தேவி மஹாத்மியம் : 04 / 13 – மஹிஷாசுர வதம்

// தேவி மஹாத்மியத்தின் நான்காம் அத்தியாயம் அதாவது மகிஷாசூர வதத்தை படிப்போரின் குடும்ப வினை தீரும், ஜென்ம சாபம் தீரும், பித்ரு சாபம், கடன் தொல்லை, தீரா பரம்பரை சிக்கல் எல்லாம் தீரும், எதிரிகள் அழிவார்கள் என்பது நம்பிக்கை

நவராத்திரியின் ஐந்தாம் நாளில் இதனை படிக்கலாம், நிச்சயம் பலன் உண்டு //

அன்னை துதியினை முதலில் சொல்ல வேண்டும், அதனை சொல்லி அவளை வணங்க வேண்டும்

“ஓம்,ஆயிரம் கோடி உதயசூரிய செங்கிரணங்களின் ஒளியால் ஜொலிப்பவளும், தாமரை மேல் அமர்ந்தவளும், அழகிய மாலையாக காட்சிதரும் கேசங்களை உடையவளும், மார்பகத்தில் சிவந்த சந்தன பூச்சுடன் இருப்பவளும், தாமரை போன்ற கரங்களில் ஜபமாலையும், புத்தகமும், அபய வரத முத்திரையுடன் ப்ரகாசிப்பவளும், தாமரை போன்ற அழகிய முகத்தில் முக்கண்களுடன் பிறை சந்திரனுடன் கூடிய ரத்தினங்கள் பதித்த மகுடத்தை தரித்தவளுமான என் தாயை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்”

மகிஷாசுர வதம் தொடர்கின்றது

அந்த மஹாசுரனின் சேனாதிபதியாக இருந்த சிக்ஷுரன் அந்த அசுர சேனையின் அழிவைக் கண்டு கோபமூண்டு அம்பிகையை எதிர்த்துப் போர்புரிய முற்பட்டான்.

மேருமலையின் மீது மேகமானது மழைபொழிவது போல் அவ்வசுரன் அப்போரில் தேவியின் மேல் சரமாரி பெய்தான்.

அவனுடைய அம்புக்கூட்டங்களை விளையாட்டாக வெட்டித் தள்ளிவிட்டு தேவியானவள் அவனுடைய குதிரைகளையும், குதிரைகளை ஓட்டுபவனையும் பாணங்களால் கொன்று வீழ்த்தினாள்.

உடனே அவனுடைய வில்லையும் உயர்ந்து நின்ற கொடியையும் வெட்டினாள். வில்லையிழந்த அவன் உடலை, விரைந்து பாணங்களால் துளைத்தாள்.

வில்லொடிந்து, தேரிழந்து, குதிரையிழந்து, சாரதியும் இறந்து நின்ற அவ்வசுரன் வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு அந்த தேவியை எதிர்த்துப் பாய்ந்தான்.

அந்த சிக்ஷுரன் என்ற அசுரன் தனது கூரிய வாளால் சிங்கத்தை தலையில் தாக்கிவிட்டு மிகுந்த வேகத்துடன் அவன் தேவியையும் இடது கரத்தில் அடித்தான்.

அவளுடைய புஜத்தில் பட்டதும் அவ்வாள் பொடியாயிற்று. கோபத்தால் கண்சிவந்து அவ்வசுரன் அப்பொழுது சூலத்தை எடுத்துக்கொண்டான்.

அடுத்து சிக்ஷுரன் பத்திரகாளியை நோக்கி ஒளியால் ஜ்வலித்துக்கொண்டு ஆகாயத்திலிருந்த சூரிய பிம்பமே பாய்ந்தாற்போல் தோன்றுமாறு அதை எய்தினான்.

பாயும் அச்சூலத்தை நோக்கித் தேவியானவள் தனது சூலத்தை விடுத்தாள். அசுரனுடைய அச்சூலம் அதனால் நூறு சுக்கலாகி சிதறியது. அந்த அசுரனான சிக்ஷுரனும் நூற்றுக்கணக்காக சிதறினான்.

