அட்ட வீரட்டானத் தலங்கள் 7
திருக்குறுக்கை (கொருக்கை) – ஞானாம்பிகை சமேத வீரட்டேஸ்வரர்
அட்ட வீரட்டானத் தலங்களில் மகா சிறப்பான இந்த தலம், ஏழாம் தலமான இந்த அருள்தலம் மயிலாடுதுறை அருகே காவேரி கரையில் அமர்ந்துள்ளது, தேவாரம் பாடபட்ட தலங்களில் இது முக்கியமானதாகும்.


குறுக்கை முனிவரின் பெயரால் அறியபட்ட்ட தலம் இது, “தீர்த்தவாகு” முனிவர் என்றொருவர் இருந்தார், அவரின் பிரதான பணி செல்லும் இடமெல்லாம் கங்கையினை வரவழைத்து கங்கை நீரால் அங்கிருக்கும் தெய்வத்துக்கு அபிஷேகம் செய்வது, சிவாலயங்களில் இதனை பிரசித்தியாக செய்தார்
அவருக்கு ஒரு வரம் உண்டு , அவர் கையினை உயர்த்தினால் அது வானம் வரை நீளும், அப்போது கங்கா தேவி ஒரு குடம் நீர் கொடுப்பாள், அதை தன் கரங்களால் பெறுபவர் பின் கரத்தை சுருக்கி அபிஷேகம் செய்வார்
இதனால் அவருக்கு மெல்லிய கர்வம் இருந்தது
அந்த கர்வத்தோடு இந்த ஆலயம் வந்தார், அங்கே கங்கையினை வரவழைக்க அவர் முயன்றபோது அவரின் கை நீளவில்லை மாறாக குறுகிற்று
ஏதோ பெரும் பாவம் செய்துவிட்டேன் அதனால் தவறு நிகழ்ந்ததுவிட்டது என வருந்திய முனிவர் அங்கே பாறையில் மோதி சாகதுணிந்தபோது சிவன் வந்து அவரை ஆட்கொண்டார், அவரின் கர்வம் அங்கே உடைந்தது
அநத முனிவர் பெயரில் குறுக்கை என்றழைக்கபட்ட ஆலயம் பின் திருகுறுக்கை என்றானது
யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்பன இந்த ஆலயத்தின் வேறு பெயர்கள். திருமால் லட்சுமி பிரம்மனெல்லாம் வந்து வழிபட்ட ஆலயம் இது
இந்த ஆலயம் பற்றி திருமூலர் பாடியிருக்கின்றார்
“இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியதுபோக்கி
திருந்திய காமன் செயலழித்தங்கண்
அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே”
அப்பர் பாடிய நான்காம் திருமுறை அந்த ஆலயத்தை பற்றியது
“ஆதியிற் பிரம னார்தாம்
அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவர்
உணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச்
சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ் சோலைக்
குறுக்கைவீ ரட்ட னாரே”
“வாரட்ட கொங்கை மலையாளொடுங் கொறுக்கை
வீரட்டமேவும் வியனிறைவே” – வள்ளலார் அருட்பா.
இந்த ஆலயத்தின் வரலாறு சிவன் மன்மதனை எரித்து , காமதகனம் செய்த அந்த புராணத்தின் வடிவம். காமதகனம் இங்கே நடைபெற்றது என்பதும், நெற்றிக்கண்ணால் ருத்திர கோலத்தில் சிவன் மன்மதனை எரித்துபோட்ட இடம் இது என்பதும் வரலாறு
ஆம், காமதேவன் எனும் அணங்க தேவனை சிவன் எரித்துபோட்ட இடம் இதுதான்.
