திருவோணம்

ஓணம் பண்டிகை எனும் வாமண அவதார திருநாளை கொண்டாடும் நேரம் அந்த பண்டிகைக்கான காரணத்தையும் அது சொல்லும் நோக்குவதும் இந்துக்களின் பிரதான கடமை

அது வழமையான தேவ அசுர சண்டையில் ஒரு புராணம் என்றாலும் அதன் தத்துவம் பெரிது, போதனை மிக பெரிது

தேவர்கள் அசுரர்கள் என இருவருமே பரம்பொருளுக்கு மனிதர்களை போல கட்டுபட்டவர்கள் என்றாலும் அவர்களின் சக்தியும் ஆயுளும் அதிகம், பல சிறப்புக்களை பெற்ற மேலானவர்கள்

இருவருமே உலக இயக்கத்துக்காக படைக்கபட்டவர்கள், இருவருக்குமே பொறுப்புக்கள் உண்டு

தேவர்கள் அவர்கள் கடமையினை மட்டும் பலனை எதிர்பாராமல் செய்பவர்கள். அது சூரிய தேவன் , வருண பகவான், வாயு பகவான், எமன் என யாராயினும் சரி, தேவர்கள் அவர்கள் கடமையினை மட்டும் பலன் கருதாது பிழையாது செய்வார்கள்

நாரதர் கூட அப்படித்தான்

அரர்களுக்கும் பிரபஞ்சத்தை தாங்கும் சக்தி, இயக்கும் சக்தி என பல வேலைகள் உண்டு

(அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது என்பது வெறுமையான வார்த்தை அல்ல, சூரியன் சந்திரனெல்லாம் வானில் அதனதன் கடமையினை யாரும் சொல்லாமலே பலன் எதிர்பாராமல் செய்வது போல மானிட உடலிலும் இதயம், சிறுநீரகம், இரப்பை, கிட்னி, ரத்த ஓட்டம் என அதனதன் வேலை ஒழுங்காக நடைபெற்று கொண்டே இருக்கின்றது)

ஆனால் அசுரர்களுக்கு ஆசை அதிகம், அடக்கி ஆளும் வெறி அதிகம், எல்லாவற்றையும் அடக்கி வல்லமையான பெருவாழ்வு வாழ ஏக்கமும் பேராசையும் அதிகம்

அவர்கள் நாத்திகர்கள் அல்ல என்பதால் பரம்பொருளிடம் தவம் இருப்பார்கள், அதுவும் மிக கடுமையாக இருப்பார்கள், அசாத்தியமாக விடாபிடியாக இருப்பார்கள்

அந்த பக்தியில் பரம்பொருளை இறங்கிவர வைத்து வரம் வாங்குவார்கள், பரம்பொருள் எப்பொழுதும் பக்திக்கு கட்டுபட்டு வரம் கொடுக்கும், அதன் கருணை அப்படியானது.

ஆனால் வரம் கிடைத்ததும் அவர்களின் ஆங்காரம் விழிக்கும், பெரும் ஆக்ரோஷமும் ஆவேசமும் குடிகொள்ளும், எல்லா உலகையும் அடக்கி சுகபோகத்தில் வாழ துடிப்பார்கள், அதற்கு தங்கள் வரத்தை முழுக்க பயன்படுத்துவார்கள்

உலகில் “ஆள பிறந்தவர்கள்” எனும் கோஷத்தை முதலில் சொன்னவர்கள் அசுரர்கள்தான்

(இன்றும் மேற்குலகிடம் இதே அசுர குணத்தை காணமுடியும், விஞ்ஞானமும் ஒருவகை தவமே, பிரபஞ்சம் அந்த தவத்துக்கு வரம் கொடுக்கின்றது

அந்த தவபயனில் தாங்கள் வாழ எல்லா இனத்தையும் அடக்கி ஒடுக்கி ஆண்டுகொண்டி அவர்கள் சுகபோகமாக வாழ தொடங்கியிருக்கின்றார்கள், அவர்கள் வாழ்வும் அசுர வாழ்வுதான்)

