கந்தர் அனுபூதி : 02

“உல்லாச நிராகுல யோக இதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூ பதியே”

உல்லாச என்றால் மங்காத உள்ளக் களிப்பும், நிராகுல என்றால் துன்பமற்ற நிலையும், யோக என்றால் யோகநிலை தருபவனும், இத என்றால் இதமான நன்மை பயப்பவனும், சல்லாபம் என்றால் பல விஷயங்களை தெரியவைத்து அடியாருடன் மகிந்து திருவிளையாடல் புரிபவனும் என பொருள்

நீ அலையோ என்றால் நீயில்லையோ , நீதானே என்பது பொருள்

முருகா சுரபூ பதியே என்றால் தேவர் தலைவன் என்று பொருள்

அதாவது மங்காத உள்ள களிப்பும், துன்பமற்ற நிலையும், யோக இன்பமும், இதமான நன்மையும், யோக நிலையும், இதமானதும், சல்லாபம் எனும் உச்ச மகிழ்ச்சியும், வினோதமும் பல வகை திருவிளையாடலும் தருபவன் நீ அல்லவா முருகா, எல்லாமும் துறந்து என்னையும் துறந்து நான் பெற்ற மகிழ்ச்சியினை என்னால் சொல்லமுடியுமா முடியாது, அதை நீதான் உன் அடியார்க்கெல்லாம் எடுத்து சொல்ல வேண்டுமென்கின்றார் அருணகிரியார்

பாடலை இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்க்கலாம்

உல்லாசன், நிராகுலன், யோகன், இதன், சல்லாபன், விநோதன் என ஆறு விஷயங்களை ஆறுமுகனை பற்றி சொல்கின்றார் அருணகிரியார்

உல்லாசன், மகிழ்ச்சியை உடையவன். ஆனந்த உருவாக உள்ளவன். நிராகுலன் , கவலையற்றவன். யோகன, யோகம் புரிவோர்க்கு இன்பம் அளிப்பவன். இதன், அடியார்களுக்கு இதத்தையே புரிபவன். சல்லாபன், நன்றாகப்பேசும் ஆற்றல் உடையவன். விநோதன்,பல திருவிளயாடல்கள் புரிபவன் என முருகனின் ஆறு இயல்புகளை சொல்லி என்ன சொல்ல வருகின்றார் என்றால் அது இன்னும் ஆழமானது

அதாவது இப்பாடல் முருகபெருமானின் அருளால் ஒருவனின் யோகம் கைகூடி ஞான யோகத்தின் உச்ச நிலையில் என்னென்ன தோன்றுமோ, யோகி எந்நிலையில் இருப்பானோ அந்நிலையினை சொல்கின்றது

உண்மையில் மானிட மனமும் ஆத்மாவும் ஒரு நிலைத்த மகிழ்ச்சியினை தேடுகின்றது, ஆனால் அந்த உண்மையான ஆனந்தம் எது என அதற்கு தெரியவில்லை, எதுவும் நிறைவினை கொடுக்காதபொழுது மனம் தேடும் அந்த சந்தோஷத்தை தேடி பல வகை சிற்றின்பங்களில் மானிட மனம் வீழ்ந்து கிடக்கும்

இலுப்பைபூ சர்க்கரையிலே தேன் என்றும் மது என்றும் உணர்ந்து, ஒரு துளி நீரிலே இதுதான் கடல் என மயங்கி கிடக்கும் மானிட மனம்

ஆனால் உண்மையான ஆத்ம நிறைவு, அந்த அனுபூதி நிலை, பேரின்ப நிறைவு நிலை என்பது யோகத்திலும் இறையருளிலுமெ கிடைக்கும்

இதனாலே பெரும் ஞானம் அடைந்த யோகிகள் எப்பொழுதும் கவலையற்ற பெரும் மகிழ்விலும் ஒரு பரவசமும் நிறைவும் நிறைந்த நிலையிலே இருப்பார்கள், இதற்குமேல் ஏதும் தேவையில்லை எனும் ஒரு நிறைவு அவர்களிடம் வந்துவிடும்

அவர்கள் மரத்தடியில் அரை உடையோடுதான் கிடப்பார்கள், கையில் திருவோடு கூட இருக்காது ஆனால் அவர்கள் ஆன்மா எல்லா சாமான்யரின் ஆன்மாவினை விட பெரும் மகிழ்ச்சியில் பிரபஞ்ச மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்