மஹிஷாசுரனுடைய சேனாதிபதியும் மகாவீரியம் பொருந்தியவனுமான அவன் மடிந்ததும் தேவர்களைத் துன்புறுத்தும் சாமரன் எனும் அசுரன் பெரிய‌ யானைமேல் ஆரோகணித்து வந்தான்.

அவன் தேவியின் மேல் சக்தியை விடுத்தான். அதை அம்பிகை விரைவில் ஹுங்காரத்தால் வீரியமற்றதாக்கித் தரையில் வீழ்த்தினாள்.

சக்தி ஒடிந்து வீழ்ந்ததைக்கண்டு கோபமூண்டு சாமரன் சூலத்தை எறிந்தான். அவள் பாணங்களால் அதை வெட்டினாள்.

பின்னர் சிங்கமானது யானையின் மஸ்தகத்தின் மேலேறி வீற்றுக்கொண்டு அந்த தேவசத்துருவுடன் உக்கிரமான கைப்போர் செய்தது.

அங்ஙனம் போர்புரிந்து கொண்டே யானை மீதிருந்து இருவரும் தரைக்கு வந்து இன்னும் அதிகமான ஆவேசத்துடன் கடுமையாய்த் தாக்கிக்கொண்டு யுத்தம் செய்தனர்.

பின்னர் ஆகாயத்தில் கிளம்பிக் கீழே குதித்தபோது சிங்கத்தின் அறையால் சாமரனுடைய தலை துண்டிக்கப் பட்டது.

அப்போது கடும் கொபத்துடன் வந்தான் உதக்ரன் எனும் அசுரன்

மரங்களைக் கொண்டும் கற்களைக்கொண்டு அவனை அழித்தாள் தேவி, மரத்தை பிடுங்கி அவனை அவள் அடித்ததிலே அவன் ஒழிந்தான்

காராளன் எனும் இன்னொரு அசுரன் அன்னையினை நோக்கி பாய்ந்து வந்தான், அவனை தன் வாளின் அடிப்பாகத்தில் இருக்கும் தந்தபிடியால் அடித்து ஒழித்தாள் அன்னை

அவன் வீழ்ந்ததும் உத்தகனும்,பாஷ்லனும் அதி வேகமாக வந்தார்கள். தாமிரன் அவர்கள் பின்னால் வந்தான், அந்தகன் ஆக்ரோஷமாய் வந்தான்

தேவியானவள் கோபித்து உத்ததனைக் கதையாலடித்துப் பொடியாக்கினாள்; பாஷ்கலனை பிந்திபாலத்தாலும், தாமிரனையும், அந்தகனையும் அம்புகளாலும் கொன்றாள்.

அவர்கள் அழிந்தபின் சேனாதிபதிகளான உக்ராஸ்யன், உக்ரவீர்யன், மஹாஹனு என மூவர் வந்தார்கள், அவர்களை தன் திரிசூலத்தின் மூன்று முனைகளால் வதைத்தாள் தேவி

அவர்களுக்கு பின்னும் பிடாலன், துர்த்தரன், துர்முகன் என சக்திவாய்ந்த அசுரர்கள் வந்தார்கள்

கத்தியால் பிடாலனுடைய தலையை உடலினின்று வீழ்த்தினாள். துர்த்தரனையும், துர்முகனையும் அம்புகளால் யமாலயத்திற்கனுப்பினாள்.

தனது சேனை இவ்வாறு நாசமடையக்கண்டு மஹிஷாசுரன் எருமை உருவில் வந்து தேவியின் கணங்களைப் பயமுறுத்தினான்.

முகவாய்க் கட்டையால் தாக்கிச் சிலரையும், குளம்பால் மிதித்துப் பிறரையும், வாலால் அடித்தும் கொம்பால் கிழித்தும் மற்றவர்களையும், இன்னும் சிலரை வேகத்தாலும், சப்தத்தாலும், சுழற்சியாலும், மூச்சுக் காற்றாலும் பூமியில் வீழ்த்தினான்.

மஹாதேவியின் பிரமத கணங்களை வீழ்த்திவிட்டு அவ்வசுரன் சிங்கத்தைக் கொல்வதற்காகப் பாய்ந்தான். அப்போது அம்பிகை கோபங்கொண்டாள்.

