தேவி மஹாத்மியம் : 11 / 13 – தேவீ ஸ்துதி

(அசுர கூட்டம் ஒழிக்கபட்டு தேவி பெரும் வெற்றிபெற்ற அந்த நாள், அந்த பத்தாம் நாள் விஜய தசமி. தேவியின் மாஹாத்மியம் அந்த விஜயதசமி காட்சிகளையும் சொல்கின்றது.

தேவர்கள் தேவியினை போற்றியது போல நாமும் போற்றி இந்நாளில் வழிபடலாம்)

“ஸர்வமங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த்த-ஸாதிகே | சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே”

எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய் விளங்குபவளே! எல்லா நன்மைகளையும் அளிப்பவளே ! எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்விப்பவளே! சரணடைதற் குரியவளே! மூன்று கண்களை யுடையவளே! நாராயணீ ‘தேவியே, உனக்கு நமஸ்காரம்.

தேவி தியானம்

“உதிக்கின்ற உதய சூரியனின் ப்ரகாசமாய் மிளிர்ந்து நிறைந்த மார்பகத்துடன், அனைவருக்கும் வரமளிக்கும் அபய முத்திரையுடன், கைகளில் அங்குசத்தையும், பாசத்தையும் ஏந்தி, மூன்று கண்களுடன், அனைவருக்கும் பரவசமூட்டும் சந்திரனைப் போல புன்னகைக்கும் முகத்துடன் விளங்கும் அந்த புவனேஸ்வரி தேவியை நான் ஆராதிக்கிறேன்”

அப்பெரிய அசுர ராஜன் தேவியால் கொல்லப்பட்டதும் அக்கினி தேவனை முன்னிட்டுக்கொண்டு இந்திரனுடன் எல்லா தேவர்களும் மலர்ந்த முகத்தாமரைகளால் திசைகளைப் பிரகாசிப்பித்துக்கொண்டு அங்கு கூடித் தங்கள் ஆசையின் பூர்த்தி எய்தியவர்களாய்க் காத்தியாயனியைத் துதித்தனர்.

தேவி ! சரண் புகுந்தவர்களின் துன்பத்தைத் துடைப்பவளே! அருள்வாய் அருள்வாய். உலகனைத்திற்கும் அன்னையே! அருள்வாய். உலகின் ஈசுவரி! உலகைக் காப்பாய். தேவி ! நீயே சராசரமனைத்தையுமாள்பவள்.

பிருதிவி வடிவில் இருப்பதால், உலகிற்கு நீ ஒருத்தியே ஆதாரமாகின்றாய். கடத்தற்கரிய வீரியம் வாய்ந்தவளே! அப்பு வடிவிலிருக்கும் உன்னாலேயே இது முழுதும் திருப்தி செய்விக்கப் படுகின்றது.

அளவற்ற வீரியம் படைத்த விஷ்ணுவின் சக்தி நீயே. உலகிற்கு வித்தாகிய மகாமாயையும் ஆகின்றாய், தேவி! உன்னால் இது எல்லாம் மயக்கத்திலாழ்த்தப் பட்டுளது. உலகில் நீ அருள் புரிந்தால் அது முக்திக்குக் காரணம்.

எல்லா வித்தைகளும் உனது அம்சங்களே. கலைகளுடன் கூடிய எல்லா ஸ்திரீகளும் உலகில் அவ்வாறே உனது வெவ்வேறு வடிவங்களேயாவர். ஒரே தாயாகிய உன்னாலேயே இவ்வுலகு நிறைந்துள்ளது. துதிக்குரியதின் பரமும் அபரமுமான வாக்கே நீயாயிருக்க உனக்குத் துதி எங்ஙனம்?

எல்லாம் நீயேயாகவும், போகத்தையும் மோக்ஷத்தையும் அளிக்கும் பரதேவதையாகவும் நீ போற்றப்படும்போது எவ்வளவு சிறந்த சொற்களேயாயினும் எங்ஙனம் அவை உன்னைத் துதிக்கப் பயன்படும்?

எல்லா ஜீவர்களுடைய இருதயத்திலும் புத்தி வடிவில் உறைபவளும், சுவர்க்கத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பவளும் ஆகிய நாராயணீ தேவியே, உனக்கு நமஸ்காரம்.

