வரிகளை விளக்க முடியுமா?

அய்யா இந்த கந்த சஷ்டி கவசத்தின் வரிகளை பற்றி பலவாறு சொல்லுகின்றார்கள் இந்த வரிகளை விளக்க முடியுமா? இந்த வரிகளை சொன்னால் 36 முறை வருமா? ஏன் இதையெல்லாம் சொல்லவேண்டும் இதன் பொருளை விளக்க முடியுமா என சிலர் கேட்பதால் சொல்கின்றோம்

நாம் சொல்வது சில சித்தர்கள் சொன்ன மொழியின் குறிப்புகளில் இருந்தும் சைவ ஆகம விதிகளில் இருந்தும் சொல்கின்றோமே அன்றி எம் கருத்து அல்ல‌

மகா புனிதமானதும் சூட்சும பொருள் கொண்டதுமான இந்த சஷ்டி கவச வரிகளை நாம் நம் சொந்த கருத்தில் விளக்கவில்லை, மாறாக முன்னோரும் ஞானியரும் சொன்ன விளக்கத்தில் இருந்து சொல்கின்றோம்

“ரவண பவச ரரரரரரர

ரிவண பவச ரிரிரிரி

விணபவ சரவண வீரா நமோநம

நிபவ சரவண நிறநிற நிறென

வசர வணப வருக வருக”

(இங்கு சிலர் “ரஹண” என எழுதுகின்றார்கள் அது தவறு,)

இந்த வரிகள் என்ன பொருள் என்றால் அதனை பிரிந்து கொள்ள சில விஷயங்களை காண வேண்டும்

“”அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்

பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் – நெஞ்சழுத்திப்

பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்

கூசாமற் காட்டக் கொடி”

என்பது சித்தர் பாடல்

அதாவது “நமசிவாய” எனும் ஐந்தெழுத்து, “ஓம் நமோ நாராயணா” எனும் எட்டெழுத்து” , சரவணபவ” எனும் ஆறெழுத்து “விநாயகா” எனும் நாலுலெழுத்து என பல மந்திரங்களை சொல்பவர்களே , பிஞ்செழுத்தும் அது கலந்து வரும் பெரு எழுத்தும் கலந்து நெஞ்செழுத்தி சொல்லுங்கள் என பொருள்

ஆக “சரவண பவ” என்பது ஆறெழுத்து மந்திரம்

இந்து மரபில், பாரத மந்திர வார்ர்த்தை மரபில் அதுவும் தமிழில் வரும் வழிபாட்டு மந்திர வார்த்தைகள் மரபில் இவை வெறும் வார்த்தை அல்ல அவை ஒவ்வொரு அதிர்வுகளை கொடுப்பவை

அந்த அதிர்வுகள் ஒவ்வொரு காரணமாக கொடுக்கபட்டவை, அதன் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்

யோகியர்க்கு ஒரு மந்திரம், சாமான்யர்க்கு ஒரு மந்திரம், வழிபாட்டுக்கு ஒரு மந்திரம் என அதன் வார்த்தை கலவை மாறும்

இதன் உட்பொருள் ஆழமானது, எளிதில் புரியாதது, பஞ்சாட்சரம் என்பதை ஞானியர் சில வகைகளில் பிரித்தார்கள்

ஸ்தூல பஞ்சாட்சரம மந்திரம் “நமசிவய” என்றும்ம் சூட்சும பஞ்சாட்சரம் “சிவயநம” என்றும் , காரணபஞ்சாட்சரம் மந்திரம் “சிவ சிவ” என்றும் வகைபடுத்தினார்கள்

அதாவது சாமானியர் சொல்ல கூடிய மந்திரம் “நமசிவய” , சூட்சும உடல் வலுபெற ஞானியர் பிரார்த்திப்பது “சிவயநம” , எல்லா கர்மவினையினை போக்குவடு “சிவசிவ”

