நரகாசுர வதம் – தீபாவளிப் பண்டிகை
இந்தியாவில் மட்டுமல்ல அதை தாண்டி உலகில் என அரைவாசி நாடுகளில் கொண்டாடபடும் மிகபெரும் பண்டிகை தீபாவளி
இந்த பண்டிகை ஒரு விஷேஷமான பண்டிகை பல காரணங்களுக்காக அது கொண்டாடபடும் ராமன் மறுபடி அயோத்தி திரும்பியது, கேதார கவுரி விரதம் நிறைவுற்று சக்தி சிவனோடு சேர்ந்தது என காரணங்கள் ஏராளம் எனினும் மகா முக்கிய விஷயம் நரகாசுர வதம்

நரகாசுரன் வராக அவதாரத்துக்கும் பூமாதேவிக்கும் பிறந்தான் என சில இடங்களில் சொல்லபட்டாலும் உண்மை அது அல்ல என்பார்கள்,காரணம் வராக அவதாரம் மகா முந்தைய காலத்தில் நடந்தது, நரகாசுர வதம் மகாபாரத காலத்து சம்பவம்
நரகாசுரன் அந்த இரணியன் குடும்பத்து வாரிசுகளில் ஒருவனாக அவன் சாயலில் வந்தவன் என்பதும் கடும் தவத்தால் அன்னையினை தவிர யாராலும் சாவு வரகூடாது என வரம்பெற்றவன் என்பதும் பல இடங்களில் காணபடும் விஷயம்
ஒருவனுக்கு அன்னை என்றால் யார்? ஒரு உயிர் பிறக்கவும் அது வளரவும் யார் முழுமுதல் காரணமாக இருப்பாளோ அவணே அன்னை
அவ்வகையில் பூமி எல்லோருக்கும் அன்னை, அப்படியே அவனுக்கும் அன்னை
தனக்கு உயிர்கொடுத்து, உணவும் உடையும் நீரும் வீடும் இன்னும் எல்லாமும் கொடுத்த பூமியினையே அவன் தாயாக கருதினான், ஒரு மனிதன் பெற்றுகொள்ளும் எல்லாமும் பூமி கொடுத்தது
இதனால் மிக நுட்பமாக பூமியில் எதுவும் தன்னை கொல்லமுடியாதபடி நுட்பமான ஆலோசனையில் அவன் அந்த வரத்தை பிரம்மனிடம் வாங்கியிருந்தான்
மரணம் என்பது பூமிக்கும் ஒரு மனிதனுக்குமான தொடர்பினை அறுக்கும் விஷயமல்லவா? அது பூமியில் உள்ள எந்த பொருளாலும் எந்த உயிராலும் நடக்க கூடாது, காலத்தாலும் நடக்க கூடாது என்பதும் பூலோகம் தாண்டி எங்கும் அவனுக்கு யாராலும் மரணமில்லை என்பதும் அவன் வாங்கிய வரங்கள்
பூமிக்கு காவலும் அம்சமும் ஆதாரசக்தியான தேவி மட்டுமே அவனை கொல்லமுடியும். ஆனால் பூமாதேவி தன்னை கொல்லமாட்டாள் என அவன் நம்பினான்
பூமிக்கு ஒரு சிறப்பு குணம் உண்டு, தன்னில் வாழும் உயிர்களை எல்லாம் தாயன்போடு பராமரிக்கும் பூமி இது, அதற்கும் உயிர் உண்டு இயக்கம் உண்டு
உயிருள்ள ஒன்றில் இருந்துதான் உயிருள்ள ஒன்று தோன்ற முடியும், உயிரில்லா ஒன்றில் இருந்து எது தோன்றமுடியும்?
ஒவ்வொரு நிமிடமும் கோடிகணக்கான உயிர்களை பிறக்க வைக்கும் பூமி அன்னைகளுக்கெல்லாம் அன்னை. கண்ணுக்கு தெரியா பாக்டீரியாவில் இருந்து புல் முதல் மனிதன் வரை ஒவ்வொரு நொடியும் பூமியில் உயிர்கள் ஜனித்து கொண்டே இருக்கின்றன.
