அட்ட வீரட்டானத் தலங்கள் 3

திருவதிகை – திரிபுரசுந்தரி சமேத வீரட்டானேஸ்வரர்

சிவபெருமான் அகங்காரம் கொண்டோரை தோற்கடித்து அவர்களின் அகங்காரங்களை அழித்த தலத்தில் முக்கியமானது திருவதிகை தலம்.

திரிபுரம் எரித்த சிவனின் பெருமையினை சொல்லும் தலமாக, அந்த சம்பவத்தின் மிக முக்கிய அடையாளமாக, இங்குதான் அந்த காட்சி நடந்தது என தேர்வடிவில் நிறுவபட்ட ஆலயம் அது

ஆம், தேர்வடிவில்தான் அது அமையபட்டிருக்கும், சிவபெருமான் ஒரு தேரில் இருந்துதான் அந்த திரிபுரத்தை எரித்தார் என்பது புராணம்

அப்படியே வில்லும் பாணமுமாக அந்த திரிபுரம் எரித்த கோலத்தில் உதட்டில் புன்னகையோடு இருக்கின்றார் வீராடனேஸ்வரர்

இந்த ஆலயம் பன்னெடுங்காலத்துக்கும் முந்தையது மிக மிக பழமையானது.

மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் இக்கோயிலுக்குப் பொன்வேய்ந்து நூற்றுக்கால் மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை ஆகியவற்றை அமைத்து, அம்பாள் கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி.

இன்னும் சோழர்களும் பல்லவர்களும் பெரும் திருப்பணி செய்திருக்கின்றார்கள், பவுத்த காலத்தில் அதனை பவுத்த ஆலயமாக மாற்ற முயற்சி செய்து பின் முறியடிக்கபட்டுவிட்டது

எனினும் வட இந்தியாவில் ஆப்கானிய அடையாளம் இந்து ஆலயங்களில் காணபடுவது போல இங்கே பவுத்த சிலைகள் இன்றும் உண்டு

அதாவது அப்படியான காலத்தையெல்லாம் கடந்து நிற்கும் ஆலயம் இது

இந்த ஆலயத்தில்தான் அப்பர் பெருமான் தன் வயிற்றுவலி நீங்கபெற்று சைவம் தழுவினார், சமணராய் இருந்த அப்பர் கடும் வயிற்றுவலியால் துயருற்று சாகும் தருவாயில் தன் அக்கா திலகவதியினை காண வந்தபோது அவருக்கு அந்த திலகவதியார் திருநீறு பூசி நோயினை குணமாக்கிய இடம் இதுதான்

இங்குதான் அவரை சிவன் முழுக்க ஆட்கொண்டார்

இந்த ஆலயத்துக்கு வரதகுதி இல்லை என அஞ்சி சுந்தரர் ஒதுங்கி செல்லும்போது சிவனே அவரை அழைத்த அதிசயமெல்லாம் இங்கு நடந்தது

சுந்தரருக்கு திருவடி தீட்சை இந்த ஆலயத்தில்தான் கிடைத்தது

திருஞான சம்பந்தர் இங்கு பாடியிருகிறார், இந்த பாடலை பாடி தொடங்கித்தான் இந்த ஆலயம் பற்றி ஒரு பதிகமே பாடினார்

திருஞானசம்பந்தர் சிவநடன காட்சியினை இந்த ஆலயத்தில்தான் கண்டார்

“குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்

கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்

வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை

விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே”

நோய் தீர்ந்த அப்பர் பெருமான் அந்த இடத்திலே பாடலை இப்படி பாடி ஒரு பதிகம் அமைத்தார். அது நான்காம் திருமுறையில் உண்டு

“கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன்

ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே”

இத்தலத்தில் சுந்தரர் ஏழாம் திருமுறை பதிகத்தை இந்த பாடலினால் தொடங்கினார்

“த‌ம்மானை அறியாத சாதியார் உளரே

சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்

கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல்

உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்

தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்

ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்

எம்மானை எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே”

கபிலதேவ நாயனார், பதினொன்றாம் திருமுறையில் உருக்கமாக பாடினார்

“மதிமயங் கப்பொங்கு கோழிருட் கண்டவ விண்டவர்தம்

பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ நற்றவர்சூழ்

அதிகைமங் கைத்திரு வீரட்ட வாரிட்ட தேனுமுண்டு

கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே”

