தேவி மஹாமித்யம் : 06 / 13 – தேவீ தூத ஸம்வாதம் (தூதனுடன் உரையாடல்)

“மஹாஸரஸ்வதீ தியானம்”

மணி, சூலம், கலப்பை, சங்கம், உலக்கை, சக்கரம், வில் அம்பு ஆகியவற்றைத் தனது தாமரைக் கைகளில் தரிப்பவளும், மேகத்திடை விளங்கும் குளிர்ந்த சந்திரனைப் போன்ற பிரபையுடன் பிரகாசிப்பவளும், கௌரியின் தேகத்திலுதித்தவளும், மூவுலகிற்கும் ஆதாரமாகியவளும், அபூர்வ வடிவினளும், சும்பன் முதலிய அசுரர்களை நாசஞ் செய்தவளும் ஆகிய மஹா ஸரஸ்வதியைத் தியானிக்கின்றேன்.

முன்னொருகால் சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களால் இந்திரனுடைய மூவுலக ஆட்சியும் யஜ்ஞபாகங்களும் பலத்தாலும் கொழுப்பாலும் அபகரிக்கப்பட்டன.

சூரியன், சந்திரன், குபேரன், யமன், வருணன் முதலியோருடைய அதிகாரங்களை அவ்விருவரே செலுத்தலாயினர்.

வாயுவினுடைய அதிகாரத்தையும் அக்கினியின் தொழிலையும் அவ்விருவரே நடத்தலாயினர். தோல்வியுற்று இராஜ்யத்தையிழந்து நின்ற தேவர்கள் துரத்தப்பட்டனர்.

கொடிய அசுரர்களால் அங்ஙனம் அதிகாரம் அபகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட தேவர்கள் எல்லோரும் எவராலும் வெல்ல முடியாத அந்த தேவியை நினைத்தனர்.

ஆபத்தில் நினைக்கப்பட்டால் உங்களுடைய பெரிய ஆபத்துக்களையும் அக்கணமே போக்குவேன் என்று அவளால் நமக்கு வரமளிக்கப்பட்டுளது என உள்ளத்தில் கொண்டு தேவர்கள் மலையரசாகிய இமயத்தையடைந்து அங்கு விஷ்ணுமாயையாகிய தேவியை நன்கு துதித்தனர்.

எல்லா தேவர்களும் ஒன்று கூடி ஒரே குரலில் துதித்து வணங்கி அவளிடம் சரணடைந்து பாடினார்கள்

“தேவிக்கு நமஸ்காரம்; மஹாதேவிக்கு நமஸ்காரம். சுப வடிவினளுக்கு என்றென்றும் நமஸ்காரம், பிரகிருதிக்கு நமஸ்காரம். அந்த மங்கள ஸ்வருபிணியை நாங்கள் வணக்க ஒடுக்கத்துடன் வழிபடுகிறோம்.

பயங்கர வடிவினளாகிய அவளுக்கு நமஸ்காரம். நித்தியமானவளுக்கு நமஸ்காரம். கௌரியும் உலகைத் தாங்குபவளுமாகிய அவளுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். ஒளி வடிவினளும், சந்திரபிரபை போன்றவளும், இன்பவடிவினளுமாகியவளுக்கு என்றென்றும் நமஸ்காரம்.

சரணடைந்தோர்க்கு எல்லா நலன்களும் தானே ஆகியவளுக்கும், வளர்ச்சியும் வெற்றியும் ஆகியவளுக்கும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம். அரசர்க்கு அலக்ஷ்மியும் லக்ஷ்மியும் ஆகும் சிவபத்தினிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

கஷ்டங்களைக் கடத்துவிக்கும் துர்க்கையாகவும் அனைத்தின் ஸாரமாகவும், அனைத்தையும் ஆக்குபவளாகவும், கியாதி வடிவினளாகவும், கரிய வடிவினளாகவும், புகை வடிவினளாகவும் உள்ளவளுக்கும் என்றென்றும் நமஸ்காரம்.

