சுப்பிரமணிய புஜங்கம் : 03 / 06
(எட்டு முதல் பதிமூன்று வரையான ஸ்லோகங்கள்)
சுப்பிரமணிய புஜங்கத்தில் மிக அழகான அணுகுமுறையினை நேரடியாகவும் சூசகமாகவும் போதிக்கின்றார் ஆதிசங்கரர்.
முதலில் திருச்செந்தூரின் கடற்கரை, கந்தமலை எனச் சொல்லும் சங்கரர் பின் முருகப்பெருமானின் அழகிய தோற்றத்தை 8ம் ஸ்லோகத்தில் இருந்து விளக்கத் தொடங்குகின்றார்
அதன் அர்த்தம் காடு, மலை,கடற்கரை என எங்கெல்லாமோ ஓடி இறைவனை தேடுவவோர் தங்கள் மனக்கண்ணில் இறைவனை காணும்படி தியானிக்க வேண்டும் என்பது
இறைவன் எல்லா இடத்திலும் இருக்கின்றார் அப்படியே மனதிலும் குடியிருக்கின்றார், காடு மலை கடற்கரை என தேடிவணங்குவது போல மனதாலும் வணங்கவேண்டும் , மனதால் தியானிக்கவேண்டும் என்பதை இந்த ஸ்லோகத்தில் இருந்து தொடங்குகின்றார்
இதோ எட்டாவது ஸ்லோகம்
“லஸத்-ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காம-தோஹே
ஸுமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே
ஸமுத்யஸ் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்
ஸதா-பாவயே கார்த்திகேயம் சுரேசம்”
பாடலின் பொருளை காணலாம்
“லஸத் ஸ்வர்ண கேஹே ந்ருணாம் காம-தோஹே ” என்பது முதல்வரி
லஸத் என்றால் ஓளி அல்லது ஒளிரும் என பொருள், கேஹே என்றால் இடம் இங்கே அது ஸ்தலம் எனும் செந்தூர் கோவிலாகின்றது, ஸ்வர்ண என்றால் தங்கம், ந்ருணாம் என்றால் பக்தர்களின் என பொருள், தோஹே என்றால் கொடுப்பது, காம தோஹே என்றால் விரும்பி கொடுப்பது
அடுத்தவரி “ஸுமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே”
இதன் பொருள் இப்படி வரும், ஸுமஸ்தோம என்றால் நல்ல வாசனை பூக்களால், ஸஞ்ச்சன்ன என்றால் நேர்த்தியாக பரப்பிய, மாணிக்ய என்றல் மாணிக்க, மஞ்சே என கட்டிலில் என அர்த்தம்
மூன்றாம் வரி “ஸமுத்யஸ் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம் “
அதாவது ஸமுத்யஸ் என்றால் ஒரே சமயத்தில் , ஸஹஸ்ர என்றால் ஆயிரம் , அர்க என்றால் சூரியனின்
துல்ய என்றால் சமமான, ப்ரகாசம் என்றால் ப்ரகாசத்துடன் விளங்கும் என் பொருள்
நான்காம் வரி “ஸதா-பாவயே கார்த்திகேயம் சுரேசம்”
அதாவது ஸதா என்றால் எப்பொழுதும், பாவயே என்றால் தியானிக்கும், கார்த்திகேயம் என்றால் கார்த்திகை நட்சத்திர பெண்களால் வளர்க்கப்பட்ட, சுரேசம் சுர + ஈசம் என்றால் சுரர் / தேவர்களுக்கு தலைவன் (சுரேஷ் எனும் பெயர் இப்படியான பொருள் கொண்டது)
ஆக பாடலின் பொருள் இதுதான்
“பொன்னால் ஆகிய இருப்பிடத்திலிருந்து) கொண்டே பக்தர்கள் வேண்டி விரும்புவதை அருள்கிறாய். மலர்களால் நிரம்பியிருக்கும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட மாணிக்க கட்டிலில் அமர்ந்திருக்கிறாய். ஆயிரமாயிரம் கதிரவன் உதித்ததற்கு ஒத்த பிரகசமாய் விளங்கும், கார்த்திகைப் தேவதைகளால் வளர்க்கப்பட்ட தேவர்களின் தலைவனை எந்நேரமும் என் உள்ளத்தில் த்யானிக்கிறேன்”
இருப்பதோ தங்கத்தால் இழைக்கப்பட்ட கருவறையின் மினுமினுப்பு, அதிலும் பூக்களுடன், சிவந்த மாணிக்க கற்களால் இழைக்கப்பட்ட கட்டிலின் ஜொலிப்பு, அதன் மேல் கோடி சூரியப் ப்ரகாசத்துடன் விளங்கும் கார்த்திகேயன் என மனதில் எளிதில் ஆழ பதியக்கூடிய வகையில் வர்ணித்துள்ளார்.