இதனாலேதான் இந்துக்கள் அதை பூமாதேவி என்றார்கள்
தன்னில் தோன்றும் உயிர்களை பூமாதேவி நல்லவர் கெட்டவர் என பார்ப்பதில்லை, யோக்கியன் அயோக்கியன் என பார்ப்பதில்லை
தாய் எல்லா பிள்ளைகளையும் நேசிப்பது போல் எல்லா உயிர்க்கும் தேவையானதை அவள் கொடுத்து கொண்டே இருக்கின்றாள்
அன்றைய ஞானகண்களுக்கு பூமி ஒரு கிரகம் அல்ல, பூமி ஒரு கோள் அல்ல அது இயக்கும் சக்தி கொண்ட உயிர் கொண்ட , தேவியின் சக்தியின் ஒரு அம்சம் என்றே அறியபட்டது
ஆம் பூமிக்கு உயிர் இல்லை எனில் எப்படி அதில் உயிர்கொண்ட பயிர் முளைக்கும், மரம் முளைக்கும் நதி ஓடும் கடல் அசையும் இன்னும் என்னவெல்லாமோ இயங்கும்?
உயிரில் இருந்துதான் உயிர் தோன்றமுடியும், இதனாலே அக்கால ஞான சமூகம் இதை தாய் என்றது
விதிபடி இங்கு உயிர்கள் ஜனிக்கும் மரணிக்கும் ஆனால் விதிக்கபட்ட காலம் வரை பூமிதாய் எல்லா உயிருக்கும் உணவும் இன்னும் வேண்டிய எல்லாம் கொடுத்து காத்து கொண்டே இருக்கும்
அந்த விதிதான் பிரம்மாவிடம் இருந்தது, எப்பொழ்து உயிர் ஜனிக்கும் எப்பொழுது உயிர் பிரியும் என்பதை அவர்தான் முடிவு செய்தார்
அதைத்தான் தவமிருந்து எல்லோரையும் வாழவைக்கும் பூமிதாயால் அன்றி தனக்கு மரணம் வர கூடாது என மாற்றி வாங்கிவந்தான் அவன்
அவன் பக்திக்கான பலனாய் அது அவனுக்கு கிடைத்தது
பூமியின் ஆதார தாய்சக்தி ஒன்றே தன்னை கொல்லும் என்பது அவனுக்கு தெரியும். அப்படி ஒரு காலமும் பூமி கொல்லாது அதன் தன்மை அப்படி
பிரம்மனே வரம் தந்தபின் இனி வேறு ஆபத்தே இல்லை, தாய்பூமி தன்னை கொல்லாது என நம்பியிருந்தான் அவன்
ஆனால் அந்த பூமி அம்சம் யார் என்பதோ எப்படி வரும் என்பதோ அவனுக்கு தெரியாமல் மறைக்கபட்டிருந்தது, சுயநலகாரனுக்கு தெய்வ விஷயங்கள் ஒருகாலமும் புரியாது
இந்த வரத்தால் அவன் எல்லா உலகையும் கைபற்றினான் , ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினான், தேவர்களெல்லாம் அஞ்சி ஓடினர். அவன் மனுகுலத்தை ஆண்ட அசுரன் எனபடும் அளவு நர+அசுரன் அதாவது நரகாசுரன் என பெயர் பெற்றிருந்தான்
பவுமாசுரன் எனும் அவன் பெயர் மறைந்து நரகாசுரன் என மாறிற்று
இனி அவன் வெல்ல யாருமில்லை அல்லது அவனை எதிர்க்க யாருமில்லை எனும் அளவில் மிகபெரும் அராஜகம் செய்து கொண்டிருந்தான், தர்மத்தை அடியோடு ஒழித்து அதர்மத்தின் உச்சியில் தன் கொடியினை பறக்கவிட்டிருந்தான்
ராவணனுக்கு இலங்கை போல இவனுக்கு காமரூபம் எனப்படும் அசாம் பகுதிகள் இருந்தன
அவனின் காலமே கம்சன், ஜெராசந்தன், சிசுபாலன், துரியோதனன் என எங்கு பார்த்தாலும் அதர்ம கூட்டம் அரசாண்ட காலம், பூமியே அஞ்சி ஒடுங்கி தேவர்களுடன் கண்ணீர் விட்டுகொண்டிருந்த காலம்
அப்பொழுதுதான் கிருஷ்ணன் அவதரித்து கம்சனையும் இன்னும் பலரையும் கொன்றுவிட்டு துவாரகையினை நிர்மானித்திருந்தார், மகாபாரத யுத்தம் அப்பொழுது தொடங்கவில்லை ஏன் சூதாட்டமே நடக்கவில்லை
