காளிதாசனின் மேகதூதம் : 06
ஐந்தாம் பத்து ஸ்லோகங்கள்
“மேகமே, அடர்ந்த இரவில் வழி தெரியாமல் தடுமாறிய விலைமாந்தருக்கு நீ உன் மின்னலால் வெளிச்சம் கொடுத்து வழிகாட்டியதில் மிகவும் களைத்திருப்பாய், அதனால் உஜ்ஜைனி நகரின் மாடங்களில் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோள்
அந்நகரின் மாட மாளிகையில் புறாக்கள் கூடுகட்டி வசிக்கும், அவை உறங்கும் நேரம் நீயும் அங்கே கொஞ்சம் இளைப்பாறி களைப்பு நீங்கி எழுவாய், என் நண்பனான் நீ எனக்கு உதவி செய்யவேண்டி இருப்பதால் அதிகம் அங்கே தங்காமல் விரைந்து செல்ல முயலுவாயாக
மேகமே, அந்நகரின் அதிகாலை சூரியனை நீ மறைக்க கூடாது, ஏன் தெரியுமா? காதலியரிடம் மட்டும் இல்லாமல் இன்னும் சில பெண்களுடன் கூடுவது பல ஆண்களுக்கு இயல்பான குணம், அப்படியானவர்கள் இரவில் வேறு பெண்களை தேடி சென்றிருப்பார்கள், அதை அறிந்த காதலியர் அதிகாலை எழுந்து சூரியன் உதித்துவிட்டது இப்போது அவன் வருவான் என கண்ணீரோடு காத்திருப்பர்
அந்த அதிகாலை பொழுதுதான் அந்த காதலன் வந்து காதலியிடம் மன்னிப்பு கேட்டு அவள் கண்ணீரை துடைக்கும் நேரம், கொஞ்சம் சண்டையிட்டு அந்த காதலியும் அவனை அணைக்கும் நேரம்
பெண்கள் அப்படித்தான் சண்டையிட்டு சமாதானம் கொள்வார்கள்
அப்போது நீ சூரியனை மறைத்துநின்றால் பொழுது விடியவில்லை என காதலன் இதரபெண்ணை விட்டு வர தாமதம் செய்வான், நீ அந்த தாமதத்துக்கு காரணமாய் இருந்து விடவே கூடாது அதனால் அதிகாலை சூரியனை மறைக்காதே
மேகமே, அந்த காலை பொழுதில் காதலன் தன் காதலியினை தேடிவந்து அவள் கண்ணீரை துடைக்கும் நேரம், இன்னொரு அழகான காட்சியும் நடக்கும்
இரவெல்லாம் தன்னை தேடி முகமெல்லாம் கண்ணீர் வடிய நின்றிருக்கும் தாமரையினை சூரியன் சந்தித்து அதன் கண்ணீரை துடைக்கும் நேரமும் அதுதான்
தன் காதலனை கண்டதும் தாமரையின் கண்ணீரெல்லாம் மறையும் தருணம் அது, அதனால் நீ அதிகாலை சூரியனை மறைக்காதே, அவர்களின் அன்பான சங்கமத்தை தடுக்காதே
மேகமே, நீ அங்கிருந்து வடக்கே செல்லும் போது உன் காதலியான கம்பாரா எனும் அழகான நதியினை காண்பாய், அந்நதி தூயவர் மனம்போல் மிக தெளிவானது
அழகான பெண்ணொருத்தி நம்மை நோக்காவிடினும் நம்முடன் பேசாவிடினும் அவள் உருவம் நம் மனதில் தானாக வந்து பதிவதைபோல, நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன் உருவம் அவள் மேல் பதியத்தான் செய்யும்
ஆனால் மேகமே, அவள் ஆழமானவள் எந்த உணர்ச்சியும் வெளிபடுத்தாமல் நிசப்த அமைதியில் இருப்பவள், ஆனால் அந்நதியில் ஆம்பல் அலர்போன்ற வெண்ணிறமான சபரம் எனும் மீன்கள் நிறைய உண்டு, அம்மீன்கள் அசைவது அவளின் கடைக்கண் பார்வை போலிருக்கும்
அந்த கடைக்கண் பார்வையிலே அவள் தன் காதலை சொல்வாள், நீயோ எல்லோரும் உன்னை விரும்புகின்றார்கள் என சலிப்புகொள்ளாமல் அவள் காதலை ஏற்றுகொள், காதல் கொண்ட பெண்ணை புறக்கணிப்பது பாவமல்லவா?