இந்த வரலாற்றை காணுமுன் காமம், காமதேவன் எனும் அணங்கதேவன் பற்றி முழுமையாக புரிந்துகொள்ளல் வேண்டும்
மன்மதன் என அழைக்கபடும் அந்த தேவன் சிற்றின்ப அதிபதி என்றும், சிற்றின்ப ஆசையினை தூண்டிவிடுபவன் என்றும் இங்கே நம்பவைக்கபட்டிருக்கின்றது
உண்மை அது அல்ல
காமம் என்றால் தீராத ஆசை அல்லது மயக்கம், இனம்புரியா மயக்கம். உளமார்த்த பிணைப்பு, இல்லாத ஒன்றை இருப்பதாக கருதி அதுவே நிரந்தரமென கருதி அங்கே மயங்கி பிணங்கி கிடக்கும் ஒரு மயக்க நிலை
அந்த புரிந்துகொள்ளமுடியா மயக்கத்தினாலேதான், இனம்புரியா ஈர்ப்பில்தான் உயிர்கள் பெருகுகின்றன, படைப்பின் ரகசியம் அதுதான் என்றாலும், சூட்சுமம் அதுதான் என்றாலும் அதனை நெருப்பு போல கையாள வேண்டும், அளவுக்கு மீறினால் அது ஆபத்து அந்த மயக்கம் பேராபத்து என எச்சரித்தது இந்துமதம்
காமதேவன் என்பவன் உயிர்களுக்குள் ஒரு தீரா மயக்கத்தை, ஒரு ஆத்மார்த்த பிணைப்பை ஏற்படுத்தும் தெய்வமாக அறியபடுகின்றான்
நிச்சயம் அவன் போகத்துக்கோ சிற்றின்பத்துக்கோ உள்ள தெய்வம் அல்ல, அதற்கு இந்திரன் எனறொருவன் உண்டு
காமன் என்பவன் தீரா பாசபந்தத்தை கொடுப்பவன், இரு உள்ளங்களிடையே பெரும் பந்தத்தை பாறைபோல் உருவாக்குபவன், அசைக்கமுடியா தீரா காதலும், தீரா அன்பும் அவன் உருவாக்கும் உணர்ச்சியில்தான் அவன் அருளில்தான் வரும்
இதனாலே அவனை “அணங்க தேவன்” என வணங்கினார்கள் இந்துக்கள்
ஆண்டாளின் நாச்சியார் திருமொழி பாடல் அதை தெளிவாக சொல்கின்றது, மார்கழி நோன்பை தொடர்ந்து தை மாசி மாதம் “அணங்க தேவன்” நோன்பு இருந்திருக்கின்றது, இங்கு வழிபட்டிருக்கின்றார்கள்
மன்மதன் என்பவன் ஆத்ம ரீதியான காதலை கொடுப்பவன், ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆத்ம பந்தத்தை ஆயுளுக்கும் கொடுப்பவன் என்பதுதான் இந்துமத போதனை
இங்கே ஆண்டாளின் நாச்சியார் திருமொழி மட்டுமல்ல, சங்க இலக்கியங்களும் மன்மதனின் விழா “காமதேவன் விழா” என கொண்டாடபட்டதை சொல்கின்றது
அவன் கொடி மகரகொடி என்பதை சொல்லி, அவன் பண்டிகையில் இக்கொடியினை ஏற்றுவார்கள் என்கின்றது அகநானூறு பாடல்
“நான்மறை முதுநூல் முக்கட்செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கைசூழ்ந்த பொழில்மனைமகளிர்
கைசெய்பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகரநெற்றி வாந்தோய் புரிசைச்
சிகரம் தோன்றா சேணுயர் நல் இல்”
என அகநானூற்றுபாடல் மன்மதன் விழா அவன் கொடியோடு கொண்டாடபட்டதை சொல்கின்றது.
“காமற்கு வேனில் விருந்தெதிர்கொண்டு ” “காமவேள்” என மன்மதனை கலிதொகை நிறைய இடங்களில் சொல்கின்றது
“பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழு குவான்”
என காமனை கொண்டாடுகின்றார் வள்ளுவ நாயனார்
“‘இரதி காமன் இவன் இவள் எனாஅ
விரகியர் வினவ விடையிறுப்போரும்..” என்கின்றது பரிபாடல்
“‘குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும்
சீராவு செவ்வாயும், சந்தன்று
‘காமற்கு விருந்து எதிர்கொண்டு…” என்கின்றது கலித்தொகை பாடல்,
எல்லாவற்றுக்கும் மேலாக சிலப்பதிகாரம் பூம்புகாரில் காமதேவனுக்கு கோவில் இருந்ததையும் அங்கே அவனுக்கு விழா நடந்ததையும் சொல்கின்றது இப்படி
“வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும்
பங்குனி மயக்கத்துப் பனி அரசு யாண்டுளன்” என்கின்றது
இதெல்லாம் மாசி பங்குனி மாதங்களை ஒட்டிய காலத்தில் அன்று நடந்த விழாக்கள், மன்மதன் எனும் காமதேவனுக்காக நடந்த விழாக்கள்.