அப்படிபட்ட அசுரர்கள் தேவர்களின் கடமையில் குறுக்கிடுவார்கள், எல்லாருக்குமான இயற்கை கடமையினை செய்யும் தேவர்களை தங்களுக்கு மட்டும் பயன்படும்படி அடக்குவார்கள், பிரபஞ்சத்தை வளைப்பார்கள்

இப்படி அவர்கள் இயற்கையினையே ஆட்டும்பொழுது, தேவர் உலகையே மிரட்டி பொதுநல இயக்கத்தை தங்களுக்காக தங்கள் சுயநலத்துக்காக மாற்றும்பொழுது, படைப்பின் சமநிலையினை குலைக்கும் பொழுது பரம்பொருள் இறங்கிவந்து அவர்களை அழிக்கும் அல்லது அடக்கும்

இரணியன், சூரபத்மன், கஜாசுரன், நரகாசுரன் என எத்தனையோ நூறு அசுரர் வரிசையில் வந்தவனே அந்த மகாபலி

அந்த மகாபலியால் உருவானதுதான் ஓணம் பண்டிகை, அந்த ஓணம் பண்டிகையின் மூலம் இப்படித்தான் தொடங்குகின்றது

ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமான‌ சிவன் கோவிலில் ஒரு எலி புகுந்தது அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்ததது, ஆளில்லா நேரம் அங்குமிங்கும் ஓடுவதும் குதிப்பதுமாக இருந்தது. அந்த எலி கொஞ்சம் விஷேஷமான எலியாகவும் இருந்தது

யாருமற்ற நேரத்தில் தீபத்தின் திரி பாதி எரிந்து கருகும் சமயத்துக்கு வந்ததால் அந்த எலி தன் தலையால் திரியினை முன் தள்ளி எரியவைக்கும், இதை அந்த எலி மிக சரியாக செய்து வந்தது

எலியின் வாழ்நாள் குறுகியது என்பதால் அந்த எலியும் மரித்தது, சிவன் அந்த எலிக்கு மிகபெரிய வரத்தினை வழங்கினார். அடுத்த ஜென்மத்தில் அது மிகபெரிய இடத்தில் பிறக்க அருள்பாலித்தார் அது பிரகலாதன் வம்சத்தில் பேரனாக பிறந்தது

ஆம், இரணியனின் மகனான அந்த பிரகலாதனின் பேரனாக அந்த பலி பிறந்திருந்தது.

என்னதான் பிரகலதனின் பேரன் என்றாலும் அசுரனுக்குரிய இயல்பும் அவனிடம் இருந்தது, அவனை அசுர கூட்டம் வளைத்தும் இருந்தது, குறிப்பாக அசுரகுரு சுக்கிராச்சாரியார் அவனை மிகபெரும் பிம்பமாக வளர்த்தெடுத்து கொண்டார்

குருபக்தியில் மிக மிக உன்னதமான‌ அவன், குருவிடம் தன்னை ஒப்புகொடுத்த அவன் அவர் மேல் அவ்வளவு மரியாதை வைத்திருந்தான். அந்த மரியாதையினை கொண்டே பலியினை ஆட்டுவித்தார் சுக்கிராச்சாரியார்.

அந்த பலி அசுர இயல்பும் பிரகலாதனின் பக்தியும் நிரம்ப கொண்டிருந்தான். அவன் பக்திமான், நல்ல மனம் கொண்டவன் ஆனால் குருவுக்கு கட்டுபட்ட மாணவனும் அசுர குலத்து பாசமும் கொண்டவனாய் இருந்தான்

ஒரு கட்டத்தில் சுக்கிராச்சாரியாரின் ஆலோசனைபடி மிகபெரும் யாகங்களும் அதன் பலன்களும் பலியினை சக்திமிக்கவனாக்கின, தவம் பெற்ற முனிவர்கள் கூட அவனை அசைக்க முடியவில்லை

