சுப்பிரமணிய புஜங்கம் : 06 / 06
(இருபத்தியாராவது முதல் முப்பத்து மூன்றாம் (இறுதி) ஸ்லோகம் வரை)
கந்த சஷ்டி நாட்கள் என்பவை சூரசம்ஹாரத்தோடு மட்டும் முடிவதல்ல, ஏழாம் நாள் மிக முக்கியமானது. அன்றுதான் திருகல்யாணமெல்லாம் நடக்கும், முருகப்பெருமான் பெரும் அருள் புரிவார்.
இன்று தான் அவர் வரமருளும் நாள்.
திருக்கல்யாணம் என்பது லவுகீக சிந்தனைபடி மணவாழ்வு என்றாலும், ஆன்மீக போதனைப்படி முருகப்பெருமான் எனும் பரமாத்வோடு மானிட ஜீவாத்மா கலந்து நிற்கும் தருணம்
அதாவது பரம்பொருள் மானிட ஆத்மா மேல் எவ்வளவு அன்புகொண்டு அதனை தன்னொடு ஏற்றுகொள்கின்றார் என்பதை சொல்லும் தருணம்
தெய்வானையோடும் வள்ளியோடும் முருகப்பெருமான் காட்சிகொடுப்பது வெறும் மணமக்கள் காட்சி மட்டும் அல்ல
தெய்வயானை தேவலோக தேவரின பெண் அதாவது சுரர் எனும் வகையில் மேம்பட்ட பிறப்பு, வள்ளி நரர் எனும் மானிட பிறப்பு
முருகப்பெருமான் வள்ளி எனும் மானுடபிறப்பை தேவயானை எனும் தெய்வ பிறப்புக்கு நிகராக உயர்த்துகின்றார், அந்த தேவலோகத்தில் மானுட ஆத்மாவுக்கு சரிக்கு சமமான இடம் கொடுக்கின்றார் என்பதே அதன் தாத்பரியம்
அவ்வகையில் முருகப்பெருமான் மானிட ஆத்மாவினை தெய்வநிலைக்கு உயர்த்துவார் என்பதை சொல்லும் காட்சி இது
இன்று திருகல்யாண கோலம் காண்பதும், மனபூர்வமாக முருகப்பெருமானுடன் ஆத்ம ரீதியாக பிணைந்து ஏற்றுக் கொள்வதும் சாலச் சிறந்தது.
அந்நேரம் இந்த கடைசி ஆறு ஸ்லோகங்கள் முக்கியமானவை.
முருகப்பெருமானை குலதெய்வமாக, ஆபந்த ரட்சகனாக, எல்லா வகையிலும் தலைவனாக ஏற்றுகொண்டு மனமுருகி சொல்லவேண்டிய பாடல்
சங்கரபெருமான் நமக்காக தந்துசென்ற அப்பாடலை சொல்லி இன்று முருகபெருமானை வணங்கி முழு அருள் பெறுவோம்
இருபத்தியாறாவது ஸ்லோகம்
“த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதௌ ஸ்கந்தகீர்த்தி
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா “
முதல்வரி “த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதௌ ஸ்கந்த கீர்த்தி”
த்ருசி என்றால் கண்டு, ஸ்கந்த என்றால் கந்தனின், மூர்த்தி என்றால் உருவம்,, ச்ருதௌ என்றால் கேட்டு, ஸ்கந்த என்றால் கந்தனின், கீர்த்தி என்றால் புகழ்.
இரண்டாம் வரி “முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம் “
முகே என்றால் வாயில், மே என்றால் உன், பவித்ரம் என்றால் புண்ய, ஸதா என்றால் எப்பொழுதும், தத் சரித்ரம் என்றால் (உனது) அந்த சரித்திரம் / கதை
மூன்றாம் வரி “கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்”
கரே என்றால் கைகள், தஸ்ய க்ருத்யம் என்றால் உனக்கு தொண்டு செய்து, வபுஸ் தஸ்ய என்றால் உடல் உனது, ப்ருத்யம் என்றால் சேவகம் / பணிவிடை செய்து
நான்காம் வரி “குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா : “
குஹே என்றால் குஹனே, ஸந்து லீனா என்றால் ஆகட்டும் ஐக்கியம் / ஊறிப்போதல், மம என்றால் என், அசேஷ என்றால் எல்லா (ஒன்றும் மிச்சமில்லாமல்), பாவா: என்றால் நினைவுகளும் / உணர்வுகளும்.
பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
“கந்தனின் உருவமே என் கண்கள் கண்டு, கந்தனின் புகழே என் காதுகள் கேட்டு, எப்பொழுதும் உன் புண்ய சரித்திரங்களை என் வாயால் பேசி, பாடி, என் கைகள் உனக்கு தொண்டு செய்து, என் உடல் உனது சேவகம் / பணிவிடை செய்து, குஹனே! என் எல்லா நினைவுகளும் / உணர்வுகளும் உன்னில் ஐக்கியம் / ஒன்றாக ஆகட்டும்.”
இருபத்தேழாவது ஸ்லோகம்
“முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜாம்
அபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே”
முதல்வரி “முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா”
முனீனாம் என்றால் முனிவர்கள், உதாஹோ என்றால் மட்டுமா? (மட்டுமல்ல), ந்ருணாம் என்றால் பக்தர்கள், பக்தி பாஜா என்றால் பக்தியுடன் வேண்டுதல்.
இரண்டாம் வரி “அபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா”
அபீஷ்ட என்றால் வேண்டிதல்களை, ப்ரதா என்றால் அருளும், ஸந்தி என்றால் ஆகும், ஸர்வத்ர என்றால் எங்கும், தேவா என்றால் தேவர்கள்
மூன்றாம் வரி “ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே”
ந்ருணாம் என்றால் மனிதர், அந்த்ய என்றால் கீழே நிலையில், ஜாநாம் அபி என்றால் பிறந்திருந்தாலும், ஸ்வ அர்த்த தானே என்றால் அருளும் பொருட்டு.
நான்காம் வரி “குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே”
குஹாத் என்றால் குஹனை, தைவம் என்றால் தெய்வம், அன்யம் என்றால் தவிர, ந ஜானே ந ஜானே என்றால் நான் அறியேன். நான் அறியேன்.
பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
“பெருமுனிவருக்கும், பக்திப் பெருக்கோடு தொழுவோர்க்கும் வேண்டிய வரங்கள் தந்திட எங்கும் தெய்வங்கள் நிறைந்துள்ளனரே. ஒரு மனிதன் கீழ் நிலையில் பிறந்திருந்தாலும், அவனுக்கு தானே முன்வந்து அருள்புரியும் தெய்வம் குகனைத் தவிர வேறு நான் அறியேன் நான் அறியேன்.”
இருபத்தியெட்டாவது ஸ்லோகம்
“களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா
நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா |
யஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார”
முதல்வரி “களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா”
களத்ரம் என்றால் மனைவி, ஸுதா என்றால் பிள்ளைகள், பந்து வர்க என்றால் உறவினர்கள், பசுர்வா என்றால் மற்றோர்
இரண்டாம் வரி “நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா’
நரோ வா அத என்றால் ஆணோ அல்லது, நாரீ என்றால் பெண்ணோ, க்ருஹே என்றால் வீட்டில், யே என்றால் யார் யார் (அனைவரும்) , மதீயா என்றால் என்னுடைய
மூன்றாம் வரி “யஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்”
யஜந்தோ என்றால் வணங்குதல், நமந்த என்றால் நமஸ்கரித்தல், ஸ்துவந்தோ என்றால் தோத்திரம் செய்தல், பவந்தம் என்றால் ஆகுதல்
நான்காம் வரி “ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார”
ஸ்மரன்த என்றால் நினைத்தல், ச என்றால் மற்றும், தே என்றால் உன்
ஸந்து என்றால் ஆகுதல், ஸர்வே என்றால் எல்லாம், குமார என்றால் குமரனே.
பாடலின் சுருக்கமான பொருள்
“மனைவியும், பிள்ளைகளும், சுற்றமும் சூழமும், ஆணோ பெண்ணோ
என்னுடன் என் வீட்டில் வசிக்கும் அனைவரும் உன்னையே வணங்கி, நமஸ்கரித்து துதியையே பாடிட வேண்டும். உன்னையே தொழுதிட வேண்டும். குமரா உன்னை வணங்கிட வேண்டும் எல்லோரும் உன் நினைவுடனேயே இருக்கட்டும்.”
