கதிர்காமம், கதிரைகாமம் முருகன் ஆலயம்
இந்தியாவினை தாண்டி உலகெல்லாம் பல இடங்களில் சிறப்பான முருகன் ஆலயங்கள் உண்டு , அவற்றில் முதலிடத்தில் இருப்பது இலங்கையின் கதிர்காமம்
உண்மையில் அறுபடை வீடுகள் என்பது ஆறு அல்ல, கதிர்காமத்தையும் சேர்த்து ஏழு அதுதான் தொடக்கமானது, ஆனால் இலங்கையில் பவுத்த தரப்பிடம் அவ்வாலயம் இருந்துவிட்டதால் இங்கே தமிழகத்துக்குள் ஆறு என சுருக்கி கொண்டார்கள்
உலகின் மிக மிக பழமையான இந்து ஆலயத்தில் குறிப்பாக முருகபெருமான் ஆலயத்தில் அதுவும் ஒன்று
அது காலத்தால் மிக மிக முந்தையது, ஆனால் அது மிக பிரமாண்டமாக எழாமல் போக காரணங்கள் சில உண்டு
இந்துஸ்தானத்தில் எல்லா பழமையான ஆலயங்களும் சிறியதாக இருந்து பெரியதாக எழும்பியவை, மதுரை, திருவரங்கம், திருவாரூர், நெல்லை, திருசெந்தூர் என எல்லாம் சிறியதாக இருந்து இந்து மன்னர்களால் பெரிதாயின
ஆனால் கதிர்காமம் பவுத்த மன்னர்களிடம் சிக்கிகொண்டது, அவர்களுக்கு கதிர்காமம் குலதெய்வம் இன்றளவும் அது சிங்களவர் கையில் உண்டு எனினும் பிரமாண்டமாக்கவில்லை
அது எப்படி இருந்ததோ அப்படியே விட்டுவிட்டார்கள் அல்லது தொட அஞ்சினார்கள்
உண்மையில் எல்லோருக்கும் அதனை தொட அச்சம் இருந்திருக்கின்றது, அதன் சக்தி அப்படியானது
முருகன் ஆலயங்களில் தனித்துவமும் பழமையுமான அந்த ஆலயத்தின் சிறப்புக்கள் கொஞ்சமல்ல, மகா சுவாரஸ்யமும் ஆச்சரியமும்நிறைந்தது
அக்காலத்தில் தலைமன்னார் ஊடாக இலங்கையின் இந்துக்கள் இங்கு திருப்பயணமாக வருவதும் இங்கிருந்து கதிர்காமத்துக்கு திருயாத்திரை செல்வதும் வழமையாய் இருந்தன, பின்னாளில் இது முறிந்துபோயிற்று அதற்கு அன்னிய ஆட்சி மிக முக்கிய காரணம்
இந்த ஆலயத்தினை பற்றி கொஞ்சம் விரிவாக காணலாம்
கதிர்காமம் என்பது இருவகை பொருளில் அமைந்தது, முதலாவது கதிர் என்றால் ஒளி காம என்றால் விருப்பம் , முருகப்பெருமான் தான் தேர்ந்துவிரும்பிய இடத்தில் ஒளிவடிவாய் இருக்கின்றார் என்பது
இரண்டாவது கதிரை என்றால் ஆசனம் என்றொரு பொருள் உண்டு. முருகபெருமான் அரியாசனமாக அமர்ந்த இடம் என்பதால் கதிரைகாமம் என்பது கதிர்காமம் ஆயிற்று என்பார்களும் உண்டு
ஜோதிவடிவில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் இம்மலைக்கு ‘ஜோதிஷ் காமகிரி’ என்றொரு பெயர் உண்டு என தக்ஷிண கயிலாய மான்மியம் கூறுகிறது.
இதன் வரலாறு நீண்டது கந்தபுராண காலத்தில் இருந்தே இது உண்டு, திருசெநதூர் போல மிக பழமையானது
பொது யுகத்துக்கு முன்னரான 500ம் ஆண்டில் விஜயன் என்ற அரசன் கதிரை ஆண்டவருக்கு ஒரு கோயில் அமைத்தான் என என்று “யாழ்ப்பாண வைபவமாலை” எனும் நூல் குறிப்பிடுகிறது.
