைத்து நோய்களும் நீங்கும்.

கிரிவலம் செல்வதில் இப்படியும் ஒரு சூட்சுமமான தீர்வும் உண்டு.

இங்குப் பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் இந்தப் பாறைகளில் படுப்பது வழக்கம். இந்த மலையில் இருந்து மூலிகை இலைகள் கொண்டு வரப்பட்டு, அதில் இருந்து தயாரிக்கப்பட்ட கஷாயம் பக்தர்களுக்கு வழங்கப்படும். இவை எல்லா நோய்களையும் தீர்த்து ஆரோக்கியம் தருபவை.

கொங்கு மண்டல சதகம் என்ற நூலில் ஊதியூர் மலைகளின் பெருமை பற்றி நிறைய சொல்லபட்டுள்ளது, அப்படியே அருணகிரிநாதரும் இத்தல முருகப் பெருமானைப் போற்றி திருப்புகழில் பதிந்துள்ளார்.

இது மக்களின் துயர் தீர்க்க முருகப்பெருமானை அழைத்து நிறுத்தி கொங்கண முனிவர் உருவாக்கித் தந்த ஆலயம், அவரின் வேண்டுதலுக்காக எக்காலமும் இங்கு முருகப்பெருமான் அருள் பாலிக்கின்றார்.

எவ்வளவோ சாட்சிகள் அற்புதமாக இங்கு உண்டு.

இன்றும் கொங்கணமுனி உள்பட பல சித்தர்கள் ஒளிவடிவம் கொண்டு இரவு நேரங்களில் இங்கு வந்து முருகப் பெருமானை வணங்கிச் செல்கின்றார்கள். பௌர்ணமி காலங்களில் அதைக் கண்ட பல சாட்சிகள் உண்டு.

கொங்குப் பக்கம் செல்லும் போது இந்த முருகப்பெருமானை தரிசியுங்கள், எல்லா செழுமையும் அவர் தருவார். தன்னை அண்டிய மக்களின் வறுமை போக்கி வறட்சி போக்கி செழுமை தரும் அவர் உங்களையும் வாழவைப்பார். கொங்கண முனி குகையில் நீங்கள் வழிபடும் நேரம் எல்லாம் பூரணமாகும்.

அடுத்த ஆலயம் அலகு மலை முருகன் ஆலயம்.

இதுவும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமைந்துள்ளது. அலகு என்றால் பறவையின் மூக்கு எனப் பொருள்.

கிளியின் அலகு போல் அமைந்திருப்பதால் இம்மலை அலகு மலை என்றாயிற்று.

பழனிக்கு முருகப்பெருமான் ஞானப்பழம் கேட்டு சண்டையிட்டு வந்தது போல் இம்மலை மேல் இருக்கும் முருகனுக்கும் ஒரு பின்னணி உண்டு.

ஒரு முறை திருக்கயிலாயத்தில் பாலகனான முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்வதிதேவியும், கங்காதேவியும் தன் அருகில் வருமாறு அழைத்தனர்.

ஆனால், முருகப்பெருமான் அவர்கள் அருகில் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது சிவபெருமான், முருகனின் அருகில் சென்று, ‘இங்கே உள்ள இரண்டு தாய்மார்களில் உனக்கு கங்காதேவியை பிடிக்குமா? பார்வதிதேவியை பிடிக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு முருகப்பெருமான், ‘அறன் மாதாவின் மீதுதான் எனக்கு மிகுந்த ஆசை’ என்று முருகப்பெருமான் மிகப் பொருத்தமான‌ பதில் கூறினார். அதாவது ‘அறன்மாதா’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ‘அறம் வளர்த்த நாயகி’ என்பது ஒரு பொருள். அறம் வளர்த்த நாயகி என்றால் பார்வதி தேவியைக் குறிக்கும்.

அதே நேரம் ‘உயிர்களை காக்கும் நீர்’ என்ற பொருளும் உண்டு. இது கங்காதேவியைக் குறிப்பதாகும். இவ்வாறு முருகப்பெருமான் ஒரு வார்த்தையில் இரண்டு அன்னையரையும் பிடிக்கும் என்று கூறினார். எல்லாரும் மகிழ்ந்தார்கள்.

அந்தப் பதில் சொன்ன முருகனுக்கான ஆலயம் இது. அதாவது, சமயோசித புத்தி முதல் எல்லா வரமும் கிடைக்கும். குறிப்பாக, பெண்கள் வேண்டுதல் பலிக்கும் ஆலயம் இது.

இதனால் பெண்கள் அன்னாச்சி பழத்துடன் தேன் கலந்து இங்கு அபிஷேகம் செய்தால் அவர்களுக்குத் திருமணம், குழந்தை பாக்கியம், நல்ல ஆரோக்கியம் என எல்லா வரமும் கிடைக்கும், கிடைத்துக் கொண்டே இருக்கின்றது.

அப்படியான பெரும் வரம் வழங்கும் ஆலயம் இது.

இந்த ஆலயம் சோழமன்னர்கள் காலத்தில் இருந்து விசேஷம். பிற்கால நாயக்க மன்னர்களும் பெரும் திருப்பணி செய்தார்கள். திருமலை நாயக்கர் காலத்தின் கல்வெட்டு ஆவணமாக இன்றும் உண்டு.

இந்த ஆலயம் பாலதண்டாயுதபாணி கோவிலுக்குள் முதலில் இருப்பது கொடிமரம். கொடி மரத்திற்கு மேற்கு நோக்கி மயில் வாகனமும் அதற்கு அருகில் பலிபீடமும் உள்ளது.

தல விருட்சமாக வில்வ மரம் கோவிலின் இடது புறத்தில் அமைந்துள்ளது.

கோவில் மகா மண்டபத்தின் உள்ளே வலது புறத்தில் கடந்த 18 ஆண்டுகளாகச் சிறப்பு சங்கடஹர சதுர்த்தி விழாக்காணும் ஆனந்த விநாயகரும், வலம்புரி விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள்.

இடது புற மேடையில் வீரபாகு தேவரும், தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் தேவியர் வள்ளி, தெய்வானையும் அருள்பாலிக்கிறார்கள். கர்ப்பக்கிரகத்தில் முருகன் ஆண்டிக் கோலத்தில் நிற்கின்றார். வள்ளி, தெய்வானை கோவில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

கர்ப்பகிரகத்தில் முருகப்பெருமான் ‘முத்துக்குமார பால தண்டாயுதபாணி’ எனும் பெயர் தாங்கி கண்களை சற்று தாழ்த்திய நிலையில் கையில் தண்டாயுதத்துடன் ஞான குருவாக காட்சி தருகிறார்.

அவரை வெள்ளிக் கவசத்தில் காண்பது கண் கொள்ளா காட்சி.

இங்கு இடும்பன் சன்னதியைக் கடந்து மலையின் மேற்காக உள்ள 300 படிகளைக் கடந்து மேலே சென்றால் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யலாம்.

இந்த ஆறுபடை வீடுகள் கோவில் 1984–ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதே போன்று இந்தச் சந்நிதிகளிலும் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.

அத்துடன் சண்முகருக்கு ஒரு சந்நிதி உண்டு, அங்கிருக்கும் கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும் மேலே ஏழாவது படைவீடாக அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும்.

இந்த ஆலயம் பெண்கள் கேட்கும் எல்லா வரத்தையும் தரும். முருகப்பெருமான் தமயனாக நின்று வரும் பெண்களை எல்லாம் தாயாகக் கருதி வரமருளும் ஆலயம் என்பதால் பெண்களின் வேண்டுதல் எல்லாமே பலிக்கும்.

இந்த ஆலயத்தை மறக்காமல் தரிசிப்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.

இந்த ஆலயத்தின் பலன் இங்கு வழிபட்டால் பக்தர் கனவில் முருகப்பெருமான் வந்து பேசுவார் என்பது, உங்கள் பக்தி உண்மையானால் நிச்சயம் உங்களுக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கும்.

அடுத்த, மிக முக்கியமான ஆலயம் சிவன் மலை ஆலயம். இது எல்லோருக்கும் பரிட்சயமானது, அடிக்கடி அறியபடக் கூடியது.

திரிபுரத்தை சிவன் சிதறடிக்க மேருமலையினை அவர் வில்லாக வளைத்தபோது சிதறிய துண்டு இம்மலை என இதன் தலபுராணம் தொடங்குகின்றது.

இந்த வரலாறு ’சிவமலைக் குறவஞ்சிப் பாடல் சொல்கின்றது.

“அந்த மேரை ஈசன் திரிபுர சம்ஹாரம்
செய்ய வளைக்குங் காலை
முந்து கொடுமுடியுள் ஒன்று சிந்தி இங்கு
வந்த சிவமலை இம்மலையே”

முருகப்பெருமான் வள்ளியுடன் குடியேறிய மலை என்றும் அதனாலே வள்ளியுடன் இங்கு காட்சியளிக்கின்றார் என்றும், பார்வதி சிவனை நினைந்து தவமிருந்த மலை என்றும் இதன் பெருமை நீள்கின்றது.

இங்கு அகத்திய மாமுனியும் தவம் செய்திருக்கின்றார்.

இம்மலை சிவன் மலை எனப் பெயர் வரக் காரணம் சிவவாக்கியார் எனும் பெரும் சித்தர்.

“சிவவாக்கியம்” எனும் பெரும் ஞானநூலை கொடுத்த அவர் முருகப்பெருமானின் பக்தர், அவர் இங்குதான் தங்கி வழிபட்டார்.

அவர் உருவாக்கிய இந்த முருகப்பெருமானின் ஆலயமே “சிவன் மலை” எனச் சிவவாக்கியர் பெயரால் அழைக்கபடுகின்றது. அவரின் ஜீவ நடமாட்டம் இன்றும் இங்கு உண்டு.

இந்த ஆலயம் கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில், அமைந்துள்ளது. ஆதிகால கல்வெட்டுக்கள் நிறைய உண்டு.

கோவில் இராஜகோபுரம், தீபஸ்தம்பம், கொடிமரம், முன் மண்டபம், சுற்றுப் பிரகாரம், மூலவர் என்ற அமைப்பில் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட ஆலயம்.

மலையில் ஏறி, இராஜ கோபுர மண்டபம், தீபஸ்தம்பத்திற்கு செல்வதற்கு முன்பு, அரசு, வேம்பு மரங்களுக்கு மத்தியில் எழுந்தருளியுள்ள விநாயகர், ஞானாம்பிகை உடனமர்ந்த கைலாசநாதர், தீபஸ்தம்பம், கன்னி மூலக் கணபதியும், தண்டபாணி சந்நிதி,கொடிமரம், பலி பீடம், சுமூகர், சுதேகர் என்ற துவார பாலகர்கள் என ஆகம விதிப்படி காட்சியளிக்கின்றது.

இம்மலையைச் சுற்றிலும் ஆலாம்பாடிவனசாட்சி (காட்டம்மை), பாப்பினி அங்காளபரமேஸ்வரி, காங்கேயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், அந்தனுரம்மன், கரியகாளியம்மன், செல்வநாயகி அம்மன் என எட்டு அம்மன்கள் எழுந்தருளியுள்ளனர். இவர்கள் அஷ்ட துர்க்கைகள் என அழைக்கப்படுகின்றார்கள்.

அதாவது துர்கா தேவியால் காவல் காக்கப்படும் ஆலயமிது.

இந்த ஆலயத்துக்கான படியில் 18 ஆம் படிக்கு சத்தியபடி என்ற பெயர் உள்ளது. முற்காலத்தில் வழக்குகள் இப்படியில் நடந்து, தீர்வு காணப்பட்டுள்ளது. புராணப்படி எனவும் அழைக்கப்படுகிறது.

சடைச்சியம்மன் இங்கு குடியிருப்பதாக நம்பிக்கை உள்ளது. அர்த்த மேரு அமைக்கப்பட்டு, அதன் வள்ளியம்மன் திருவடிகள் உள்ளன.

மலைப் படிகளில் ஏறுவதே ஒரு தவமாக கருதப்படுகிறது. காரண மூர்த்தியான சுப்ரமணியர் சந்நிதியில் காரண ஆகம விதிப்படி நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. இங்கு, சனி பகவான் கிழக்கு பார்த்து அமர்ந்திருக்கிறார். மீதமுள்ள எட்டு கிரகங்களும் சூரியனைப் பார்த்து அமைந்துள்ளன. கோள்கள் வரிசைப்படியாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி, குரு, சுக்கிரன் என்ற
அடிப்படையில் உள்ளன.

முக்கிய கிரகங்களான சனியும் செவ்வாயும் சேர்ந்திருப்பது இங்கு தனிச் சிறப்பு. வேறு எங்கும் இதனைக் காணமுடியாது.

சனி என்றால் கர்மத்தை செய்பவர், செவ்வாய் என்றால் தைரியமும் வைராக்கியமும் தருபவர். முருகபெருமான் செவ்வாயின் அதிபதி.

ஆக, கர்மாவினை சரியாகச் செய்ய வரமருளும் ஆலயம் இது.

இந்த ஆலயத்தில் சடைச்சி எனும் பக்தையின் பங்களிப்பு மிகப் பெரியது, அவளுக்கு முருகனுக்கு கங்கை நதி நீரால் அபிஷேகம் செய்ய ஆசை அதிகம், அது ஏக்கமாகவும் மாறிற்று.

முருகப்பெருமான் அவளுக்காக ஏழு தீர்த்தங்களை உருவாக்கினார்.

அனும தீர்த்தம், அகத்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், மங்கள தீர்த்தம், வீர தீர்த்தம், சக்தி தீர்த்தம், பிரமானந்த தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தகளுடன் கங்கா தீர்த்தம் உருவாக்கி காசியினையும் அங்கே காட்டினார்.

இன்றும் நந்தவனமாக உள்ள பகுதியில் கங்கை, காசி தீர்த்தம் உண்டு.

மூலவருக்கே முதல் மரியாதை அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு முதல் பூஜை நடக்கும். இங்கு மூலவரான சுப்ரமணியருக்கே நடக்கிறது. இதற்கு, இங்கு எழுந்தருளியுள்ள விநாயகரே, முருகனை வழிபடுவார் என்பதால் இந்த ஏற்பாடு.

இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் பலனும் இங்குக் கிடைக்கும்.

இந்த ஆலயத்தின் மாபெரும் சிறப்பும் எங்கும் காணப்படாத அற்புதமும் அந்த “உத்தரவு பெட்டி”

இந்தக் கோயிலில் பகவான் உத்தரவின் பெயரில், ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. எப்பொருளை வைக்க வேண்டும் எனும் உத்தரவு வந்தபின் அப்பொருளை வைப்பார்கள்.

கோவிலின் ஏதாவது
உத்தரவு கிடைத்தபின் அப் பொருள் ’உத்தரவுப் பெட்டி’ என்றழைக்கப்படும் கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

இது எதிர்கால பலன், மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தயாரிப்புகள் எல்லாம் அறிவிக்கப்படும். நல்ல விளைச்சல், நல்ல மழை, வெள்ளம், வறட்சி, இன்னும் சமூக எச்சரிக்கை என எல்லாமும் சொல்லப்படும்.

இது ஒரு காலமும் பொய்ப்பதுமில்லை.

அதன்படி ஒரு பக்தரின் கனவில் வந்து சிவன்மலை முருகன் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட, அந்த பக்தர் அப்பொருளை இக்கோயிலுக்குக் கொண்டு வருகிறார். அதன் நம்பகத்தன்மைக்காக கடவுள் முன் பூப்போட்டுப் பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னர் அப்பொருள் கடவுளின் முன் வைத்துப் பூசைசெய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக முன்மண்டபத்திலுள்ள உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும்.

வேறொரு பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும்வரை பழைய பொருளே உத்தரவுப் பெட்டியில் நீடிக்கிறது. நடக்கப்போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக இது காலம் காலமாக உண்டு.

இறைவனே தன் மக்களை இப்படி வழிநடத்தும் அற்புதமான ஆலயம் வேறு எங்கும் இல்லை. அந்த அளவு முருகப்பெருமான் அரசாட்சி செய்யும் ஆலயம் இந்தச் சிவன் மலை.

இப்படி அற்புதம் நிறைந்த அம்மலை பக்தர்களின் எல்லா வேண்டுதலையும் எக்காலமும் தீர்த்து வைக்கின்றது, எல்லா வித மனக்கவலை, வாழ்க்கை சிக்கல்களையும் தீர்க்கும் அம்மலை அதிசயம் நிறைந்தது.

அங்கு மிளகுரசம் வைத்து உண்டால் எவ்வகை காய்ச்சலும் தீரும் என்பது வழிவழியாக மெய்பிக்கப்படும் உண்மை.

இது சூட்சுமங்கள் நிறைந்த ஆலயம்; புராதன சிறப்புமிக்க ஆலயம். அங்கு உத்தரவுப்பெட்டி, சிவவாக்கியாரின் சூட்சும நடமாட்டம், அணையா விளக்கு, முருகப்பெருமானின் தனி அருள் என எல்லாமுமே அதிசயமானவை.

அந்தச் சிவன் மலைக்குச் செல்லுங்கள். தன் உத்தரவுமூலம் அம்மக்களையே வழிநடத்தும் சிவனும், அங்கே குடிகொண்டு ஆட்சி செய்யும் முருகப்பெருமானும், சிவாவாக்கியார் எனும் மகா சித்தரும் உங்களுக்கு எல்லா நலனும் வழியும் காவலும் வாழ்வும் எதிர்காலமும் உத்தரவாக தந்து வழிநடத்துவார்கள். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : பெரும்பேர் கண்டிகை

முருகப்பெருமான் ஆலயங்கள் : பெரும்பேர் கண்டிகை

முருகப்பெருமான் ஆலயங்களில் தனிச் சிறப்புமிக்க ஆலயங்கள் பல உண்டு. அறுபடை வீடுகளைத் தாண்டி அவை நிரம்ப உண்டு.

அப்படிப்பட்ட ஆலயங்களில் பெரும்பேர் கண்டிகை எனும் முருகப்பெருமான் ஆலயம் சிறப்பானது. பெரும் பாரம்பரியமும் வரலாறும் சக்தியும் தத்துவமும் கொண்டது.

சுமார் 5300 ஆண்டுகள் மிக மிகப் பழமையான ஆலயம் இது.

இந்த ஆலயம் சென்னை திண்டிவனம் சாலையில் காஞ்சிபுரம் வட்டம் தொழுப்பேடு அருகே அமைந்துள்ளது. அச்சிறுபாக்கம் அருகே அமைந்துள்ளது.

ஆட்சீஸ்வரர் சிவன் அங்கு உண்டு. ஆட்சீஸ்வரர் பாக்கம் என்பதே பின்னாளில் அச்சிறுபாக்கம் என்றாயிற்று. (த்ரிபுர சம்ஹாரத்தின் போது விநாயகரை வணங்காது பரமசிவனார் போருக்கு கிளம்பியதால் அவர் தேர்ச்சக்கர அச்சு முறிந்தது. பின் அதை உணர்ந்து விநாயகரை வணங்கி போருக்கு முன்னேறினார். அவ்வாறு பரமசிவனாரின் தேர்ச் சக்கர அச்சு முறிந்த இடமாதலால் இது “அச்சு+அறுப்பாக்கம்” என்றானது என்பது உண்டு)

அந்த அச்சிறுபாக்கம் அருகே அமைதிருக்கும் ஆலயம் பெரும்பேர் கண்டிகை முருகன் ஆலயம்.

கண்டிகை என்றால் பதக்கம், செப்பு ஆபரணம் எனப் பொருள். இந்த ஊர் பெரும்+பேர+கண்டிகை எனப் பொருள் கொண்டது.

ஏன் இப்படி பெயர் வந்தது என்பதை ஆலயத்தின் புராதான சிறப்பை பார்ததால் புரியும்.

சூரபதுமனை அழித்த முருகப்பெருமான் இங்கு அமர்ந்தார் என்பதும், அவர் முன் எந்த எதிரியும் இல்லா நிலையில் இங்கு அருள்பாலித்தார் என்பதும் இந்த ஆலய தாத்பரியம்.

அகஸ்தியர் முனிவருக்கு தெற்கு முக தரிசனம் கொடுத்தார்.

அந்தப் பெரும்பேர் கண்டிகை மலையுச்சியில் சுமார் 200 படிகள் கொண்ட அழகிய முருகன் கோயில் இது. இந்த மலைதான் சஞ்சீவி மலை என்றும் அறியப்படுகின்றது, அதை அடுத்து ரெட்டை மலை உள்ளது.

இந்த மலைகள்தான் முருகப்பெருமான் சூரனை அழித்தபின் ஓய்வெடுக்கும் மலைகள் என்பது புராண செய்தி.

ஆலயம் அமைந்திருக்கும் இந்த சஞ்சீவி மலை சித்தர் மலை என்றும் அறியப்படுகின்றது.

அங்கு சுப்ரமணியர் ஆறு முகங்கள் மற்றும் 12 கைகளுடன் அவரது துணைவிகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.

அவருக்கு முன்னால் ‘சத்ரு சம்ஹார யந்திரம்’ உள்ளது. இது அகத்திய முனி காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த ஆலயம் ஏன் “பெரும்பேர் கண்டிகை” என அழைக்கபடுகின்றது என்றால் அதற்கு காரணம் அகத்திய மாமுனி ஸ்தாபித்த யந்திரம்.

ஒரு ஆலயத்துக்கு சக்திகொடுப்பது யந்திரங்கள், அவைகள்தான் பிரபஞ்ச சக்தியினை ஈர்த்துக் கொடுக்கும். இந்து ஞானமரபில் யந்திரங்களின் அமைப்பு சக்திமிக்கவை, ஆலய சக்தி அவைகளில் உண்டு.

மிகப்பெரிய உதாரணமாக ஆதிசங்கரர் ஆற்றிய காரியங்களைச் சொல்லலாம். அவர்தான் அன்று சக்திமிக்க யந்திரங்களை பல ஆலயங்களில் ஸ்தாபிதது அவற்றின் அருளை பெருகச் செய்தார்.

அப்படியான சக்தி கொண்டவை யந்திரங்கள்.

அகத்திய மாமுனி ஒரு வழிகாட்டி. அவர் ஒரு ஞான குரு. முருகப்பெருமானின் அருள் மக்களுக்கு நிரம்ப கிடைக்கவேண்டி தானே பல சக்திகளை உருவாக்கி கொடுத்த சித்தர்.

அந்த அகத்திய முனி ஒரு யந்திரத்தை இங்கே ஸ்தாபித்தார், அதுதான் அந்த பதக்கம்தான் கண்டிகை என்றாயிற்று.

அது பெரும் பேறுகளை கொடுப்பதால், பெரிய பெரிய வரங்களை கொடுப்பதால் “பெரும் பேறு கண்டிகை” என்றாயிற்று. அது நிலைத்தும் விட்டது.

இந்த ஆலயத்தில் அகத்தியருக்கு முருகன் தென்முகமாக காட்சி அருளினார் என்பதும், அங்கே “‘சத்ரு சம்ஹார யந்திரம்” பதிக்கப்பட்டுள்ளது என்பதுமே இந்த ஆலயத்தின் தாத்பரியத்தை சொல்கின்றன‌.

தெற்கு நோக்கி முருகப்பெருமான் அமர்ந்திருக்கும் கோலம் தட்சினா மூர்த்தியினை குறிப்பது. தட்சனா மூர்த்தி என்பது சிவவடிவம், ஞானமும் அறிவும் வழங்கும் சிவவடிவம் என்பது எல்லோரும் அறிந்தது.

தட்சணம் என்பதற்கு பெறுதல் என்றும் பொருள், ஞானத்தைப் பெரும் வடிவம் தட்சணாமூர்த்தி. சிவன் அப்படி அமரும் கோலத்தை பரமகுரு என்பார்கள்.

அப்படி முருகன் சிவபெருமானின் இன்னொரு உருவினை ஞானம் வழங்கும் வடிவினை காட்டுமிடம் இது. ஆம் சிவனும் முருகனும் வேறல்ல. இங்கு முருகப்பெருமான் ஞானவடிவினராய் பரமகுருவாய் தட்சணா மூர்த்தியாய் அருள் புரிகின்றார் .

தட்சணாமூர்த்தி வடிவாய் சிவன் அருளும் ஞானத்தை இங்கே முருகப்பெருமான் அருள்கின்றார் என்பதுதான் தாத்பரியம்.

ஆம், இங்கு முருகப்பெருமான் ஞானத்தை அருள்கின்றார். அந்த ஞானமே அந்த யந்திரத்துக்கான அர்த்தமும் தருகின்றது.

அங்கு அன்னப்பறவை ஒன்றும் சிலைவடிவில் காணப்படும். அது பிரம்மனே முருகப்பெருமானிடம் ஞானம் பெற்றான் என்பதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

அங்குதான் “சத்ரு சம்ஹார யந்திரம்” உள்ளது. இது எதிரிகளை அழிக்கக் கூடிய சக்தி தரும்.

ஆன்மீக மொழியில் சத்ரு என்பது மனதின் அகங்காரம். மனதின் ஆணவம். அதை அழித்துப்போடும் தலம் இது. அந்த ஆணவ சத்ருவினை ஞானம் எனும் வரத்தால் முருகப்பெருமான் அழிக்கும் தலம் இது.

அப்போது ஞானம் பெருகி ஆணவம் அகலும், ஆணவம் அகலும் நெஞ்சில் தெய்வம் குடியேறும்.

லௌகீக மொழியில் இந்தத் தலம் எதிரிகளை அழிக்கும் வரம் தரும். பொதுவாக எதிரிகளை அழிக்க வெறும் வீரமும் உணர்வும் மட்டும் போதாது, அறிவும் ஞானமும் அவசியம்.

அறிவு கலக்காத யுத்தம் வெற்றிபெறாது, பெற்றாலும் நிலைக்காது. பகைவரை அழிக்கவும் தன்னை தொடர்ந்து காக்கவும் அறிவு அவசியம்.

அந்த நல்ல ஞானத்தை அறிவை தெளிவைத் தந்து பகையின் மூலத்தை கண்டறிந்து அதனை அழிக்கும் சக்தியினை தரும் ஆலயம் இது.

இதனாலே இந்த ஆலயத்தில் நடக்கும் யந்திர பூஜை மற்றும் சத்ரு சம்ஹார ஹோமம் இரண்டுக்குமே சக்தி அதிகம்.

இந்த ஆலயம் ஞானம் தரும் ஆலயம், பகை முடிக்கும் ஆலயம்.

தீராப் பகைகள், பெரும் சண்டைகள், சத்ரு தொல்லைகளெல்லாம் அறியாமையினால் வரும் சிக்கல்கள். எல்லா சத்ருக்களும் மாயையில் சிக்கியே இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணியே அவர்கள் சண்டையும் பகையும் கொண்டிருப்பார்கள்.