இது அர்த்தஜாம பூஜையினை குறிக்கும் ஸ்லோகம், கோவில்களில் துணையுடன் தெய்வத்தை இரவில் பள்ளி கொள்ள வைப்பது மரபு, அப்படி முருகப்பெருமான் வள்ளியுடன் துணைகொள்ளும் காட்சியினை இங்கு சொல்கின்றார் சங்கரர்
ஏன் இதெல்லாம் சொல்லவேண்டும் என்றால் வள்ளி எனும் மனைடபிறப்பு ஜீவாத்மாகவும் முருகப்பெருமான் பரமாத்மாகவும் உருவகபடுத்தியது இந்துஞானம்
அவ்வகையில் மானிட ஆத்மாமேல் பரமாத்மா எவ்வளவு அன்போடு இருக்கின்றது, எவ்வளவுக்கு தேடிவருகின்றது என்பதை சொல்லும் காட்சி இது
அடுத்து ஒன்பதாம் ஸ்லோகம்
“ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே
மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே
மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே “
முதல்வரி “ரண தம்ஸகே மஞ்சு அத்யந்த சோணே”
அதாவது ரண என்றால் ஒலி, ஹம்ஸகே என்றால் கால் சலங்கை, மஞ்சுள என்றால் கவர்தல் என பொருள் (மேகத்துக்கு மஞ்சு என பொருள் வந்தது இப்படித்தான்), அத்யந்த என்றால் அதிக, சோணே என்றால் சிவந்த என பொருள்
இரண்டாம்வரி “மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே “
அதாவது மனோ என்றால் மனதை, ஹாரி என்றால் அபஹரிக்கும், லாவண்ய என்றால் அழகிய.
பீயூஷ என்றால் தேன், பூர்ணே என்றால் நிறைந்த என பொருள்
மூன்றாம் வரி “மன ஷ்ஷட்பதோ மே பவ க்லேச தப்த ” என வரும்
அதாவது மன என்றால் மனமாகிய, ஷட்பதோ என்றால் ஆறு கால்களைக் கொண்ட , மே என்றால் என்
பவ என்றால் சம்சார, க்லேச என்றால் துன்பங்களில் மூழ்கி , தப்த என்றால் தவிக்கும் என பொருள்
நான்காம் வரி “ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே”
அதாவது ஸதா என்றால் எப்பொழுதும், மோததாம் என்றால் களிக்கும், ஸ்கந்த என்றால் கந்தன்
தே என்றால் உன் , பாத என்றால் திருவடி, பத்மே என்றால் தாமரை.
பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
“முருகபெருமானே உன் திருவடித் தாமரையில் என் மனமென்னும் வண்டு களித்திருக்கட்டும் . இனிமையான, இதமாய் ஒலியெழுப்பும் சலங்கை அணிந்திருக்கும்; மென்மையானதாய், மிகச் சிவந்ததாய் ம்ருதுவாய் இருக்கும் உன் திருவடிகளில்; தேன் நிறைந்துள்ள தாமரைப்பூவை ஒத்த உன் திருவடிகளில், எப்போதும் இவ்வுலக கவலைகளினால் தத்தளிக்கும் என் மனமென்னும் ஆறு கால்களை கொண்ட வண்டு, எந்நாளும் உன் திருவடித் தாமரையில், கந்தனே அமிழ்ந்து ஆனந்திக்கட்டும்”
இங்கே சங்கரர் மானிட மனதினை வண்டிர்க்கும், கந்தனின் பாதங்களை தாமரை மலருக்கும் அழகாக உருவகபடுத்துகிறார்.