இன்னும் இதில் உட்பிரிவுகள் உண்டு

“நசி, மசி, வசி,யசி” என இந்த மந்திரங்கள் நீண்டு செல்லும்

இவை எல்லாம் அந்த ஐந்தெழுத்தின் கலவைகள், ஒவ்வொரு காரணத்துக்காக ஞானியரால் சொல்லி தர்பப்ட்டவை சிலவற்றின் அர்த்தம் புரியும் சிலவை புரியாது

ஆனால் எல்லா வகை பஞ்சாட்சரத்தின் முடிவு சிவனை அடைவது அவர் அருளை பெறுவது

அப்படி “சரவண பவ” எனும் ஆறேழுத்து மந்திரம் பிரிந்த நிலைதான் “ரவண பவச ,ரரரரரரர,

ரிவண பவச ரிரிரிரி, விணபவ சரவண வீரா நமோநம, நிபவ சரவண நிறநிற நிறன” என்பது

இவை ஒவ்வொன்றும் பஞ்சராட்சரத்தின் பிரிவுகள் போல சூடுபமான அர்த்தம் கொண்டவை. இங்கு நமோ என்றால் வணங்குதல் நம என்றால் பெயர் என பொருள் நிறநிற என்பது ஜொலிக்கின்றன எனும் பொருளில் வரும்

கந்தசஷ்டி கவசம் ஆழமானது அது ஆழ்ந்த பொருளையும் தரும், நல்ல அதிர்வுகளை மந்திரமாக உடலுக்கு தரும் அவற்றை சொல்ல சொல்ல உடலின் சக்கரங்கள் துலங்கும்

இந்த வரிகளையும் காணலாம்

“செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகு டிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி

ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து”

செககண என்பது மந்திர சொல் நல்ல அதிர்வை தரும், அப்படியே அது செக+கண என பிரியும் செக என்றால் உலகம், கண என்றால் காப்பவன், ஆக உலகை காப்பவனே எனும் பொருளிலும் வரும் அதே நேரம் செககண என சொல்ல சொல்ல உடலில் நல்ல அதிர்வு வரும்

(ஜெக எனும் சமஸ்கிருத வார்த்தை செக என மாறிற்று, தொல்காப்பியவிதி படி இது அனுமதிக்கபட்டதே)

“மொகமொக” என்பதும் மந்திர சொல் “மொக” என்றால் மொட்டு, முத்து என்பதன் பொருள் வரும் , இந்த அண்டம் எனும் பொருளில் வரும்

“டிகுகுண டிகு டிகு டிகுகுண டிகுண ” என்பது எமக்கு பொருள் தெரியாது ஆனால் இது மந்திர சொல், அருணகிரிநாதர் எவ்வளவோ இடங்களில் பாடிய வார்த்தைகள்

இது மந்திரச்சொல்தான் ஆனால் நிச்சயம் பொருளும் இருத்தல் வேண்டும்

உதாரணமாக இந்த அருணகிரியார் வரிகளை சொல்லலாம்

“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா” என தொடங்கும் பெரிய பாடல் உண்டு, இதனை கண்டால் ஒன்றும் புரியாத சொற்றொடர் போல் மந்திர சொல் போல் இருக்கலாம்

ஆனால் இதன் பொருள் ஆழமானது

“தாத – மறைகிழவோனாகிய பிரமனும்

துத்தி தத்தி தா தித தத்து அத்தி – புள்ளிகள் உடைய படம் விளங்கும் பாம்பாகிய ஆதிசேஷனின் முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று ஆனால் அலைகள் வீசுகின்ற திருப்பாற்கடலைத் தனது வாசஸ்தலமாகக் கொண்டு

ததி தித்தித்ததே து – ஆயர்பாடியில், தயிர் மிக இனிப்பாக உள்ளதே என்றுகூறி அதை மிகவும் வாரி உண்ட திருமாலும்” என நீண்டு செல்லும்