இனிய வடிவினளாகவும் பயங்கர வடிவினளாகவும் உள்ள அவளுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். ஜகத்தின் ஆதாரமாயும் இயக்கமாயும் உள்ள தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி விஷ்ணுமாயை எனக் கூறப்பட்டுள்ளாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி சைதன்ய வடிவினள் எனக் கூறப்பட்டுள்ளாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி புத்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி நித்திரை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி பசி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி பிரதிபிம்ப வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி சக்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸகாரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி வேட்கை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி பொறுமை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி ஜாதி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி வெட்க வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி சாந்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி ச்ரத்தை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி காந்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி செல்வ வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி ஜீவனோபாய வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி ஞாபக வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம் நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி தயை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி திருப்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி தாய் வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி மாயை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி இந்திரியங்களை `ஆள்பவளாய் எங்கும் எல்லாப் பொருள்களிடத்தும் வியாபித்து நிற்கின்றாளோ அந்த தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

இவ்வுலகனைத்திலும் எவள் சைதன்ய வடிவில் வியாபித்து நிற்கின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

பூர்வத்தில் தங்கள் மனோரதம் பூர்த்தியாவதற்காக தேவர்களால் துதிக்கப்பட்டவளும் அங்ஙனமே நாள் தோறும் தேவேந்திரனால் சேவிக்கப்பட்டவளுமான அந்த ஈசுவரி நமக்கு சுபகாரணத்தையும் சுபகாரியத்தையும் நற்பயனையும் கூட்டுவிப்பவளாகவும் ஆபத்துக்களைப் போக்குவிப்பவளாகவும் ஆகவேண்டும்.

இப்போது கையோங்கிய அசுரர்களால் பீடிக்கப் பெற்ற தேவர்களாகிய நம்மால் எவள் வணங்கப்படுகின்றாளோ, எவளை பக்தியால் வணங்கிய தேகத்துடன் நினைத்த மாத்திரத்தில் அக்கணமே நம்முடைய எல்லா ஆபத்துக்களையும் போக்குவாளோ அவளே நம்மையாளும் ஈசுவரி.”

இங்ஙனம் துதி முதலிய பணிகளில் தேவர்கள் ஈடுபட்டிருக்கையில் அங்கு கங்கையில் நீராடப் பார்வதீ தேவீ வந்தாள்.

வளைந்த புருவங்களுடன் அழகிகுடன் விளங்கும் அவள் தேவர்களை நோக்கி ‘இங்கு யாரைத் துதிக்கின்றீர்கள்?” எனக் கேட்டாள். அப்போது அவளுடைய சரீர கோசத்தினின்று ஒரு மங்கள வடிவினள் வெளிப்போந்து பதிலளித்தாள்.

“யுத்தத்தில் சும்பனால் ஒடுக்கப்பட்டும் நிசும்பனால் ஜயிக்கப்பட்டும் இங்கு வந்து கூடியிருக்கும் தேவர்களால் இந்த ஸ்துதி என்னைக் குறித்துச் செய்யப்படுகிறது”

பார்வதியின் சரீர கோசத்தினின்று தோன்றியதால் அவ்வம்பிகை எல்லா உலகங்களிலும் கௌசிகீ எனப் போற்றப் படுகின்றாள்.

அவள் வெளியில் போந்தபின்னர் ஹிமாசலவாஸினியான அப்பார்வதியும் கரிய வடிவினளாகிக் காளிகை எனப் போற்றப்படுபவளானாள்.

மனதைக் கவரும் சிறந்த வடிவு தாங்கிய அம்பிகையை (கௌசிகீ தேவியை) சும்ப நிசும்பர்களின் பணியாட்களாகிய சண்டனும் முண்டனும் காணப்பெற்றனர்.

அவர்களால் சும்பனிடம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது. “அரசர் பெருமானே ! ஒரு ஸ்திரீ இருக்கின்றாள். இமயமலையையே பிரகாசிப்பிக்கின்றாள். அளவு கடந்த அழகுடையவள்.

“அசுரர் பெருமானே! அது போன்ற உத்தமமான வடிவம் எவராலும் எங்கும் காணப்பட்டதில்லை. அந்த தேவி யாரென்று தங்களால் அறியப்பட வேண்டும். அடையப் படவும் வேண்டும்.

அசுரர்களின் அரசே! அவள் ஸ்திரீ ரத்னம். அழகிற் சிறந்த அங்கங்கள் படைத்தவள். தனது தேஜஸினால் திசைகளைப் பிரகாசிப்பித்துக்கொண்டு நிற்கின்றாள். தாங்கள் அவளைக் காண முழுதகுதியானவர்

மூவுலகிலும் யானை குதிரை முதலியவைகளோ, வயிரம் முதலிய விலை உயர்ந்த கற்களோ அந்தந்த வகையில் இரத்தினம் எனக் கருதப்படுபவை எவையோ அவையெல்லாம் தற்போது தங்கள் கிருகத்தில் பிரகாசிக்கின்றன.

இந்திரனிடமிருந்து கஜரத்தினமான ஐராவதம் உச்சைசிரவஸ் எனும் குதிரையும், அவ்வாறே இந்த பாரிஜாத விருட்சம் கொண்டுவரப் பட்டது.

