கைசிக ஏகாதசி

ஏகாதசிகளில் வைகுண்ட ஏகாதசி போல சிறப்பானது கைசிக ஏகாதசி, அந்த கைசிக அல்லது கைசிகேய ஏகாதசி அழகான வரலாற்றை கொண்டது
அதுதான் தென்முனையில் இருக்கும் நெல்லை சீமையின் முக்கிய திவ்யதேசமான திருக்குறுங்குடி ஸ்தலத்தையும் அதனை அடுத்த நம்பிமலையில் இருக்கும் நம்பி ஆலயத்த்தின் மகா சிறப்பையும் போதிக்கின்றது
அவ்வகையில் இன்றைய நாள் நெல்லை மாவட்டம் நம்பிமலையில் இருக்கும் நம்பியாண்டவருக்கானது
தமிழகத்தின் அழகான இடங்களில் அந்த நம்பிமலையும் ஒன்று, மிக மிக தொன்மையான காலத்திலே நம்பிக்கு அந்த மலையில் நம்பி தீர்த்தம் அருகே அருவிகரையில் அழகான ஆலயம் அமைத்தார்கள் இந்துக்கள்
அந்த திருக்குறுங்குடி ஆலயத்திற்கு வைணவ பெரியார்கள் ஆழ்வார்கள் எல்லோரும் வந்தார்கள், ராமானுஜர் முதல் எல்லோரும் வந்து வணங்கினார்கள்
திருமங்கை ஆழ்வார் அங்குதான் முக்தி அடைந்தார்
இந்துஸ்தானத்தில் மட்டுமல்ல உலகிலே அழகான சிற்பம் அந்த ஆலயத்தில்தான் உண்டு, நகத்தை கூட அழகாக செதுக்கி வைத்த சிற்பங்கள் அவை
ஒவ்வொரு இந்துவும் காணவேண்டிய தலங்களில் முக்கியமான தலம் அது
இந்த கைசிய ஏகாதசி என்பது அங்கிருந்துதான் உருவானது
திருக்குறுங்குடியில் பாணர் குலத்தில் ஒரு பக்திமிக்கவன் பிறந்தான், அவன் பிறப்பால் பாணர் என்பதால் சமூகத்தால் ஒதுக்கிவைக்கபட்டிருந்தான், பாணர்குலம் என்பது காசுக்கு பாடும் கூட்டம் என்பதால் அப்படி ஒரு நிலை இருந்தது
ஆனால் இந்த பாணன் பெரும் பக்திமான், நம்பி ஒருவனை மட்டுமே பாடுவான். அதுவும் கோவிலுக்கு செல்ல வழியில்லை என்பதால் வாசலிலே நின்றுபாடுவான்
நம்பியினை மட்டும் பாடுவதால் நம்பியினை பாடுபவன் என்ற பெயர்பெற்றான் அதுவே நம்பாடுவான் என்று மாறிற்று
இந்த நம்பாடுவான் மலைமேல் இருக்கும் நம்பிமேல் அபார பக்தி கொண்டவன், தினமும் அதிகாலை அந்த மலைக்கு ஓடி கொண்டுவந்திருக்கும் பால், நைவேத்தியமெல்லாம் கோவில் முன் வைத்து திருப்பள்ளி எழுச்சி பாடுவது அவன் வழமை
இருளில் ஒற்றையடி பாதையில் காட்டுமிருகமும் வெள்ளமும் கொட்டும் அந்த ஆபத்தான பாதையில் சென்று நம்பி ஆலயத்தை தரித்துவருவது அவன் வழிபாடு
அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை, ஆலயபீடமும் அர்ச்சகரும் பக்தர்களும் யாரும் அவனை கண்டுகொள்ளவில்லை என்றாலும் அவன் வழிபாடு தொடர்ந்தது
மானிடர் கண்ணுக்கு அவன் அற்பன் அவன் செய்வது முட்டாள்தனம் என்றாலும் நம்பியாண்டவர் சன்னதியில் அவன் பெரும் இடம்பெற்றான், அவன் பக்தியில் உருகிய நம்பியாண்டவர் அவனை உலகறிய திருவுளம் கொண்டார்
தங்கத்தை நெருப்பில் போட்டு தரம்பார்ப்பதை போல, அகிலை நெருப்பில் போட்டு தரம்பார்ப்பது போல பக்தனை சோதனையில் இட்டு தரம்காட்டுவது பகவான் விளையாட்டு
அப்படி இந்த நம்பாடுவானுக்கும் சோதனைவைத்தார் பகவான்
அன்று கார்த்திகை வளர்பிறை ஏகாதசி என்பதால் பகவானை வழிபட ஆவலோடு சென்ற நம்பாடுவானை ஒரு பிரம்ம ராட்சசன் மறித்து கொண்டான்
பெரும் பாவம் செய்தவர்கள், நிறைவேறா கர்மத்தோடும் ஆசையோடும் செத்தவர்கள் , முக்தி நிலை அடையமுடியா ஆன்மாக்கள், யாரும் தர்ப்பணமோ தேடுதலோ இல்லாமல் கைவிடபட்ட ஆத்மாக்கள் இப்படி ஆகிவிடுவார்கள்