எல்லாம் கடந்த ஞான பெரு மகிழ்வில் அவர்கள் இருப்பதால் பூமியின் எல்லாமே அவர்களுக்கு சாதாரணமாகவே தோன்றும்

சக்கரவர்த்தியே வந்தாலும் தள்ளி நில் என சொல்லும் அந்த ஞானகர்வம் அவர்களுக்குத்தான் வரும்

காரணம் பூமியின் லவுகீக மயக்கங்கள் அவர்களை பாதிக்காது, எல்லா மாயைகளையும் கடந்த பெரு ஞான நிலையில் அவர்கள் வீற்றிருப்பார்கள், எது உண்மையான நிலைத்த மகிழ்ச்சி என்பதை அவர்கள் அறிந்துவிட்டார்கள்

முருகபெருமானை நினைந்து அமரும் அருணகிரிநாதர், தன் யோகம் கந்தனின் அருளால் கைகூடி என்னென்ன நிலையில் அவர் ஆனந்தமடைந்தார் என்பதை முருகனுக்கு சொல்வது போல் நமக்கும் சொல்கின்றார்

அவர் மிகபெரிய உல்லாசம் எனும் ஆனந்த களிப்பில் திளைக்கின்றார், யோகத்தின் மிகபெரும் பரவச நிலையில் இருக்கும் அவருக்கு உலகில் எங்குமில்லா ஆனந்தம் கிடைத்திருக்கின்றது அதனில் திளைக்கின்றேன் என்பவர் அடுத்து சொல்கின்றார்

நிராகுலம் எனும் கவலையற்ற நிலையினை அவர் அடைந்துவிட்டார், ஒரு மனிதனின் மிகபெரிய பலவீனமே அடுத்த நொடி பற்றிய அச்சம், அடுத்து என்னாகுமோ எனும் குழப்பம், நடந்ததையும் நடப்பதையும் நடக்க இருப்பதையும் எண்ணி அவன் கொள்ளும் பெரும் அச்சம்

அச்சம் இருக்குமிடம் நிம்மதி வராது, நிம்மதி இல்லா இடத்தில் மகிழ்ச்சி வராது

முருகனின் அருளி தன் கவலை தீர்ந்து முழு மகிழ்ச்சி வந்துவிட்டது என்கின்றார், வெளிச்சம் வரும் இடம் இருள் அகலும், ஞானம் வருமிடம் அறியாமை அகலும் முருகன் வருமிடம் கவலை அகலும் என்பவர் அடுத்து சொல்கின்றார்

யோகம் அனைத்தும் கைகூடிற்று என்கின்றார்

இங்கு அவர் சொல்ல வருவது அஷ்டாங்க யோகம், திருமூலர் சொல்லும் அந்த எட்டு வகை யோகம்

“இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே”

இமயம், நியமம், ஆசனம், ப்ராணயம், பிரத்யகாரம், தாரணை, தியானம் சமாதி எனும் எட்டு வகை நிலையும் கைகூடி தான் சமாதி நிலை எனும் பெரும் நிலைக்கு சென்றுவிட்டதை சொல்கின்றார்

அடுத்து இதமான பெரும் நன்மை நிலைக்கு சென்றிருப்பதை சொல்கின்றார்,அவருக்கு குளிர் வெயில் பசி தாகம் என எதுவுமில்லை என்பது பொருள்

யோகியர் உண்ணமாட்டார்கள், நீரும் சுவாசமும் இல்லாமல் கூட அவர்களால் வாழமுடியும். குளிரும் வெயிலும் அவர்களை அசைக்காது, இதனால்தான் பனிகொட்டும் கேதர்நாத்திலும் மேலாடை இன்றி தவமிருப்பார்கள், எந்த வெயிலும் அவர்களை வாட்டவும் செய்யாது

இந்த இதமான நிலையினை அவர் எட்டிவிட்டார் என்பதை சொல்கின்றார், அதாவது எல்லா சூழலும் அவருக்கு இதமானதாகவே புரிகின்றது