பொது யுகத்துக்கு முந்தைய இரண்டாம் நூற்றாண்டில் சிபி சோழன் சக்கரவர்த்தி காலத்தில், எல்லாளன் என அவன் அழைக்கபட்ட காலத்தில் வாழ்ந்தவன் என கருதபடும் சிங்களர்களின் நாயகன் துட்ட காமினி எனும் துட்ட கெமெனு இந்த அலயத்தில் வணங்கித்தான் எல்லாளனை வென்றதாகவும், அந்த வெற்றிக்கு காணிக்கையாகத்தான் இந்த ஆலயத்தை மேம்படுத்தினான் என்பது ‘கந்த உபாத்’எனும் சிங்கள நூல் சொல்லும் செய்தி
எனினும் காலவோட்டத்தில் பல மாறுதல்கள் நடந்திருக்கின்றன இப்போதிருக்கும் தோற்றம் 15ம் நூற்றாண்டில் ராஜசிங்கன் எனும் மன்னனால் அமைக்கபட்டது என்கின்றன குறிப்புகள்
இந்த ஆலயம் இலங்கை வரலாற்றில் முக்கியமானது, வேட்டுவ மக்களின் ஆலயமாகத்தான் தொடக்கத்தில் இருந்திருகின்றது, பின்னாளில் பவுத்தர்கள் பெருகினாலும் அவர்கள் குலதெய்வமாக முக்கிய ஆலயமாக இதுதான் திகழ்கின்றது
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இலங்கையின் தொன்மமான மதம் இந்து, பின்னாளில் பவுத்தம் பெருகினாலும் இந்து ஆலயத்தை அவர்களால் மாற்றமுடியவில்லை மரபை விடமுடியவில்லை அப்படியே தொடர்ந்துவிட்டாகள்
சிங்களவருக்கும் தமிழருக்கும் மூல தெய்வம் ஒன்று என பறைசாற்றி நிற்கும் இந்த ஆலயமே இலங்கை ஒருகாலத்தில் இந்துநாடு அதுவும் முருகனை வழிபட்ட நாடு என்பதை தெளிவாக சொல்கின்றது
இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்கு முருகபெருமான் சிலை கிடையாது, உற்சவராக வேல் மட்டும் நிறுவபட்டிருக்கும், கர்ப்பகிரகத்தில் ஒரு யந்திர தகடு மட்டுமே இருக்கும், அது ஒரு பேழையில் வைக்கபட்டிருக்கும்
தலமை அர்ச்சகர் மட்டும், கப்புராளைமார் என அழைக்கபடும் அவர் மட்டும் அங்கு செல்லவும் பூஜை செய்யவும் அனுமதிக்கபடுவார்
இந்த தகட்டை எழுதி தந்தவர் திருமூலர் போல ஒரு மகாஞானி, அவர் பெயச் கமலகிரி மிக நீண்ட காலத்துக்கு முன்பே இலங்கைக்கு வந்து வாழ்ந்திருக்கின்றார், முத்துலிங்க சுவாமி என அங்கு வசித்த அவரின் சமாதி அந்த ஆலயத்தின் அருகிலேதான் உண்டு
சிதம்பரத்துக்கு திருமூலர் போல இந்த கதிர்காமத்துக்கு அவர் வரைந்து தந்த யந்திரம்தான் மூல கருவறையில் பேழையில் உண்டு
அந்த கப்புராளைமார் எனும் தலமை பூசாரி மட்டும் வாயினை கட்டிகொண்டு அங்கு பயபக்தியாய் பூசை செய்வார், அந்த மூலஸ்தானத்தின் அதிர்வு அங்கு இனம்புரியா சூட்சுமத்தை பரப்பும். தள்ளி இருந்தே அதை உணரமுடியும் என்பது அங்கு சென்றோர் சொல்லும் நிஜம்
இதனை ஆங்கிலேயர்களும் பதிவு செய்திருக்கின்றார்கள்