காலத்தின் அளவாகிய கலைவடிவிலும் காஷ்டை முதலிய வடிவுகளிலும் இருந்துகொண்டு மாறுதல்களை உண்டாக்கி உலகின் ஒடுக்கத்திற்குக் காரண சக்தியாய் விளங்கும் நாராயணியே, உனக்கு நமஸ்காரம்.

சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் எனும் முத்தொழிலுக்கும் காரண சக்தியாய் விளங்குபவளே! என்றும் உள்ளவளே! எல்லா குணங்களுக்கும் இருப்பிடமாக விளங்குபவளே ! குணங்களையே வடிவாய்க் கொண்டவளே! நாராயணீ உனக்கு நமஸ்காரம்.

தன்னைச் சரணடைந்த தீனர்களையும் துன்புற்றோரையும் காப்பாற்றுவதையே தொழிலாய்க் கொண்டவளே! எல்லோருடைய துன்பத்தையும் துடைப்பவளே ! நாராயணீ தேவியே! உனக்கு நமஸ்காரம்.

ஹம்ஸம் பூட்டிய விமானத்திலுறைபவளே! பிரம்மாணீ வடிவெடுத்தவளே ! கூர்ச்சத்தால் தீர்த்தத்தைப் புரோக்ஷிப்பவளே! நாராயணீ தேவியே ! உனக்கு நமஸ்காரம்.

மாஹேசுவரீ உருவத்தில் முச்சூலத்தையும், சந்திரனையும், பாம்பையும் தரிப்பவளே! விருஷபத்தை வாகனமாய்க் கொண்டவளே! நாராயணீ உனக்கு நமஸ்காரம்.

மயிலுஞ் சேவலுஞ் சூழப் பெரிய வேலாயுதத்தைத் தரித்துக் கௌமாரீ வடிவு கொண்டவளே ! பாவமற்றவளே! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

சங்கு, சக்கரம், கதை, வில் ஆகிய சிறந்த ஆயுதங்களை ஏந்தி வைஷ்ணவீ வடிவுகொண்ட நாராயணீ ! அருள்வாய். உனக்கு நமஸ்காரம்.

பயங்கரமான பெரிய சக்கரந்தாங்கித் தெற்றிப் பல்லில் பூமியைத் தூக்கிக்கொண்டு வராஹ ரூபந்தரித்த மங்கள வடிவினளே ! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

முவ்வுலகையும் ரக்ஷிக்கும் நல்லெண்ணத்துடன் உக்கிரமான நரசிம்ம வடிவுடன் அசுரர்களைக் கொல்ல முற்பட்டவளே! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

கிரீடந்தரித்துப் பெரிய வஜ்ராயுதந் தாங்கி ஆயிரங் கண்களுடன் ஜ்வலிக்கும் இந்திர சக்தியே ! விருத்திராசுரன் பிராணனைப் போக்கியவளே! நாராயணீ! உனக்கு நமஸ்கராம்.

கோர ரூபமும் பயங்கரமான சப்தமும் உடையவளே! மிகுந்த பலம் பொருந்திய சிவதூதீ வடிவில் அசுரர்களை அழித்தவளே ! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

தெற்றிப்பல் கொண்ட வாயும், தலைமாலை ஆபரணமும் உடைய சாமுண்டா தேவியே! முண்டாசுரனை வதைத்தவளே! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

லக்ஷ்மியாகவும், லஜ்ஜையாகவும், மஹாவித்தையாகவும், சிரத்தையாகவும், புஷ்டியளிக்கும் ஸ்வதாதேவியாகவும், நிலைபெற்றவளாகவும், மஹாராத்திரியாகவும், மஹாமாயையாகவும் உள்ளவளே! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

சிறந்த மேதா தேவியாகவும், ஸரஸ்வதியாகவும், ஐசுவரியமாகவும், விஷ்ணு சக்தியாகவும், தாமஸ வடிவினளாகவும், இயற்கை வடிவினளாகவும் விளங்கும் ஈசுவரியே, நீ அருள் புரிவாய்! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

அனைத்தின் வடிவமாகவும், அனைத்தையும் ஆள்பவளாகவும், சக்தியனைத்தும் பொருந்தியவளாகவும் விளங்கும் தேவியே, பயங்கரமானவற்றினின்று எங்களைக் காப்பாய். துர்க்கா தேவியே ! உனக்கு நமஸ்காரம்.