மனிதனின் காம, க்ரோத, மோக, லோப, மத, மாத்சர்ய குணங்களை வண்டின் ஆறு கால்களுக்கு உவமையாக சொல்கின்றார்
இந்த ஆறு கால்களும்தான் ஆங்காங்கே இழுத்து செல்பவை, அந்த வண்டின் மனம் இந்த கால்கள் வழியேதான் பயணிக்கும்
அப்படி அல்லாமல் தேனருந்திய வண்டு சொக்கி கிடக்கும், அப்படி முருகபெருமானில் மனம் லயித்துவிட்டால் இந்த குணங்கள் இல்லாமல் போகும் என்பது பாடலின் பொருள்
ஒருவகையில் பள்ளியறை காட்சியினை இங்கு கொண்டுவருகின்றார், அந்த சிருங்காரத்தில் இருமனமும் ஒன்றித்து மயங்கிகிடப்பது போல ஜீவாத்மா பரமாத்வோடு கலந்திருக்கும் ஆனந்த நிலையினை போதிக்கின்றார்
அடுத்து பத்தாவது ஸ்லோகம்
“ஸுவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்
லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம்”
முதல்வரி “”ஸுவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம் ” என வரும்
ஸுவர்ண என்றால் தங்கம் என பொருள், ஆப என்றால் போன்ற, திவ்யா என்றால் திவ்யமான / புனிதமான
அம்பரைர் என்றால் ஆடை, பாஸ மானாம் என்றால் ஒளிரும் என பொருள்
அடுத்தவரி “க்வணத்கிங் கிணீ மேகலா சோபமானாம்”
அதாவது க்வணத் என்றால் நாதம், கிங்கிணீ என்றால் மெல்லிய மணி, மேகலா என்றால் ஒட்டியாணம்
சோபமானாம் என்றால் அழகிய என பொருள்
அடுத்தவரி “லஸத் ஹேம பட்டேன வித்யோதமானாம் ” என வரும்
அதாவது லஸத் என்றால் ஒளிரும், ஹேம என்றால் தங்க, பட்டேன என்றால் பட்டாடை, வித்யோதமானாம் என்றால் மின்னும்
நான்காம் வரி “கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம்”
கடிம் என்றால் இடை, பாவயே என்றால் நினைக்கிறேன் / த்யானிக்கிறேன், ஸ்கந்த என்றால் கந்தா
தே என்றால் உன்னை, தீப்ய மானாம் –என்றால் சுடரொளி
“பொன் போன்ற ஒளி வீசிடும் புனிதமான ஆடை அணிந்திட, சிறிய மணிகள் ஒலித்திட ஒட்டியானம் அழகாய் விளங்கிட, கண்ணைப் பறிக்கும் தங்க பட்டையில் மின்னல் போன்று மின்னும் உன் இடையழகை தியானிக்கிறேன். கந்தனே என் உள்ளம் ஒளிரச்செய்வாய்”
தியானம் செய்ய மனதை ஒருமுகபடுத்த ஒரு புள்ளி அல்லது உருவம் அவசியம், அதனை மனதில் இருத்தி செய்யும் தியானம் கைகூடும்
முருகபெருமானை கண்டு வணங்கி செல்லுதல் அல்ல வழிபாடு, அந்த அழகிய உருவத்தை கண்ணில் வாங்கி மனதில் பதித்து அதையே தியானிப்பதுதான் உன்னதமான வழிபாடு அப்படி வழிபடவேண்டும் என போதிகின்றார்
அடுத்து பதினோறாவது ஸ்லோகம்
“புளிந்தேச கன்யாக நாபோக துங்க
ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீரராகம்
நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர
ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம்”
முதல்வரி “புளிந்தேச கன்யா கநா ஆபோக துங்க “
அதாவது புளிந்தேச என்றால் புளிந்த ராஜா, கன்யா என்றால் பெண், கநா என்றால் திண்ணிய, ஆபோக என்றால் வளைந்த, துங்க என்றால் எடுப்பான என பொருள்
இரண்டாம் வரி “ஸ்தன ஆலிங்க ஆஸக்த காச்மீர ராகம்”