யோகிகளும் , முனிகளும் இல்லாத இடத்தில் அதர்மம் அதிகரிக்கும், தர்மத்தின் வடிவான அவர்கள் இருக்கும் வரை அதர்மம் அங்கு காலூன்ற முடியாது, இதனால் அவர்களை குறிவைத்து அடித்தார் சுக்கிராச்சாரியார். யோகியரும் தவமுனியரும் அசுர குல எதிர்களாக அவனுக்கு கற்பிக்கபட்டு அவர்களை விரட்ட வைத்தார்

அதை செய்வ்வனே செய்தான் பலி

சில முனிகளும் யோகிகளும் இது தவறு, அதர்மம் சீறியபொழுது “இது என் குருநாதர் உத்தரவு” என எதிர்த்தான் மகாபலி

தவத்தில் சிறந்த ஒரு முனி “எந்த குருவால் நீ பலமடைந்தாயோ, அந்த குருவினை நீ மீறும் நாளில் அழிவாய்” என சாபமிட்டு சென்றார், அதை பிரபஞ்சம் குறித்து கொண்டது.

சுக்கிராச்சாரி விக்ரஜித் என மிகபெரும் யாகம் செய்தார், அந்த யாகத்தின் விளைவால் பறக்கும் ரதம் வெல்லமுடியா ஆயுதம் என பல பலிக்கு கிடைத்தன, அதில் ஏறி விண்ணகம் சென்ற பலி வானலோகத்தையும் பிடித்து தேவர்களை விரட்டி அடித்தான்

எங்கும் அசுர ஆட்சி நடந்தது, தர்மம் இல்லை. ஒரே ஒரு அசுர சக்தியாக பேயாட்டம் ஆடி கொண்டிருந்தது பலி கோஷ்டி, மூவுலகுக்கும் அவனே சக்கரவர்த்தி

யாராலும் வெல்லமுடியா அவன் மகாபலி என்றானான்

அவன் அசுரனே தவிர மனதால் நல்லவன், தர்மத்தை தவிர எல்லாம் வாழட்டும் எனும் அளவு நல்லவன், அவன் குடிகளுக்கு நல்லவன் தன் நாட்டு மக்களுக்கு பொற்கால ஆட்சி வழங்கி கொண்டிருந்தான்

எல்லா உலகையும் ஆள்வது அசுர இயல்பு அந்த இயல்பில்தான் தன் குலபெருமை காரணமாக ஆண்டுகொண்டிருக்கின்றேன் என்றானே தவிர அது அவனுக்கு தவறாக படவில்லை

எல்லா அசுரனுக்கும் சுயநலமும் சுய குடும்ப நலமும் தன் மக்கள் நலனும் ஓங்கியிருக்கும். அது ராவணனுக்கு இருந்தது, சூரபத்மனுக்கு இருந்தது அப்படித்தான் மகாபலிக்கும் இருந்தது.

அதில் அவன் நாடு நலமாகவும் அவன் மக்கள் மகிழ்வாகவும் இருந்தனர், மற்ற உலகம் அழுதாலும் தன் உலகை நன்றாக வைத்து கொண்டான்

தன் சக்தி இன்னும் மிஞ்சி இரேழு உலகையும் ஆள மிகபெரும் யாகங்களை செய்ய ஆரம்பித்தான் அந்த மாபெரும் யாகம் முடிந்தால் அவன் சக்திபெறுவதை தடுக்க முடியாது என உணர்ந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.

தர்மத்தை காக்க அவதாரம் எடுத்தார் விஷ்ணு, குள்ள வாமணனாக உருவெடுத்தார். ஒரு அந்தண வடிவில் குடையும் கையில் கமண்டலமும் கொண்ட அந்தணராக 3 அடி உருவில் வந்து நின்றார்

யாகத்தின் முழு பலன் என்பது ஒருவன் தானம் கொடுத்து முடிவதில்தான் கிடைக்கும்

ஆம், யாகம் செய்வது மட்டும் பலனளிக்காது. யாகம் முடிந்ததும் பல அந்தணர்களுக்கும் இன்னும் பலருக்கும் அவன் தானம் செய்யவேண்டும், அந்த தானத்தில் அவர்கள் அவனை வாழ்த்த வேண்டும், அந்த வாழ்த்தே யாகத்தை முழுமை அடைய செய்யும்

அந்தணர்களின் வாழ்த்தே வெற்றிகரமான பலனை கொடுக்கும். அந்தணருக்கு தானம் கொடுக்கா யாகம் முழுமை அடையாது.

