நவபுலியூர் : நிறைவு பகுதி

ஸ்ரீரங்கம், திருப்பட்டூர்

சிவபெருமானின் உத்தரவுபடி நவபுலியூர் தலங்களை தரிசித்து எல்லா கிரகங்களின் அருளையும் பெற்று, அந்த தலங்களில் இருக்கும் சிவனின் தனி அருளையும் பெற்றபின் அந்த புலிக்கால் முனிவரும், பதஞ்சலியும் பூலோக வைகுண்டம் என அழைக்கபடும் ஸ்ரீரங்கம் ஆலயம் நோக்கி சென்றார்கள்.

நாம் தொடரின் தொடக்கத்தில் பார்த்தபடி புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் சிவநடனத்தை தரிசித்தால் போதும், சிவனை பார்த்துவிட்டால் போதும் மோட்சம் உறுதி எனும் எண்ணம் இருந்தது அதனால் அந்த நடனத்தை காண சிதம்பரம் வந்தார்கள்.

ஒரு தைபூச நாளில் அந்த நடனத்தை அவர்களுக்கு காட்டினார் சிவன், அவர்கள் பக்தியின் பரிசு அது.

ஆனால் அதுவே மோட்சம் அடைய தகுதி என சிவன் கருதவில்லை, மோட்சம் அடைதல் என்பது பெரும் ஞானத்துடன் பல உண்மைகளை அறிந்தபின் வரவேண்டியது, பக்தி என்பது ஞானத்தில்தான் முடியவேண்டும் பல உண்மைகளை அறியவேண்டும் என்பதே சிவனின் சித்தமாய் இருந்தது

அதனால் அவர்களை நவபுலியூர் தங்களை தரிசித்து ஸ்ரீரங்கத்துக்கும் சென்றுவழிபட சொன்னார், விஷ்ணுவும் சிவனும் ஒன்றே என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும், அது முக்கால உண்மை என்பதை உணர்த்த விரும்பினார்

அதுவரை சிவனை தரிசித்தால் முக்தி, சிவன் மட்டுமே போதும் என்றிருந்த முனிவர்கள் இந்த உண்மையினை உணர்ந்து நவபுலியூர் தலங்களை சுற்றிவிட்டு ஸ்ரீரங்கம் வந்தனர்

அன்று ஸ்ரீரங்கம் பெரும் ஆலயமாக இல்லை, மூல கர்ப்பகிரஹம் கொண்ட சிறிய சன்னதியாக இருந்தது

ஸ்ரீரங்க ஆலயம் எல்லோரும் அறிந்தது, காவேரியின் இரு கிளைகளுக்கு நடுவில் தீவுபோல் அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் ஆலயம் அது

பொதுவாக இரு ஆறுகளின் நடுவில் இருக்கும் தீவுபகுதிக்கு பிரபஞ்ச சக்தி அதிகம், வாரனாசி எனும் காசியே அப்படித்தான் அமைந்திருக்கின்றது, அப்படி காவேரி நடுவே அமைந்த தலங்கள் சக்திமிக்கவை

ஸ்ரீரங்கபட்டினம் முதல் பல ஆலயங்கள் அப்படி காவேரியில் உண்டு, அதனில் முக்கியமானது இந்த ஸ்ரீரங்கம்

புராணத்தின்படி அந்த அரங்கன் ராமபிரானின் குலதெய்வமாக இஷ்வாகு மன்னர் காலத்திலே வணங்கபட்டவர், பின் விபீஷணன் அதை இலங்கைக்கு கொண்டு செல்ல முயலும் போது விநாயகப்பெருமான் அதனை தடுத்து அரங்கனை அந்த ஸ்ரீரங்கத்திலே தங்கும்படி செய்தார்

அதிலிருந்து அந்த ஆலய புராணம் தொடங்குகின்றது.

வைஷ்ணவ திவ்யதேசங்களில் முதலாவதும் பெரும் பெரும் அதிசமும் அற்புதமும் கொண்ட தலம் அது, பூலோக வைகுண்டம் என அதற்கு பெயர், அங்கு எல்லா ஆழ்வார்களும் அடியார்களும் பாடியிருக்கின்றார்கள்.