அந்த நதிகாதலி மீன் அசையும் கண்களால் உன்னிடம் காதலை தெரிவித்ததும் அவளை நோக்கு, இடையில் நழுவும் வஸ்திரத்தினை பிடித்து நிற்கும் பெண்போல ஒரு அழகான கோலம் காண்பாய்
மேகமே அந்நதியின் அலைகள் அருகிருக்கும் நீர்வஞ்சி செடிகளில் பட்டு அச்செடிகள் அவள்பால் வளைந்து தொட்டு நிற்கும், அக்காட்சி அவளின் ஆடையினை அந்த நீர்வஞ்சி செடியின் கிளைகள் எனும் கையால் அவள் பற்றிகொண்டது போலிருக்கும், அது வஸ்திரத்தை தவறவிட்ட பெண் பாதியில் பற்றிகொண்டது போலிருக்கும்
உன்னை கண்டதும் மயக்கத்தில் அவள் வஸ்திரம் நழுவி அவள் பதறி பிடித்துகொண்டிருப்பது போல் அக்காட்சி இருக்கும்
உன்னிடம் மயங்கிவிட்ட அவளை விட்டு செல்லாதே, அவளை நெருங்கி அணைத்துகொள், அந்நதியின் நீரை பருகிக்கொள், அந்த நதிகாதலியிடம் நீ தாழவந்து நிற்கும் கோலம், காதலியின் சேலையினை பற்றி இழுக்கும் காதலனின் காட்சிபோலவே இருக்கும்
மேகமே, விருப்பமான காதலியினை விட்டு யாருக்கு பிரிய மனம் வரும்?, வராதுதான் அந்நிலை சிரமானதுதான்
அதனால் பிரிவாற்றாமையில் கொஞ்சம் அழுது நீர் சிந்திவிட்டு உன் கடமையினை செய்ய கிளம்புவாயாக
மேகமே அடுத்து நீ வடக்கே தேவகிரிக்கு செல்வாய் , செல்லும் வழியெல்லாம் உன்னால் மழைபொழிந்து மண் மணக்கும், அந்த இனிய மணத்தில் யானைகள் மகிழும், தங்களுக்கு பிடித்தமான மணம் எழுவதால் அந்த யானைகள் மிக ஆழமாக அந்த மணமிக்க காற்றினை துதிக்கையினால் உள்ளிளுத்து பின் வேகமாக வெளிவிடும், அந்த காற்றினால் அத்திபழங்கள் வேகமாக பழுக்க தொடங்கும்
இந்த குளிர்ந்தகாற்றும் , யானைகள் மூச்சால் எழும் வெப்ப காற்றுமாக உன் பயணம் இனிதாக அமைய காற்று உதவி செய்யும்
மேகமே, அடுத்து நீ அடையபோகும் தேவகிரி மலைபற்றி மிக் கவனமாக இருக்க வேண்டும், காரணம் அங்கேதான் ஸ்கந்தன் எனும் சுப்பிரமணியம் ஸ்வாமி நித்தியவாசம் செய்கின்றார், குகன் என்றும் அவர் அறியபடுவார்
சூரியனை மிஞ்சும் சிவபெருமானின் வடிவம் அவர், தேவர்களை காக்க உருவான அவர் அக்னியின் அம்சம், அந்த முருஜபெருமான் அங்கேதான் வாசம் செய்கின்றார்
நீ அவரை மெல்லிய தூறலால் அபிஷேகம் செய், சிவனை போலவே அவரும் நீர் அபிஷேகத்தால் மகிழ்ச்சி கொள்வார், அதனால் நீ உன் கடுமையான துளிகளை பெய்யாமல் பனிபோல் மலர்போல் மெல்லிய தூறலை செய்வாய்
அத்தோடு உன் கடமை முடியாது மேகமே இன்னும் செய்யவேண்டியது உண்டு, அந்த சரவணனுக்கு மயில்தான் வாஹனம், அந்த மயில் வட்டவடிவமான தோகையினை கொண்டிருக்கும்
அந்த மயிலின் உதிர்ந்த அழகான பீலியினை எடுத்து அன்னை பார்வதி தன் மகனின் மயில் அல்லவா என மகன் மேல் உள்ள அன்பால் தன் தலையின்ன் காதோரம் இருக்கும் நீல தாமரைமலர்களுடன் சூடிகொள்வாள்
அந்த மயிலின் கண்கள் வெண்மையானவை, அது சிவபிரானின் தலையில் இருந்து வரும் ஒளியால் இன்னும் வெண்மையாகும், அந்த மயில் உன்னை கண்டதும் மகிழும்