இந்த கோவில் மலையடிவாரத்தில் உண்டு, மலையில் வேல் ஒன்று நிறுவபட்டிருக்கின்றது
இந்த ஆலயத்தின் மூல ஸ்தானத்தில் ஏழு திரைகள் உண்டு, ஏழு திரைகளிலும் முருகப்பெருமான் படமும் அடியார் படமும் உண்டு
தமிழகத்தின் அருணகிரிநாதரும் இடம்பெற்றிருக்கின்றார்
‘மணிதரளம் வீசி அணி அருவி சூழும் மருவு கதிர்காமப் பெருமாள் காண்’ என்று அருணகிரியார் திருபுகழில் எழுதியதால் செய்யபட்ட பெருமை அது
சீதா பிராட்டியாரைத் தேடி இலங்கை வந்த அனு மன், அவளிடம் ராமபிரானின் மோதிரத்தை அளித்து, பிறகு கதிர்காமப் பெருமானை வணங்கிச் சென்றதாக திருப்புகழில் அருணகிரிநாதர் சொன்னதும் கவனிக்கதக்கது
மலையில் இருந்து கிடைக்கும் விபூதிதான் அங்கே பிரசாதம் , அம்மலை திருவண்ணாமலை மலை போல் அவ்வளவு புனிதமானது
கதிர்காமத்தின் முருகன் ஆலயம்தான் சிங்களர் கையில் உண்டே தவிர அருகிருக்கும் பிள்ளையார் சந்நிதி அதற்கு சற்றுத் தூரத்தில், தெய்வானை அம்மன் கோயில் உள்ளது. இது தமிழர்களாலேயே பெரும்பாலும் வணங்கபட்டு வருவதோடு இதன் நிர்வாகவும் இந்துக்கள் வசமே உண்டு
அங்குள்ள தெய்வானை சன்னதி பிள்ளைவரம் தருவதில் பிரசித்தியானது
ஆடிமாதம் திருவோணம் அங்கு மகா விஷேஷம், அந்த பவுர்ணமியன்று பெரும் விழா நடக்கும், அப்போதுதான் கர்ப்பகிரஹ யந்திர பேழை யானைமெல் ஏற்றபட்டு ஊர்வலமாக கொண்டுவரபடும்
அந்த பேழை வலம் வரும்போது இனம்புரியா அமைதியும் மகிழ்வும் ஒரு நிறைவும் அங்கே நிறைந்திருக்கும் என்பது பக்தர்கள் மெய்சிலிர்க்க சொல்லும் அனுபவம்
கதிர்காமமே மூத்த அறுபடை வீடு, சூரபத்மனை முருகபெருமான் அழித்த அந்த காலகட்டங்களில் இருந்து அது தொடர்கின்றது
“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள”
என்பது சிலப்பதிகார வரி
அதாவது முருகப்பெருமான் வீசிய வேலால் தென் கண்டமே மூழ்கியது என்பது பொருள், அப்போது தப்பி பிழைத்ததுதான் இலங்கை தீவு
அந்த தீவில் இருக்கும் தொன்மமான ஆலயம் எனும் வகையில் அது அப்போதே வேல் ஊன்றி தொடங்கபட்டது, தொடக்கத்தில் முருகன் உருவம் இருந்திருக்கலாம் என்பது ஒரு வாதம்
பின்னாளில் பவுத்த எழுச்சியில் அது அகற்றபட்டு பின் மீள வரும்போது சித்தர்களும் ஞானியரும் இங்கிருந்து சென்று இந்துமதத்தை மறுபடி ஸ்தாபிக்கும் போது அப்பேழையும் யந்திரதகடும் வைக்கபட்டு வேல் ஊன்றபட்டிருக்கலாம் என்பதும் இன்னொரு வாதம்
எது எப்படியாயினும் முருகபெருமானின் தலங்களில் பழமையானதும், மிக சிறப்பு வாய்ந்ததும் சக்திய்வாய்ந்ததும் அதுதான்