தன் கடைசி இலக்காக துரியனை வைத்துவிட்டு அதற்கு முன் அவனுக்கு துணையாக வரகூடிய எல்லா துஷ்டர்களையும் அழிக்க முடிவு செய்தார்
கம்சனை அப்படித்தான் வீழ்த்தினார் அவரின் அடுத்த குறி நரகாசுரனாய் இருந்தது
கண்ணனுக்கும் பாண்டவர் பக்கம் வர காலம் அப்பொழுது வரவில்லை காரணம் அவர்களெல்லாம் மகா ஒற்றுமை, பாஞ்சாலி வருவதற்கு முன்புவரை அங்கு ஒற்றுமைதான் நிலவியது, துரியனுக்குள் துளி விஷம் இருந்தாலும் சகுனி இன்னும் வரவில்லை
சகுனிமட்டும் வராவிட்டால் மகாபாரத யுத்தமே வந்திருக்காது
இதனால் வேறு எல்லோரையும் அழிக்கும் முடிவில் இருந்தார் கிருஷ்ணர் அவரின் அவதார நோக்கமே அதுதான், தேவர்களின் அழுகையும் உலக தர்மத்தின் நிலையும் மோசமாய் இருந்தது
அந்த நரகாசுரன் வரம்பெற்றுவிட்டோம் என அஜாக்கிரதையாக இருக்கவில்லை மாபெரும் கோட்டை ஒன்றை கட்டியிருந்தான்
தேவர்களுக்கு மயன் போல அசுரர்களுக்கு ஒரு தச்சன் உண்டு அவன் முரன்
முரன் மிகபெரிய கோட்டை ஒன்றை கட்டியிருந்தான் அது மகா பாதுகாப்பாய் இருந்தது
பிராக்ஜோதிஷபுரம் எனும் நரகாசுரனின் நகர் அக்கோட்டைக்குள் இருந்தது
பாதுகாப்பான அரண்களைக் கொண்ட அந்த நகரத்தினுள் செல்வது எளிதான காரியமல்ல. முதலில், நகரின் நான்கு திசைகளுக்கும் பாதுகாப்பாக பலம் மிக்க அரண்கள் அமைந்திருந்தான் முரகாசுரன் பலம் மிக்க சேனைகள் அவற்றைக் காவல்காத்து வந்தன.
அதனையடுத்து, நகரத்தைச் சுற்றி ஆழமான அகழிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் எதிரிகள் கால் வைத்தால் வெந்துவிடும் அளவு அமிலம் ஊற்றபட்டிருந்தது
அது மட்டுமின்றி, நகரத்தைச் சுற்றிலும் கம்பிகள் இடப்பட்டிருந்தன. அதை தொட்டால் நெருங்கினால் மனிதரை எரித்துவிடும்
(இன்றைய மின்வேலி சாயல்)
அதை அடுத்த சுற்றில் அனிலம் என்ற வாயுப்பொருள் பாதுகாப்பிற்காக நிரப்பப்பட்டிருந்தது. அந்த வாயுக்கள் தாக்கவருவோர் சுவாசித்தால் கொல்லும் ரகம்
(இன்றைய விஷ வாயு குண்டுகளுக்கு அது முன்னோடி)
இதை அடுத்து யார் அந்த வாசலை தாண்டினாலும் நொடியில் சாம்பலாகும் ஒரு ஆபத்து இருந்தது
(இது இன்றைய கண்ணுக்கு தெரியா லேசர் கதிர், அகசிவப்பு கதிர் தாக்குதல் என்கின்றார்கள்)
ஆம் இன்று விஞ்ஞானம் காணும் எல்லா சாயலும் நரகாசுரன் கதையில் தெளிவாக இருந்தது, இன்றைய விஞ்ஞான சாதனையினை என்றோ சொல்லிவிட்டதுதான் இந்து தர்மம்
நரகாசுரனை அழிக்க கிருஷ்ணர் அங்கு வந்தார், தனியாக வரவில்லை சத்யபாமா பூமியின் அம்சம் என தெரிந்துதான் அவரை அழைத்தும் வந்தார்
வந்து போரை தொடக்கினார், அவர் தமது கதாயுதத்தின் தாக்குதல்களால் அனைத்து பலமான கோட்டைகளையும் நொறுக்கினார், அவர் விடுத்த அம்பு மழை கோட்டையின் முதல் அரணை நொறுக்கிற்று, பின் தன் சுதர்சன சக்கரத்தைப் பிரயோகித்து, அவர் அந்த கம்பி வேலிகளைச் அழித்தார்
ஆம் யாரும் தொட்டால்தான் ஆபத்து,சுதர்சன சக்கரத்தை அது என்ன செய்ய முடியும்?