அடுத்து சல்லாபம் எனும் மயக்கும் மொழிகள் அவருக்கு சாத்தியம் என்கின்றார், இது மந்திர பரிபாஷை எனும் வகையில் வரும், பிரபஞ்சத்தில் கலந்துவிட்ட அந்த ஞானிகளின் மொழிக்கு எல்லாமே மயங்கும், எல்லாமே கட்டுபடும்

உலகில் எதையுமே தன் கட்டுபாட்டில் கொண்டுவரும் சித்த நிலையினை, தன் மொழிக்கு சகலமும் கட்டுபடும் அந்த நிலையினை சல்லாப நிலை என்கின்றார்

அடுத்து வினோதமான நிலைகள் என்கின்றார், சித்தர்களின் செயலும் நிலையும் அவர்கள் அடைந்திருக்கும் ஞானமும் பலமுகம் கொண்டது, வினோதமான காரியங்களையும் ஞானத்தையும் காட்டவல்லது அதைத்தான் சொல்கின்றார்

இப்படி முருகன் அருளால் பெரும் யோகி நிலையினை எட்டியிருக்கும் அவர் தான் என்ன நிலையில் இருக்கின்றோம் என்பதையே சொல்லமுடியா அளவு தன்னை மறந்த பெரும் நிலையில் நிற்கின்றார், அதனை மிகுந்த களிப்புடன் சொல்கின்றார்

தன்னை மறத்தல் என்பது சுகங்களிலெல்லாம் பெரும் சுகம், உறக்கம் முதல் மது மாது தரும் போதை எல்லாமே அந்த தன்னை மறத்தல், தன் மனதின் கவலை வேதனை ஏக்கம் என எல்லாம் மறந்து களித்து கிடத்தல் என்பது ஒவ்வொரு மனமும் ஏங்கும் விஷயம்

சாதாரண போதை பொருள் கொடுக்கும் அந்த சிறிய நேர மகிழ்வை விட, பெண் கொடுக்கும் சில நொடி இன்பத்தை விட பல கோடி அல்லது ஒப்பிடமுடியா ஆனந்தம் கொடுப்பது யோக பெருநிலை

அந்த யோக பெருநிலை எனும் பேராந்த நிலையில், உள்ளமெல்லாம் ஒரு புள்ளியில் குவிந்து அதுவும் கரைந்த ஆனந்த நிலையின் உச்சியில் நின்று சொல்கின்றார் பட்டர்

மனமெல்லாம் மகிழ்ச்சி, உடலின் ஒவ்வொரு செல்லிலும் ஆனந்தம், ஆத்மா நிறைந்து மயங்கி கிடக்கும் களிப்பு, சொல்லமுடியா பரவசம், இதற்குமேல் இனி இல்லை எனும் அளவு நிறைவு, ஒரு அனுபூதியான நிலை

அந்த மாபெரும் பரவச நிலையில் பேச்சு வராது, தன்னை மறந்து தான் எங்கிருக்கின்றோம் எந்நிலையில் இருக்கின்றோம் என்பதையே சொல்லமுடியாது

யோகத்தின் உச்சியில் கண்கள் சொருகுவதும், பரவச நிலையில் நாக்கு வாய் உள்ளே மேலோடு ஒட்டிகொள்வதும் இயல்பு

அந்த ஞானபரவச நிலையினை விளக்குதல் என்பது யாராலும் முடியாது, அதுவும் அதனில் மூழ்கி பெரும் பரவசத்தில் இருப்பவர் அதனை தன்னால் சொல்லவே முடியாது

அரை ஸ்பூன் அளவு தேனை சுவைக்கும் மனிதனுக்கே அதன் பூரண சுவையினை சொல்லமுடியாது அல்லது இயலாது எனும் பொழுது இந்த அதிபரவச நிலையினை எப்படி சொல்லமுடியும்?

அதனால் சொல்லமுடியாமல் தவிக்கும் அருணகிரியார், இந்த ஞானபெருநிலையினை அடைய தான் எல்லாவற்றையும் துறந்ததையும் நினைவு கூறுகின்றார்

அதாவது கதவை திறக்காமல் வீட்டுக்குள் நுழையமுடியாது, நீர் நிறைந்திருக்கும் பாத்திரத்தில் தேனை ஊற்றமுடியாது, ஒரு விஷயம் நிரப்பபட அங்கு வெற்றிடம் அவசியம்