பேராசை, மண்ணாசை என ஏதோ ஒரு மாயை அவர்களை மயக்கி யிருக்கும்.

இந்தத் தலத்தில் நீங்கள் பூஜிக்கும் போது உங்களுக்கு தெளிவு வரும், அதே தெளிவு எதிரிக்கும் வரும், அப்போது அங்கு பகை என்பதே இல்லை.

ஆன்மீக வாழ்வில் பரஞானத்தையும், லௌகீக வாழ்வில் பகை ஒழிக்கும் பெரும் புண்ணியமும் தரும் ஆலயம் இது.

இங்கு வைகாசி விசாக தினம் பெரும் விசேஷம், இன்னும் ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பௌர்ணமி அன்று முருகப்பெருமான் ஊர்வலமாக அருகிலுள்ள ரெட்டை மலைக்குச் செல்வார். அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரரும் அன்று ரெட்டை மலைக்கு வலம் வருவார்.

சிவசுப்ரமணியர் ஆட்சீஸ்வரரை வலம் வந்து அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் தருவார். இது இந்த கோவிலின் மிக மிக விசேஷமான கொண்டாட்டம்.

சிவனும் முருகனும் ஒன்றே என்பதைச் சொல்லும் தத்துவம் இது.

மிக மிகத் தொன்மையான இக்கோவிலுக்கு சோழமன்னர்கள் நிரம்ப திருப்பணி செய்துள்ளார்கள். இக்கோவிலில், வீரராஜேந்திரன் (முதலாம் குலோத்துங்க சோழன் (1070 – 1120), இரண்டாம் ராஜராஜன் ஆகியோர் காலக் கல்வெட்டு இன்றும் உண்டு.

இந்த கோவில் அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள் என பலராலும் பாடப்பட்டுள்ளது. “பேறைநகர்” எனப் பெயர்கொண்ட இத்தலத்தைப் பற்றி அருணகிரி நாதர் பாடிய பாடல் முக்கியமானது.

“நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த
காரமிக வேநி றைந்த குழலாலும்

நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர
னேர்தருமு கார விந்த மதனாலும்

ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள்
ஆசைவலை வீசு கெண்டை விழியாலும்

ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த
னாகிமயல் நானு ழன்று திரிவேனோ

கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்து
கூவிடு முராரி விண்டு திருமார்பன்

கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த
கோபவரி நார சிங்கன் மருகோனே

பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள்
பேர்பெரிய வேல்கொள் செங்கை முருகோனே

பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற
பேறைநகர் வாழ வந்த பெருமாளே”

எனப் பாடியுள்ளார் அருணகிரியார்.

“அழகிய பன்றி உருவத்தை எடுத்து, பூமியைத் தோண்டிச் சென்று, பூமியை மீட்டு வந்தவரும், முரன் என்ற அசுரனை வதைத்தவரும், விஷ்ணுவும், இலக்குமியை ஏந்திய திருமார்பரும், கூடத்தில் இருந்த நீண்ட பொன் மயமான தூணில் தோன்றியவருமாகிய நரசிங்கப் பெருமானுடைய திருமருகரே!

தோகை உடைய மயில் வாகனத்தில் அமர்ந்து, சூராதி அவுணர்களை வென்று புகழ் பெற்ற வேலாயுதத்தைத் தரித்த சிவந்த கரத்தையுடைய முருகக் கடவுளே!

அறியாமையுடைய பெண் அன்னங்கள் ஒன்றுபட்டு விளையாடுகின்ற பெறும்பேறு என்ற திருத்தலத்தில் வாழுகின்ற, பெருமையில் மிகுந்தவரே!

நீலமயில் சேர்ந்து விளையாடுகின்ற மாலைப் பொழுதுக்கு ஒப்பதாகி, பெரிய கரிய இருள் மிகவும் நிறைந்த கூந்தலாலும், நீண்ட இன்பந் தருவதாகிய இன்ப வார்த்தைகளுடன் கூடிய சந்திரனை ஒத்ததும், தாமரை போன்றதும் ஆகிய முகத்தாலும், ஆலிலை போன்ற வயிறாலும், பொது மாதரின் ஆசைவலை வீசுகின்ற மீன் போன்ற கண்களாலும், கடைந்தெடுத்த குடம் போன்ற கச்சுடன் கூடிய தனங்களாலும், மந்தமுடையவனாகி மயக்கங்கொண்டு உழன்று அடியேன் திரியலாமோ” என அதற்குப் பொருள்.

அதாவது தனக்கு ஞானம் வேண்டி, ஆசை எனும் சத்ரு அழியவேண்டி அங்கு பாடி நின்றார் அருணகிரியார். ஆம் அது நமக்கு எதெல்லாம் எதிரியோ அது அத்தனையும் அழித்துபோடும் தலம்.

இந்த பேறை நகர் எனும் பெரும்பேர் கண்டிகையில் முன்பு 33 ஆலயங்கள் இருந்திருக்கின்றன. இப்போது அடிவாரத்தில், 2,500 ஆண்டுகள் பழமையான செண்பகவல்லி சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில், 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய அகோரபத்திரர் மற்றும் காளிகாம்பாள் சன்னிதி, ஆஞ்சநேயர் கோவில், 850 ஆண்டுகளுக்கு முந்தைய கரிவரதராஜ பெருமாள் கோவில், செல்லியம்மன் கோவில் ஆகியவை உள்ளன‌.

அந்த ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில்தான் அரிதான பஞ்சமுக சங்கு உள்ளது.

இதன் அருகேதான் “தான்தோன்றி ஈஸ்வரர்” எனும் பிரசித்தியான சிவாலயம் உள்ளது.

ஆம், இந்த இடம் முழுக்க முன்பு பெரும் பெரும் ஆலயங்கள் இருந்திருக்கின்றன. இப்போது வெகு சிலதான் எஞ்சியிருக்கின்றது, சென்று வழிபட்டால் பெரும் அருள் நிச்சயம்.

இந்தப் பெரும்பேர் கண்டிகை முருகன் ஆலயம் ஞானம் அருளும், பகை ஒழிக்கும் தலம், பவுர்ணமி அன்று அங்கு நடக்கும் வழிபாடுகளில் சிறப்பு நாட்களில் நடக்கும் வழிபாடுகளில் பங்குபெறுதல் நல்ல பலனைத் தரும்.

ஆலயத்தில் பகை ஒழிக்க சத்ரு சம்ஹார யந்திர ஹோமம், சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் ஆகியவை செய்யப்படுகின்றன.

இவற்றைச் செய்யும்போது யம பயம் நீங்கும், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், கல்வி ஞானம் பெருகும், சித்த சுவாதீனம் தெளிவடையும், சத்ருக்களின் தொல்லைகள் விலகும். பௌர்ணமி தினங்களில் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.

இந்த ஆலயத்தின் அருகில்தான் சட்டநாத சித்தரின் ஜீவசமாதியும் உண்டு. முருகன் ஆலயமெல்லாம் ஒவ்வொரு சித்தரின் சமாதி கொண்டிருப்பதைப் போல இங்கு சட்டநாத முனி நின்று ஆசிவழங்குகின்றார்.

ஒருவனுக்கு உள்ளும் புறமும், அகவாழ்விலும் புறவாழ்விலும் எதெல்லாம் எதிரிகளோ அவற்றை எல்லாம் அகற்றி வேண்டாதன எல்லாம் அகற்றி எல்லா வகை ஞானமும் தந்து வாழவைக்கும் ஆலயம் இது.

நீங்கள் எவ்வகை சிக்கலில் இருந்தாலும் இங்கு வந்து வணங்கினால் தடை அகலும். பகை அகலும். பெரும் ஞானம் வாய்க்கும். பெரும் வாழ்வும் அமைதியும் காவலும் சிறக்கும் இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : முத்துமலை, பொன்மலை மற்றும் குருந்த மலை ஆலயங்கள்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : முத்துமலை, பொன்மலை மற்றும் குருந்த மலை ஆலயங்கள்.

முத்துமலை ஆலயம் கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே முத்துகவுண்டனூரில் அமைந்துள்ளது. சிறிய மலையில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் முருகப்பெருமான் காலத்தில் இருந்தே துவங்குகின்றது.

முருகப்பெருமான் மயில் மேல் அப்பக்கமாக வந்தபோது அவரின் கிரீடத்தில் இருந்து முத்து உதிர்ந்து விழுந்ததால் இந்த மலை முத்துமலை என்றாயிற்று என்பதில் இருந்து இதன் வரலாறு தொடங்குகின்றது.

அந்த ஆலய தோற்றம் முருக பக்தை ஒருத்தியினால் உருவானது. முருகப்பெருமானே தேடி வந்து அங்கே குடிகொண்ட நிகழ்வு அது.

நெடுங்காலத்துக்கு முன்பு அந்த ஊரைச் சேர்ந்த பெண்மணி கனவில் வந்த முருகப்பெருமான் இந்த மலையில் மூன்று காரை செடிகள் (காட்டு மல்லி) நடுவில் தான் புதைந்து இருப்பதாகச் சொன்னார். அப்பெண் முதலில் நம்பவில்லை.

அதன்பின் அவள் மக்களிடம் சொன்னாள். அவர்களும் நம்பவில்லை.

மறுபடி மறுபடி அவள் கனவில் சஷ்டி அன்றும், கிருத்திகை அன்றுமாக வர அவளே தன் கனவில் முருகன் சொன்ன இடம் நோக்கிச் சென்றாள், அவளோடு மக்களும் சென்றார்கள்.

சென்றவர்கள் ஒரு இடத்தில் மூன்று காரை செடிகள் வரிசையாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். முருகப்பெருமானுக்கு அங்கே ஒரு வேல் ஊன்றி வழிபாடுகளைச் செய்தனர்.

அதன் பின் பெரும் அதிசயங்கள் நடக்க நடக்க மக்கள் கூட்டம் அலைமோதிற்று, வேல் மட்டும் ஸ்தாபிக்கப்பட்ட இடம் பெரும் ஆலயமாயிற்று.

இன்று அது முருகப்பெருமானின் அருள் தலமாயிற்று.

இங்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் அருள்புரிகின்றார். வெள்ளையங்கிரி ஆண்டவர், மாணிக்க விநாயகர், நாகர் சன்னதிகள் உண்டு.

இந்த மலையில் இருக்கும் நாகப்புற்று மிகச் சூட்சுமமானது. விசேஷ நாட்களின் இரவு நேரங்களில் அந்தப் புற்றிலிருந்து ஒரு ஒளி தென்படும். எப்படி எதனால் அந்த ஒளிவருகின்றது என்பது தெரியாது.

ஆனால், அந்த ஒளி தென்படும் போது ஒருவித சக்தி அங்கே கூடுவதும், தெய்வீக அருள்நிலை அங்கே சூழ்வதும் சாட்சிகள்.

சக்தி மிக்க நாகர்கள் முருகப்பெருமானை வணங்கும் நேரம் அந்த ஒளி தெரியும் என்பது சில அனுமானங்கள்.

இந்த ஆலயம் புத்திர பாக்கியம் தரும். நாக சம்பந்தமான விக்கினங்களை விலக்கித் தரும், இன்னும் வாழ்வின் பல சோதனைகளைத் தீர்த்துத் தரும்.

முத்துமலை முருகன் என்பது வெறும் பெயர் அல்ல, அது ஆழ்ந்த தத்துவத்தை போதிப்பது.

சிப்பிக்குள் புகுந்துவிடும் மணல் துகள் உறுத்த அதை சுற்றி சிப்பி கட்டும் திரவமே முத்தாக மாறும். அப்படி சிறு துன்பம் ஒன்று வாழ்வில் வரும் போது முருகனை அண்டினால் அந்தப் துன்பத்தை முன்னிட்டே நம்மை முத்துபோல் ஒளிரவைப்பார், ஜொலிக்க வைப்பார்.

சிப்பி முத்தினைத் தன்னுள் காப்பது போல் காப்பார். ஆத்மா முத்துபோல் துலங்கும் பின் உரியநேரம் முருகப்பெருமானை அடையும் என்பது இந்த ஆலயத்தின் தாத்பரியம்.

இந்த முருகன் நம் துன்பத்தை இன்பமாக மாற்றித் தருவார். எது நம் பலவீனமோ எது நம் வேதனையோ அதையே முழு பலமாக முழு சக்தியாக மாற்றித் தருவார்.

கோயம்புத்தூர் பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தினை வணங்கி வாருங்கள். எது உங்கள் பலவீனமோ கஷ்டமோ அது உங்கள் பலமாகவே மாறும்.

அந்தக் கோவிலில் இருக்கும் நாகப்புற்று சக்தி வாய்ந்தது. அந்த மண் எடுத்து உடலில் பூசினால் தீராத வினை எல்லாம் தீரும். நாக தோஷம் முதல் எல்லா நோயும் தீரும். அதை தவறவிடாமல் வழிபடுங்கள்.

அடுத்த ஆலயம் கிணற்றுக்கடவு பக்கம் அமைதிருக்கும் பொன்மலை வேலாயுதசாமி ஆலயம்.

ஞானபழத்திற்காக சண்டையிட்ட முருகப்பெருமான் பழனி வரும் போது இம்மலையில் இளைப்பாறி தன் பாதங்களைப் பதித்த இடம் இது. அதை முருகப்பெருமானே தன் அடியார்க்கு சொல்லி ஆலயம் அமைத்த இடம் இது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையத்தில் ஒரு ஜமீன் இருந்தார் அவர் முருகபக்தர். அடிக்கடி விரதமிருந்து பழநி செல்வது அவர் வழக்கம்.

ஒருமுறை பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். அங்கே சென்றவருக்கு உறவுகளிடம் சில சர்ச்சைகள் வந்தன. அந்தக் கோபத்தில் பழனி முருகனை தரிசிக்காமலே திரும்பிவிட்டார்.

அப்படி திரும்பியவருக்கு நிதானம் வந்தபின் பழனி முருகனை தரிசிக்காமல் வந்ததை நினைத்து வருந்தினார். மிக வருந்தினார். உண்ண மனமில்லாம்ல வாடி கிடந்தார்

அன்றிரவே முருகப்பெருமான் ஜமீன்தாரின் கனிவில் தோன்றி, கிணத்துக்கடவு என்ற ஊரில் உள்ள பொன்மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்குப் பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார்.

அதன் பின் அவரே அந்தக் கோவிலைக் கட்டி முருகப்பெருமானை கனவில் எப்படிக் கண்டாரோ அப்படியே சிலையாக ஸ்தாபித்தார்.

இன்றும் முருகப்பெருமான் பாதமும், ஜமீன் கட்டிவைத்த கோவிலும் அங்கு உண்டு.

அப்படியே மைசூர் திவான் ஒருவர்க்கும் பெரும் அற்புதம் செய்தது இந்த ஆலயம்.

700 ஆண்டுகள் முன் மைசூர் அரண்மனை திவானுக்கு காலில் கொடிய புண் ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் அது அடங்கவில்லை. அவர் ஆங்காங்கே உள்ள ஆலயங்களில் சென்று அழுது மன்றாடினார். அதில் முருகப்பெருமான் கோவில்களும் உண்டு.

ஒருநாள் அந்த‌ திவானின் கனவில் முருகன் தோன்றி, “கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோயிலுக்கு வா, உனக்கோர் வழிபிறக்கும்” எனச் சொன்னார்.

அப்படியே இக்கோவில் அர்ச்சகர் கனவிலும் முருகன் தோன்றி, “இங்கே வரும் திவானின் கால் புண்ணில் இந்த மூலிகையினைக் கட்டு” என்று கூறி மறைந்தார்.

மிகுந்த வலியுடன் இங்கு வந்த திவான் அர்ச்சகர் முருகப்பெருமான் உத்தரவுபேரில் இங்கு மூலிகையுடன் காத்திருப்பதை கண்டு ஆனந்த உவகைக் கொண்டார். பின் அந்த மூலிகை வைத்து கட்டப்பட அவரின் புண் ஒரே நாளில் மறைந்தது.

மிகவும் உற்சாகம் கொண்ட திவான் இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்தார். அந்த செப்பேடு சாட்சி இன்றும் உண்டு.

இந்த முருகன்கோவில் அழகையும் முருகப்பெருமான் தீப ஒளியில் ஜொலிப்பதையும் கண்ட அருணகிரிநாதர்
“நாலாயிரம் கண் அந்த நான் முகன் படைத்திலேனே’ என்று மனமுருகிப் பாடினார். ஆம். அவர் பாடிய தலம் இது.

அப்பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தை மறவாதீர்கள். முருகப்பெருமான் பாதம் பதிந்த அம்மலையினைத் தொட்டு வணங்குங்கள். அந்தப் பாதம் நீங்கள் சரணடையும் நேரம் அந்த ஜமீனுக்கும் அந்த திவானுக்கும் நடந்த பெரும் அதிசயம் உங்களுக்கும் நடக்கும்.

எல்லா மனகுறையும் உடல்பிணியும் அகலும். வாழ்வே பொன்னாகும். பொன்மலை முருகன் உங்கள் வாழ்வினைப் பொன்னாக்கி தருவார்.

அடுத்த ஆலயம் குருந்தமலை முருகன் ஆலயம். இது கோவை அருகே மருதூர் பக்கம் அமைந்திருக்கின்றது.

கொங்கு நாட்டில் 24 உட்பிரிவுகள் உண்டு. அதில் ஒன்று ஒடுவங்க நாடு. இது தற்போது கோயம்புத்தூர், அவிநாசி, மேட்டுப்பாளையம் முதலான பகுதிகளை உள்ளடக்கிய பிரிவாகும். இதன் வட பகுதியில் அகத்தியமலை (நீலகிரி), கிழக்கில் மாதேஸ்வரன் மலை, தெற்கில் சஞ்சீவி மலை (சதுர்க்காட்டாஞ்சை), மேற்கில் தோகை மலை உள்ளன.

இவற்றின் நடுநாயகமாக குருந்தமலை அமைந்துள்ளது.

குருந்த மரங்கள் நிறைந்துள்ள இடம் என்பதால் இம்மலைக்கு இந்த பெயர் வந்தது. குருந்தமரம் என்பது இந்துப் புராணத்தில் மகத்துவமானது. இந்த மரத்தின் அடியில் வரம்பெற்றவர்கள் பலர் உண்டு, பல ஆலயங்களில் இந்த மரமே தலவிருட்சமாக உண்டு.

மாணிக்கவாசகரைச் சிவன் ஆட்கொண்டதும் குருந்த மரத்தடி என்பதில் இருந்து நிறைய சாட்சிகள் உண்டு.

அகத்தியபெருமானுக்கு இங்கு குருந்தமர அடியில் முருகப்பெருமானே குருவாக நின்றுபல உபதேசங்களைச் செய்ததால் இது குருவிருந்த மலையாகி குருந்தமலை என்றுமானது.

இந்த ஆலயம் பல சிறப்புக்களைக் கொண்டது.

மலையடிவாரத்தில் கோயிலுக்கு எதிரில் மலைச்சரிவில் கஜபுஷ்கரணி, அனுமந்தசுனை என்ற இரண்டு நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, குடிப்பதற்கும், மற்றொன்று குளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

அனுமந்த சுனையின் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமனின் பாதம் பதிந்துள்ளது. மூன்றடி உயரம் கொண்ட ஆஞ்சநேய மூர்த்தி ஓங்கிய வலது கை, இடது கயில் தாமரை மொட்டு, கையில் கட்கம், விரலில் மோதிரம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

இடையில் சதங்கை, வாலில் மணியுடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு ஹனுமத் ஜெயந்தி நாளில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். பக்தர்கள் வெண்ணெய் சாற்றி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம்.

குருந்தமலை அடிவாரத்தில் இராஜகோபுரத்துடன் கூடிய நுழைவாயிலைத் தொடர்ந்து மலையேறிச் செல்ல வேண்டும். படிக்கட்டுகளில் இரண்டு புறமும் இராஜகம்பீர விநாயகர், சப்த மாதாக்கள், நாகர், பதினெட்டாம்படி கருப்பர், இடும்பன், கடம்பன், வீரபாகு சந்நிதிகள் அமைந்துள்ளன.

ஐந்தடி உயரம் கொண்ட கம்பீர விநாயகர், வலதுகரம் ஒன்றில் தந்தம், பின்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தி அருள்பாலிக்கிறார். மலைப்படி ஏறும் வழியில் இருபுறமும் வேல்கள் நடப்பட்டுள்ளன.

காசி விஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சி அம்மனுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி நான்கரை அடி உயரத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

குருந்தமலை குழந்தை வேலவனுக்கு இருவகை அலங்காரம் செய்யப்படுகிறது. ஒன்று, இராஜ அலங்காரம், மற்றொன்று, வேட அலங்காரம்.

மூலவர் சந்நிதியில் அகத்தீஸ்வரர், ஆனந்த வல்லி அம்பாள் அருள்பாலிக்கின்றனர்.

இந்த ஆலயம் பெரும் வல்லமையானது, பெரும் சக்தி கொண்ட இந்தத் தலம் அகத்தியர் காலத்தில் இருந்தே சாட்சிகளை உருவாக்கி வந்தது.

800 வருடங்களுக்கு முன் மன்னர்கள் கட்டி வைத்த பல சாட்சிகள் உண்டு.

பீளமேடு பி.எஸ்.ஜி மங்கு தாயம்மாள் எனும் பக்தை நன்றிக்கடனாக கட்டிவைத்த இராஜகோபுரம் இப்போது பக்தர்களை வரவேற்கின்றது.

நஞ்சப்பா என்பவருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்த வரலாறு உண்டு.

இப்ராஹிம் காசிப் எனும் இஸ்லாமிய தனவானுக்குப் புத்திரபாக்கியத்தை கொடுத்த தலம் இது, அந்த நன்றியின் சாட்சியாக அந்த இப்ராஹிம் கட்டிய மதில்சுவர் இன்றும் உண்டு.

இன்னும் செட்டியார்கள், கோயமுத்தூரின் பெரும் தொழிலதிபர்கள் செய்த திருப்பணிகள் ஏராளம் உண்டு.

பாலசுப்பிரமணியன் எனும் பக்தர்க்கு இந்த குருந்தமலை முருகன் தன்னை வெளிப்படுத்தியவிதம் சிலிர்ப்பினைக் கொடுப்பது.

அவர் மகராஷ்ட்ராவில் வசித்தவர், பின் நெய்வேலிக்கு வந்தார். ஆனால், தீவிர முருகபக்தர். அடிக்கடி குடும்பத்தோடு பழனி சென்று பாலமுருகனை தரிசிப்பது அவரின் வழமை.

அப்படி அவர் முருகப்பெருமானை தீவிரமாக வழிபட்டார். முருகன் அருளாலே அவருக்கு ஆண்மகனும் பிறந்தான். அதன் பின் முருகன் சேவா சங்கமெல்லாம் நெய்வேலி பக்கம் நடத்தினார், அவரின் மனைவிக்கு முருகப்பெருமான் நேரடியாகக் காட்சி தந்து பல ஆபத்துக்களைத் தடுத்து காத்த சம்பவமெல்லாம் உண்டு.

ஆனால், அவர்களுக்கு குருந்தமலை தெரியாது. அறிந்திருக்கவில்லை.

ஒருநாள் அவர் மனைவி தன்னை அறியாமலே குருந்தமலை கோவிலின் அடையாளமெல்லாம் சொல்லி, அங்கிருக்கும் அனுமன் ஆலயம் இன்னும் பலவற்றை சொல்லி அருள் நிலையில் பேசி அந்த ஆலயத்துக்குச் செல்ல பணித்திருக்கின்றார்.

அதன் பின்பே தேடிப்பார்த்து தன் மனைவி மூலம் முருகன் சொன்ன அத்தனை அடையாளமும் கண்டு பணிந்து குருந்தமலை முருகன் கோவிலுக்கு அக்குடும்பமே சாட்சியானது.

குருந்தமலை முருகனுக்கு சூட்டியிருக்கும் வெள்ளி கவசமும் வெள்ளி வேலும் அக்குடும்பம் கொடுத்தது. முருகப்பெருமான் அருளால் பிறந்த அவர்கள் மகன் முத்துகுமரன் இன்றும் அந்த ஆலயத்தின் சாட்சி.

போகரின் சப்த காண்டத்தில் குருந்தமலை பற்றிய குறிப்பு உள்ளது. இதுதவிர குருந்தமலை மாலை, குருந்தமலை பதிற்றுப்பத்து அந்தாதி, குருந்தமலை பிள்ளைத் தமிழ், கம்பீர விநாயகர் பதிகம், குருந்தமலை திருப்புகழ் உள்பட பல நூல்களும் குருந்தமலையின் புகழைப் பறைசாற்றுகின்றன.

குருந்தமலை ஸ்ரீ கம்பீர விநாயகப் பதிகம், குருந்தமலை ஸ்ரீ குழந்தை வேலாயுத மாலை, குழந்தை வேலாயுத சுவாமி பிள்ளைத் தமிழ், குருந்தமலை திருப்புகழ், குருந்தமலை பதிற்றுப் பத்தந்தாதி, குருந்தமலை ஸ்ரீ ஆஞ்சநேயர் பதிகம் ஆகியன குருந்தமலை என இம்மலை முருகனை பற்றிய பாடல்கள் நிரம்ப உண்டு

இன்னும் உடுமலை சரபகவி, அரன்கசாமி தாஸ், சொர்ணமணி நாராயண சாமி என எத்தனையோ கவிஞர்கள் இந்த குருந்தமலை முருகனைப் பற்றி பாடியுள்ளார்கள்.

முன்பு சேர நாட்டில் மிளகு, இலவங்கம், கிராம்பு ஆகியவற்றை வாங்கி மூட்டைகளாகக் கட்டி பொதி மாடுகளில் ஏற்றிக்கொண்டு வந்த வணிகர் சிலர் இந்த குருந்தமலை அடிவாரத்தில் ஒரு நாள் இரவு தங்கினர். அப்போது அவர்களிடம் வந்த சிறுவன் ஒருவன், இவை என்ன மூட்டைகள்? என்று கேட்க, சிறுவன்தானே என்ற அலட்சியத்தில் “தவிட்டு மூட்டைகள்’ என்றனர் வியாபாரிகள்.

மறுநாள் அவர்கள் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க, அனைத்தும் தவிட்டு மூட்டைகளாகவே மாறியிருந்தன.

அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் முருகனே சிறுவன் வடிவில் வந்தான் என்பதை உணர்ந்து குருந்தமலை மீது வீற்றிருந்த குமரனை வேண்டினர். உடனே அந்த மூட்டைகள் அனைத்தும் பழையபடி மாறின‌.