அடுத்து அகழிகளையும் வாயுக்களின் பாதுகாப்பையும் அழித்தார், முராசுரனால் உருவான எல்லா முன் பாதுகாப்பும் ஒழிக்கபட்டது அதை அடுத்து சங்கை ஊதினார்.
ஆம் முன் பாதுகாப்பு எல்லாவற்றையும் அழித்துவிட்டுத்தான் அவனை அழைத்தார் இல்லாவிடில் அவனை பின் தொடர்ந்து அழிக்க முடியாது.
நரகாசுரன் தளபதி பெயர் முரகாசுரன் இவன் ராவணன் சாயல், ஐந்து முகம் கொண்டவன்
முராசுரன் தானே தலமை தாங்கி படைகளுடன் சண்டைக்கு வந்தான், வலுவான கோட்டையினை வெளியில் இருந்து தகர்த்து அசுர கூட்டத்தை வெளிவர செய்வதில் பெரும் வெற்றிபெற்றார் கிருஷ்ணர்
முராசுரன் கடுமையான தாக்குதலில் ஈடுபட்ட போது கருடனைத் தாக்க வரும் ஒரு பெரிய பாம்பினைப் போன்று காட்சியளித்தான். மிகுந்த கோப மடைந்திருந்த அவன் மூவுலகத்தையும் விழுங்கத் தயாராக இருப்பதைப் போலத் தோன்றியது.
முதலில் கிருஷ்ணரின் வாகனமான கருடனைத் தாக்குவதற்காக திரிசூலத்தை சுழற்றி வீசினான், அவன் தனது ஐந்து வாய்களாலும் சிங்கம்போல கர்ஜித்தான். அவன் எழுப்பிய கர்ஜனை வாயுமண்டலம் மூலமாக உலகெங்கிலும் பரவி, விண்வெளியில் எதிரொலித்து, பத்துத் திசைகளையும் சென்றடைந்து பிரபஞ்சம் முழுவதிலும் கடகடவென ஒலித்தது.
முராசுரனின் திரிசூலம் தம் வாகனமான கருடனை நோக்கி வருவதைக் கண்ட பகவான் கிருஷ்ணர், உடனடியாக இரண்டு அம்புகளைப் பிரயோகித்துத் தம் கரத்தின் திறமையால் திரிசூலத்தைக் கண்ட துண்டமாகச் செய்தார்.
முதல் தோல்வியினை கண்ட முராசுரன் உடனடியாக கடுங் கோபத்துடன் பகவானைத் தனது கதாயுதத்தால் அடிக்க முயன்றான். ஆனால் முரனின் கதாயுதம் தன்னை அணுகுவதற்கு முன்பே பகவான் கிருஷ்ணர் அதனைத் தனது கதையைக் கொண்டு உடைத்து நொறுக்கினார்.
ஆயுதங்களை இழந்த அசுரன், பலம் வாய்ந்த தனது கரங்களால் கிருஷ்ணரைத் தாக்க முற்பட்டான். ஆனால் கிருஷ்ணர் தம் சுதர்சன சக்கரத்தின் உதவியுடன் அசுரனின் ஐந்து தலைகளையும் அவனது உடலிலிருந்து வெட்டி வீழ்த்தினார்.
இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட பெரும் மலையின் சிகரத்தைப் போல் அசுரன் நீரினுள் வீழ்ந்தான் அந்த கொடியவன்
முராசுரனுக்கு தாம்ரன், அந்தரிக்ஷன், ஷ்ரவணன், விபாவஸு, வஸு, நபஸ்வான், அருணன் ஆகிய ஏழு ம்கன்கள் இருந்தனர். செருக்குற்றிருந்த அவர்கள் தங்கள் தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்க எண்ணி, மிகுந்த கோபத்துடன் கிருஷ்ணரோடு போரிட ஆயத்தமானார்கள். அதற்கான ஆயுதங்களைச் சேகரித்துக் கொண்டு பீடன் என்ற அசுரனைப் படைத் தளபதியாக நியமித்தார்கள்.
நரகாசுரனின் கட்டளையின்படி அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் கிருஷ்ணரைத் தாக்கினார்கள்.
எட்டு திசையிலும் கண்ணனை சூழ்ந்தார்கள், 7 பக்கம் முராசுரன் மக்களும் ஒரு பக்கம் பீடனுமாக களம் அதிர்ந்தது
கிருஷ்ணரை சூழ்ந்து வாள், கதை, ஈட்டி, அம்பு, சூலம் போன்ற பல வகையான ஆயுதங்களை அவர்மீது பொழிந்தனர்.