அப்படி இந்த “டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு ‘ என்ற வரிக்கும் பொருள் இருக்கலாம் அதை யாரும் சொல்லாமலும் இருக்கலாம்

“விந்து விந்து மயிலோன் விந்து” என்றால் எல்லாவற்றுக்கும் ஆதிகாரணனான ஆதி தொடக்கமான முருகபெருமானே என் அபொருள்

இப்படி சிலவற்றின் பொருள் புரியும் சிலவற்றின் பொருள் புரியாது ஆனால் எல்லாமே சக்தி மிக்கவை கொஞ்சமும் சிந்திக்காமல் அப்படியே சொன்னால் பெரும் பலன் நிச்சயம்

இவை மின்சார அதிர்வு சிகிச்சை போல் உடலுக்கு நல்ல அதிர்வை தரும் வார்த்தைகள், மந்திர சொற்கள் திரும்ப திரும்ப சொல்ல சொல்ல பலன் அதிகம், சக்கரங்கள் துலங்கும்

இந்த சஷ்டி கவசத்தில் இப்போது முக்கியமான விஷயம், இந்த வரிகள்

“காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி

நேச முடன்ஒரு நினைவது ஆகிக்

கந்தர் சஷ்டி கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒருநாள் முப்பத் தாறுஉருக் கொண்டு

ஒதியே ஜெபித்து உகந்து நீறுஅணிய”

என்பது

இது ஒரு நாளைக்கு 36 தடவை சஷ்டி கவசம் சொல்லவேண்டும் என சிலரால் சொல்லபடுகின்றது, அப்படி சொல்வது அவரவர் விருப்பம்

ஆனால் “காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி’ என்பதிலே இருவேளை பிரார்த்தனையில் இதனை இரு முறை மட்டும் சொன்னால் போதும் , காலை மாலை குளித்து முடித்து சொன்னால் போதும் என்பதை பாடலே சொல்கின்றது

சரி, அப்படியானால் என்ன 36 உரு?

அங்குதான் மிக பெரிய தத்துவம் இருக்க்கின்றது, அதாவது ஒவ்வொரு உறுப்பாக சொல்லி பாடிவரும் பாடல் ஒரு கட்டத்தில் உடலை விடுத்து ஆத்ம படிநிலைகள் பற்றி சொல்கின்றது , யோக நிலையின் படிநிலைகளை சொல்கின்றது

36 உரு என்பது சைவம் போதிக்கும் 36 தத்துவங்கள்

இதனை அருணகிரியாரின் கந்தர் அனுபூதி தொகுப்பின் 47ம் பாடலை கொண்டு விளக்கலாம்

“ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்

பேறா அடியேன் பெறுமா றுளதோ

சீறா வருசூர் சிதைவித் திமையோர்

கூறா வுலகங் குளிர்வித் தவனே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

“ஆறு ஆறையும் நீத்து அதன்மேல் நிலையைப்

பேறா அடியேன் பெறுமாறு உளதோ

சீறா வரிசூர் சிதைவித்து இமையோர்

கூறா உலகம் குளிர் வித்தவனே”

முதல் வரி “ஆறு ஆறையும் நீத்து அதன்மேல் நிலையை” என வரும், ஆறு ஆறையும் என்றால் 36 என்பதைச் சொல்வது, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நிற்கும் நிலையினை எனப் பொருள்.

இரண்டாம் வரி “பேறா அடியேன் பெறுமாறு உளதோ” என்பது, பேறு என்றால் பாக்கியம். அந்த பாக்கியம் இந்த அடியேனுக்கும் உண்டோ என்பது பொருள்.

மூன்றாம் வரி “சீறா வரி சூர் சிதைவித்து இமையோர்” என்பது மூன்றாம் வரி, அதாவது சீறி வந்த அசுரனை சிதைத்து வானவர் எனப் பொருள்.

நான்காம் வரி “கூறா உலகம் குளிர்வித்தவனே” எனப் பொருள்.

