தேவி மஹாத்மியம் : 12 / 13 (இறுதி பகுதி)

(தேவி மஹாத்மியத்தை படித்து அதில் சொல்லபட்ட துதிகளால் அதாவது வானோரும், தேவர்களும் எப்படி தன்னை கொண்டாடி துதித்தார்களோ அப்படி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், என்னென்ன ஐஸ்வர்யமெல்லாம் கைகூடும் என்பதை அன்னை தானே சொல்கின்றாள்.
விஜயதசமியில் இந்த வார்த்தைகளை, அன்னை தேவியே நமக்கு தந்த வார்த்தைகளை தியானித்து வழிபட்டு அவளிடம் வரம்பெற்று கொள்ளுதல் அவசியம்.)
இந்த தியானத்தோடு தொடங்கலாம்.
“கத்தி, கேடயம் ஏந்தி சேவை செய்யும் எண்ணற்ற பெண்களால் சூழப்பட்டு, சக்கரம், கதை, கத்தி, கேடயம், அம்பு, வில், பாசம் போன்ற பல ஆயுதங்களை ஏந்தி, மூன்று கண்களுடன் எதிரிகளை அச்சுறுத்தும் வண்ணம் ஆள்காட்டி விரலால் காட்டப்பட்ட முத்திரையுடன் ஸிம்ம வாகனத்தில் ஆக்ரோசமாய் அமர்ந்து, மின்னல் போல் மின்னும் அந்த துர்கா தேவியை ப்ரார்த்திக்கிறேன்”
தேவி சொல்கின்றாள்.
“இந்த ஸ்துதிகளால் என்னை நாள் தோறும் மனதையடக்கி எவன் துதிக்கின்றானோ அவனுடைய துன்பங்களை யெல்லாம் நான் நிச்சயம் போக்குவிப்பேன்.
மதுகைடப வதத்தையும், மஹிஷாசுரவதத்தையும் சும்ப நிசும்பர்களின் வதத்தையும் பற்றிய வரலாற்றை எவர்கள் கீர்த்தனம் செய்கின்றார்களோ, அல்லது எனது சிறந்த மாஹாத்மியத்தை ஒருமைப்பட்ட மனத்துடன் அஷ்டமியிலும், சதுர்த்தசியிலும் நவமியிலும் பக்தியுடன் கேட்கின்றார்களோ அவர்களுக்குச் சிறிதும் கெடுதி வராது; கெடுதியால் விளையும் ஆபத்தும் வராது,ஏழ்மை வராது, பிரியத்தின் பிரிவும் வராது.
சத்துருக்களிடமிருந்தோ, திருடர்களிடமிருந்தோ, அரசர்களிடமிருந்தோ, ஆயுதங்களாலோ, நெருப்பாலோ, வெள்ளத்தாலோ,ஒருபோதும் இதைப் படிக்கும் அவனுக்குப் பயம் ஏற்படாது.
ஆகையால் இந்த என் மாஹாத்மியம் ஒருமைப் பட்ட மனத்துடன் படிக்கப்படவேண்டும். எப்போதும் பக்தியுடன் கேட்கப்படவும் வேண்டும். அதுவே நன்மைக்குச் சிறந்த வழி.
பெருவாரி மரணத்தை விளைவிக்கும் விபத்துக்களையும் அவ்வாறே மூன்று வகையான துன்பங்களையும் எனது மாஹாத்மியம் போக்குவதாயிருக்கட்டும்.
எனது ஆலயத்தில் எங்கு இது நன்றாக நித்யம் படிக் கப்படுகிறதோ அங்கு விட்டு நான் விலகுவதில்லை. அங்கு எனது ஸாந்நித்யம் நிலைபெறுகின்றது.
பலிப்பிரதானத்திலும், பூஜையிலும் அக்னி காரியத் திலும், மஹோத்ஸவத்திலும், இந்த என் சரிதம் முழுவதும் வாசிக்கவும் கேட்கவும் படவேண்டும்.