அப்படி முன் ஜென்ம கர்மத்தால் பாதிக்கபட்டு பிரம்ம ராட்சசன் எனும் நிலையினை எட்டியிருந்த அகோர ஆத்மாவிடம் அன்றுபிடிபட்டான் அந்த நம்பாடுவான்
அது கடும் பசியிலிருந்த பூதம், அவனை விழுங்கபார்த்தது, அவனால் அதனிடம் போராடமுடியாது, தப்பி செல்லவும் முடியாது
அதனால் கடைசியாக சொன்னான் “பிரம்ம ராட்சரே என்னால் உம்மிடம் இருந்து தப்பமுடியாது, கடைசியாக ஒன்று கேட்கின்றேன், நான் நம்பியாண்டவரை வணங்க செல்கின்றேன், நான் வழிபாடு முடிந்ததும் உனக்கு உணவாகின்றேன், எனக்கு இந்த ஏகாதசி முக்கியம்” என மன்றாடினான்
ராட்சசன் விடவில்லை, உன்னை அப்படியே அனுப்பினால் நீ வேறுவழியாய் தப்பிவிடுவாய், என் எல்லை தாண்டி நான் வரமுடியாது, அதனால் உன்னை விடமாட்டேன் என்னை ஏமாற்றபார்க்கின்றாய் என அவனை விழுங்க முனைந்தான்
பாம்பின் வாய் தவளை போல கதறி கேட்டான் நம்பாடுவான்
“ராட்சசா, இந்த ஆத்மாதான் இறைவனை அடையபோகின்றது, இந்த உடலை நெருப்புத்தான் உண்ணபோகின்றது, நெருப்பு உண்ணபோகும் இந்த உடல் உனக்கு உணவாகும் என்றால் எனக்கு புண்ணியமே சேரும்
அதனால் எனக்கு தயக்கமில்லை, ஆனால் ஏகாதசி அன்று எம்பெருமானை வணங்கிவிட்டு வந்தால் நிறைவாய் உனக்கு இரையாவேன்” என சொன்னான்
“கோவிலுக்குள்ளே நீ செல்லமுடியாது, பின்னும் ஏன் உனக்கு அவன் மேல் பக்தி, நீ ஏமாற்றுக்காரன்” என்றான் ராட்சசன்
“அதற்கான காரணம் நான் அறியேன் அது என் கர்மாவாக இருக்கலாம், கர்மாம் கழிக்க வாழ்பவன் காரணங்களை தேடகூடாது, உனக்கு என் உடல்தானே தேவை, என்னை வழிபடவிடு நானே வருகின்றேன்” என்றான்
ராட்சசன் விடவில்லை, நீ பெரிய சாஸ்திரி அல்ல, ஞானியும் அல்ல, அற்ப பாணர் குலத்தை சார்ந்தவன், உன்னை நான் எப்படி நம்புவது என கேட்டது
“ராட்சா, நான் எம்பெருமானை வழிபட்டு உன்னிடம் திரும்ப வராவிட்டால் சாஸ்திரங்களில் சொல்லபட்ட இத்தனை கேடுகளும் என்னை அடையட்டும்” என சொல்லி எதெல்லாம் பெரும் பாவங்களோ எதெல்லாம் தப்பமுடியாத அதர்மங்களோ அதையெல்லாம் போதித்தான் நம்பாடுவான்
“ஏ ராட்சசனே, நான் திரும்பி வராமல் உன்னை ஏமாற்றினால் இவை எல்லாம் என்னை அடையட்டும்
சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும்.
பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.
எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்.
எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன்.
எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில் அவளை அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன்.
எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிரானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும்.
எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும்.
எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு எதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு அவனுக்கு கொடுக்காமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன்.
எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்.