இருபத்தியொன்பதாவது ஸ்லோகம்
“ம்ருகா பக்ஷிணோ தம்சகாயே சதுஷ்டா
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே |
பவச்சக்தி தீக்ஷணாக்ர பின்னா ஸுதூரே
விநச்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச சைல”
முதல்வரி “ம்ருகா பக்ஷிணோ தம்சகாயே சதுஷ்டா”
ம்ருகா என்றால் காட்டி மிருகங்கள், பக்ஷிணோ என்றால் பறவை இனங்கள். தம்சகா யே ச என்றால் கடிக்கும் வகை மற்றும் துஷ்டா என்றால் கெடுதல் செய்பவை
இரண்டாம் வரி “ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே”
ததா என்றால் அப்படி, வ்யாதயோ என்றால் வ்யாதிகள் / உடல் உபாதைகள், பாதகா யே என்றால் பாதிப்பவை, மத அங்கே என்றால் என் உடலில்
மூன்றாம் வரி “பவச்சக்தி தீக்ஷணாக்ர பின்னா ஸுதூரே”
பவ என்றால் உன், சக்தி என்றால் வேல், தீக்ஷண என்றால் கூர் / தீர்க்கமான, அக்ர என்றால் நுனி, பின்னா என்றால் பிளத்தல் / நொறுக்குதல், ஸு தூரே என்றால் நெடுந் தூரம்
நான்காம் வரி “விநச்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச சைல”
விநச்யந்து என்றால் நண்கு நசித்தல் / அழித்தல், தே என்றால் உன்
சூர்ணித என்றால் பொடிப்பொடியாக்குதல், க்ரௌஞ்ச சைல என்றால் க்ரௌஞ்ச மலை
பாடலின் சுருக்கமான பொருள்
“எனக்கு கெடுதல் செய்யும் காட்டு மிருகங்களும், பறவைகளும், கடிக்கும் பூச்சிவகைகள் மற்றும் துஷ்டர்களும், வியாதிகளும் என் உடலை துன்புறுத்தும் போது உன் கூரிய வேல் நுனியால் அவற்றை நெடுந்தூரம் விரட்டிடு. கிரௌஞ்ச மலையைப் பொடிப் பொடியாக்கியவனே, அவற்றை அழித்திடுவாய்”
முப்பதாவது ஸ்லோகம்
“ஜநித்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராதம்
ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத
அஹம் சாதிபாலோ பவான் லோக தாத
க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச”
முதல்வரி “ஜநித்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராதம்”
ஜநித்ரீ என்றால் தாய் / அன்னை, பிதா ச என்றால் தந்தை / பிதா மற்றும்
ஸ்வ புத்ரா என்றால் சொந்த மகன், அபராதம் என்றால் தவறை
இரண்டாம் வரி “ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத”
ஸஹேதே என்றால் சகித்தல் / பொறுத்தல், ந என்றால் இல்லையா
கிம் என்றால் என்ன, தேவ என்றால் தேவர்கள், சேன என்றால் சேனை / படை, அதி நாத என்றால் உயர் தலைவனே
மூன்றாம் வரி “அஹம் சாதிபாலோ பவான் லோக தாத”
அஹம் ச என்றால் நானோ, அதி என்றால் மிக / சிறு, பாலோ என்றால் பிள்ளை / பாலன், பவான் என்றால் நீயோ, லோக என்றால் உலகத்திற்கே, தாத என்றால் தந்தை
நான்காம் வரி “க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச”
க்ஷம என்றால் மன்னிப்பாய், ஸ்வ என்றால் எனது, அபராதம் என்றால் தவறை, ஸமஸ்தம் என்றால் எல்லா, மஹேச் என்றால் மஹேசனே / பெரும் ஈசனே.