அதாவது அசுரனை அழித்து தேவர்களுக்கு தேவலோகத்தை திருப்பி கொடுத்து அவர்கள் மனதை குளிர்வித்தவனே எனப் பொருள்.

ஆகப் பாடலின் பொருள் இதுதான்.

“கந்தப் பெருமானே, கோபத்தில் சீறிப் பாய்ந்து வந்த அசுரன் சூரபத்மனைக் கொன்று, தேவர்களுக்கு உரிமையான தேவலோகத்தைக் குளிர்வித்து அதை அவர்களுக்கு மீட்டுக்கொடுத்தவரே! முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து, அதற்கு மேலான நிலையை பெரும்பேறாக அடையும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்திடுமோ?, அதை கிடைத்திட அருள்புரிவாயாக”

இந்தப் பாடலின் விளக்கம் கொஞ்சம் சூட்சுமமானது.

“ஆறு ஆறையும் நீத்து” எனத் தொடங்கும் இந்த வரிக்கான விளக்கத்தை ஞானியர் பல வழிகளில் சொல்வார்கள்.

ஆறு என்பது ஆறுவகை மார்க்கங்களை, அதாவது இந்துக்களின் பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், காணாதிபத்யம் என ஆறு வகைகளை குறிப்பது என்றும், அந்த ஆறு மார்க்கங்களும் சொல்லும் உன்னத நிலையினை, அதாவது ஆறு வழிகளும் முடிவாகச் சொல்லும் மோட்ச பாக்கியம் கிட்டுமோ எனக் கேட்பதாக ஒரு பொருள் உண்டு.

ஆனால் அருணகிரியார் முருகப்பெருமானை மட்டும் வழிபட்டு பாடிய பக்தர் என்பதால் அவர் மற்ற வழிகளைப் பற்றி கவலையுற அவசியமில்லை என்றும், இது ஆறு ஆறு அதாவது முப்பத்தாறு தத்துவங்களை பற்றிச் சொல்லும் பாடல் என்பது இன்னொரு வாதம்.

இரண்டாவது வாதம்தான் சரியாக இருக்கமுடியும் என்பது பலரின் முடிவு என்பதால் அதன்படியே பாடலை பொருள் கொள்ளலாம்.

மாயையினை கடந்து ஞானம் பெற வேண்டும் என போதிக்கும் அருணகிரியார் இங்கு ஏன் முப்பத்தாறு தத்துவங்களை பற்றி சொல்கின்றார்?

இது ஒரு ஆழ்ந்த தத்துவம், ஞானியரும் ரிஷிகளும் வகுத்த தத்துவ செயல் நிலை பிரிவுகள், இதனை கொஞ்சம் ஆழமாக காணுதல் நன்று.

மாயை என்பது ஒன்றுமில்லாதது, ஆனால் பரப்பிரம்மத்துக்கும் மானிட ஆத்மாவுக்கும் இடையே அது ஒரு பனிமூட்டம் போல நின்று மறைக்கின்றது, அது சிறிய விதைக்கு ஒப்பானது, சிறிய ஆலமரத்து விதை பெரிய மரத்தினை உருவாக்குவது போல, சிறிய மீன் முட்டை பெரிய மீனை உருவாக்குவது போல, ஒரு துளி ரத்தம் ஆறடி மனிதனையும் அவனின் மனதையும் உருவாக்குவது போல, ஒரு விளக்கு ஓராயிரம் விளக்கை ஏற்றுவது போல அது பலுகி விரியும் சக்தி கொண்டது.

அது பரம்பொருளில் தோன்றுகின்றது, அங்கேயே ஒடுங்குகின்றது, இந்த பெரும் அண்டம் அந்த மாயையில் தொடங்கி மாயையில் ஒடுங்கி பரம்பொருள் முன் சரணடைகின்றது என அதன் இயல்பை விளக்குகிறது சைவசித்தாந்தம்.

இல்லாத ஒன்று இருப்பதாகத் தோன்றி கடைசியில் இல்லாமல் போவதுதான் மாயை.

