அபிராமி அந்தாதி 63
“தேறும் படிசில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றிற் கொட்டும் தறிகுறிக் கும்சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே”
இப்பாடலை புரிந்துகொள்ளுமுன் ஒரு பின்னணியினை நோக்க வேண்டும்
இந்துஸ்தானத்தில் எக்காலமும் சமய சச்சரவுகள் உண்டு, என் மதம் பெரிது என சொல்லும் கூட்டமும் அவர்களால் சில சர்ச்சைகளும் அடிக்கடி ஏற்படுவதும் உண்டு
எல்லா நதிகளும் கடலுக்கு செல்வது போல எல்லா மதங்களும் இறைவனை நோக்கி இழுத்து சென்றாலும் யார் பெரியவர் எனும் சர்ச்சை உண்டு
அது மும்மூர்த்திகளின் பக்தர்களிடம் உண்டு, சைவ வைணவர்கள் என அவர்களிடம் உண்டு, சிவம் பெரிதா சக்தி பெரிதா என உண்டு, இன்னும் பலவாறு உண்டு
அப்படி ஒரு காலத்தில் ஆறு மதங்கள் இருந்தன,
சூரிய வழிபாடு செய்யும் சொளமார மதம், முருகபெருமானை தலைவராக கொண்ட கௌமாரம், கணபதியினை தொழும் கணபதியம், சிவனை கொண்ட சைவம், திருமாலை முதன்மையாக கொண்ட வைணவம், அன்னையினை முதன்முதல் தெய்வமாக கொண்ட சாக்தம் என ஆறு உண்டு
இந்த ஆறு பிரிவினை ஒன்றாக்கி ஒரே சனாதான தர்மமாக மாற்றியவர் ஆதிசங்கரர்
ஆனாலும் அவ்வப்போது யார் பெரியவர் எனும் சர்ச்சை வந்து கொண்டே இருக்கும், ஒரு வகையில் இது பல நல்ல கருத்தும் ஆழமான வாதமும் வெளிவர காரணம் என்றாலும் பல இடங்களில் சர்ச்சையுமாகின
அப்படி ஒரு நிலையில்தான் பட்டர் இந்த பாடலை பாடுகின்றார், இனி பாடலை காணலாம்
(சமய வழி ஆறு என்றாலும் அவை அனைத்தின் மூலம் வேதம் என்பதும்,
“தேறும் படிசில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக் கூறும் பொருள்” என்பது முதல் வரி
இது “தேறும் படி சில ஏதுவும் காட்டி முன்செல் கதிக்குக் கூறும் பொருள்” என பிரிந்து பொருள்தரும்
“தேறும்படி” எனும் வார்த்தை கவனிக்கதக்கது
வாழ்வின் நிலையாமை உணர்ந்து, இறைவனை உணர்ந்து அந்த இறைவனை நோக்கி செல்லும் வழியினை தேர்ந்தெடுப்பது, சில உண்மைகளை தெளிந்து தேர்ந்து உணர்வது இங்கு தேறும் என்றாகின்றது
இறைவனை அடையும் வழியினை தேறும்படி, ஞானத்தில் தேடும்படி என்பது பொருள்
இந்த பல வகை சமயங்கள் இறைவனை அடையும் வழியினை தேர்ந்தெடுத்து தெளிவு கொடுப்பதாக அமைந்திருக்கின்றது, ஞான வாழ்வில் தேறும்படி வழிகாட்டுகின்றது
அப்படி ஞானத்தில் தேறும்படியான மார்க்கங்கள் இவை
அடுத்த வார்த்தை “சில ஏதும்” என்பது இங்கு அடுத்த வார்த்தை, ஏது என்பதன் பொருள் இங்கு காரணம் என்றாகின்றது, சில காரணங்கள் அல்லது பிரமாண நியதிகளை காட்டி தங்கள் வழி உயர்ந்தது என அவர்கள் வாதிடுவார்கள்
சில ஏடுகள், பிரமாணங்கள், காரணங்கள், நியதிகள் , சம்பவங்கள் ஆகியவற்றை கொண்டு தங்கள் மார்க்கம் உயர்ந்தது என வாதிடுவார்கள், அதை சொல்கின்றார் பட்டர்
அடுத்த வார்த்தை “முன் செல்கதிக்குக் கூறும் பொருள்” என்றாகும், முன்செல் கதி என்றால் முக்தி நோக்கி செல்லும் வழி
கதி என்றால் அடைக்கலம், கடைசியில் சரணாகதியாகும் நிலை ஆகிய பொருளில் வரும், “நற்கதி நீயே” என பரம்பொருளிடம் சரண்டைதல் மானிடர் இயல்பு, அந்த இறைவனை சரண்டையும் வழியினை சொல்லும் வழிகள் என பொருள்