மனவாசங்கடந்தவர் எனும் பெரும் சிவனடியார் இங்கிருந்துதான் உருவாகி பெரும் ஞானியாக திகழ்ந்தார், இன்னும் பெரும் அதிசமெல்லாம் உண்டு

இப்படி மகா பிரசித்தியான அந்த திருவதிகை ஆலயம் பற்றி, இன்றும் எல்லா விதமான வயிற்று வலி சிக்கல் இதர நோய்களை தீர்க்கும் அருள்தலமாக நிற்கும் அந்த சக்திமையத்தினை பற்றி காணலாம்

அந்த ஆலயம் அமைய மூல காரணம் அந்த திரிபுரம் எரித்த புராணம்

வ‌டமொழி மகாபாரத்தின் அநுசாசந பர்வதத்திலும், யஜூர் வேதத்திலும், சரபோபநிடதத்திலும், மச்சபுராணம், கந்தபுராணம், லிங்கபுராணம் என பல இடங்களில் இந்த வரலாறு உண்டு

தார்அந்த புராணத்தின் சாயலாக புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் என சங்க இலக்கியத்திலும் உண்டு

சிலப்பதிகாரமும் இந்த புராணம் பற்றி தெளிவாக சொல்கின்றது, தஞ்சாவூர் ஆலயம் முதல் பல ஆலயங்களில் இந்த புராண காட்சி சிற்பமாக உண்டு

கடலூர் அருகே கடிலம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் அந்த ஆலயத்தின் மூலமான திரிபுரம் எரித்த கதை எல்லோரும் அறிந்தது என்றாலும் மீண்டும் அதை காணலாம்

தாரகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் மூன்று பேர் உண்டு. வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவரும் பெரும் சக்திபெற தவமிருந்தார்கள்

அசுர குலம் ஆளவும் மூவரும் பெரும் அரசர்களாய் ஆளவும், எதிரிகளே இல்லா நிலைபெறவும், பெரும் காவல் பெறவும் சிறப்பு வரத்துக்காக பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள்.

அவர்கள் தவத்தினால் பிரம்மனும் தோன்றி வரமருள முன்வந்தான்

அவர்கள் வினோதமான வரத்தை கேட்டார்கள், அதுவரை அசுரர்களின் கோட்டைகள் நிலங்களில் நிலையாய் இருந்தன அதனால் போர் என்றால் சிக்கனாலது

இம்முறை ஆகாயத்தில் அதுவும் நக்ரும்படி கோட்டைவேண்டும், அதுவும் பல வரங்களோடு வேண்டும் என கேட்டார்கள்

பிரம்மனும் தலையசைத்தான்

அதன்படி “நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் மூவருக்கும் முடிவு வேண்டும் வேறு எதனாலும் அழிவு வரகூடாது” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள்.

பிரம்மன் அவர்கள் வரத்தை ஒரு நிபந்தனையோடு ஏற்றுகொண்டார்

இந்த மூன்று கோட்டைகளும் ஆயிரம் வருடத்துக்கு ஒருமுறைதான் ஒரு புள்ளியில் கொஞ்சநேரம் சந்திக்க வேன்டும், அப்போது ஒரு கனையால் மட்டும் அவர்களை அழிக்கமுடியும், அந்த நொடி கடந்துவிட்டால் யாராலும் இவர்களை அழிக்கமுடியாது என வரமருளினார்

அப்படி தங்கம் வெள்ளி , இரும்பாலான மூன்று பறக்கும் கோட்டைகள் அவர்களுக்கு கிடைத்தன‌

மூவரும் பறக்கும் கோட்டைகளில் ஆளுக்கொரு பக்கம் சென்று அகதளம் செய்தனர், எல்லா உலகமும் அண்டமும் அவர்களின் வெற்றிக்கான இடமாயிற்று

அவர்கள் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள். தேவலோகத்தை மட்டுமல்ல எல்லா லோகத்தையும் கைபற்றி ஆள தொடங்கினார்கள், அந்த பறக்கும் கோட்டையில் இருந்து அண்ட சராசரத்தின் எல்லா உலகங்களையும் கைபற்றி ஆட்சி செய்து எல்லோரையும் இம்சித்தார்கள்

