அபிராமி அந்தாதி : 61

அபிராமி அந்தாதி : 61

“நாயே னையும்இங் ஒருபொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந் தாய்என்ன பேறுபெற்றேன்
தாயே மலைமக ளேசெங்கண் மால்திருத் தங்கைச்சியே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும்

“நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய், நின்னை உள்ளவண்ணம்,
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால் திரு தங்கச்சியே”

அபிராமி பட்டர் மிக இழிவான மானிட‌ பிறவியான தனக்கும் அன்னை தேடி வந்து அருள்பாலிக்கும் கருணையினை எண்ணி இங்கு பாடுகின்றார்

“நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து” என தொடங்குகின்றார்

பொதுவாக ஞானியர் உண்மை உணர்ந்தோர் , தன் ஆத்மாவினையும் இயல்பையும் உணர்ந்தோர் இப்பிறப்பினை நாய்க்கு ஒப்பிடுவர்

எத்தனையோ விலங்குகள் இருந்தாலும் ஏன் நாயினை ஒப்பிடுகின்றார்கள், விசுவாசமிக்கது நன்றிமிக்கது என்றாலும் நாயினை மானிட பிறப்புக்கும் அதன் இழிவுக்கும் உதாரணமாக சொல்வதேன்?

இது ஆன்மாவினை குறிக்கும், சிந்தையினை குறிக்கும் இழிவு சொல் அன்றி வேறல்ல‌

நாய் தான் கக்கியதை தானே உண்ணும், எங்கு சுவையான உணவு கிடைத்தாலும் தன் மோப்ப சக்தியின் பலவீனத்தால் சென்று காத்து கிடக்கும், அந்த உணவு உண்ண எந்த அவமானம் வந்தாலும் சகிக்கும், அடி வாங்கினாலும் அந்த இடத்தை விட்டு செல்லாது, அவமானமெல்லாம் பாராது, பொறுமை சுத்தமாக இராது

அது எங்கும் திருப்தியும் அடையாது, அங்காடி தெருவின் நாய் அதற்கு உதாரணம், எதையோ தேடி அது ஓடிகொண்டேதான் இருக்கும், யார் வீடு என்றெல்லாம் பாராது அங்கு எது கிடைத்தாலும் ஆசையில் நுழையும்

அப்படிபட்ட பலகீனம் நாய்க்கு உண்டு, அந்த பலவீனமே அதன் இழிவாயிற்று

மானிட குணமும் அப்படியானதே, செய்த தவறை திரும்ப திரும்ப செய்யும், ஆசை வயபட்டால் அது மானம் அவமானம் பாராது, சுகங்களுக்காக அது காவல் இருக்கும், அவமானபட்டாலும் அது தன்னை உணராது, எதிலும் திருப்தி அடையாது, எதன் பின்னாலாவது ஓடிகொண்டே இருக்கும், ஆசை வயபட்ட வீழ்ச்சி அதனுடையது,நிதானம இல்லாதது

இப்படி அவமானம் பாராததும், திருப்தி அடையாததும், எப்பொழுதும் எதன் பின்னால் ஓடிகொண்டே இருப்பதுமான சுபாவம் கொண்ட மனதை ஞானியர் நாய் என்றார்கள், அத்தகைய ஆன்மாவினை கொண்டிருப்போரை நாயேன் என்றார்கள்

“நாயினும் இழிந்தவன்” என தன்னை சொல்வார் மாணிக்க வாசகர், “அங்காடி நாயே” என தன் மனதை பழிப்பார் பட்டினத்தார்

அவ்வகையில் தனக்கும் நாய் தன்மை போன்ற ஆத்மா இருப்பதாக கருதும் பட்டர் தன்னையும் நாயாக கருதி பாடுகின்றார்

உலகுக்கும் உலக உயிர்க்கும் தேவர்களுக்கும் அன்னை என உயர்ந்து நிற்கும் அந்த தேவி, நாயினும் கீழான அற்பனை தேடி வந்ததை, தன்னையும் ஒரு விஷயமாக கருதி வலிய வந்ததை எண்ணி வியந்து, இந்த நாயினையும் தேடி வந்த என் தாயே என உருகி வணங்கி அடுத்த வரி பாடுகின்றார்

“நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்” என்கின்றார்

இங்கு பட்டர் சொல்லும் வரி கவனிக்கதக்கது, அன்னையே நீயே வந்து என்னை ஆண்டுகொண்டாய் என்கின்றார்