ஒரு பொருளை தானமாக கொடுப்பதாகக் கூறி, பின்பு மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையக்கடவேன்.
எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன்.
எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன்.
எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.
எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை யௌவன வயதில் (வயதான காலத்தில் தனியே) விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும்.
தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் “மகா பாவம்” என்னை வந்தடையட்டும்.
எவன் பிரம்மஹத்தி தோஷம் செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, விரதத்திற்கு பங்கம் பண்ணுகிறானோ இப்படிப்பட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன்.
எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்.
சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும், முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேஸ்வரனான அந்த “ஸ்ரீமன் நாராயணனையும்” மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும்.
அவனின் உபதேச உறுதிமொழியில் மனமிரங்கிய ராட்சசன் அவனை சென்றுவர அனுமதித்தான், இவன் சாதாரணமானவன் அல்ல என்பது அந்த ராட்சசனுக்கு புரிந்தது
இந்த உலகில் அலையும் எல்லா துரசக்திகளுக்கும், எல்லா அகோர ஆவிகளுக்கும் ஒரு குறை உண்டு. அவை எல்லாம் பேயாக பிசாசாக அலைய காரணமே நல்ல கதியில் தங்களை சேர்க்க யாருமில்லை என்பதன்றி வேறல்ல
மாந்த்ரீகம், பேய் ஓட்டுவடு எல்லாமே கதியற்று அலையும் ஆவிகளை சாந்தபடுத்தி சொர்க்கம் ஏக வழிசெய்தல் அன்றி வேறு எதுவுமல்ல
உண்மையில் அவை தங்களுக்கோர் விடுதலையினை கேட்கின்றன, தங்களுக்கான உலகிற்கு தங்களை அனுப்பிவிக்க மன்றாடுகின்றன, அவற்றை மானிடர் புரியும்படி சில அறிகுறிகளை காட்டுகின்றன
உண்மையில் அவை கெஞ்சுகின்றன, அழுகின்றன, கையேந்தி நிற்கின்றன
இந்த ராட்சனும் அப்படி நிலையிலே இருந்தான், தனக்கொரு விடுதலைவராதா? இந்த ராட்சச நிலையில் இருந்து தன்னை ஒருவன் கைதூக்கிவிடமாட்டானா? ஒரு தெய்வீக மனிதன் வரமாட்டானா என அவை ஏங்கி நிற்கும்
அப்படி நம்பாடுவான் உபதேசதித்தும் ராட்சன் இந்த ஞானி தன்னை கரைசேர்ப்பான் என நம்பி அனுப்பிவைத்தது
பிரம்மராக்ஷஸனால் விடப்பட்ட நம்பாடுவான் நம்பி கோவிலை நோக்கி ஓடினான்! நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம்பாடுவானின் கண்கள் தானாக அழுதன
“பகவானே, நம்பியினை தவிர யாரையும் பாடமாட்டேன் என வாழ்பவன் நான், இன்று இங்கு கடைசியாக பாடுகின்றேன், நாளை நான் இருக்கமாட்டேன் அந்த ராட்சனுக்கு கொடுத்த வாக்கின்படி இன்றே உணவாகிவிடுவேன்
எல்லாம் உன் சித்தபடி நடக்கின்றது, உடல் அவனுக்கு இந்த ஆத்மா உனக்கு”
என சொன்னவன் உளமுருக தன் கடைசி பாடலை பாடினான், அதனை கைசிக பண் எனும் ராகத்தில் பாடினான்
கோவில் திறந்திருந்தது ஆனால் இவனால் செல்லமுடியாது என்பதால் கொடிமரம் நோக்கி பாடிகொண்டிருந்தான், அவன் உருக்கமாக பாடும் போது அந்த அதிசயம் நிகழ்ந்தது
கொடிமரம் நகர்ந்து பகவான் முகத்தை இவனுக்கு காட்டிற்று , வாழ்வில் முதல் முறை நம்பியினை கண்டவன், தன் வாழ்நாளின் கடைசி நாளில் கண்டவன் விழுந்து அழுதான்,ஆனந்தமாய் அழுது தரிசித்தான்
அப்போது ஒரு ஒளி கோவிலில் இருந்துவந்து அவனை ஆட்கொண்டது அவன் இன்னும் பக்குவடைந்து திருவடி சேர தயாரானான்
கொடுத்த வாக்குபடி நம்பாடுவான் பிரம்மராக்ஷஸனை நோக்கி வேகமாகச் செல்லும் பொழுது, ஒரு வயதான கிழவன் அவன் முன் தோன்றி, “யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்???. நீ செல்லும் திசையில் ஒரு பிரம்மராட்க்ஷஸன் இருக்கிறான்! அங்கே போகாதே”” என்று கூறினான்.