எல்லா உலகமும் இவர்களால் பெரும்பாடுபட்டது, அதே நேரம் பிரம்ம வழிபாடும் சிவவழிபாடும் மிக சரியாக செய்தார்கள், சிவலிங்க வழிபாடு எப்பொழுதும் நடந்தது

இவர்கள் தேவர்களின் கடமைகளை செய்யவிடாமல் அடிமையாக்கி பிரபஞ்சத்தையே ஆட்டுவித்ததால் நடுங்கிய தேவர்கள் விஷ்ணுவிடம் சரணடைந்தனர்

அவர்களை அழிக்க வல்லவர் சிவன் ஒருவரே ஆனால் தன் பக்தர்களை அவர் அழிக்க தயங்குவார், அவர் அவர்களை அழிக்கவேண்டுமானால் முதலில் சிவவழிபாட்டை அவர்கள் கைவிட வேண்டும் என சிந்தித்த விஷ்ணு அதற்கொரு திட்டம் வகுத்தார்

ஆதிபுத்தர் எனும் தன் அம்சத்தை நாரத முனியுடன் அவர்கள் கோட்டைக்கு அனுப்பினார், அவரும் அவர்களை பெரிதாக புகழ்ந்து எல்லா உலகையும் எல்லா அண்டத்தையும் ஆளும் நீங்கள் இன்னும் சிவனை நினைப்பதேன், அவரே சக்தியற்று போய்விட்டார் , அப்படி சக்தியாக இருந்தால் உங்கள் முன் வந்திருப்பார் அல்லவா?

அவரே உங்களை கண்டு நடுஙுகும்போது நீங்கள் ஏன் அவரை இன்னும் வணங்கவேண்டும் என தூபமிட்டார்,அந்த புகழ்சிக்கு மயங்கி அவர்களும் சிவனை மறந்துவிட்டனர்

ஆணவம் அவர்களை ஆள தொடங்கிற்று, அந்த மூவரும் சிவவழிபாட்டை மறந்தனர், சிவலிஙகத்தை கைவிட்டனர், விருப்படி தங்களே கடவுள் என சொல்லிகொண்டனர், பிரம்மனையும் மறந்தனர்

இப்படி அவர்கள் தன்னை மறந்து அகங்காரிகளாக ஆடும்பொழுது சிவன் அவர்களை அழிக்க திருவுளம் கொண்டார்

அந்த ஆதிபுத்திரரும் அந்த மூவரையும் தூண்டிவிட்டு கொண்டே இருந்தார், இனி இந்த உலகுக்கு நீங்களே மும்மூர்த்திகள், அதனால் மூவரும் ஒன்றாய் வாருங்கள் உங்களை அழிக்க யாருமே இல்லை என ஆசையினை தூண்டினார்

அகங்காரமிக்க மூவரும் சாபம் மறந்து ஒன்றாய் கூட விரும்பினர், அப்படி கூடினாலும் அழிவிவில்லை என நம்பினர்

அவர்கள் கூடும் நேரம் அவர்களை அழிக்க சிவன் திருவுளம் கொண்டார், ஆனாலும் அவர் ஒரு திருவிளையாடல் நடத்த விரும்பினார்

எல்லா தேவர்களின் சக்தி கிடைத்தால்தான் அவர்களை அழிக்கமுடியும் அதனால் எல்லா தேவர்களும் அவரவர் சக்தியினை தரவேண்டும் என கேட்டுகொண்டார்

அவர்களும் சிவனே தங்கள் உதவியினை கோருகின்றார் என மெல்லிய அகந்தை கொண்டார்கள்

அதன் பின் விஸ்வகர்மா, ரதம் ஒன்றை தயாரிக்கத்தான், மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்தது

நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கினார்கள், சூரிய சந்திரர்கள் சக்கரமானார்கள். எட்டு தட்டுடன் அந்த தேர் வைதீகதேர் என உருவானது

வேதங்கள் குதிரைகளாக வந்ததால் அதன் சாரதியாக பிரம்மனே அமர்ந்தார், ஓம் எனும் மந்திரம் பிரம்மனின் சாட்டையாயிற்று

விஷ்ணுவினை சக்திமிக்க ஒரே அம்பாக்கி (சக்திமிக்க அம்பால்தான் அவர்களை அழிக்க முடியும்) பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான்.