அன்னை உலகுக்கே நிரந்தரமான அரசி, அவளிடம் ஆயிரமாயிரல் லட்சோப லட்சம் ஏவல் தெய்வங்கள் உண்டு எனினும் அவளே வந்து ஒரு நினைவுமின்றி பட்டரை ஆட்கொண்டாள் என்கின்றார்

நினைவின்றி என்பது பட்டர் ஞானியா, அறிவாளியா, பக்தியா, யோகியா, பாவியா, பக்திமானா, துஷ்டனா, தேவனா, அசுரனா, பூதமா, மனிதனா என எதுவும் நினைக்காமல் அவளே வந்து அவரை ஆட்கொண்டாளாம்

பெரும் நிலையில் இருக்கும் அன்னை எல்லா உலகையும் ஆளும் அன்னை, இவரின் தகுதி நிலை எது என்ற யோசனை கூட இல்லாமல் வந்து அவரை ஆட்கொண்டாளாம்

இப்படி நாயை போன்ற தன்னை அந்த மாபெரும் சக்திமிக்க அன்னை அவளே தேடிவந்து தகுதிபாராமல் ஆட்கொண்டாள் என உருகும் பட்டர் தொடர்கின்றார்

“நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய்”

பட்டர் இன்னும் ஆச்சரியபடுகின்றார், அன்னை ஏதோ பிச்சைக்காரனுக்கு உதவிவிட்டு அவசரமாய் செல்லும் பெரும் பணக்காரி போல் செல்லவில்லையாம்

பொதுவாக பிச்சையிடுபவர்கள் ஒருவனின் வறிய கோலத்தை கண்டு பிச்சையிடுவார்களே தவிர அவனிடம் தான் யார் தன் செல்வாக்கு என்ன? தன் பெருமை என்ன குடும்பம் என்ன என எல்லாமும் வெளிகாட்டமட்டார்கள் அது அவசியமும் அல்ல‌

ஆனால் அன்னை அப்படி அல்லவாம், தன்னை முழுக்க பட்டருக்கு வெளிபடுத்தினாள் என்பதில் இன்னும் ஆச்சரியமாகின்றார் பட்டர்

பட்டர் தன்னை முன்பு நாய் என சொல்லிகொண்டார் இப்பொழுது பேயன் என சொல்லி இன்னும் தாழ்த்துகின்றார்

பேய் என்றால் நிறைவேறாத ஆசை கொண்ட பயங்கரமான சக்தி, நன்மை இல்லாதது எனும் பொருளில் வரும், அதற்கு நன்மை செய்ய தெரியாது, நல்லதை புரிந்து கொள்ள தெரியாது, காட்டுமிராண்டி தனமான தன்ன்மை கொண்டது

சித்தன் பாரதி ” பேயாய் உழலும் சிறுமனமே” என்பார், மனம் ஒரு பேய் என்பது அவரின் வாக்கு

அப்படி காட்டுமனமும், நன்மை அறியாதவனுமான தன்னை, பேய் நிலையில் இருக்கும் பேயனான தனக்கும் அன்னை ஞானவடிவமான தன்னை வெளிபடுத்தியிருக்கின்றாள் என்பதை நினைத்து பூரிக்கின்றார்

பேய் போன்ற அறிவில்லா நிலையில் இருந்த எனக்கும் உன்னை அறியும் அறிவு தந்த தாயே என்கின்றார்

தன்னை பேய் என அடியார்கள் தாழ்த்துவது ஒன்றும் புதியதல்ல, தேவார பாடலில் அப்பர் சுவாமிகள் பாடுகின்றார், தான் சமணரில் இருந்தபொழுது பேயாக இருந்ததையும், பின் சிவனால் அறிவு அடைந்ததை பாடுகின்றார்

“எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
எனையாண்டு கொண்டிரங்கியேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே”

சமணராய் இருந்து நான் செய்த அறியாமை பாவத்தையெல்லாம் மன்னித்து இந்த நாயனை, பேயனை, பித்தனை உன்னை அறியும்படி அறிவு கொடுத்தாயே என அப்பர் சுவாமிகள் பாடும் மனநிலையில்தான் இங்கு பட்டரும் பாடுகின்றார்

அடுத்து “என்ன பேறு பெற்றேன் தாயே” என்கின்றார் பட்டர்,

இங்கு பட்டர் கொஞ்சம் நிதானமாக சிந்திக்கின்றார், இந்த அன்பு சாதாரணமானதா? மிக இழிவான தன்னை தேடிவரும் ஒரு அன்பு என்றால் அது தாயின் அன்பு போன்றது அல்லவா? அப்படித்தானே இருக்க முடியும்?