பாடலின் பொருள் இதுதான்
“தாய் தந்தை தன் மக்கள் குற்றம் பொறுத்திடுவோரே! தேவசேனை தலைவா! சிறுபிள்ளை நான், நீயோ உலகத்திற்கே தந்தை. எனது தவறை மன்னித்து பொறுத்தருளுவாய், அனைத்து உலகுக்கும் ஈசனே”
முப்பத்தியொன்றாவது ஸ்லோகம்
“நம கேகினே சக்தயே சாபி துப்யம்
நமச்சாக துப்யம் நம குக்குடாய
நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து”
முதல்வரி “நம கேகினே சக்தயே சாபி துப்யம்”
நம என்றால் வணக்கம், கேகினே என்றால் மயிலுக்கு, சக்தயே என்றால் வேலுக்கு, ச அபி என்றால் கூட, துப்யம் என்றால் உன்
இரண்டாம் வரி “நமச்சாக துப்யம் நம குக்குடாய”
நம என்றால் வணக்கம், சாக என்றால் ஆடு, துப்யம் என்றால் உன், நம என்றால் வணக்கம், குக்குடாய என்றால் சேவல்
மூன்றாம் வரி “நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்”
நம என்றால் வணக்கம், ஸிந்தவே என்றால் கடலுக்கு, ஸிந்து தேசாய என்றால் கடற்கரை (திருச்செந்தூரை கோவிலைக் குறிக்கும்), துப்யம் என்றால் உன்
நான்காம் வரி “புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து”
புன என்றால் மறுபடியும், ஸ்கந்த என்றால் கந்த, மூர்த்தே என்றால் உருவே, நமஸ்தே நமோஸ்து என்றால் வணக்கம் மீண்டும் வணக்கம்
பாடலின் சுருக்கமான பொருள்
“உன் மயிலுக்கு வணக்கம், சக்தி வேலுக்கும் வணக்கம், உனது ஆட்டுக்கு வணக்கம், உன் சேவலுக்கும் வணக்கம், கடலுக்கும், கடல்கரையில் உள்ள உன் கோவிலுக்கும் வணக்கம், கந்த உருவத்தானுக்கு மீண்டும் மீண்டும் வணக்கம் வணக்கம்”
முப்பத்தியிரண்டாவது ஸ்லோகம்
“ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே
ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ
ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ”
முதல் வரி “ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்”
ஜய என்றால் வெற்றி, அநந்த என்றால் ஆனந்தம் / மகிழ்ச்சி, பூமன் என்றால் இருப்பிடம், ஜய என்றால் வெற்றி, அபார என்றால் எல்லையற்ற
தாமன் என்றால் இருப்பிடம்
இரண்டாம் வரி “ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே”
ஜய என்றால் வெற்றி, அமோக கீர்த்தே என்றால் அமோகமான/ குறைவற்ற புகழ், ஜய என்றால் வெற்றி, ஆநந்த மூர்த்தே என்றால் ஆனந்த உருவிற்கு
மூன்றாம் வரி “ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ”
ஜய என்றால் வெற்றி, ஆநந்த ஸிந்தோ என்றால் ஆனந்தக் கடல், ஜய என்றால் வெற்றி, அசேஷ பந்தோ என்றால் குறையில்லா உறவினன்
நான்காம் வரி “ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ”
ஜய என்றால் வெற்றி, த்வம் என்றால் உன், ஸதா என்றால் எப்பொழுதும்
முக்தி தான என்றால் முக்தியை தரும், ஈச ஸூனோ என்றால் ஈசனின் புதல்வனே.
பாடலின் சுருக்கமான பொருள்
“ஆனந்தமே இருப்பிடமானவனுக்கு வெற்றி, வெற்றி அந்த எல்லை இல்லாத ஆனந்தமுடையவனுக்கு, குறைவில்லாத கீர்த்தி கொண்டவனுக்கு வெற்றி, ஆனந்தமே உருவானவனுக்கு வெற்றி, ஆனந்தக் கடலானவனுக்கு வெற்றி, குறையில்லா உறவானவனுக்கு வெற்றி முக்தி நிலையைத் தந்திடும் ஈசனது மகனே என்றென்றும் உனக்கு வெற்றியே”
முப்பத்திமூன்றாவது ஸ்லோகம்
“புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய
படேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய
ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்
லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ”
முதல்வரி புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய
புஜங்க ஆக்ய என்றால் புஜங்கம் என்ற, வ்ருத்தேன என்றால் விருத்தம் / சீர், க்லுப்தம் என்றால் அமைந்துள்ள, ஸ்தவம் என்றால் துதி / புகழ், ய என்றால் யார்
இரண்டாம் வரி படேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய
படேத் என்றால் படித்தல், பக்தி என்றால் பக்தியுடன், யுக்தோ என்றால் கூட, குஹம் என்றால் குஹனை, ஸம் ப்ரணம்ய என்றால் நன்கு வணங்கி
மூன்றாம் வரி ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்
ஸ என்றால் அவன், புத்ரான் என்றால் குழந்தைகள், களத்ரம் என்றால் துணை, தனம் என்றால் செல்வம், தீர்கமாயுர் என்றால் நீண்ட ஆயுள்
நான்காம் வரி லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ
லபேத் என்றால் கிட்டும், ஸ்கந்த என்றால் கந்தன், ஸாயுஜ்யம என்றால் இணைதல் / சேர்தல், அந்தே என்றால் இறுதியில், நரஸ் ஸ என்றால் அந்த மனிதன்
பாடலின் சுருக்கமான பொருள்
“புஜங்க சீரில் அமைந்தள்ள இந்த புகழ் மாலையை யார் பக்தியுடன் படித்து குகனை நன்கு வணங்குகிறாரோ, அவர் நல்ல குழந்தைகள், துணையோடு, செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று, இறுதியில் அந்த மனிதன் கந்தனோடே இணைந்திடுவர்”
பாடல் வரிகளின் தொகுப்பினைச் சொல்லி வழிபடுவோம்.