சிவன் ஏறியபின்னும் தேர் நகரவில்லை காரணம் தேரின் அச்சு யமனும் அக்னியுமாக இருந்தார்கள் அவர்கள் இல்லாமல் சிவன் வெல்வது முடியாது

விநாயகர் இதை கவனித்து தேர் அச்சுக்கு வேறு ஏற்பாடுகளை செய்து இருவரையும் அந்த கனையில் அமர வைத்தார்

போர் தொடங்கும் நேரம் எல்லா தேவர்களுக்கும் அகம்பாவம் வந்தது, தாங்கள் தங்கள் சக்தியினை கொடுத்ததாலே இந்த யுத்தம் சாத்தியம் என கர்வம் கொண்டார்கள்

சிவன் மெல்ல புன்னகைத்தார் தேர் பறக்க தொடங்கிய கொஞ்ச நேரத்தில் வீழ தொடங்கிற்று தேவர்கள் அதிர்ந்த நேரம் திருமால் வந்து தாங்கிகொண்டார்

இப்போது அவருக்கும் மெல்லிய கர்வம் வந்தது

தாங்கள் இல்லாவிட்டால் சிவனின் இந்த யுத்தம் இல்லை என தேவர்கள் இருமாந்திருக்க, பிரம்மனும் திருமாலும் மெல்லிய கர்வம் கொண்டிருக்க அப்பக்கம் தங்களுக்கு அழிவே இல்லை என்ற மூன்று அசுரர்களும் கொக்கரித்து கொண்டிருந்தார்கள்.

எல்லோரின் அகங்காரத்தையும் கண்ட சிவன் மெல்ல புன்னகைத்தார் அப்போது தான் ஆந்த அதிசயம் நிகழ்ந்தது

விஷ்ணு அம்பாக இருந்து, அந்த வில்லை சிவன் நாணேற்றிய நிலையில் அந்த பாணத்தை செலுத்தாமல் புன்னகைக்க மட்டும் செய்தார்

விளைவு அந்த புன்னகையிலே முப்புரம் எனும் அந்த மூன்று கோட்டையும் எரிந்து சாம்பலாயின, அந்நேரம் அகந்தை அழிந்த மூவரும் சிவனை நினைந்து கதறினார்கள் மூன்று அசுரர்களும் சிவன் காலடியில் விழுந்தனர், பழைய சிவபக்தி அவர்களுக்கு வந்தது

தங்கள் உதவியினை பெறாமலே ஒரு புன்னகையிலே சிவன் முப்புரத்தை எரித்து அசுரர்களை அழித்ததை கண்ட தேவர்கள் சிவனின் ஆற்றல் அறிந்து அகந்தையினை அகற்றி பணிந்தார்கள்

எல்லாரின் அகந்தையும் அங்கே அழிந்துபோனது, எல்லாம் நலமாயிற்று

இதுதான் சிவன் முப்புரத்தை எரித்த கதை

“ஏற்றார் மூதூ ரெழில்நகை யெரியின் வீழ்வித் தாங்கன்” என மாணிக்க வாசகர் சொல்வார்

“முப்புர மாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யார்அறி வாரே” என திருமூலரும் தத்வார்த்தமாக சொல்வார்

இந்த புராண கதையின் தாத்பரியம்தான், எல்லா அகங்காரத்தையும் சிவன் அழிப்பார் என்பதுதான் அங்கே அந்த திருவதிகை ஆலயத்தின் பெரும் நம்பிக்கையாக உண்டு

இதனாலேதான் அங்கு செல்வோருக்கெல்லாம் அகந்தை நீங்கி ஞானமும் தெளிவும் கிடைக்கின்றது

ஏன் அகங்காரம் கூடாது என்றால் இருவிஷயங்கள் உண்டு அது ஆன்மீக மற்றும் லவுகீகமானது

அகங்காரமும் அகந்தையும் அழிவுக்கு முந்தையது, அவை ஒருமனிதனை அழித்தேவிடும். அகங்காரம் இருக்கும் வரை ஒருவனுக்கு நிம்மதி இருக்கபோவதில்லை

கயிற்றில் கட்ட்பட்ட மாடு அதை கையில் வைத்திருப்பவன் செல்லுமிடமெல்லாம் செல்வது போல அகந்தை ஒருவனை எங்கெல்லாமோ அழைத்து சென்று வீழ்த்திவிடும்