அதாவது ஸ்தனம் என்றால் மார்பகம், ஆலிங்க என்றால் அணைத்து, ஆஸக்த என்றால் சேர்த்து, காச்மீர என்றால் குங்கும பூ, ராகம் என்றால் நிறம்
மூன்றாம் வரி “நமஸ்யாம் அஹம் தாரக அரி தவ உர”
நமஸ்யாம் என்றால் வணங்குகிறேன், அஹம் என்றால் நான். தாரக என்றால்தாராகசுசுரன் ,, அரி என்றால் எதிரி, தவ என்றால் உன், உர : என்றால் மார்பகம்
நான்காம் வரி “ஸ்வ பக்தா ஆவனே ஸர்வதா ஸா அனுராகம்”
அதாவது ஸ்வ என்றால் உன், பக்தா என்றால் பக்தர்களின், ஆவனே என்றால் காப்பதில் , ஸர்வதா என்றால் எப்பொழுதும், அனுராகம் என்றால் கருணையால்
பாடலின் பொருள் இதுதான்
“புளிந்த என்ற வேடுவ அரசனின் மகள் வள்ளியின் அழகிய, திண்ணிய, வளைந்த மார்பை சேர்த்து உன் நெஞ்சோடு ஆரத்தழுவ, அவள் அலங்காரமாக அணிந்த குங்குமப்பூவின் சிவப்பு நிறம் உன் மார்பில் படிந்து சிவந்து காட்சியளிப்பது, பக்தருக்கு என்றும் அருள் புரியும் கருணையால் உன் நெஞ்சம் செம்மையக இருப்பதை ஒத்துள்ளது. தாரகனுக்கு எதிரியான தீரனான உன் மார்பினைத் தொழுவேன்”
முருகபெருமானின் மனம் நல்லோர்க்கு நன்மை அளிக்கும் செம்மையான மனம், அவன் அடியார்க்கு தீங்கு நினைக்கும் எதிரிகளுக்கு வினையான மனம் என்பதை சொல்லி வணங்குகின்றார்
அந்த பள்ளியறை காட்சியில் சிவந்த முருகனின் மார்பினை சொல்லி, ஜீவாத்மாவினை பரமாத்மா எவ்வளவு அன்போடும் கருணையோடும் தழுவிகொண்டு காக்கின்றது , அந்த ஆன்மாவின் மாய எதிரிகளை அழிக்க சித்தம் கொள்கின்றது என்பதையும் சொல்கின்றார்
இந்த பத்தாம் மற்றும் பதினொன்றாம் பாடல் சொல்லும் இன்னொரு தத்துவம் வள்ளி வழிபாடு , முருகனை மட்டும் வணங்கினால் போதாது அவன் அருள்பெற வள்ளி தெய்வானை அருளும் வேண்டும் என்பது
அதற்காகத்தான் அவர்கள் சன்னதிகள் ஆலயத்தில் அமைக்கபட்டன , சிவனை வணங்கும்போது சக்தி வழிபாடும் அவசியம் என்பது போல முருகபெருமானை வணங்கும் நேரம் இந்த சன்னதிகளையும் வணங்க வேண்டும் என்பது ஐதீகம்
பன்னிரெண்டாவது ஸ்லோகம் இதோ
“விதௌக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தே பசுண்டான் த்விஷத்காலதண்டான்
ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண சௌண்டான்
ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான்”
முதல்வரி “விதௌ க்லுப்த தண்டான் ஸ்வலீலா த்ருத ஆண்டான்”
அதாவது விதௌ என்றால் ப்ரம்மா , க்லுப்த என்றால் நன்கு, தண்டான் என்றால் தண்டித்த, ஸ்வலீலா என்றால் விளையாட்டாக, த்ருத என்றால் ஆளுதல், அண்டான் என்றால் அண்டத்தை என பொருள்
இரண்டாம் வரி “நிரஸ் தே இப சுண்டான் த்விஷத் கால தண்டான்
நிரஸ் தே என்றால் அதை நீக்கியது அல்லது கொன்றது, இப என்றால் யானை, சுண்டான் என்றால் துதிக்கை
த்விஷத் என்றால் எதிரி, கால என்றால் யமன், தண்டான் என்றால் தண்டம்
மூன்றாம் வரி “ஹதே இந்த்ராரி ஷண்டான் ஜக த்ராண சௌண்டான் “
ஹதே என்றால் கொன்ற, இந்த்ராரி என்றால் இந்த்ரனின் எதிரிகள், ஷண்டான் – ஏறு போல, ஜக என்றால் உலகை, த்ராண என்றால் காக்கும் சக்தி, சௌண்டான் என்றால் திறமையான என பொருள்