இதே காலகட்டத்தில்தான் வடக்கே ஹோலி பண்டிகையும், காம தகனமும் நடக்கும்
ஆக ஒரு காலத்தில் இங்கும் காமவேள் பண்டிகை என அந்த பண்டிகை விமரிசையாக இருந்திருக்கின்றது, பின்னாளைய புத்த சமண காலங்களில் வழக்கொழிந்திருக்கின்றது பின் மீளவில்லை
ஆனால் வடக்கே மீட்டெடுத்து கொண்டாடுகின்றார்கள், தெற்கே இன்னும் மீட்டெடுக்கவில்லை என்பதுதான் விஷயம்
ஏன் காமதேவன் என அவனை கொண்டாடினார்கள் இந்துக்கள்?
மாறாக உண்மையான காமதேவன் என்பவன் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஆத்மார்த்தமான பிணைப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டவன், கணவன் மனைவி இடையே அந்த ஆத்மார்த்தமான அன்பு வேண்டும் பிணைப்பு வேண்டும்
அந்த வரத்தை வழங்குபவன் காமதேவன் என்றானான், அவனை வணங்கிஅந்த வரத்தை பெறுவது காமனின் நோன்பாய் இருந்தது
ஆம், பாச பந்தங்கள் உருவாக மூலகாரணம் அந்த காமன்
காமன் அருளாலே விலங்குகளை விட மனிதன் மேம்பட்டவனாகின்றான், இனத்தை பெருக்கும் ஆசையும் அவசியமும் எல்லா உயிர்க்கும் உண்டு
ஆனால் அந்த உணர்வில் சிக்கி அதன் மூலம் பாசபந்தங்களில் சிக்கி தன் மனைவி , தன் வீடு, தன் பிள்ளை, தன் குலம் என தீரா வலையில் சங்கிலியில் சிக்கி தவிக்கும் கொடுமை மானுட இனத்துக்குத்தான் உண்டு
விலங்குகளோ பறவைகளோ ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் துணையை வாரிசுகளை தேடுவதில்லை அவற்றோடு இணங்கி இருத்தலுமில்லை.
ஆனால் மானுடன் அப்படி அல்ல, சாகும் வரை அவனுக்கு பாசபந்த துணையும் குடும்பமும் பந்த பாச வலையாக , சொந்த விலங்கு சங்கிலியாக அவனை தொடர்கின்றது
அந்த காமன் பிடியில் இருந்து விடுபடாமல் முக்தி இல்லை என்பதைத்தான், காமத்தை கடக்காமல் ஞானம் இல்லை என்பதைத்தான் இந்த காமதகனம் எனும் சிவனின் நாடகம் சொல்கின்றது
எப்படி நடந்தது காமதகனம்?