அந்த மாயையினை மூன்று வகையாக பிரித்ததும் இந்துமதமே.

தூய மாயை (சுத்த மாயை), தூய்மையில் மாயை (அசுத்த மாயை), பகுதி மாயை (பிரகிருதி மாயை) என மூன்று வகையாக அது பிரித்தது.

நாதம், விந்து, சதோக்கியம், ஈஸ்வரம், சுத்த வித்தை என அது சுத்த மாயையினை குறித்தது, இந்த சுத்த மாயைதான் எல்லா மூலங்களின் மூலமாக நிற்பது.

இங்கு நாதம் என்பது சிவதத்துவம், விந்து என்பது சக்தி தத்துவம். சிவசக்தி இணைவால் அண்டமும் உலகமும் உண்டாயிற்று என்பது இதுதான்.

சதாக்கியம் என்பது சதாசிவ தத்துவம், அதாவது படைத்தது இன்னும் விரிவடையும் நிலை.

ஈஸ்வரம் என்பது சதாசிவத்தின் அடுத்த நிலை, அதாவது விரிந்த அண்டத்தில் இருந்து ஒவ்வொன்றாக தோன்றும் அந்த படிநிலை.

சுத்த வித்தை என்பது முத்தொழிலும் நடக்க தொடங்கும் நிலை. படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்று இயக்கங்களும் மாறி மாறி நடக்கும் நிலை.

அடுத்து அசுத்த மாயையினைக் காணலாம்.

காலம், நியதி, கலை, வித்தை, ராகம், புருஷன் (புருடன்), மாயை, என அது ஏழு வகைப்படும்.

காலம் என்பது எல்லா படைப்புக்கும் ஒரு காலம் மட்டுமே செயலாற்றும் வரையறை உண்டு, அந்த கால அளவில் செய்யும் வினைகளுக்கும் அளவு உண்டு.

நியதி தத்துவம் என்பது அந்த காலத்தில் செய்த வினையின் பயனைக் குறிப்பது.

கலை என்பது கிரியா சக்தி, ஒவ்வொரு ஆன்மாவுக்கும் விதிக்கபட்ட பணி அல்லது கடமை, இதனாலே ஒவ்வொரு மனிதனும் தனித் தனி சிந்தையும் திறமையும் பெற்று விளங்குகின்றான், கலை என்பது அந்த கிரியா சக்தி.

வித்தை என்பது கலையின் அடுத்த பரிணாமம், கலை எனும் அந்த மூலத்தின் வெளிப்பாடு வித்தை என்றாகும்.

ராகம் என்பது வித்தைக்கேற்றபடி இழுத்து செல்லும் ஒரு சக்தி அல்லது வழி

புருடன் என்றால் இவை அனைத்தும் கலந்த ஆன்மா.

மாயை என்பது இங்கு இவைகளெல்லாம் இறைவனில் இருந்து வந்தது என மறைக்கும் அந்த அறியாமை, ஆன்மா அறியாமையில் சிக்கிக் கிடக்கும்.

“வித்தியா தத்துவம் ஏழும் வெருண்டோட

சுத்தபர் யோகத்தை துய்க்கும் நாள் எந்நாளோ

சுத்த வித்தையே முதலாய் தோன்றுமோ ரைந்து

தத்துவத்தை நீக்கியருள் சார்நாள் என்னாளோ? “

எனத் தாயுமானவர் பாடிய பாடலின் பொருள் இதுதான், அந்த புலம்பலைத்தான் அருணகிரியாரும் பாடுகின்றார்.

அடுத்து பிரகிருதி மாயையினைக் காணலாம், இது 24 வகையாக பிரிக்கப்படும்.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என நான்கு

ஸப்தம் (ஓசை), ஸ்பர்சம் (தொடு உணர்ச்சி), ரூபம் (உருவம் அறிதல்), ரஸம் (ருசி), கந்தம் (வாசனை) ஆகியன தன்மாத்திரைகள் ஐந்து.

