தேவீ மாஹாத்ம்யம் 00 / 13 – முகவுரை

இந்து மரபில் நான்கு நவராத்திரிகள் உண்டு

ஆடி மாதம், புரட்டாசி, தை, பங்குனி என நான்கு மாதங்களில் அவை கொண்டாடபடும்

ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி, தமிழக அம்மன் கொடை விழாக்கள் இந்த சாயலே , இதன் பிரதான தெய்வம் வராஹி

தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி, சியாமளா நவராத்திரி, இங்கு சியாமளையே பிரதானம்

பங்குனி மாத அமாவாசைக்கு பின்வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி, இங்கு பிரதான தெய்வம் லலிதா

புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் ஷரத் நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி, இதன் பிரதான தெய்வம் மகாதிரிபுர சுந்தரி

இந்த மகாதிரிபுர சுந்தரியின் பண்டிகையினைத்தான் நாம் இப்பொது நவராத்திரி என தொடங்கியிருகின்றோம்

இந்த மகாதிரிபுரசுந்தரியின் வரலாறு பெரிது, அந்த மகாசக்தி திரிபுரம் எரித்த சிவனின் சக்தியாய் இருந்தாள், அவளாலே திரிபுரம் வீழ்ந்தது

திரிபுரம் எரித்த கதை எல்லோரும் அறிந்தது

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என மூன்று அரக்கர்கள் பிரம்மனிடம் வரம் வாங்கி பறக்கும் கோட்ட்டைகளை இரும்பு, வெள்ளி, தங்கம் என உலோகத்தால் அமைத்து அவை மூன்றும் கூடும் போது ஒரே ஒரு கனையால் மட்டும் அழியும் வரம் வாங்கியிருந்தார்கள்

அந்த வரத்தால் அவர்கள் ஆடாத ஆட்டம் ஆடும்போது சிவன் தலமையில் தேவலோகம் போருக்கு சென்றது, அப்போது சிவன் ஆயுதம் ஏந்தி அதை செலுத்தாமல் ஒரு புன்னகை ஒன்றே புரிந்தார் அதில் முப்புரம் எரிந்தது, அந்த புன்னகையின் சக்தியாய் நின்றவள் தேவி

அந்த திரிபுரசுந்தரியின் பெருமையினை சொல்லும் நூல்தான் “ஸ்ரீதேவீ மாஹாத்மியம்”.

எப்படி பகவத்கீதை 700 ஸ்லோகங்களுடன் மகாபாரதத்தின் நடுநாயகமாக விளங்குகிறதோ அப்படி ஸ்ரீதேவி மாஹாத்மியம் மார்கண்டேய புராணத்தில் நடுநாயகமாக விளங்குகிறது. இது வியாசர் அருளிய‌ மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்) வருகிறது.

சுரதன் என்ற அரசனும் சமாதி என்ற வைஸ்யனும் காட்டுக்கு விரட்ட பட்டவர்கள். அவர்களுக்கு சுமேதன் என்ற முனிவர் அம்பாளின் மஹிமையை எடுத்துரைக்கும் விதமாக துர்கா சப்தசதி தொடங்குகிறது.

சப்தம் என்றால் ஏழு, சதம் அல்லது சதீ என்றால் நூறு, அக எழுநூறு ஸ்லோகங்களை கொண்டதால் இது சப்த்சதீ என்றாயிற்று

இங்கேதான் சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதால் இதை சண்டீ எனவும், 700 ஸ்லோகங்களோடு விளங்குவதால் இதை ஸப்தஸதீ என்றும் அழைப்பார்கள்.

சண்டி ஹோமத்தில் சொல்லபடும் ஸ்லோகங்களெல்லாம் இந்த மஹாத்மிய ஸ்லோகங்களின் வரிகளே

தேவி உபாசனைக்கு உரிய அனைத்து நூல்களிலும் இதுதான் சிறந்தது . பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் பிரதம சரிதம், மத்தியம சரிதம் மற்றும் உத்தம சரிதம் என மூன்று பாகங்களாக உள்ளது.

திரி என்றால் மூன்று என பொருள். அன்னை முப்புரத்தை எரித்தவள் மூன்று வடிவங்களை கொண்டவள் என்பதால் இந்த நூலும் மூன்று பகுதிகளாக பிரிக்கபட்டிருக்கின்றன‌

முதல் பாகம் இரண்டு அசுரர்களான மதுகைடபர் வதத்துடன் முடிவடைகின்றது.

அடுத்த பாகம் மகிஷாசூரன் வதைபடலத்தை சொல்கின்றது.

மூன்றாவது பாகம் இதர அரர்களான நிம்ப சும்பன், ரத்தபீஜன் என பலரின் கதையினை சொல்கின்றது.