அப்படி தன் மனதின் அகங்காரம்,ஆசை, மாயை, ஏக்கம், ஆணவம், காமம் என எல்லாமும் துறந்த நிலையில் அப்படி துறந்து மனம் வெற்றிடமான நிலையில் முருகனின் அருள் வெள்ளமென வந்து இந்த பெருநிலையினையும் ஞானபரவசத்தையும் கொடுத்திருப்பதை சொல்கின்றார் பட்டர்

“எல்லாம் அற என்னை இழந்த நலம்” என்கின்றார்

எல்லா குணங்களையும் மனதின் சுபாவங்களையும் அறுத்து விட்டு, பற்றருத்து என்னையே நான் இழந்து அதாவது நான் எனும் அகங்காரம் ஒழிந்து, நான் எனும் மாயை ஒழிந்து இந்த பெரும் பக்குவத்தை பெற்று பேரின்ப நிலையினை பெற்றிருக்கின்றேனே என்கின்றார்

நான் எனும் உணர்வு, என் உடல் எனும் உணர்வு, இந்த உலகம் எனும் உணர்வு என எல்லாமும் கடந்த அதாவது வாக்கு, மனம் , காயம் என எல்லாம் கடந்த நிலைக்கு வந்து இந்நிலை பெற்றேனே முருகா என்பவர் தொடர்கின்றார்

“சொல்லாய் முருகா சுரபூ பதியே” என்கின்றார்

முருகா நான் என்னை துறந்து, என் மனதின் ஆசைகளை இழந்து என் ஆத்மாவினையே உன்னிடம் இழந்து அந்த ஆத்மா உன்னோடு கூடிய ஞான பெருநிலையில் இந்த பரவசத்தின் உச்சியில் நிற்கின்றேன் அல்லவா, அந்த ஞானபரவச நிலையினை என்னால் சொல்லமுடிவில்லை, முடியவும் முடியாது

இது மானிட உலகை உணர்வை தாண்டிய பெரும் மகிழ்ச்சியான நிலை என்பதால் தேவர்களுக்கு அதிபதியான முருகபெருமானே இதனை நீயே மற்றவர்க்கு சொல், நான் பெற்ற நிறைவினை சொல் என தன் யோக நிலையின் உச்சியில் மகிழ்வாய் நிறைவாய் தன் அனுபூதி நிலையினை புரியவைக்க முயல்கின்றார் அருணகிரியார்

இந்த உலகம் எனும் சிறிய கிண்ணம் தரமுடியா மகிழ்வை ஞானகடல் எனும் முருகபெருமான் தருவார், அது மிக பெரும் நீடித்த மகிழ்ச்சி, கவலையற்ற் பரவசம், எல்லாவற்றையும் கடந்ததும் எல்லாவற்றையும் கட்டுபடுத்துவதுமான் சித்த நிலை, எல்லா சுகங்களையும் துன்பங்களையும் கடந்த இதமானா பெருஞான நிலை, அது வினோதமானது, அது மயக்கமான மொழி கொண்ட பாஷை, அந்நிலை நம்பமுடியாத அதிசயங்களை செய்து அனுபவிக்கும் பெரும் உன்னத நிலை

அந்த நிலையின் உச்சத்தையும் அது கொடுக்கும் நிறைவினையும் மானிடரால் சொல்லமுடியாது, காரணம் மானிடர் சுவைத்தறியாத அனுபவித்தறியாத மகிழ்ச்சி அது, அதனை தேவர்க்கும் அதிபதியான முருகபெருமானேதான் சொல்லமுடியும் என்கின்றார் அருணகிரியார்

வாக்கு, மனம், காயம் எனும் மூன்றையும் கடந்து , நான் எனும் அகங்காரத்தையும் ஒழித்தால் இந்த ஞான நிலை கிட்டும் அனுபூதி நிலை கிட்டும் என்பதுதான் பாடலின் மறைமுக பொருள்

முருகபெருமான் கொடுக்கும் அனுபூதி நிலை எனும் முழு பக்குவ நிறைவு நிலையினை மனிதனால் கொடுக்கவும் முடியாது அதை சொல்லவும் முடியாது, அதை கொடுக்கவும் அந்நிலை விளக்கவும் முருகனாலே முடியும் என தன் பெற்ற பரவச‌ ஞானநிலையின் அனுபூதி எனும் முழு நிறைவு ஞான நிலையினை சொல்கின்றார் அருணகிரியார்