இப்படியான அதிசயங்களைச் செய்த ஆலயம் அது.

துரை மத்துவராயர் பாலயத்தார் என்பவர் கோயில் மானியமாக 100 ஏக்கர் நிலத்தை அளித்துள்ளனர். அதன் ஆவணங்கள் இன்றும் உண்டு.

இந்த ஆலயத்தின் சிறப்பாக மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சூரியனுடைய பொற்கிரணங்கள் முருகனுடைய திருமேனி மீது விழும் அதிசயம் உண்டு.

கோவை பக்கம் செல்லும் போது இந்த ஆலயங்களைத் தரிசித்து வாருங்கள். முத்துமலை முருகன் உங்களை எல்லா ஆபத்திலும் காத்து வேதனையினை மகிழ்ச்சியாக்குவார். கிணத்துக்கடவு முருகன் உங்கள் நோயெல்லாம் தீர்ப்பார். இந்த குருந்தமலை முருகன் குருவாக நின்று உங்களுக்கு பெரும் ஞானம் தந்து ஆட்கொண்டு உங்களை தன் சாட்சியாக காலத்துக்கும் நிறுத்துவார். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : திட்டமலை மற்றும் அருள்மலை.

முருகப்பெருமான் ஆலயங்கள் : திட்டமலை மற்றும் அருள்மலை.

கொங்குநாட்டில் குன்றுகள் இருக்குமிடமெல்லாம் முருகப்பெருமான் இருப்பார். அப்படிக் கோபிபக்கம் அமைந்த ஆலயங்கள் திட்டமலை மற்றும் அருள்மலை.

கோபிசெட்டிபாளையம் அருகே அமைந்துள்ள ஆலயங்கள் இவை. அங்கே நம்பியூர் அருகே அமைந்துள்ளது. இது முருகப்பெருமான் அருள்விருந்து இட்டமலை என அதன் வரலாறு தொடங்குகின்றது, அந்த அருள் விருந்து இட்டமலை பின் திட்டமலை என்றாயிற்று

அந்த வரலாறு கொஞ்சம் பழமையானது.

ஒரு காலத்தில் இங்கு மாடுமேய்க்க வந்த சிறுவர்கள் முருகப்பெருமான் பெயரைச் சொல்லிக் கல்லை வைத்து வணங்குவதும், விளையாடி உண்பதும் வழக்கமாய் இருந்தது.

அவர்களோடுச் சிறுவனாக குழந்தையாக முருகப்பெருமானும் விளையாடினார். இது சிறுவர்களுக்குத் தெரியாது.

அப்பக்கமாக வந்த சித்தர் ஒருவர் வந்து விளையாடுவது முருக பெருமானே என்பதை உணர்ந்து அங்கே வழிபடத் தொடங்கினார். அவரால்தான் அந்த ஆலயம் உருவாயிற்று.

இன்றும் மலை ஏறி செல்லும் போது அறுபதாம் படியில் அவருக்குச் சன்னதி உண்டு.

அக்காலத்தில் இங்கு செட்டியார்கள் பலர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பழனி முருகனின் பக்தர்கள் பழனி போல் ஒரு ஆலயம் அமைக்க மனதால் விரும்பினார்கள். ஆனால், காலம் கனியவில்லை, அங்கே உமையப்ப செட்டியார் என்பவர் தலைவராக இருந்தார்.

அவர்கள் இச்சிறிய கோவிலை பராமரித்து வந்தார்கள்.

அந்நாளில் இப்பகுதிகள் மைசூர் மகாராஜாவுக்கு கடும் வயிற்றுவலி வந்து படாதபாடுபட்டார், எந்த மருந்துக்கும் அது கட்டுப்படாததால் அவர் மனமுடைந்தார். வழிபாடுகளை மட்டும் மேற்கொண்டார்.

அவர் கனவில் வந்த முருகப்பெருமான் இப்பக்கம் செல்லுமாறும் அங்கே அவனுக்கு நலம் உண்டாகும் என அருள்மொழி சொன்னார். அதே நேரம் உமையப்ப செட்டியார் கனவில் வந்த முருகன் மன்னனுக்கு வெண்ணெய் கசடு கொடுக்கும்படிச் சொன்னார்.

மன்னனும் நோவுடன் அப்பக்கம் வந்தான். செட்டியார் முருகன் சொன்னதைச் சொல்லி வெண்ணெய் கொடுத்தார், அதை உண்ட மறுநொடி மன்னனின் வேதனை மறைந்தது.

மன்னன் இதெல்லாம் முருகப்பெருமானின் மகிமை என்பதை அறிந்து இந்த ஆலயத்தை பெரிதாக கட்டி கொடுத்து நிரம்ப நிலபுலன்களும் வசதியும் செய்து கொடுத்தான்.

அன்றிலிருந்து இன்றுவரை முருகப்பெருமானின் பேரருள் அங்குப் பொழிகின்றது.

சிறுவர்களோடு விளையாடிய குழந்தை வடிவில் வந்ததாலும், செட்டியார்கள் குலத்துக்கு குழந்தைச் செல்வம் அளித்ததாலும் இந்த முருகர் குழந்தை குமாரசாமி என்றானார், அவரை நம்பி வரும் எல்லாப் பக்தர்களுக்கும் அவர் அருள் எல்லா வடிவிலும் உண்டு.

பழனி முருகனை நினைந்து கட்டப்பட்ட ஆலயம் என்பதால் முருகன் அங்கே ஸ்தம்பத்தில் இருந்து மூலவர் வரை பால தண்டாயுதபாணியாகவே காட்சித் தருவார்.

அருகே வள்ளி தெய்வானை சன்னதி உண்டு, இன்னும் சனீஸ்வரர் உள்ளிட்ட நவக்கிரக சந்நிதிகள் உண்டு.

பழனி போலவே மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஆலயம் இது. இங்கு வழிபட்டால் பழனிக்குச் செல்லும் பலன் கிடைக்கும்.

தைப்பூசம் முதல் எல்லாப் பண்டிகைகளும் இங்கு விசேஷமாக கொண்டாடப்படும். குழந்தை வேலாயுதசாமி நீங்கள் அவரைக் கொண்டாடி ஆடிப்பாடி மகிழ்வித்து என்ன வரம் கேட்டாலும் உடனே தரும் சக்தி கொண்டவர்.

அவரைப் பணிந்து கேட்கும் எல்லாமும் அவர் அருள்வார். குழந்தை செல்வமும் அவர்களுக்கு கல்வி ஞானம் வழங்குவதிலும் இந்த முருகன் பிரசித்தியானவர்.

அடுத்த ஆலயம் அருள்மலை ஆலயம். இது சற்றுத் தள்ளி அமைந்துள்ளது.

இது தோரணவாவி எனும் கிராமம் அருகே அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமான் கிருபாகர சுப்ரமணியசுவாமி என அழைக்கப்படுகின்றார், கருணை மிகுந்தவர், பணிவுடன் கேட்பதை அள்ளித் தருபவர், கிருபை நிறைந்தவர் என அதற்குப் பொருள்.

இங்கும் பழனிமலை போலவே முருகன் தனித்து நின்று அருள் வழங்குகின்றார்.

கோயிலின் வெளிச்சுற்றில் காசி விசுவநாதர் சந்நிதி அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்தில் ஸ்ரீ விசாலாக்ஷி சமேத லிங்கேஸ்வரர், நவக்கிரகங்கள், சனிபகவான், நாகர் உடனான ஸ்ரீ விநாயகர் மற்றும் 600 முதல் 700 ஆண்டுகள் பழமையான மண்டபம் உள்ளது. கருவறை மற்றும் மண்டபத் தூண்கள் பல ஆண்டுகளாக முற்றிலும் வெள்ளை நிறத்தில் உள்ளன.

ஸ்ரீ லிங்கேஸ்வரர் சந்நதிக்கு அருகில் ஒரு குதிரை நின்று கொண்டிருக்கிறது, ஒரு பக்தர் தனது பிரார்த்தனையை நிறைவேற்ற நிறுவிய குதிரை சிலை இது.

அக்காலத்தில் குதிரை என்பது அந்தஸ்தின் அடையாளம், தனக்கு பெருவாழ்வு வழங்கிய முருகனுக்கு அந்த நன்றிக்கடனுக்காய் பக்தர் செய்த சிலை இது.

கிழக்கு வாசலில் துவஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் மயில் வாகனம் ஆகியவை உள்ளன. கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பயன்படுத்தப்படும் விளக்குத் தூண், நுழைவாயிலில் உள்ளது.

விநாயகர், இடும்பன், கன்னிமார், காலபைரவர், சனீஸ்வரர் ஆகிய திருவுருவங்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ளன.

இந்தத் தலம் 27 நட்சத்திரகாரர்களுக்கும் விசேஷமானது, நவக்கிரக பாதிப்புக்களை போக்கக் கூடியது. 27 நட்சத்த்திரங்களும் முன்பு வந்து 27 மரங்களை நட்டுவைத்து இங்கு தங்கள் அருளைப் பொழிந்திருப்பதாக தலபுராணம் உண்டு.

ஆம். இது எல்லா மக்களுக்கும் அருள் வழங்கும் அருள் மலை, இந்த மலை ஞான அருள் வழங்கும் மலை, நல்ல தெளிவான அறிவினை அருளும் மலை.

கொங்கு நாட்டின் கோபிசெட்டி பாளையம் பக்கம் செல்லும் போது இந்த ஆலயங்களைத் தரிசியுங்கள். எல்லா வளமும் ஞானமும் உங்களுக்குக் கிடைக்கும்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குமரன் குன்று மற்றும் உதயகிரி.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குமரன் குன்று மற்றும் உதயகிரி.

அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கோயம்புத்தூர் அருகே மேட்டுபாளையம் அன்னூர் சாலையில் இந்தத் தலம் அமைந்துள்ள்ளது. கல்யாண சுப்பிரமணிய சுவாமியாக அங்கு முருகப்பெருமான் அமர்ந்திருக்கின்றார்.

ஆலயங்களில் பலவகை உண்டு. தெய்வம் தானே தேடி வந்து அமர்ந்த ஆலயங்கள், சித்தர்கள் ஸ்தாபித்த ஆலயங்கள் எனப் பல உண்டு. என்றோ யாராலோ ஸ்தாபிக்கப்பட்டு பின் மீள உருவாக்கப்பட்ட ஆலயங்கள் உண்டு. சிலைகள் கண்டெடுக்கப்பட்டு அங்கு ஸ்தாபிக்கப்பட்ட‌ ஆலயங்கள் உண்டு.

அதில் ஒன்று இந்தக் குமரன் குன்று ஆலயம்.

இந்த ஆலயத்தின் வரலாறு தொன்மையானது. என்றோ அங்கு வழிபாடு நடந்திருக்கின்றது, பின்னாளில் அது இல்லாமல் போனது, அப்படியான ஆலயம் மீண்டும் எழும்பிற்று.
மாடுமேய்க்க அப்பக்கம் வந்த சிறுவர்கள் கூடி விளையாடும் போது அங்கு வேப்பமரத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த கற்சிலை ஒன்றைக் கண்டார்கள்.

அதை முழுக்க தோண்டியபோது அது பழுதான முருகன் சிலை, தண்டாயுதபாணி சிலை என்பதை அறிந்து அங்கே ஒரு குடிசை கட்டி வழிபாட்டை தொடங்கினார்கள்.

அங்கு கேட்டவரம் கிடைத்தது, அற்புதங்கள் வாடிக்கையாயின, சாட்சிகள் பெருகின, இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

அந்தச் சிறிய குடிசை கோவிலானது, பழங்கால சிலை புதிய சிலையாக உருமாறிற்று. முருகப்பெருமான் தொடர்ந்து அங்குவரும் பக்தர்களை ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கின்றார்.

இந்த ஆலயம் தோரணா வாயில் அருகே புலிப்பாணி சித்தரின் சிலையோடு தன் பக்தர்களை வரவேற்கின்றது, புலிப்பாணி சித்தர் உலாவிய இடங்களில் அப்பகுதியும் ஒன்று.

அதை அடுத்து அரசமர விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்லும் பாதையில் இடும்பன், கடம்பன் சன்னிதிகள் எதிர் எதிரே உள்ளன.

கருவறையில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையோடு கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார்.

பின்பகுதியில் வைத்தீஸ்வரர், தையல்நாயகி சந்நிதி விமானங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் முன்புறம் மகா கணபதி, நவக்கிரகம், வீரபாகு, அருணகிரிநாதர் சந்நதிகள் உள்ளன. வழமையான கொங்கு நாட்டு தீப ஸ்தம்பம் கோயிலுக்கு வெளியேயும், கொடிமரத்தின் உட்புறமும் உள்ளன.

அங்கு ஒரு ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. சனிதோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இவரை 48 முறை வலம் வந்துவேண்டினால், சனியின் தாக்கம் குறையும்.

இந்தக் கோவில் திருமண தடைகளை நீக்கி நல்வாழ்வு தரும் ஆலயம், அதனாலே இந்த முருகருக்கு “கல்யாண சுப்பிரமணியர்” என்றும் பெயர்.

இந்தக் கோவிலில் ஐந்து தலவிருட்சங்கள் உண்டு, அவை வில்வம், வேம்பு, அரசு, காட்டுமல்லி மற்றும் காரை ஆகிய ஐந்துமாய் உண்டு.

இந்த விருட்சங்களின் அடியில் பஞ்சதரு விநாயகர், ஈசன், நாகர், இவர்கள் உண்டு. சக்தியும் உண்டு, இந்தத் தல விருட்சத்தை, ஐந்து விருடங்களை அவற்றின் தெய்வத்துடன் வணங்கினால் அற்புதம் நிகழும்.

இங்கு வருடாவருடம் நடக்கும் அதிசயம் அதாவது சித்திரை ஒன்றாம் தேசி சுவாமியின் மேல் சூரிய ஒளிபடும் அந்த அதிசயம்.

இது வருடாவருடம் அந்நாளில் நடக்கும் காட்சி, அதனால் முந்தைய இரவிலே அங்கு கூட்டம் கூடி இரவெல்லாம் பஜனை, முருகன் பாடல்கள் என வழிபாடுகளைச் செய்வார்கள், அதிகாலை சூரிய ஒளி ஸ்வாமி மேல் விழுவதை தரிசிக்கும் பரவசத்துடன் இந்த வழிபாடு நிறைவடையும்.

இங்கு கந்த சஷ்டி, விசாகம், கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. பங்குனி உத்திர விழாவும், தைப்பூசத் திருவிழாவும் இத்தலத்தின் முக்கியப் பெருவிழாக்கள், விமரிசையாகக் கொண்டாடப்படும்.

13 நாட்கள் கொண்டாடும் விழவான தைப்பூசம் அன்று கிரிவலம் நடைபெறும்.

இந்தக் கோவிலின் பூஜையில் முன்னிற்பது ஆதிதிராவிட மக்களே, அவர்கள்தான் பிரதான வழிபாட்டை செய்வார்கள்.

1பங்குனி உத்திர திருவிழாவில், கொடுமுடியில் இருந்து 108 கலசங்களில் தீர்த்தம் எடுத்து வந்து, அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் பூஜை செய்வர். பின்னர் அங்கிருந்து தாரை தப்பட்டை ஓசை முழங்க, பக்திப் பரவசத்துடன் பாடல்களைப் பாடியவாறு தீர்த்தக் கலசத்தை சுமந்து வருவதும் அவர்களே.

இது காலம் காலமாக நடப்பது, இந்துமதம் சாதிய பாகுபாடு மதம் எனச் சொல்லப்படும் பெரும் பொய்யினை உடைத்துப் போடும் ஆலயம் இது.

இந்த ஆலயம் நோய்களைக் குணமாக்கும், உடல் நோய், மனநோய் உள்ளவர்கள் இத்தலத்தில் தங்கியிருந்து காலையும் மாலையும் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொண்டு முருகனை வழிபட்டு, நோய் நீங்கப் பெற்று செல்லும் அதிசயம் அடிக்கடி நடக்கும்.

இங்கு பூ போட்டு குறிபார்க்கும் வழக்கம் உண்டு. அது முழுக்க சரியான வழியினையே காட்டும், அனுதினமும் பலர் பலன் பெற்றுச் செல்கின்றனர்.

இங்குப் பக்தர்கள் நேர்ச்சை செய்வதும் அது நிறைவேறியதும் அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து இறைவனைப் பணிவதும் அன்றாட விஷயங்கள்.

இந்த முருகன் ஆலயம் சக்தி வாய்ந்தது. என்றோ புதைந்த சிலைவடிவில் முருக பெருமானே தனக்கானவர்களைத் தேடி உருவாக்கிக் கொண்ட ஆலயம் அது.

அப்படி எழுந்த முருகன் தன்னை தேடி தேடி வரும் மக்களுக்கு அன்றாடம் அருள்பாலிக்கின்றார், கூட்டம் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கின்றது.

கானகமாக இருந்த இடம் குடிசைக் கோவிலாக உருவாகி இன்று பெரும் ஆலயமாக வீற்றிருக்கின்றது. நாளுக்கு நாள் பெரிதாகி வருகின்றது என்பதற்கு முருகப்பெருமானின் அருள் ஒன்றைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்? அதைப் பெற்றுக்கொள்பவர்கள் பாக்கியசாலிகள்.

அடுத்த ஆலயம் ஈரோடு அருகே அமைந்திருக்கும் உதயகிரி ஆலயம். இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானுக்கு முத்து வேலாயுத சாமி எனப் பெயர்.

இது இப்பக்கம் சோழர்களும் சேரர்களும் மாறி மாறி ஆட்சி செய்த காலங்களில் உருவான கோவில், சுமார் ஆயிரமாண்டு பழமையான அபூர்வ ஆலயம்.

இந்த ஆலய கற்கள் விஷேட மானவை. அந்தக் கற்களில் அமைக்கப்பட்ட அற்புதமான வேலைப்பாடுகளும், நேர் கோட்டில் அமைந்த தூண்களும் அதன் மேல் அமைக்கப்பட்ட கூரையும் ஆச்சரியமானவை மிக மிக அழகானவை.

சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது இந்த உதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் இறைவனான முருகப்பெருமான் முத்து வேலாயுத சுவாமி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கற்கள் கொண்டு கட்டப்படும் பழமையான கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது இக்கோயில். அற்புதமான வேலைப்பாடுகளுடன் ஒரே நேர்கோட்டில் தூண்கள், மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சித்திரை மாதம் சில நாட்கள் இங்கு சுவாமி மேல் சூரிய ஒளி விழும், உதய நேரம் அந்தக் கதிர்கள் விழுவதால் இது உதயகிரி ஆயிற்று என்பதும் சில குறிப்புகள்.

இந்த உதயகிரியில் கிழக்கு நோக்கி நின்று சுவாமி வரம் அருள்கின்றார், கருவறையில் முத்து வேலாயுத சுவாமி, நின்ற கோலத்தில் வலது கையில் தண்டத்தை ஏந்தி, இடது கையை இடுப்பில் ஊன்றியபடி காட்சி தருகிறார்.

இங்கு பஞ்ச பூதங்களும் பஞ்சலிங்கங்கள் அமைந்திருப்பது பெரும் சிறப்பு, அப்படியே ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அக்னி, வாயு உள்ளிட்ட பஞ்சலிங்களும், ஒரே மண்டபத்தில் வரிசையாக அமைந்துள்ளன. ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்கள் அமைந்துள்ள சகஸ்ர லிங்கம் அமைந்துள்ளது. இது இந்த ஆலயத்தின் பெரும் சிறப்பு.

இங்கு காலபைரவர் தனி சன்னதியிலும், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோர் தனி சந்நிதிகளிலும் எழுந்தருளியிருக்கின்றனர்.

உள்ளே ஸ்ரீ காசிவிஸ்வநாதரும், இடது புறத்தில் ஸ்ரீ காசிவிசாலாட்சியும் எழுந்தருளியிருக்கின்றனர்.

கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், திருக்கல்யாண மண்டபம், வாகன மண்டபம், அமுத மண்டபம் என ஆகம விதிப்படி ஒரு ஏக்கர் பரப்பளவில் முழுவதும் கற்களால் அமையப்பெற்றுள்ள பழமையான கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.

இந்த ஆலயம் மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டது, அன்றில் இருந்து இன்றுவரை என்ன கேட்டாலும் கொடுக்கக்கூடியது.

குறிப்பாக பகைவர்களை அடக்கி வெற்றி தரும் வரம் இந்த ஆலயத்தில் அருளப்படும், எல்லாத் தடைகளும் இங்கு நீங்கும்.

இங்குள்ள முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலையிட்டு 108 தீபமேற்றி வழிபட்டால் எதிரிகள் தடை, திருமண தடை என எல்லாத் தடைகளும் நீங்கும்.

கடன் தொல்லை நீங்கும், செல்வம் பெருகும். குறிப்பாக குழந்தை பாக்கியம் கட்டாயம் உண்டு.

இந்த இரு ஆலயங்களுமே அடிப்படையில் சூரிய ஒளி மூலவர் மேல் படும்படி, சுவாமி மேல் சித்திரையில் படும்படி அமைக்கப்பட்டவை.

இதன் அர்த்தம் இருவகையில் ஆழமானது.

அதாவது, இவை இரண்டுமே சூரியனின் அருள்மிக்க தலம், முருகப்பெருமானின் ஆலயங்கள் செவ்வாய் கிரக ஆதிக்கம் பெற்றவை அங்கே சூரியன் கூடும் போது பலம் கூடும், அங்கு வழிபட்டால் எல்லாப் போராட்டத்திலும் வெற்றிபெறும் சக்தி கிடைக்கும்.

இந்த ஆலயம் அதை அருளும்.

சூரியன் ஆரோக்கியத்துக்குமான கடவுள், லௌகீகமாக சூரிய ஒளி உடலுக்கு நல்லது. அது தோல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும்.

அவ்வகையில் இந்த ஆலயம் தோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் ஆலயம். உடலில் தேமல், கட்டி இதர‌ தோல் வியாதிகளால் அவதிப்படுவோர் இத்தலத்து தீர்த்தப் பொய்கையில் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை இட்டு முருகப்பெருமானை வழிபட்டால் தோல் வியாதிகள் நீங்கும்.

இரத்த ஓட்டத்தை சரி செய்து ஆரோக்கியம் தரும் ஆலயம் இது.

இந்த இரு ஆலயங்களுமே முருகப் பெருமான் தான் வந்து அமர்ந்து ஆட்சி செய்யும் ஆலயங்கள். இரண்டுமே தோல் சம்பந்தமான நோய்கள் எல்லாமும் நீங்கித் தரும். வாழ்வினை வளமாக்கித் தரும். கோவை, ஈரோடு பக்கம் செல்லும் போது இந்த ஆலயங்களைத் தரிசித்து இந்த முருகன் அருளைப் பெற்றுக்கொள்வது அவரவர் பாக்யம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கொங்கணகிரி மற்றும் மந்திரகிரி.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கொங்கணகிரி மற்றும் மந்திரகிரி.

கொங்கு நாட்டில் திருப்பூர் அருகே கொங்கணகிரி எனும் ஊரில் உள்ள சிறிய குன்றில் அமைந்திருக்கும் ஆலயம் இது. அந்த ஆலயத்தில் முத்துக்குமாரசுவாமியாக முருகப்பெருமான் அருள் பாலிக்கின்றார்.

இந்த ஆலயத்தின் வரலாறு கொங்கண முனிவரோடு தொடங்குகின்றது. தமிழக பக்தி உலகில் அசைக்க முடியா வரியான “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா” என்ற வரி இவருக்கானது.

இவர் கேரளத்தின் கொங்கணம் எனும் பகுதியினைச் சேர்ந்தவர். அந்தக் கடற்கரையோரம் கொங்கன் எனும் பெயர் மராட்டியம் வரை உண்டு. அந்த மேற்குக் கரையிலும் கொங்கு, கொங்கன் எனும் பெயர் பிரசித்தி.

அங்கிருந்து தமிழகம் வந்து போகர் எனும் மகா சித்தரிடம் அவன் சீடனாய்ச் சேர்ந்தார். போகர் அவருக்கு எல்லாக் கலைகளும் கற்றுக்கொடுத்தார். அதில் மருந்துக்கலையும் ஆன்மீகவழிபாடும் இன்னும் பல சூட்சும வித்தைகளும் உண்டு.

போகர் இவரைக் கொங்கு நாட்டுக்கான தன் சீடனாக வைத்திருந்தார். கொங்கு நாட்டில் பல காலம் சேவை செய்ததால் இவர் கொங்கணவர் என்றானார் என்பாரும் உண்டு.

இந்தக் கொங்கணவர் பெரும் சித்தர். சித்தர்கள் என்பவர்கள் உலக நலனுக்காக மானுடர்களுக்கும் எல்லா உயிர்க்குமான வாழ்வினை வாழ்பவர்கள். அவர்களின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு வேலையும் இந்த உலகம் பயனுற வாழவும் மக்கள் எல்லாமும் பெற்று இறைவனை அடைய வழிகாட்டுவதாகவுமே அமைந்திருக்கும்.

சித்தர்கள் மருத்துவம் முதலான பல விஷயங்களில் மானிடர்க்கு உழைப்பவர்கள். மூலிகை மருத்துவம் முதல் சூட்சும மருந்துகள் வரை அறிந்தவர்கள். சித்தர்கள் தங்களுக்கு அறிவும் ஞானமும் தெளிவும் வர முருகப்பெருமானை வழிபடுவார்கள்.

எல்லாச் சித்தர்களின் மூல சக்தியும் ஆதாரமும் முருகப்பெருமானாகவே இருப்பார். முருகப்பெருமானும் சித்தர்களும் பிரிக்கமுடியாச் சக்திகள்.

அப்படியான கொங்கணவர் கொங்குநாடு முழுக்க நிறைய முருகன் ஆலயங்களை ஸ்தாபித்தார். அங்கே அவர் பெருவாழ்வு வாழ்ந்து கடைசியில் ஊதியூர் எனும் தலத்தில் முருகப்பெருமானோடு ஐக்கியமானார், அவர் சமாதி அங்குதான் உண்டு.

அப்படியான கொங்கண முனிவர் இந்த ஆலயத்தை ஸ்தாபித்தார். இந்த முத்துக்குமாரசாமியினை அவரே இங்கு நிறுத்தி இந்த ஆலயத்தை ஸ்தாபித்தார் என்பதில் தொடங்குகின்றது தலவரலாறு.

சித்தர் கொங்கணவர் இந்த ஆலயத்தை அதிசிறந்த யந்திரங்களைப் பதித்து சக்தி மிக்கதாக மாற்றினார்.