மொத்தத்தில் முப்பெரும் தேவியர் எப்படி உருவானார்கள், என்னென்ன மகத்தான காரியங்களை செய்தார்கள், அவர்கள் பெருமை என்ன? அவர்களை வழிபட்டால் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை சொல்லும் நூல் இது

இந்த நூல் அமைப்பானது, சுரதன் என்ற அரசனும் சமாதி என்ற வைஸ்யனும் காட்டுக்கு விரட்ட பட்டவர்கள். அவர்களுக்கு சுமேதன் என்ற முனிவர் அம்பாளின் பெருமையினை போதிப்பதாக அமைந்துள்ளது

சுரத‌னும், சமாதியும் நிம்மதி தேடி அமைதி தேடி காட்டில் அலைந்தவர்கள், வாழ்வில் பலவற்றை தொலைத்து பராரியானவர்கள், ஏமாற்றம் ஒன்றையே பெற்று அதனால் நிலைகுலைந்து அமைதி தேடி அலைபவர்கள்

அவர்களை சந்திக்கும் சுமேத முனிவர், அம்பாளின் பெருமைகளை கேட்டால் இழந்ததெல்லாம் கைகூடும், தேடுவது எல்லாம் கிடைக்கும், மோட்சபாக்கியமும் கிட்டும் என சொல்லி போதிக்கின்றார்

அன்னையின் பெருமைகளை எல்லாம் எடுத்து சொல்கின்றார்

அன்னையின் பெருமையினை கேட்டு மனதில் பதித்து தியானிக்கும் இருவரும் நற்கதி அடைகின்றனர், அந்த சுரதன் மனு எனும் பெரும் நிலையினை அடைந்து பல்லலாயிரம் ஆண்டுகள் உலகத்தை ஆளும் வரம் பெறுகின்றான்

சாதாரண அரசனாக இருந்து அதையும் தொலைத்தவன் அன்னையின் பெருமையினை கேட்டதால் உலகுக்கே அதிபதியாகின்றான்

வைசியனாக இருந்த சமாதி ஞானம் பெற்று மோட்ச நிலையினையே அடைகின்றான்

இது கதையாக சொல்லபட்டாலும் மானிட ஆத்மா அன்னையின் புகழை, அவள் பெருமையினை, அவள் மகாத்மியத்தை கேட்டு தியானித்தால் அது தெய்வ நிலையினை எட்டும் என்பதை சொல்லும் தத்துவ போதனை

எல்லா ஆத்மாவும் பரமாத்மாவில் திளைத்திருக்கின்றன, தெய்வீக சக்தி கொண்டதாய் இருக்கின்றன, பின் ஏதோ காரணத்தால் தெய்வ தன்மை நீங்கி அவை மானிட ஆத்மாவாய் பூமிக்கு வந்து சதா நிம்மதி தேடி அலைகின்றன‌

பூமியில் உள்ள எந்த விஷயமும் ஆன்மாவுக்கு நிம்மதி தராது, அது மேலும் மேலும் நிம்மதி இழக்கவைக்கும் எதன் பின்னாலாவது ஓடவைக்குமே தவிர நிம்மதி கொடுக்காது

பொன், பொருள், உறவு, சொத்து, உடல்நலம் என மானிடன் தேடிகொண்டிருக்கும் எதுவும் அந்த ஆத்மாவுக்கு நிம்மதி தராது

முழு நிம்மதி அம்பிகையின் பெருமையினை கேட்பதிலும் அவள் புகழ்பாடுவதிலும் அவளை தியானிப்பதிலும் அவளை மனமார வழிபடுவதிலும் கிடைக்கின்றது என்பதே “தேவி மஹாத்மியம்” எனும் நூலின் தாத்பரிய போதனை

இதுதான் இன்று நாம் காணும் எல்லா அம்பிகை கதைக்கும் அடிப்படை, மஹாமாயீ என கொண்டாபடும் அந்த அன்னையின் பெருமைகளை சொல்லும் நூல்

துர்கா, லட்சுமி, சரஸ்வதி என வருபவளும் அந்த மஹாமாயீ என்பவளே , கிராமங்களில் “மகமாயி” என அழைக்கபடுபவளும் அவளே

எல்லா சக்தியாகவும் இருப்பவளும் அவளே, அவளை தொழுதால் ஒரு ஆத்மா தான் இழந்ததை எல்லாம் பெறும், அதன் தெய்வ தன்மை மீளும்

லவுகீகம் ஆன்மீகம் என இருபக்கமும் அந்த வழிபாடு பெரும் உச்சம் கொடுக்கும்

அந்த “தேவி மகாத்மியம்” எனும் அற்புதமான நூல், இந்த நவராத்திரி காலத்தில் பொருத்தமானது, அது மிகபெரியது என்பதால் அதன் முக்கிய பகுதிகளை மட்டும் இங்கே அவ்வப்போது பார்க்கலாம்