ராமபிராம்னின் குலதெய்வம் என்பதால் எப்போதுமே அந்த ஆலயம் பயபக்தியால் வழிபடபட்டது, திருப்பதி இப்போதுதான் பிரசித்தி ஆனால் காலம் காலமாக பெரும் பணக்கார தெய்வமாக ஸ்ரீரங்க அரங்கனே கொண்டாடபட்டார்

அவ்வளவுக்கு செலவம் கொட்டிகொடுக்கும் தெய்வமாக அவர் கருதபட்டார், இன்றும் ஸ்ரீரங்க ஆலயத்தின் பெருமை நிலைத்து நிற்கின்றது, வணங்கி நிற்கும் பக்தர்கள் ஏராளம்

அந்த செல்வம்தான் மாலிக்காபூர் துக்ளக் என பலரை ஈர்த்து கொள்ளையிட வைத்தது, இப்போது அந்த கொள்ளை எப்படி நடக்கின்றது என்பதெல்லாம் எல்லோரும் அறிந்தது

இந்த தலம் சைவர்களுக்கு சிதம்பரம் போல வைஷ்ணவர்களுக்கு அதி முக்கியமானது

அங்கே மாணிக்கவாசகரும் நந்தனாரும் கரைந்தே போனார்கள் என்றால் இங்கே ஆண்டாள் நாச்சியார் அப்படியே மறைந்தார்

ஆலயம் வேறு என்றாலும் ஒரே பக்தி, ஒரே காட்சிகள்

ஸ்ரீரங்க ஆலயத்தை பற்றி எழுதினால் எழுதிகொண்டே இருக்கலாம் அதன் சிறப்பும் சக்தியும் தாத்பரியமும் எத்தனை ஏடுகள் எழுதினாலும் தீராது

அந்த ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சயன கோலத்தில் இருப்பார், அதனை “அறிதுயில்” என்பார்கள்

அதாவது எல்லாம் அறிந்து எல்லாம் இயக்கிகொண்டே ஒன்றும் அறியாதவர்போல் பெருமாள் துயில் கொள்கின்றார் என பொருள்

இந்த பிரபஞ்சம் அமைதியாக இயங்குகின்றது, ஒருவகையில் ஓசையின்றி புரிந்துகொள்ள சூட்சுமத்துடன் இயங்குகின்றது

ஆகாய கோள்களின் சஞ்சாரம் முதல் விதை முளைத்து வருவது, மொட்டு மலர்ந்து பூவாகி கனியாவது வரை எல்லாமே அமைதி, பெரும் அமைதி

இந்த அமைதியான இயக்கத்தில் இறைவன் உண்டு, அவன் எல்லாம் அறிந்தும் எல்லாம் இயக்கிகொண்டும் இருந்தாலும் அமைதியாக கண்காணிக்கின்றான், இந்த பிரபஞ்ச அமைதியான இயக்கமே அறிதுயில் என தாத்பரியம் கொண்ட ஆலயம் அது

எப்படி பிரபஞ்சத்தை பெரும் சக்தி இயக்குகின்றதோ, ஓசைபடாமல் இயக்குகின்றதோ, அப்படி மானிட வாழ்வையும் அதுவே இயக்குகின்றது என்பதை சொல்லும் ஆலயம் அது

அந்த ஆலயத்துக்கு வந்த இருவரும் ரங்கனை பணிந்தார்கள், ரங்கனை போற்றி பணிந்து வணங்கி அவர் காலடியில் தியானமிருந்தார்கள்

பல உண்மைகள் அவர்களுக்கு தெரிய தொடங்கின‌

பரம்பொருள் என்பது ஒன்றே ஒன்று என்பதும், உலக இயக்கத்துக்காக அது சிவன், பிரம்மா, விஷ்ணு என தனித்திருப்பதையும் இதெல்லாம் உலக வாழ்வுக்கானது கர்மத்துக்கானது. இதை அடுத்து ஞானம் உண்டு, எல்லாம் ஒன்றே எனும் ஞானம் உண்டு என்பதை உணர்ந்தார்கள்.

சிதம்பரத்தில் நடனமாடும் நடராஜர் கோலமும், இங்கே அறிதுயிலில் சயனம் கொண்டிருக்கும் இருவரும் ஒரே சக்தி என்பதை உணர்ந்தார்கள்

இன்னும் ஆழமாக சிந்தித்தார்கள் புராணம் சொல்லும் வேதமும் வேதாந்தமும் அவர்களுக்கு விளங்கிற்று

அதாவது யாகம், வழிபாடு, பூஜைகளெல்லாம் வேதவழி அதை கர்மகாண்டம் என்பார்கள், அதன் அடுத்த நிலை ஞானகாண்டம் அதாவது பூரண ஞானம்.