நான்காம் வரி “ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான்”
அதாவது ஸதா என்றால் எப்பொழுதும், தே என்றால் உன், ப்ரசண்டான் என்றால் வலிமையான
ச்ரயே என்றால் அடைக்கலம், பாஹுதண்டான் என்றால் பல கைகள் என பொருள்
பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
“ப்ரஹ்மாவுக்கு தண்டனை கொடுத்த உன் கைகள், ப்ரம்மாவை சிறை வைத்த பின் விளையாட்டாய் மூவுலகையும் காத்த உன் கைகள், வள்ளியை மணக்க நடத்திய லீலையில் அண்ணன் யானை முகத்தோனை விரட்டிய உன் கைகள், எதிரிகளுக்கு யம தர்மராஜனின் பாசக் கயிறு போன்ற தண்டனை கொடுக்கும் உன் கைகள், இந்திரனின் எதிரிகளான அசுரர்களை ஏறு போல வென்று கண்டதுண்டமாக்கிய உன் கைகள்,
இவ்வுலகைக் காக்கும் பெருமை கொண்ட திறமையான உன் கைகள். அப்படிப்பட்ட உன் வலிமையான பன்னிருகைகளை அடைக்கலம் அடைகிறேன். அவை எப்பொழுதும் என்னைக் காக்கட்டும்”
இந்த ஒரே பாடலில் முருகனின் ஆறு கைகளுக்கான வீர தீர பராக்ரமங்களைச் சொல்லும் ஆறு நிகழ்ச்சிகளை குறிப்பிட்டுள்ளார் ஆதிசங்கரர்.
முருகனின் தோற்றத்தை சொல்லிபாடும் பாடலில் அவன் பாதங்கள், மார்பு என சொல்லிபாடும் ஆதிசங்கரர் அந்த கந்தவேளின் 12 கரங்களை சொல்லி அந்த சாகசமிக்க கரங்கள் தன்னையும் காக்கட்டும் என வேண்டுகின்றார்
அடுத்து பதிமூன்றாவது ஸ்லோகம்
“ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா
ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்”
முதல் வரி “ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு”
அதாவது ஸதா என்றால் எப்பொழுதும், சாரதா என்றால் வசந்தகாலம், ஷண் என்றால் ஆறு, ம்ருகாங்கா என்றால் நிலவு, யதி ஸ்யு என்றால் ஒருவேளை நடந்தால் என பொருள்
அடுத்தவரி “ஸம உத்யந்த ஏவ ஸ்திதாச் சேத்ஸ் ஸ்மந்தாத் ” என வரும்
அஹாவது ஸம உத்யந்த என்றால் ஒரே நேரத்தில் உதயமானால், ஏவ ஸ்திதாச் சேதஸ் ஸமந்தாத் என்றால் அருகருகே எப்பொழுதும் ஒளிர்ந்தால் என பொருள்
அடுத்தவரி “ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா “
அதாவது ஸதா பூர்ண பிம்பா என்றால் எப்போதும் ஜொலிக்கும் முழு ஒளியை, கலங்கைஸ் ச ஹீனா என்றால் அந்த ஒளியும் களங்கமற்று என்பது
கடைசிவரி “ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்”
அதாவது ததா என்றால் அப்பொழுது, த்வன் உன் முகானாம் என்றால் முகங்களை, ப்ருவே என்றால் சமமாக
ஸ்கந்த என்றால் கந்தா , ஸாம்யம் என்றால் ஒப்பிடலாம்
ஆக பாடலின் பொருள் இதுதான்
“வசந்த காலத்தில் அந்த சித்திரைபௌர்ணமியில் உதிக்கும் சந்திரன், ஆறு சந்திரர்கள் ஒருவேளை ஒன்றாக உதித்தால், அவையும் ஒரு நாள் மட்டும் என்று இல்லாமல் எப்பொழுதும் ஒளிர்ந்தால், மேலும் முழு சந்த்ரனில் களங்கம் ஏதும் இல்லாமல் இருந்தால், அப்படி ஒன்று நடந்தால் கந்தா உன் ஆறு முகத்திற்கு ஒருவேளை சிறிது ஒப்பீடு செய்யலாம்”
அதாவது முருகப்பெருமானின் முகபொலிவுக்கு ஈடு இணையே இல்லை, என ஈடு இணையற்ற அந்த முகத்தின் ஜொலிப்பை கவித்துவமாக பாடுகின்றார் ஆதிசங்கரர்.