ஆக ஞான பொருள் உரைத்து, நல்ல உண்மைகளை தெரிய வைத்து அதற்குரிய காரணங்களையும் சொல்லி முக்தி நோக்கி அழைத்து செல்லும் மார்க்கம் என பொருள் உரைக்கும் மார்க்கமெல்லாம், வாதாடும் வழிகளெல்லாம் என்பது முதல்வரியின் பொருள்
” குன்றிற் கொட்டும் தறிகுறிக் கும்” என்பது அடுத்த வரி
இங்கு தறி என்பது முளை அடித்தலை சொல்கின்றது, நிலத்தில் முனை கூர்மையான கட்டையினை வைத்து அடித்து இறக்கி அங்கு ஆடுமாடுகளை கட்டுவது பரண் அமைப்பது போன்றவற்றை செய்வார்கள்
அப்படி முளை அடிக்கும் செயலைத்தான் “தறி குறித்தல்” என்பார்கள், வீடு கட்டும்பொழுது முளை பிடித்தல் என்பது இதுதான்
அப்படி தரையில் கூரிய முனை உள்ள முளையினை அடித்தால் இறங்கும், மாறாக அதனை பாறையில் (குன்றினில்) அடித்தால் இறங்குமா? இறங்காது
அதுபோல சிலரிடம் என்ன சொன்னாலும் எடுபடாது அவர்கள் மனதில் நல்ல கருத்துக்கள் ஏறாது என்கின்றார் பட்டர்
நிலத்தில் முளை இறங்கும் ஆனால் பாறையில் இறங்காது, அப்படிபட்ட பாறைபோன்ற மனமுடையவரிடம் எதை சொன்னால் புரியாதாம் என்றால் “சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே” என்கின்றார் பட்டர்
அதாவது சமயங்கள் ஆறும் வேறு வேறு இல்லை, அதெல்லாம் ஒன்றே என்கின்றார், அதற்கு அன்னைதான் தலைவி, அது புரியாத மக்களிடம் என்ன சொன்னாலும் புரியாது என்கின்றார் பட்டர்
எப்படி ஆறுமதங்களுக்கும் அன்னை தலைவி , ஆறு மார்க்கமும் அவளுடையதே என்பதை சொல்கின்றார் என்றால் விஷயம் எளிது
சாக்தம் என்பது அன்னைகுரிய வழிபாடு, அன்னையினை முதல் தெய்வமாக சொல்லும் மதம், அவ்வகையில் அன்னை அங்கு தலைவியாய் இருக்கின்றாள்
முருகனுக்கும் விநாயகனுக்கும் அவளே தாய், அவ்வகையில் கௌமாரம் எனும் முருக வழிபாட்டு பிரிவுக்கும், கணபதியம் எனும் கணபதி வழிபாட்டுக்கும் அவளே மூலம், அவ்வகையில் அங்கும் அவள்தான் தலைவி
சிவனில் பாதி சக்தி, திருமாலின் தங்கையும் அவரை இயக்குபவளும் அன்னை எனும் வகையில் அங்கும் அன்னையே தலைவி
“கோவிந்த ரூபினி” எனும் பெயர் அன்னை திருமாலை இயக்குபவள் என்பதை சொல்கின்றது, ஆக அங்கும் அன்னை வழிபடபடுகின்றாள்
இனி இருப்பது சௌமாரம் எனும் சூரிய வழிபாடு, சூரியன் வழிபாடு என்பது அக்னி வழிபாட்டுக்கு ஈடானது, வேதங்களின் தொடக்கமும் முடிவும் அதை பாடுகின்றன, ஆதித்ய ஹிருதயம் போன்றவையெல்லாம் சூரிய வழிபாட்டை பெரிதாக போற்றுகின்றது, இன்னும் சூரியன் இல்லாமல் எதுவுமில்லை என்பதால் அதனையே முழு முதல் கடவுளாக போற்றும் மரபும் அதனில் இருந்தே அக்னி வழிபாடும் யாகமும் இன்னும் பலவும் வந்தது
ஆனால் அந்த சூரியனின் சக்தியாக இருப்பவள் அன்னை, “பானுமண்டல மத்தியஸ்தா” என அன்னையினை சஹஸ்கரநாமம் சொல்கின்றது அன்னை சூரியனின் நடுவில் இருந்து சக்தி கொடுப்பவாளாய் இருக்கின்றாள்
ஆக இப்படி ஆறு மதங்களிலும் அன்னையே பிரதானம் என்பது முழு உண்மையாக இருக்க அதை அறியாத மாந்தர்கள் தங்களுக்குள் வாதிடுவது வீணானது அல்லவா என்கின்றார் பட்டர்
ஆம், அன்னை எல்லாவற்றிலும் இருந்து எல்லாவற்றையும் கடந்து வீற்றிருக்கும் நிலையில் அவளே ஆறுமதத்திலும் ஒரே சக்தியாய் இருக்கும் நிலையில் அதை மறந்து தங்களுக்குள் வாதிடுவோரை நகைத்து இப்பாடலை பாடுகின்றார் பட்டர்