இந்த அழகு மிகுந்ததும் மூன்று கண்களால் அலங்கரிக்கப் பெற்றதுமான உனது முகம் எங்களை எல்லா பயங்களினின்றும் காப்பாற்ற வேண்டும். காத்யாயனீ ! உனக்கு நமஸ்காரம்.

பயங்கரமான ஜ்வாலையுடனும் மிகுந்த கூர்மையுடனும் அசுரர்களை மிச்சமின்றி அழிக்கும் உனது திரிசூலம் எங்களைப் பயத்தினின்று காக்க வேண்டும். பத்ரகாளியே! உனக்கு நமஸ்காரம்.

தேவி ! எது தன் நாதத்தால் உலகை நிரப்பி தைத்தியர்களின் வீரியத்தை அழிக்கின்றதோ அந்த மணியானது சகடத்திடையில் விழுவதினின்று புத்திரர்களை தாய் காப்பது போல் பாவங்களினின்று எங்களைக் காக்கட்டும்.

அசுரர்களின் ரத்தமும் கொழுப்புங் கலந்த சேற்றால் பூசப்பட்டதும் கிரணம் விடும் ஒளிபொருந்தியதுமான உனது வாள் நன்மை பயப்பதாகட்டும். சண்டிகையே ! உன்னை நாங்கள் வணங்குகிறோம்.

நீ ஸந்தோஷ மடைந்தால் எல்லா நோய்களையும் அறவே போக்குகிறாய். கோபத்தாலோ வேண்டப்படும் காமங்களை எல்லாம் அறவே அழிக்கின்றாய். உன்னை அண்டிய மனிதர்க்கு விபத்துக் கிடையாது. உன்னை அண்டியவர் பிறர் அண்டுதற்குரியவராகின்றனரன்றோ ?

தேவி! தருமத்தைப் பகைக்கும் கொடிய அசுரர்களின் வதமாகிய இது’ உன் மூர்த்தியையே பலவாக்கிப் பல வடிவங்கொண்டு எங்ஙனம் உன்னால் செய்யப்பட்டதோ அங்ஙனம், அம்பிகையே, வேறு யார் செய்ய இயலும்?

வித்தைகளிலும் சாஸ்திரங்களிலும் விவேகத்திற்கு முதல் விளக்காகிய வேதத்தின் வாக்கியங்களிலும் கூறப்படுவது உன்னை யல்லாது வேறு யாரை ? உன்னையல்லாது வேறு யார்தான் இவ்வுலகை மமதையால் கவ்வப்பட்ட கொடிய அஞ்ஞான இருளில் வெகுவாய்ச் சுழலவைப்பது?

ராக்ஷஸர்கள் உள்ளவிடத்தும், கொடிய விஷப் பாம்புகள் உள்ளவிடத்தும், சத்துருக்கள் உள்ளவிடத்தும், திருடர் கூட்டம் உள்ளவிடத்தும், காட்டுத்தீ பரவிய விடத்தும், அவ்வாறே நடுக்கடலிலும் அங்கங்கு இருந்துகொண்டு உலகையெல்லாம் நீயே காக்கிறாய்.

உலக நாயகியாகிய நீ உலகைப் பாலிக்கின்றாய். உலக வடிவினளாகிய நீ உலகைத் தாங்குகின்றாய். உலக நாயகர்களால் நீ பூஜிக்கப் படுபவளாகின்றாய். உன்னை உள்ளன்புடன் வணங்குவோர் எவரோ அவரே உலகிற்குப் புகலிடமாய் விளங்குவோர்.

தேவி! அருள் புரிவாய். இப்போது விரைவில் அசுரர்களைக் கொன்று எங்களைக் காத்தாற்போல் எப்போதும் சத்துரு பயத்தினின்று காக்க வேண்டும். உலகனைத்திலுமுள்ள பாவங்களையும் தீச்செயலின் பயனாய்த் தோன்றும் பெருங் கொடுமைகளையும் விரைவில் நாசம் செய்ய வேண்டும்.

தேவி! முவ்வுலக வாசிகளாலும் போற்றப் பெறுபவளே! உலகனைத்தின் இன்னல்களைப் போக்குபவளே! நீ உலகங்களுக்குச் சிறந்த நன்மைகளை அளிப்பவளாய் விளங்கி, உன்னை வணங்குவோர்க்கு அருள் புரிவாய்.