பொதுவாக ஒரு ஆலயத்தில் விக்ரஹங்களின் கீழே, கருவறை விக்ரஹத்தின் அடியில்தான் யந்திரங்கள் வைக்கப்படும், இங்கே பீடத்திலே யந்திரம் ஸ்தாபிக்கபட்டிருக்கின்றது.

இங்குச் சுவாமி யந்திர ரூபமாக எழுந்தருளுளியுள்ளார், யந்திரம் என்றால் பெரும் சக்தியினைத் தொடர்ந்து தரும் விஷயம் எனப் பொருள்.

இந்த ஆலயத்தின் யந்திரம் எவ்வளவு சூட்சுமான சக்தி கொண்டது என்றால் அங்கு பாலினை வைத்தால் அது தானாகவே பொங்கி வழியும்.

இப்போதும் இந்த அற்புதம் அந்த ஆலயத்தில் உண்டு எப்போதும் உண்டு, இதனாலே இதனை “பொங்கு தலம்” என்றும் அழைப்பார்கள்.

அவ்வளவுக்கு சூட்சுமமான சக்திகொண்டது இந்த ஆலயம். சித்தர் கொங்கணவர் அவ்வளவு சக்தியாய் இதனை ஸ்தாபித்திருக்கின்றார். இந்தச் சக்திதான் அங்குச் சென்று வழிபடுவோரின் ஆராவினை சுத்தப்படுத்தும் அது பல நல்ல பலன்களை நல்ல அதிர்வுகளைத் தரும்.

இங்கு இன்னொரு விசேஷம் பாலை மரங்கள், அந்த மரங்கள் இந்த ஆலயத்தில் நிரம்ப உண்டு. இந்த ஆலயத்தின் சக்தியால் அவைகளும் நல்ல அதிர்வினைப் பெற்றிருக்கின்றன‌.

இந்த மரக்குச்சிகளை எடுத்துச் சென்று நற்காரியங்களில் மங்கல காரியங்களில் முக்கியமானதாகப் பயன்படுத்தும் நம்பிக்கை இன்றும் அப்பக்கம் உண்டு.

இங்குக் கருவறையில் வள்ளி தெய்வானையோடு முருகப்பெருமான் அருள்பாலிக்கின்றார், சக்தி மிக்க அந்தக் கருவறை எல்லா வரமும் அருள்கின்றது.

கோயிலின் வாயு மூலையில் வேங்கடேச பெருமாள் சன்னதி உண்டு.

ஈசான மூலையில் தேவியருடனும் வாகனங்களுடனும் நவக்கிரக மூர்த்திகள் அருள்கின்றனர். இந்த நவக்கிரஹங்கள் சக்திவாய்ந்தவை, அதுவும் இந்தத் தலம் செவ்வாய் கிரகத்துக்கான பரிகாரத் தலம்.

செவ்வாய்க்கிழமைகளில் திரிசதி வழிபாடு இங்குப் பெரும் விசேஷமாக கொண்டாடப்படும். கொங்கணர் கால வழமை இது.

இங்குத் தல விருட்சம் பழமையான வக்கனை மரம். ஆதிகாலத்தில் இங்கு ஒரு வக்கனை மரத்தின் அடியில்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக செய்தி உண்டு என்பதால் அம்மரம் இன்றும் அங்குக் கொண்டாடப்படுகின்றது.

வக்கனை மரம் என்றால் புங்க மரம்.

வெளியே அரசமரம் உண்டு. இந்த இரு மரங்களுமே நல்ல அதிர்வுகளைப் பிரபஞ்ச சக்தியினைப் பெற்றுத் தருபவை என்பதால் இவற்றை வலம் வருதலும் நன்று.

இந்த ஆலயம் அருணகிரி நாதரால் பாடப்பட்ட ஆலயம்.

“ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினை வருள்வாயே

அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமன மருள்வாயே

தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி யருள்வாயே

தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ யருள்வாயே

மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
முன்றனைநி னைத்தமைய அருள்வாயே

மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை யருள்வாயே

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே”

பாடலின் பொருள் இதுதான்.

“யானைமுகமுடைய விநாயகப் பெருமானுக்கு இளையவராக விளங்கி, மூன்று உலகங்களையுந் தனது வலிமையால வற்றச் செய்து வெற்றிக்கொள்ளும், கொங்கணகிரி எனுந் திருமலைமேல் எழுந்தருளி வளர்கின்ற பெருமிதமுடையவரே!

எல்லாக் காரியங்களிலும் முற்படுகின்ற மனத்தை ஐம்புலன்களின் வழியே செல்லவொட்டாது தடுத்து நினைப்பு மறப்பு நீங்கிய சகச நிலையில் நிற்க அருள்புரிவீர். பூமண்டலத்தில் வளர்கின்றதாகிய செந்தமிழ்ப் பாடலால் தேவரீரை அன்புடன் துதிசெய்து உய்யுமாறு நன்மனத்தை யருள்புரிவீர்;

நிலைபெற்ற தவத்தால் வருகின்ற மெய்யுணர்வைத் தந்து அடியேன் சிவகதி பெறுமாறு சந்திர மண்டலமாகிய குளிர்ந்தமேலைப் பெருவெளிக்கு வழியை அருள்புரிவீர்;

பல்லக்கு மிக்க உயர்வு முதலியவற்றுடன் எட்டுத் திசைகளிலுள்ள யாவரும் மதிக்குமாறு வளர்ச்சியடைகின்ற மிகுந்த மகிழ்ச்சியை அருள் புரிவீர்; அரசர்கள் இரவும் பகலும் உயிர்களை இனிது புரந்து சிவநெறி சார்ந்து உய்ய நல்லறிவைத் தந்தருள்வீர்;

கொங்குநாட்டில் அவிநாசியில் ஏரிக்குத் தென்கரையில், சுந்தமூர்த்தியினால், சிவபெருமான் திருவருள் துணைகொண்டு, முதலைவாய்ப்பட்ட மகன் உயிர் பெற்று உடம்புடன் வெளிப்பட்ட திருவருட் செல்வத்தை அருள்புரிவீராக” என்பது.

அருணகிரி நாதர் இந்தத் தலத்தில் என்னென்ன அருள் உண்டு, எதெல்லாம் முருகப்பெருமான் தருவார் என்பதை அழகாகச் சொல்கின்றார்.

நல்ல ஞானம் கிடைக்கும், தெளிந்த அறிவு கிடைக்கும், ஐம்புலனும் அடக்கி முக்திபெற வழிகிடைக்கும், இன்னும் எட்டுதிக்கும் மதிக்கும்படி பெருவாழ்வு கிடைக்கும், நல்ல ஆட்சியாளரும் அவர்களுக்கு ஏற்ற ஞானமும் அருளப்படும்.

அப்படியே நல்ல புத்திரபாக்கியமும் இந்த ஆலயம் தந்தருளும்.

ஆம். இது எல்லா வளங்களையும் தரும் ஆலயம். பால் தானே பொங்குவது போல் உங்கள் வாழ்வில் எல்லா வளங்களும் நலமும் ஐஸ்வர்யமும் பொங்க அந்த முருகப்பெருமான் பெரும் அருள் புரிவார்.

அங்குச் சென்று பாலாபிஷேகம் செய்து விளக்கேற்றி வழிபடுங்கள், அந்த சன்னதியில் நின்றுவழிபடுங்கள், அந்த ஆலயத்தின் பாலைமர குச்சியும் சக்திமிக்கது எனும் நிலையில் அந்த ஆலயம் எல்லா நலன்களையும் தரும்.

அங்கு வழிபடும் போது முருகப்பெருமானின் அருளோடு, கொங்கணரின் தனி அருளோடு அந்த யந்திர சக்தியின் வல்லமையோடு உங்கள் சாபம் தீர்ந்து கர்மவினை தீர்ந்து எல்லாமே நலமாகும். இது சத்தியம்.

அடுத்த ஆலயம் மந்திரகிரி மலை. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செஞ்சேரியில் அமைந்துள்ள வேலாயுத சுவாமி ஆலயம்.

அந்த ஊரின் பழைய கால பெயர் தென்சேரி, பின் அது செஞ்சேரி என மருவி நிலைத்தும் விட்டது.

இந்த ஆலயம் மகா பழமையானது. எவ்வளவுக்கு பழமையானது என்றால் முருகப்பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்த காலத்திற்கு முன்பே உருவானது.

முருகப்பெருமான் ஒரே நாளில் சூரனை சம்ஹாரம் செய்துவிடவில்லை பல காலம் அதற்காக கடும் தயாரிப்பினைச் செய்தார்.

அந்தக் காலகட்டங்களில் முருகப்பெருமானுக்கு விசேஷ மந்திரத்தை உபதேசிக்க சித்தம் கொண்ட சிவன் அவரை அழைத்துச் சொன்னார்.

“குமரா, இந்தப் போரில் நீ வெற்றிபெற சத்ருசம்ஹார மந்திரம் முக்கியம், அதனை எளிதாக பெற்றுவிட முடியாது, நீ நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள இடத்தில் தவம் செய்’ எனச் சொன்னார்.

அப்படி ஒரு இடத்தை முருகப்பெருமான் தேடியபோது இந்தத் திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞானதீர்த்த சுனைநீரும், அருகேயே தர்ப்பையையும், சற்று தொலைவில் சின்னமலையில் சிவதீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கக் கண்டார். அந்த இடமே சரியான இடம் என்பதை உணர்ந்து அங்கே தவமியற்றினார்.

அவரின் தவத்தை முன்னிட்டு வந்த சிவபெருமான் அங்கே அவருக்கு சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்தார். முருகப்பெருமான் மந்திரம் பெற்றமலை “மந்திரகிரி” என்றாயிற்று.

ஆம். இந்த மலை அறுபடை தலங்களைப் போல மகா பழமையான தலம், யுகங்களைக் கடந்து நிற்கும் தலம்.

இங்கு ஆலயக் கருவறையில் தாமரை பீடத்தில் நின்ற கோலத்துடன் ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் முருகப்பெருமான்.

வலது கரங்களில் அங்குசம், கத்தி, கேடயம், சர்ப்பம், மணி, அபய முத்திரையுடனும், இடது கரங்களில் சேவல், பாசம், வில், அம்பு, கதை, வரத முத்திரையுடனும் அருளாசி வழங்குகிறார்.

வலது பக்கத்தில் இருக்கும் கடைசி கையில் பாம்பையும், இடது பக்கத்தில் இருக்கும் மேல் கையில் சேவலையும் வைத்திருக்கிறார். இடது கையில் சேவலையே ஒரு கருவி போல் ஏந்தியிருக்கின்றார்.

இங்கு முருகப்பெருமானின் ஆறு தலைகளும் எட்டு திசையும் பார்க்கும்படி இருப்பது வேறு எந்த கோவிலிலும் இல்லாத அமைப்பு.

இங்கு கருநொச்சி மரம் தலவிருட்சமாக உண்டு. இங்குள்ள தல மரத்தை 12 முறை சுற்றி வந்து சந்நிதியில் தீபம் ஏற்றினால் தொழிற்தடை நீங்குதல், எதிரிகள் நீங்குதல், மன அமைதி, திருமண வரம் கைகூடுதல், குழந்தைப்பேறு ஆகிய வரங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தக் கோயிலின் சிறப்பான திரிசதி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகின்றது.

இத்தலத்தில் விஷ்ணு தனது வலது கையில் லிங்கத்தை வைத்தபடி காட்சி தருகின்றார். இது விசேஷமான ஒன்று.

அருணகிரி நாதர் இந்த ஆலயத்தை பாடியுள்ளார், இன்னும் “மந்திர முருகன்” “மந்திரி முருகன் ” “மந்தியப்பன்”, “மந்திர மூர்த்தி” எனப் பல பெயர்களில் இம்முருகன் அழைக்கப்படுகின்றார்.

மாணிக்கவாசக சுவாமிகள் “மந்திர மாமலை மேயாய் போற்றி” எனத் திருவாசகத்தில் போற்றும் ஆலயம் இதுதான். என்றும் வற்றாத சுனை இந்த ஆலயத்தின் பெரும் அதிசயம்.

மிகப் பழமையான காலத்தில் இருந்து மூவேந்தர் காலம் தொடங்கி இன்றுவரை முருகப்பெருமான் அருள்பாலிக்கும் தலம் இது.

இந்தப் பகுதியின் 60 கிராமங்களில் “கறந்த பாலும், பிறந்த முடியும் இந்த முருகனுக்கு” எனக் கொண்டாடுகின்றார்கள்.

இந்த ஆலயத்தில் பக்தர்கள் குறிகேட்கும் வழக்கம் தொன்மையானது. அந்த முருகப்பெருமானின் இடது கையிலும் வலது கையிலும் பூக்களை வைக்கின்றார்கள்.

சில நிமிடங்களுக்குள் வலது கை பூ விழுந்தால் நினைத்த காரியம் தொடரலாம் என்பதும் இடது கை பூ விழுந்தால் தாமதிக்கலாம் என்பதும் பூ விழவே இல்லை என்றால் அந்தக் காரியம் வேண்டாம் என்பதும் அதன் பலன்.

இன்றுவரை மிகச் சரியாக இருக்கும் கணிப்பு இது. எல்லா மக்களும் அப்பக்கம் இந்த உத்தரவை முருகனிடம் இருந்து கேட்டுப் பெற்றுக் கொள்கின்றார்கள். அப்பக்கம் எல்லா வளமும் செழிப்பும் பசுமையும் உண்டு.

அந்தத் தலம் எதிரிகளின் எதிர்ப்பை தடைகளை சம்ஹாரம் செய்து தரும். சத்ரு சம்ஹாரம் என்பது எதிரிகளுக்காக மட்டும் அல்ல, ஒருவனிடம் இருக்கும் சோம்பல், அறியாமை இன்னபிற துர்குணங்களை ஒழிப்பதுமாகும்.

இந்தக் குணங்கள் நீங்கினாலே ஒருவனுக்கு எல்லா அருளும் கிடைக்கும், இந்த ஆலயம் அந்தப் பலனைத் தரும்.

அங்குச் சென்று சத்ரு சம்ஹார மந்திரம் சொல்லலாம், அத்தோடு இந்த வரிகளையும் துதிக்கலாம். இது அகத்திய பெருமான் கொடுத்தது.

“எனது சங்கடங்கள் அனைத்தும் விலகிடச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

நவக்கிரகங்கள் ஒன்பதும் நன்மையே அருளச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

சகல விதமான தோஷங்களும் என்னை விட்டுப் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

எல்லா விதமான வருத்தங்களும் என்னை விட்டு அகல வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

துக்கங்களிலிருந்து நிவாரணம் எனக்குக் கிடைக்கட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

என்னுடைய தாபங்கள் தீர்ந்து விட அருள் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

பாவங்கள் என்னிடம் நெருங்காமல் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

என்னை வாட்டுகிற நோய்கள் உடலை விட்டு ஓடிவிடட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

எதிரிகள் என்னை விட்டு விலகிப் போவார்களாக ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

உடல் சார்ந்த நோய்கள் தீர்ந்து போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

என்னைச் சுற்றுகிற பீடைகள் மறைந்து விடட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

எனக்கு பயம் என்பதே இல்லாமல் போக வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

எனக்கு சத்ரு உபாதைகள் தொந்தரவுகள் அகலட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

கெட்ட சம்பவங்கள் வராமல் தடுக்கப்பட வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

கெட்ட கனவுகள்வராமலேயே நசிந்து போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

தரித்திரம் என்ற சொல்லுக்கு இடமின்றி போக வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

தீய சக்திகள் நெருங்காமல் விலகியே இருக்கட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

என்னைக் கடும் விஷம் பாதிக்கப்படாமல் இருக்கட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

எல்லா வகையிலும் லாப நிலைகள் வந்து அடையட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

நெருங்குகிற போதே நோய்கள் நசிந்து குலையட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

தீய நினைவுகள் என்னிடம் வராமல் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

சம்பத்துக்கள் மலைபோல வளரட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

மனம் போல விருப்பங்கள் நிறைவேறட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

நான் வசிக்கும் இல்லத்தில் மங்களங்கள் உண்டாகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

உலகத்திற்கு உரிய நலன்களைக் கொடுப்பாயாக ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

எனக்குள் அபூர்வ சக்திகள் வந்து சேரட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

என் வாழ்வில் பேரன் பேத்திகள் உருவாக வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

எப்போதும் சுப நிகழ்வுகளையே அருளுவாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

கல்வி அறிவு அபரிமிதமாக வளர்ந்து விடட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

எங்கும் எப்போதும் சாந்தி நிலவிட அருள்க ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

நான் சொல்லும் மந்திரங்கள் சித்தியாக வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

எனது சொல்லும் வாக்கும் பலருக்கும் பயனாக அருள்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

நான் செய்யும் யந்திர பூஜை சித்தியைத் தரட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

நான் பயின்ற தந்திர சாஸ்திரங்கள் வெற்றியைத் தரட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

முழுமையான வாழ்நாளை எனக்குத் தந்தருள்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

என் நினைவுகளில் நல்லதே வந்து உதிக்கட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

மனதில் தோன்றும் விருப்பங்களை வெற்றி அடையச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

எனக்கு எப்போதும் மன நிம்மதியைக் கொடுப்பாயாக ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

எனக்கு விருப்பம் எனத் தோன்றுவதைத் தந்து விடுக ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

திரியும் விலங்குகள் எனக்கு வசமாக வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

அனைவருக்கும் சுகாதாரத்தை வளரச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

மனதில் வைராக்கியத்தை வளரச் செய்திடுக ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

உலகில் எல்லா யோக பாக்யங்களும் சேர்ந்திட அருள்வாய் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

என் ஆத்மா புனிதத்தன்மை அடைந்து விடட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

என் குருவிடம் நான் அதிகமான பக்தி கொள்ச் செய்வீராக ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

எனது சுயரூபத்தைப் பிரகாசமடையச் செய்வீராக ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

கலிகாலத்தின் தோஷம் எங்களை விட்டு அகல வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

தனம், தான்யங்கள் வளர்ந்து செழிக்க வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

குடும்பத்தில் சூன்யங்கள் பிறரால் வைக்கப்படாமல் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

மனவருத்தங்கள் கணவன- மனைவியரிடையே வராமல் இருக்கட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

மனக்கிலேசம் விலகி அன்பு பெருகட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா.

வேண்டாத பயம் என் மனதை விட்டு நீங்கி விடட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

அனைத்து பூத ப்ரேத பிகாச உபத்திரவங்கள் விலகி விடட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா

வழக்கு வெற்றி முதல் சகல காரியங்களிலும் வெற்றியே தொடரட்டும் ஸ்ரீ சத்ரு சம்கார வேலாயுதா”

என்ற துதிகளைச் சொல்லி வேண்டுங்கள்.

சுருக்கமாக “ஓம் சத்ரு சம்ஹார சுப்ரமணிய சுவாமியே நமோ நமஹ” எனும் ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வழிபடுங்கள் அங்கே எல்லா எதிரிகளும், துர்குணங்களும், தடைகளும் அகலும்.

கொங்கு நாட்டின் இந்த இரு தலங்களும் முக்கியமானவை. ஒன்று கொங்கணமுனி ஸ்தாபித்தது, இன்னொன்று முருக பெருமானே வந்து அமர்ந்து அவருக்காய் சிவனே வந்து மந்திரம் சொல்லி ஸ்தாபித்த மந்திரமலை.

இந்த இரு தலங்களும் மிக முக்கியமானவை. உங்கள் எல்லாத் தடைகளையும் விக்கினங்களையும் தீர்த்து எதிரிகளை எல்லாம் ஒழித்து உங்களை வாழவைக்கும் தலங்கள். அப்பக்கம் செல்லும் போது அதனைத் தரிசிக்க தவறவிடாதீர்கள், செல்லமுடியாதவர்கள் மனதால் வணங்குங்கள். அந்த முருக பெருமானே உங்களை அழைத்துச் செல்வார். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : ஏரகர‌ம் முருகன் கோவில் மற்றும் காவலூர் முருகன் கோவில்.

முருகப்பெருமான் கோவில்களில் இந்த ஆலயம் தனித்துவமானது. இதுதான் முருகப்பெருமான் தன் தந்தைக்கு மந்திர உபதேசம் செய்த தலம் எனவும் அறியப்படுகின்றது.

இது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள ஏரகரம் என்ற ஊரில் மிகப் பழமையான கந்தநாதசுவாமி கோயிலாக‌ அமைந்துள்ளது.

இந்தத் தலத்தின் மூலம் சூரபத்மன் காலத்தில் அதாவது முருகப்பெருமான் அவதரித்து வந்த காலங்களில் இருந்து தொடங்குகின்றது. சூரபத்மன் அவன் கட்டிவைத்த மகேந்திரபட்டணத்தில் மட்டுமல்ல அவன் எல்லா இடங்களிலும் அட்டகாசம் செய்தான், அவன் ஆட்கள் அவனைவிட அதிகம் செய்தார்கள்.

அப்படிப்பட்ட கூட்டம் இப்பக்கம் தவம் செய்த முனிவர்களுக்கு ரிஷிகளுக்கு பெரும் தொல்லை கொடுத்தது. பாதிக்கப்பட்ட முனிவர்கள் சிவபாதம் பணிந்து நின்று கதறினார்கள்.

சிவன் அசுரர்களை அழிக்கவே அவதரித்த தன் மகன் முருகனை நோக்கினார். முருகப்பெருமான் அந்த அசுரர்களை நோக்கி ஒரு அஸ்திரம் எய்தார், அது சென்று விழுந்த இடத்தில் இருந்த அசுர கூட்டம் அனைத்தும் அழிந்தன, மற்ற அசுர கூட்டம் சிதறி ஓடிற்று.

அஸ்திரம் விழுந்த இடத்தில் தன் மகனை நிறுத்தி அங்கே காவல் இருக்கச் சொன்னார் சிவன், தந்தை சிவன் வேண்டுதலை ஏற்று அங்கு தன் அருளாசியினை வழங்கிக் கொண்டிருந்தார் முருகப்பெருமான்.

அவர் அங்கும் காவல் பணியிலும் இன்னும் பல பணிகளைச் செய்துகொண்டிருந்தபோதுதான் பிரம்மனுக்கும் முருகப்பெருமானுக்கு பிரணவ மந்திரம் தொடர்பாக சர்ச்சை வந்தது. அகங்காரம் கொண்ட பிரம்மன் முருகப்பெருமானை அவமதிக்க, முருகப்பெருமானோ பிரணவ மந்திரத்துக்குப் பொருள் சொல்லச் சொன்னார்.

பிரணவம் என்பது படைப்பின் அடிப்படை, அதைத் தெரியாமல் எப்படிப் படைப்புத் தொழிலைச் சரியாகச் செய்யமுடியும் எனப் பிரம்மனைச் சிறையிட்டார் முருகப்பெருமான்.

அவரை விடுதலை செய்யக்கோரி சிவனிடம் கோரினார் விஷ்ணு.

மகனை இங்குவந்து அதாவது இந்த ஏரகத்துக்கு வந்து சந்தித்த சிவன் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார், “முருகா, பிரம்மனுக்கு மந்திரம் மறந்துவிட்டது எனச் சொல்லி சிறையில் அடைத்திருக்கின்றாய். ஆனால், அது உனக்கு தெரிந்திருந்தால்தானே அவரைச் சிறையில் அடைக்க உனக்கு உரிமை உண்டு” எனக் கேட்டார்.

அங்கே முருகப்பெருமான் தன் தகப்பனுக்கே மந்திரப்பொருளை உபதேசித்தார், அந்த இடம்தான் இந்த ஆலயம்.

ஆம். இதுதான் முருகப்பெருமான் சிவனுக்கு மந்திரப்பொருள் சொன்ன இடம், குருவாக நின்று போதித்த இடம். ஆனால், அது சுவாமிமலை என இப்போது அறியப்படுகின்றது, சுவாமிமலை இதை அடுத்து வெகு சமீபமாக ஒட்டினாற்போல் அமைந்திருக்கும் ஆலயம்.

பொதுவாக, இந்து ஆலயங்களில் ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு. அங்கே தெய்வீக சம்பவம் நடந்த தலம் ஒன்றும் அதன் தத்துவம் சொல்லி பிரமாண்ட ஆலயம் அதன் அருகிலும் அமைந்திருக்கும்.

திருவண்ணாமலையில் ஆதி அண்ணாமலையார் ஆலயமே மூல ஆலயம், இப்போதிருக்கும் ஆலயம் அதற்குப் பின்னால் உருவானது.

ஆவினன்குடிதான் முருகப்பெருமான் முதலில் வந்து நின்ற இடம், பழனிமலை அந்தத் தத்துவத்தில் பின்னால் உருவானது.

மாம்பாடு எனும் மணப்பாடு கடல்பக்கம்தான் முருகப்பெருமான் சூரனை வதைத்தார். அங்கு முன்பு ஆலயமும் இருந்தது, அதன் அருகே திருசெந்தூரில்தான் பிரமாண்டமான ஆலயம் கட்டப்பட்டது.

மாம்பாடுதான் சூரன் மாமரமாக நின்ற இடம், அங்கேதான் சூரசம்ஹாரம் நடந்தது, அங்கு சிறிய ஆலயம் இருந்தது பின்னாளைய மதமாற்றங்களில் எல்லாம் மறைக்கப்பட்டது.

அப்படிச் சம்பவம் நடந்த இடம் ஒன்றும் அதன் அருகில் பக்தர்களுக்காகக் கட்டப்பட்ட கோவில் இன்னொன்றுமாக பல இடங்களில் உண்டு, இந்த ஏரகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல‌.

சுவாமி மலை சொல்லும் மூல தாத்பரியம் இங்குதான் நடந்தது, அறுபடைவீடும் இதுதான், இதனை திருமுருகாற்றுபடை சொல்கின்றது.

முதல் மூத்த நூல் என்பதாலும், மதுரை தமிழ்ச்சங்கம் கண்ட நக்கீரரே, சிவனுடன் மோதிய நக்கீரரே எழுதிய பாடல் என்பதாலும் இதனைக் கொண்டு இங்கே விளக்கலாம்.

அவரின் அறுபடை வீட்டில் சுவாமிமலை என்ற பெயர் இல்லை. திருவேரகம் என்ற பெயரே உண்டு, ஏரகம் என்பதே ஏரகரம் என்றும் சொல்லப்படுகின்றது,

நக்கீரர் பாடுகின்றார்.

“இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி

அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு

ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்

புலராக் காழகம் புலர உடீஇ,

உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து

ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி

நாஇயல் மருங்கில் நவிலப் பாடி

விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து

ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று”

நக்கீரர் திருவேரகம் பற்றிப் பாடுகின்றார், இந்த ஆலய தாத்பரியத்தைப் பாடுகின்றார்.

