வசந்த பஞ்சமி
இன்று வசந்த பஞ்சமி
வசந்த காலத்தில் வரும் நவராத்திரியின் பஞ்சமி திதி வசந்த பஞ்சமி என கொண்டாடபடும் என்றாலும் சில கணக்கீடுகள் அடிப்படையில் இந்த சியாமளா நவராத்திரியின் பஞ்சமி வசந்த பஞ்சமியாக கொண்டாடப்படுகின்றது.
இந்தப் பண்டிகை சாதாரணம் அல்ல, மிக மிக முக்கிய பண்டிகையாக தேசமெங்கும் ஒரு காலத்தில் இருந்தது, பின் பவுத்த குழப்பம் அந்நிய படையெடுப்பு என பல குழப்பங்களால் சுருங்கிவிட்டாலும் இன்று மெல்ல மெல்ல அது மீண்டெழுந்து வருகின்றது.
இந்தக் கொண்டாட்டம் முன்பு பாரதம் எங்கும் இருந்தது போல தமிழகத்திலும் இருந்தது.
இது வடக்கே குளிர்காலம் முடிந்து வெயில் வரும் காலம், ஒருவித கொண்டாட்டம் தொடங்கும் காலம், தமிழகத்திலும் பனிகாலம் முடியும் காலம்.
இந்தக் காலகட்டத்தில் பெரும் கொண்டாட்டம் அன்று தொடங்கி இருந்திருக்கின்றது, அன்னைக்கான நவராத்திரியுடன் அதனை கொண்டாடியிருக்கின்றார்கள்.
தமிழகத்தில் ஆண்டாள் பாடல்கள் இதே காலகட்டத்தில் அதாவது தை மாசி காலகட்டங்களில் அணங்க தேவன் விழா கொண்டாடியதை சொல்கின்றது.
“தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐயநுண்மணற் கொண்டு தெருவணிந்து அழகினுக்கலங்கரித்து அனங்கதேவா !
உய்யவுமாங்கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்.
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே”
அதாவது தை முடியும் நாளில் மாசிக்கு முன்னதான நாளில் விழா கொண்டாட தயாராகின்றாள் ஆண்டாள், அந்த விழாவில் அணங்க தேவனையும் நினைத்து வழிபடுகின்றாள்
இப்படி இக்காலகட்டம் விழாக்களின் காலமாக இருந்திருக்கின்றது
இந்த வசந்த பஞ்சமி சியாளமா எனும் சரஸ்வதிக்கு உரியது, மதுரை மீனாட்சியாக அமர்ந்திருப்பவளும் அவள்தான்.
சரஸ்வதி பூஜை என்பது ஐப்பசியில் வரும் அந்த நாள் மட்டுமல்ல, இந்துமரபில் நான்கு நவராத்திரி உண்டு அந்த நான்கிலும் அன்னை சரஸ்வதியினை போற்றும் மரபும் உண்டு.
கல்வி வந்தால் ஒருவனுக்கு எல்லாமும் வரும் என என்றோ உணர்ந்திருந்த இந்துமதம் அவ்ளை அப்படி வழிபட சொன்னது.
அதன்படிதான் வசந்த பஞ்சமி உள்ளிட்டவை உண்டு.
கிராமங்களில் பேச்சியம்மன் என ஆடிமாதம் நடக்கும் கொண்டாட்டம் கூட ஒருவகையான சரஸ்வதி வழிபாடே, பேச்சுவன்மை நாவன்மை அறிவு வன்மை வழங்குபவள் என சரஸ்வதியினை பேச்சி அம்மனாகத்தான் கொண்டாடுகின்றார்கள்.
அவ்வகையில் இன்று சரஸ்வதி வழிபாட்டுக்கான நாள், அவளை மனமார வழிபடலாம்.
இந்நாளில் அவள் கல்வி கொடுப்பாள், பெரும் ஞானமும் ஆழமான அறிவும் கொடுப்பாள் என்பது ஐதீகம் அதற்கு சான்றுகள் பல உண்டு என்றாலும் மகா முக்கியமானவை இரண்டு.
இந்நாளில்தான் ஆதிசங்கரர் சவுந்தர லஹரியினை பாட அன்னை அருள்புரிந்தாள் அதனை பாடி அவர் ஐந்து ஸ்படிகங்களை பெற்றார் என்பது புராண செய்தி. சவுந்தர்ய லஹரி கிடைத்த தினம் இதுதான்.
அப்படியே ஒரு மூடனாக , ஆடுமேய்க்கும் அறிவிலியாக இருந்தவனை, அப்படி முட்டாளாக இருந்தவன் அரசனிடம் சிக்கி சாக வேண்டிய ஆபத்தில் தற்கொலை செய்ய முயன்ற நேரத்தில் அவனை ஆட்கொண்டு அவன் நாவில் சூலத்தால் எழுதி அவனை மகாகவி காளிதாசனாக அன்னை மாற்றியதும் இந்நாளில்தான்.
அவ்வகையில் இன்று அன்னைகுரிய பாடல்கள் அனைத்தும் பாடுதல் அல்லது ஏதோ ஒன்று பாடுதலும் பலன் தரும்.
காளிதாசனின் சியாமளா தண்டகம் பாடலாம், கம்பனின் சரஸ்வதி அந்தாதி ஆகியவற்றை பாடலாம்.
குமரகுருபரரின் சகலாகலா வல்லி மாலை பாடலாம்.
“லலிதா சஹஸ்ர நாமம்” அதில் முக்கியமானது, முடிந்தவர்கள் அதனை கூடி பாடுதல் நலம். இந்துக்களின் வழிபாடு தனிநபர் வழிபாடு அல்ல, தனியாக வைப்பது வேண்டுதலும் தியானமும்.
கூடி படி தொழுதலே இந்துக்கள் பாரம்பரியம், அதை செய்தல் நலம்.
குறைந்தபட்சம் அபிராமி பட்டரின் பாடலையாது சிலமுறை பாடலாம்.
முடிந்தவர்கள் சவுந்தர்ய லஹரியினை பாடலாம், அதுதான் இன்று பாடவேண்டிய மகா முக்கிய பாடல், அதை முழுக்க பாடும்போது நிச்சயம் அன்னை வந்து அற்புதம் செய்வாள் அது சத்தியம்.
“ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை –தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா(து) இடர்.
படிகநிறமும் பவளச் செவ் வாயும்
கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும்சொல் லாதோ கவி….”.