தேவி கூறினாள்

“தேவகணங்களே ! உலகிற்கு உபகாரமாக எந்த வரத்தை நீங்கள் மனதால் விரும்பினாலும் அதைக் கேட்கலாம். வரமளிப்பவளாகிய நான் அதைக் கொடுக்கிறேன்”

தேவர்கள் கூறினார்கள்

“அகில நாயகியே! இவ்வாறே முவ்வுலகின் துன்பங்கள் முழுவதும் நாசம் செய்யப்படவேண்டும். உன்னால் எங்கள் சத்துருக்கள் அழிக்கப்படவேண்டும்”

தேவி கூறினாள்

“வைவஸ்வத மன்வந்தரத்தில் இருபத்தெட்டாவது சதுர்யுகம் நிகழும்போது சும்பன் நிசும்பன் என்ற வேறு இரண்டு கொடிய அசுரர்கள் தோன்றப் போகிறார்கள்.

யசோதையின் கருவில் தோன்றி நந்தகோபர் வீட் டில் பிறந்து விந்தியாசலத்தில் வசிக்கப் போகும் நான் அப்போது அவர்களை நாசம் செய்யப் போகிறேன்.

மீண்டும் பூதலத்தில் மிகவும் பயங்கரமான வடிவில் அவதரித்து வைப்ரசித்தர்கள் எனும் அசுரர்களை நாசம் செய்யப் போகிறேன்.

மிகவும் கொடிய அசுரர்களாகிய அந்த வைப்ரசித்தர்களை நான் பக்ஷிக்கும்போது எனது பற்கள் மாதுளம் பூப் போல் சிவந்து போகும்.

அதனால் ஸ்வர்க்கத்தில் தேவதைகளும், மனித உலகில் மானிடர்களும் என்னைத் துதிக்கும்போது எப்போதும் ‘ரக்த தந்திகா’ என்று குறிப்பிடப் போகிறார்கள்.

மறுபடியும் நூறு வருஷங்கள் மழை பெய்யாமலிருக்க, அப்போது முனிவர்களால் துதிக்கப்பெற்று நீரின்றி வற‌ண்ட பூமியில் கர்ப்ப வாசம் செய்யாமல் தோன்றுவேன்.

அப்போது முனிவர்களை நான் நூறு கண் கொண்டு பார்க்கப் போவதால் என்னை மனிதர் சதாக்ஷி எனப் போற்றுவர்.

தேவர்களே ! பின்னர் மழை பெய்யும் வரை உயிரைக் காப்பாற்றும் ஓஷதிகளை என் உடலிலிருந்தே தோற்றுவித்து அவற்றால் உலகனைத்தையும் போஷிக்கப் போகிறேன்.

அப்போது பூமியில் நான் சாகம்பரீ எனப் பிரசித்தியடையப் போகிறேன். அதே காலத்தில் துர்க்கமன் எனும் கொடிய அசுரனையும் வதைக்கப் போகிறேன்.

அதனால் எனக்கு துர்க்கா தேவி என்ற சிறப்புப் பெயர் ஏற்படப் போகிறது. மீண்டும் இமயமலையில் முனிவர்களைக் காப்பதற்காக எப்போது பயங்கரமான ரூபத்தை யெடுத்துக்கொண்டு ராக்ஷஸர்களை அழிப்பேனோ அப்போது முனிவர்களெல்லாம் தலை வணங்கி என்னைத் துதிக்கப் போகிறார்கள்.

அச்சமயம் பீமா தேவி என்ற சிறப்புப் பெயர் எனக்கு ஏற்படப் போகிறது. அருணன் என்ற அசுரன் எப்போது முவ்வுலகிற்கும் பெரிய கொடுமை விளைவிக்கப் போகின்றானோ அப்போது நான் ஆறு பாதங்களுடன் எண்ணிறந்த வண்டுக் கூட்டமாய்த் தோன்றி முவ்வுலகிற்கும் நன்மையை நாடி அக்கொடிய அசுரனை வதைக்கப் போகிறேன்.

அப்போது உலக மக்களெல்லாம் எங்கும் என்னை ப்ராமரீ எனத் துதிக்கப் போகின்றனர். இவ்வாறு எப்பெப்போது அசுரர்களின் எழுச்சியால் துன்பம் ஏற்படுமோ அப்பப்போது நான் அவதரித்துச் சத்துருக்களை நாசம் செய்வேன்”