கிருஷ்ணர் தம் அம்புகளால் பௌமாசுரனின் படைவீரர்களின் எல்லா ஆயுதங்களையும் தானியங்களைப் போல் சிதறடித்தார். காற்றில் பதர் பறப்பது போல் அவர்கள் பறந்தனர்
நெருப்பினை நெருங்குவோவ் சாவது போல கிருஷ்ணரை சுற்றி அசுர படைகள் செத்து கொண்டே இருந்தனர்
கிருஷ்ணர் தனது ஆயுதங்களைப் பிரயோகிக்க, பௌமாசுரனின் படைத் தலைவனான பீடனும் அவனது உதவியாளர்களும் தலைகளை இழந்து, போர் உடைகளை இழந்து, கால்கள், கைகள், தொடைகள் துண்டிக்கப்பட்டு விழுந்தனர். முர்காசுரனின் வாரிசுகளும் அழிந்தன
எல்லா பலமும் இழந்தபின் கடைசியாக தன் பிரத்யோக யானை படையுடன் வந்தான் நரகாசுரன்
அவை அனைத்தும் மிகுந்த போதையில் இருந்தன. அவை வெளியே வந்த போது பகவான் கிருஷ்ணரும் அவரின் தேவியும் விண்வெளியில் உயர்ந்த இடத்தில் அழகாக கருடன் மேல் வீற்றிருக்கக் கண்டான்
கிருஷ்ணர் சூரியனையொட்டிய கருமேகம் போல் ஒளிர்ந்தார்.
ஆம் அவர் கருடனில் இருந்தே போர் புரிந்தார், காரணம் பூமியில் நின்றால் அசுரனுக்கான வரம் பலனளிக்கும், பூமியினை ஒட்டிய எந்த ஆயுதமும் நரகாசுரனுக்கு எதிராக வாய்க்காது
கடும் ஆத்திரபட்ட நரகாசுரன் தன் பிரத்யோக ஆயுதமான நூற்றுக்கணக்கான போர் வீரர்களை ஒரே வீச்சில் கொல்லக்கூடிய சதக்னீ என்ற ஆயுதத்தை உடனடியாக விடுத்தான். அதேசமயத்தில் அசுரனின் உதவியாளர்களும் தத்தம் ஆயுதங்களை வீசினார்கள்.
இறகுகளுடன் கூடிய தனது அம்புகளின் மூலம் அவர்களின் அஸ்திரங்களையெல்லாம் கிருஷ்ணர் முறியடித்தார். அவை குறிதவறாமலும் நீண்ட தூரம் செல்லும் வகையிலும் இருந்தன
இப்போரின் விளைவாக நரகாசுரனின் படைவீரர்களும் படைத்தளபதிகளும், கைகள், கால்கள், மற்றும் தலைகளை இழந்தவர்களாக பூமியில் விழுந்தனர். அவர்களுடன் அவர்களின் குதிரைகளும் யானைகளும் வீழ்ந்தன.
ஒரு கட்டத்தில் கருடனே போரிட தொடங்கியதில் நிலமை மாறிற்று
மிகுந்த கோபம் கொண்ட நரகாசுரன் தன் முழு பலத்தையும் பிரயோகித்துக் கருடனைத் தாக்கினான். அந்தத் தாக்குதல் இடியின் பலத்தையும் மிஞ்சியதாக இருந்தது. ஆனால் கருடன் சாதாரண பறவையல்ல என்பதால் நரகாசுரனின் அடிகளையெல்லாம் பெரிய யானையின் மீது மலர் மாலைகள் விழுவதைப் போல உணர்ந்தது
யுத்தம் நீண்டு கொண்டே சென்றது, நரகாசுரனுக்குத்தான் வரம் உண்டே தவிர அவனை சுற்றியுள்ளோரை கொல்லமுடியும் அல்லவா? அவர்களை குறிவைத்து அழித்தார் அவர்
கடைசியில் எஞ்சினான் நரகாசுரன், அவனை கொல்ல பூமி அம்சம் கொண்ட சத்தியபாமாவால் மட்டும் முடியும் என்பது கிருஷ்ணருக்கு தெரிந்தது
இதனால் அம்பு எய்ய தடுமாறுவது போல் நடித்தார், இதுதான் இடம் என உற்சாகமான நரகாசுரன் அம்பினை பாய்ச்சினான் , விழுவது போல் நடித்தார் கிருஷ்ணன்
கிருஷ்ணன் மேல் நரகாசுரன் அம்பு பட்டதும் கொதித்த சத்யபாமா அவன் மேல் அம்பை வீசியும் பின் வாளால் வெட்டினாள் அத்தோடு வாழ்வில் முதலும் கடைசியுமாக சரிந்தான் நரகாசுரன்
போரை தொடங்கியது கண்ணன் முடித்து வைத்தவள் சத்தியபாமா.