நீ உன்னுடைய இடி கர்ஜனையினை அப்போது எழுப்பு, அது மலைகுகைகளிலும் முகடுகளிலும் பட்டு மிருதங்க ஒலிபோல் எழும்
உன்னை கண்டதும் உற்சாகமாக தோகைவிரிக்க்கும் மயில் அந்த மிருதங்க ஒலியின் தாளத்துக்கு ஆட தொடங்கும், இப்படி குஹபெருமானுக்கு மிகுந்த சேவை செய்தவனாவாய்
மேகமே நீ தேவகிரியில் குகபெருமானை வணங்கி அபிஷேகம் செய்துவிட்டு இன்னும் நகரும் போது மகாபாரத ரந்திதேவன் புகழ்போல் புகழ்கொண்ட சர்வன்மதி எனும் நதியினினை அடைவாய்
மகாபாரத ரந்திதேவனின் புகழை சொல்லி ஓடும் அந்த சர்வன்மதி எனும் நதி புண்ணியமானது அல்லவா? அதனால் நீயே இறங்கி வந்து அதற்கு மரியாதை செய்வாய், அங்கே தேவகிரி வாழ் முருகபெருமானை தரிசிக்க தேவலோக பாடற்குழுவினர் கையில் வீணையுடன் உனக்கு எதிர்படுவார்கள்
அங்கே நீ சிந்தும் மழைதுளியால் வீணை பாழாகிவிடும் என அஞ்சும் அவர்கள் உனக்கு அஞ்சி வழிவிடுவார்கள் இதனால் நீ எளிதாக சர்வன்மதிக்கும் தேவகிரிக்கும் இடையிலான அந்த வழியினை கடந்து செல்வாய்
மேகமே நீ கண்ணபிரான் போல கருத்த மேனிகொண்டவன், சர்வன்மதி எனும் அந்த நதி மிக மிக பெரியது, விசாலமனது, நீ அதன் மேல் படர்ந்திருக்கும் காட்சி தேவர்கள் கண்ணுக்கு மேலிருந்து பார்க்கும் போது அது மிக மிக அழகான காட்சியினை காட்டும்
மேல் அதி உச்சியிலிருந்து பார்க்கும் போது அந்த வெள்ளை வெள்ளம் வெள்ளை கோடுபோல்தோன்றும், உன் கரிய மேனி அதை மூடியிருப்பது முதுமாலைபோல் தெரியும்
அதுவும் சூரிய வெளிச்சத்தில் நதி மின்னுவதும் உன் கருமேனியில் நீல ஜூவாலை ஜொலிப்பதும் மேலிருந்து பார்க்கும் போது முத்துமாலையில் நடுவே வைக்கபட்ட இந்திர நீலவைரம் போல மின்னும்
அது பூமாதேவிக்கு சூட்டபட்ட நீலவைரம் பொருந்திய முத்துமாலைபோல், அவள் கழுத்தை சுற்றிய அழகான முத்து மாலைபோல் இந்திரநீல வைரத்தோடு கூடிய முத்து மாலைபோல் அப்படி ஜொலிக்கும்
மேகமே இப்படி பெரும் அழகான ஜெகஜாலம் காட்டியபின் நீ தசபுரம் எனும் நகரத்தை கடந்து செல்ல முயல்வாய்
அங்குள்ள பெண்கள் அழகான கண்களை கொண்டவர்கள், அவர்கள் புருவத்தை நெளித்து பார்க்கும் பார்வை தனி அழகினை காட்டும், அந்த அழகான கண்கள் அந்த புருவநெளிவோடு உன்னை காணும் பாக்கியம் பெறுவாய்
மேகமே, அந்த பார்வையின் அழகை சொல்லவும் கூடுமோ?
அப்பெண்களின் கண்களின் வெண்ணிறமும் உன்னை நோக்க அதனோடு கருவிழியும் உன்னை நோக்க அக்காட்சி வெண்ணிற மல்லிகை பூக்களை வானில் தூவினால் அந்த வெண்மல்லிகையினை நாடி பின்னால் வரும் கருவண்டு கூட்டத்தை கண்டது போலிருக்கும் தசபுரம் பெண்களின் கண்கள் அவ்வளவு அழகானவனை, அழகான் பெண்களின் வசீகரமான மயக்கும் கண்களால் பார்க்கபடுவது எவ்வளவு பெரும் பாக்கியம், நீ அதை பெற்றவனாகி உன் பயணத்தை தொடர்வாய்..”
(தொடரும்…)