படிபடியாக இறைவனை நோக்கி செல்லும் நிலை கர்ம காண்டம், சிகரத்தில் நிற்கும் நிலை ஞானகாண்டம்.

சிவநடனம், நவக்கிரகங்கள் கொண்ட நவபுலியூர் இப்போது ஸ்ரீரங்க அரங்கன் கோலம் என எல்லாம் கண்டவர்களுக்கு உண்மை விளங்கிற்று.

கர்மகாண்டம் என்பது ஆன்மீகத்தின் தொடக்கம். அதே நேரம் உலகம் இயங்கவும் மானிடர் வாழவும் சில சக்திகள் அவசியம் அதை வழங்க மூலபரம்பொருள் மூன்று பெரும் வடிவாய் நிற்கின்றது.

அதற்கு துணையாக நவகிரகங்களும் இதர தேவர்களும் தேவதைகளும் நிற்கின்றார்கள் என்பதை உணர்ந்தார்கள்.

பூலோக வாழ்வுக்காக இவர்கள் வரமருள படைக்கப்பட்டார்கள், இவர்கள் அருள் இன்றி பூலோக வாழ்வு சாத்தியமில்ல்லை என்பதை உணர்ந்தார்கள்.

சிவனருள், விஷ்ணு அருள், நவகிரகங்களின் அருளெல்லாம் பூலோக மானிடனுக்கு வேண்டும் ஆனால் அந்த வாழ்வின் முடிவில் அவன் ஞானகாண்டம் அனுபவம்பெற்று எல்லா சக்தியும் ஒன்றே மானிடன் வாழவும் பூலோகம் இயங்கவும் முடிவில் ஆத்மா ஞானம் அடையவும் செய்யபட்ட ஏற்பாடு இது என்பதை உணர்ந்தார்கள்

கர்மத்துக்கும் ஞானத்துக்குமான பொருளை உணர்ந்தார்கள், வேதங்களுக்கும் வேதாந்த உபநிஷங்களுக்கான பொருளையும் உணர்ந்தார்கள்.

அதுவரை சிவன் மட்டும் போதும் சிவனருள் மட்டும் போதும் என்றவர்களுக்கு பூமியில் மானுடர் வாழ எல்லா தெய்வங்களின் அனுகிரகமும் வேண்டும் அதை ஒவ்வொரு வடிவில் இறைவன் அருள்கின்றான் என்பது புரிந்தது.

அந்த மகா சக்தி இந்த பூலோக வாழ்வுக்கும் அதனை அருளும் இந்த தெய்வங்களுக்கும் மேலானது,அது ஒரே சக்தி அதுதான் நித்திய பரம்பொருள் எனும் ஞானம் கிடைத்தது.

ஸ்ரீரங்கம் அவர்களுக்கு முழு ஞானம் கொடுத்தது.

அந்த ஞானத்துடன் திருபட்டூர் நோக்கி சென்றார்கள், அது பிரம்மபுரீஸ்வரர் தலம்.

அது பிரம்மனின் சாபம் தீர்ந்த இடம், பிரம்மன் சிவலிங்கத்தை வழிபட்ட இடம் என சொன்னாலும் அது பிரம்மனுக்குரிய தலம்.

பிரம்மனுக்கு அங்கு பெரும் சன்னதி உண்டு.

திருபட்டூர் என்பது விசேஷமான ஆலயம், சுந்தரரும் சேரமான் பெருமானும் கயிலாயம் ஏகும் போது சேரமான் பெருமான் நாயனார் கயிலாயத்தில் இருந்து பாடிய “திருகயிலை உலா” இங்கே இருந்த சுந்தரரின் சீடரால் மக்களுக்கு தரப்பட்டது.

அவ்வளவு சக்தி வாய்ந்த தலம் அது, இன்னும் எண்ணற்ற சிறப்புக்களை கொண்டது.

அங்கு வந்த ரிஷிகள் இருவரும் சிவனை பணிந்து பிரம்மனையும் பணிந்தார்கள்.