ஏரகம் என்றால் ஏர் + அகம் எனப் பிரிந்து வரும். ஏர் என்றால் அழகு, அகம் என்றால் வீடு. இங்கே அகம் என்பது தெய்வம் வாழும் அகத்தை குறிப்பது.

அப்படியே அருணகிரி நாதரும் தன் பாடலில் ஏரகமே மூத்த சுவாமிமலை என்பதையும் பாடுகின்றார்.

“ஏரக வெற்பெனும் அற்புத மிக்கசு வாமிமலைப்பதி மெச்சிய சித்த” எனும் வரியில் அருணகிரிநாதரும் அதை உறுதி செய்கின்றார்.

நக்கீரர் இது வேதத்துக்குப் பொருள் சொன்ன முருகனின் பெருமைமிக்க தலம் என்பதால் வேத அந்தணர்கள் வேதவடிவில் முருகப்பெருமானை போற்றுவதைப் பாடுகின்றார்.

முருகப்பெருமான் தந்தைக்கு வேதம் சொன்ன இடம் இது. அந்த வேதத்தை ஓயாமல் ஓதிக்கொண்டிருப்பவர்கள் பிராமண அந்தணர்கள். அதனால் அதிகம் அவர்களைப் பற்றியே அந்தத் தலத்தில் பாடுகின்றார் நக்கீரர்.

அது வேதம் ஒலிக்கும் தலம் என்பதைச் சுருக்கமாகச் சூசகமாகச் சொல்ல விழைகின்றார். வேதங்கள் ஒலிக்குமிடத்தில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் அருள் புரிவார். அங்குச் சென்றால் வேதஞான அருள் கிட்டும் என்பதைப் பாடுகின்றார்.

(வேதங்களின் அதிபதி முருகப்பெருமானே. வேதத்திலேயே மற்ற தெய்வங்களுக்கு இல்லாத சிறப்பாக முருகப்பெருமானை மட்டுமே ‘ஸுப்ரஹ்மண்யோம்’ ‘ஸுப்ரஹ்மண்யோம்’ ‘ஸுப்ரஹ்மண்யோம்’ என வேதமே மூன்று முறை வணங்குகிறது.

பரமேஸ்வரனின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறியாக அவர் உருவானதால் அவர் அக்னி ரூபம். அதனால் அந்தணர்கள் அக்னியாகவே முருகப்பெருமானை, தினமும் செய்யும் சம்மிதாதானம், ஔபாஸனம், அக்னிஹோத்ரம், யாகங்களில் முக்கியமாக வழிபடுகிறார்கள்.)

இதனை மிக அழகாகத் தன் பாடலில் பதிவு செய்து ஏரகத்தில் அந்தணர்கள் முருகப்பெருமானை வணங்கிய காட்சியினைச் சொல்கின்றார்.

ஆம். இதுதான் நான்காம் அறுபடை வீடு. பின்னர், வந்த சுவாமிமலை இந்தத் தாத்பரியத்தில் அருகில் உருவானது.

சோழர்கள் திருப்பணி செய்த இக்கோவிலில் விக்ரமச்சோழன்காலத்துக் கல்வெட்டு `இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்முடி சோழ மங்கலம்’ என்று இதனைக் குறிக்கின்றது.

`இன்னம்பர் நாடு’ என்பது பழங்காலத்தில் சோழமண்டலத்தில் காவிரிக்கு வடகரையில் இருந்த பற்பல நாடுகளில் ஒன்று, அப்பர் சுவாமிகள் தமது க்ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் “இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர் கயிலாயநாதனையே காணலாமே’ என்று பாடியுள்ளார்.

இப்பாடலில் குறிக்கப்படும் ‘ஏர்’ என்ற ஊர், இன்னம்பரோடு சேர்த்துப் பாடப் பெற்றிருக்கிறது. இவற்றின் மூலம் இத்தலத்தின் தொன்மையை மட்டுமன்றி, இது தேவார வைப்புத் தலமாக உள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

ஆம். நக்கீரர் சொன்னதையே கல்வெட்டும் சொல்கின்றது, அப்பர் சுவாமிகள் பாடலும் சொல்கின்றது.

கந்தனிடம் போதனை பெற்ற சிவன் இங்கு “ஸ்கந்த நாதர்” என வழங்கப்படுகின்றார், இவருக்கு சங்கரநாதர் என்றும் பெயர் உண்டு.

இந்தத் தலத்தில் அம்பிகைக்கு `சங்கரநாயகி’ என்று பெயர். கோயிலுக்கு அருகிலுள்ள சரவணப் பொய்கை கந்தப் பெருமானால் உண்டாக்கப்பெற்றது.

இக்கோயில் நான்கு பிராகாரங்களுடன், நெல்லி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டும் அமைந்திருக்கிறது.

கோயிலில் நுழைந்தவுடன் துவார விநாயகர், துவார சுப்ரமணியர் சந்நிதிகள் உள்ளன. கொடிமரம் இல்லை. அம்பிகை சங்கர நாயகி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். வெளிச்சுற்றில் விநாயகர், முருகன், நவகிரகங்கள் முதலான சந்நிதிகள் உள்ளன.

முருகப்பெருமானிடம் உபதேசம் பெற்ற கந்தநாத சுவாமி சிவலிங்க வடிவில் ஜெகஜோதியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மேற்குப் பிராகாரத்தில் ஏரகத்தமர்ந்த எழில் முருகன், ஒரு முகம் நான்கு கரங்கள் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

பின் கரங்களில் வஜ்ர சக்தியும் திரிசூலமும் கொண்டுள்ளார். முன் வலக்கரத்தால் அபயம் காட்டியும் இடக் கரத்தை இடுப்பில் ஊன்றியபடியும் அருள்பாலிக்கிறார்.

அற்புதமான இந்தக் கோலமே “ஆதிசுவாமிநாத சுவாமி’ கோலம், வேறெங்கும் காணமுடியாதபடி இங்கு மட்டுமே காணப்படும் அருள்கோலம்.

நிச்சயம் வரலாற்றின்படி, ஆதாரங்களின் படி, தலவரலாற்றின்படி இந்த ஆலயமே நான்காம் அறுபடை வீடு, முருகப்பெருமான் சிவனுக்கு மந்திரம் போதித்த இடம் இதுதான்.

முருகபெருமான் சிவனுக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் என்பது அவரின் ஞானத்தை பெரும் அறிவினை சொல்வதாக இருந்தாலும் அதன் உண்மையான தாத்பரியம் ஒரு ஆத்மாவின் தெளிவு அல்லது ஞானம்.

பிரணவமே உலகை இயக்கி படைக்கின்றது, அதே பிரணவமே ஒரு ஆத்மாவினையும் இயக்குகின்றது அது அறியாத ஆத்மா, மாயையில் சிக்கிக்கிடக்கும் ஆத்மா தான் யாரெனத் தெரியாமல் தன்னை மறந்து திரிகின்றது.

ஒரு ஆத்மா தானும் இறைவடிவம், தானும் பிரணவத் தத்துவம் கொண்ட வடிவம், தன் இலக்கு இறைவனை அடைவது என்பதை உணர்தல் வேண்டும், அதை மறந்துவிட்டால் அந்தப் பிறவி அர்த்தமில்லை, அதை உணராமல் இறைபதம் சேர்வதுமில்லை.

பிரம்மன் அதை மறந்தான் என்பது ஆத்மா தான் யார் எனத் தெரியாமல் திரியும் அவலத்தை மாயபிடியினைச் சொல்வது. அதாவது, முருகப்பெருமான் மாயையினை அழித்து ஆத்மாவின் உண்மை சொரூபத்தை வெளிக்கொணர்வார்.

முருகப்பெருமானின் ஞானம் ஆத்ம ஞானம் வழங்கும் என்பதை சிவனே உறுதிப்படுத்திய இடம் இந்த ஏரகம்.

இதனை இன்னொரு சம்பவமும் சொல்கின்றது. அப்பக்கம் வாழ்ந்த அந்தணர் கூடுவிட்டு கூடுபாயும் வித்தை கற்று கரடி உடலுக்குள் புகுந்து எல்லோரையும் அச்சுறுத்தி வந்தார், அப்படி ஒரு முனிவரையும் அச்சுறுத்தினார், அம்முனிவரோ கரடியினை நோக்கி உடலோ கரடியின் உடல் உள்ளே அந்தணரின் ஆத்மா என அறிந்து, நீ கரடியாக போ எனச் சபித்தார்.

அதன்பின் அந்தணரால் அந்த கரடி உடலைவிட்டு வரமுடியவில்லை, மிகவும் வருந்தி அழுத அவர் இந்த ஆலயத்தின் சரவணப் பொய்கையில் வந்து குளித்து முருகனை வேண்டியபோது கரடி உடல் நீங்கிற்று.

இந்தச் சம்பவமே இங்கு ஆத்மா தன்னை யார் என அறியும் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.

கரடி உடலுக்குள் சிக்கிய அந்தணனின் ஆத்மா போல இந்த மாய உடலில் சிக்கி ஆத்மா தவித்து நிற்கின்றது, இந்த ஆலயம் ஆத்மாவினைத் தெளியவைத்து ஞானம் தரும். அதுதான் அந்த ஆலய தாத்பரியம்.

அங்குச் சென்று வழிபடும்போது மாயை அகலும், கர்மம் விளங்கும், வாழ்வின் கர்மத்தைச் சரியாகச் செய்ய எல்லா வளமும் ஞானமும் அருளப்படும்.

பிள்ளைச் செல்வம் இல்லாதவர்கள் தங்களுக்கு ஞானமும் அறிவுமிக்க பிள்ளைகள் பிறக்க இங்கு வழிபடுவது வழமை, அங்கே குழந்தை வரம் கிடைக்கும்.

எல்லாரும் வணங்கதக்க ஆலயம் என்றாலும் வேதம் பயில்பவர்கள், சமய குருக்கள், யோகியர், தவமுனிகள், மாணவர்கள், பல துறைகளில் குருவாக நின்று போதிப்பவர்கள், புதுமணத் தம்பதியினர், குழந்தை இல்லாதவர் வந்து வழிபட்டு பெரும் பலன் அடையும் தலம் இது.

சுவாமிமலைக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் வழிபடவேண்டிய தலம் இதுதான், இங்கு வழிபட்டுவிட்டு சுவாமிமலைக்குச் செல்லுதல் சாலச் சிறந்தது, இதுதான் மூலக்கோவில், தாய்கோவில்.

இங்குச் சென்று வழிபடுபவர்கள் நிச்சயம் வரம்பெற்றவர்கள், எல்லா நலமும் அவர்களைச் சூழும்.

“கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு

தருமா கடப்ப மைந்த தொடைமாலை

கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த

கருணா கரப்ர சண்ட கதிர்வேலா

வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்

முடியான துற்று கந்து பணிவோனே

வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து

மலர்வாயி லக்க ணங்க ளியல்போதி

அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று

னருளால ளிக்கு கந்த பெரியோனே

அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த

ணருளே தழைத்து கந்து வரவேணும்

செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த

படிதான லக்க ணிங்க ணுறலாமோ

திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த

திருவேர கத்த மர்ந்த பெருமாளே”

எனும் திருப்புகழ் பாடலோடு அவரை வணங்கினால் இன்னும் கூடுதல் பலன் உண்டு.

அடுத்து, இந்த ஆலயத்தில் இருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருக்கும் காவலூர் அல்லது காவளூரில் அமைந்திருக்கும் சண்முகசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.

தஞ்சாவூர் அருகே பெருமாக்கநல்லூர் பக்கம் அமைந்திருக்கும் இந்தத் தலம் அருகே வெட்டாறு, தெற்கில் இருந்து வடக்கு திசை நோக்கிப் பாய்வதால், “உத்திர வாஹினி” என்று கருதப்படுகிறது. அதனால் காசிக்குச் சமமாகக் கருதப்படுகிறது, முன்பே அங்கு சிவவழிபாடும் இதர வழிபாடுகளும் சிறிய கோவில் வடிவில் இருந்திருக்கின்றது.ஒஒ

இந்தச் சண்முகசுப்பிரமணிய ஆலய வரலாறு முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, அவன் மிகப்பெரும் சிவபக்தனாக அதே நேரம் பெரும் வீரனாகச் சோழநாட்டை புகழுற நடத்தி வந்தான்.

அவனின் திருக்கோவில் பணிமுதல் நாட்டின் நிர்வாகம், பாதுகாப்பு என எல்லாமும் கவனித்துவந்தவர் வில்லவபேராயர் எனும் சிவனடியார், வாளேந்தவும் அவருக்குத் தெரியும்.

இவர்தான் மன்னனை வழிநடத்தினார். மன்னர் இவரைத் தன் இராஜகுருவாகக் கொண்டாடினான், சுருக்கமாகச் சொன்னால் இராஜராஜசோழனுக்குப் பிரம்மராயர்போல் பராந்தகனுக்கு இவர் இருந்தார்.

இவர்தான் திருச்சோற்றுத்துறை ஓதலனேஸ்வரர் கோவில், கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் என எல்லாமும் கட்டியவர், அது பற்றிய சான்றுகள் இன்றும் அங்குக் கல்வெட்டாக உண்டு.

சோழநாட்டின் எல்லாச் சிவாலயங்களுக்கும் திருப்பணி செய்து அவற்றின் வரவு செலவு நிர்வாகம் என எல்லாமும் செய்து, கோவிலுக்கு வேண்டுவன செய்து எல்லா ஆலயங்களும் பொலிவுற செய்து வந்தார், எண்ணற்ற ஆலயங்களை உருவாக்கினார்.

புதிய ஆற்றுப்பாசனம் அங்கே விளைச்சல் நிலம், அங்கே குடியிருப்பு, அங்கே சிவாலயம் என எல்லாமும் பெருக்கி வந்தார், அவரால் சோழநாடு சிறந்தது, மன்னன் அவர்பால் மிக மகிழ்ந்தவன் ஒரு சிறப்பைச் செய்ய விரும்பினான்.

அதன்படி பெரும் பொருள் கொடுத்து திருக்காவலூர் எனும் அவர் பிறந்த ஊரில் ஒரு கோவில் கட்டிக்கொள்ள அனுமதி கொடுத்தான்.

வில்லவபேராயர் மனம் மகிழ்ந்துபோனார். மிகச் சிலிரித்துப் போனார். அடிப்படையில் அவர் சேனைத்தலைவராகவும் இருந்ததால் சேனைகளின் அதிபதியான முருகப்பெருமானுக்கு ஒரு கோவில் கட்டவிரும்பினார்.

அங்கே அவருக்கு ஒரு சிக்கல் வந்தது. முருகப்பெருமானுக்கு கோவில் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது ஆனால் குன்று இருந்தால் நல்லது என்றும் குன்று இல்லா இடத்தில் எப்படி முருகன்கோவில் கட்டுவது என்றும் குழப்பம் வந்தது.

குன்று இல்லாமல் எப்படி என முதலில் குழம்பிய வில்லவபேராயர் பின் நாமே ஒரு குன்றை உருவாக்கி முருகன் கோவில் கட்டினால் என்ன எனச் சிந்தித்தார்.

அப்படியே ஒரு மேடையினை உருவாக்கினார், அந்த கல்மேடையினை அவர் சாதாரணமாக உருவாக்கவில்லை எல்லா மக்களும் பயனடையும்படி மிக நுணுக்கமான வகையில் சிந்தித்தார்‌

அவருக்கு ஜாதகத்தில் ஞானம் இருந்தது. அந்த ஜாதக விதிப்படி இது எல்லா ராசிக்கும் பலன் கொடுக்கும்படி அதை அமைக்க விரும்பினார்.

எல்லா ஜாதக ஞானியர் சாஸ்திரிகளை அழைத்து 12 படிகளும் 12 ராசிக்கான படிகள், அதாவது 12 ராசிக்குமான பரிகாரபடிகளாக அமைத்து மேடையில் ஆறு மண்டபம் கட்டி அதன் மேல் முருகனை ஸ்தாபிக்க விவாதித்தார்.

12 ராசிகளுக்கும், 12 விதமான கற்கள் உண்டு. அவற்றைத் தேடிப் பிடித்து அவற்றை உரிய முறையில் பூஜித்து அவற்றுக்கு மந்திரமோதி சக்திமிக்கதாக்கி அந்தந்த ராசிக்கு உள்ள தெய்வங்களுக்குரிய பூஜைகளைச் செய்து இந்தப் படிகளை ஸ்தாபித்தார்.

ஆம். இந்த 12 படிகளும் 12 ராசியினருக்கானவை. எந்த ராசிக்கு பரிகாரம் வேண்டுமோ அந்த ராசிக்காரர்கள் அவரவர் ராசிக்கான படியில் விளக்கு வைத்து வேண்டினால் பெரும் பலன் உண்டு, இன்றும் என்றும் அதற்கு சாட்சிகள் உண்டு.

எந்த மக்களானாலும் 12 படிகளைத் தாண்டி செல்லும்போது ஏதோ ஒருபடியில் அவர்கள் ராசிப்படி அவர்கள் கர்மா கழிந்து, கெட்டது எல்லாம் அகன்று நல்லது உருவாகத் தொடங்குகின்றது.

12 படிகள் தாண்டி தன்னிடம் வரும் பக்தர்களை ஆறுமண்டப உச்சியில் இருந்து முருகப்பெருமான் தன் அருளால் ஈர்த்துப் பெரும் ஆசி வழங்குகின்றார்.

இந்த ஆறு மண்டபங்களும் ஆறு சக்கரம் முதல் முருகப்பெருமானின் ஆறு முகங்கள் வரை பெரும் தொடர்புக் கொண்டவை.

இந்த ஆலயம் காசிக்கு நிகரானது என்பதால் இங்குச் சூரியன் எனும் பித்ருகாரகன் தனித்து நிற்பார். அதுதான் இது பித்ருக்கள் கர்மாவினைச் செய்ய உருவான ஆலயம் என்பதைச் சொல்கின்றது.

வெட்டாறு வடக்கே திரும்பி ஓடும் இந்த இடத்தில் தை அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பித்ருக்கள் பூஜையும் விசேஷமாக நடக்கும்.

இது காசிபோன்ற தலம் என்பதால் கோயிலின் உள்ளே நுழைந்ததும் தென்புறத்தில் காசி விஸ்வநாதரும், வடபுறத்தில் விசாலாட்சி அம்பாளும் கிழக்கு நோக்கி காட்சித் தருகின்றனர்.

அன்னை விசாலாட்சிக்கு எதிரே மேற்கு நோக்கி சூரியனும், பைரவரும் அருள்பாலிக்கின்றனர். இன்னும் பல சந்நிதிகள் உண்டு.

முக்கியமாக, இந்த ஆலயத்தைக் கண்டு வியந்து தன் திருப்புகழில் பாடிய அருணகிரி நாதர்க்கு தனி சிலை உண்டு.

முக்கியமாக, வெகு நுணுக்கமாக இந்த ஆலயத்தை கட்டிய அந்த வில்லவபேராயர் சிலையும் உண்டு. முழுக்க கையில் கழுத்தில் எல்லாம் ருத்திராட்சம் அணிந்து அவர் மீசை சகிதம் இடையில் வாளுடன் ஒரு சேனாதிபதிக்குரிய வகையில் நின்றுகொண்டிருக்கின்றார்.

இந்த ஆலயம் 12 ராசியினரும் வழிபட வேண்டிய ஆலயம். முக்கியமாக, கந்தப் பெருமான் செவ்வாய் கிரகத்தின் அதிதேவதை ஆவார். அங்காரக தோஷம் எனப்படும் செவ்வாய் தோஷத்தால் வரும் திருமணத் தடை, இரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கும் ஆலயம்.

இன்னுமோர் மிகுந்த சூட்சுமம் இங்கு உண்டு. அதாவது. முருகப்பெருமான் தேவசேனாதிபதி, தேவர்களின் காவலன் பூலோக மக்களுக்கும் காவலன்.

செவ்வாயின் அதிபதி என்பதால் நிலம் சம்பந்தபட்ட விஷயம், இரத்தம் சம்பந்தபட்ட விஷயம் என எல்லாவற்றுக்கும் முருகப் பெருமானே முழுப்பொறுப்பு.

அதாவது, காவல் பொறுப்பு, இரத்தமே உடலைக் காக்கும், இரத்தத்தில் ஒரு உணர்ச்சி உள்ளவர்களே காவலர்களாக வரமுடியும்.

சேனாதிபதியாக இதனைச் சரியாக உணர்ந்திருந்த வில்லவபேராயர் மிக நுணுக்கமாக இதனைக் காவலர்கள், விளையாட்டு வீரர்கள், இராணுவ வீரர்கள் இன்னும் வீரதீரபிரிவில் உள்ளவர்களின் அருளுக்காகக் கட்டிவைத்தார்.

எல்லா மக்களும் இங்கு வணங்குதல் சிறப்பு என்றாலும் காவல்துறையினர், விளையாட்டு வீரர்கள், தேசம் காக்கும் இராணுவவீரர்கள் என அப்பிரிவினர் வந்து வணங்கினால் கூடுதல் பலம் உண்டு, அக்கால சோழ சேனைகளின் விருப்பமிகு ஆலயமாக இது இருந்தது.

இப்போதும் இந்த ஆலயத்தில் காவலர்கள், காவல் அதிகாரிகள் வணங்கினால் நிச்சயம் பெரும் இடம் செல்வார்கள். விளையாட்டு வீரர்களின் உடல்பலம் மனபலம் அதிகரிக்கும். பெரும் சாதனை அவர்கள் நிச்சயம் செய்வார்கள்.

தஞ்சாவூர் பக்கம் செல்லும்போது இந்த ஆலயத்தினைத் தரிசிக்க மறவாதீர்கள், செவ்வாய்தோஷம் திருமணத் தடை எனவும், இரத்தம் சம்பந்தமான எல்லா நோய்களையும் நீக்கித்தரும் ஆலயம் அது.

12 படிகளில் எந்தப் படி உங்கள் இராசிக்கானதோ அங்கே சுத்தமான நெய்விளக்கேற்றி வழிபட்டு பின் மண் கலயத்தில் நீர் வைத்து அந்தப் படியில் வைத்துப் பூஜித்து சில சொட்டுக்களை உள்ளே குடித்துவிட்டு, கலயத்தை வீட்டுக்கு எடுத்து வந்து தெளியுங்கள், அதன்பின் உங்கள் வாழ்வே மாறும். இது சத்தியம்.

அபப்டியே காவலர்கள், விளையாட்டு வீரர்கள், இராணுவம் என உடல்வலிமையினைத் தொழிலாகக் கொண்ட காவல்பிரிவினர் இங்கு வழிபட்டால் நிச்சயம் பெருமிடம் அவர்களுக்கு முருகப்பெருமான் அருளால் அமையும். இது சத்தியம்.

அருணகிரியாரின் வரிகளில் அந்தத் திருக்காவலூர் சண்முகசுப்பரமணிய சுவாமியினைத துதித்து வணங்கலாம்.

“மானை நேர்விழி யொத்தம டந்தையர்

பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர்

வாச மாமலர் கட்டும ரம்பைய …… ரிருதோளும்

மார்பு மீதினு முத்துவ டம்புரள்

காம பூரண பொற்கட கம்பொர

வாரி நீலவ ளைக்கைபு லம்பிட …… அநுராகம்

ஆன நேரில்வி தத்திர யங்களும்

நாண மாறம யக்கியி யம்பவும்

ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும் …… உறவாடி

ஆர வாரந யத்தகு ணங்களில்

வேளி னூல்களை கற்றவி ளம்பவும்

ஆகு மோகவி பத்துமொ ழிந்துனை …… யடைவேனோ

சான கீதுய ரத்தில ருஞ்சிறை

போன போதுதொ குத்தசி னங்களில்

தாப சோபமொ ழிப்பஇ லங்கையு …… மழிவாகத்

தாரை மானொரு சுக்கிரி பன்பெற

வாலி வாகுத லத்தில்வி ழுந்திட

சாத வாளிதொ டுத்தமு குந்தனன் …… மருகோனே

கான வேடர்சி றுக்குடி லம்புன

மீதில் வாழித ணத்திலு றைந்திடு

காவல் கூருகு றத்திபு ணர்ந்திடு …… மணிமார்பா

காவு லாவிய பொற்கமு கின்திரள்

பாளை வீசம லர்த்தட முஞ்செறி

காவ ளூர்தனில் முத்தமி ழுந்தெரி …… பெருமாளே.”

முருகப்பெருமான் ஆலயங்கள் : கரிக்கல் மலை, செதுக்கரை மற்றும் தம்டமலை முருகன் கோவில்கள்.

முருகப்பெருமான் எக்காலமும் இங்கு உண்டு. காலம் காலமாக அவர் இங்கு அருள்பாலித்துக் கொண்டிருப்பார். கோடானகோடி தலைமுறையினைக் கண்ட அந்த பெரும் தெய்வம், ஒவ்வொரு தலைமுறையிலும் தனக்கு உகந்த அடியார்களைத் தேடி தனக்கான ஆலயத்தை நிர்மாணித்துக் கொள்வார்.

அவர் என்றோ யாரையோ ஆட்கொண்டவர் மட்டும் அல்ல, அவரின் அனுக்கிரகம் எல்லாக் காலத்திலும் உண்டு. இக்காலத்திலும் உண்டு. அதற்கொரு பெரும் சாட்சிதான் இந்தக் கரிக்கல் மலை குமரேச ஆலயம்.

இந்த ஆலயம் இராணிபேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் பக்கமாக அமைந்துள்ளது, கரிக்கல் எனும் கிராமத்தை ஒட்டி அமைந்துள்ளது.

இந்த மலையில் ஆதிகாலத்தில் சித்தர்கள் நடமாட்டமும் முருகப்பெருமான் வழிபாடும் இருந்திருக்கின்றது, பின் அவை தொடர்பற்று அடையாளமற்று போயின‌.

ஆனால், உரிய காலம் வந்தபோது மிகப்பெரிய கல் ஒன்று மலையில் இருந்து உருண்டு விழுந்திருக்கின்றது, அதிசயம் என்னவென்றால் அவ்வளவு பெரிய கல் மலையில் இருந்து விழும் வேகத்துக்கு இன்னும் வேகமாய் உருண்டு ஊரை அழித்திருக்கவேண்டும்.

ஆனால், அதுவோ அடுப்பில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட பானை போல் அப்படியே மலையினை ஒட்டி நின்றுகொண்டது.

அந்தப் பாறையினை ஒட்டி ஒரு குகையும் உண்டு, அங்கே ஒரு விநாயகர் உருவம் சுயம்புவாக இருந்தது, அதனை மக்கள் வணங்கி வந்தார்கள்.

அப்படி சுமார் 50 அல்லது 60 ஆண்டுக்கு முன்பு வணங்க வந்தவர் நாராயணசாமி எனும் பக்தர், அடிப்படையில் இவர் அன்று இராணுவத்தில் இருந்தவர்.