தானத்துக்கும் தர்மத்துக்கும் வித்தியாசம் உண்டு. தானம் என்பது பலனை எதிர்பார்த்து செய்வது, தர்மம் என்பது பலன் கருதாதமல் செய்வது

கன்னிகா தானம் என்பார்கள் அல்லவா, கன்னியினை தானம் செய்தால் தன் சந்ததி வளரும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அப்படி சொல்லபட்டது

அப்படி மகாபலி தானம் செய்யும்பொழுது வாமணனும் கடைசி வரிசையில் வந்து நின்றார். அவர் வரும்பொழுது மன்னனிடம் தானம் செய்ய ஏதுமில்லை, ஆனால் யாக தத்துவபடி கடைசி ஆளுக்கும் தானம் செய்தாக வேண்டும்

குள்ள வாமணன் மெல்ல வணங்கி கையேந்தி நின்றான், மகாபலிக்கு சிக்கலான நிலை அந்தணன் கையேந்திவிட்டான் ஏதும் கொடுத்தாக வேண்டும் ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது

வாமணன் மெல்ல சொன்னான் “மன்னா நானோ குள்ளன், என் கால்களோ சிறியவை. நானும் எல்லோரையும் போலத்தான் வந்தேன் ஆனால் 6 அடி மனிதரோடு என்னால் போட்டி போட்டு ஓட முடியவில்லை, நான் என்ன செய்வேன்?” என கலங்கினான்

கலங்கிய வாமணனை கண்ட மகாபலி என்ன கேட்டாலும் தருவதாக வாக்களிக்க, மன்னா என் காலுக்கு 3 அடி நிலம் தா, நான் அதில் இருந்து தியானம் செய்வேன்” என மருகி நின்றான் அந்தணன்

தள்ளி இருந்த சுக்கிராச்சாரிக்கு சந்தேகம் உண்டாயிற்று, இந்த வாமணன் தவம் இருக்க போகின்றானா, அதுவும் இந்த நாட்டிலா? என குழம்பியபடியே அருகில் வந்தார்

அவரை பொறுத்தவரை யாரும் தவம் என அமர்ந்து நல்ல சக்திகளை பெற்றுவிட கூடாது, அதற்குவழியே வைத்துவிட கூடாது என்பதால் வாமணன் தவம் செய்வதை தடுக்கும்படி முன் வந்தார்

வாமணின் கண்கள் காட்டிய தீர்க்கமும், புன்னகையும் ,தந்திரம் காடியமுகமும் அவன் சாதாரணமானவன் இல்லை என்பதை சுக்கிராச்சாரிக்கு சொன்னது, மகாபலியினை எச்சரித்தார் சுக்கிராச்சாரி

ஆனால் தானம் கொடுக்கும் ஆசையில் , தன் யாகம் வெல்லும் ஆசையில் இருந்த மகாபலி அவரை மீறினான்

ஆம், குருவினை மீறினால் நீ அழிவாய் என முனிவன் சாபமிட்டது அந்த இடத்தில் வேலை காட்ட ஆரம்பித்தது, கமண்டலத்தை எடுத்து 3 அடி நிலம் தாரைவார்க்க முனைந்தான் மகாபலி

ஆனால் அப்பொழுதும் வண்டாக மாறி கமண்டல துளையினை அடைத்து தடுத்தார் சுக்கிராச்சாரி, ஒரு குச்சி வைத்து வண்டை தள்ளி நீரை வார்த்து 3 அடி உமக்கு சொந்தம் என வாக்களித்தான் மகாபலி