அசுரனின் உறவினர்கள் மனமுடைந்து கதறினர், சாதுக்கள் இறைவனின் வீரதீரச் செயல்களைப் புகழ்ந்தனர். தேவர்கள் இறைவனின் மீது பூமாரி பொழிந்தார்கள்
நரகாசுரனின் கோட்டைக்குள் அடைபட்டிருந்த எல்லோரையும் விடுத்தார் கிருஷ்ணர், எல்லா மக்களும் மகிழ்ந்தனர்
நாடெல்லாம் அவன் வீழ்ந்ததும் மக்கள் எண்ணை தேய்த்து குளித்து விருந்துண்டு மகிழ்ந்தனர், வெளிச்சம் வந்ததை குறிக்கும் வகையில் இரவெல்லாம் விளக்கு வைத்து கொண்டாடினர்
தீபாவளி இப்படித்தான் தொடங்கியது
இது புராணகதை என பார்த்தால் புராணம், இன்னும் மறைபொருளை நோக்கினால் அதில் உள்ள விஷயங்களும் அது போதிக்கும் தத்துவமும் ஏராளம்
இது நரகாசுரன் அழிந்த நாள் இதனால் கொண்டாட வேண்டும் என்பது விஷயம் அல்ல, இந்து தர்ம பண்டிகைகளெல்லாம் ஒவ்வொரு சிந்தனையினை கொடுக்க கூடியவை, வெறும் கொண்டாட்டங்களுக்கும் கேளிக்கை விருந்துக்குமானவை அல்ல
இப்பண்டிகையின் மூன்று காரணங்களையும் பாருங்கள் ஒரு ஒற்றுமை தெரியும் அதாவது ராமன் அயோத்தி திரும்புதல், கேதார கவுரி விரதம் மற்றும் நரகாசுரவதம் இந்த மூன்றுக்கும் காரணம் யார்?
பெண்கள், அவர்கள் தங்களின் கடமையில் இருந்து தவறி ஆசையிலும் பாசத்திலும் சிக்கி செய்ய கூடாதை செய்தது
அயோத்தியில் கைகேயி அதை செய்தாள் தன் மகனுக்காக தசரதனிடம் வரம் கேட்டு ராமனை காட்டுக்கு அனுப்பினாள், ஆம் புத்திர ஆசை
அந்த ஆசையில்தான் தசரதன் செத்தான் மகனும் அரியணை ஏறாமல் கைகேயிக்கு பெரும் சோகத்தை கொடுத்தான், கையேயி கனவெல்லாம் வீணானது
சீதையின் வாழ்வில் மகா முக்கியகட்டம் அந்த மாய மானுக்கு ஆசைபட்டது, அவளின் ஆசைக்கும் அடம்பிடித்தலுக்குமாகவே ராமன் அதை விரட்டி செல்ல ராவணன் வந்து சீதையினை தூக்கி சென்றான்
அடுத்து பார்வதி சிவனை சில காரணங்களுக்காக கோபத்தில் பிரிந்து வந்தாள், வந்தவள் பின் சிவனுக்காய் ஏங்கி தவித்து நோன்பிருந்து அவனை அடைந்தாள்
ஆம் குடும்ப பெண்களின் ஆசை எல்லை மீறினால் பெரும் அழிவுகள் நேரும் என்பதை சொல்லும் பாடங்கள் அவை
ராமன் அயோத்திய திரும்பிய நாளில் ஒவ்வொரு இந்துபெண்ணும் சிந்தித்து மனதில் இருத்த வேண்டிய பெரும் பாடங்கள் அவை
குடும்ப பெண்ணுக்கு ஆசை அணை மீறினால் குடும்பம் சிதறும், பெரும் துன்பம் நேரும் என்பதை தெளிவாக உணரும் நாள் இது
நரகாசுரன் கதை இன்னும் தெளிவாக சொல்கின்றது
நரகாசுரன் பூமாதேவி மகன், அவனை ஊட்டி வளர்த்தவள் பூமாதேவி. அவன் அக்கிரமம் செய்ய தொடங்கியபொழுதே அவள் அவனை தண்டித்திருந்தால் இப்படி ஆட்டம் போட்டு அழிந்திருக்கமாட்டான்
நல்ல தாய் எப்படி இருக்க கூடாது என்பதற்கு நரகாசுரன் தாயும் மகாபாரத காந்தாரியும் முழு உதாரணங்கள்
காந்தாரி போல் மகன் குற்றங்களை பார்க்காமலே இருந்தாள் பூமாதேவி, அதனாலே அவன் மிக சரியாக அவள்பெயரில் வரமும் பெற்று அடாதன அத்தனையும் செய்தான்
அப்பொழுதும் அவள் கொல்லவில்லை தடுக்கவில்லை, கடைசியில் அவள் அம்சமான அன்னையே சத்யபாமா வடிவில் வந்து அவனை கொன்றாள்
உருவ வடிவு பூமாதேவி வளர்த்த விஷசெடியினை அரூப வடிவ அன்னையே கொன்று தர்மம் மீட்டாள்
ஒவ்வொரு தாயும் தீபாவளி அன்று நினைவில் வைக்க வேண்டிய விஷயம் இது, பிள்ளை வளர்ப்பின் மகத்துவத்தை சொல்லும் விஷயம் இது
அப்படியே கணவனுக்கு அடிபட்டவுடன் அதுவரை அமைதியாய் இருந்த சத்யபாமா பொங்கி எழுந்து நரகாசுரனை கொன்றாளே எப்படி?