இங்கு உமது முற்றத்தில் ஹம்ஸத்துடன் கூடிய இவ்விமானம் விளங்குகின்றது. அற்புதமான இது முன் பிரம்மாவிடமிருந்து ரத்னமானது பற்றி இங்கு கொண்டுவரப் பட்டது.

“மஹாபத்மம் எனும் இந்த நிதி குபேரனிடமிருந்து கொண்டு வரப்பட்டது. சிஞ்ஜல்கிஸீ என்னும் வாடாத தாமரை மாலையை ஸமுத்திரராஜன் தங்களுக்குக் கொடுத்தான்.

பொன்னொளி வீசும் வருணனுடைய குடை உமது கிருகத்தில் இருக்கின்றது. அவ்வாறே முன் பிரஜாபதியினிடம் எந்தச் சிறந்த தேர் இருந்ததோ அதுவும் இருக்கின்றது.

பிரபுவே! ‘உத்கிராந்திதா’ எனப் பிரசித்தி பெற்ற யமனுடைய சத்தி ஆயுதம் உம்மால் கொண்டுவரப்பட்டது. வருண ராஜனுடைய பாசம் உமது சகோதரனுடைய உடைமையாயிருக்கின்றது.

ஸமுத்திரத்தில் விளையும் எல்லாவகை ரத்னங்களும் நிசும்ப மகாராஜனுடையவையாய் இருக்கின்றன. நெருப்பால் பாவனமாக்கப்பட்ட இரண்டு வஸ்திரங்களை உமக்கு அக்கினியும் கொடுத்துள்ளான்.

அசுரர் அரசே ! இவ்வாறாகக் கொண்டுவரப்பட்ட எல்லா ரத்னங்களும் உம்முடையதாய் விளங்குகின்றன. மங்கள வடிவினளான இந்த ஸ்திரீரத்னம் ஏன் உம்மால் கிரகிக்கப் படவில்லை?

சண்டமுண்டர்களுடைய இவ்வார்த்தையைக் கேட்டுச் சும்பன் அதன்மேல் அசுரசிரேஷ்டனாகிய சுக்ரீவனைத் தூதாக தேவியிடம் அனுப்பினான்.

“என்னுடைய வார்த்தைகள் அவளிடம் இப்படி இப்படிச் சொல்லப்பட வேண்டும். எப்படிச் சொன்னால் மிகுந்த பிரீதியுடன் அவள் வந்து சேருவாளோ, எப்படிக் காரியத்தை எளிதில் முடிக்கலாமோ அப்படி உன்னால் செய்யப்பட வேண்டும்”

மலைமேல் அழகுமிக்க எந்த இடத்தில் அந்த தேவி இருந்தாளோ அங்கு சென்று, பின்னர் அவன் அவளிடம் மெதுவும் இனியதுமான சொற்களால் பேசலானான்.

“தேவி , அசுரர்களை ஆள்பவனாகிய சும்பன் மூவுலகிற்கும் மேலாகிய ஈசுவரன். அவனால் அனுப்பப்பட்டு நான் தூதனாக உன்னிடம் இங்கு வந்துள்ளேன், அவன் செய்தியினை உனக்கு அப்படியே தெரிவிப்பேன்.

தேவர்களாய்ப் பிறந்த அனைவரிடமும் எவனுடைய கட்டளை தடையின்றிச் செல்லுகின்றதோ, எவன் எல்லா அசுரப் பகைவரையும் வென்றவனோ அவன் கூறியது எதுவோ அதைக் கேட்பாய்.

மூவுலகு முழுவதும் என்னுடையது; தேவர்கள் என் வசமாய் நடப்பவர்கள்; தனித்தனியே எல்லா யஜ்ஞ பாகங்களையும் நானே அனுபவிக்கிறேன்.

மூவுலகிலுள்ள சிறந்த ரத்னங்கள் குறைவின்றி என் வசத்திலுள்ளன. அவ்வாறே தேவேந்திர வாகனமாகிய (ஐராவத) கஜரத்னம் கொண்டுவரப்பட்டு என் வசத்திலிருக்கிறது.

பாற்கடல் கடைந்ததிலுண்டானதும் உச்சைசிரவஸ் எனப் பெயர் பெற்றதுமான அந்த அசுவரத்னம் தேவர்களால் எனக்கு வணக்கத்துடன் ஸமர்ப்பிக்கப்பட்டது.

சுபவடிவினளே! தேவர்களிடமோ, கந்தர்வர்களிடமோ, நாகர்களிடமோ வேறு தலைசிறந்த பொருள்கள் எவை உண்டோ அவை என்னிடமே இருக்கின்றன.