தாட்சாயினி இறந்த நிலையில் வீரபத்திரனை அனுப்பி தட்சனின் யாகத்தை அழித்து அவன் கர்வத்தையும் அழித்த சிவபெருமான் பின் உரிய காலம் வரும்வரை ஆழ்ந்த தவநிலைக்கு சென்றுவிடுகின்றார்
சிவனால் பிறக்கும் குழந்தையால்தான் தனக்கு அழிவு என வரம்வாங்கிய சூரபத்மன் இனி தனக்கு அழிவே இல்லை சிவன் தவத்தில் மூழ்கிவிட்டார் இனி அவருக்கு சந்ததி இல்லை, ஒரு பெண்ணை இனி அவர் மனதால் ஈர்க்கபோவதில்லை என அறிந்து பெரும் ஆட்டம் ஆடினான்
இதனால் படாதபாடுபட்ட தேவர்கள் சிவனை வேண்ட சென்றனர் அவரோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்
அவர் தவம் கலைக்கவும் அவரால் ஒரு சந்ததி உருவாகவும் விரும்பிய தேவர்கள் மன்மதனை அணுகி அவர் தவத்தை கலைக்க சொன்னார்கள்
மன்மதன் ஐந்துவகை பானங்களை கொண்டவன்
அந்த ஐந்து அம்புகளும் தாமரை, மாம்பூ, அசோகமலர், முல்லை, நீலோற்பவம் என ஐந்து வகை
இந்த பானங்களை எய்துதான் அவன் மானுடரிடம் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவான் என்பது அவன் பலம், இந்த ஐந்து மலர்களுக்கும் ஐந்து தத்துவம் உண்டு
ஐம்புலன்களும் ஐந்துவகை இன்பத்தில் வீழும், ஏதாவது ஒரு இன்பத்தில் மனம் பலவீனமாகி கரையும் என்பதே இம்மலர்களின் தத்துவம்
அவன் அம்பாக வீசும் பூக்களில் அந்த பூக்களில் பார்வைக்கு அழகு, மணமிக்கது, சுவையான கனிகளை கொடுப்பது, காற்றில் இசை கொடுப்பது, தொட மென்மையானது என பல தத்துவம் உண்டு
சுவை, ஓளி, ஊறு எனும் உடல், ஓசை, நாற்றம் எனும் மணம் ஐந்து குணம் அவை
ஆம் கண, காது, நாசி, வாய், உடல் என ஐந்து வகை புலன்களும் அதனதன் இயல்பில் மயங்குகின்றன
ஒரு பெண்ணை ஆணுக்கோ, ஆணை பெண்ணுக்கோ பிடித்து போக அந்த ஆத்ம ஈர்ப்பு ஏற்பட இந்த ஐந்தில் ஏதோ ஒன்று காரணமாகின்றது
அவர்களின் பேச்சு, பார்வை, கேட்டல், பேசுதல், உடல் அழகு என ஏதோ ஒன்று முதலில் கட்டிபோடுகின்றது, அப்படி ஈர்க்கபடும் ஈர்ப்பே நாளைடைவில் உறவாகின்றது
அந்த உறவு குழந்தைகள், பாசம், பந்தம் என பலுகி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரிக்கமுடியாதபடி கல்சுவர் போல் ஒட்டி கொள்கின்றது
இதுதான் மன்மதன் அம்புகளின் தத்துவம்
அந்த கரும்பு வில்லும் அம்புகளும் மன்மதனின் அடையாளம் என சொல்லபடுவதற்கு காரணங்களும் உண்டு
கரும்பு என்பது இனிமையானது, இன்பங்களை தேடித்தான் மனிதன் பூமியில் சுற்றுகின்றான், இந்த இன்பத்தை தேடித்தான் லவுகீக வாழ்வில் விழுந்து ஞானத்தை தேடாமல் அறியாமை சுகங்களை தேடி மூழ்குகின்றான் என்பது அதன் சாராம்சம்
இப்படியான மன்மதன் சிவனை நோக்கி அம்புகளை வீச தன் தவத்துக்கு இடைஞ்சலான அவனை நெற்றிகண்ணினால் எரித்துவிடுகின்றார் சிவன், அவன் சாம்பலாகின்றான்
அவனை எரிக்க சிவன் நெற்றியில் இருந்து வந்த நெருப்பு பொறிகளே ச்ரவண பொய்கையில் விழுந்து முருகபெருமான் அவதாரமானது
ரதி எனும் மன்மதனின் மனைவி சிவனிடம் மடிபிச்சை கேட்டு அழுதாள், பின்னாளில் பார்வதியினை தான் மணக்கும் போது இவன் எழுவான், அதுவரை உன் கண்ணுக்கு மட்டும் தெரிவான், எவன் என்னை சரண்டைவானோ அவனிடம் இவனின் வித்தைகள் செல்லாது தோற்கும் என வரமருளினார் சிவன்
பின்னாளில் அவன் பார்வதி திருமணத்தின்போது உயிர்பெற்றான் பின் உயிர்கள் ஜெனிக்க தொடங்கின
இதுதான் மன்மத தகனம் அல்லது காமதகனம்
இந்த ஆலயத்தில்தான் அது நடந்தது என்பதால் அந்த சிவன் காமதகனமூர்த்தி என அழைக்கபடுகின்றார்.