அவன் வாக்களித்து முடிக்கவும் அந்த 3 அடி குள்ள வாமணன் 3 உலகுக்கும் விஸ்வரூபமாய் எழுந்து நின்றார், ஒரு காலால் விண்ணை அளந்தார் இன்னொரு காலால் பூமியினை அளந்தார், இன்னொரு கால் வைக்க எங்கே இடம் என மகாபலியிடம் கேட்டார்

மகாபலிக்கு எல்லாம் புரிந்து போயிற்று, பிரகலாதனுக்காக நரசிம்மமாக வந்த பகவான் இப்பொழுது வாமணனாக வந்து விஸ்வரூபம் காட்டி தன் முன் தன்னை பலி கேட்கின்றார் என்பது புரிந்தது

பகவானே ஒரு காலை என் தலையில் வையுங்கள் என இடம் கொடுத்தான் பலி, காலை ஓங்கினார் பகவான், ஆனாலும் அவன் பக்தன் அல்லவா? அதுவும் தலைவணங்கி நிற்கும் பக்தன் அல்லவா? அந்த சரணடைவும் அவன் தன் தலையினை தன் பாதம் வைக்க பணிந்து நின்றதும் அவருக்கு இரக்கத்தை கொடுத்தன‌

அதனால் அவனை பாதாளத்தில் அழுத்தும் முன் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என கேட்டார் பகவான்

இந்நாடும் மக்களும் வளமாக வாழவேண்டும், ஆவணிமாதம் ஓண நட்சத்திரத்தின்பொழுது நான் இங்கு வந்து அவர்கள் ஆனந்தமாக வாழ்வதை காணவேண்டும் என கேட்டபடி பகவானின் பாதத்தை தாங்கினான் மகாபலி
அப்படியே ஆகட்டும் என சொல்லி அவன் தலைமேல் கால்வைத்து அழுத்தினார் விஷ்ணு, அவன் பாதாளத்தில் இறங்கினான்

பகவான் வாக்களித்தபடி வருடத்தின் ஆவணிமாதம் திருவோணம் அன்று அவன் வருவான் , தன் மக்களை பார்க்க வருவான். அதைத்தான் திருவோண பண்டிகை என கேரள மக்கள் கொண்டாடுகின்றார்கள்
எத்தனையோ நட்சத்திர்ம இருக்கும் பொழுது திருவோண நாளில் அந்த வரம் ஏன் மகாபலிக்கு கொடுக்கபட்டது என்றால் அந்த நட்சத்திரத்தின் தன்மை அல்லது அந்த நட்சத்திரத்தில் பிறந்த தன்மை என்னவென்றால் அவர்கள் அடுத்த நிலைக்கு இன்னொருவரை உயர்த்துவார்கள் அல்லது உயர்த்தபடுவார்கள்

ஆம், அந்த நாளில்தான் மகாபலியினை நித்திய சிரஞ்சீவி எனும் அடுத்த நிலைக்கு உயர்த்தினார் பகவான்

மகாவலி நல்லவன், நல்லாட்சி கொடுத்தவன், பக்திமான் ஆனால் எல்லாம் அடக்கி ஆளவேண்டும் இயற்கையே தன் கையில் இருக்கவேண்டும் என்ற மாயை அவனை அலைகழித்தது, அந்த மாயை நீக்கி அவனை அணைத்து கொண்டார் பகவான்

மகாபலியின் ஆணவத்தை பகவான் அடக்கிய இடத்தில் வாமணனுக்கு பரசுராமர் ஒரு கோவில் எழுப்பினார், இன்றும் அந்த கோவில் உண்டு, திருகாட்கரை காட்கரையப்பன் எனும் பெயரில் கேரளாவில் உண்டு. 108 வைணவ தலங்களில் அது 68ம் தலமாக போற்றபடுகின்றது, அங்கு மகாபலி தீர்த்தமெடுத்த கபில தீர்த்ட்தம் இன்றும் உண்டு