அகந்தை இருக்கும் வரை ஒருவனுக்கு ஞானமோ தெளிவோ கிடைக்கபோவதில்லை அது அகலுமிடத்தில்தான் ஞானம் பெருகும்

அதனால் நிமம்தியும் தெளிவும் ஏற்பட அகங்காரம் களைதல் வேண்டும், அதை சிவன் அருள்வார் என்பதை சொல்வதே இத்தலம்

இந்த புராண காட்சிக்கு, அதாவது முப்புரம் எரித்த சம்பவத்துக்கு இன்னொரு பொருளும் உண்டு

ஆணவம், கண்மம், மாயை எனும் முக்குணங்களையும் சிவன் எரித்துவிடுவார், சிவனை பணியும் போது இந்த மூன்று மலங்களும் அதாவது குற்றங்களும் அழிந்துபோகும் என்பது ஆன்மீக தத்துவம்

அட்ட வீரட்டான தலங்களில் மூன்றாவது முக்கிய தலமான இந்த தலம் அப்பர் சுவாமிகள் வயிற்றுவலி தீர்ந்த காலம் தொட்டு வயிறு சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தலமாக விளங்குகின்றது

இதன் காரணம் மிக மிக எளிதானது, ஒருவகையில் விஞ்ஞான மருத்துவமும் இந்த ஆலய தத்துவமும் இங்கு ஒரே புள்ளியில் இணைகின்றன‌

மானிட உடல் விசித்திரமானது, ஒவ்வொரு உணர்வுக்கும் ஒவ்வொரு உள்ளுறுப்பில் மாற்றம் வரும், சில உணர்வுகளில் சிந்தை மூழ்கும் போது அதன் உணர்வுகள் உடலுக்குள் எதிரொலிக்கும்

அதனை விஞ்ஞானம் ஹார்மோன்கள் என சொல்லும், இந்துமதமோ பொதுவாக இது உட்லை பாதிக்கும் என சொல்லி போதிக்கும்

அச்சம், கவலை, பயம், ஆவேசம், பொறாமை, துக்கம் போன்ற உணர்வுகளெல்லாம் கெடுதல் செய்யும் உணர்வுகள் அது உடலை பாதிக்கும், இதனாலே இந்துக்கள் இவற்றை கூடாது என்றார்கள்

விஞ்ஞான மருத்துவம் இதனை இந்த உணர்வுகளால் உடலில் ஹார்மோன் சுரந்து கெடுதல் விளைகின்றது என்கின்றது

அதையே மருந்து என ரசாயாணத்தை கொடுத்து சரிசெய்ய முயன்று அங்கே காசை பிடுங்கும் தொழிலும் செய்து ஒரு நோயினை பல நோயாக்கும் கொடுமைகளை இன்றைய விஞ்ஞானம் செய்கின்றது

இந்துமதமோ அதன் ஆணிவேரை தொட்டு அதை பிடுங்கி எறிந்தால் எல்லாம் சரியாகும் என ஞானமாய் போதித்தது

ஆம், கலங்கடிக்கும் உணர்வுகள் இதயத்தை பாதிக்கும் சில உணர்வுகள் அப்படியே வயிற்றையும் பாதிக்கும்

பெரும் வலியான விஷயங்கள் சோகமான அச்சமான விஷயங்கள் கேள்விபட்டதனால் நெஞ்சமும் வயிறும் கலங்குவதை உணரலாம்

இங்கேதான் அகங்காரம் தவிர்த்தல் அவசியம்

அகங்காரம் கொண்ட மனம் எப்போதும் எங்காவது மோதி, எங்காவது சண்டையிட்டு எதையாவது குழம்பி தன்னால் முடியாததா? தான் தோற்பாதா? தான் தான் தான் , தனக்கு என கர்வத்திலே இருக்கும்

இந்த கர்வம் தான் இருக்கும் மனதை நிம்மதியாய் இருக்கவிடாது, தான் எனும் கர்வம், தன் பெரிய நிலை, அடுத்த கட்ட உயர்வு , அடுத்தவரோடு ஒப்பீடு, அதில்வரும் வெற்றி தோல்வி என எல்லாமும் உடலை பாதிக்கும்

ஒவ்வொரு போராட்டமும் மனதால் நடக்கும் போது உடலிலும் மாறுபாடு வரும், அந்த மாறுபாடு உடலில் நோயாக தங்கும்