இந்த ஆலயம் போதிக்கும் தத்துவம் இதுதான், சிவனிடம் யார் அடைக்கலமாகின்றார்களோ அவர்களை காமனால் அணுகமுடியாது அவர்கள் காம மயக்கத்தில் விழுவதில்லை
காமம் கடக்காமல் ஞானம் வருவதில்லை அறிவு தெளிவதில்லை என்பதால் ஒருவன் உரியகாலத்தில் காமத்தை கடந்தாக வேண்டும் அதற்கு சிவன் அருள் வேண்டும்
காமத்தை கடப்பது என்றால் சிற்றின்பத்தை கடப்பது மட்டுமல்ல மாறாக எதெல்லாம் அதிதீவிரமாக ஒருவனை இழுத்து வைக்குமோ, இது இல்லாவிட்டால் வாழ்வில்லை என் உலகமே இதுதான் என கருதவைக்குமோ அதுதான் காமம்
எது தனக்கு மட்டும் என ஒருவன் கொண்டாடி அதனை தன்னோடு வைத்து அந்த பந்தபாசத்தில் சிக்கி கிடப்பானோ அதுதான் காமம், காமமென்றால் பெரும் விருப்பம் என பொருள்
அது மனைவியாக இருக்கலாம், அவள் மூலம் வரும் பாசபந்தமாக இருக்கலாம், பெண்ணோ பொருளோ பதவியோ எதுவாகவும் இருக்கலாம்
எதன்மேல் ஒருவன் ஆத்மபந்தம் கொண்டு சிக்கிகிடப்பானோ, எது வேண்டுமென மயங்கி கிடப்பானோ, எது அவனுக்கு நோய்போல் வாட்டுமோ அதுதான் காமம்
தீரா மயக்கம், இனம்புரியா உணர்வில் சிக்கிகிடக்கு அந்த நிலைதான் காமம் இது ஆபத்தானது
இதனாலே ராவணன் எனும் பெரும் பராக்கிரம்சாலி மாண்டான், வாலி எனும் மாவீரன் மாண்டான் அவர்களால் அதை தெளிந்துவரமுடியவில்லை
அப்பெண் அழகாக இருக்கின்றாள் நல்லது, ஆனால் இது வெறும் அழகு அழியகூடிய அழகு இந்த அழகிலும் சுகத்திலும் மயங்கிவிட்டால் இறைவனை தேடமாட்டோம் ஞானம் அடையமாட்டோம் எனும் அறிவும் தெளிவும் அவர்களுக்கு இல்லை
அழகில் மயங்குவது ஆபத்து , பின்னால் வரும் பல தொல்லைகளுக்கு அதுதான் காரணம்
அசுரர் அப்படி அமிர்தத்தை தவறவிட்டனர், விஸ்வாமித்திரர் படாதபாடுபட்டா, ராவணன் அழிந்தான்
காமம் தீராதவன் என பெயர்பெற்ற அர்ஜூனன் கண்ணனை சரணடைந்தாதால் வாழ்ந்தான், அந்த காமம் அவனை அழிக்கவில்லை பகவானின் கிருபையால் அவன் தெளிந்தான்
காமத்தையும் பக்தியாய் பாடி அதையே பக்தியாக்கி பகவானை அடைந்தாள் ஆண்டாள் நாச்சியார்
புராணம் என்றும் இதிகாசம் என்றும் இன்னும் பல அடியார்கள் வாழ்விலும் இந்துக்கள் சொன்னது அதுதான், அழியகூடிய விஷயங்களில் இனம்புரியாமல் சிக்கிகிடப்பது அறிவுடமை அல்ல
“முற்றிய காமம் மூளை சிதைக்கும்” என்றார்கள்
காமவயம் எனும் நிலைக்கு தள்ளபட்டவனுக்கு அது நோய்போல் தாக்கும், அவன் சிந்தையும் செயலும் மனமும் அங்கே மூழ்கி கிடக்கும், நல்லது கெட்டது யோசிக்க அவனுக்கு தெரியாது