இங்கு வழிபட வந்தவர் விநாயகரை வணங்கிவிட்டு மலையினைக் கண்டபோது அங்கு முருகப்பெருமான் நின்று கொண்டிருப்பதைக் கண்டு விழுந்து வணங்கினார், தான் வணங்கும் முருகப்பெருமான் மலையில் நின்று கொண்டிருப்பதை காட்சியாகக் கண்டவர் அதிசயித்துப் போனார், மனம் உருகிப்போனார்.

யாருக்கும் கிடைக்காப் பாக்கியத்துடன் அவர் மலையினைத் திரும்பி திரும்பி பார்த்தபடியே வந்தபோது ஒரு முதியவர் வெண்தாடியும் நரைத்தமுடியுமாக எதிர்வந்தார்.

அவர் இவரை நோக்கி புன்னகைத்துக் கேட்டார், “பாலகனைக் கண்டாய் அல்லவா? அங்கு ஏன் கோவில் கட்டக் கூடாது” சொன்னவர் சிரித்துவிட்டு மறைந்தே போனார்.

அந்த நாராயணசாமிக்குள் அந்த நொடியில் மாற்றம் வந்தது. அவருக்குள் முருகப்பெருமான் முழுக்க இறங்கினார், அவரால் அந்த ஒரே ஒரு அடியாரால் இந்த ஆலயம் எழும்பிற்று.

சுமார் 400 படிகள் கொண்ட மலையின் மேல் படி அமைத்து முருகப்பெருமானுக்கு ஆலயம் எழுப்புவது சாதாரணம் அல்ல, ஆனால் நாராயணசாமி எனும் அடியார் அதனைச் செய்து காட்டினார்.

சல்லிக்காசு கையில் இல்லாத அவருக்கு முருகன் அருளால் குவிந்த நிதிகளைக் கொண்டு மலையில் குமரேசனுக்கு ஆலயம் கட்டி, சன்னதி கட்டி தனக்கு முருகன் கட்டளையிட்டபடி ஆலயம் அமைத்துக் கொடுத்தார்.

பின் ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினார்கள், பண்டிகைகள் விமரிசையாக நடந்தன, சஷ்டி முதல் சூரசம்ஹாரம், தைப்பூசம் என எல்லாமும் விமரிசையாக நடந்தன‌.

இப்போது அந்த கரிக்கல் எனும் சிறிய கிராமம் இந்த முருகப்பெருமான் அருளால் உலகெல்லாம் அறியப்படுகின்றது.

அந்த ஆலயத்தில் கேட்டது கிடைக்கின்றது, என்ன நினைத்துச் சென்றாலும் நடக்கின்றது, சாட்சிகள் ஏராளம்.

சோளிங்கர் அருகே அமைந்திருக்கும் அந்தக் கரிக்கல் மலையில் கீழே உள்ள கோவிலில் விநாயகரை வணங்கிவிட்டு படியேறினால் 370 படிகளைக்கடந்து முருகப்பெருமானை தரிசிக்கலாம், தனி நபரால் கட்டப்பட்ட கோவில் பெரிய கோவிலாக அல்லாமல் சிறிய அளவிலே காட்சியளிக்கின்றது ஆனால் சக்தி அதிகம்.

அப்பக்கம் செல்லும் போது இக்கோவிலை காணத் தவறாதீர்கள், முருகப்பெருமான் சமீபத்தில் தன் பக்தரை ஆட்கொண்டு எழுப்பிய ஆலயம் இது, அதிசயமானது.

முருகப்பெருமானின் அடியாராக இங்கு முருகனுக்காகவே வாழ்ந்த நாராயணசாமி சமீபத்தில்தான் காலமானார். அவரின் சமாதி மலை அடிவாரத்தில் உண்டு, அதைத் தரிசித்தால் நல்ல பலன் உண்டு, அவர் ஒரு மகானின் சாயலாகச் சித்தரின் தொடர்ச்சியாக அங்கு நின்று கர்மம் நிறைவு செய்தவர்.

இந்த ஆலயம் இந்தக் காலகட்டத்தில் அதாவது கலிகாலத்தில் எழும்பிய ஆலயம் என்பதால் இந்தக் காலகட்டத்தில் ஒருவர்க்கு எதெல்லாம் அவசியமோ அதை முருகப்பெருமான் நிச்சயம் தருவார் என்பதைச் சொல்லும் ஆலயம்.

அடுத்த ஆலயம் செதுக்கரை முருகன் ஆலயம். இது வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அமைந்துள்ளது.

மூலவர் வள்ளி, தெய்வானை சமேத அற்புதநாத சுப்பிரமணிய சுவாமி இத்திருக்கோவிலில் நின்று அருள்பாலிக்கின்றார்.

இக்கோவிலின் மலை உச்சியில் சிவலிங்கம் உண்டு, ஆகாய லிங்கேஸ்வரர் என அவருக்குப் பெயர், அந்தச் சிவாலயம் செல்லும் வழியில் மலையில் இந்த முருகப்பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.

மலை உச்சியில் அமைந்துள்ள அந்த ஆகாய லிங்கேஸ்வரர் தனித்துவமானவர். திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் போல் ஆகாச லிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் மிகப் பெரிய நிகழ்வு.

பௌர்ணமி திருநாளில் ஆகாச லிங்கேஸ்வரருக்கு அபிஷேகமும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெறுகின்றன. செதுக்கரையில் சிறப்பு மிக்க பச்சையம்மன் கோவிலும் உண்டு.

இந்த‌ அற்புதநாத சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்ல மலையின் வழியே படிக்கட்டுகள் உள்ளன. கோவிலுக்கு முன் அழகிய வேல் ஒன்று உள்ளது.

திருக்கோவில் கருவறையில் மூலவர் அற்புதநாத சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன.

இன்னும் விநாயகர், உற்சவர்கள், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளிட்ட தெய்வங்கள் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலுக்கு மேல், மலை உச்சியில் உள்ள ஆகாச லிங்கேஸ்வரர் கோவில் ஆகாச லிங்கேஸ்வரர், பார்வதி மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை என எல்லாப் பண்டிகைகளும் இங்குச் சிறப்பிக்கப்படுகின்றன‌.

குழந்தை பாக்கியம் உள்பட எல்லா வளமும் வரமும் தரும் ஆலயம் இது. நல்ல தெளிவான மகிழ்வான மனநிலையினைத் தரும் சக்திமிக்க ஆலயம் இது.

ஒருவகையில் இது திருவண்ணாமலைத் தத்துவத்தை பிரதிபலிப்பது போல சிவாலயமும் முருகப்பெருமான் ஆலயமும் ஒருசேர அமைந்த தலம். ஞானத்தை நிரம்பத் தரும்.

அடுத்த ஆலயம் தம்டகோடி முருகப்பெருமான் ஆலயம். இது திருவண்ணாமலை அடுத்து ஆரணி அருகே அமைந்தள்ளது, ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் முருகப்பெருமான் எவ்வளவு சக்தியுடன் இக்காலத்தில் நின்று அருள்பாலிக்கின்றார், அவரின் அளவிடமுடியா சக்தி எப்படியானது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லும் ஆலயம்.

இந்தக் காலகட்டத்தில் அவர் மிகுந்த வல்லமையோடு எழுகின்றார் என்பதையும் சொல்லும் ஆலயம், வரலாற்றுக்குச் சாட்சி சொல்லும் ஆலயம்.

ஆம். இந்தப் பகுதி பின் தங்கிய பகுதி. அங்கே ஒரு அடியார்களை அழைத்த முருகன் அவர்களைக் கொண்டு மாபெரும் பொலிவுடன் அருளுடன் தங்கத்தில் ஜொலிக்கும் தேருடன் ஒரு ஆலயத்தை ஸ்தாபித்தது பெரும் அதிசயம்.

தமிழகத்தில் அரசியல் குழப்பம் இருக்கலாம். அறநிலையதுறை மேல் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. முருகப்பெருமான் நினைத்தால் ஆயிரம் கோவில்களை ஒரு நொடியில் உருவாக்குவார் எனச் சவால்விட்டு எழுந்த ஆலயம்.

சுயம்புவாக முருகப்பெருமான் எழுந்து நின்ற மலை, சிறிய ஆலயம் இருந்தது என்றாலும் அது மிக மோசமாகக் கிடந்தது, கைவிடப்பட்டு பழுதடைந்த ஆலயமாக சிதைந்து கிடந்தது.

அங்கேதான் அதிசயம் நடந்தது, வெகு சமீபமாய் நடந்தது.

ஆம். இராஜீவ் எனும் இராணுவ வீரர் இப்பகுதியினைச் சேர்ந்தவர். அவருக்கு இங்கு அழகான கோவில் எழுப்ப முருகன் கனவில் உத்தரவிடுகின்றார், அவருக்குதுணையாக இன்னொரு அடியாரைச் சேர்த்தும் விடுகின்றார்.

இருவரும் சேர்ந்து இனி ஆலயம் கட்டவேண்டும், கையில் சல்லிக்காசு இல்லை, ஆலயமோ மலைமேல் கட்டவேண்டிய சிக்கலான ஆலயம்.

ஆனால், முருகபெருமான் இவர்களைக் கொண்டு அற்புதம் செய்தார், இவர்கள் ஆலயம்கட்ட துவங்கியதும் மக்கள் வந்தார்கள். ஆனால், அவர்களும் ஏழைகள்.

எல்லோரும் சேர்ந்து களமிறங்கினார்கள், கிட்டதட்ட திருசெந்தூரில் அன்று மூன்று சித்தர்கள் கூடி கோவில்கட்டிய அதிசயம் போல் இங்கும் நடந்தது. ஆனால், அங்கு விபூதி கூலிக்காக தங்கமானது , இங்கு அதுவுமில்லை.

இவர்கள் செய்த ஒரே காரியம் இருப்பதை வைத்து அன்னதானம் செய்தார்கள், அங்கே உண்பவர்கள் கோவிலுக்குத் திருப்பணி செய்யவேண்டும், இப்படி அன்னதானம் ஒன்றாலே வளர்ந்த கோவில் அது.

முருகப்பெருமான் அருளில் அன்னதானம் நடக்க நடக்க கோவில் பணியும் நடந்தது. ஒருவகையில் எந்த இடத்திலும் இல்லாத ஆலயம் இது.

ஆம். அங்கு எல்லாமே முருகப்பெருமானின் அறுகோணம், கோவில் வடிவம் அறுகோணம், சன்னதிகள் வடிவம் என எல்லாமே முருகபெருமானின் “சரவணபவ” எனும் அறுகோண தத்துவம்.

இன்னொரு மிகப்பெரிய அதிசயம் இங்கு உண்டு. ஆம் அது கார்த்திகைப் பெண்கள்.

முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு வேறு எங்கும் எந்த ஆலயத்திலும் சன்னதி கிடையாது, இங்கே அது முருகப்பெருமான் உத்தரவின் பேரில் ஆறு அறுகோண சன்னதிகளாக அமைக்கப்பட்டிருக்கின்றன‌.

நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா என ஆறு கார்த்திகைப் பெண்களுக்கும் ஆறு சன்னதிகளாக அவை மிளிர்கின்றன.

உலகிலே முருகப்பெருமானின் தாதிய தாய்மார்க்கு ஆலயம் அமைக்கபட்டிருக்கும் கோவில் இதுதான்.

இந்தக் கோவிலின் மிகப்பெரிய சிறப்பு இங்கு எதற்கும் கட்டணமில்லை, வாகனம் முதல் அர்ச்சனை வரை சல்லிக்காசு கட்டணமில்லை, தட்டிலும் காணிக்கை பெட்டியிலும் பக்தர்கள் இடுவதுதான் காணிக்கை.

எப்படி இவ்வாலயம் கட்டப்படும் போது அன்னதானத்தில் கட்டப்பட்டதோ அப்படி இப்போதும் இயங்குகின்றது, ஆம் யாருக்கும் சம்பளம் என எதுவுமில்லை.

யாரெல்லாம் திருப்பணி செய்ய வருகின்றார்களோ அவர்கள் செய்வார்கள், அவர்கள் நீங்கினால் எங்கிருந்தோ சரியான ஆட்கள் வந்து அந்த இடத்தை நிரப்பிக் கொள்கின்றார்கள்.

ஆலயத்தின் நிதிச்சுமை இதனால் குறைகின்றது, அதனை ஆலய மேம்பாட்டுக்காக மாற்றுகின்றார்கள்.

பழனி, திருப்பதிக்கு அடுத்து 21 அடி உயரம் கொண்ட தங்கத்தேர் ஆம் தங்கத்திலான தேர் இங்கு உண்டு, அதனை நேர்ந்து கொண்ட பக்தர்கள் நேர்ச்சையாக இழுக்கலாம்.

இந்த ஆலயத்தில் 16 வெற்றிலை, 16 ஒரு ருபாய் நாணயம் என வைத்து வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும், அப்படியே 6 விளக்கு ஏற்றி வழிபட்டாலும் நினைத்ததெல்லாம் நடக்கும்.

செவ்வாய்கிழமையில் இந்த வழிபாடு உண்டு. இது சக்திமிக்கது.

இங்குள்ள நவக்கிரக சன்னதி ஒவ்வொரு கிரகத்துக்கும் சம்பந்தப்பட்ட கல்லால் உருவான நவக்கிரக சிலைகளைக் கொண்டுள்ளதால் இயல்பாகவே சக்தி அதிகம், இங்கு இன்னும் அவற்றின் பலன் மிக அதிகம்.

இந்த ஆலயம் வெகு சமீபமாக அதாவது 2012ல் தான் கட்டப்பட தொடங்கி 2015ல் கட்டிமுடிக்கப்பட்டது. இந்தப் 10 ஆண்டுகளில் முருகப்பெருமான் அருளால் தங்கத்தேர் வரை வளர்ந்துள்ளது.

சரியான முருகபக்தர்களால் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும்போது இங்கு எப்படியெல்லாம் அதிசயம் நிகழும் என்பது கண்முன் தெரிகின்றது.

அந்த ஆலயம் மகா ஆச்சரியம். கிராமத்து ஏழை மக்கள் கூடி முருகனின் மேல் கொண்ட அன்பு ஒன்றால் மிக நவீனமாக, மிக மிக அழகாக, மிக மிக நேர்த்தியாக நவீன கால வடிவாக ஆனால் அறுகோண வடிவாக அற்புதமாக கட்டி எழுப்பிய ஆலயம் அது.

ஆலயவடிவினை முருகப் பெருமானே கொடுக்க அற்புதமாக எழுந்தருளிய தலம் அது.

தான் எப்போதும் இங்கு உண்டு, இக்காலத்திலும் எக்காலத்திலும் உண்டு என்பதைச் சொல்ல முருகப்பெருமானே தன் அடியார் இருவரை ஆட்கொண்டு மக்களைத் திரட்டி உருவாக்கி வழிகாட்டி நிற்கும் ஆலயம் இது.

இந்த ஆலயத்தை ஒவ்வொரு இந்துவும் சென்று காணவேண்டும், ஒரு ஆலயம் எப்படி இருக்கவேண்டும் என்பதை அங்கு கற்றுக்கொள்ளல் அவசியம்.

அன்று ஆலயங்கள் எப்படி கட்டணமில்லாமல் இருந்தன என்பதையும், இன்றும் தமிழக பெரும் ஆலயங்கள் கட்டணமில்லாமல் அன்னதானத்துடன் எப்படி இயங்கமுடியும் என்பதையும் கற்றுக் கொடுக்கும் ஆலயம் அது.

இந்துக்களே தங்கள் ஆலயங்களை நிர்வகித்தால் எப்படியான பெரும் அதிசயங்களைச் செய்யமுடியும் என்பதையும், எப்படி அன்று இந்திய இந்து ஆலயங்கள் மாபெரும் செல்வம் கொண்டதாய் இருந்தது என்பதையும் சொல்லும் ஆலயங்கள் அவை.

அந்த ஆலயத்தின் மூலம் ஒவ்வொரு இந்துவுக்கும் பெரும் விழிப்புணர்வினைக் கொடுக்கின்றார் முருகப்பெருமான்.

இந்த ஆலயத்தின் பிரதானம் அந்தப் கார்த்திகை பெண்கள். நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா எனும் ஆறு பெண்கள்.

அவர்கள்தான் முருகப்பெருமானை வளர்த்து சக்தி தேவியிடம் கொடுத்தார்கள், அந்த தேவியரை நீங்களும் வணங்கி நின்றால் அறுகோண வடிவ சன்னதியில் உள்ள தேவியரை பணிந்து நின்றால் உங்களையும் தத்தெடுத்து தாய்மையால் அருளி தாய்போல் காப்பார்கள்.

திருவண்ணாமலை செல்லும் போது இந்தக் கோவிலைக் காணத் தவறாதீர்கள்.

வெறும் 10 வருடத்தில் முருகப்பெருமான் அருளால் மாபெரும் அதிசயக் கனவாக நம்பமுடியாத அதிசயமாகக் கண்முன் எழுந்து நிற்கும் ஆலயம் இது.

இந்த மூன்று ஆலயங்களும் கடந்த 30 ஆண்டுக்குள் உருவானவை. அரச உதவி, ஆதீனம் மடங்களின் உதவியின்றி சாமான்ய மக்களே முருகப்பெருமான் துணையுடன் அமைத்துக்கொண்ட ஆலயங்கள்.

என்ன ஆனாலும் இந்துமதம் இந்து மக்களால் இங்கு நொடியில் எழும். அதனை அசைக்க யாராலும் முடியாது, தேனை திருடலாம் ஆனால் தேன் எடுக்கும் கலையினைத் திருடமுடியாது என்பது போல், என்னதான் தடுத்தாலும் இந்துமதம் நொடியில் தன்னை மீட்டெடுக்கும் எனபதைக் கண்முன் காட்டும் ஆலயங்கள் இவை.

வெகுசமீபமாக முருகப்பெருமான் மிகுந்த சக்தியுடன் எழுவதை உலகுக்கு சொல்வது இந்த ஆலயங்கள்.

இந்த ஆலயங்கள் மூன்றுமே அப்பக்கம் செல்லும் போது தரிசிக்கவேண்டியவை, அதுவும் தம்டமலை முருகப்பெருமான் ஆலயம் ஒவ்வொரு இந்துவும் நேரில் கண்டு, அந்த ஆலய அனுபவத்தை கண்முன் உணர்ந்து பெரும் மாற்றத்துக்கு தங்கள் ஆலயங்களைத் தங்கள் ஊரின் ஆலயங்களை நிர்மாணிக்கவும் மாற்றவும் அடிப்படை ஞானம் பெற வேண்டிய தலம். அதை ஒருமுறை கண்டு வணங்குங்கள். ஆலயம் எப்படி இருக்கவேண்டும் எனும் பெரும் ஞானம் உங்களில் வரும். அதனால் நீங்கள் மாறுவீர்கள் அதனால் தமிழகத்தின் ஒவ்வொரு ஆலயமும் மாறும். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணியர் ஆலயம் மற்றும் திருத்தங்கல் ஆலயம்.

நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவிலுள்ள மோகனூரில் உள்ள காந்தமலை என்ற குன்றின் மேல் அமைந்திருக்கிறது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்.

இந்த ஆலயத்தின் வரலாறு பழனி ஆலயத்துக்கு முன்பே தொடங்குகின்றது, அதாவது நாரத முனிவர் செய்த கலகத்தில் தொடங்குகின்றது.

நாரதமுனிவர் தனக்குக் கிடைத்த ஞானபழத்தை கயிலாயத்தில் கொடுக்க அந்தப் பழம் யாருக்கு என்பதில் சிவனின் குடும்பத்தில் கலகம் வந்தது. யார் உலகை சுற்றிவருகின்றார்களோ அவர்களுக்கே பழம் எனச் சிவன் அறிவிக்க, முருகப்பெருமானோ மயில் ஏறி உலகை சுற்றுவதற்குள், தாய் தந்தையரை சுற்றி வந்து அவர்களே உலகம் எனக் காட்டி விநாயகர் தட்டிச் சென்றார்.

அந்தக் கலகத்தில் முருகப்பெருமான் கிளம்பி தனியே வந்து நின்ற இடம் முதலில் இதுதான், பார்வதி “மகனே” என அழைத்த இடம் இது. அதனால் மகனூர் என்றாகி பின் மோகனூர் என்றாயிற்று.

முருகன் இங்கே உள்ள மலையில் நின்றார். அந்த இடம் “காந்த மலை” என்றும் அழைக்கப்படுகின்றது. காந்தன் என்றால் தலைவன், அரசன் எனப் பொருள்.

இந்த மலையில் வந்து நின்ற முருகனே பின்னர் பழனிக்குச் சென்று அமர்ந்தார்.

அவர் முதலில் வந்து அமர்ந்து அருள்பாலிக்கும் தலம் இது, பழனி போலவே மேற்கு நோக்கி அவர் அமர்ந்திருக்கின்றார்.

தனது வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் தோற்றம் அளிக்கிறார். இந்தக் கோலம் வேறு எங்கும் காணமுடியாது.

இதன் அர்த்தம் முருகனே சிவன் என்பது, சிவனே முருகப்பெருமானின் அம்சம் என்பதை அழுத்தமாகச் சொல்லும் தத்துவம் இந்த ஆலயம்.

காந்த மலை எனும் இந்த ஆலய மலைக்குச் செல்ல 39 படிகள் இருக்கின்றன. அவை 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் குறிக்கின்றது. அவ்வளவு நுணுக்கமாகக் கட்டப்பட்ட ஆலயம்.

இத்தல விநாயகர் “அரச விநாயகர்” என அமர்ந்து அருள்பாலிக்கின்றார், முருகன் இங்கே அரசன் (காந்தன்) என்பது போல விநாயகரும் அரசன் என்றே கருதப்படுகின்றார்.

கோஷ்டத்தில் துர்க்கை எட்டுக் கரங்களுடன் மகிஷனை வதம் செய்யும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் அருகில் குன்றில் இடும்பன் சன்னதி அமைந்துள்ளது, இரு பக்கமும் சுமையோடு அவன் தெற்கு நோக்கி நின்று அருள்பாலிக்கின்றான்.

அங்கே 10 கரங்களுடன் வல்லப விநாயகர் அருள் புரிகின்றார். பத்துக் கரங்களுடன் விநாயகர் அருள் பாலிக்கின்றார், இவ்வடிவ விநாயகருக்கு தசபுஜ விநாயகர் எனப் பெயர், இது பாரதத்திலே வெகு சில இடங்களில் காணப்படும் வடிவம்.

கொல்லூர் விநாயகர் இந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.

அருகே அருணகிரி நாதருக்கும் சன்னதி உண்டு, அவருக்கு அவரின் குருபூஜையான ஆனிமாதம் மூல நட்சத்திரம் அன்று விழா கொண்டாடப்படும்.

இங்குள்ள பைரவர் இன்னும் விசேஷம்,தேய்பிறை அஷ்டமி அன்று இங்கு பெரும் வழிபாடு நடத்தப்படும்.

இந்தத் தலம் செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்களுக்கு பரிகார தலம். இங்கு செவ்வாய் கிழமைகளில் மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும்.

இங்குப் படிகள் 39ம் 27 நட்சத்திரம் 12 ராசிக்கும் உரியது என்பதில் இது எல்லா நட்சத்திரகாரர்களுக்கும் மிகப்பெரிய வரமருளும் பலம் இது, நட்சத்திர தோஷம் இங்கு முழுக்க சரியாகும்.

பார்வதி முருகனை “மகனே” என அழைத்த ஆலயம் இது என்பதால் குழந்தை வரம் தரும் ஆலயம் இது.

இந்த ஆலயம் ஞானமும் தெளிவும் தரும் ஆலயம். ஞானபழத்துக்கு முருகன் சண்டையிட்டு வந்தான் என்பது , ஞானம் வழங்க முருகன் நடத்திய‌ நாடகம் என்பது ரகசியமல்ல‌.

ஞானபழம் உண்டால்தான் ஞானம் அல்ல தான் இயல்பிலே ஞானமானவன் என்பதை பின் தந்தைக்கே உபதேசம் செய்து, பிரம்மனுக்கே ஞானம் போதித்து வழிகாட்டி தன்னை நிருபித்தான்.

இந்த ஆலயம் அந்தப் பெரும் ஞானத்தைத் தரும். ஆவுடையில் நின்று முருகன் அருள்வழங்கும் தத்துவம் அதுதான். சிவனும் முருகனும் வேறல்ல என்பதை சொல்லி அருள் தரும் ஆலயம் இது.

இங்கே பத்துக் கரங்களுடன் விநாயகர் நிற்கும் இந்த ஆலயம் கொல்லூர் சன்னதியில் பத்துக் கரங்களுடன் நிற்கும் விநாயகரின் சாயல் அதாவது கொல்லூர் மூகாம்பிகை ஞானம் கொடுப்பவள் என்பதால் இந்த ஆலயமும் அதே சாயலே.

இது பழனி போல் கொல்லூர் போல பெரும் ஞானம் வழங்கும் ஆலயம். இங்கு வேண்டினால் எல்லா வரங்களும் கிடைக்கும். நாமக்கல் பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தை காணத் தவறாதீர்கள்.எ

அடுத்த ஆலயம் திருத்த‌ங்கலில் இருக்கும் கருநெல்லிநாதர் கோவிலில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான் ஆலயம்.

விருந்துநகரை அண்மித்திருக்கும் திருதங்கலில் சிறிய மலையில் இருக்கும் ஆலயம் இது, அங்கே பிரசித்தியானது நின்ற பெருமாள் விஷ்ணு ஆலயம்.

இந்த ஆலயத்தின் வரலாறும் சுவாரஸ்யமானது, எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியது.

கிருஷ்ண பகவான் அவதார காலத்தில் இருந்து இது தொடங்குகின்றது. மகாபலியின் வம்சமான உஷா எனும் பெண் கிருஷ்ணனின் பேரனான அனிருத்தை மணம் செய்ய விரும்பினாள், அப்படியே செய்தும் கொண்டாள்.

ஆனால், உஷாவின் தந்தை வாணாசுரன் அதைக் கண்டு கொதித்து அனிருத்தை கொல்லத் தேடினான். எனினும், அப்போது கிருஷ்ணரே வந்து போரிட்டு அவனை வீழ்த்தி மணமக்களை வாழவைத்தார், அவர்களுக்கு மணம் செய்து அவர் அருள்பாலித்த இடம் இது.