ஆம் பெண்களுக்கு அபரிமிதமான சக்தி எப்பொழுதும் உண்டு, தன் அன்பானவர்களுக்கு ஒன்று என்றால் அது பொங்கி எழும், அந்த சக்திக்கு தெய்வமும் துணைவரும்
பெண்களால் எந்நேரமும் தங்கள் கணவனை காக்கமுடியும், எச்சூழலிலும் தெய்வம் தங்களுக்கு துணைவரும் என்பதை சொல்லும் காட்சி அது
எந்நிலையிலும் குடும்ப பெண் கலங்க கூடாது, கணவனை கணவனின் இடத்தினை அவளால் தாங்கி நிற்க முடியும் என்பதற்கான சிந்தனை அது.
தீபாவளி கொண்டாட்ட ஏற்பாட்டில் இது இன்னும் தெளிவாக விளங்கும்
பிள்ளைகளுக்கு தாயே நல்லெண்ணெய் ஊற்றி குளிக்க வைக்க வேண்டும் என சொன்னார்களே ஏன்?
எண்ணெய் வைக்கும் பொழுது நரகாசுரனால் அவள் தாயும் இச்சமூகமும் அடைந்த துன்பத்தை சொல்ல வேண்டும், நல்ல பிள்ளைகள் பெற்றோருக்கு பெருமை என்பதையும் பிள்ளையகள் செய்யும் ஒவ்வொரு கெட்ட காரியமும் பெற்றவளுக்கு அவமானம் என்பதை சொல்ல வேண்டும்
தான் கண்ணனை பெற்றேன் நரகாசுரனை பெறவில்லை எனும் நற்பெயரை ஒவ்வொரு மகனும் தாய்க்கு தரவேண்டும் எனும் உறுதியினை அவர்கள் மனதில் பதியவைக்க வேண்டும்
தாயால் அதை செய்ய முடியும், இப்படி நல்ல விஷயங்களை பதிந்து கொள்ளும் மகனும் மகளும் நிச்சயம் தாய்க்கும் குடும்பத்துக்கும் பெருமை சேர்ப்பார்கள்
கணவனுக்கு எண்ணெய் தேய்த்துவிடும் பொழுது மனைவி, சத்யபாமா கண்ணனை காத்தது போல் உங்களை காப்பேன் எனும் உறுதி எடுக்க வேண்டும், கண்ணன் தொடங்கிய போரை சத்யபாமா முடித்து வைத்தது போல் உங்களுக்கு நான் துணையாக இருந்து கடைசிவரை குலம் காப்பேன் என பெரும் நம்பிக்கை கொடுக்க வேண்டும்
அது அன்றைய நாளில் கணவனுக்கு மகிழ்ச்சியினை அதிகபடுத்தி குடும்பமே உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைக்கும்
அடுத்து குளியலை முடித்து குடும்பமாக சாமி தரிசனம் செய்யும் பொழுது குழந்தைகள் நரகாசுனிடம் இருந்தும், கணவன்கள் தசரதன் ராமனிடம் கண்ணனிடம் இருந்தும், பெண்கள் கைகேயி சீதை பூமாதேவி சத்யபாமாவிடம் இருந்தும் பாடங்களை கற்க வேண்டும்
இதை மனதால் நினைக்கும் பொழுதே தெய்வம் உங்களை தானாக ஆசீர்வதிக்கும்
இன்னும் ஆழமாக சிந்திக்கலாம்
நரகாசுரன் என்றோ இருந்தான் வரம்பெற்றான் ஆட்டம் போட்டான் அழிந்தான் எனபதல்ல விஷயம், பூமியில் பிறக்கும் ஒவ்வொருவனும் இயல்பால் அவனே
நம் ஒவ்வொருவரிலும் அவன் கண்ணுக்கு தெரியாமல் மனதில் பதுங்கி இருக்கின்றான்