திருவோணம் ஒரு காலத்தில் இந்தியா முழுக்க கொண்டாடபடும் பண்டிகையாக இருந்தது, பின் தென்னகத்துக்கு சுருங்கிற்று, அதுவும் சமண புத்த காலங்களில் இங்கு அது வழற்றற்று போயிற்று

பரசுராமனின் காவலோ என்னமோ புத்தம் சமணம் ஆப்கானியர் பாதிப்பில்லா கேரளாவுக்கு மட்டும் அந்த திருவோண பாரம்பரியம் தொடர்ந்தது

திருவோணத்தன்று கேரள மக்களை மட்டும் மகாபலி பார்க்க வருவான் என்பதல்ல விஷயம், அவன் ஆண்ட இந்த மொத்த மண்ணையும் காணவருவான், அப்படித்தான் அக்கால கொண்டாட்டம் இருந்தது

ஆனால் இந்து துவேஷ மதங்களின் ஆட்சியில் அக்கொண்டாட்டம் களையபட்டது

கேரளா பெரும்பாலும் அடுத்த இனத்தின் ஆட்சியில் சிக்கவில்லை என்பதும், வாமணன் விஸ்வரூபமெடுத்த அந்த இடம் இன்று திருகாட்கரை ஆலயமாக கொச்சி அருகே நிற்பதும், அங்கு வாமண சிலை நிற்பதும் அந்த பண்டிகை கேரளாவில் தொடர்ந்துவர ஒரு காரணம்,

மற்றபடி எல்லா இந்து மக்களும் கொண்டாட வேண்டிய பண்டிகை ஓணம்

மகாபலியின் வாழ்வும் வீழ்ச்சியும் சொல்வது என்ன?

சிவனுக்கு செய்யும் தொண்டு வீணாகாது, இந்த ஜென்மத்தில் இல்லையென்றாலும் அடுத்த பிறவியில் அது மாபெரும் கிரீடமாய் சிவனால் கொடுக்கபடும்

ஒருவன் எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் சேருமிடம் மிக சரியாக இருக்க வேண்டும், சேர கூடாதவர்களை சேர்த்து அடாதன செய்தான் மகாபலி, அதர்மம் அவனால் வளர்ந்தது அதற்கு துணை சென்றான், ஒரு காலமும் அதர்மக்காரர் பக்கம் இருக்கவே கூடாது இருந்தால் அழிவு நிச்சயம்

ஆம் அகங்காரிகள் செய்யும் வெல்லமுடியா போர் அல்ல, அவர்களின் தானமே அவர்களை அழித்துவிடும் அதாவது ஒருவன் எவ்வளவு அதர்மக்காரனாய் இருந்தாலும் அவன் செய்யும் தானம் அவன் கர்மத்தையும் பாவத்தையும் குறைத்து அவனுக்கு மன்னிப்பும் விடுதலையும் கொடுக்கும்

எக்காலமும் உலகில் முழு பலமானவன் என யாருமில்லை, ஒவ்வொரு பலசாலிக்கும் ஒரு பலவீனம் இருக்கும், தர்மம் அதில் தன்னை மீட்டெடுக்கும்

அடுத்து குருவின் கட்டளையினை மீறுதல் பெரும் பாவம், எக்காரணம் கொண்டு குருவினை மீறல் கூடாது மீறினால் அழிவு.

ஆணவம் ஆசையினை கொடுக்கும் அந்த ஆசை எல்லை மீறி சென்று கொண்டே இருக்கும், பகவானின் காலடியினை சரணடைந்து அதை தலையால் ஏற்றாலே அகங்காரம் ஒழிந்து, ஞானம் பிறக்கும்

மகாபலியின் அகங்காரம் பகவான் பாதத்தினை தாங்கியதால் உடைந்து அழிந்தது.