தேவி! உன்னை உலகில் ஸ்திரீ ரத்னமாய் விளங்குபவள் என நாம் கருதுகிறோம். அப்படிப்பட்ட நீ நம்மை வந்தடைய வேண்டும். நாம் ரத்னங்களையெல்லாம் அடைந்தனுபவிப்பராகின்றோம்.

என்னையாவது, பராக்கிரமம் மிக்க என் தம்பி நிசும்பனையாவது நீ அடையலாம். சலிக்கும் கண்களை உடையவளே ! நீ ரத்னமில்லையா

என்னை ஏற்றுக் கொண்டால் சிறந்ததும் நிகரற்றதுமான ஐசுவரியத்தை அடைவாய். இதை உன் புத்தியைக் கொண்டு நன்கு ஆலோசித்துப் பத்தினியாக என்னை வந்து அடை.

எல்லாமே இங்கு எங்களுக்குரியது என்பதை நினைவில் கொள்”

யாரால் இவ்வுலகு தாங்கப்படுகிறதோ அந்த மங்கள வடிவினளான பகவதீ துர்க்காதேவி இங்ஙனம் கூறியதைக் கேட்டுத் தனக்குள்ளே சிரித்துக் கொண்டு கம்பீரமாகப் பின்வருமாறு கூறினாள்.

“தூதனே. உன்னால் கூறப்பட்டது உண்மை. உன்னால் சொல்லப்பட்ட இதில் சிறிதும் பொய்யன்று. சும்பன் மூவுலகுக்கும் நாயகன். நிசும்பனும் அப்படிப் பட்டவனே.

ஆனால் இவ்விஷயத்தில் ஏற்கெனவே (நான்) செய்துள்ள பிரதிஜ்ஞை யாதொன்றுண்டோ அதைப் பொய்யாக்குவது எங்கணம்? அல்ப புத்தியால் நான் செய்து விட்ட பிரதிஜ்ஞை எதுவோ அதைச் சொல்லுகிறேன், கேள்.

என்னைப் போரில் வெல்பவர் எவரோ என் கருவத்தையடக்குபவர் எவரோ, எனக்கு நிகரான பலமுடையவர் எவரோ அவரே இவ்வுலகில் எனக்கு பர்த்தா ஆவார்(என்பதுதான் பிரதிஜ்ஞை.

ஆகையால் சும்பனோ அல்லது மகா அசுரனாகிய நிசும்பனோ இங்கு வரட்டும். என்னை ஜயித்து, எளிதில் என் கையைப் பிடிக்கலாம். இதில் தாமதிப்பதேன்?

இதை கேட்டதும் தூதன் ஆத்திரமாய் சொன்னான்

“தேவி, நீ கர்வம் பிடித்தவள். என் முன் நீ இவ்வாறு பேசாதே. மூவுலகிலும் சும்ப நிசும்பர்களின் எதிரில் எந்த ஆடவன் நிற்பான்?

“அவர்களைச் சார்ந்த)மற்ற அசுரர்கள் எதிரிலும் போரில் எல்லா தேவர்களுங்கூடினாலும் நிற்கமுடியாது. அப்படியிருக்க நீ ஸ்திரீ, ஒருத்தி, எம்மாத்திரம்?

இந்திரன் முதலான தேவர்களனைவரும் எவர் முன் போரில் எதிர்த்து நிற்க முடியவில்லையோ அந்தச் சும்பன் முதலியவர்களின் எதிரில் ஸ்திரீயாகிய நீ எப்படிச் செல்வாய்?

அந்நிலையிலுள்ள நீ நான் சொல்வதைக் கேட்பவளாய்ச் சும்ப நிசும்பர்களுடைய பக்கத்தில் சேர்ந்துவிடு. அப்போது கூந்தல் பற்றியிழுக்கப்படும் மானக்கேட்டை அடையமாட்டாய்.

தேவி சிரித்தபடியே சொன்னாள்

“ஆம் அது அப்படியேதான், நான் சொன்னது சொன்னதுதான் . சும்பன் பலசாலி. நிசும்பன் வீரியம் மிக்கவன். ஆனால் நான் என்ன செய்வது? முன்னாலேயே ஆலோசிக்காமல் என்னால் பிரதிஜ்ஞை செய்யப்பட்டுவிட்டது.

ஆகையால் நீ திரும்பிப்போ. என்னால் உன்னிடம் சொல்லப்பட்டதை யெல்லாம் ஆதரவுடன் அசுர ராஜனுக்கு எடுத்துக் கூறு. அவர் எது உசிதமோ அதை அவன் செய்யட்டும்.”