மகாவீரியம் பொருந்திய அசுரனும் பூமியைக் குளம்பால் பிளப்பவனாகவும், கொம்புகளால் உயர்ந்த மலைகளைத் தூக்கி யெறிபவனாகவும் கோபத்துடன் கர்ஜித்தான்.

அவனுடைய வேகமான சுழற்சியால் மிதிபட்ட பூமி பொடியாயிற்று; வாலால் அடிக்கப்பட்ட கடல் எங்கும் கரைபுரண்டது.

அவன் கொம்பால் இடிபட்ட மேகங்கள் சிதறடிக்கப் பட்டன. மூச்சுக்காற்றால் தள்ளப்பட்டு மலைகள் வானவெளியில் பறந்தன.

இவ்வாறு கோபாவேசத்துடன் தன்மேல் பாயும் மகாசுரனைக்கண்டு சண்டிகாதேவி அவனைக் கொல்வதற்குக் கோபங்கொண்டாள்.

அவ்வசுரன்மேல் பாசத்தைவீசி அவனைக் கட்டினாள். கடும்போரில் கட்டுண்ட அவன் எருமை வடிவை இழந்தான்.

அப்போதே சிங்க வடிவுகொண்டான். அம்பிகை அவன் தலையை வெட்டியபோது அவன் வாளேந்திய புருஷ வடிவில் காணப்பட்டான்.

உடனே தேவி தனது அம்புகளால் அப்புருஷனை அவன் வாளுடனும் கவசத்துடனும் சேதித்தாள். அப்போது அவன் பெரிய யானையானான்.

யானை வடிவில் அவன் தனது துதிக்கையால் தேவியின் பெருமைமிக்க சிங்கத்தைப் பிடித்திழுத்து கர்ஜித்தான். இழுக்கும்போது தேவியானவள் துதிக்கையை வாளால் துண்டித்தாள்.

பின்னர் அக்கொடிய அசுரன் மீண்டும் எருமையுருக்கொண்டு சராசரங்களுடன் மூவுலகையும் நடுங்கச்செய்தான்.

ஜெகன்மாதா கொஞ்சமும் அசராமல் அட்டகாசமாய் சிரித்தாள்

அவ்வசுரனும் பலத்தாலும் வீரியத்தாலும் கொழுப்புடன் கர்ஜித்தான். கொம்புகளால் மலைகளைத் தூக்கிச் சண்டிகையின் மேல் எய்தினான்.

அவளும் அவனால் எறியப்பட்டவற்றைத் தனது அம்புகளைப் பொழிந்து பொடியாக்கினாள். யுத்த ஆவேசத்தில் அவனை நோக்கிக் கூறலானாள்.

“மூடனே, கடைசியாக நீ கர்ஜிப்பாய், கர்ஜிப்பாய். என்னால் நீ கொல்லப்பட்ட பின் இங்கேயே தேவதைகள் கர்ஜிக்கப் போகின்றார்கள்.

இங்ஙனம் கூறிவிட்டு, அவள் அக்கொடிய அசுரன்மேல் பாய்ந்து அவனை வீழ்த்தி அவன் கழுத்தில் காலால் மிதித்து நின்று கொண்டு சூலத்தால் அவனைத் தாக்கினாள்.

காலின் கீழொடுக்கப்பட்ட அவனும் அப்போது தன் சுய எருமை உருவுடன் தன் வாயினின்று வெளிவர முயன்றான். எனினும் தேவியின் வீரியத்தால் ஒடுக்கப்பட்டு அரைவாசிதான் வெளிவர முடிந்தது.

அரைவாசி தான் வெளிவந்தவனாயினும்கூடப் போரை நிகழ்த்திய அம்மகாசுரன் தேவியின் வாளால் தலை வெட்டுண்டு வீழ்த்தப்பட்டான்.

அதன் மேல் ஐயோ! ஐயோ! என்று அலறிக் கொண்டு அசுரச்சேனை யெல்லாம் மடிந்தது. தேவகணங்க ளெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை யடைந்தார்கள்.

தேவர்கள் தேவலோகத்து மகரிஷிகளுடன் தேவியைத் துதித்தார்கள். கந்தர்வபதிகள் பாடினார்கள். அப்ஸர கணங்கள் ஆடினார்கள்”