இன்னொரு செய்தி, திருமகள் தங்கிய வரலாற்றைச் சொல்கின்றது. விஷ்ணுவின் மனைவிகளில் யார் சிறந்தவர் என்ற சர்ச்சையைத் தீர்ப்பதற்காக, ஸ்ரீதேவி தவம் செய்ய இங்கு வந்தார். திருமகள் தங்கிய இடம் என்பதால் திருத்தங்கல் (திரு தங்கிய இடம்) என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளைத் திருமணம் செய்வதற்காக அரங்கநாதர் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டதாக நம்பப்படுகிறது. நேரமாகிவிட்டதால், இரவை இங்கேயே கழித்தார் என்பதால் இது திருத்தங்கலானது எனும் செய்தி உண்டு.

பிரம்மாண்ட புராணத்தில், புரூரவஸ், முனிவர்களால் தனது இராஜ்யத்தை தனது மகன்களுக்கு விட்டுக்கொடுத்தபின், முனிவர்களால் திருத்தங்கலில் தவம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்ட இடம் இது.

இராமபிரானைன் தம்பி சந்திரகேது நலம் பெற்ற ஆலயம் இது

இந்தப் பெருமாள் கோவில் பக்கத்தில் சிறிய மலையில் கருநெல்லி நாதர் சிவாலயம் உள்ளது. அதன் மேல் பக்கம் முருகப்பெருமான் அருள் பாலிக்கின்றார்.

கருநெல்லி எனும் பெயர் உருவாக இரு சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. முதலில், பாண்டவர்கள் இப்பக்கம் தங்கியிருந்தபோது அர்ஜூனன் நீருக்காக ஒரு ஆற்றினை உருவாக்கினான். அது அர்ஜூனன் ஆறு என்றானது, அந்த ஆற்றின் அருகில் இரு நெல்லி மரங்கள் வளர்ந்தன. அங்கே எழுந்த சிவன் இருநெல்லி நாதர் என்றாகி பின் கருநெல்லி நாதர் என்றாகிவிட்டதாக சில குறிப்புகள் உண்டு.

ஆனால், கருநெல்லி என்பது எங்கும் யாரும் கண்டிருக்க முடியாதது, கருப்பு நிறத்தில் நெல்லிக்காய் என்பது உலகில் இல்லாத பொருள்.

கருநெல்லி என்பதை சித்தர்கள் பாஷையில்தான் சொல்லமுடியும். அது ஞானநிலை தரும் ஒரு வகை மூலிகை கனி, அழியா நிலை தரும் ஒரு அபூர்வ கனி, சித்தர்கள் தாங்களே மூலிகைகளில் உருவாக்கும் ஒரு வகை என்பார்களும் உண்டு. அந்தச் சிறிய கருநெல்லியினை உண்டால் நீண்ட ஆயுளும் பெரும் ஞானமும் வாய்க்கும்.

அதியமானுக்கு கிடைக்கபெற்றது இப்படியான அபூர்வ நெல்லிக்கனி, இது ஞான தீட்சையினைத் தரும், உடலை இளமையாக்கும் காயகல்பம் போல நீண்டகாலம் வாழவும் வைக்கும்.

அப்படியான கனியினைத்தான் சித்தர் ஒருவர் அதியமானுக்கு கொடுக்க அதியமான் ஒளவையாருக்கே கொடுத்தான். அவள் பெரும் ஞானத்துடன் நீண்டகாலம் வாழ்ந்தாள்.

இந்தக் கருநெல்லி பற்றி அகத்தியரே தன் பாடலில் சொல்கின்றார்.

“காணவே சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு

கருநெல்லிப் பழமைந்தின் சாறுவாங்கி

பேணவே அதுக்குநிகர் தேனுங்கூட்டி

பிரியமுடன் அந்திசந்தி மண்டலங்கொள்ளு

பூணவே வாசியது பொருந்திநின்று

பூரணமாய்த் தேகமது சித்தியாகும்

ஊணவே தேகமது சித்தியானால்

ஒருதீங்கு மில்லையடா சோதியாச்சே”

எனக் கருநெல்லி கனியின் பெருமையினைச் சொல்கின்றார் அகத்தியர்.

ஆம். இது சாதாரண கனி அல்ல. அது காயகல்பம் எனும் அழியா நிலை தரும் ஒரு அபூர்வ பொருள்.

முருகப்பெருமான் அகத்தியருக்கு உரைத்தபடி, “அக்கனியில் சிவனும் சக்தியும் இரண்டறக் கலந்துள்ளனர். இதை உண்டால் சகஸ்ரார வெட்டவெளியில் அம்மையப்பர் தரிசனம் கிட்டும்” என்பது கவனிகதக்கது.

அதாவது, இந்த ஆலய சிவன் அந்த ஞான நிலையினைத் தருவார். சகஸ்ர சக்கரம் துலங்கும் யோகத்தைத் தருவார். கருநெல்லி கனியினை உண்டால் என்னென்ன பலன் உண்டோ அதெல்லாம் இந்தச் சிவன் தன் அருளால் தருவார் என்பதைச் சொல்லும்விதமாக இந்த ஆலயத்தில் “கருநெல்லி” எனும் அடையாளதுடன் அவர் அருள்பாலிக்கின்றார்.

அமிர்தம் போல, ஞானப்பழம் போல, கருநெல்லி என்பது நீண்ட ஆயுளும் தெளிந்த ஆயுளும் தரும் ஒரு வரம். அந்த வரத்தைத் தரும் ஆலயம் இது.

இந்தச் சிவாலயம் அருகில்தான் முருகப்பெருமானும் குடிகொண்டிருக்கின்றார், அவரும் கருநெல்லி நாதர் என்றே அழைக்கப்படுகின்றார்.

அதாவது, சிவாலயமும் முருகப்பெருமான் ஆலயமும் அண்மித்தவை, அங்கே சிவனுக்கும் முருகனுக்கும் ஒரே பெயர்தான் வழங்கப்படுகின்றது.

முருகன் பெயர் கருநெல்லிநாதர் வள்ளியின் பெயர் சொக்கி.

ஆரம்பத்தில் இங்கு சிவாலயம் மட்டும்தான் இருந்திருக்கின்றது, முருகனுக்குத் தனி சன்னதி இருந்திருக்கின்றது. அங்கே முருகப்பெருமான் தன் அடியார் மூலம் தன்னை காட்டி தனி ஆலயத்தை அமைத்துக் கொண்டார். அந்த வரலாறு சுவாரஸ்யமானது.

முன் ஒரு காலத்தில் திருத்தங்கலில் ஆறுமுகத் தம்பிரான் என்ற முருக பக்தர் வாழ்ந்திருந்தார். அவர் ஒவ்வொரு ஆண்டும் முருகப் பெருமானின் பண்டிகை நாட்களில் தவறாமல் பாத யாத்திரையாகவே பழனி மலைக்குச் சென்று முருகனை தரிசித்து வருவது வழக்கம்.

ஆனால், முதுமை காரணமாக அவர் தடுமாறினார். அதுவும் பெரும் கூட்டத்தில் அவரால் முருகனை தரிசிக்க முடியவில்லை.

அவர் மனம் வெதும்பி முருகனுக்குத் தன்னை சந்திக்க விருப்பமில்லை என அழுதார். அப்படியே அவர் உறங்கிப் போக அவர் கனவில் வந்த முருகன் தனக்கு திருத்தங்கல் மலையில் கோவில் கட்டி வணங்கு போதும் என உத்தரவிட்டார்.

கனவினைக் கண்டு மகிழ்ந்தாலும் அதை எப்படிச் செய்யப்போகின்றோம் என்பது அவருக்குத் தெரியவில்லை.

குழம்பியபடியே வரும் வழியில் சமைக்க அடுப்புக்காக அவர் குழிதோண்டியபோது பெரும் புதையல் கிடைத்தது. மெய்சிலிர்த்த அவர் அந்தப் புதையலைக் கொண்டு ஒரு காசு தனக்கு எடுக்காமல் முருகனுக்காக உருவாக்கிய ஆலயம் இது.

பழனி போலவே உருவாக்கப்பட்ட ஆலயம் இது.

இந்த ஆலயம் சிவாலயத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் பிரதோஷ தினங்களில் சென்று முருகனை வழிபட்டால் தீராத நோய்கள் விலகும், பௌர்ணமி தினங்களில் சென்று வழிபட பெண்களுக்குத் தாலி பாக்கியம் நிலைக்கும், மற்றும் விதியால் ஏற்படும் தொல்லைகளின் வேகம் குறையும்.

பழனியில் உள்ள எல்லா கொண்டாட்டமும் இங்கு உண்டு, முடி காணிக்கை உள்பட‌.

இந்த இரு ஆலயங்களையும் காணத் தவறாதீர்கள். இரண்டுமே பழனியுடன் தொடர்புடைய ஆலயங்கள், பழனியில் கிடைக்கும் எல்லாப் பலனும் இந்த ஆலயங்களில் உண்டு.

முருகப்பெருமான் அறுபடை வீடுகளின் சாயலில் ஏகப்பட்ட ஆலயங்களை உருவாக்கி அருள்பாலிப்பவர். அதனில் இந்த இரு ஆலயங்களும் முக்கியமானவை. பழனிபோல் வரமருள முருகப்பெருமான் உண்டு. அதுவும் கருநெல்லி எனும் பெரும் ஞானநிலையினை ஒளவையாருக்கு அதியமான் மூலம் வழங்கிய முருகன், நம்பிக்கையோடு வழிபட்டால் உங்களுக்கும் தருவார். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கொளஞ்சியப்பர் ஆலயம் மற்றும் செட்டிகுளம் முருகன் ஆலயம்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே அமைந்திருகும் ஆலயம் கொளஞ்சியப்பர் முருகன் ஆலயம். இதன் வரலாறும் சக்தியும் சிலிர்ப்பானது மகா அதிசயமானது.

பொதுவாக சிவாலயங்கள் இருக்குமிடமெல்லாம் அருகில் முருகப்பெருமான் ஆலயங்களும் கட்டாயம் இருக்கும், சில இடங்களில் அருகிலிருக்கும் சில இடங்களில் சற்று தொலைவில் இருக்கும். ஆனால், நிச்சயம் ஏதோ ஒரு வடிவில் இருக்கும்.

மிகச் சில இடங்களில் இவை பௌத்த சமண இதர மதமாற்ற காலங்களில் மறைந்திருக்கலாமே தவிர சிவபெருமான், முருகப்பெருமான் அவர்களோடு சித்தர்களின் ஜீவசமாதிகள் என எல்லாம் கலந்த வகையில்தான் முருகப்பெருமான் தலங்கள் திகழும்.

அப்படி அமைந்த ஆலயங்களில் ஒன்று இந்த கொளஞ்சியப்பர். இது பிரதான ஆலயமான திருமுதுகுன்றம் எனும் விருத்தாச்சலம் சிவாலயத்தில் இருந்து சற்று தள்ளி அமைந்திருக்கின்றது.

இந்த ஆலயத்தின் தொன்மையானது மிக நீண்டது. அதாவது, விருத்தாச்சலம் எனும் திருமுதுகுன்றம் திருவண்ணாமலை, காசி, மதுரை என யுகங்களைத் தாண்டிய ஆலயங்களைப் போல தொன்மையானது.

புராணங்கள் வேதங்கள் தோறும் அதன் பெருமை உண்டு. அது சுல்தான்களிடம் சிக்கியிருந்த காலம் அதன் பெருமை அறிந்து சத்ரபதி சிவாஜியே வந்து அதை மீட்டெடுத்தான்.

மிகப் பழமையான ஆலயம் என்பதால் அது பழமலை ஆலயம் என்றுமானது, விருத்தாச்சலம் என்பது வடமொழியில் ஆதிமலை என்பதைச் சொல்லும் வார்த்தை.

அப்படியாக பாரதம் முழுக்க பிரசித்தியான அந்த ஆலயத்திலிருந்து சற்றுத்தள்ளி மணவாளநல்லூர் எனும் ஊரில் அமைந்திருக்கின்றது இந்த கொளஞ்சியப்பர் ஆலயம்.

காலத்தால் மூத்த இந்த ஆலயம் பௌத்த சமணகால இந்துமத வீழ்ச்சியில் அடையாளம் தெரியாமல் அழிந்துபோனது அல்லது ஊழிகாலம் ஒன்றில் மறைந்துபோனது, பின் காலம் வரும்போது அது மீண்டெழுந்தது.

அது மீண்டெழுந்த கதை ஆச்சரியமானது.

பெரும் காடாக கிடந்த அந்தப் பகுதியில் மாடுகள் மேய வந்தன. அப்படி மேயவந்த மாடுகளில் ஒரு பசு கொளஞ்சி செடி மேல் தானாகப் பால் சொரிய ஆரம்பித்தது.

இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அந்தக் கொளஞ்சி செடிக்கு அடியில் தோண்டி பார்த்தபோது ஒரு பலிபீடம் மட்டும் இருந்தது, இது ஒரு ஆலயம் இருந்த இடம் என நம்பிய மக்கள் அங்கே வழிபட தொடங்கினார்கள். ஆனால், எந்த சாமி என்பது யாருக்கும் தெரியவில்லை.

கொளுஞ்சி செடி அருகே கிடைத்ததால் அது கொளுஞ்சி சாமி என்றானது.

அதனைக் காட்டி கொடுத்தவர் சுந்தரர். ஆம். நால்வரில் ஒருவரும் நாயன்மாரில் ஒருவருமான அந்தச் சுந்தரர். அவர் ஒருமுறை இந்த ஆலயம் வந்தார் அவர் வருவதற்கு காரணமும் இருந்தது.

அதாவது பெரும் பஞ்சம் தாக்கிய வேளை இங்கு வந்து தன்னைப் பாடும்படி சிவன் கட்டளையிட அப்படிச் சிவனிடம் வந்து பாடி பொருள் பெற்றார் சுந்தரர்.

“பொன்செய்த மேனியினீர்

புலித்தோலை அரைக்கசைத்தீர்

முன்செய்த மூவெயிலும்

எரித்தீர்முது குன்றமர்ந்தீர்

மின்செய்த நுண்ணிடையாள்

பரவையிவள் தன்முகப்பே

என்செய்த வாறடிகேள்

அடியேனிட் டளங்கெடவே”

எனத் தொடங்கும் ஏழாம் திருமுறைப்பாடல் அங்குபாடப்பெற்றது. அப்படிப் பாடி பொன் பெற்ற சுந்தரரை மீண்டும் தன் தலத்துக்கு வரவைக்கும் விருப்பம் சிவனுக்கு உண்டானது.

அதன்படி இங்கு பொன்பெற்று திரும்பிய சுந்தரரை முருகப்பெருமான் சோதித்தார். வேடன் வடிவில் வந்த முருகப்பெருமான் அவர் பொருளை பறித்துக்கொண்டார்.

மனமொடிந்த சுந்தரர் இதனை நினைத்து வருந்த, வந்தவர் சிவனின் திருவிளையாடலை செய்ய வந்த முருகப்பெருமான் என உணரப்பெற்றார். அப்படி உணர்ந்தவர் இந்த இடம்தேடி வந்து இந்த கொளஞ்சியப்பனான முருகனே தன்னை சோதித்தது என வணங்கிவிட்டு பின் விருத்தாச்சலம் சென்றார்.

ஆம். சுந்தர பெருமானால் அடையாளம் காட்டப்பட்ட ஆலயம் இது. அன்றிலிருந்து இந்த ஆலய முருகன் கொளஞ்சியப்பராக கொண்டாடப்படுகின்றார். சுந்தரரால் முருகப்பெருமான் ஆலயம் என அடையாளபடுத்தப்பட்ட இந்தத் தலத்தில் நின்று அவர் அருள் பாலிக்கின்றார்.

பின்னாளில் இது பெரும் ஆலயமாக மாறிவிட்டாலும் முருகப்பெருமானுக்கு சிலை இல்லை, அந்த பலிபீடமே முருகப்பெருமான் போல கண்கள் கிரீடமெல்லாம் வைக்கப்பட்டு, சரவணபவ என மந்திரம் எழுதப்பட்டுள்ளது வணங்கப்படுகின்றது.

மிக மிகச் சக்தியான ஆலயம் இது, அது கொடுக்கும் வரங்கள் ஏராளம்.

ஆலய முகப்பில் வீரானர் கோவில் உண்டு, அதைத் தாண்டினால் கிழக்கு மற்றும் வடக்கு இராஜகோபுரங்களோடு கொளஞ்சிநாதர் ஆலயம் நிற்கின்றது.

உள்ளே சித்தி விநாயகர் மேல் வட்டவடிவ விமானம் உண்டு, அங்கே திருமால் உள்ளிட்ட உருவங்கள் உண்டு.

இந்த முருகனை கொளஞ்சி செடி அடியில் அடையாளம் காட்டிய பசுவுக்கு அற்புதமான உருவம் அது பால்சொரியும் வடிவுடன் செதுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பக்கம் இடும்பன் கடம்பன் சன்னதிகள் உண்டு.

முருகப்பெருமான் ஆலயங்களில் எப்போதும் சித்தர்கள் அமர்ந்திருப்பார்கள்; மிக சக்திவாய்ந்த இந்த ஆலயத்தில் அகப்பை சித்தர் அமர்ந்திருக்கின்றார்; சித்தர்களில் முக்கியமானவரான இவர் ஜீவசமாதி கொண்டிருக்கின்றார்.

இப்படியான இந்த ஆலயம் பல வரங்களைத் தரும். முதலாவது சுந்தரரிடம் முருகன் செய்த அந்த மாய விளையாட்டு தத்துவத்தை அர்த்தமாகத் தரும்.

அதாவது, பொன் என்பது மாயை அதை அகற்றினால் இறைவனை நோக்கிச் செல்லும் ஞானம் வரும், சுந்தரர் வாழ்வில் அதைத்தான் போதனையாக முருகன் செய்தார்.

இந்த ஆலயம் வழக்குகள், பஞ்சாயத்துகளுக்கு நல்ல தீர்ப்பு சொல்லும் ஆலயம். அங்குப்பிராது கட்டுதல் என்பது மகா ஆச்சரியமான சம்பிரதாயம்.

அதாவது வழக்குகள், குடும்ப சண்டைகள், சொத்து சண்டைகளில் பாதிக்கப்பட்டோர் இங்கு முறையிடுவார்கள். சட்டம் வளைக்கப்பட்டு நீதி தங்களிடமிருந்து பறிக்கபட்டவர்கள், பெரும் துஷ்டரிடம் மோதமுடியாமல் நியாயம் மட்டும் வைத்திருப்பவர்கள், சொத்துசண்டையில் அநியாயமாக பறிக்கப்பட்டவர்கள் எனப் பாதிக்கபட்டவர்கள் இங்குப் பிராது கட்டுவார்கள்.

நீதிமன்றத்தில் வழக்கினை எழுதிக் கொடுப்பது போல் காகிதத்தில் தங்கள் முகவரியுடன் தங்கள் வழக்கினைச் சொல்லி நீதிவேண்டி எழுதி அந்த கொளஞ்சியப்பர் முன்னால் நீதிபதியாக அவரைப் பணிந்து சமர்பிப்பார்கள்.

அங்கு அந்த காகிதம் பூஜிக்க படும், பின் அது உள்ளே வளாகத்தில் இருக்கும் முனியப்பர் சன்னதியின் திருசூலம், ஈட்டி ஆகியவற்றில் கட்டப்படும்.

அதன் பின் சில நாட்கள் மிஞ்சிப்போனால் சில வாரங்களில் பக்தர்களின் வழக்கு முடிந்துவிடும். பக்தர்களுக்கு சாதகமாக முடிந்துவிடும் அதன் பின் பக்தர்கள் வந்து நேர்ச்சையினைச் செய்து புகாரைத் திரும்ப பெற்று கொள்வார்கள்.

இது காலம் காலமாக நடக்கும் காட்சிகள், முருகனை நம்பி வந்து புகார் கொடுத்து நீதிகிடைக்காமல் சென்றவர் யாருமில்லை எனுமளவு அது சக்திவாய்ந்த ஆலயம்.

இந்தப் பிராது கட்டும் விஷயத்தில் ஒரு நுணுக்கம் உண்டு. பக்தர்களின் ஊருக்கும் அதாவது வழக்கு நடக்கும் ஊருக்கும் ஆலயத்துக்கும் என்ன தொலைவோ, அந்த தொலைவில் ஒரு மைலுக்கு 25 பைசா வீதம் கட்டவேண்டும் (இப்போது ஒரு ரூபாய் ஆகியிருக்கலாம்)

அப்படிக் கட்டணம் கட்டி புகாரை செலுத்தினால் முருகப்பெருமான் உத்தரவில் முனியப்ப சாமி வந்து சிக்கலைத் தீர்த்துவைப்பார், இந்தக் கட்டணம் ஆலயப் பணிகளுக்கே பயன்படும்.

காலம் காலமாக நடக்கும் இந்தச் சம்பிரதாயத்தில் முருக பெருமானே நீதிபதியாக அமர்ந்து தீர்ப்பு சொல்கின்றார், வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத அற்புதம் இது.

பணம், சட்டம், ஆள்பலம் அதிகாரம் இன்னும் என்னென்ன விதிகளையோ தாண்டி முருக பெருமானே பிரபஞ்ச நீதிபதியாக நின்று நீதிவழங்கும் அற்புதத் தலம் இது.

உங்களுக்கு எவ்விதப் பிரச்சினை இருந்தாலும், வழக்குகள் சர்ச்சைகள் இருந்தாலும், நீதியும் நியாயமும் உங்களிடம் இருந்தால் இங்கு வந்து பிராது கட்டுங்கள். வெகுசில நாட்களிலே எல்லாமும் சரியாகி நீதி உங்களைத் தேடிவரும், முருகப்பெருமான் அந்த அற்புததத்தைச் செய்வார்.

அடுத்த ஆலயம் செட்டிக்குளம் ஆலயம். திருச்சி பெரம்பலூர் பக்கம் அமைந்திருக்கும் சக்திமிக்க ஆலயம் இது.

செட்டியார் இன வணிகன் ஒருவன் உறையூருக்கு வரும் வழியில் பொழுது முடிந்ததால் வழிப்பறி கொள்ளையர்க்கு அஞ்சி கடம்பம் மரம் ஒன்றின் மேல் உறங்க முயன்றான், அந்நேரம் பிரகாசமான ஒளி அந்த இருளில் வந்தது, பெரும் ஒளி நடுவே சிவலிங்கம் ஒன்று இருந்தது.

தேவர்களும் முனிவர்களும் அந்தச் சிவலிங்கத்தை தொழுது பணிந்து போற்றினார்கள், பெரும் இசையும் வேத மந்திரங்ங்களும் ஒலித்துக்கொண்டிருந்தன‌.

அதிகாலையிலே மரத்தைவிட்டு இறங்கிய வணிகன் மன்னனிடம் ஓடிச் சென்று விஷயத்தைச் சொன்னான், அந்நேரம் மதுரையில் இருந்து குலசேகர பாண்டியனும் வந்து உறையூரில் தங்கியிருந்தான்.

சோழனும், பாண்டியனும் வணிகன் சொன்னதை கேட்டு விரைந்தனர். ஆனால், அவன் சொன்னபடி சிவலிங்கம் ஏதும் காணப்படவில்லை, மன்னர்களின் படைகள் சிவலிங்கத்தைத் தேட ஆரம்பித்தன‌.

அந்நேரம் வயதான ஆசாமி ஒருவர் கையில் கரும்புடன் வந்தார், வந்தவர், “என்னய்யா தேடுகின்றீர்கள்?, இந்தக் காட்டை முழுக்க அறிந்தவன் நான்” என்றார்.

குலசேகரபாண்டியன் விஷயத்தைச் சொல்ல, “என் பின்னால் வாருங்கள். நான் சிவலிங்கத்தை காட்டித் தருகின்றேன” என அவர் முன்னே நடந்தார்.

பாண்டியனும் சோழனும் பின்னால் நடக்க “இதோ லிங்கம்” எனக் காட்டி தந்தவர் சட்டென மறைந்தார், அவர் எங்கே எங்கே எனத் தேடும்போது அருகிருந்த குன்றின் மேல் தண்டாயுதபாணி கோலத்தில் கையில் கரும்புடன் நின்று சிரித்தார் முருகன்.

அந்த காட்சியினைக் கண்ட அனைவரும் விழுந்து வணங்கினர். குலசேகர பாண்டியன் சிவலிங்கம் இருந்த இடத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலும், முருகப்பெருமான் நின்ற இடத்தில் முருகப்பெருமான் கோவிலுமாக கட்டிவைத்தான்.

அதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது.

முருகப்பெருமான் இங்கு அகத்தியரை வளையல் விற்ற செட்டி உருவில் வந்து சோதித்து விளையாடிய காரணத்தால் இந்த இடம் செட்டிக்குளம் என்றானது.

முருகன் செட்டிக்குளம் முருகன் என்றானார்.

செட்டிக்குளம் ஊரின் நடுவில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும் அருகில் குன்றின் மேல் 243 படிகள் கடந்து முருகப்பெருமான் ஆலயமும் அமைந்துள்ளன‌.

ஏகாம்பரேஸ்வரர் கோவில் பிரமாண்டமானது, அது ஏழு நிலை இராஜகோபுரம் கொண்டது.

அதேபோல், கோபுர வாயிலைக் கடந்து அர்த்த மண்டபம், மகாமண்டபம், கருவறை என மொத்தம் ஏழு வாசல்கள் உள்ளன.

ஏழு நிலை கோபுரம் கடந்து, ஏழு வாசல்களைக் கடந்து சென்றால் ஏகாம்பரேஸ்வரரைத் தரிசிக்கலாம் என்றும் இப்படி ஏழு வாசல்களைக் கடந்து சென்று, ஏகாம்பரேஸ்வரை தரிசித்தால், ஏழு ஜென்ம பாவமும் விலகும்.

அப்படியே இந்த மலைமேல் இருக்கும் முருகனும் சக்திவாய்ந்தவர்.

அவர் கையில் கரும்பு ஏந்தி நிற்கும் ஒரே தலம் இது. காஞ்சி காமாட்சி போல, கற்பகாம்பாள் போல, பட்டினத்து சுவாமிகள் போல அவர் கரும்புடன் நிற்கும் ஒரே ஆலயம் இதுதான்.

கரும்பு பலவகை பொருளைத் தரும்.

முதலாவது, கரும்பும் ஐவகை பாணமும் மன்மதனுக்குரியது.

ஐந்து பானம் என்றால் ஐந்துவகை புலன்களாலும் எழும் ஆசை. பெண்ணை கண்டோ அவள் குரல் கேட்டோ, நறுமணமோ, தொடுதலோ என எதுவோ தூண்டிவிடும் ஆசை, இதனை ஐந்து மலருக்கு ஒப்பிட்டார்கள். அந்த ஐந்து மலர்களான தாமரை மலர், அசோக மலர், குவளை மலர், மாம்பூ , முல்லை மலர் ஆகிய ஐந்தும் பார்வைக்கு, மணத்துக்கு, மென்மைக்கு என ஒவ்வொரு தனித்துவ ஈர்ப்பைக் கொண்டது.