மெய் (உடல்), நாக்கு, கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து ஞானேந்த்ரியங்கள்.

கை, கால், வாய், குறி, எருவாய் ஆகியன ஐந்து கர்மேந்த்ரியங்கள்.

ஆகாயம், காற்று, நெருப்பு (அக்னி), நீர், நிலம்(மண்) ஆகியன ஐந்து பூதங்கள்.

ஆக மொத்தம் பிரகிருதி மாயைகள் 24.

சுத்தமாயை ஐந்து, அசுத்தமாயை ஏழு, பிரகிருதி மாயை 24, ஆக 36 தத்துவங்கள்.

மொத்தம் 36 வகை தத்துவங்களைக் கொண்டதுதான் இந்த அண்டமும், மானிடமும். 36 வகை தத்துவம் எனும் மாயைகள் மானிட உடலாகவும், ஆத்மாவாகவும் உண்டு.

இப்படி தத்துவங்கள் மொத்தம் மூன்று பிரிவுகளாக‌ 36, இந்த அடிப்படையில்தான் மாயை அமைக்கப் பட்டிருக்கும்.

அண்டம், பிரபஞ்சம் என எல்லாமும் அங்கிருக்கும். காண்பவை, காணாதவை, அசைபவை, அசையாதவை என எல்லாமும் இந்த முப்பத்தாறு தத்துவங்களில்தான் வரும்.

இதனைத்தான் திருமூலரும் பாடுவார்.

” போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்

ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம்

ஏகமும் நலகி இருக்கும் சதாசிவம்

ஆகம அத்துவா ஆறும் சிவமே.”

இந்த முப்பத்தாறு தத்துவ நிலைகளையும் கடப்பது எப்படி என்பதைத்தான் இந்தப் பாடலில் சொல்லி போதிக்கின்றார் அருணகிரியார்.

முருகனின் ஆறு தலைகளும் முப்பத்தாறு நிலைகளை கடக்க அருள் புரியும். முருகப்பெருமானின் ஆறு தலை ரகசியமே அதுதான் என்பதை சூசகமாக பாடிச் சொல்கின்றார்.

திருப்புகழில் அவர் பாடினார், இந்த முப்பத்தாறு வகை தத்துவங்களையும் கடக்க முருகப்பெருமானே சரணம் எனச் சொல்லி பாடினார்.

“ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே

ஈசருடன் ஞான மொழிபேசுமுகம் ஒன்றே

கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே

குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே

மாறுபடு சூரரைவ தைத்தமுகம் ஒன்றே

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே

ஆறுமுக மானபொருள் நீ அருளல் வேண்டும்”

இங்கு மயிலேறும் முருகன் என்பது யோகத்தில் அமரும் நிலையினைச் சொல்கின்றது, மயில் பறப்பது போல முருகப்பெருமான் குண்டலி யோகத்தில் சக்தியாய் மேலெழுந்து வருவார், அந்த யோகத்தில் ஞானம் தெரியும், ஞானத்தில் முருகப்பெருமான் தெரிவார் என்பதே.

யோகத்தில் அமர்ந்திரு என முருகன் சொல்வது முதல் வழி.

ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் என்பது சுத்த மாயையினை அகற்றுவது முருகப்பெருமானால் அது கைகூடும்.

அடியார் வினை தீர்க்கும் முகம் என்பது அடியார்களின் கர்மவினையினை முருகப்பெருமான் தீர்த்து வைப்பான் என்பது.

குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே என்பது அன்னை சக்தியிடம் இருந்து அருள் பல பெற்றுத் தருவான் முருகன் என்பது.

மாறுபடு சூரரைவ தைத்தமுகம் ஒன்றே என்பது மாறிக்கொண்டே இருக்கும் மனதின் மும்மலங்களை, அகங்கார ஆணவத்தை அகற்றுதல் என்பது.