இந்த மகாபலியின் வாழ்வு கர்ணனின் வாழ்வினை சார்ந்தது, இருவருமே நல்லவர்கள், கொடையாளிகள், ஆனால் சேரகூடா இடம் சேர்ந்து அழிந்தார்கள்

இருவருமே தானத்துக்கு வாக்கு கொடுத்து தானத்தால் அழிந்தார்கள்

தானமும் தர்மமும் அவர்களின் பாவகர்மாவினை குறைத்து குறைத்து அவர்கள் நல்வழியில் வாழ்வினை முடிக்க வழிகாட்டிற்று

இதனால்தான் யாருக்கும் கிடைக்கா விஸ்வரூப தரிசனத்தை பகவான் இவர்களுக்கு அருளினார். இருவர் மேலும் அவருக்கு இரக்கம் இருந்தது ஆனால் அதர்மம் பக்கம் இருக்கும் அவர்களை அகற்றாமலும் முடியாது

இதனால் அவர்களின் கொடைகளுக்கும் தான தர்மங்களுக்கும் ஏற்ப தன் தரிசனம் காட்டி தன்னோடு சேர்த்தும் கொண்டார்.

வாமண அவதாரம் என்பதும் மகாபலி வதம் என்பதும் என்றோ நடந்துவிட்ட ஒன்றல்ல, ஓணம் பண்டிகையோடு மட்டும் நினைவுக்கு வரும் ஒன்றல்ல‌

ஒவ்வொருவன் மனமும் அனுதினமும் நன்மைக்கும் தீமைக்கும் இடையே அப்போராட்டத்தை ஒவ்வொரு நொடியும் நிகழ்த்துகின்றது. அதில் பல நேரம் அகங்காரம், ஆணவம்,ஆசை போன்றவையே ஆள்கின்றன‌
அதில் மனிதன் மிருகமாகின்றான், அசுரகுணம் கொண்டு மற்ற எல்லோரையும் வதைக்கின்றான்

இந்த சுக்கிராச்சாரி என்பது மனதின் மாயை, இல்லாத ஒன்றை இருப்பதாக கருதி மாயை செய்யும் காட்சி அது. அந்த பேராசை மாயையே மனதை தூண்டி மனதின் தீய பக்கத்தை தூண்டி மண், பொன், பெண், பணம், புகழ் என அவனுக்கு வழிகாட்டி அவனை வீழ்த்துகின்றது

ஆனால் எல்லா மனிதனுக்குள்ளும் மனசாட்சி உண்டு அல்லது ஏதோ ஒரு நல்ல குணம் சிறிதளவு தர்மம் உறங்கி கொண்டிருக்கும்

வாமணன் போல மிகசிறிய வடிவில் தர்மம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கின்றது அதை

அவன் அதில் மாயையினை மீறி, அதாவது சுக்காராச்சாரி வண்டாக மாறி தடுத்தும் அதை தாண்டி வாமணனை நெருங்கிய மகாபலி போல பகவானை சரண்டைந்தால் போதும்

அந்த மிக சிறிய தர்ம குணம், நல்ல குணம் விஸ்வரூபமாய் நம் மனதை ஆக்கிரமிக்கும் அதில் அந்த ஆசை, கோபம், காமம், மயக்கம் போன்ற மாயைகள் விலகி மனம் கோவிலாகும், ஆத்மா புனிதமாகும்
மாயையினை வென்ற மனம் கடவுளாகும், அந்த மனிதனை ஒவ்வொருவரும் கோலமிட்டு வரவேற்பர், பொன்னூஞ்சலில் ஆட்டுவர்

ஆம், மாயையினை வென்றவனை, இறைவனின் பாதம் சரண்டைந்தவனை, அகந்தையினை அழித்தவனை உலகம் கொண்டாடும்

இந்த தத்துவத்தைத்தான் மகாபலியின் ஓணம் போதிக்கின்றது

இது இந்திய தத்துவ விழா, ஞான மரபின் கொண்டாட்ட விழா, பகவான் நம் ஒவ்வொருவரையும் அகந்தை அழித்து காக்க வேண்டும் என வேண்ட வேண்டிய விழா