தேனுண்ட வண்டு சிக்கிகிடப்பதுபோல், மதுவுண்ட மனிதன் கிறங்கி கிடப்பது போல் அந்த மாயை அப்படி ஆட்டுவிக்கும்
நிஜத்தில் அப்படி அல்ல, அது உண்மை அல்ல, பெண்ணோ அவள் உருவமோ ஆணோ அவன் பலமான அழகோ நிரந்தமல்ல
அது ஒரு மயக்கம், ஒரு மாய ரூபம், கலைந்துவிடும் கோலம்
ஆனால் அது நிரந்தரமென நம்பி அதிலே சிக்கி அதனால் பந்தபாசம் நீண்டு, குலம் குடும்பம் என நீண்டு ஒருவன் வாழ்வே வீணாகின்றது
வழிபாடு செய்ய பாலுக்காக பசுவாங்கி, பசுவை பராமரிக்க ஒரு பெண்ணை அமர்த்தி பின் அவளில் வீழ்ந்து குலம், குடும்பம், பிள்ளை சந்ததி என திசைமாறிபோன முனிவன் போல வாழ்வே திசைமாறிவிடுகின்றது
அந்த மயக்கம் பொல்லாதது, எந்த மானுடனையும் வளைத்து போடுவது, அவனை சிக்கவைத்து வேடிக்கை பார்ப்பது
அதனால் மன்னர்கள் சரிந்தார்கள், பெரும் ராஜ்ஜியங்கள் சரிந்தன, பெரும் பெரும் அழிவுகளே வந்தன
அதனால் அந்த காமத்தை சிவனே அகற்றுவார், சிவனை அண்டியோர்க்கு மன்மதனின் பானத்தால் ஆபத்து இல்லை என சொல்கின்றது இந்த ஆலயம்
அந்த மாய மயக்கத்தில் சிவனை அண்டியபக்தர்கள் விழ்வதில்லை
நீங்கள் எந்தவகை காமத்தால் அது பெண்ணோ, பதவியோ, பொருளோ இல்லை தீரா பழக்கமோ எதில் சிக்கி கிடந்தாலும் இந்த ஆலயம் வந்து இந்த சிவனை வணங்கினால் உங்கள் தேவையற்ற விருப்பம் தேவையற்ற மோகம் சாம்பலாகும் இது சத்தியம்
மன்மதனை எரித்த சிவன், உங்களை பற்றியிருக்கும் காம குரோதங்களை தேவையற்ற மயக்கங்களை எரித்துபோட திருகுறுக்கையில் காத்து கொண்டிருக்கின்றார்
அவரை சென்று வணங்குங்கள், நம்பிக்கையாய் வணங்குங்கள், எந்த மயக்கமெல்லாம் உங்களை ஆட்டிவைக்கின்றதோ,எது அவமானத்தையும் அழிவையும் தரும் என அஞ்சுகின்றீர்களோ அதையெல்லாம் அந்த சிவன் தீர்த்து உங்களை வாழவைப்பார் இது சத்தியம்
அந்த கோவில் எதிரே வெண்ணிற மணல் கொண்ட ஒரு இடம் உண்டு, சாம்பல் போல காட்சியளிக்கும் அந்த மேடுதான் மன்மதனை எரித்த இடமாக கருதபடுகின்றது
அந்த மண்ணை அள்ளி பூசிகொண்டால் எந்த மாய மயக்கமும் ஒருவனை அண்டாது என்பது பல சிவனடியார் வாழ்வில் நடந்த அதிசயம்
நாயன்மார்களில் சிலருக்கும் மன்மதனின் சோதனையால் குழப்பம் வந்தது, அப்படிபட்ட நிலையில் இங்குவந்து வழிபட்டு மீண்டார்கள் என்பதும் உண்டு
அந்த அதிசயம் அந்த காமதகனமூர்த்தியால் உங்களுக்கும் நடக்கும், நம்பிக்கையாய் சென்று அந்த சிவனை வழிபட்டு இந்த சாம்பல் போன்ற வெண்மணலை பூசினால் எல்லா நலமும் அருளும் பலமும் அடைவீர்கள், தேவையற்ற மயக்கங்கள் அந்நொடியே எரிந்து சாம்பலாகும்.