நம்பாடுவானும், “சுவாமி அடியேனுக்கு அந்த பிரம்மராட்க்ஷஸனைப் பற்றித் தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான்.
அதற்கு அந்த கிழவன் “நீ நினைப்பது போல் அந்த பிரம்மராக்ஷஸன் நல்லவன் இல்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு”
நம்பாடுவான் “சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ விரும்பவில்லை, ஆகவே என்னைச் செல்ல அனுமதியுங்கள்” என்று வேண்டினான்.
தன் உயிரான பிராணனை விட்டாவது சத்தியத்தைக் காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டுச் சந்தோசம் அடைந்த கிழவன்” உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான்.
நம்பியான்டவரே அந்த கிழவனாக வந்து அவனை ஆசீர்வதித்ததை அவன் அறியவில்லை..
பின் நம்பாடுவானும் பிரம்மராட்க்ஷஸன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். தன்னை எடுத்து உண்ண பரிபூரணமாய் வணங்கிநின்றான்
அந்த பிரம்ம ராட்சனனோ இவன் தெய்வீகமனிதன் என்பதை அறிந்து அவனை கொண்டே தன் சாபம் தீர்க்க வழிதேடி கேட்டான்
“ஏ மானிடனே, நான் புண்ணியம் அடையும்படி ஸ்ரீமந்நாராயணரான அழகியநம்பியை போற்றிப் பாடிய பாட்டின் பலனை எனக்குக் கொடுத்தால் நான் உன்னை விட்டு விடுகிறேன்” என்றது.
நம்பாடுவான் சொன்னான் “அது நான் பகவான் திருவடிகளை அடைய பாடிய பாடல்கள், என் வாழ்வில் நான் சேர்த்த பலன் அதுதான் அதை தந்தால் சொர்க்கம் செல்லமுடியாது, அழிய கூடிய என் உடலை நீ கேட்டபடி எடுத்துகொள்”
ராட்சசன் விடவில்லை “பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன்” என்று மன்றாடியது.
நம்பாடுவான் மறுத்தான், பூதம் கெஞ்ச தொடங்கிற்று “தயவு செய்து ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை இந்த பிறவியான பிரம்மராட்க்ஷஸன் ஜன்மத்திலிருந்து காப்பாற்று” என்று மன்றாடியது.
“நீ பிரம்மராட்க்ஷஸனாகப் பிறக்கக் காரணம் என்ன?” என்று கேட்டான் நம்பாடுவான்.
அப்பொழுது பிரம்மராட்க்ஷஸனுக்குத் தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது. பூர்வ ஜென்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன்.
பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது பிரம்மராட்க்ஷஸனாக அலைந்துக் கொண்டிருக்கிறேன்.
தயை கூர்ந்து என்னைக் காப்பாற்று என்று நம்பாடுவானைச் சரண் அடைந்தது.
தன்னிடம் சரணடைந்த ராட்சசன் நற்கதி அடியும்படி தான் அப்போது பாடிய “கைசிக பண்” பாடலின் பலனை மட்டும் தாரைவார்த்தான் நம்பாடுவான்
உடனே அந்த பூதம் சாபம் நீங்கி அவனை வணங்கி சொர்க்கம் அடைந்தது
இது இடையில் வந்த கதை அல்ல, யாரோ எழுதிவைத்த சம்பவம் அல்ல, இது வராக புராணத்தில் வரும் காட்சி, வராக பகவான் பூமாதேவிக்கு சொன்ன வரலாறு
“பரராச பட்டர்” இதனை அனுதினமும் மக்களுக்கு போதித்தே ஸ்ரீரங்கத்தில் அரங்கனை அடைந்தார்
இந்த “கைசிக மகாத்மியம்” அவ்வளவு விஷேஷமானது
கார்த்திகை மாதம் “சுக்லபக்ஷ ஏகாதசி” அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது.
அப்பேற்பட்ட இந்த “கைசிக மகாத்மியத்தை” கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவார்கள் என்று பூமி பிராட்டிக்கு “வராஹ பெருமாளே சொன்ன சத்தியம்” இந்த மஹாத்மியம்.