இது புத்தமதம் வாழ உருவான நாடு என சிங்களவர்கள் சொல்லிகொண்டாலும் அவர்களின் பூர்வீகம் இந்து மதம் என்பதை அசைக்கமுடியாமல் சொல்வதும் அந்த ஆலயம்தான்
எந்த அளவுக்கு சிங்களவர்கள் அதனை கொண்டாடுகின்றார்கள் என்றால், முருகபெருமான் பெயரில் காசோலை எனும் செக் எழுதிபோட்டால் காணிக்கை பெட்டியில் போட்டால் அது வங்கியில் செல்லுபடியாகும்
அந்த அளவுக்கு மூல தெய்வம் அது
சிங்களவரில் கிறிஸ்தவர் பவுத்தர் இந்துக்கள் என எல்லா தரப்பாலும் ஜாதி இனம் மொழி கடந்து வணங்கபடும் பெரும் ஆலயம் அது, இலங்கையின் காவல் தெய்வம் என அந்த முருகனைத்தான் வணங்குகின்றார்கள்
முருகன் தமிழ்கடவுள் என்பதெல்லாம் அரசியலுக்கான விளம்பரம், கதிர்காமத்தில் அவர் சிங்களனுக்கான பெரும் தெய்வமாகத்தான் நின்றுகொண்டிருக்கின்றார்
அவர்கள் அரசின் உச்ச பீடங்களும் பவுத்த பீடத்தின் தலமையும் ஓடி ஓடி சென்று பணியும் ஆலயம் அது
1918ல் இந்த ஆலயத்துக்கு செல்வோரை தடைசெய்து அதனால் மதம்மாற்றலாம் என சில ஆலோசனைகளில் பிரிட்டிஷ் அரசு அனுமதியின்றி செல்ல தடைவிதித்தது, சென்றால் பெரும் தொகை அபராதம் என அறிவித்தது
ஆனால் மக்கள் போராடி அதனை மீட்டனர், பின் நிலமை சுமூகமாயிற்று, எல்லோருக்குமான வழிபாடுகள் தொடர்ந்தன
பழனி , திருசெந்தூர் பாத யாத்திரை போல இலங்கையின் பல இடங்களில் இருந்தும் கதிர்காமம் செல்லும் யாத்திரை பிரசித்தியானது, கலவரசூழலால் அது பாதிக்கபட்டபோது அதை மீள தொடங்கியவர் ஒரு அமெரிக்கர்
பெட்ரிக் ஹரிகன் எனும் அமெரிக்கர் 1972ல் அதை மீள தொடங்கி இப்போதுவரை அது பிரசித்தியாக நடக்கின்றது
அங்கு ஒவ்வொரு நாளும் திருவிழா, ஆடிமாதம் திருவோணம் பெருவிழா
நல்ல முருகபக்தன் கதிர்காமத்தை ஒருகாலமும் தவறவிட கூடாது, முருக பக்தர்கள் இந்தியாவின் தமிழகத்துக்குள் மட்டும் தங்கள் திருயாத்திரைகளை சுருக்குதல் சரியல்ல
முருகபெருமானை மனதார வேண்டிகொண்டால் அவரே தன் அதிமுக்கிய ஆலயத்துக்கு தன் பக்தர்களை அழைத்து செல்வார், மனமார வேண்டினால் வாய்ப்பு நிச்சயம் வரும்
அங்கு சென்று அந்த அற்புதமான யந்திரத்தின் சூட்சும அருள் வீசும் ஆலய சன்னதியில் வழிபட்டால் கோடிநன்மை முருகபெருமான் அருளால் கைகூடும்
சஷ்டியில் முருகபெருமானை வழிபடுவோர் அந்த ஆலயத்தையும் மனதார் நினைந்து வணங்கினால் கூடுதல் பலன் நிச்சயம் உண்டு, அவ்வளவுக்கு முருகப்பெருமானின் அருள் சூரிய கதிர்போல் எல்லா இடமும் வீசும் கதிர்காமம் அது.