ஆம், அது தாயின் அன்புதான். அன்னை அகில உலகுக்கு தாய் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அன்னை , எல்லா உயிர்க்கும் அன்னை. ஒரு அன்னைக்கு எல்லா பிள்ளைகள் மேலும் சமமான அன்பிருப்பது போல அன்னை தான் தாழ்ந்தவனாயினும் தன்னையும் தேடி வந்திருக்கின்றாள், அவள் என் தாய், என் அன்பான தாய் என மகிழ்ந்து, இப்படி ஒரு தாயினைபெற நான் என்ன செய்துவிட்டேன் என மகிழ்கின்றார்

அன்னைக்கு “ஸ்ரீ மாதா” “அம்பிகை” “அம்பா” “ஆபிரம்ம கீட ஜனனி” என பல நாமங்கள் தாய்க்குரிய பெயரில் சூட்டபட்டிருப்பதை நினைந்து மகிழ்கின்றார்

தாய் என அன்னையினை அடையாளம் கண்ட பட்டர், இன்னும் மகிழ்ச்சியில் பாடுகின்றார்

“தாயே மலைமகளே செங்கண் மால் திரு தங்கச்சியே” என்கின்றார்

மலைமகள் என்றால் பார்வதி

மலையத்வஜ பாண்டியன் மகளாக, மதுரையில் மீனாக்ஷி அம்மன் அவதரித்தாள். பர்வத ராஜ குமாரி பார்வதி. இமயவானின் புதல்வி ஹைமவதி. ஹிமகிரி புத்ரி, ஹிமாத்ரி சுதே, ஹிமாச்சல தனயா என்றெல்லாம் அம்பாளை அழைப்பார்கள்.

அந்த பார்வதி அன்னையினை, மீனாட்சியாக வந்தவளை இன்னும் பல இடங்களில் தாயாக வந்தவளை எத்தனையோ பேருக்கு அன்னையாக இருந்து இப்பொழுது திருகடையூரிலும் அன்னையாக வீற்றிருப்பவளை மலைமகளாக வாழ்த்தி பாடுகின்றார் பட்டர்

இந்த வரிக்கு உயர்ந்த இடத்தில் இருப்பவளே, மலைபோல் உயர்ந்தவளே என்றும் பொருள் உண்டு

அடுத்து “செங்கண் மால் திரு தங்கச்சியே” என்கின்றார், உலகை அயராது காப்பதால் உறங்காது காப்பதால் திருமாலின் கண்கள் எப்பொழுதும் சிவந்திருக்குமாம், அந்த திருமாலின் சகோதரியே என பாடி மகிழ்கின்றார் பட்டர்

உலகை காக்கும் திருமாலின் சகோதரி, உயர்ந்த மலைமேல் இருந்து எல்லா உயிர்களையும் காத்து வழிநடத்தும் பெரும் சக்தியானவள், இந்த நாயினும் கீழான அடியேனை அவளே தேடிவந்து தன்னை முழுமையாக வெளிபடுத்தி தன்னை ஆட்கொண்டு, பேய் போன்ற அறிவுகெட்ட மனம் கொண்ட தனக்கும் அறிவும் ஞானமும் தந்தாள் என்றால் அவள் கருணை எத்தகையது என வியந்து பாடுகின்றார் பட்டர்

பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்

மானிட மனம் ஒரு அங்காடி நாய், அதனை அடக்குவதும் கட்டுபடுத்துவதும் சிரமம், அது செய்த தவறையே செய்யும் மானம் அவமானம் பாராது பலகீனத்தில் வீழும் , அந்த மனம் கூட அன்னையின் அருளால் மாறி நல்ல நிலை அடையும்

அன்னை கருணைமிக்கவள் தன் அடியாரின் உள்ளத்தில் தானே வந்து அமர்பவள், அவளால் பேய்தன்மை எனும் அரக்கதன்மை மனதில் ஒழியும் அது ஒழிந்த இடத்தில் அறிவும் ஞானமும் ஒளிரும், முக்தி வழி தெரியும்

அன்னை மலைமகள், திருமாலின் சகோதரி எனும் வகையில் படைத்து காத்து வரும் அன்னை அவளே, அந்த அன்னையின் பாதம் சரணடைந்தால் எல்லா சிக்கல்களில் இருந்தும் காவல் பெறலாம், லவுகீக வாழ்வு ஒரு சிக்கலானதாக அமையாது, நாய்போல் பேய்போல் அலையும் வாழ்வு அவளை அண்டி அவள் அருள்பெற்றால் மாறும், உண்மையும் நிம்மதியும் மனதில் ஞானமாக எழும்,பெரும் நிம்மதி சூழும் என்பது பாடலின் பொருள்