அன்னையே ஒரே தெய்வமாய் ஒரே வழியாய் நிற்கின்றவள், ஆறு பிரிவுகளும் அவளுள் அடக்கம் , அவளை வழிபட்டால் எல்லாம் அடங்கிவிடும் எனும் பட்டர் இங்கு சூட்சுமாய் ஒன்றை சொல்கின்றார்
அது அன்னைக்கு குரு ஸ்தானத்தை, ஞான ஆசிரிய ஸ்தானத்தை கொடுக்கின்றார் பட்டர்
ஒரு இடத்திற்கு வழி தெரியா நிலையில் நாமே தடுமாறி போராடி அடைவது என்பதற்கும் வழிதெரிந்தவரை கேட்பது என்பதற்கும் வித்தியாசம் உண்டு
நாமே அரும்பாடுபட்டு சில உண்மைகளை தேடி அடைவதற்கும், அதை தெரிந்தவரிடம் கேட்டால் நொடியில் அதை தெரிந்து கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு
அப்படி அன்னை எல்லாம் அறிந்தவள் எல்லா மார்க்கத்திலும் ஏடுகளிலும் வேதங்களிலும் பிரமாணங்களிலும் நிலைத்திருப்பவள், அவளை அண்டினால் ஞானமான வழியினை காட்டுவாள், நல் வழியில் நடத்தி முக்திக்கு சேர்ப்பாள் என்பது பாடலின் பொருள்
இதற்கு நிலத்தில் இறங்கும் முளையினை உதாரணமாக சொல்கின்றார், அது நெகிழ்ச்சியுள்ள மனதை அதாவது நல்லதை ஏற்றுகொள்ளும் மனதை குறிப்பது
அப்படி அடியார்களின் நல் மனதில் அன்னை ஆறு சமயங்களையும் ஒரே வடிவாக்கி எழுந்தருள்வாள்
அதை அறியாத வீணர்கள் மனம் பாறைக்கு சமம், அவர்களுக்கு எதுவும் புரியாது மாறாக தங்களுக்குள்ளே தாக்கி கொண்டு பொழுதினை வீணாக்குவார்கள் அவர்கள் அடையபோவது ஒன்றுமில்லை
இங்கு சூட்சுமமாக மறைமுகமாக இன்னொரு தத்துவமும் போதிக்கபடுகின்றது
உடலின் ஆறுசக்கரங்களும் ஆறு தெய்வங்களுக்குரியது என்பது சாஸ்திரம், மூலாதாரம் விநாயகருக்கு அதை அடுத்த சுவாதிஷ்டானம் விஷ்ணுவுக்கு என்பதும் அதனை அடுத்த நான்கு சக்கரங்களும் சிவன்,சதாசிவன், ருத்ர சிவன், மகேஸ்வரன் என்பவர்களுக்கு என்பதும் சாஸ்திரம்
இந்த நான்கு சிவ அம்சங்களுளின் முருகனும் சூரியனும் வருவார்கள், அந்த சாயல் வரும்
கடைசியில் ஆறு நிலை தாண்டிய துரிய சக்கரம் ஆயிரம் இதழ்கொண்ட தாமரையாகும் அங்கு அன்னை அமர்ந்திருப்பாள் என்பது சாஸ்திரம்
ஆக மூலாதாரத்தில் விநாயகனின் தாயாக அருள் புரியும் அன்னை, அடுத்த சக்கரத்தில் விஷ்ணுவுடன் அருள் புரியும் அன்னை, அந்த சக்தி மேல் எழ மேல் எழ , பின் அந்த சக்தி உச்சியில் இருக்கும் 7ம் சக்கரத்தில் வரும்பொழுது பெரும் ஞானநிலை கொடுக்கின்றாள் என்பது மறைமுகமாக விளக்கபடுகின்றது
அன்னை எல்லா சக்கரங்களிலும் இருக்கின்றாள், அவற்றின் சக்தியாகவும் இருக்கின்றா, உச்சந்தலையில் துரிய சக்கர சக்தியாக இருப்பவளும் அவளே
குண்டலினி எனும் உயிர்சக்தி அவளே, ஆறு சக்கரங்களின் ஆதாரமும் இயக்கமும் அவளே என்பது பட்டர் சொல்லும் ரகசிய மறைபொருள்
அன்னை ஷன் மார்க்கம் எனும் ஆறுமார்க்கத்திலும் இருக்கின்றாள், அவளே எல்லாவற்றிற்கும் ஆதாரமும் அதை இயக்கும் சக்தியுமாக இருக்கின்றாள், அன்னையினை சரணடைந்தவன் எல்லாம் அடைந்தவனாகின்றான், அவனுக்கு முக்தி வழி எளிதில் அன்னையால் காட்டபடும், அன்னை அவனுக்கு எல்லா ஞானமும் அறிவும் முக்தியும் தருவாள், அவளே சகலமும் அவளே எல்லாமும் அவளே பூரணமும், எல்லா மத பிரிவும் அவளில் அடக்கம் என பாடி முடிக்கின்றார் பட்டர்