அவ்வாறு செய்யப்பட்ட பலிதானத்தையும் பூஜையையும், அவ்வாறு செய்யப்பட்ட அக்கினி ஹோமத்தையும் ஞானத்துடன் செய்யப்பட்டாலும் ஞானமின்றிச் செய்யப் பட்டாலும் நான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்.
சரத் ருதுவில் வருஷந்தோறும் செய்யப்படும் மஹாபூஜை எதுவோ அதில் இந்த எனது மாஹாத்மியத்தைப் பக்தியுடன் கேட்கும் மனிதன் என்னருளால் எல்லாத் துன்பங் களினின்றும் விடுபட்டுத் தனமும் தானியமும் மக்களும் உடையவனாய் ஆவான். இதில் ஐயமில்லை.
என்னுடைய இந்த மாஹாத்மியத்தையும் அவ்வாறே மங்களமான உத்பத்தி வரலாறுகளையும், யுத்தங்களில் பராக்கிரமத்தையும் கேட்ட மனிதன் பயமற்றவனாவான்.
எனது மாஹாத்மியத்தைக் கேட்கும் மனிதர்க்குச் சத்துருக்கள் நசிக்கின்றனர்; மங்களம் உண்டாகிறது; குலம் சந்தோஷமடைகிறது.
சாந்திக் கிரியைகளிலும், கெட்ட கனவு கண்டபோ தும், உக்கிரமான கிரக பீடை ஏற்பட்டபோதும் எல்லா விடங்களிலும் எனது மாஹாத்மியத்தைக் கேட்கட்டும்.
உத்பாதங்களும் கொடிய கிரக பீடைகளும் கெட்ட கனவும் ஒழிந்துபோம். நல்ல கனவு தோன்றும்.
பாலக்கிரகங்களினால் பீடிக்கப்பட்ட பாலர்களுக்கு இது சாந்தியளிப்பது. மனிதர்களின் கூட்டுறவில் பிளவு ஏற்பட்டால் மீண்டும் நட்பை உண்டாக்குவது.
கெட்ட நடத்தையுடையவர்கள் எல்லோருடைய பலத்தையும் அழிப்பதில் சிறந்தது; ரக்ஷோ கணங்களும் பூதங்களும் பிசாசங்களும் இதைப் படிப்பதினாலேயே நாசமடைகின்றன.
இந்த எனது மாஹாத்மியம் முழுதும் எனது ஸாந்நித்தியத்தை யளிக்கவல்லது. சிறந்த பலி, புஷ்பம். அர்க்கியம், தூபம், கந்தம், தீபம், பிராம்மண போஜனம், ஹோமம், புரோக்ஷணம் இன்னும் பல விதமான போக்கிய வஸ்துக்களை யளித்தல் முதலியனவற்றால் இரவும் பகலும் ஒரு வருஷம் விரதமனுஷ்டித்தால் எனக்கு எந்தப் பிரீதி ஏற்படுமோ அது இந்த நற்சரிதத்தை ஒரு முறை கேட்டால் உண்டாகும். கேட்பது பாபங்களைப் போக்கும், ஆரோக்கியத்தை யளிக்கும்.
எனது பிறப்பைப் பற்றிக் கீர்த்தனம் செய்தல் பூதங்களினின்று ரக்ஷையளிக்கும். துஷ்ட தைத்தியர்களை நாசம் செய்த எனது யுத்த சரித்திரம் எதுவோ அது கேட்கப் பட்டால் மனிதனுக்குச் சத்துரு பயம் உண்டாகாது. நீங்கள் செய்த ஸ்தோத்திரங்கள் எவையோ, பிரம்மரிஷிகள் செய்தவை எவையோ, பிரம்மா செய்தவை எவையோ அவை மங்களமான மதியைத் தருவனவாம்.