“கந்தனின் உருவமே என் கண்கள் கண்டு, கந்தனின் புகழே என் காதுகள் கேட்டு, எப்பொழுதும் உன் புண்ய சரித்திரங்களை என் வாயால் பேசி, பாடி, என் கைகள் உனக்கு தொண்டு செய்து, என் உடல் உனது சேவகம் / பணிவிடை செய்து, குஹனே! என் எல்லா நினைவுகளும் / உணர்வுகளும் உன்னில் ஐக்கியம் / ஒன்றாக ஆகட்டும்.”
“பெருமுனிவருக்கும், பக்திப் பெருக்கோடு தொழுவோர்க்கும் வேண்டிய வரங்கள் தந்திட எங்கும் தெய்வங்கள் நிறைந்துள்ளனரே. ஒரு மனிதன் கீழ் நிலையில் பிறந்திருந்தாலும், அவனுக்கு தானே முன்வந்து அருள்புரியும் தெய்வம் குகனைத் தவிர வேறு நான் அறியேன் நான் அறியேன்.”
“மனைவியும், பிள்ளைகளும், சுற்றமும் சூழமும், ஆணோ பெண்ணோ, என்னுடன் என் வீட்டில் வசிக்கும் அனைவரும் உன்னையே வணங்கி, நமஸ்கரித்து துதியையே பாடிட வேண்டும். உன்னையே தொழுதிட வேண்டும். குமரா உன்னை வணங்கிட வேண்டும் எல்லோரும் உன் நினைவுடனேயே இருக்கட்டும்.”
“எனக்கு கெடுதல் செய்யும் காட்டு மிருகங்களும், பறவைகளும், கடிக்கும் பூச்சி வகைகள் மற்றும் துஷ்டர்களும், வியாதிகளும் என் உடலை துன்புறுத்தும் போது உன் கூரிய வேல் நுனியால் அவற்றை நெடுந்தூரம் விரட்டிடு. கிரௌஞ்ச மலையைப் பொடிப் பொடியாக்கியவனே, அவற்றை அழித்திடுவாய்”
“தாய் தந்தை தன் மக்கள் குற்றம் பொறுத்திடுவோரே! தேவசேனை தலைவா! சிறுபிள்ளை நான், நீயோ உலகத்திற்கே தந்தை. எனது தவறை மன்னித்து பொறுத்தருளுவாய், அனைத்து உலகுக்கும் ஈசனே”
“உன் மயிலுக்கு வணக்கம், சக்தி வேலுக்கும் வணக்கம், உனது ஆட்டுக்கு வணக்கம், உன் சேவலுக்கும் வணக்கம், கடலுக்கும், கடல்கரையில் உள்ள உன் கோவிலுக்கும் வணக்கம், கந்த உருவத்தானுக்கு மீண்டும் மீண்டும் வணக்கம் வணக்கம்”
“ஆனந்தமே இருப்பிடமானவனுக்கு வெற்றி, வெற்றி அந்த எல்லை இல்லாத ஆனந்தமுடையவனுக்கு, குறைவில்லாத கீர்த்தி கொண்டவனுக்கு வெற்றி, ஆனந்தமே உருவானவனுக்கு வெற்றி, ஆனந்தக் கடலானவனுக்கு வெற்றி, குறையில்லா உறவானவனுக்கு வெற்றி முக்தி நிலையைத் தந்திடும் ஈசனது மகனே என்றென்றும் உனக்கு வெற்றியே”
“புஜங்க சீரில் அமைந்துள்ள இந்தப் புகழ் மாலையை யார் பக்தியுடன் படித்து குகனை நன்கு வணங்குகிறாரோ, அவர் நல்ல குழந்தைகள், துணையோடு, செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று, இறுதியில் அந்த மனிதன் கந்தனோடே இணைந்திடுவர்”
(முற்றும்…)