இந்த விழா ஒவ்வொருவரும் மாயையினை வெல்ல வேண்டும் என்றும், மனிதனுக்கு அரசமுடி தேவையில்லை அவன் தலையில் சுமக்க வேண்டியது பகவானின் பாதங்களையே என்பதை சொல்லும் விழா

மகாபலியின் வாழ்வினை கர்ணன் வாழ்வில் காணலாம், நாயன்மாரில் கூற்றுவ நாயனாரில் காணலாம்

அகந்தை ஒழிப்பே ஞானத்தின் தொடக்கம், தெளிவின் முதல் படி, ஆத்மாவின் தெளிவு என்பதை சொல்லும் காட்சிகள் இவை

பெரும் வல்லமை கொண்டவனாயினும் தன் தவறை உணர்ந்து பகவானை சரணடைந்து தலையில் அவர்பாதம் தாங்கியதால் அவன் நித்திய சிரஞ்சீவிகளில் ஒருவனான்

அவன் செயலுக்காக அவனை தண்டிக்க வந்த பரம்பொருள் அவன் பக்திக்காக அவனுக்கு வரம் கொடுத்து தன்னோடு சேர்த்து கொண்டது, புழுதியில் விளையாடிய குழந்தையினை தாய் அழுக்கு நீக்கி அணைப்பது போல அவன் ஆங்காரத்தை நீக்கி அவனை அணைத்து கொண்டார் பகவான்

பொதுநலமும் பகவான் பக்தியும் கொண்டவனுக்கு, ஆன்மீகமும் மக்கள் நலமும் கொண்டவனுக்கு ஒரு காலமும் அழிவில்லை என்பதை சொல்லும் பண்டிகையே ஓணம் பண்டிகை

ஆம், அந்த மகாபலி தன் மக்களுக்காக வாழ்ந்தான் நல்ல அரசனாகவும் நல்ல பக்தனாகவும் விளங்கினான், கடைசியில் வரம் கேட்டபொழுதும் தனக்காக அல்லாமல் தன் மக்கள் நலமாயிருப்பதை காண வரும் வரத்தை கேட்டான், அதன் பொருள் மக்கள் எப்பொழுதும் மகிழ்வாய் நலமாய் இருக்கவேண்டும் என்பதே

அவன் தனக்காக தன் குடும்பத்துக்காக சுற்றத்துக்காக கேட்கவில்லை தன் நாட்டுமக்களுக்காக கேட்டான்

அந்த பொதுநலம்தான், அந்த பொறுப்புத்தான், அந்த மக்கள் நலம்தான் இன்றும் அவனுக்கு அழியா பெரும் புகழை கொடுத்து காத்து நிற்கின்றது.

(ஒருவனுக்கு எல்லா வரமும் இந்த பிரபஞ்சம் கொடுக்கும், ஆனால் அவன் அதை கொண்டு தேவர்களின் கடமையான இயற்கையினை மாற்றமுயன்றால் பிரபஞ்சம் அவனை முறியடிக்கும் என்பதும் இந்த புராணத்தின் தத்துவம்

மேல்நாட்டு விஞ்ஞானம் இந்த அசுரகுணத்தின் ஆரம்பபடிகட்டில் இருக்கின்றது, கலியுகம் அப்படித்தான் இருக்கும்)

ஆம், மலையாளிகள் மட்டுமல்ல இத்தேசத்தின் தெய்வீக ஞானமரபினை, இந்த மண் சொல்லிய மிகபெரிய தத்துவத்தை, அராஜகம் அத்துமீறினால் தெய்வம் இறங்கிவந்து அதை சரிசெய்யும், தெய்வத்தை சரணடைந்தால் பாவநிவர்த்தி உண்டு, பொதுநலம் கொண்டவனுக்கு அழிவில்லை எனும் மாபெரும் நம்பிக்கையினை கொடுக்கும் என்ற தத்துவத்தில் கொண்டாடும் இந்த விழாவினை ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு இந்துவும் கொண்டாடலாம்

அதனை கொண்டாடும் எல்லோருக்கும் இனிய ஓண பண்டிகை வாழ்த்துக்கள்..