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே என்பது ஒரு தத்துவம், வள்ளி மானிடப் பெண்; முருகப் பெருமானோ தேவர் எனும் குலம், மானிடரான வள்ளியினைத் தேடி முருகன் வந்தான் என்பது ஜீவாத்மாவினை தேடி பரமாத்மா காத்துக் கொண்டிருக்கின்றார், உரிய நேரத்தில் அவர் தன்னோடு ஜீவாத்மாவினை கலப்பார் என்பது.

ஆக முருகப்பெருமானின் ஆறு முகங்கள் சொல்லும் வழிகளும், பக்தன் தன்னை அண்டி இந்த மாயைகளை கடக்க வழி சொல்லும் போதனைகள். அந்த வழியினை முருகப்பெருமான் போதிப்பதாகச் சொல்லும் அருணகிரியார் அவ்வழியில் மாயைகளை அகற்றலாம் என்கின்றார்.

இன்னும் ஒரு தத்துவம் உண்டு. அது முருகப்பெருமானின் 12 கரங்களும் ஆறு முகமும் மொத்தம் 18 என்றாகின்றது.

அவ்வகையில் பதினெட்டு வகை புராணங்கள் உண்டு.

இன்னும் ஆழமாகச் சொன்னால் சாஸ்திரம், வேதம், புராணம் என மொத்தம் 18 உண்டு. 18 புராணங்களும் இந்த வேத சாஸ்திரங்களின் வெளிப்பாடே.

முருகப்பெருமான் வேதமும், சாஸ்திரமுமாக, புராணமுமாக நிற்கின்றார். மாயைகளை வெல்ல எல்லா வழியும் காட்டுகின்றார். அவரே ஞானபண்டிதன், அவரை அண்டினால் அவரை வணங்கி நின்றால் மாயையினை வெல்லலாம்.

முருகப்பெருமான் 36 வகை மாயைகளுக்கும் அப்பாற்பட்டவர், அந்த சூரன் இந்த 36 தத்துவங்களையும் தன்னிலே கொண்டிருந்தான் என்பது கவனிக்கதக்கது.

சூரன் என்பவன் தவத்தால் எல்லா வரமும், பலமும் பெற்றவன் என்பதல்ல விஷயம், அவனுள் இந்த 36 வகை மாயைகளும் இருந்தது.

மானிடம் தாண்டி அண்டவெளி பிரபஞ்ச மாயை எல்லாம் அவனுள் இருந்தது.

முருகன் சூரனை பணியவைத்து தன்னோடு ஏற்றுக்கொண்டார் என்பது ஆன்மாவினை 36 வகை மாயைகளில் இருந்தும் மீட்கும் வல்லமை முருகனுக்கு உண்டு என்பதே.

அதைத்தான் இங்கு சொல்கின்றார் அருணகிரியார்.

மாயையினை கடக்காமல் மோட்ச நிலை – அந்த பரம்பொருளோடு கலந்துவிடும் நிலை, எல்லாம் கடந்த பரிபூரண ஞான நிலை சாத்தியமில்லை.

அந்த 36 வகை கட்டங்களையும் தத்துவங்களையும், சுருக்கமாகச் சொன்னால், உடல், மனம், புத்தி, சிந்தனை, அறிவு, உணர்வு என எல்லாம் கடந்து மோட்ச நிலையினை அடையவேண்டும்.

இந்த நிலையினை அடைய முருகப்பெருமான் வழிகாட்டுவார், அந்த ஆறுமுகமும் வழிகாட்டும், ஆறுமுகத்தானை பணிந்தால் எல்லா நிலைகளையும் கடக்கலாம் அதுதான் அநுபூதி நிலை என்கின்றார் அருணகிரியார்.

மனம், வாக்கு, உடல், சிந்தை, உணர்வு என எல்லாமும் கடந்த ஞானப்பெருநிலையே அநுபூதி நிலை. இந்த நிலையினை அடைய 36 கட்டங்களை, தத்துவ நிலைகளை கடக்க வேண்டும், முருகப்பெருமான் அதைத் தருவான் என்கின்றார்.