சிவன் பிரம்மா விஷ்ணு எனும் மூன்று சக்தியும் ஒன்றே, பூமியினை வழிநடத்த அவை இப்படி பிரிந்திருக்கின்றன, இவைகளும் எல்லைகுட்பட்டவை, இதனை ஒரு மூல சக்தி நடத்துகின்றது அதுதான் நித்தியமானது அதை உணர்வதே ஞானம் என்பதை உணர்ந்தார்கள்

இந்த உண்மையினை உணர்ந்த இடத்திலே ஜீவசமாதி அடைய நினைத்தார்கள், அதாவது மோட்சம் அடையும் தகுதி அவர்களுக்கு அங்கே கிடைத்தபின் இனி தடையேதுமில்லை.

மும்மூர்த்திகளும், நவகிரகங்களும், தேவர்களும், தேவதைகளும் மூல சக்தியின் வடிவங்கள் இவை விதிக்கு உட்பட்டு மாந்தரின் வாழ்வை நிர்ணயிக்கின்றார்கள் என்பதை உணர்ந்தார்கள்

திருபட்டூர் ஆலயம் பிரம்மன் சாபம் நீங்கிய இடம் என்பதால் அதற்கு தலையெழுத்தை மாற்றும் ஆலயம் என்றொரு பெயர் உண்டு

இங்கே மோட்சம் அடைய விரும்பிய ரிஷிகள், மானுடரின் ஒவ்வொரு துயரத்தையும் உணர்ந்தார்கள்

மானிடர் கர்ம காண்டத்தை தாண்டி ஞான காண்டம் அடைய , கர்மத்தை நல்லபடியாக செய்ய நல்வாழ்வு அவசியம் என்பதை உணர்ந்தார்கள்

இந்த வரம் எல்லா தெய்வங்களும் கூடி அருள்வது என்பதையும் சிவனும் விஷ்ணுவும் பிரம்மனும் அருள்வது, நவகிரகங்கள் அருளோடு அருள்வது என்பதையும் உணர்ந்து வழிகாட்ட சித்தமானார்கள்

யாரெல்லாம் சிதம்பரத்தில் வணங்கி நவபுலியூரையும் தொழுது ஸ்ரீரங்கம் வந்து பணிந்து திருபட்டூர் வந்து பிர்ம்மனையும் தொழுவார்களோ அவர்களுக்கு வாழ்வில் எல்லா நலமும் கைகூடும் என்பதை தங்கள் அனுபவத்தால் சொல்லி தாங்களே சாட்சியாகி திருப்பட்டூரில் ஜீவசமாதியாக நிலைத்திருக்கின்றார்கள்

வாழ்வில் நீங்கள் யாராகவும் இருக்கலாம், எப்படியான சிக்கலிலும் இருக்கலாம், ஆனால் இந்த யாத்திரை உங்கள் தலைவிதியினை மாற்றும்

சிதம்பரத்தில் தொடங்கி நவபுலியூர் சுற்றிவந்து ஸ்ரீரங்க நாதனை வணங்கி திருபட்டூரில் சரணடைந்தால் உங்கள் விதிமாறும் வாழ்வே மாறும்

சிதம்பரத்தில் சிவனருளும் நவபுலியூர் எங்கும் நவகிரக அருளும், திருவரங்கத்தில் பெருமாளின் பெரும் அருளும் திருபட்டூரில் பிரம்மனின் அருளும் பெற்றுவிட்டால் போதும், வாழ்வு நிறைவடையும்

அவர்களோடு சேர்ந்து உங்களை வாழ்த்த பதஞ்சலி முனியும், புலிக்கால் முனிவரும் அங்கே காத்திருக்கின்றார்கள்

மிக மிக பயனுள்ள, பெரும் சக்திமிக்க யாத்திரையினை செய்துகாட்டி உலக மாந்தருக்குவழிகாட்டிய அந்த ரிஷிகள் உங்களுக்கு வரமருள அங்கே காத்திருக்கின்றார்கள், உரிய யாத்திரை செய்து அவர்கள் அருளை பாக்கியமுள்ளவர்கள் அடைவார்கள்

இது சத்தியம், முக்கால ச்த்தியம், அந்த ரிஷிகள் அங்கு எக்காலமும் உண்டு முக்காலமும் உண்டு, அவர்கள் காட்டிய வழியில் ஆலயங்களை வணங்கி அவர்களிடம் வந்தால் முழு பலன் உண்டு, முழு ஞானமும் நிச்சயம் உண்டு.