அரணியத்தின் நடுவிலோ, காட்டுத்தீயின் இடை யிலோ, தனிமையான இடத்தில் திருடர்களால் சூழப்பட்ட போதோ, சத்துருக்களிடம் பிடிபட்டபோதோ,சிங்கத்தாலும், புலியாலும் காட்டுயானையாலும் காட்டில் துரத்தப்பட்ட போதோ, கோபங்கொண்ட அரசனால் மரண தண்டனையோ, சிறைவாசமோ விதிக்கப்பட்டபோதோ,
பெருங்கடலில் காற்றினாலலைக்கப்பட்ட படகிலிருக்கும் போதோ. மிகவும் கொடிய யுத்தத்தில் ஆயுதங்கள் மேல் விழும்போதோ, எல்லா விதமான கொடிய சங்கடங்களிலும், வேதனைகளால் பீடிக்கப்பட்ட நிலையிலும், எனது இச்சரிதத்தை ஸ்மரித்தால் மனிதன் சங்கடத்தினின்று விடுபடுவான். எனது மகிமையால் சிங்கம் முதலியவைகளும் திருடர்களும் சத்துருக்களும் எனது சரிதத்தை நினைத்த மாத்திரத்தில் தூர ஓடிவிடுவர்”.
இப்படி மார்க்கண்டேய புராணத்தை அந்த முனிவர் போதித்துவிட்டு அந்த அரசனுக்கும் வைசியனுக்கும் சொல்லிகொண்டிருந்த தன் உரையினை முடிக்கின்றார்
“அந்த தேவர்களும் எதிரிகள் நாசம் செய்யப்பட்டுக் கவலை நீங்கியவர்களாய் யஜ்ஞபாகங்களைப் புசிப்பவர்களாய் முன்போல் தங்கள் அதிகாரங்களைச் செலுத்தலாயினர்.
உலகை யழிப்பவர்களும், மிகக் கொடியவர்களும், ஒப்பற்ற பராக்கிரமம் பொருந்தியவர்களும், மகா வீரியம் படைத்தவர்களும், தேவ சத்துருக்களுமான சும்பனும் நிசும்பனும் யுத்தத்தில் தேவியால் கொல்லப்பட்டபின் எஞ்சியிருந்த தைத்தியர்கள் பாதாளம் சென்றனர்.
அரசே ! இங்ஙனம் அந்த பகவதி தேவியானவள் பிறப்பிறப்பற்றவளாயினும் மீண்டும் மீண்டும் தோன்றி உலகின் பரிபாலனத்தைச் செய்கின்றாள்.
அவளாலேயே இவ்வுலகம் மயக்கப்படுகிறது. அவளே உலகைச் சிருஷ்டிக்கின்றாள். அவளைப் பிரார்த்தித் தால் விசேஷமான ஞானத்தையும், பிரீதி செய்விக்கப்பட்டால் குறைவற்ற ஐசுவரியத்தையும் அளிப்பாள்.
அரசே! பிரளய காலத்தில் மகா ஸம்ஹாரிணியாய்த் தோன்றும் அந்த மஹா காளியால் இந்த பிரம்மாண்டம் முழுதும் வியாபிக்கப்பட்டுள்ளது.
பிரளயகாலத்தில் மகாமாரியாய் விளங்குபவள் அவளே. பிறப்பற்ற அவளே சிருஷ்டியாகவும் ஆகின்றாள்.
அனாதியான அவளே ஸ்திதி காலத்தில் பிராணிகளை வைத்துக் காப்பாற்றுகின்றாள்.
ஆகுங்காலத்தில் மக்கள் வீட்டில் செல்வத்தைச் செழிக்கச்செய்யும் லக்ஷ்மீ தேவி அவளே. போகுங்காலத்தில் செல்வத்தை யழிப்பதற்கு அலக்ஷ்மியாகவும் அவளே தோன்றுவாள்.
புஷ்பம் தூபம் கந்தம் முதலியவற்றால் பூஜித்துத் துதிக்கப்பட்டால் செல்வத்தையும் புத்திரர்களையும் தர்மத்தில் மதியையும் நல்ல கதியையும் அளிப்பாள்.
ஓம் சக்தி ஓம்”