கர்வம் கொன்ட நெஞ்சில் ஏற்படும் மாற்றங்கள், சிந்த்தனையின் கர்வத்தால் ஏற்படும் ஏற்றதாழ்வு மனப்பான்மை எல்லாம் வயிற்றில் நோயாக தங்கும்

தன்னை சமணராக மிக உயர்ந்தவராக கருதி பல வாதங்களை கோபம் ஆத்திரம் கர்வம் என கொண்டிருந்த அப்பர் சுவாமிகள் அப்படித்தான் குன்மம் எனும் வயிற்றுவலியால் முடங்கினார்

அவரின் அந்த வயிற்றுவலியினை சிவன் தீர்த்தார் என்பது அவரின் நோய்க்கான மூலமாக அகங்காரத்தை, சமணத்தால் ஏற்பட்ட அகங்காரத்தை சிவன் நீக்கினார் அப்படியே அந்த கர்மவினையால் வந்த நோயினையும் நீக்கினார் என அர்த்தமாகின்றது

அகங்காரம் நீங்கிய அந்த அப்பசுவாமிகள் பின் சைவரானார், அதன் பின் அவரின் பழைய அகங்காரத்தை நாம் எங்குமே கண்டிருக்கமுடியாது

அதன் பின் ஆளே மாறிபோனார், எல்ல்லா துன்பங்களையும் இனிதே தாங்கினார், யாருக்கெல்லாமோ அழுதார், இறந்த பாலகனை உயிர்பித்தார்

சம்பந்தர் எனும் சிறுவன் முன்னால் அகங்காரமில்லாமல் விழுந்து வணங்கினார், அவரின் மனம் அவ்வளவு பக்குவமும் ஞானமும் பெற்றிருந்தது

சுந்தரர் ஏன் அங்கே வருவதை தவிர்த்தார் என்றால் தான் அகங்காரமிக்கவனோ எனும் அச்சம் அவருக்குள்ளே இருந்தது, தன்ன அப்படி தாழ்த்தியவர் தனக்கான தகுதி அங்கு செல்ல இல்லை என எண்ணியவரைத்தான் சிவன் அழைத்து அருள் செய்தார்

திருவடி தீட்சையும் வழங்கி ஆட்கொண்டார்

அந்த தலம் அபப்டியான மகிமையினை கொண்டது

உடலின் பலவித நோய்களுக்கு மனமே காரணம், மனதில் இருக்கும் ஆங்கார உணர்வும் அது கொடுக்கும் அச்சமும் கவலையும் பயமுமே பெரும் காரணம்

எல்லா கவலைக்கும் அச்சத்துக்கும் தேவையற்ற குழப்பத்துக்கும் அகங்காரமே காரணமாய் இருக்கின்றது

தான் யார்? தான் தோற்றுவிடுவோமோ? தன் நிலை அப்படி ஆகுமோ இப்படி ஆகுமோ எனும் அந்த அச்சமு போராட்டமுமேதான் ஏராளமான நோய்களுக்கு காரணம்

பருவகால நோய்கள், கிருமிகளால் உணவுகளால் வரும் நோய்கள் மருந்தில்தீரும், இப்படி மனகுழப்பத்தால் வரும் நோய்கள் இறை சன்னதியில்தான் தீரும்

அப்படி ஒரு ஆலயம்தான் திருவதிகை ஆலயம்

வாழ்வின் துயரங்களாலும் லவுகீக நெருக்கடிகளாலும் மாய அகங்காரங்களாலும் நீங்கள் பாதிக்கபட்டு நோயுற்றிருந்தால் அந்த நோய் வயிறுவரை தாக்கியிருந்தால் நம்பிக்கையோடு அத்தலம் செல்லுங்கள், அந்த சிவன் உங்கள் நோய் தீர்த்து நோயின் மூலமும் தீர்ப்பார்

மற்றவர்களும் அந்த சிவனை சந்திக்க செல்லலாம், அவன் அருளால் அந்த திருவதிகை நாதனின் திருவருளால் அகங்காரமும் அது கொடுக்கும் மாய நோய்களும் ஒருகாலமும் உங்களை அணுகாது, அங்கே சரணடைவோர்க்கு மனதாலும் உடலாலும் எந்த நோயும் நெருக்கடியும் வராது, இது சத்தியம்