எட்டு முதல் பதிமூன்றுவரை உள்ள ஸ்லோகங்களின் பொருள் இதுதான்
“முருகபெருமானே, பொன்னால் ஆகிய இருப்பிடத்திலிருந்து கொண்டே பக்தர்கள் வேண்டி விரும்புவதை அருள்கிறாய். மலர்களால் நிரம்பியிருக்கும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட மாணிக்க கட்டிலில் அமர்ந்திருக்கிறாய். ஆயிரமாயிரம் கதிரவன் உதித்ததற்கு ஒத்த பிரகசமாய் விளங்கும், கார்த்திகைப் தேவதைகளால் வளர்க்கப்பட்ட தேவர்களின் தலைவனை எந்நேரமும் என் உள்ளத்தில் த்யானிக்கிறேன்”
“முருகபெருமானே உன் திருவடித் தாமரையில் என் மனமென்னும் வண்டு களித்திருக்கட்டும் . இனிமையான, இதமாய் ஒலியெழுப்பும் சலங்கை அணிந்திருக்கும்; மென்மையானதாய், மிகச் சிவந்ததாய் ம்ருதுவாய் இருக்கும் உன் திருவடிகளில்; தேன் நிறைந்துள்ள தாமரைப்பூவை ஒத்த உன் திருவடிகளில், எப்போதும் இவ்வுலக கவலைகளினால் தத்தளிக்கும் என் மனமென்னும் ஆறு கால்களை கொண்ட வண்டு, எந்நாளும் உன் திருவடித் தாமரையில், கந்தனே அமிழ்ந்து ஆனந்திக்கட்டும்”
“பொன் போன்ற ஒளி வீசிடும் புனிதமான ஆடை அணிந்திட, சிறிய மணிகள் ஒலித்திட ஒட்டியானம் அழகாய் விளங்கிட, கண்ணைப் பறிக்கும் தங்க பட்டையில் மின்னல் போன்று மின்னும் உன் இடையழகை தியானிக்கிறேன். கந்தனே என் உள்ளம் ஒளிரச்செய்வாய்”
“புளிந்த என்ற வேடுவ அரசனின் மகள் வள்ளியின் அழகிய, திண்ணிய, வளைந்த மார்பை சேர்த்து உன் நெஞ்சோடு ஆரத்தழுவ, அவள் அலங்காரமாக அணிந்த குங்குமப்பூவின் சிவப்பு நிறம் உன் மார்பில் படிந்து சிவந்து காட்சியளிப்பது, பக்தருக்கு என்றும் அருள் புரியும் கருணையால் உன் நெஞ்சம் செம்மையக இருப்பதை ஒத்துள்ளது. தாரகனுக்கு எதிரியான தீரனான உன் மார்பினைத் தொழுவேன்”
ப்ரஹ்மாவுக்கு தண்டனை கொடுத்த உன் கைகள், ப்ரம்மாவை சிறை வைத்த பின் விளையாட்டாய் மூவுலகையும் காத்த உன் கைகள், வள்ளியை மணக்க நடத்திய லீலையில் அண்ணன் யானை முகத்தோனை விரட்டிய உன் கைகள், எதிரிகளுக்கு யம தர்மராஜனின் பாசக் கயிறு போன்ற தண்டனை கொடுக்கும் உன் கைகள், இந்திரனின் எதிரிகளான அசுரர்களை ஏறு போல வென்று கண்டதுண்டமாக்கிய உன் கைகள்,
இவ்வுலகைக் காக்கும் பெருமை கொண்ட திறமையான உன் கைகள். அப்படிப்பட்ட உன் வலிமையான பன்னிருகைகளை அடைக்கலம் அடைகிறேன். அவை எப்பொழுதும் என்னைக் காக்கட்டும்”
“வசந்த காலத்தில் அந்த சித்திரைபௌர்ணமியில் உதிக்கும் சந்திரன், ஆறு சந்திரர்கள் ஒருவேளை ஒன்றாக உதித்தால், அவையும் ஒரு நாள் மட்டும் என்று இல்லாமல் எப்பொழுதும் ஒளிர்ந்தால், மேலும் முழு சந்த்ரனில் களங்கம் ஏதும் இல்லாமல் இருந்தால், அப்படி ஒன்று நடந்தால் கந்தா உன் ஆறு முகத்திற்கு ஒருவேளை சிறிது ஒப்பீடு செய்யலாம்”
(தொடரும்..)