பூமா தேவி அவனை வளர்த்தது போலவே பூமியின் பெண்ணாசை மண்ணாசை பொன்னாசை என எல்லா ஆசைகளிலும் அவன் பின்னால் நிற்கின்றான்
பூமியின் எல்லா ஆசைகளிலும் அவன் உண்டு, அவை மனதில் பேராசையாக வளர வளர அவனும் வளருவான், அதை முதலிலே கவனித்து அழித்தல் வேண்டும்
உங்களால் முடியாவிட்டால் பகவானிடம் சரணடையுங்கள் அவர் ஞான வழிகாட்டுவார், அங்கணம் இல்லாமல் ஆசையில் வளர்ந்து கொண்டே இருந்தால் அந்த ஆசை அகங்காரத்துக்கு இட்டு செல்லும்
அகங்காரத்தின் உச்சியில் ஆடும் பொழுது இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு சக்தி வந்து உங்களை அழிக்கும்
இதுதான் மிகபெரும் தீபாவளி சிந்தனை, நரகாசுரன் என்பவன் எல்லா பூமியின் ஆசைகளிலும் எந்நாளும் இருப்பவன், அதனிடம் கவனம் தேவை
வாழ்வில் நீங்களும் ந்ரகாசுரன் போல் கொடியவர்களால் பாதிக்கபட்டிருக்கலாம், பேராசையும் மிதமிஞ்சிய கற்பனை வாழ்வும் எல்லாமும் எனக்கு எனும் மிகபெரிய கொடிய ஆசையில் அவர்கள் உங்களை துன்புறுத்தலாம்
அவர்கள் பலமும் வளமும் மிகபெரிய காவலும் தொட்டுபார்க்க முடியா பெரும் இடத்திலும் இருக்கலாம்
அவர்களோடு சண்டையிடாதீர்கள் மாறாக கண்ணனிடம் சொல்லுங்கள், அத்தெய்வம் தர்மம் உங்கள் பக்கம் இருப்பின் எந்த பெரும் கோட்டையினையும் காவலையும் தகர்த்து உங்களை காக்கும்
எல்லா பலசாலி அக்கிரமகாரனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும், எல்லா அசுரனும் அழிய ஒரு வழி இருக்கும்
அதற்கான நேரமும் வழியும் தெய்வம் ஒன்றிற்குத்தான் தெரியும் இதனால் அவனிடம் சரணடையுங்கள்
பெரும் பலமான நரகாசுரன் கோட்டையினை தகர்த்து அவனை அழித்த தர்ம சக்தி உங்கள் வாழ்விலும் விடுதலையும் நிம்மதியும் கொடுத்து உங்களை மீட்கும்.
தீபாவளி ஒரு அற்புத பண்டிகை எல்லோருக்கும் சிந்தனையும் நல்புத்தியும் குடும்பமும் உறவும் செழிக்க பல நல்ல விஷயங்களை கொடுக்கும் மிக சிறந்த ஞான ஏற்பாடு
அந்த அருமையான நாளை வெட்டி டிவி நிகழ்ச்சிகள், திரையரங்குகள் இன்னும் குடி கேளிக்கைகளில் நாசமாக்காதீர்கள்
இப்பொழுதெல்லாம் டிவி, அதிக தீனி, கூடுதலாக மது என இப்பண்டிகை திசைமாறி செல்கின்றது இதை தடுத்தல் வேண்டும் மக்கள் புறக்கணித்தல் வேண்டும்
இதை எல்லாம் விடுத்து நல்சிந்தனையில் மனதை செலுத்தி உண்மையான அர்த்தத்தில் தீபாவளியினை கொண்டாட வேண்டும்
அர்த்தமுள்ள தீபாவளியாக ஞானம் கொடுக்கும் தீபாவளியாக அதனை கொண்டாட வாழ்த்துக்கள், தேசம் எல்லா ஞானமும் ஆசீர்வாதமும் பெற்று செழிக்க வேண்டுவோம்