இன்று அந்த கைசிக மாஹாமித்யம், இன்னாளில் எல்லா ஆலயத்திலும் கைசிக மஹாத்மியம் பாடபடும், திருகுறுங்குடி கோவிலிலும், நம்பி கோவிலிலும் இது பெரிதாக கொண்டாடபடும்
அப்படியே திருவரங்கத்தில் இரவெல்லாம் பெருமானுக்கு பட்டுசாற்றும் நிகழ்வும்,பெருமாள் செல்லும் வழியில்
கற்பூரம் சாற்றபட்டு வழிபாடு செய்யபடும்
இதெல்லாம் பொன்னும் பொருளும் பகவானுக்காக என்பதும்,பகவானோடு நாமும் கரைந்துபோக வேண்டும் என்பதற்காகவும் போதிக்கபட்ட ஏற்பாடு
கைசிய மகாமித்ய கதை என்பது பெரும் போதனைகளை கொண்டது
ஏகாதசி அன்று இறந்தால் சொர்க்கம் என்பது மட்டுமல்ல ஏகாதசியன்று ஒரு ஆத்மத்துக்கு யாருமில்லாமல் இருக்கும் ஆத்மத்தை கரையேற்ற பிரார்த்திப்பதும் நன்மை தரும்
நம்பாடுவான் கதை அதைத்தான் சொல்கின்றது, கார்த்திகை ஏகாதசி என்பது அனாதையாக அபலையாக திரியும் ஆத்மாக்களுக்கானது அவர்களுக்காக நாம் பிரார்த்தித்தால் நற்கதி அடையும் ஆத்மாக்கள் நமக்க்கு வழிகாட்டும் என்பது
அப்படியே ஒவ்வொருவரும் தான் செய்த பாவங்களுக்காக மன்றாடி பாவமன்னிப்பு பெறவேன்டிய நாளும் இதுதான்
பாவத்தோடு செத்தால் ஒரு ஆத்மா என்னகதி அடையுமென்பதையும் , எது எது பாவம் என்பதையும் கைசிக மஹாமித்யத்தில் ஞானத்தோடு போதித்தர் முன்னோர்கள்
கைசிகனும் பிரம்ம ராட்சனும் பேசிகொள்வதிலே எதெல்லாம் பாவம் என்றும், பாவம் செய்தோர் என்னகதி அடைவர் என்பதையும் சொன்னார்கள்
மானிடர்கள் குறையுள்ளவர்கள், அவர்கள் பலவீனமானவர்கள் அதனால் பாவமும் அந்த சிந்தனையும் இயல்பு, அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களுக்காக வருந்தி மன்றாடவேண்டிய நாள் இது
அதைத்தான் தங்கள் பாவமன்னிப்பு நாளாக இந்துக்கள் அனுசரிக்கின்றார்கள், அதுதான் கைசிக ஏகாதசி என கொண்டாடபடுகின்றது
இந்துக்களின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு ஏற்பாடும் ஞான பொக்கிஷங்கள், அவ்வகையில் ஒருமானுடன் எதையெல்லாம் விலக்கி வாழ்ந்து இறைசிந்தனையில் வாழ்ந்து முக்தி அடைதல் வேண்டும் என்பதை வராஹ புராணத்தில் கைசிய மஹாத்மியமாக போதிக்கின்றது இந்துதர்மம்
இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் இந்த புராணம் சமஸ்கிருத புராணம், அகில இந்தியாவுக்கும் உலக வாழ் இந்துக்களுக்கும் பொதுவான புராணம்
அந்த புராணத்திலே இந்துஸ்தானின் தென்கோடியில் இருக்கும் திருகுறுங்குடி ஆலயத்தையும் நம்பி மலையும் அழுத்தமாக சொல்லபட்டிருக்கின்றது என்றால் இந்துஸ்தானம் ஒரே மதமாக ஒரே இந்துமத மகக்ள் கொண்ட நாடாகத்தான் எக்காலமும் அன்றில் இருந்து இன்றுவரை உண்டு என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டியிருக்கின்றது
நம்பிமலையில் வீற்றிருக்கும் நம்பியாண்டவ பெருமான் எல்லா மக்களின் பாவங்களையும் மன்னிக்கட்டும் அப்படியே கதியற்று அலையும் எல்லா உடலற்ற ஆத்மாக்களையும் நல்லகதி அடைய அருள் செய்யட்டும்
எல்லா ஆத்மாக்களும் ஞானமும் அருளும் அடைந்து பகவான் பாதத்தில் நிம்மதி அடையட்டும், நம்பியாண்டவர் எல்லோருக்கும் நற்கதியும் நிம்மதியும் அருளட்டும்