கரும்பு என்பது இனிமையானது மட்டுமல்ல அதன் ஒவ்வொரு துண்டும் மறுபடி மறுபடி வளரக்கூடிய சக்தி கொண்டது, அந்த சுழற்சியில் வரும் ஆசைக்குத்தான் கரும்பும் ஐவகை பாணங்களும் அடையாளமாகக் கொடுத்தார்கள்

இந்த முருகனை வழிபட்டால் அந்த ஆசைகளை அடியோடு ஒழிப்பார். ஞானம் வழங்குவார்.

அடுத்து இன்னொரு தத்துவம் உண்டு.

கருமபு சாறை வெல்லமாக்கிய பின் அந்த சக்கை எரிந்தால் வருந்துவோர் யாருமில்லை, அப்படி உடல் மரிக்கும் முன் மூன்றாம் கண் திறந்து பரம்பொருளோடு ஐக்கியமாகிவிட்டால் மரணம் கண்டு, உடல் எனும் சக்கை எரிவதை கண்டு துயர்மேதுமில்லை என்பது கரும்பினை ஏந்தியிருக்கும் தத்துவம்.

இதனை நாலடியார் பாடல் ஒன்று சொல்லும்

“கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்

துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்

வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்

வருங்கால் பரிவ தில”

கரும்புகாடு எரிகின்றது எனும் செய்தி வந்தால் ஒருவர் பதறி ஓடுவர் ஒருவர் பதறவே மாட்டார், அதாவது கரும்பை வெட்டி அதன் சாறை பிழிந்துவிட்டு வெறும் தோகையும் சக்கையும் குவித்திருப்பவர் பதறமாட்டார் எரியட்டும் என அவர்போக்கில் இருப்பார், யார் இன்னும் கரும்பை வெட்டி சாறு எடுக்கவில்லையோ அவர்தான் அலறி அடித்து ஓடுவார்.

அப்படி இந்த உடலாகிய கரும்பை ஏற்கனவே பிழிந்து அதாவது தன்னை வருத்தி இறைவனை கண்டோர் தன் உடலுக்கு தன் வாழ்வுக்கு என்ன வந்தாலும் அவர்கள் போக்கில் இருப்பார்கள் காரணம் முழு உண்மையும் அறிந்து இனி தன் ஆத்மா நித்திய ஒளியில் சஞ்சரிக்கும், சதா காலமும் பரம்பொருளுடன் பேரானந்த நிலையிலிருக்கும் என்பதை உணர்ந்ததால் அவர்கள் பதறமாட்டார்கள்.

தன் பக்தன் எந்த நிலையிலும் பதறும் அவசியமில்லை என்பதையும் போதிக்கின்றார் முருகப்பெருமான்.

அப்படியே லௌகீக தத்துவங்களையும் அந்தக் காட்சி போதிக்கின்றது, அந்தக் கரும்பு பதினோரு கணுக்களைக் கொண்டது.

அந்தப் பதினோறு கணுக்களும் பெரும்தத்துவம் சொல்கின்றது.

அதாவது, தெய்வங்கள் 11 நடனங்கள் ஆடின என்பது புராணம் சொல்வது, அந்த 11 வகை நடனமும் பிரசித்தியானது.

அல்லியம்: கண்ண பிரானை அழிக்க ஏவப்பட்ட யானையை அவன் வென்றதைக் குறித்து ஆடும் ஆட்டம் இது.

கொடுகொட்டி: சிவபெருமான் அசுரர்களின் முப்புரத்தை எரித்து ஆடிய ஆட்டம் கொடுகொட்டி.

குடை: முருகப் பெருமான் அவுணர்களை வென்றதைச் சித்தரிப்பது குடை நாட்டியம்.

குடம்: கண்ண பிரான் தனது பேரப் பிள்ளை அநிருத்தனை பாணாசுரனிடமிருந்து மீட்க ஆடிய ஆட்டம் குடம் என்னும் வகை ஆகும்.

பாண்டரங்கம்; சிவன் முப்புரம் எரித்த பின்னர் நான்முகன் காண ஆடியது பாண்டரங்கம் என்னும் வகை.

மல்: கண்ணனும், பாணனும் நடத்திய மற்போரைக் காட்டுவது மல் வகை நடனம்.

துடி: சூரபத்மனை முருகன் வென்ற பின்னர் ஆடிய ஆட்டம் துடி.

கடையம்: வாணாசுரனின் தலைநகரின் வடக்கு வாசலில் அயிராணி (இந்திராணி) ஆடியது கடையம் என்னும் வகையால் காட்டப்படும்.

பேடு: மன்மதன் தன் மகன் அநிருத்தனை சிறையிலிருந்து மீட்க பேடி வடிவத்தில் ஆடியது பேடு என்பதாகும். பாணாசுரணின் மகள் உஷாவைக் கடத்திச் சென்றதால் அநிருத்தனை பாணன் சிறையில் போட்டான்.

மரக்கால்: கொற்றவையை/ துர்க்கையை வெல்ல அவுணர்கள் தேள், பாம்பு முதலிய விஷப் பிராணிகளை அனுப்பினர். அப்போது மரக் கால்கள் கொண்டு நடனமாடி துர்க்கை வெற்றி பெறுவதைக் காட்டும் நடனம் இது.

பாவை: போர் செய்ய வந்த அரக்கர்களை அழித்து திருமகள் ஆடிய ஆட்டம் பாவை எனப்படும்.

இந்த 11 வகை நடனமும் நானே, எல்லா சக்தியும் நானே என்ற பெரும் தத்துவத்தை போதித்து, எல்லாமும் நானே சகலமும் நானே என்பதைப் போதிக்கின்றார்.

கரும்பு என்பது மன்மதனின் ஆயுதம் மட்டுமல்ல, சந்ததி தரும் சக்தியும் அதுதான், அவ்வகையில் இந்த ஆலயம் குழந்தைவரம் தரும் ஆலயம்.

குழந்தைகளுக்காக இந்த முருகனை நேர்ந்தால் அந்த வரம் நிச்சயம் கிடைக்கும், சஷ்டியில் விரதம் இருந்து இந்த கோவிலில் உள்ள வில்வமரத்தில் தொட்டில் கட்டி நேர்ச்சை செய்வார்கள்.

குழந்த வரம் கிடைத்தபின் உரிய நாளில் கரும்பு கட்டில் தொட்டில் செய்து அதில் குழந்தையினை இட்டு மலையேறிச் சென்று கரும்பினைச் சாற்றி குழந்தையினைக் கிடத்தி நன்றி சொல்லும் காட்சி அங்கு எந்நாளும் வாடிக்கை.

பெரம்பலூர் பக்கம், கடலூர் பக்கம் செல்லும் போது இந்த இரு ஆலங்களைக் காண தவறாதீர்கள்.

விருத்தாச்சல சிவனை வணங்கிவிட்டு இந்தக் கொளஞ்சியப்பரை வணங்கினால் எல்லாம் கைக்கூடும், அந்தச் சிவனை வணங்கிவிட்டே இவரை வணங்குதல் முறை.

கொளஞ்சியப்பர் ஆலயத்தில் முருகன் அரூபியாய் நின்று நீதிபரிபாலனம் செய்கின்றார்.

அங்கு வைக்கப்படும் எல்லா வேண்டுதலும் நடக்கும். பிராது சீட்டுக் கட்டி வணங்கி வந்தால் உச்சநீதிமன்றத்திலும கிடைக்காத நியாயமான தீர்ப்பு முருகப்பெருமானின் சந்நிதியில் கிடைக்கும், அகப்பை சித்தரின் நல்லாசியும் அங்குப் பூரணமாக கிடைக்கும்.

இந்தச் செட்டிகுளம் முருகன் எல்லாக் காவலும் தருவார். ஏகாம்பரேஸ்வரரை வணங்கிவிட்டு இவரை வணங்குதல் சாலச் சிறந்தது.

வளையல் வியாபாரி என அவர் வந்தது சாதாரண வடிவம் அல்ல, வளையல் என்றால் காப்பு எனப் பொருள், அதாவது நம் வாழ்வுக்கு காவல் தரும் முருகன் அவர்.

கரும்பினைக் கையில் ஏந்தி ஞானம் போதிக்கும் அம்முருகனே வாழ்வை கரும்பாக இனிக்கவும் செய்வார், 11 கணு கொண்ட கரும்பினை தாங்கி நானே சகலமும் எனப் போதிக்கும் அந்த ஞானபண்டிதன் குழந்தை வரம் முதல் எல்லா வரமும் தந்து நம்பினோர் வாழ்வை செழிக்க வைப்பார். இனிக்க வைப்பார். இது சத்தியம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : பரங்கிபேட்டை மற்றும் விலங்கல்பட்டு முருகன் ஆலயம்.

கடலூர் அருகே பரங்கிபேட்டையில் அமைந்திருக்கின்றது அந்த முத்துகுமாரசாமி ஆலயம். இந்த ஆலயத்தின் தொன்மை யுகங்களைத் தாண்டியது. எவ்வளவுக்கு என்றால் முருகப்பெருமான் அவதரிக்கும் காலத்துக்கு முன்பே இந்த ஆலயம் இருந்தது.

நமுசி என்றொரு அசுரன் இருந்தான், அவன் பல்லாண்டுகள் தவம் செய்து சிவனிடம் வரம்பேற்றான். அதன்படி அவனை எந்த ஆயுதத்தாலும் கொல்லமுடியாது.

கத்தி, ஈட்டி, அம்பு என எந்த ஆயுதமும் அவனை அழிக்காது. இந்த வரத்தால் அவன் பெரும் அட்டகாசம் செய்தான். தேவலோகத்தைக் கைப்பற்றி இந்திரனைப் பதவியிறக்கினான். இந்திரன் அவனுக்கு அஞ்சி ஓடி ஓடி ஒளிந்து கடைசியில் சிவனிடமே அடைக்கலம் தேடி ஓடிவந்தான்.

எந்த ஆயுதமும் தனக்கு எதிராக வாய்க்காது எனும் மமதையில் நமுசி அசுரன் பெரும் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்க இன்னும் ஏகப்பட்டோர் வந்து சிவனிடம் கண்ணீர் விட்டனர்.

தன்னைக் தற்காத்துக்கொள்ள சிவன் வழங்கிய வரத்தை அவன் அட்டகாசத்துக்கும் ஆக்கிரமிபுக்கும் இன்னும் எல்லோரையும் துன்புறுத்தி வதைக்க சிவன் கடும் ஆத்திரமடைந்தார்.

அதன்படி அவர் இந்திரனுக்கு ஒரு விஷயம் சொன்னார்.

“இந்திரனே, நமுசிக்கு ஆயுதத்தால் அழிவில்லையே தவிர மற்ற பொருட்களால் அழிவில்லை என நாம் வரம்கொடுக்கவில்லை. அதனால் இந்தக் கடல் நுரையினை நீ அவன் மேல் வீசு அவன் அழிவான்” என்றார்.

அப்படியே நமுசி அரசனை மீண்டும் போருக்கு அழைத்தான் இந்திரன். இம்முறை இந்திரனை முழுக்க தொலைத்துவிடுவது எனும் பெரும் அகங்காரத்தோடு வந்தான் நமுசி, அவன் மேல் கடல் நுரையினை வீசினான் இந்திரன்.

சிவனின் அருள்பெற்ற அந்த நுரை நமுசியினைக் கொன்றது. பெரும் பெரும் ஆயுதமெல்லாம் வாய்க்காமல் போன இடத்தில் சிவனின் பார்வை பட்ட கடல்நுரை வென்றது.

அசுரன் அழிந்த நன்றிக்காக இந்திரன் இங்கே சிவனை பூஜித்தார். அன்றிலிருந்து இந்தத் தலம் சிவாலயமாயிற்று, இதன் தொன்மை அவ்வளவுக்கு மூத்த காலம்.

இது சிதம்பரம் ஆலயத்தின் ஈசான மூலை திசையில் அமைந்திருப்பதால் இதன் சக்தி விசேஷமானது.

இந்திரனுக்குப் பின் இந்த லிங்கத்தை பலர் வணங்கினார்கள். அதில் விஷ்ணுவும் உண்டு, விஷ்ணுவின் பெயரால் இந்த ஊர் கிருஷ்ணபட்டினம் என்றானது, பின்னாளில் ஐரோப்பிய கப்பல்கள் வந்ததால் பரங்கிப்பட்டணம் என்றாயிற்று.

அதன் பழைய பெயர் முத்து கிருஷ்ணப்பட்டணம் என்பதே, முத்து விளைந்த இடங்களில் இதுவும் ஒன்று.

இந்திரன் விஸ்வநாத என சிவலிங்கம் ஸ்தாபித்து இங்கே வணங்கினான். இந்த சிவாலயத்தில் பின்னர் முருகனுக்கும் சன்னதி எழுப்பப்பட்டது. முருகன் சன்னதி பெரும் அருளோடு துலங்க ஆரம்பித்தபின் இது முருகனுக்குரிய ஆலயமாயிற்று.

அவர் முத்துகுமார சுவாமி என்றானார். இந்த முருகனுக்கு ஆறு முகங்கள் உண்டு. நம் பார்வையில் ஐந்து முகங்கள் தெரியும் ஒரு முகம் சுவாமியின் பின்புறம் உண்டு. இந்த‌ ஆறு முகங்களுக்கும் தனித்தனியாக பூஜை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையில் இவருக்கு செவ்வரளி மாலை சாத்தி சத்ருசம்ஹார திரிசதி என்னும் எதிரிபயம் போக்கும் அர்ச்சனை நடக்கிறது.

இந்த ஆலயம் அச்சம் போக்கும் ஆலயம், எல்லாப் பயங்களையும் போக்கி பெரும் தைரியமும் வெற்றியும் தரும் ஆலயம்.

இந்த ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை வழிபட்டால் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சாபம் நீங்கும். தேன் நைவேத்தியம் இங்கு எப்போதும் பிரசித்தி. அது வள்ளி முருகனுக்கு படைத்த தேனும் திணைமாவும் எனும் அந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சி.

திருமணத்தடை இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொள்வதும் வேண்டுதல் நிறைவடைந்தபின் தன் பிரசாதம் வழங்குவதும் அடிக்கடி நடப்பது.

இங்கு முருகன் திருவிழாவின் போது சிவனுக்குரிய ரிஷபம், இந்திரனுக்குரிய ஐராவத யானை ஆடு இடும்பன் ஆகிய வாகனங்களில் முருகன் பவனி வருகிறார். இதன் பொருள் சிவனுக்கும் இந்திரனுக்கும் இடும்பனுக்கும் மேலான இடத்தில் முருகன் நின்று அருள்பாலிகின்றார் என்பது.

அதாவது, எல்லா வடிவமும் முருகவடிவம் எனத் தெய்வமும் முருகப்பெருமானே எனும் தத்துவத்தில் அவர் அருள் பாலிக்கும் ஆலயம் இது.

தொன்மையான ஆலயம் என்பதால் சாஸ்தா வடிவாக ஐயப்பன் உண்டு. அவருக்கு ஒவ்வொரு மாத பிறப்பிலும் வழிபாடு நடத்தப்படும். பொதுவாக பைரவர்க்கு அஷ்டமி வழிபாடுதான் உண்டு ஆனால் இங்குள்ள பைரவர்க்கு அமாவாசையன்று இரவில் பெரும் பூஜைநடக்கும்.

இங்குள்ள ஐந்துதலை நாக சந்நிதி பிரசித்தியானது, நாகதோஷம் இங்கு வழிபட்டால் நீங்கும்.

இந்த காசிவிஸ்வநாதரும் விசாலாட்சியும் விஷேச மானவர்கள், அங்கே அன்னபூரணி அம்மையான அகிலாண்டேஸ்வரிக்கும் விஸ்வநாதர்க்கும் சம்பா அரிசியில் நைவேத்தியம் செய்யப்படும்.

இங்குள்ள பிரம்மா மகா விஷே மானவர். அவர் கைகளைக் குவித்து முருகப்பெருமானை வணங்கும் நிலையில் காட்சியளிகின்றார்.

இந்த ஆலயத்தின் அஷ்டபுஜ துர்க்கைக்கு அஷ்டமி அன்று அபிஷேகமும் பூஜையும் உண்டு.

இந்த ஆலயம் ஞானமும் தெளிவும் வழங்கும் இடம், பெரும் யோக சித்திகள் வழங்குமிடம். இந்த ஆலயத்தில்தான் சுவேத நாதைய்யர் என்பவர் அர்ச்சகராக இருந்தார். அவரின் மகனேதான் இமயமலையில் அழியாமல் இருக்கும் அந்த மகா அவதார் பாபா.

அந்த பாபா இந்த ஊரில்தான் பிறந்தார். இந்த ஆலயத்தில்தான் முருகனை வழிபட்டார். முருகனால் பெரும் ஞானம் அடைந்தவர் இன்றும் இமயமலையில் அரூப சித்தராய் வாழுகின்றார்.

அவருக்கு முருகப்பெருமானே பெரும் ஞானம் கொடுத்தார். முருகப்பெருமான் அருளின்றி ஒருவர் சித்தராக முடியாது, அதனை மீண்டும் உரக்கச் சொன்ன ஆலயம் இது.

அந்தப் பாபாஜியின் இயற்பெயர் நாகராஜ், அவரின் தகப்பனார் இந்தக் கோவில் அர்ச்சகர் என்பதால் மிகச் சிறுவயதில் இருந்தே இந்த ஆலயத்தில்தான் நாகராஜ் வளர்ந்தார், முருகப்பெருமான் அப்போதே இவரை இந்தத் தலத்தில் ஆட்கொண்டார்.

கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் இதே முத்து கிருஷ்ணப்பட்டணம் எனும் பரங்கிப்பேட்டையில் பிறந்து இந்த ஆலயத்தில் வளர்ந்த அவர் இப்பக்கம் வரும் வங்க கப்பல்களில் வந்த ஆட்களின் நட்பு மூலம் சிறுவயதிலே சாதுக்களோடு சேர்ந்து ஆன்மீகத்தில் இறங்கினார்.

இலங்கை கதிர்காமம் சென்று தரிசனம் செய்தார். அங்கே முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்தது. முருகப்பெருமான் அவரை போகரிடம் அனுப்பினார், போகர் அவருக்கு நேரடியாக பல சூட்சும யோகங்களை கற்றுக் கொடுத்தார்.

போகரின் வழிகாட்டுதலில் பொதிகைமலை வந்து அகத்தியரை சந்தித்து தவம் பல இயற்றியவருக்கு அகத்தியர் கிரியா யோகக் கலை கற்றுக்கொடுத்தார்.

அதை மிக நுணுக்கமாகக் கற்றவரை அகத்தியர் இமயமலைக்கு தவம் செய்ய அனுப்பினார், அங்கேதான் நாகராஜ் எனும் யோகி பாபாஜி என்றானார்.

இவரின் சீடர்தான் லாஹிரி மஹாசாயர். அவரின் சீடர்களில் ஒருவர் யுக்தேஸ்வர். ஸ்ரீ யுக்தேஸ்வரின் சீடர்தான் பரமஹம்ஸ யோகானந்தர்.

இந்த பரமஹம்ச யோகானந்தர்தான் விவேகானந்தருக்கு அடுத்து அமெரிக்காவில் இந்துமதம் பரப்பியவர், அவர் ஆசிரமம் இப்போதும் அமெரிக்காவினைத் தலைமை இடமாகக் கொண்டு கிரியா யோகத்தை உலகெல்லாம் பரப்பி வருகின்றது.

பாபா இப்போதும் இமயமலையில் அரூபியாய் உண்டு. அவருக்கென இமயத்தில் குகை உள்ளிட்ட அடையாளங்களும் உண்டு. பலநூறு ஆண்டுகளாக அரூப நிலையில் மக்களுக்கு பெரும் வரம் வழங்கி இன்றும் வாழுகின்றார் அந்த பாபாஜி.

அந்த மஹா அவதார் பாபாஜி, பல நூறு ஆண்டுகளாக இமயமலையில் ஒளிவடிவில் வாழும் அந்த பாபாஜி இந்த பரங்கிப்பேட்டை ஆலயத்தில்தான் ஞானம் பெற்று தன் ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கினார். இன்று யோகிகளுக்கெல்லாம் யோகியாக நின்று அருள்பாலிக்கின்றார்.

இந்த ஆலயம் இழந்ததை எல்லாம் தரும் ஆலயம், காலத்தைப் பொறுத்து கர்மத்தைப் பொறுத்து எதையெல்லாம் இழந்தார்களோ அதை எல்லாம் தரும் ஆலயம்.

இந்திரன் முதல் பலர் இங்கு வழிபட்டுத்தான் இழந்ததை பெற்றார்கள்.

பெரும் பெரும் தடைகளெல்லாம் எளிதாக உடையும் ஆலயம் இது. எந்த ஆயுதத்தாலும் வெல்லமுடியா நமுசியினை இந்திரன் இங்குதான் கடல் நுரையால், பஞ்சினும் மெல்லிய கடல்நுரையால் அழித்தான்.

சிவனருளால் எல்லாத் தடையும் இங்கு எளிதாக அகலும், இந்த ஆலயம் அந்த வரத்தைத் தரும்.

ஒரு ஆத்மா தெய்வநிலைக்கு ஒப்பானது, அது பரம்பொருளின் வடிவம். ஆனால், மாயையில் சிக்கிக் கர்மத்தில் வீழ்ந்து அது தன் இயல்பை இழந்து தாழ்நிலை அடைகின்றது.

இந்தத் தலத்தில் முருகப்பெருமான் அருளால் அந்த ஆத்மா தான் இழந்த தெய்வநிலையினை மீண்டும் அடைகின்றது, மஹா அவதார் பாபாஜி அதற்குப் பெரும் உதாரணம்.

இந்த ஆலயத்தில் வழிபடும் போது இழந்ததை எல்லாம் எல்லா வடிவிலும் லௌகீகம் ஆன்மீகம் என எல்லா வகையிலும் மீளப் பெற முருகன் அருள் புரிவார்.

இது அச்சம் போக்கும் ஆலயம். ஒரு மனிதனின் பெரும் எதிரி அவன் அச்சம், சத்ரு சம்ஹார் திரிபாதி வழிபாடு அவனின் அச்சத்தை அகற்றி, அர்த்தமில்லா அச்சத்தை அகற்றி தைரியமாய்க் கர்மத்தை செய்யவைக்கும்.

அச்சம் என்பது மாயையின் ஒரு கருவி, அச்சமே ஒருவனை எல்லா வகையிலும் முடக்கி வைக்கும், அதை தைரியமாக எதிர்கொண்டால் ஞானம் கிடைக்கும், பெரும் உதாரணம் அந்தப் பாபாஜி.

ஞானம் அடைய லௌகீக அச்சம் தாண்டி ஆன்மீக வைராக்கியம் அவசியம் அதை இந்த ஆலயம் அருளும்.

வாய்ப்பு கிடைத்தால் இந்தக் கடலூர் பரங்கிப்பேட்டை ஆலயத்தை தவறாமல் வணங்குங்கள். எதையெல்லாம் இழந்தீர்களோ அதெல்லாம் கிடைக்கும். அப்படியே அங்கு அந்த பாபாஜி பிறந்த வீடு ஆலயமாக்கப்பட்டுள்ளது. அங்கே அமர்ந்து பாபாஜியினை வழிபட்டு தியானியுங்கள். இமயமலைக்குச் சென்ற பலன் கிடைக்கும். இது சத்தியம்.

அடுத்த ஆலயம் விலங்கல்பட்டு முருகப்பெருமான் ஆலயம். மலைகள் இல்லாத கடலூர் பக்கம் அமைந்த அபூர்வ குன்று இது. கடலூர் திருக்கோவிலூர் பாதையில் அமைந்துள்ளது.

கூடலூர் குன்று, செம்புறாங்கல் மலை என அழைக்கப்பட்ட இவ்வாலயம் கேப்பர்மலை என ஆங்கிலேயர் காலத்தில் அழைக்கப்பட்டது, கேப்பர் எனும் அதிகாரி அங்கே மாளிகைகட்டி குடியிருந்தான். அங்கே அவர்கள் கால சிறை உண்டு, மகாகவி பாரதி அந்த சிறையில்தான் இருந்தான்.

இந்த மலைகுன்றில்தான் இந்த முருகன் அமர்ந்து அருள்பாலிக்கின்றார், விலங்கல் என்றால் மலை எனப் பொருளும் உண்டு.

இந்த ஆலயத்தில் ஐந்து நிலை கோபுரம் ஒன்று தெற்கு நோக்கி உள்ளது, படிக்கட்டுகள் தென்புறமே உள்ளது. முருகன் கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. முகப்பில் நீண்ட மண்டபம் மயிலும் பலிபீடமும்

கொண்டிருக்கின்றது.

இதனைச் சுற்றிவர அகலமான பிரகாரம் உள்ளது. கிழக்குப் பகுதியில் இடும்பன் சிலை கொண்ட மாடமும், ஆதிவேல் சன்னதி ஒன்றும் உண்டு.

எந்த முருகன் கோவிலிலும் இல்லாத சிறப்பு இங்கு ஒன்று உண்டு, அது மூலவர் சிவசுப்பிரமணியரின் அமைப்பு.

ஆம். இங்குள்ள சுப்பிரமணியரின் நெற்றில் சிவலிங்கம் உண்டு. அதாவது மூன்றாம் கண்ணாக சிவனைக் கொண்டிருக்கின்றார்.

இது சிவன் சாட்சியாக அவர் எது நியாயமோ, எது சரியோ அதனைச் சரியாக செய்வார் என்பது, நீதி கொஞ்சமும் தவறாமல் உக்கிரமாக தீர்ப்பளிப்பார் என்பது.

இந்த ஆலயம் எது நியாயமோ எது தர்மமோ அதை மிகச் சரியாக தரும் ஆலயம்.

கடலூருக்கு மேற்கே அமைந்திருக்கும் இந்த ஆலயம் மிகச் சக்திவாய்ந்தது. நல்ல தீர்ப்பை எல்லோருக்கும் தரும் ஆலயம், மகாகவி பாரதி தன் துன்பகாலத்தில் வழிபட்டு ஆறுதல் அடைந்து சக்திபெற்ற ஆலயம் இதுதான்.

கடலூர் பக்கம் செல்லும் போது இந்த ஆலயங்களைக் காண தவறாதீர்கள். எல்லா நன்மையும் பெரும் அருளும் உங்களைச் சூழும். கடல்போன்ற துன்பமெல்லாம் மறைந்து ஆனந்த அலை ஒன்றே வீசும். இது சத்தியம்.