இங்கே அசுரனை அழித்து தேவலோகத்தை தேவர்களுக்கு கொடுத்து அவர்கள் மனம் குளிர்வித்த கதையினை அருணகிரியார் சொல்வதும் கவனிக்கதக்கது.

அசுர தேவர்களுக்கான சண்டை என்றோ எங்கோ ஏற்பட்டதல்ல, அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்பதால் மானிட மனதில் எப்போதும் மாய ஆசைகளுக்கும், தர்மத்துக்கும் ஒரு போராட்டம் நடந்து கொண்டே இருக்கும்.

நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம், மாயைக்கும் மனசாட்சிக்கும் இடையே நடந்துகொண்டே இருக்கும்.

எல்லா மனமும் அடிப்படையில் நிரந்தர மகிழ்ச்சியினை தேடித்தான் ஓடுகின்றது, எல்லார் மனமும் ஒரு நிம்மதிக்கே ஏங்குகின்றது.

இந்த நிம்மதி தேடித்தான் மாயைகளில் மனமும் அறிவும் வீழ்ந்து, தற்காலிக மகிழ்ச்சியினை நிரந்தரமாக எண்ணி விட்டில் பூச்சியாக வீழ்ந்து கிடக்கின்றது.

இந்த மாயையினை தாண்டி உண்மையான நிம்மதியும், மகிழ்வும் இறைபாதம் என்பதை உணரும் போராட்டம் மனதினுள் ஓயாமல் நடக்கின்றது.

அசுரகுணங்கள் அதனை மாயையில் தள்ள நினைக்கும் போது தேவகுணங்கள் தவிக்கின்றன, அப்போது முருகப்பெருமானை அண்டினால் அவர் அசுரகுணங்களை ஒழித்து நல்லகுணங்கள் ஓங்க வைத்து மனதை இறைபாதம் சேர்த்து தீரா நிம்மதியில் மகிழ வைப்பார். அந்த நித்திய நிம்மதிதான் அநுபூதி நிலை என்பது இப்பாடலின் போதனை.

யோகத்தின் ஆறு சக்கரமும் துலங்கினால் 36 வகை நிலைகளையும் கடந்து பெருக்ஞான நிலை அடையலாம், முருகப்பெருமானின் அருளால் வாய்க்கப்படும். அந்நிலை தான் அநுபூதி நிலை என்கின்றார் அருணகிரியார்.

இதே தத்துவத்தை வள்ளலாரும் பாடுகின்றார்.

“ஆறாறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்

அறிவுக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த

வீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில்

விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும்

பேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில்

பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச்

சோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில்

சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே.”

ஞானியரும், ரிஷிகளும், மகான்களும் போதித்த தத்துவத்தைத்தான் இங்கும் பாடி, முருகப்பெருமான் பாதங்கள் அந்த அநுபூதி நிலையினைத் தரும் என்கின்றார் அருணகிரியார்

அந்த 36 வகை தத்துவமும் கடந்த நிலைக்கு ஒரு பக்தன் வருவான், இந்த சஷ்டி கவசத்தை பாடும் போது 36 தத்துங்ங்களை கடந்த பரிபூரண நிலையினை ஒரு பக்தன் எட்டுவான் என்பதே அந்த “முப்பத்தாறு உரு” என்பதன் தத்துவம்

மறுபடியும் சொல்கின்றோம், இதை எமது துணிபாக முடிவாக ஆய்வாக சொல்லவில்லை எல்லா ஞானியரும் யோகியரும் அருணகிரி நாதரும் சொன்ன வார்த்தைகளில் இருந்தே சொல்கின்றோம், இந்த விளக்கம் யாவும் அந்த சித்தர்களுடையது வள்ளலாருடையதே அன்றி எம்முடையது அல்ல